06/03/2012

எல்லிசன் போற்றிய திருக்குறள் - கி.ஸ்ரீதரன்

தமிழ்ப் பொதுமறையாம் திருக்குறளை அயல் நாட்டவரும் போற்றியுள்ளனர். சென்னை மாவட்ட ஆட்சியராக (1810-19-இல்) பணியாற்றிய ஆங்கிலேய அதிகாரி ஃபிரான்சிஸ் வைட் எல்லிஸ் 1796-ஆம் ஆண்டு ஆட்சிப்பணியில் சேர்ந்து தமிழ்-வடமொழி இரண்டிலும் தேர்ச்சிபெற்று விளங்கினார். திருவள்ளுவர் மீதும் திருக்குறள் மீதும் மிகுந்த பற்று கொண்டு விளங்கினார். திருக்குறளிலிருந்து பல குறள்களைத் தேர்ந்தெடுத்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உரையுடன் ஓர் அரிய நூலை எழுதினார்.


1819-இல் சென்னையில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது சென்னை நகரில் 27 இடங்களில் குடிநீர் கிணறுகளை அமைக்க ஏற்பாடு செய்தார். அத்தகைய கிணறுகளுள் ஒன்றான இராயப்பேட்டை பெரியபாளையத்தம்மன் கோயிலின் கிணற்றில் பதித்து வைக்கப்பட்டிருந்த கல்வெட்டு ஒன்றை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குநர் நடன.காசிநாதன் தமது ஆய்வின்போது கண்டறிந்தார். அக்கல்வெட்டில்,

""புலவர்கள் பெருமான் மயிலையம்பதியான்
தெய்வப் புலமைத் திருவள்ளுவனார்
திருக்குறடன்னிற் றிருவுளம் பற்றிய
.......    ............  ...........
"இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணு நாட்டிற் குறுப்பு'
என்பதின் பொருளை யென்னுளாய்ந்து''

என்று உரிய திருக்குறளை (737) மேற்கோளாகக் குறிப்பிட்டிருப்பது சிறப்பானதாகும். மேலும், திண்டுக்கல்லில் உள்ள எல்லிசுதுரையின் கல்லறை மீது உள்ள கல்வெட்டிலும் அவருடைய தமிழ்ப்பணி கீழ்க்காணுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

""திருவள்ளுவப் பெயர்த் தெய்வஞ்செப்பி
யருள் குறணூறு ளறப்பாலினுக்குத்
தங்கு பலநூறு தாரண கடலைப் பெய்
திங்கிலீசு தனிலிணங்க மொழிபெயர்த்தோன்''

என்று குறிப்பிட்டுச் சொல்வதால், திருக்குறள் மீது அவர் கொண்டிருந்த ஈடுபாட்டை நம்மால் அறியமுடிகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இராயப்பேட்டை கல்வெட்டு, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை வரலாற்றுக் காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் அனைவரும் கண்டு மகிழ வேண்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க காட்சிப் பொருளாக அக்கல்வெட்டு விளங்குகிறது.



""இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணு நாட்டிற் குறுப்பு'' என்று திருக்குறள் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ள கல்வெட்டு.

நன்றி - தமிழ்மணி

கருத்துகள் இல்லை: