கலைகளுள் சிறந்தது இசைக்கலை. இசையில் இன்பக்கூறு இயல்பாகவே அமைந்துள்ளது. இசை உயிரினங்களைத் தன்வயப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இசைக்கலை உணர்வின் உறைவிடம்; இறைமையின் மறைவிடம்.
சங்ககாலத்து மக்களின் அன்றாட வாழ்வில் “இசை” பெரிதும் இடம்பெற்றிருந்தது. இசையை அனுபவிக்க மொழி தடையில்லை, பகுத்தறிவும் தேவையில்லை, பொருள் விளக்கமும் கட்டாயமன்று. பொருநராற்றுப்படையில் முடத்தாமக்கண்ணியார்,
ஆறலைக் கள்வர் படைவிட அருளின
மாறுதலைப் பெயர்க்கும் மருவின் பாலை (21-22)
எனப் பாலை யாழின் சிறப்பை, “வழிப்பறி செய்து பொருளை அபகரிக்கும் கள்வர்களின் கல்மனதையும் கரையச்செய்யும் தன்மை யாழிசைக்கு உண்டு. அதனால் அவர்தம் கையிலுள்ள கொலைக் கருவிகளை கைவிட்டு நல்லவர்களாக மாறிவிடுவர்” என்று கூறியுள்ளார்.
ஐங்குறுநூற்றுப் பாடல் ஒன்றில், “தலைவியின் பேச்சு யாழிசையின் இன்பம் போன்றது” என்பதை, “நரம் பார்ந்தன்ன தீங்கிளவி” (185) எனப் பாராட்டியுள்ளான் தலைவன். கலித்தொகைப் பாடல் ஒன்றில்,