சொல் வேட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சொல் வேட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 35

சர்ரோகசி' என்ற சொல் சமீப காலமாகப் பெருமளவில் பயன்பாட்டிற்கு வந்த போதிலும், சர்ரோகசியின் பயன்பாடு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, எல்லாச் சமூகங்களிலும், எல்லாச் சமயங்களிலும் இருந்திருப்பதாகத் தெரிகிறது. பைபிளில் கூறப்படும் யூத தம்பதியரான சாரா - ஆப்ரகாமின் கதையை நாம் அறிவோம். அவர்களுக்குப் பிறக்கும் வாரிசுகள் வானில் உள்ள விண்மீன்களைவிட அதிக எண்ணிக்கையில் இருக்கும் என்று இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டாலும், வயதான காரணத்தால் இனி தான் குழந்தைப்பேறு பெறமுடியாது என்று எண்ணி, சாரா தன்னிடம் பணிபுரிந்த ஹாகர் என்னும் எகிப்து நாட்டு அடிமைப் பெண்ணை வாடகைத் தாயாக்குகிறாள். அவளுக்குப் பிறக்கும் குழந்தை இஷ்மயில் (Ishmael). ஆனால், பின்னாளில் வயது முதிர்ந்த பின்னர் சாராவும், ஐசக் என்ற குழந்தையைப் பெற்றெடுக்கிறாள்.

மகாபாரதத்தில் இதற்கு எதிர்மாறாக, பாண்டவர்களின் தந்தையாகிய பாண்டுவும் கெüரவர்களின் தந்தையாகிய திருதராஷ்டிரனும் வாடகைத் தந்தையின் மூலம் பிறந்தனர் என்று காண்கிறோம். இதனால்தானோ என்னவோ "சர்ரோகசி' என்பதைத் தற்போது (1) சம்பிரதாயமான சர்ரோகசி (traditional surrogacy) என்றும், (2) சூழ்நிலை சர்ரோகசி (gestational surrogacy) என்றும் பிரிக்கிறார்கள் போலும்! இவற்றைக் கருத்தில் கொண்டு இந்தவாரக் கடிதங்களைப் பார்ப்போம்.

புலவர் செ.சத்தியசீலன் சர்ரோகேட், சர்ரோகசி என்பவை பெயர்ச்சொற்கள் என்றும், இச்சொற்களுக்கு மாற்றுத்தாய், செவிலி, மாற்று, பதிலி, பதிலாள் போன்ற சொற்கள் பொருந்தி வரும் என்றும் எழுதியுள்ளார்.

தெ.முருகசாமி, பதிலி அல்லது பிரதிநிதி என்னும் சொற்கள் பொருந்தும் என்கிறார். மு.தனகோபாலன், சர்ரோகேட் என்ற சொல்லுக்கு மாற்று நிலையாளர் என்ற சொல்லும், சர்ரோகசி என்ற சொல்லுக்கு வாடகைத்தாய் என்ற சொல்லும் பொருந்தும் என்கிறார். வெ.அனந்தகிருஷ்ணன் துணை குரு, பெயராள், வாடகைத்தாய், துணைக்குரு பதவி, மாற்றாள், பதிலானது, பதிலாள், பகரமானது, பகரப்பொருள் என்னும் சொற்களை எழுதியுள்ளார்.

வழக்குரைஞர் கோ.மன்றவாணன், சர்ரோகேட் என்ற சொல்லுக்கு நிகராள், நிகராளி, நிகராளர், பதிலி, பதிலாள், பதிலாளர், பெயராள், பெயராளர், இணையாள், இணையாளர் என்னும் சொற்களையும், சர்ரோகசி என்ற சொல்லுக்கு கருநடவு, இரவல் கருத்தரிப்பு, இரவல் கருவளர்ப்பு, செயற்கைக் கருத்தரிப்பு, செயற்கைக் கருவளர்ப்பு, நடவுத்தாய், பதிலித்தாய், வாடகைத்தாய், நிகர் நிலைத்தாய், நிகர்த்தாய், தாய்நிகர் என்னும் சொற்களையும் அனுப்பியுள்ளார்.

ஹரணி என்பவர், பதிலி, மாற்றாள், பதிலித்தாய், பதிலிப் பொறுப்பு முதலிய சொற்களையும், சோம.நடராசன், துணையாள், பெயராள், பதிலாள், மாற்றாள், சார்பாள் ஆகிய சொற்களையும் பரிந்துரைத்துள்ளனர்.

முனைவர் பா.ஜம்புலிங்கம், சர்ரோகேட் என்ற சொல்லுக்கு பதிலாள், மாற்றாள், மாற்றான், மாற்று, பதிலி, துணை, செவிலி என்னும் சொற்களையும், சர்ரோகசி என்ற சொல்லுக்கு மாற்றுக்காணல், பதிலித்தெரிவு, பதிலி உருவாக்கு முறை, மாற்று உருவாக்கு முறை என்னும் சொற்களையும் கூறியுள்ளார். மேலும், சர்ரோகேட், சர்ரோகசி என்னும் சொற்களுக்கு இணைச்சொற்களாக, க்ளோனிங் சைல்டு (cloning child) என்ற சொல்லுக்குப் படியாக்கக் குழந்தை என்ற ஒரு அழகான சொல்லையும் உருவாக்கி அனுப்பியுள்ளார்.
சென்னை பல்கலைக்கழக ஆங்கிலம் - தமிழ் சொற் களஞ்சியத்தில் முனைவர் அ.சிதம்பரநாதன் செட்டியார், சர்ரோகேட் என்ற சொல்லுக்கு துணைகுரு, பெயராள் என்னும் சொற்களையும், சர்ரோகேட்ஷிப் என்ற சொல்லுக்கு துணை குரு பதவி என்ற சொல்லையும் இணைச் சொற்களாகக் குறிப்பிட்டுள்ளார். மெரியம் வெப்ஸ்டர் அகர முதலி, "சர்ரோகேட் என்ற சொல் லத்தீன் சொல்லான சர்ரோகேடஸ் என்ற சொல்லிருந்து 1533-இல் உருவானதாகவும், அது செயப்படுபொருள் குன்றாவினை (transitive verb) ஆகப் பயன்படுத்தப்படும்போது, ஒருவருக்கு பதிலாகவோ, வாரிசாகவோ, துணையாகவோ, இன்னொருவரை நியமிப்பது என்று பொதுவாகப் பொருள் கொள்ளப்படும்' என்றும் கூறுகிறது.

ஆனால், சர்ரோகேட் என்ற சொல் பெயர்ச்சொல்லாகப் (noun) பயன்படுத்தப்படும்போது, அச்சொல்லுக்கு (1) ஒருவரது இடத்தில் செயல்படுவதற்காக நியமிக்கப்படும் இன்னொருவர், (2) சில மாநிலங்களில் (நியூயார்க்கைப் போல்) உயில்களைச் சான்றளிப்பதற்கும், பாதுகாவலர்களைக் கண்காணிப்பதற்கும், அதிகார வரம்பு பெற்ற நீதித்துறை அலுவலர், (3) ஒருவருக்கு பதிலாக செயல்படும் இன்னொருவர் ஆகிய மூன்று பொருள்களைத் தருகிறது.

ஆக்ஸ்ஃபோர்ட் அகர முதலியும் சர்ரோகேட் என்ற சொல்லுக்கு மூன்று வகையான பொருள்களைத் தருகிறது. அவை: (1) ஒரு அலுவலரின் பணியைக் கவனிக்கும் இன்னொருவர், (2) திருமண உரிமங்களை (marriage license) வழங்கும் அதிகாரம் பெற்ற துணை குருமார் அல்லது பேராயரின் உதவியாளர் (Bishop’s Deputy), (3) உயிலுக்குச் சான்றளித்தல்,

வாரிசு உரிமையை அங்கீகரித்தல் மற்றும் இளவர்களின் (Minor) பாதுகாவலர்களைக் கட்டுப்படுத்தல் ஆகியவற்றை நிர்வகிக்கும் ஒரு நீதிபதி. ஆனால், பேராயரின் உதவியாளர் என்ற பொருளும், உயிலுக்கு சான்றளிக்கும் நீதிபதி என்ற பொருளும் தற்போது வழக்கொழிந்துபோன காரணத்தால், சர்ரோகேட் என்ற சொல்லுக்கு குழந்தைப்பேறு தொடர்பாக ஒரு பொருளும், ஒருவருக்குப் பதிலாக இன்னொருவர் அவரது பணியை கவனித்தல் என்ற இன்னொரு பொருளும் மட்டுமே தங்கி இருப்பதாகத் தெரிகிறது. இதை அடிப்படையாக வைத்து இந்த வாரக் கடிதங்களைப் பார்த்தோமேயானால், சர்ரோகசி என்ற சொல்லுக்கு கருநடவு என்ற சொல் ஒரு புதுச் சொல்லாக்கமாகத் தெரிகிறது. சர்ரோகேட் என்ற சொல்லுக்கு மாற்றாள் என்ற சொல் பல்வேறு பொருள்களையும் உள்ளடக்கி காட்டுகிறது.


எனவே, சர்ரோகேட் என்ற சொல்லுக்கு இணையான தமிழ் சொல் மாற்றாள். சர்ரோகசி என்ற சொல்லுக்கு இணையான சொல் கருநடவு.

நன்றி - தமிழ்மணி 07 07 2013

சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 34

இந்து' நாளிதழில் கடந்த (2013 ஜூன்) 23-ஆம் தேதி, UFOs sighted in Chennai?' (சென்னையில் பறக்கும் தட்டுக்கள் காணப்பட்டனவா?) என்ற தலைப்பில் ஒரு செய்தி பிரசுரமானது. முகப்பேரில் ஒரு வங்கி அலுவலர் தானும், தன் குடும்பத்தாரும் பளிச்சிடும் மஞ்சள் நிற ஒளியோடு ஐந்து தட்டுக்கள் தெற்கிலிருந்து வடக்கே பயணித்ததைப் பார்த்ததாகக் கூறினார் என்றும், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் அவை விண்ணிலிருந்து விழும் எரிமீன்களாக இருக்கலாம் என்று கருத்தறிவித்தது என்றும் அச்செய்தி கூறியது.

அறிவியலுக்குப் புலப்படாத அமானுஷ்ய சக்திகளும், நிகழ்வுகளும் உண்டு என்றும், இல்லை என்றும் காலங்காலமாக மாறுபட்ட கருத்துகள் உலவி வருகின்றன. ஆயினும், அவற்றின்பால் மனிதனுக்குள்ள ஆர்வமும், ஈடுபாடும் என்றென்றும் குறைவதில்லை. 2007-ஆம் ஆண்டு அமெரிக்காவில் வெளியான "பாராநார்மல் ஆக்டிவிடி' என்ற திரைப்படம், வெளியிடப்பட்ட இரண்டு மாதங்களுக்குள், 1945 திரையரங்குகளில் அமெரிக்காவில் மட்டும் 108 மில்லியன் டாலர்களையும், வெளிநாடுகளில் 85 மில்லியன் டாலர்களையும் வசூலில் அள்ளிக் குவித்தது என்பதிலிருந்தே ஆவி உலகத்தின் மேல், இப்புவி உலகத்திற்கு உள்ள ஆர்வம் புலப்படும்.

"நார்மல்' என்ற சொல்லுக்கு இயல்பான, வழக்கமான என்ற பொதுப்பொருள்கள் உண்டு. எனவே, இயல்பைக் கடந்த அல்லது நிலையில் திரிந்தவற்றை ஆங்கிலம் அப்நார்மல் (abnormal) என்று குறிப்பிடுகிறது. அதே சமயம், இயல்நிலைக்குக் குறைந்த ஒன்றை ஆங்கிலத்தில் சப்நார்மல் (subnormal) என்று குறிப்பிடுகின்றனர். இவற்றைத் தாண்டி, அறிவியலால் விளக்கவொண்ணாதவற்றைப் பாராநார்மல் என்று குறிப்பிடும் சொல் வழக்கு 1920-ஆம் ஆண்டில் உருவானதாகவும், பாராநார்மல் என்ற சொல்லுக்கு சூப்பர் நேச்சுரல் (super natural) என்ற பொருளையும் மெரியம்-வெப்ஸ்டர் ஆங்கில அகரமுதலி தெரிவிக்கிறது. இவற்றைக் கருத்தில் கொண்டு, இவ்வாரக் கடிதங்களுக்கு வருவோம்.

ஆசிரியர் பெ.கார்த்திகேயன், பன்னாட்டு அகராதிகள், பாராநார்மல் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு அடிப்படை அறிவியல் கோட்பாடுகள், புரிதலை மீறி ஏற்படுவதாகத் தோன்றும் செயல்கள், எண்ணங்கள், சக்திகள் என்று கூறுகின்றன என்றும், அவை உண்மை நிலையை மீறுவதாக இருப்பதால் அமானுஷ்யம் என்ற வடமொழிச் சொல் பொருந்தும் என்றும், காணாநிலை, உண்மையிலாத் தோற்றம், அறிவியல் மீறுநிலை, மாயநிலைக் கோட்பாடு அல்லது நிலை, கனவுநிலை, வேறுபாடுநிலைத் தோற்றம், பொய்நிலை, கண்டுணராக் காட்சிநிலை, அறிவியல் வரம்பு மீறும் கோட்பாடு, மெய்யில்லாநிலை, மெய்மீறிய நுண்ணுணர்வு, பொய்த்தோற்றம், தன்னுணர்வு அற்ற புறநிலைசார் அறிவு எனப் பல தமிழ்ச் சொற்களையும் பரிந்துரைத்திருக்கிறார்.

என்.ஆர்.ஸத்யமூர்த்தி, விளக்கவொண்ணா, விஞ்ஞானம் விடைகாணா, விஞ்ஞானம் விளம்பா, விஞ்ஞானம் வழுவிய, விஞ்ஞானம் மருவா, விஞ்ஞானம் தழுவா, ஆய்வுகாணா, ஆய்வுகடந்த, ஆய்வுக்கப்பால், இயற்கை அல், இயற்கைஎதிர், இயல்பு அல், இயல்பு எதிர், அல்வழி, அன்வழி, ஆய்வு மீறிய, அறிவு மீறிய என்றெல்லாம் கூறலாம் என்கிறார்.

முனைவர் பா.ஜம்புலிங்கம், ஆரம்ப நிலை, அதீத நிலை, உயர்தனி நிலை, இயற்கைக்கு மேலான நிலை, இயற்கைக்கு அப்பாற்பட்டு, இயற்கைக்கு அப்பால், இயல்புக்கு மீறிய என்று கூறுகிறார். புலவர் செ.சத்தியசீலன், அறிவுக்கெட்டா இயல்பு, புலணுணராப் புலம் ஆகிய சொற்களை இணைச்சொற்களாகக் கொள்ளலாம் என்றும், மு.தனகோபாலன் பூடகமான (அறிவியலுக்கும், மனித அறிவுக்கும் அப்பாற்பட்டது) என்ற சொல்லைப் பயன்படுத்தலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

சோலை. கருப்பையா, வழக்கத்திற்கு மாறான, வித்தியாசமான, சிறப்பான அல்லது விதிவிலக்கான ஆகிய சொற்கள் பொருந்தும் என்கிறார். ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், நமக்குப் புரியாமல் இயங்கும் சக்தியை, அறிவியல் எல்லைக்குள் கொண்டு வரமுடியாத சக்தியை இச்சொல் குறிப்பதால், "அறியாச் சக்தி' என்ற தமிழ்ச் சொல்லைப் பரிந்துரைக்கிறார்.

தெ.முருகசாமி, இயல்புக்கு மாறாக (சித்தப்பிரமை போல்) உள்ள நிலை, உடன்பாடில்லாத நிலை, முறை பிறழ்ச்சி (dis-order) என்றும் கூறலாம் என்றும், அதனால் இயல்புக்கு மாறுபட்ட நிலை என்றும் கூறலாம் என்றும் கூறியுள்ளார்.

டி.வி.கிருஷ்ணசாமி, சாதாரண நிலை போன்ற, ஒத்த சாதாரண நிலை, சற்று தேவையான அல்லது உண்மையான பிரதி என்பவை பொருத்தமாக இருக்கும் என்று உரைத்திருக்கிறார்.

கோ.மன்றவாணன், இயல்பெதிர்வு, இயல்முரண், இயல்பு பிறழ்வு அல்லது இயல்பிறழ்வு, அமானுஷ்யம், புனைவு, புனைநிகழ்வு, பொய் நிகழ்வு, புலன்மீறு உணர்வு, புலன் எட்டா நிகழ்வு ஆகிய சொற்களைப் பரிந்துரைக்கிறார்.

 சென்னைப் பல்கலைக்கழக (பதிப்பாசிரியர்: முனைவர் அ.சிதம்பரநாதன் செட்டியர்) ஆங்கிலம்-தமிழ் சொற்களஞ்சியத்தில் பாராநார்மல் என்ற சொல்லுக்குப் பொருள் தரப்படாவிட்டாலும், சூப்பர் நேச்சுரல் என்ற சொல்லுக்கு இயற்கை கடந்த, இயற்கைக்குள் அடங்காத, இயன்முறைக் காரண காரியத் தொடர்புக்கு அப்பாற்பட்ட, ஆவித்தொடர்புடைய, தெய்வீக ஆற்றல் சுட்டிய ஆகிய பொருள்கள் தரப்பட்டுள்ளன.

இவற்றைக் கருத்தில் கொண்டு ஆராய்ந்தால், அறிவியல் மீறு நிலை, இயல்புஎதிர், இயல்பிறழ்வு ஆகிய சொற்கள் பொருந்தி வருவதாகத் தெரிகிறது. ஆனால், அறிவியலாளர்கள் இச்சொல்லை அறிவியலுக்கு அப்பாற்பட்ட அல்லது இயல்புக்கு அப்பாற்பட்ட ஒரு நிலை அல்லது நிகழ்வோடு தொடர்புபடுத்திப் பேசுவதால், அறிவறியா நிலை அல்லது இயல்பறியா நிலை என்று கூறுவது பொருந்தும். இவற்றுள் இயல்பு என்ற சொல், நார்மல் என்ற சொல்லின் நேரடிப் பொருளாக இருப்பதால், பாராநார்மல் என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் "இயல்பறியா நிலை’.


நன்றி - தமிழ்மணி 30 06 2013

சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 33

1906-ஆம் ஆண்டு, வியன்னா நாட்டுக் குழந்தை நல மருத்துவர் க்ளமென்ஸ் ஃபான் பிர்க்வி (Clemens Von Pirquet) என்பவர்தான் முதன்முதலில் அலர்ஜி என்ற சொல்லை உருவாக்கினார். பழைய கிரேக்கச் சொற்களாகிய அல்லாஸ் (Allos) மற்றும் எர்கான் (Ergon) ஆகிய இரு சொற்களின் கூட்டுச் சேர்க்கையாக அவர் இச்சொல்லை உருவாக்கி, தூசு, மகரந்தம் அல்லது ஒருசில உணவுப் பொருள்கள் சில நோயாளிகளின் உடலில் மிகத் தீவிரமான நுண்ணுணர்வை ஏற்படுத்துவதைக் குறிக்க இச்சொல்லைப் பயன்படுத்தினார். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் எப்படி பல்வேறு வகையான அலர்ஜி ஏற்படுகிறது என்பது 1960க்குப்பின் மருத்துவ உலகில் இம்யுனோகுளோபுலின்-இ (Immunoglobulin-E) என்ற நோய் எதிர்ப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான், தெள்ளத் தெளிவாக விளங்கியது. இனி இவ்வாரக் கடிதங்களைப் பார்ப்போம்.

வழக்குரைஞர் எஸ்.ஏ.சுந்தரமூர்த்தி, உடலுக்கு ஒத்துக்கொள்ளாத திட, திரவ மற்றும் வாயுப் பொருள்களை அலர்ஜி என்பதால், இதற்கிணையான சொல் "ஒவ்வாமை' என்கிறார். புலவர் சி.செந்தமிழ்ச்சேய், உடல் எதிர்ப்புணர்வு, ஏற்காமை, ஏலாமை மற்றும் பொருந்தாமை முதலிய பொருள்களைக் கொள்ளலாம் என்கிறார்.

வழக்குரைஞர், கோ.மன்றவாணன், ஒவ்வாமை, ஊறுணர்வு, எதிருணர்வு, எதிர்ச்சி, நுண் ஊறுணர்வு, நுண் எதிருணர்வு, ஊறுபொருள் விளைவு, ஊடுபொருள் எதிர்விளைவு, ஊடுபொருளின் ஏலாமை, ஊடுபொருள் பொருந்தாமை முதலிய பொருள்களைப் பயன்படுத்தலாம் என்கிறார்.

டாக்டர் ஜி.ரமேஷ், "ஒவ்வாமை' என்றும், முனைவர் பா.ஜம்புலிங்கம், ஒவ்வாமை, ஏற்காமை, பீதி, ஏற்கா சூழல் மற்றும் ஒத்துக்கொள்ளா நிலை முதலிய சொற்களையும் பரிந்துரைத்துள்ளனர்.

என்.ஆர்.சத்யமூர்த்தி, ஒவ்வாமை, கடும் ஒவ்வாமை, ஏலாமை என்று நேர்ப்பொருளிலும், வெறுப்பு, மிகு வெறுப்பு, கடும் வெறுப்பு என்று அணிசேர் பொருளிலும் பொருள் கொள்ளலாம் என்கிறார்.

சோம.நடராசன், பொதுவாக அலர்ஜி என்பதற்கு மருத்துவ ரீதியில் "ஒவ்வாமை' எனப்பொருள் கொண்டாலும், அது "வேறு' என்ற பொருள் கொண்ட அல்லாஸ் (Allos) என்ற கிரேக்கச் சொல்லிலிருந்தும், வினை என்ற பொருள் கொண்ட எர்கான் (Ergon) என்ற கிரேக்கச் சொல்லிலிருந்தும் வந்தது என்றும், அதனால், அலர்ஜி என்பதை வேற்றுவினை, வேற்று ஆற்றல், பிறவினை, மற்றவினை மற்றும் அல்வினை என்று மொழியாக்கம் செய்யலாம் என்கிறார்.

டி.வி.கிருஷ்ணசாமி, ஒவ்வாமை அல்லது ஒத்துவராமை என்று பொருள் கொள்ளலாம் என்கிறார். தெ.முருகசாமி, "ஒவ்வாமை' என்றும், இதை வள்ளுவரும் ""மாறுபாடில்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபாடில்லை உயிர்க்கு'' என்ற குறளின் மூலம் மறைமுகமாகக் குறிப்பதாகவும் மேலும், அலர்ஜி என்பதற்கு உடலில் அயற்பொருள் நுழைவின் எதிர்விளைவு என்று சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம்-தமிழ் அகராதி பொருள் தருகிறது என்றும் எடுத்துரைத்துள்ளார்.

அலர்ஜி மருத்துவம் சார்ந்த ஆங்கிலச் சொல் என்றும், ஒருவர் தம் உடற்கூறுக்கு முரணான உணவினை உட்கொள்வதால் ஏற்படும் இயல்பல்லாத உணர்ச்சி மற்றும் உடலில் போடப்படும் ஊசி, பூசப்படும் களிம்பு வகைகள், மணப்பொருள்கள் உடலுக்கு ஒத்துக்கொள்ளாத நிலையையும், இவற்றைத் தாண்டி, ஒலிகளால் சிலருக்கு அலர்ஜி ஏற்படும் என்றும், எனவே ஊண் ஒவ்வாமை, மருந்து ஒவ்வாமை, உணர்வு ஒவ்வாமை, எதிர்விளைவு ஆகிய சொற்களை இணைச்சொற்களாகக் கொள்ளலாம் என்றும் புலவர் செ.சத்தியசீலன் எழுதியுள்ளார்.

சோலைக் கருப்பையா, "ஒவ்வாமை' என்றும், வெ.ஆனந்தகிருஷ்ணன் ஒவ்வாமை, அல்லது மிகுநுட்ப ஊறுணர்வு, உடலில் அயற்பொருள் நுழைவின் எதிர் விளைவு ஆகிய சொற்களையும், க.அன்பழகன் (ஹரணி) மிகு விளைவு, உடல் மிகுவினை, மேனி மாற்றம், மெய் எதிர் தோற்றம், அயல்பொருள் மிகுவினை முதலிய சொற்களையும், பெ.கார்த்திகேயன், ஒவ்வாமை, இயலாமை, பொருந்தாமை, ஏற்காமை, இசையாமை உடல் எதிர் விளைவு முதலிய சொற்களையும், ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், ஏற்றுக்கொள்ளாமை, பொருந்தாமை, விரும்பாமை ஆகிய சொற்களையும் குறிப்பிட்டுள்ளனர்.

ஒரு வாசகர் விக்கிபீடியா தொகுப்பின் அடிப்படையில் இச்சொல்லுக்குப் பண்டைத் தமிழ் மருத்துவத்தில் "அழற்சி' என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார். ஆனால், சித்த மருத்துவர் சிவராமன், அழற்சி என்ற சொல் இன்ஃப்ளமேஷனைக்  (inflammation)  குறிக்கும் என்கிறார்.

முனைவர் சிதம்பரநாதன் செட்டியாரால் பதிப்பிக்கப்பட்ட சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம்-தமிழ்ச் சொற்களஞ்சியத்தில் இச்சொல்லுக்கு மிகு நுட்ப ஊறுணர்வு, உடலில் அயற்பொருள் நுழைவின் எதிர்விளைவு, ஊறுபொருள் அல்லது உயிர்க்காப்பு மூலம் பொருள்வகையில் ஏற்படும் கூருணர்வு நிலை ஆகிய பொருள்கள் தரப்பட்டுள்ளன. ஆனால், இச்சொற்களும், மன்றவாணன் பரிந்துரைத்துள்ள நுண் ஊறுணர்வு போன்ற சொற்களும் அலர்ஜியின் அடையாளம் அல்லது வெளிப்பாடான ஹைப்பர் சென்ஸிடிவிடியைக் குறிப்பதாக மருத்துவர்கள் கருதுகின்றனர்.

எனவே, இவையனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது, ஒவ்வாமை, ஏற்காமை, ஏலாமை, பொருந்தாமை ஆகிய அனைத்துச் சொற்களும் அலர்ஜி என்ற சொல்லுக்குப் பொருந்தும் போல் தோன்றுகிறது. இவற்றுள் பெருமளவில் "ஒவ்வாமை' என்ற சொல் பயனாக்கத்திற்கு வந்து விட்டதாகத் தெரிகிறது. (சென்ற ஞாயிறன்று சொல்வேட்டையைப் படித்த உடனேயே, எனது கைபேசியில் குறுஞ்செய்தியின் மூலம் ஒவ்வாமை என்ற சொல்லை நீதியரசர் பிரபா ஸ்ரீதேவன் அனுப்பிவிட்டார்).

எனவே, அலர்ஜி என்ற சொல்லுக்குப் பெருவாரியான வாசகர்கள் தேர்ந்தெடுக்கும் இணைச்சொல் "ஒவ்வாமை' ஆகும்.

நன்றி - தமிழ்மணி 23 06 2013

சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 32

Alter ego  என்ற சொல்லை முதன்முதலில் உருவாக்கியவர் ரோமாபுரியின் புகழ்பெற்ற பேச்சாளர், வழக்குரைஞர், தத்துவ மேதையான மார்கஸ் துல்லியஸ் சிசேரோ (cicero) ஆவார். சிசிலி மாகாணத்தின் ஆளுநரை லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் (2000 ஆண்டுகளுக்கு முன்னரே லஞ்ச ஊழல் வழக்கத்திற்கு வந்துவிட்டது போலும்) வெற்றிகரமாகச் சிறைக்கு அனுப்பியதன் மூலம் புகழ் ஏணியில் ஏறத்தொடங்கிய சிசேரோ, பேச்சாற்றலைப் பற்றி இரு பெரும் நூல்களை எழுதினார். நட்பைப் பற்றி கி.மு. 44-இல் சிசேரோ எழுதிய த அமிசியா (De Amicitia) என்ற நூலில்தான் முதன்முதலாக "ஆல்டர் ஈகோ' என்ற சொல் உருவாக்கப்பட்டது. ஒத்த கருத்தும், ஒரே சிந்தனையும் உடைய நண்பனைக் குறிக்க, சிசேரோ இச்சொல்லைப் பயன்படுத்தினார்.

ஆனால், உளவியல் துறை வளர்ச்சி காணத் தொடங்கியதும், ஒரு மனிதனுக்குள் இருக்கும் இன்னொரு படிமத்தையும், குறிப்பாக ஒரு மனிதனுக்குள் மறைவாகச் செயல்படும் தீய படிமத்தையும் குறிப்பதற்கு இச்சொல் பயன்படுத்தப்பட்டது. 18-ஆம் நூற்றாண்டில் உளவியல் அறிஞர் ஆண்டன் மெஸ்மெர் (அவர் பெயரால்தான் மெஸ்மெரிசம் என்ற சொல் ஏற்பட்டது) ஹிப்னாசிஸ் முறையில் (தூண்டப்பட்ட அறிதுயில் நிலையில்) ஒருவரது ஆல்டர் ஈகோவைப் பிரிக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டினார். 19-ஆம் நூற்றாண்டில், ஸ்காட்லாந்து நாட்டைச் சார்ந்த ராபர்ட் லூயி ஸ்டீவன்சன் (Robert Louis Stevenson)) எழுதிய "டாக்டர் ஜெகில் மற்றும் திருவாளர் ஹைடு அவர்களின் விசித்திரமான வழக்கு' (The Strange Case of Dr.Jekyll and Mr.Hyde) என்ற நூல், ஒரு மனிதனுக்குள் மறைவான அல்லது மோசமான இரண்டாம் பக்கம் இருக்கக்கூடும் என்பதைக் கதையமைப்பாகக் கொண்டு, விற்பனையில் சாதனை படைத்தது. இத்தகவல்களைக் கருத்தில் கொண்டு, இவ்வாரக் கடிதங்களுக்கு வருவோம்.

வழக்குரைஞர் எஸ்.ஏ.சுந்தரமூர்த்தி, "ஆல்டர் ஈகோ' என்பதை "ஒருவரின் மாற்று ரூபம்' எனலாம் என்று கூறுகிறார். சோம.நடராசன், "ஆல்டர்' என்றால் மாற்று; "ஈகோ' என்றால் தன் (முனைப்பு) என்றும், "ஆல்டர் ஈகோ' என்ற சொல்லுக்கு என்மாற்று, மாற்றுயான், இரண்டாம் நான், என் போன்றான் என்னும் சொற்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம் என்கிறார்.

டி.வி.கிருஷ்ணசாமி, "பொருத்தமான இன்னொன்று' என்பதே இதன் இணைச் சொல்லாகும் என்கிறார். புலவர் செ.சத்தியசீலன், ஒத்தமைவு, போன்றிருத்தல், போலி ஆகிய சொற்களைக் கொள்ளலாம் என்கிறார். திருமதி. ஹரணி, தன்னியல்புப் பிரதி, தன்னுருப் பிரதி, தன்னுரு நகல், தன்னுரு மெய், தன் மாற்றுரு, மாற்றாளன், மெய்யுரு மாற்று, தன் மாற்று வடிவு ஆகிய சொற்களைக் குறிப்பிட்டுள்ளார். 

சோலை.கருப்பையா, ஒருவரின் குணநலன், நடத்தை, உருமாற்றம் ஆகியவற்றைக் கொண்டு அவர் முன்னைப்போல இல்லை; ஆளே மாறிவிட்டார் என்று சொல்வதைப்போல், "ஆல்டர் ஈகோ' என்ற ஆங்கிலச் சொல்லுக்குக் காலம் மாற்றிய கோலம், காலம் செய்த கோலம், காலத்தின் மாறுபாடு ஆகிய சொற்களில் ஏதேனும் ஒன்று பொருந்தும் என்கிறார்.

வெ.ஆனந்தகிருஷ்ணன், நெருங்கிய நண்பர், ஆளின் மறுவடிவம், தன் மாற்று வடிவம், உற்ற நண்பர், உயிர்த்தோழன், ஆத்ம சிநேகிதன் ஆகிய சொற்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம் என்கிறார். முனைவர் பா.ஜம்புலிங்கம், அன்புப் பிரதிபலிப்பு, நேசப்பிரதி, பாசப்பிரதி, நட்புப்பிரதி, உள்ளங்கவர் பிம்பம், மாற்று அன்பு ஆகிய சொற்களைக் குறிப்பிட்டுள்ளார். டாக்டர் ஜி.ரமேஷ், மாற்றுத் தோற்றம், வேறு முகம், எதிர்ப் பண்பு, வேறுபட்ட ஆளுமை, மாறுபட்ட செயல்பாடு ஆகிய சொற்களைப் பரிந்துரைத்துள்ளார்.

கோ.மன்றவாணன், இரட்டை ஆளுமை, மாற்றாளுமை, தன்நகல், படிவார்ப்பு, தன்னுள் மாற்றாள், இன்னொரு நான், தன்மாற்று வடிவம், தன்முனைப்பு மாற்றீடு, மாற்றுத் தன்முனைப்பு, உயிர் நண்பர், ஆருயிர் நண்பர் முதலிய சொற்களைப் பரிந்துரைக்கலாம் என்றும், இச்சொல்லுக்கு விளக்கமாக உன்னைப்போல் ஒருவன், அந்நியன், மனிதனின் மறுபக்கம், உனக்குள் ஒருவன் ஆகிய பயன்பாடுகளும் புழக்கத்தில் உள்ளன என்றும் கூறியுள்ளார். என்.ஆர்.சத்தியமூர்த்தி, உற்ற நண்பன், நசையறு நண்பன், இன்னொரு முகம், மற்ற முகம், மாற்று முகம், உள்ளுறை முகம், பிறிதொரு முகம், மாற்று உள்ளீடு ஆகிய சொற்களைக் குறிப்பிடலாம் என்கிறார்.

முனைவர் அ.சிதம்பரநாதன் செட்டியார், சென்னைப் பல்கலைக்கழக ஆங்கில-தமிழ் சொற்களஞ்சியத்தில் இச்சொல்லுக்கு ஆளின் மறுபடிவம், தன்மாற்று வடிவம், ஓருயிரும் ஈருடலுமாக இயங்கும் உற்ற நண்பர் என்னும் பொருள்களைத் தருகிறார். ஆனால், இச்சொல் தோன்றிய வரலாற்றையும், அது காலப்போக்கில் உளவியல் துறையின் தாக்கத்தால் பெற்றிருக்கும் மாற்றத்தையும், கருத்தில் கொண்டு பார்த்தால், இச்சொல் (1) நல்ல நண்பன், (2) ஒரு மனிதனின் மாற்று அல்லது இரண்டாம் வடிவம் ஆகிய இரு பொருள்களையும் தாண்டி, ஒரு மனிதனுக்குள் நன்மையின் பாற்பட்டு நிற்கும் புறத்தோற்றத்தின் பின்னால், தீமையின் பாற்பட்டு மறைந்து நிற்கும் மாற்றுத் தோற்றத்தைக் குறிக்கவும் பயன்படுவது தெரிகிறது.


ஆக்ஸ்ஃபோர்டு அகரமுதலியும் இச்சொல்லுக்கு (1) மிகவும் நெருக்கமான நம்பிக்கைக்குரிய நண்பன், (2) ஒரு மனிதனின் இரண்டாவது அல்லது மாற்று வடிவம் ஆகிய இரு பொருள்களைத் தருகிறது. அதனால்தான், பெருவாரியான வாசகர்கள் மாற்று என்ற சொல்லையும், வடிவு, உரு, பிரதி ஆகிய சொற்களையும் இணைத்து வழங்கியுள்ளனர். இந்த வகையில் பார்க்கும்போது, தன் மாற்றுரு, மாற்று முகம் ஆகிய இரு சொற்களுமே ஆல்டர் ஈகோ என்ற சொல்லின் பல பரிமாணங்களையும் உள்ளடக்கியதாகத் தெரிகிறது. எனவே, இச்சொல்லுக்கு மிகப் பொருத்தமான இணைச்சொல் "தன் மாற்றுரு' எனலாம்.

நன்றி - தமிழ்மணி 16 06 2013

சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 31

இன்றைக்குச் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு, தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சன், வாஷிங்டன் நகரில் நடந்த ஸ்பெல்லிங் பீ (spelling bee) போட்டியைக் காண்பதற்காக வந்தார். அப்பொழுது சாத்தான் (satan) என்றச் சொல்லுக்கே பல போட்டியாளர்கள் தவறான ஸ்பெல்லிங்கைக் கொடுத்தார்கள். 1941-இல் Scripps Howard News Service என்ற நிறுவனம் இப்போட்டியை நடத்தும் பொறுப்பையும் செலவையும் ஏற்றுக் கொண்டது. அன்று முதல் இன்று வரை தொடர்ந்து Scripps Howard National Spelling Bee (போட்டி) மிகப் பிரபலமான போட்டியாக இருந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் ஆசியாவிலிருந்து, குறிப்பாக இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்த மக்களின் குழந்தைகள் இப்போட்டிகளில் தொடர்ந்து வெற்றிவாகை சூடுகிறார்கள்.

அதைப்போல் தமிழில் ஒரு போட்டி நடத்தினால் இன்றைய சூழலில் எத்தனை குழந்தைகள் அதில் பங்கேற்பார்கள், அவர்களுக்குள் எத்தனை குழந்தைகள் தமிழ்ச் சொற்களில் உள்ள எழுத்துகளைச் சரியாகப் பிரித்துரைப்பார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

இதைப்பற்றி பேசும்போது ஒரு வழக்குரைஞர் "தமிழில் இதற்கான சாத்தியக்கூறு இல்லை' என்றும், "அதற்கான காரணம் ஒலிவடிவமும் (phonetics), வரிவடிவமும் தமிழில் ஒன்றாக இருக்கிறது' என்றும் கூறினார். அவர் கூற்றில் ஓரளவு உண்மை இருந்தாலும், குறைந்தபட்சம் ஒரே ஒலிவடிவத்தைக் கொண்ட வெவ்வேறு வரிவடிவ எழுத்துகள் தமிழில் இருப்பதை நாம் காணமுடியும். சான்றாக, "ர' மற்றும் "ற' ஆகிய இவ்விரு எழுத்துகளுக்குமான ஒலிவடிவம் கிட்டத்தட்ட ஒன்றுதான்; ஆனால் வரிவடிவம் வேறு. ஆங்கிலம், செஞ்சி முதலிய சாதாரணச் சொற்களை எடுத்துக் கொண்டால், இச்சொற்களின் இடையில் தோன்றும் "க', "ச' ஆகிய எழுத்துகளுக்கு முன்னால் தோன்றும், ஒரே ஒலி வடிவத்தைக் கொண்ட "ங', "ஞ' ஆகிய எழுத்துகள் அவ்வெழுத்துகளைத் தொடர்ந்து வரும் எழுத்துகளின் மேலேறி அவற்றின் ஒலிவடிவத்தைக் கொஞ்சம் மாற்றுகின்றன. அதனால் "ங', "ஞ' போன்ற எழுத்துகள் "க', "ச' போன்ற எழுத்துகளின் இணைபிரியா இணை எழுத்துகளாகக் கருதப்படுகின்றன. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, ஸ்பெல்லிங்கின் தேவை தமிழைவிட ஆங்கிலத்துக்குத்தான் அதிகம் என்று ஒரு கருத்து நிலவுகிறது.

"ஸ்பெல்' என்ற சொல்லிலிருந்து "ஸ்பெல்லிங்' என்ற சொல் வந்திருந்தாலும், ஸ்பெல் என்ற சொல்லுக்கு இருக்கும் அளவுக்கு ஸ்பெல்லிங் என்ற சொல்லுக்கு வெவ்வேறு வகையான பொருள்கள் இல்லை. ஆனாலும் அன்றாட வாழ்வில் ஸ்பெல்லிங் படுத்தும் பாட்டை நாமறிவோம்.

 முனைவர் பா.ஜம்புலிங்கம், எழுத்துக்கூட்டல், எழுத்தமைப்புக் கோர்வை, எழுத்துத் தொகுப்பமைவு, தொகு எழுத்து நெறி, சொல்லமைப்பு ஒழுங்கு, சொல்லமைவு நெறி முதலிய 12 சொற்களைப் பரிந்துரைத்துள்ளார். முனைவர் கோ.ரமேஷ் எழுத்துக்கூட்டு, எழுத்துக்கூட்டுரு, சொல்லின் எழுத்தாக்கம், எழுத்துத் தொகுதி, எழுத்துக்கோர்வை என்றும், வெ.ஆனந்தகிருஷ்ணன், எழுத்துக்கூட்டுதல், சொல்லின் எழுத்து முறை, சொல்லுக்குரிய எழுத்துத் தொகுதி, எழுத்துக் கூட்டுரு என்றும், அவற்றுள் "எழுத்துக்கூட்டுரு' மிகப் பொருத்தமாக இருக்கும் என்றும், டி.வி.கிருஷ்ணசாமி "கிரமமான உச்சரிப்பு' என்றும் கூறியுள்ளனர்.

ஆசிரியர் பெ.கார்த்திகேயன் ஸ்பெல்லிங் என்ற தொடர் "ஸ்பெல்' என்ற வினைச் சொல்லிலிருந்து உருவாகி, இறுதியில் பெயர்ச்சொல் ஆகிவிட்டது. எனவே, இச்சொல்லுக்கு எழுத்துகளின் கூட்டுச்சொல், எழுத்துக்கூட்டுரு, எழுத்துச் சேர்ப்புப் பொருள், எழுத்துச் சேர்ப்புச் சொல், சேர்ப்பு எழுத்து, முறை எழுத்துக்கூட்டு, பொருள் எழுத்துக்கூட்டு, சொல் எழுத்துக்கூட்டு ஆகிய சொற்கள் பொருந்தும் என்கிறார்.

இருப்பினும், பன்னாட்டு அகராதிகள் இச்சொல்லை முறையான எழுத்து வரிசை அமைப்புடன் உள்ள சொல் என்ற வகையில் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளதால், இச்சொல்லுக்கு, முறை எழுத்து வரிசைச் சொல், முறை எழுத்துக்கூட்டு சொல், முறை எழுத்து வரிசைக்கூட்டுச் சொல், வழா நிலை எழுத்துச் சொல், வரிசை பிறழா எழுத்துச் சொல், பொருள் மாறா எழுத்துச் சொல், முறை எழுத்துப் பொருட்சொல் ஆகிய சொற்களைப் பரிந்துரைக்கலாம் என்கிறார்.

தெ.முருகசாமி, "எழுத்துக்கூட்டுரு' என்றும், புலவர் செ.சத்தியசீலன், எழுத்து அமைக்கும் முறை (அ) எழுத்துக் கூட்டும் முறை என்றும் கூறியுள்ளனர்.

ஆனந்த குமார் "எழுத்துரு' என்றும், ப.மூர்த்தி, சீரெழுத்து, தொடரெழுத்து, எழுத்துக்கோர்வை, சரியான எழுத்தமைப்பு, சீரான எழுத்துரு என்றும்; ஹரணி, சொல்லறி எழுத்துக்கூட்டு, சொல் விளங்கு எழுத்துகள், சொல் எழுத்தாக்கம் என்றும், வழக்குரைஞர் எஸ்.ஏ.சுந்தரமூர்த்தி "வார்த்தையின் எழுத்து இணைப்பு' என்றும் - இவ்வாறு புதிய வாசகர்கள் பலரும் பல சொற்களைப் பரிந்துரைத்துள்ளனர்.

முனைவர் அ.சிதம்பரநாதன் செட்டியார், தனது ஆங்கில-தமிழ்ச் சொற்களஞ்சியத்தில் "ஸ்பெல்லிங்' என்ற சொல்லுக்கு எழுத்துக்கூட்டுரு, சொல்லின் எழுத்தாக்கம், சொல்லுக்குரிய எழுத்துத் தொகுதி, எழுத்துக் கூட்டுதல், எழுத்துக்கூட்டி உச்சரித்தல் ஆகிய பொருள்களைக் கொடுத்துள்ளார்.

வாசகர்களின் கடிதங்களைப் பார்க்கும்போது, எழுத்துக் கோர்வை (கோர்வை - கோவை) மற்றும் எழுத்துக்கூட்டுரு என்னும் சொற்களைப் பெருவாரியான வாசகர்கள் தேர்வு செய்துள்ளது தெரிகிறது. பல்கலைக்கழக சொற்களஞ்சியம் "எழுத்துக்கூட்டுரு' என்ற சொல்லைப் பயன்படுத்தியிருந்தாலும், "எழுத்துக்கோர்வை' என்ற சொல் மிகப் பொருத்தமாகும். காரணம், ஸ்பெல்லிங்கைச் சொல்லும்போது, வரிசையாகவும் கோர்வையாகவும்தான் சொல்லவேண்டும். எனவே, ஸ்பெல்லிங் என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் "எழுத்துக் கோர்வை' ஆகும்.


நன்றி - தமிழ்மணி 09 06 2013

சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 30

உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்களின் குழந்தைகளுக்கோ "டிஸ்லெக்சியா' என்று மருத்துவர் சொன்னால், கவலைப்படுவதை விட்டுவிட்டுப் பெருமைப்படுங்கள். உலகின் மிகப் புகழ்பெற்ற ஓவியர், வடிவமைப்பாளர், விஞ்ஞானி மற்றும் சிந்தனையாளராகிய லியனார்டோ டாவின்சி இந்தக் குறைபாடு (அல்லது வேறுபாடு) கொண்டவர் என்று கூறப்படுகிறது. உலகிலேயே மிக அதிகமான பொருள்களுக்கு காப்புரிமைப் பட்டயம் (Patent Right) பெற்ற மிகப்பெரிய கண்டுபிடிப்பாளராகிய தாமஸ் ஆல்வா எடிசன், தொலைபேசியை உருவாக்கிய அலெக்சாண்டர் கிரஹாம் பெல், மின்சார யுகத்திற்கு நம்மை இட்டுச்சென்ற மைக்கேல் ஃபாரடே, புகழ்பெற்ற அரசியல் தலைவர்களான உட்ரோ வில்சன், ஜார்ஜ் வாஷிங்டன், மிகப் பிரபலமான தொழிலதிபர்களாகிய ஹென்றி ஃபோர்டு, ராபர்ட் உட்ரஃப், மிகப் பிரபலமான எழுத்தாளராகிய அகதா கிறிஸ்டி, ஹாலிவுட்டைக் கலக்கும் நடிகர்களாகிய கீனு ரீவ்ஸ், டாம் குரூஸ், ஆலிவர் ரீட் முதலியோர் "டிஸ்லெக்சியா' என்பது ஒரு குறைபாடு என்ற ஒரு கருத்தையே "குறைபாடுடைய கருத்து' என்று மெய்ப்பித்தவர்கள்.

முறையான கல்வி, போதுமான அளவு அறிவுக்கூர்மை மற்றும் தேவையான அளவுக்கு சமூக, கலாசாரப் பின்னணி ஆகியவற்றைப் பெற்றிருந்தும்கூட, ஒரு மொழியின் ஒலி வடிவத்தையும், வரி வடிவத்தையும் சாதாரண மனிதர்களைப்போல் ஒரே வேகத்திலும், ஒரே சீராகவும் பிடிக்க முடியாத அல்லது படிக்க முடியாத ஒரு குறைபாடு "டிஸ்லெக்சியா' என்று சொல்லப்படுகிறது. ஸ்டுட்கார்டு நகர கண் மருத்துவர் ருடால்ஃப் பெர்லின் என்பவரால் 1887-இல் டிஸ்லெக்சியா என்ற சொல் முதன் முதலில் உருவாக்கப்பட்டது. அதன்பிறகு, பிரிட்டிஷ் மருத்துவ இதழில் 1896-இல் பிரிங்கிள் மோர்கன் என்னும் ஆங்கிலேய மருத்துவரால் டிஸ்லெக்சியா என்பது மரபுவழி சொற்குருடு (Congenital word blindness) என்று விளக்கப்பட்டது. அமெரிக்க தேசிய மூளை நரம்பியல் குறைபாடு இயக்ககம் இச்சொல்லுக்கு கீழ்க்கண்ட விளக்கத்தைத் தருகிறது.

"ஒரு மனிதனின் படிக்கும் திறனைப் பாதிக்கும் மூளை தொடர்புடைய கற்றல் குறைபாடு டிஸ்லெக்சியா. இக்குறைபாடு உடையவர்கள் சாதாரண அறிவுக்கூர்மை கொண்டவர்கள் பெற்றிருக்கும் படிக்கும் திறனைவிடக் குறைவான திறனைப் பெற்றிருப்பர். இத்தகவல்களைக் கருத்தில் கொண்டு, இந்தவாரக் கடிதங்களைப் பார்ப்போம்.

ஷா.கமால் அப்துல் நாசர், "டிஸ்லெக்சியா' என்ற சொல் எழுத்தறிதிறன் குறைபாடு, புரிதிறன் குறைபாடு, கற்றல் குறைபாடு, வாசித்தல் குறைபாடு என்னும் பொருள்களைக் குறிக்கும் என்கிறார்.
முனைவர் ஜி.ரமேஷ், இச்சொல்லுக்கு படிக்க முடியாதிருத்தல், எழுத்துக் குழப்பம், கற்றுக்கொள்ளும் சிரமம், புரிந்தும் படிக்க இயலாமை என்னும் சொற்களைக் பரிந்துரைத்துள்ளார்.

என்.ஆர்.ஸத்யமூர்த்தி, "கற்றல் குறைபாடு' என்ற ஏழாம் வேற்றுமைத் தொகையாகவோ அல்லது கல்திறக்குறை அல்லது கற்றிறக்குறை என்றோ குறிப்பிடலாம் என்கிறார்.

வழக்குரைஞர், கோ.மன்றவாணன், கற்றல் குறைபாடு, கற்றல் இடர்பாடு, கற்றலிடர், அறிபுலன் குறைபாடு, அறிதல் இடர்பாடு, அறிதிறன் குறைபாடு, கற்றல் தடுமாற்றம், கற்றல் மாறாட்டம், பயிலல் இடர்பாடு, பயிலல் குறைபாடு, எழுத்து மாறாட்டம் ஆகிய சொற்கள் பொருந்தும் என்றும், நடைமுறை Word Blindness என்று குறிப்பிடுவதால், தமிழில் சொற்குருடு அல்லது சொற்பார்வைக் குறைபாடு என்னும் சொற்களாலும் குறிப்பிடலாம் என்கிறார்.

முனைவர் பா.ஜம்புலிங்கம், படிக்க, பேச, உச்சரிக்க முடியாநிலை, வாசிப்பில் சிக்கல், படிப்பு இடர்பாடு, படிப்பதிலும், எழுத்துக்கூட்டலிலும் சிக்கல், வாசிக்க முடியா நிலை, புரிந்து படிக்க முடியாநிலை, படிப்பறிவில் குழப்பம் ஆகிய சொற்களைக் குறிப்பிட்டுள்ளார்.

வழக்குரைஞர் அ.அருள்மொழி, டிஸ்லெக்சியா குறையுடைய குழந்தைகளுக்கு உடல், செயல் மற்றும் சிந்திக்கும் திறனில் எந்தக் குறைபாடும் இருக்காது என்றும், ஆனால், எழுத்துகளைப் படித்து, அதன் ஒலி மற்றும் வரி வடிவத்தை இணைத்து, உள்வாங்கி, மனத்தில் பதிய வைத்துக்கொள்ளும் ஆற்றல் குறைவாக இருக்கும் என்றும், அக்குழந்தைகளுக்கு முறையான பயிற்சி தருவதன் மூலம் அவர்களை மற்றவர்களைப் போல் செயல்பட வைக்க முடியும் என்றும், "கற்றல் குறைபாடு' என்ற சொல் ஏற்கெனவே புழக்கத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

புலவர் செ.சத்தியசீலன், "நினைவுத்திறன் குறைபாடு' என்றும், சோம. நடராசன், எழுத்து மாறாட்டம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

வாசகர்களின் கருத்துகளையும், நரம்பியல் அறிஞர்கள் டிஸ்லெக்சியாவைப் பற்றிக் கூறியிருக்கும் கருத்துகளையும் கூர்ந்து ஆய்ந்தால், ஒரு செய்தி நமக்குப் புலப்படும். ஒரு வாக்கியத்தைப் படிப்பதிலோ, எழுதுவதிலோ, ஒரு சொல்லில் அமைந்துள்ள எழுத்துகளைச் சரியாக உணர்ந்து கொள்வதிலோ ஏற்படும் சிரமம் டிஸ்லெக்சியா அல்லது டி.ஆர்.டி. (D.R.D) எனப்படும் Developmental Reading Disorder ஆகும். ஆனால், இக்குறைபாட்டை ரீடிங் டிùஸபிலிட்டி (reading disability), லேர்னிங் டிùஸபிலிட்டி (learning disability) என்று பொதுவாகக் குறிப்பிடுவதால், இது படித்தல் குறைபாடா, புரிதல் குறைபாடா, அறிதல் குறைபாடா என்கிற ஐயம் தோன்றுகிறது. அதனால்தான், "கற்றல் குறைபாடு' என்ற சொல்லைப் பலரும் பயன்படுத்தி உள்ளனர். படித்தல் என்ற சொல்லுக்கும், கற்றல் என்ற சொல்லுக்கும் வேறு வேறு பொருள்களும், பரிமாணங்களும் உண்டு. இருப்பினும், "லேர்னிங்' என்ற ஆங்கிலச் சொல்லுக்குப் பெருமளவில் "கற்றல்' என்றே பொருள் கொண்டுவிட்ட காரணத்தினால், "கற்றல் குறைபாடு' என்ற சொல் பொருத்தமாக இருக்கும். ஆனால், இது ஒரு குறைபாடா? என்கிற கேள்வி அடிப்படையாக எழுவதாலும், டிஸ்லெக்சியாவோடு சாதனை புரிந்தவர்கள் பட்டியல் பிரம்மாண்டமாக இருக்கும் காரணத்தினாலும், இதை ஒரு குறைபாடு என்பதைவிட, "இடர்பாடு' என்று சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

எனவே, "டிஸ்லெக்சியா' என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் "கற்றல் இடர்பாடு’.


நன்றி - தமிழ்மணி 02 06 2013

சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 29

'லிட்மஸ்' என்பது கற்பாசி வகையிலிருந்து கிடைக்கும் வேதியியல் நிறமாற்ற இயல்புடைய வண்ணப்பொருள். லிட்மஸ்-தாள் என்பது வேதியியல் நிறமாற்ற வண்ணப்பொருள் தோய்ந்த நீலத்தாள். ஒரு கலவையின் (mixture) அமிலத்தன்மையையோ (acidity) அல்லது காரத்தன்மையையோ (alkaline) பரிசோதிக்கச் செய்யப்படும் சோதனை, லிட்மஸ் டெஸ்ட் என்று பொதுவாகக் கூறப்படுகிறது. அதே சமயத்தில் ஒரு விஷயத்தில் முடிவெடுப்பதற்குப் பயனாகும் ஒரு காரணி அல்லது கூறு (indicator or factor) என்றும் இச்சொல்லுக்கு பொருள் கூறப்படுகிறது.

ஸ்பெயின் நாட்டு ரசவாதி அர்னால்டு த வில்லா நோவா என்பவர்தான் கற்பாசியிலிருந்து வரும் லிட்மûஸ முதன் முதலில் 14-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பயன்படுத்தியதாகவும், அதன் பின்னர் விஞ்ஞானிகள் கற்பாசியிலிருந்து உருவாக்கப்பட்ட கரிய, செரிமானமுடைய கூட்டுப்பொருள் அமிலங்களில் சிவப்பாகவும், காரங்களில் நீலமாகவும் மாறுவதைக் கண்டுபிடித்ததாகவும், பின்னர் 16-ஆம் நூற்றாண்டில் நீலவண்ணச் சாய (dye) நிறமாற்றத்திற்கு அது பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிகிறது. அமிலத் தன்மை மிகும்போது நீலவண்ணத் தாள் சிவப்பாகவும், காரத்தன்மை மிகும்போது சிவப்புவண்ணத் தாள் நீலமாகவும் மாறுவதை வைத்து வேதியியலில் PH குறியீடு கண்டுபிடிப்பதற்கு இச்சோதனை பயன்பட்டது.

மெரியம்-வெப்ஸ்டர் அகரமுதலியில், லிட்மஸ் என்ற சொல்லுக்கு, ஒரு முடிவுக்கு வரப் பயன்படும் ஒரு காரணி அல்லது கூறு என்று பொருள் உள்ளது. அதிலிருந்து இந்த லிட்மஸ் டெஸ்ட் என்ற சொல் முதன்முதலில் அறிவியலில் பயன்பாட்டுக்கு வந்தாலும், அதன்பிறகு ஆறு நூற்றாண்டுகளைத் தாண்டி இந்தச் சொல் பல விஷயங்களுக்கு உருவகமாகப் பயன்படுத்தப்பட்டது.

ஒரு பொருளையோ, ஒரு நபரையோ, ஒரு கொள்கையையோ ஏற்றுக்கொள்ளத் தக்கதா என்று சோதிப்பதற்குப் பயன்படும் ஒரே ஒரு காரணியை 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் லிட்மஸ் டெஸ்ட் என்று அழைக்கத் தொடங்கினார்கள். அமெரிக்காவில் உச்ச நீதிமன்றத்திற்கு நீதிபதியாக நியமிக்கப்படுபவர்களுக்கு நடத்தப்படும் பொது விவாதங்களில் (அல்லது நேர்வில்) அவர்களுடைய தகுதியை அல்லது பரவலாக ஏற்றுக் கொள்ளப்படும் தன்மையைப் பரிசோதிக்கப் பயன்படுத்தப்படும் சில முக்கியமான கேள்விகள் தற்போது லிட்மஸ் டெஸ்ட் என்று அழைக்கப்படுகிறது. உதாரணமாக கருச்சிதைவைப் பற்றிய ஒருவருடைய கொள்கை, ஓரினத் திருமணங்களைப் பற்றிய ஒருவருடைய கொள்கை இவையெல்லாம் லிட்மஸ் டெஸ்டுகளாக நீதிபதிகளின் நியமனங்களில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், சமீப காலமாக இச்சோதனையைப் பற்றிய விமர்சனங்களும் எழத்தொடங்கியுள்ளன.

பேராசிரியர் யூஜின் வோலோக் 2005-ஆம் ஆண்டில் எழுதிய "வோலோக் சதித்திட்டம்' என்ற கட்டுரையில் லிட்மஸ் சோதனையில் ஒரு கருத்தைச் சொல்லிவிட்டு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமனம் பெற்ற ஒருவர் தனது நியமனத்துக்குப் பின்னால் தனது தீர்ப்புக்களில் வேறுவிதமாக முடிவெடுத்தால் அது சூழ்ச்சி என்று கருதப்படுமா அல்லது மனமாற்றம் என்று கருதப்படுமா என்ற கேள்வியை எழுப்புகிறார்.

சமீப காலமாக மேலாண்மையியலில் தகுதி வாய்ந்தவர்களை மிகப்பெரிய நிறுவனங்களில் வேலைக்குத் தேர்ந்தெடுப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இப்படி கற்பாசியிலிருந்து தோன்றி, வேதியியலுக்கு ரசாயன மாற்றம் பெற்றுப் பின்னர் அரசியலுக்குப் போய் அதிலிருந்து மேலாண்மையியலுக்கு வந்து நின்றிருக்கும் இச்சொல்லுக்கு, வாசகர்கள் எந்த இணைச் சொல்லைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்று பார்ப்போம்.

முனைவர் கோ.இரமேஷ் இச்சொல்லுக்கு நீலச்சாய சோதனை, அமில-காரத் தன்மை ஆய்வு, உண்மைபலம், மதிப்பு அறியும் ஆய்வு ஆகிய சொற்களைக் குறிப்பிட்டுள்ளார்.

புலவர் சி.செந்தமிழ்ச்சேய், வேதியியல் நெறியில் திரிநிற தேர்வு, நிறந்திரி தேர்வு, கருத்தறி தேர்வு, உள்ளறி தேர்வு, நிலையறி தேர்வு ஆகிய பொருள்கள் பொருந்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.

வழக்குரைஞர் கோ.மன்றவாணன், குணத்தேர்வு, பண்புத்தேர்வு, தன்மைத்தேர்வு, பண்பாய்வு, பண்பறி தேர்வு, பண்பறிச் சோதனை ஆகிய சொற்களைப் பரிந்துரைத்துள்ளார். 

என்.ஆர்.ஸத்யமூர்த்தி, இச் சொற்றொடரின் நேரடிப் பொருள் அமிலமறிச் சோதனை என்றும், அச்சொல் மனிதர்களின் ஆற்றல்களையும், பண்புகளையும் பன்முகப் பரிமாணங்களையும் ஒரே ஒரு கூறை அடிப்படையாகக்கொண்டு மதிப்பீடு செய்யப் பயன்படுத்தப்படும்போது அதற்கு அணிசார் பொருளாக அடிப்படைத் தகுதி தேர்வு, உரைசால் தேர்வு ஆகிய சொற்களைப் பயன்படுத்தலாம் என்றும் எழுதியுள்ளார்.

வெ.ஆனந்த கிருஷ்ணன், மரம், செடி, மண் ஆகியவற்றில் பூசணம் பூத்துள்ள fungus அமிலமா? காரமா? என்பதைக் கண்டறிய தொன்றுதொட்டுப் பயன்படும் சோதனை லிட்மஸ்தாள் ஆய்வு அல்லது நிறத்தாள் ஆய்வு என்று அறியப்படுவதால், நிறத்தாள் ஆய்வு அல்லது பூஞ்சுத்தாள் ஆய்வு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தலாம் என்கிறார்.

வாசகர்கள் எழுதிய கடிதங்களையும், இந்தச் சொற்றொடர் தோன்றிய வரலாற்றையும், அது தற்போது பெற்றிருக்கும் நிறமாற்றத்தையும் (உருமாற்றம்) கூர்ந்து ஆய்ந்தால், இச்சொற்றொடர் ஒரு பொருள் அல்லது ஒருவரது கருத்தியல் கோட்பாட்டின் பலத்தைப் பரிசோதிக்கும் ஒரு சோதனையைக் குறிப்பதாகப் பயன்படுத்தப்படுவது தெரிகிறது. எனவே, நிலையறி தேர்வு, பண்பறி தேர்வு, உரைசால் தேர்வு ஆகிய மூன்று சொற்றொடர்களும் பொருந்தி வருவதாகத் தெரிகிறது. ஆனால், இம்மூன்று சொற்றொடர்களுக்குள்ளும் நிலையறி தேர்வு என்ற சொற்றொடர் ஒரு பொருள், ஒரு நபர், ஒரு கொள்கை, ஒரு மனநிலை ஆகிய பலவற்றுக்கும் பொருந்துவதாகத் தோன்றுகிறது. மேலும், அச்சொற்றொடர் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தோன்றும் நிலைப்பாட்டை அதன் மாறும் தன்மையோடு சுட்டிக்காட்டுவதாகத் தெரிவதால், லிட்மஸ் டெஸ்ட் என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் நிலையறி தேர்வு என்பதே.


நன்றி - தமிழ்மணி 26 05 2013

சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 28

இங்கிலாந்து நாட்டிலிருந்து ஆங்கிலச் சொற்றொடர்களைப் பற்றிய ஆய்வுகளை வெளியிடும் ஓர் இணையதளம், "ஆசிட் டெஸ்ட்' என்ற சொல்லுக்கு, "கேள்விக்கோ, ஐயத்திற்கோ அப்பாற்பட்ட ஒரு முடிவை அளிக்கும் உறுதியான சோதனை' என்ற பொருளைத் தருகிறது. இச்சொல் தோன்றிய வரலாற்றைப் பார்த்தால், 19-ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் தங்கத்தின் மீதான மோகம் கிடுகிடுவென்று ஏறத் தொடங்கியபோது மற்ற உலோகங்களிலிருந்து தங்கத்தைப் பிரித்துப் பார்க்கவும், அதனுடைய தூய்மையைப் பரிசோதிக்கவும், சில சோதனைகள் தேவைப்பட்டன. மற்ற உலோகங்களைப் போல் தங்கம் எல்லா அமிலங்களிலும் கரைவதில்லை. ஹைட்ரோகுளோரிக் மற்றும் நைட்ரிக் அமிலங்களின் கலவையான "அக்வா ரிஜிய'வில் மட்டுமே கரைவது கண்டுபிடிக்கப்பட்டதும், இப்பரிசோதனைக்கு "ஆசிட் டெஸ்ட்' என்ற பெயரிடப்பட்டது.

ஆனால் இச்சொல் அல்லது தொடர், உருவகமாக முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது நவம்பர் 1845-இல் "விஸ்கான்சின்' நகரிலிருந்து வெளிவந்த "கொலம்பியா ரிப்போர்ட்டர்' என்ற பத்திரிக்கையில்தான். அதில் ஒருவர் 24 ஆண்டுகள் ஆற்றிய திடமான சேவையைப் பாராட்டும்போது, அச்சேவை அவர் அமிலப் பரிசோதனையில் வெற்றி பெற்றதைக் குறிப்பதாக அப்பத்திரிக்கை குறிப்பிடிருந்தது.

ஆனால், துரதிருஷ்டவசமாக 1960-க்குப் பிறகு ஹிப்பி குழுமங்களின் உறுப்பினர்கள் போதை ஊசிகளைப் போட்டுக்கொள்ளும் திடம் பெற்றவர்களா என்பதைச் சோதிப்பதற்கும் இந்தச் சொற்றொடர் பயன்படுத்தப்பட்டது. சான்ஃப்ரான்சிஸ்கோவில் 1960-களில் கென் கேசே என்பவர் தன்னுடைய பண்ணை வீட்டில் அளித்த கேளிக்கை விருந்துகளில் கலந்து கொள்பவர்களைக் கவரும் விதமாக, நகரெங்கும் ஒட்டிய சுவரொட்டிகளில் "உங்களால் அமிலப் பரிசோதனையில் தேர்ச்சி பெற முடியுமா?' என்ற கேள்வியை எழுப்பினார். எல்எஸ்டி (LSD) என்று சொல்லப்படும் ஒரு போதை மருந்தைச் செலுத்திக் கொண்டு வலம் வரும் திறனை இப்படி அவர் சோதித்தார். பின்னாளில், இவற்றை அடிப்படையாக வைத்து, டாம் உல்ஃப் (Tom Wolfe) என்பவர் தி எலக்டிரிக் கூல் எய்டு ஆசிட் டெஸ்ட் (The Electric Kool-Aid Acid Test) என்ற நூலை 1968-ஆம் ஆண்டு எழுதி, இச்சொற்றொடரின் மாற்றுப் பயன்பாட்டைப் பிரபலமாக்கினார்.

அதே நேரத்தில், வணிகவியலிலும் ஆசிட் டெஸ்ட் என்ற சொல், ஒரு விகிதாசாரத்தைக் குறிக்கும் வகையில் ஆசிட் டெஸ்ட் ரேஷியோ (Acid Test Ratio) என்று சொல்லாக்கம் பெற்றது. ஒரு நிறுவனம் தன் குறுகியகாலக் கடன்களை, எந்தச் சொத்துக்களையும் விற்காமலேயே தீர்த்து வைக்கக்கூடிய நிதித்திறனைப் பெற்றிருக்கிறதா என்பதைப் பரிசோதிக்க ஆசிட் டெஸ்ட் ரேஷியோ உருவாக்கப்பட்டது. கணித வடிவத்தில், தணிக்கையாளர்கள், "ஆசிட் டெஸ்ட் ரேஷியோ' என்பதைக் கையிருப்பில் உள்ள பணம், வெளியிலிருந்து வரவேண்டிய தொகை மற்றும் குறுகியகால முதலீடுகள் ஆகிய மூன்றின் கூட்டுத்தொகையை, தற்காலிகக் கடன் தொகையால் வகுப்பதால் வரும் ஈவு என்று குறிப்பிடுகிறார்கள். இப்படி ஆசிட் டெஸ்ட் என்ற சொல் 160 ஆண்டுகளுக்கு முன்னால் தங்கத்தை அமிலத்தில் போட்டுச் சோதிக்கும் சோதனையைக் குறிப்பதற்காக உருவாக்கப்பட்டு, பின்னாளில் மனிதர்களின் திறனைக் (நற்திறன் - தீத்திறன் இரண்டையும்) குறிக்கும் சொல்லாக உருமாற்றம் பெற்று, வணிகவியல் துறையில் நிறுவனங்களின் செயல்பாட்டையும் குறிக்கும் விதமாகப் பரிணாம வளர்ச்சி பெற்றுவிட்டது. இவ்வரலாற்றைக் கருத்திற்கொண்டு, இவ்வாரக் கடிதங்களுக்கு வருவோம்.

புலவர் சி.செந்தமிழச்சேய் இச்சொல்லுக்கு, "கடலூர் தமிழ்ப்பணி அறக்கட்டளை வெளியிட்டுள்ள ஆட்சிச்சொற்கள் அகரமுதலியில், கடும் தேர்வு, கடும் ஆய்வு என்னும் பொருள்கள் கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஆனால், வழக்கில் "அக்னிப் பரீட்சை' என்ற சொல் ஏற்கெனவே பயன்பாட்டில் இதே பொருளில் அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுவிட்டு, தூய தமிழில் "தீக்குளி தேர்வு' அல்லது "தீக்குளித்தெழல்' என்னும் சொற்களைப் பரிசீலிக்கலாம் என்கிறார்.

முனைவர் பா.ஜம்புலிங்கம், "நேருக்கு நேரான மொழிபெயர்ப்பு அமிலச்சோதனை. ஆனால், அதற்கிணையான சொற்கள் சுயமதிப்பு, சுய பரிசோதனை, தற்சோதனை, தன்னறிவு சோதனை, மனப்பரிசோதனை, சுய ஆய்வு, தன்னாய்வு, திறனறிசோதனை, திறனறி ஆய்வு, தகுதி ஆய்வு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வழக்குரைஞர் கோ.மன்றவாணன், கடும் தேர்வு, கடும் ஆய்வு, முழு ஆய்வு, இறுதி ஆய்வு, இறுதித்தேர்வு, கடைசி கடும் ஆய்வு' போன்ற சொற்கள் உள்ளன என்றும், ஆனால் மரபு வழிச்சொல்லாக இதை மொழிபெயர்க்க வேண்டுமானால், புடம்போடல் அல்லது புடம்போடுதல், புடமிடல் அல்லது புடமிடுதல், புடமிடுகை என்னும் சொற்களைப் பயன்படுத்தலாம் என்கிறார்.

என்.ஆர்.சத்யமூர்த்தி, ஒரு பொருளின் அல்லது செயலின் திறன் மற்றும் மதிப்பு ஆகியவற்றைக் கண்டறிய மேற்கொள்ளப்படும் ஓர் அறுதியான மற்றும் உறுதியான முடிவைக்காணப் பயன்படும் சோதனை ஆசிட் டெஸ்ட் என்று சொல்லப்படுவதால், அதற்கிணையான சொற்கள் அக்னிப் பரீட்சை, உரைகல் என்கிறார்.

முனைவர் ஜி.ரமேஷ், கடும் ஆய்வு, தங்கத்தைத் திராவகத்தால் சோதித்தல், கடுந்தேர்வு, அமிலத்தேர்வு மற்றும் அமில ஆய்வு போன்ற சொற்களைப் பரிசீலிக்கலாம் என்கிறார்.

ஷா.கமால் அப்துல் நாசர், "புடத்தேர்வு' என்றும், டி.வி.கிருஷ்ணசாமி "அமிலச்சோதனை' என்றும், செ.சத்தியசீலன், புடம்போடல், உரசி உண்மை காணல், அமிலத்தோய்வு என்றும், மு.தனகோபாலன், அமிலச்சோதனை அல்லது முழுமையான சோதனை என்றும், வெ.ஆனந்தகிருஷ்ணன், காடி ஆய்வு, கடுந்தேர்வு, உரைகல் என்னும் சொற்களைக் குறிப்பிட்டுள்ளனர்.

முனைவர் அ.சிதம்பரநாதன் செட்டியார், சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம்-தமிழ்ச் சொற்களஞ்சியத்தில் இச்சொல்லுக்கு "கடைசிக் கடுஞ்சோதனை' என்ற பொருளைத் தருகிறார். பெருவாரியான வாசகர்களின் கருத்துப்படி, "ஆசிட் டெஸ்ட்' என்ற சொல்லுக்கு நேரடி மொழிபெயர்ப்பு "அமிலச்சோதனை'தான். வழக்குச் சொல்லாக அது பயன்படுத்தப்படும்போது, "அக்னிப்பரீட்சை' என்பதும் சரியாகத்தான் இருக்கிறது. ஆனால், ஆங்கிலத்தில் டெஸ்ட் ஆஃப் ஃபயர் (Test of fire) என்ற சொற்றொடர் பயன்பாட்டில் உள்ளதால், அக்னிப்பரீட்சை என்ற சொல் அத்தொடருக்கு அதிகமாகப் பொருந்தும்.

"புடம்போடுதல்' என்ற சொல்லும் கிட்டத்தட்ட சரியாக வந்தாலும், அச்சொல் சித்தர்களின் ரசவாதத்தையும், உலோகங்களை உருமாற்றும் அல்லது தூய்மைப்படுத்தும் முறையையும் குறிக்கப் பயன்படுவதால், அச்சொல், சோதனையைக் குறிக்கப் பயனாகாது. இவை அனைத்தையும் சீர்தூக்கிப் பார்த்தால், "கடுந்தேர்வு' என்ற சொல் மிகப் பொருத்தமாகும்.


நன்றி - தமிழ்மணி 19 05 2013

சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 27

உண்மையில் சொல்லப்போனால், "அஃப் கோர்ஸ்' என்பது ஒரே சொல் அல்ல; இரண்டு சொற்களின் கூட்டுச் சேர்க்கை. இந்தச் சொல்லாக்கம் எப்படி ஏற்பட்டது என்று ஆராய்ந்து பார்த்தால், 13-ஆம் நூற்றாண்டில் "முன்னோட்டம்' அல்லது "முன்வழி ஓட்டம்' என்ற பொருளில் பயன்படுத்தப்பட்ட பழைய ஃப்ரெஞ்சுச் சொல்லான "கோர்ஸ்' என்பதிலிருந்தும், கிட்டத்தட்ட அதே பொருளில் அல்லது "ஓட்டப்பந்தயம்' என்ற பொருளில் பயன்படுத்தப்பட்ட பழைய இலத்தீன் சொல்லாகிய "கர்சஸ்ட என்ற சொல்லிலிருந்தும் ஆங்கிலத்தில் "கோர்ஸ்' என்ற சொல் உருவாக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால், 14-ஆம் நூற்றாண்டில், ஓட்டம், இயக்கம் என்னும் பொருளிலிருந்து சற்று மாறுபட்டு, கல்விக் கூடங்களில் கொடுக்கப்படும் பாடத்திட்டத்தைக் குறிக்கவும் "கோர்ஸ்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. அப்பொழுதெல்லாம் "பை கோர்ஸ்' என்று பயன்படுத்தப்பட்ட இச்சொலவடை 1540-க்குப் பின் "அஃப் கோர்ஸ்' என்று உருமாற்றம் பெற்றது. அவ்வாறு மாற்றம் பெற்றபோது, இது "ஆஃப் தி ஆர்டினரி கோர்ஸ்' என்ற சொற்றொடரைக் குறிக்கும் சுருக்கச்சொல்லாகப் பயனுக்கு வந்தது.

ஒரு நிகழ்வின் அல்லது செய்தியின் ஓட்டத்தையும், செல்வழியையும் குறிப்பதற்குப் பயன்படும் சொல்லாகிய கோர்ஸ் என்ற சொல், பை கோர்ஸ் (by course), இன் கோர்ஸ் (in course), இன் டியூ கோர்ஸ் (in due course of), இன் தி கோர்ஸ் ஆஃப் (in the course of), மேட்டர் ஆஃப் கோர்ஸ் (matter of course), அஃப் கோர்ஸ் (of course), ஆஃப் கோர்ஸ் (off course) என்றெல்லாம் பல்வேறு நிலைகளில் பயன்பாட்டிற்கு வந்தது. வெவ்வேறு சொற்களோடு கோர்ஸ் என்ற சொல் கூடும்போது, பல்வேறு வகையான படிவங்களை அது காட்டத் தொடங்கியது.

கேம்ப்ரிட்ஜ் அகரமுதலி, அஃப் கோர்ஸ் என்ற சொல்லுக்கு (1) ஆமோதிப்பதையோ, அனுமதிப்பதையோ குறிக்கப் பயன்படும் சொல் அல்லது (2) ஏற்கனவே அறிந்த ஒன்றையோ அல்லது இயல்பான ஒன்றையோ சுட்டிக்காட்ட உதவும் சொல் அல்லது (3) ஆச்சர்யத்தைக் கொடுக்காத (எதிர்பார்த்ததைப் போலவே நிகழ்ந்த) ஒரு நிகழ்வையோ, செய்தியையோ குறிக்கும் சொல் என்று மூன்று வகையான பொருள்களைத் தருகிறது. இதைக் கருத்தில் கொண்டு இந்த வாரக் கடிதங்களுக்கு வருவோம்.

முனைவர் பா.ஜம்புலிங்கம், "அஃப் கோர்ஸ்' என்ற சொல்லுக்கு, இடத்திற்குத் தகுந்தாற்போல், பின்வரும், ஆச்சர்யம் தரா நிலை, ஆமாம், இப்போதே, இயற்கையில், இருப்பினும், இருக்கலாம், உண்மையில், உறுதியாக, தெரிந்ததுதான், நிச்சயமாக, முழுமையாக முதலிய பல சொற்களைப் பரிந்துரைத்துள்ளார்.

முனைவர் ஜி.ரமேஷ், "நாம் முன்பு அறிந்ததைப் பற்றியது சம்பந்தமான ஒன்று' என்றும், இருந்தாலும், இருந்தபோதிலும், தெரிந்தாலும் ஆகிய பொருள்களையும் இச்சொல் குறிக்கும் என்கிறார்.

வெ.ஆனந்தகிருஷ்ணன், "நாம் உரையாடல்களின் போது அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைதான் அஃப் கோர்ஸ் என்றும், அதற்குப் பல இணையான தமிழ்ச்சொற்கள் உள்ளன என்றும், பொதுவாக உரையாடல்களின் போது அச்சொல், செல்லும் திசை, போக்கு, நடவடிக்கை, பந்தய ஓட்டக்களம் என்னும் பொருள்களைக் குறிக்கும் என்றும், இதற்கு இணையான தமிழ்ச்சொற்கள், கண்டிப்பாக, நிச்சயமாக, உறுதியாக' என்றும் கூறியுள்ளார்.

வழக்குரைஞர் கோ.மன்றவாணன், சூழ்நிலைகளுக்கேற்ப இச்சொல், நிச்சயமாக, உறுதியாக, உள்ளபடியே, உண்மையில், அப்படித்தான், அப்படியே, இயல்புதானே, ஆம் அப்படித்தான், அப்படியே ஆகட்டும் ஆகிய பொருள்களைக் கொடுத்தாலும், "நிச்சயமாக' என்ற சொல் பொருத்தமாக இருக்கும் என்றும், அதிலும் இந்தச் சொல் வடமொழியாக இருக்குமென்று எண்ணித் தவிர்க்க நினைத்தால், "உறுதியாக' என்ற சொல்லைப் பயன்படுத்தலாம் என்கிறார்.

வி.ந.ஸ்ரீதரன், எனினும், என்றாலும் என்னும் சொற்களையும், செ.சத்தியசீலன் ஏற்றது, பொருத்தமானது, உடன்பாடானது, இயல்பானது என்னும் சொற்களையும், மு.தனகோபாலன், "இருந்தாலும்' என்றும், தெ.முருகசாமி "ஒருவேளை' என்றும், என்.ஆர்.சத்தியமூர்த்தி, "உண்மைதான், இயல்பானதே, ஏற்புடையதே, தாராளமாக, தடையின்றி' முதலிய சொற்களையும் குறிப்பிட்டுள்ளனர்.

முனைவர் அ.சிதம்பரநாதன் செட்டியார், சென்னைப் பல்கலைக்கழகத்திற்காகப் பதிப்பித்த ஆங்கிலம்-தமிழ்ச் சொற்களஞ்சியத்தில், ஆங்கில அகரமுதலிகளில் இல்லாத ஒரு புதுமையைச் செய்திருக்கிறார். "கோர்ஸ்' என்கிற சொல்லுக்குப் பொருள் எழுதும் இடத்திலேயே பை கோர்ஸ் ஆஃப், இன் டியூ கோர்ஸ், இன் தி கோர்ஸ் ஆஃப், மேட்டர் ஆஃப் கோர்ஸ் மற்றும் அஃப் கோர்ஸ் ஆகிய அனைத்துச் சொற்றொடர்களுக்கும் பொருள்களை அளித்துள்ளார். அதில், "அஃப் கோர்ஸ்' என்ற சொல்லுக்கு இயல்பாக, "ஐயத்துக்கு இடமின்றி' என்ற சொற்களை வழங்கியுள்ளார்.

ஆனால், அஃப் கோர்ஸ் என்ற சொல், அது பயன்படுத்தப்படும் இடம், காலம் மற்றும் நிகழ்வை ஒட்டி, ஆமோதிப்பு, அனுமதிப்பு, ஏற்கனவே அறிந்த ஒன்று, எதிர்ப்பார்த்ததைப் போன்று நிகழும் நிகழ்வு ஆகிய பல பொருள்களைக் கொள்கிறது. இப்படிப் பார்க்கும்போது, "ஆம்' என்ற சொல் மட்டுமே ஆமோதிப்பு, அனுமதிப்பு, எதிர்ப்பார்ப்பு, இயல்பான நிகழ்வு ஆகிய அனைத்துக் குறியீடுகளையும் உள்ளடக்கியதாக இருக்கும் என்று எண்ணுகிறேன். அதே சமயம், முனைவர் அ.சிதம்பரநாதன் செட்டியார், அரும்பாடுபட்டு உருவாக்கிய சொற்களஞ்சியத்தில் அளித்துள்ள பொருளை முற்றிலும் மாற்றுவதற்கு நமக்குப் போதிய அதிகாரமோ, அறிவோ இல்லை. எனவே, அஃப் கோர்ஸ் என்ற சொல்லுக்கு "ஐயத்திற்கிடமின்றி ஆம்' என்ற சொற்களை ஏற்பது சென்னைப் பல்கலைக்கழக சொற்களஞ்சியத்தில் அளித்துள்ள பொருளை ஒட்டி அமையும் என்பதால், "அஃப் கோர்ஸ்' என்ற சொல்லுக்கு இணையான சொற்றொடர் "ஐயத்திற்கிடமின்றி ஆம்' என்பதே.

நன்றி - தமிழ்மணி 12 05 2013

சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 26

அறிவைப் பற்றி ஆயும் மெய்யியலின் ஒரு பிரிவே எபிஸ்டமாலஜி ஆகும். இந்த அறிவியலின் நோக்கம் "உண்மையான மற்றும் போதுமான அறிவை, உண்மையற்ற மற்றும் குறைபாடுடைய அறிவிலிருந்து, எது வேறுபடுத்திக் காட்டுகிறது?' என்ற கேள்விக்கு விடை காண்பதே ஆகும்.

1808-ஆம் ஆண்டில், ஸ்காட்லாந்து நாட்டின் எடின்பரோ நகரத்தில் பிறந்த நுண்பொருள் கோட்பாட்டியல்  (Metaphysical) அறிஞர் ஜேம்ஸ் ஃப்ரெடெரிக் ஃபெரியர் (James Frederick Ferrier) ஆவார். மனதின் விழிப்பு நிலை பற்றிய மெய்யியலுக்கான ஓர் அறிமுகம் (An Introduction to the Philosophy of Consciousness), என்ற தலைப்பில் 1838-இல் ஒரு கட்டுரைத் தொடரை எழுதத்தொடங்கிய இவர், 1854-இல் தன்னுடைய கோட்பாடுகளின் தொகுப்பை "Institutes of Metaphyscic-The Theory of Knowing and Being' என்ற தலைப்பில் வெளியிட்டார். இந்தத் தொகுப்பில்தான், முதன் முதலில் ஜேம்ஸ் ஃப்ரெடெரிக் ஃபெரியர் (James Frederick Ferrier) எபிஸ்டமாலஜி என்ற சொல்லை உருவாக்கினார். இச்சொல், அறிவு மற்றும் புரிந்துகொள்ளுதல் என்ற பொருள்களைக் கொண்ட "எபிஸ்டெமெ' மற்றும், படிப்பு என்ற பொருளைக்கொண்ட "லோகோஸ்' ஆகிய கிரேக்கச் சொற்களிலிருந்து உருவாக்கப்பட்டது. அறிவின் இயல்பையும், உண்மை, நம்பிக்கை, நிலைநாட்டுதல் இவற்றோடு அறிவுக்குள்ள தொடர்பையும் பற்றி ஆய்ந்தறிவதே எபிஸ்டமாலஜி ஆகும்.

ஸ்டான்ஃபோர்டு மெய்யியல் கலைக்களஞ்சியம், எபிஸ்டமாலஜி என்பது நியாயமான நம்பிக்கைகளையும், அறிவையும் பற்றிய படிப்பு என்று எடுத்துரைக்கிறது. மெரியம் வெஃப்ஸ்டர் அகரமுதலி, இச்சொல்லுக்கு அறிவின் இயல்பு மற்றும் ஆதாரங்களைப் பற்றிய படிப்பு அல்லது கோட்பாடு, அதிலும் குறிப்பாக அறிவின் வரம்பு எல்லைகளையும், அதன் ஒப்புக்கொள்ளத்தக்க அளவீடுகளையும் பற்றிய ஆய்வு என்று கூறுகிறது. ஆக்ஸ்போர்டு அகரமுதலி இச்சொல்லுக்கு, அறிவைப் பற்றியும், அதன் வகைமுறைகள், அதன் செல்லத்தக்கத் தன்மை ஆகியவற்றைப் பற்றியும் அறியப்படும் மெய்யியலின் ஒரு பிரிவு என்று உரைக்கிறது.

முனைவர் அ.சிதம்பரநாதன் செட்டியார், சென்னைப் பல்கலைக்கழகத்திற்காகத் தயாரித்த ஆங்கிலம்-தமிழ் சொற்களஞ்சியத்தில், இச்சொல்லுக்கு "அறிவாதார முறையியல், அறிவின் ஆதாரத்தையும், அறியும் முறைகளையும் ஆராயும் இயல்துறை' என்ற பொருள்களைத் தருகிறது. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, எபிஸ்டமாலஜி என்பது உண்மையில் அறிவைப் பற்றிய இயல் ஆகும். எப்படி புவியைப் பற்றிய படிப்பு புவியியல் (Geography) ஆகுமோ, எப்படி பொருளாதாரத்தைப் பற்றிய படிப்பு பொருளியல் (Economics) ஆகுமோ, எப்படி குற்றங்களைப் பற்றிய படிப்பு குற்றவியல் (Criminology) ஆகுமோ, மற்றும் எப்படி தாவரங்களைப் பற்றிய படிப்பு தாவரவியல் (Botony) ஆகுமோ, அப்படி அறிவைப் பற்றிய படிப்பு அறிவியல் (Science) என்றே சொல்லப்பட வேண்டும். ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பே "சயன்ஸ்' என்ற சொல் விஞ்ஞானம் என்று மொழிபெயர்க்கப்பட்டு, அதன்பின் தமிழ்கூறும் நல்லுலகத்தால் "அறிவியல்' என்று மொழிபெயர்க்கப்பட்டுவிட்டது. எனவே, அறிவியல் என்ற சொல் "சயன்ஸ்' என்ற சொல்லுக்கு இணைச் சொல்லாக ஏற்கனவே பயன்பாட்டிற்கு வந்துவிட்ட காரணத்தால், எபிஸ்டமாலஜி என்ற சொல்லுக்கு இச்சொல் மிகப் பொருத்தமானதாக இருப்பினும், அதைப் பயன்படுத்துவதில் சிக்கல் இருக்கிறது. இச்செய்திகளைக் கருத்தில் கொண்டு இந்த வாரக் கடிதங்களுக்கு வருவோம்.

வழக்குரைஞர் கோ. மன்றவாணன் இச்சொல்லுக்கு அறிவு இயங்கியல், அறிவுத் தேடலியல், அறிவு ஆய்வியல், அறிநுட்பவியல், அறிநோக்கியல் ஆகிய சொற்களைப் பரிசீலிக்கலாம் என்கிறார்.

பெ.கார்த்திகேயன் இச்சொல்லுக்கு ஆங்கில அகராதிகள் மனித அறிவின் அடிப்படை, அதன் மூலம் வரம்பு மற்றும் அவ்வறிவின் தன்மையை அறிதல் என்ற பொதுவான வரைமுறைகளைத் தருகின்றன என்றும் இச்சொல்லுக்கு மனித அறிவிற்கென்று தனியான பிரிவை நாம் அளிக்க வேண்டுமென்றும் கூறிவிட்டு அதன் காரணமாக மனித அறிவு அகழ்வாழ்வியல் என்றோ அல்லது பொதுப்படையாக மனிதவறிவகழ்வாழ்வியல் என்றோ சொல்லலாம் என்கிறார்.

டாக்டர் ஜி.ரமேஷ், மனித மூளையின் எல்லை, மனித குணங்கள் பற்றிய ஆய்வு, மனித அறிவு பற்றிய பாடம் அல்லது ஞானவியல் என்றும், என்.ஆர். ஸத்யமூர்த்தி ஞானஅகழ்வாழ்வியல், பல்லறிவாழ்வியல் என்னும் சொற்களைக் குறிப்பிட்டுள்ளனர்.

செ.சத்தியசீலன், "அறிவுக் கோட்பாடு' என்றும், தெ.முருகசாமி, "அறிவாராய்ச்சியின் அடிப்படை ஆதாரத்துறை' என்றும், டி.வி.கிருஷ்ணசாமி, "திருமுக விளக்கம்' என்றும், மதுரை பாபாராஜ், "அறிவுத்திறனியல்' என்றும், வெ.ஆனந்தகிருஷ்ணன், "அறிவுத்துறை விளக்க ஆராய்ச்சி, அறிவு பற்றிய ஆராய்ச்சி, அறிவாதார இயல்' என்னும் சொற்களையும் கூறியுள்ளனர்.

இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது எபிஸ்டமாலஜி என்பது அறிவைப் பற்றி ஆய்வு செய்யும் இயல் என்பது அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்டதெனத் தெரிகிறது. எனவே, "அறிவாய்வியல்' என்ற சொல் மிகப் பொருத்தமாக இருக்கும்.


நன்றி - தமிழ்மணி 05 05 2013

சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 25

எர்கோனாமிக்ஸ்' என்ற சொல் புழக்கத்திற்கு வந்தே சுமார் 60 ஆண்டுகள்தான் ஆகின்றது. இச்சொல் சற்று வித்தியாசமானதாகவும், விசித்திரமானதாகவும் இருக்கிறது. காரணம், ஆக்ஸ்ஃபோர்டு அகரமுதலி, பிற அகரமுதலிகள், கலைக்களஞ்சியம் ஆகியவை இச்சொல்லைப் பற்றித் தரும் தகவல்கள் மாறுபட்டிருக்கின்றன. ஆக்ஸ்ஃபோர்டு அகரமுதலி இச்சொல்லுக்கு, "மனிதர்கள் வேலை செய்யும் பணியிடத்தில், அவர்களுடைய திறமை, வசதி, அவர்களுக்குக் கிடைக்கும் நன்னலம் போன்றவற்றைப் பற்றிய ஒரு படிப்பு' என்று குறிப்பிடுகிறது. ஆனால், மெரியம் வெஃப்ஸ்டர் அகரமுதலி, இதற்கு இரு பொருள்களைத் தருகிறது. ஒன்று, "மனிதர்கள் கையாளும் பொருள்களை, அவர்கள் திறமையான வகையிலும், பாதுகாப்பான முறையிலும் பயன்படுத்தக் கூடியவகையில் வடிவமைக்கும் அறிவியலின் ஒரு பிரிவு'. இரண்டாவது, "ஒரு பொருளின் வடிவமைப்புப் பொருண்மைகள்'. ஆனால், கலைக்களஞ்சியம் இச்சொல்லைப் பற்றித் தரும் விளக்கம் "மனிதர்களின் நலன் மற்றும் உற்பத்தித் திறனை முழுமையாக வெளிக்கொணரும் விதத்தில் எந்திரங்களையும், வேலைப் பொருள்களையும், வேலைச் சூழ்நிலையையும் உருவாக்கித் தரும் தொழில்' என்பதாகும்.

சுவிட்சர்லாந்து நாட்டில் தொடங்கப்பட்ட அனைத்துலக எர்கோனாமிக்ஸ் சங்கம், இச்சொல்லுக்கு "ஓர் அமைப்பில் கூட்டாகச் செயல்படும் மனிதர்களுக்கும் மற்ற பொருள்களுக்கும் இடையே உள்ள உறவையும், பரிமாற்றத்தையும் பற்றிப் புரிந்துகொள்ள முயற்சிக்கும் ஓர் அறிவியல் பாங்கு' என்று பொருள் தருகிறது. இதைத் தவிர "ஓர் அமைப்பில் செயல்படும் மனிதர்களுடைய நன்னலத்தையும், அவர்களுடைய உற்பத்தித் திறனையும் அதிகப்படுத்தும் நோக்கில், பொருள்களை வடிவமைக்கும் தொழில் எர்கோனாமிக்ஸ்' என்றும் விளக்கமளிக்கிறது.

அனைத்துலக எர்கோனாமிக்ஸ் சங்கத்தின் இணையதளத்தில், இச்சொல் "கிரேக்கச் சொற்களான எர்கான் (வேலை அல்லது பணி) மற்றும் நோமோஸ் (விதிகள்) என்ற சொற்களிலிருந்து உருவாக்கப்பட்டதாகவும், இது ஓர் அமைப்பு சார் அறிவியல் கோட்பாடு என்றும், மனித நடவடிக்கைகளில் எல்லாத் துறைகளுக்கும் இது பொருந்தும்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசாங்கத்தின் தொழிலாளர் துறையின் ஒரு பகுதி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார நிர்வாகம் ஆகும் (Occupational Safety and Administration). இந்நிறுவனத்தின் இணையதளத்தில் எர்கோனாமிக்ஸ் என்பது, "ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களின் திறமைகளுக்கேற்ப பணிச்சூழலையும், பணித் தேவைகளையும் தீர்மானிக்கும் அறிவியல்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பணியாளர்களின் உற்பத்தித் திறனை மேம்படுத்தும் வகையில் சூழ்நிலைகளை உருவாக்கிக் கொடுக்கும்போது, உற்பத்திப் பெருக்கமும், உடல்நலமும், அபாயக்குறைவும், பணியாளர்களின் மனநிறைவும் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.

ஓஷா (OSHA - Safety and Health Admistration) என்றழைக்கப்படும் அமெரிக்க அரசாங்கத்தின் தொழிலாளர் துறையின் ஓர் அங்கம், பணியாளர்களிடையே அவர்களுடைய உடல் மற்றும் மனதில் பணிச் சூழலால் ஏற்படும் தாக்கத்தினால் வரும் உடல்நலக் குறைவுகளை எர்கோனாமிக் குறைபாடுகள் (Ergonomic disorders) என்று பெயரிட்டு, அவற்றை மூன்று வகையாகப் பிரிக்கிறது. அவை: (1) மீண்டும் மீண்டும் ஒரே வேலையைச் செய்யும்போது, உடல்மேல் ஏற்படும் பாதிப்பு (Repetitive strain injuries), (2) சதைகளிலும், நரம்பு மண்டலத்திலும் ஏற்படும் குறைபாடு (Musculoskeletal disorders), (3) மன அழுத்தத்தால் ஏற்படும் குறைபாடு (Cumulative trauma disorders). இந்த விஞ்ஞானம் மூன்று கிளைகளாகப் பிரிக்கப்பட்டு, முதல் கிளை உடலியல் எர்கோனாமிக்ஸ் (Physical ergonomics) என்றும், இரண்டாவது கிளை புலனுணர்வு எர்கோனாமிக்ஸ் (Cognitive ergonomics) என்றும், மூன்றாவது கிளை நிறுவன ரீதியான எர்கோனாமிக்ஸ் (Organizational ergonomics) என்றும் அழைக்கப்படுகின்றன.
இத்தகையத் தகவல்களோடு, இந்தவாரக் கடிதங்களைப் பார்ப்போம்.

வழக்குரைஞர் கோ.மன்றவாணன், எர்கோனாமிக்ஸ் என்ற சொல்லுக்கு பணியுயர் சூழலியல், பணித்திறன் வளர்சூழலியல், பணி மேம்பாட்டியல், பணித்திறன் மேம்பாட்டியல் ஆகிய சொற்களையும், முனைவர் பா.ஜம்புலிங்கம், பணிச்சூழலியல், பணியிடத் திறமையறி ஆய்வு, பணி சூழ் அறிவு கூர்நோக்கு என்னும் சொற்களையும், ஷா.கமால் அப்துல் நாசர், "பணிச்சூழலியல்' என்ற சொல்லையும், முனைவர் ஜி.ரமேஷ், பணிச்சூழலியல், வசதியான அலுவலகச் சூழல், பணியாற்றப் பாதுகாப்பான இடம், வேலை செய்ய சிறந்த பகுதி ஆகிய சொற்களையும் பரிந்துரைக்கிறார்கள்.

சி.அண்ணாதுரை, உடலை எவ்வாறு வளைத்து எப்பணியை எவ்வாறு எளிதாகச் செய்வது என்பதை அறிவுறுத்துவது வாகியல்தான். எனவே "வாகியல்' என்ற சொல் பொருத்தமாக இருக்கும் என்கிறார்.

வெ.ஆனந்தகிருஷ்ணன், மனிதப்பொறியியல், பணிச்சூழலியல், பணியியல் என்னும் சொற்களையும், என்.ஆர்.சத்தியமூர்த்தி, "பணியியல்' என்ற சொல்லையும், எழில் சோம.பொன்னுசாமி, "பணிச்சூழலியல்' என்ற சொல்லையும், மதுரை பாபாராஜ், "பணிச்சூழல் இணக்க ஆய்வு' என்ற சொல்லையும் குறிப்பிட்டுள்ளனர்.

வாசகர்களின் கடிதங்களையும், இந்தச் சொல் தோன்றி வளர்ந்த விதத்தையும் கருத்தில் கொண்டு பார்த்தால், பணிச்சூழலியல், பணி மேம்பாட்டியல் என்னும் இரு சொற்களும் பொருத்தமாகத் தோன்றுகின்றன. ஆனால், இவ்விரு சொற்களுக்குள், "சூழல்' என்பது வினையாகவும், "மேம்பாடு' என்பது பயனாகவும் விளையும் காரணத்தால், "பணிச்சூழலியல்' என்ற சொல்லே பொருத்தமுடையதாகும்.

"எர்கோனாமிக்ஸ்' என்ற சொல்லுக்கு வாசகர்கள் தேர்ந்தெடுத்த இணைச்சொல் “பணிச்சூழலியல்'.

நன்றி - தமிழ்மணி 28 04 2013

சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 24

ஆங்கில-தமிழ் அகரமுதலிகள் பலவற்றில் "என்லைட்டென்' என்ற சொல்லுக்குப் பொருள் தரப்பட்டுள்ளது. ஆனால், "என்லைட்டென்மென்ட்' என்ற சொல்லுக்கு, அகரமுதலிகள் எதிலும் பொருள் தரப்படவில்லை. முனைவர் அ.சிதம்பரநாதன் செட்டியார், சென்னைப் பல்கலைக்கழகத்திற்காகப் பதிப்பித்த ஆங்கிலம்-தமிழ் சொற்களஞ்சியத்திலும் "என்லைட்டென்' என்ற சொல்லுக்கு "ஒளியூட்டு, அறிவுறுத்து, அறிவுகொளுத்து, கற்பி, தெரிவி, ஐயந்தெளிவி, தப்பெண்ணம் அகற்று, மூடநம்பிக்கையிலிருந்து விடுவி' ஆகிய பொருள்கள் தரப்பட்டுள்ளனவே தவிர, என்லைட்டென்மென்ட் என்ற சொல்லுக்குப் பொருள் தரப்படவில்லை.

மெரியம் வெப்ஸ்டர் அகரமுதலி இச்சொல்லுக்கு மூன்று வகையான பொருள்களைத் தருகிறது. முதல் பொருள், ஞானம் பெறும் நிகழ்வு அல்லது வழி; இரண்டாவது, 18-ஆம் நூற்றாண்டில் பழமை சார்ந்த, சமூக, சமுதாய, அரசியல் கருத்துகளைப் புறந்தள்ளி, பகுத்தறிவின்பாற்பட்டு எழுந்த ஒரு மெய்யியல் இயக்கம்; மூன்றாவது, ஆசையும், துன்பமும் அற்ற, ஓர் அருள் கைவரப்பட்ட நிலை என்று புத்தமதம் கூறும் கோட்பாடு.

இதே போல், ஆக்ஸ்ஃபோர்டு அகரமுதலி இச்சொல்லுக்கு,   ஞானம் பெறும் நிலை அல்லது ஞானம் தரும் செய்கை; 17-ஆம் நூற்றாண்டில் மெய்யியல் அறிஞர்களால் உருவாக்கப்பட்ட, பழமை வாதத்தை எதிர்த்து நின்ற, சுய சிந்தனை மற்றும் பகுத்தறிவு சார்ந்த இயக்கம் என இருவகையான பொருள்களைத் தருகிறது.

ஐரோப்பிய வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், மூட நம்பிக்கை, கண்மூடிப் பழக்க வழக்கங்கள் போன்றவற்றை எதிர்த்து நின்று, காரணம், தர்க்கம், விமர்சனம், கருத்தியல் சுதந்திரம் ஆகியவற்றைப் போற்றும் வகையில் 17 மற்றும் 18-ஆம் நூற்றாண்டுகளில் உருவான அறிவும், கலாசாரமும் சார்ந்த இயக்கத்தை குறிப்பதற்காகவே இச்சொல் உருவாக்கப்பட்டதாகத் தெரிகிறது. பகுத்தறிவு காலம் அல்லது அறிவு மலர்ச்சிக் காலம் (age of reason, age of rationalism)என்றெல்லாம் அழைக்கப்படும் ஒரு காலம் 17-ஆம் நூற்றாண்டில் தோன்றியது என்றும், கலிலியோ, நியூட்டன் போன்ற அறிவியல் அறிஞர்களின் கண்டுபிடிப்புகளாலும், கணிதத்தின் வளர்ச்சியாலும், மனிதனுடைய சிந்தனை வளம் பெறத் தொடங்கிய காலம், "என்லைட்டென்மென்ட்' என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இக்காலத்தில் உருவான அறிவு மலர்ச்சியே அமெரிக்க விடுதலை மற்றும் பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்டது என்றும் கூறப்படுகிறது.

ஜெர்மானிய மெய்யியல் அறிஞர் இம்மானுவேல் கான்ட் 1784-ஆம் ஆண்டில் ""என்லைட்டென்மென்ட் என்றால் என்ன?-இக்கேள்விக்கான பதில்'' என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை மிகப் பிரபலமானது. அக்கட்டுரையில் அவர், இச்சொல்லைப் பின்வருமாறு விவரிக்கிறார்:-

""தனக்குத்தானே மனிதகுலம் தருவித்துக்கொண்ட முதிர்ச்சியின்மையில் இருந்து பெறும் விடுதலையே என்லைட்டென்மென்ட்''. அலெக்சாண்டர் போப் 1733-இல் எழுதிய மனிதனைப் பற்றிய ஒரு கட்டுரையில் ""உன்னை அறிந்துகொள்; மனிதகுலத்தைப் பற்றிய முறையான படிப்பு மனிதனே ஆகும்'' என்றார்.

என்லைட்டென்மென்ட் காலத்தின் காரணமாக மிகப்பெரிய பயனொன்று மனித குலத்திற்கு விளைந்தது. அதுதான், மனித குலம் பெற்ற அறிவுத் திறன் அனைத்தையும் ஒன்றாகத் தொகுத்து, 1751 முதல் 1772-ஆம் ஆண்டுக்குள் 28 தொகுதிகளாகப் பதிப்பிக்கப்பட்ட கலைக்களஞ்சியம் ஆகும். இதைத் தொகுத்தவர்கள் டெனிஸ் டிடேராட் மற்றும் ழான்லா ரோண்டு அலம்பர்ட். இந்தத் தகவல்களோடு, இந்த வாரக் கடிதங்களுக்கு வருவோம்.

என்.ஆர்.ஸத்யமூர்த்தி, "ஞானோதயம்' என்ற சொல்லையும், முனைவர் வே.குழந்தைசாமி "அறிவார்ந்தநிலை அல்லது அறிவுசால்நிலை' என்னும் சொற்களையும், வெ.ஆனந்தகிருஷ்ணன், "அறிவு மற்றும் அறிவுசார்ந்த அறிதல், சார்புநீங்கிய, ஐயம் தெளிதல், கல்வி, உணர்வு, ஞானம், போதனை, ஆன்மா ஆகியவைகளைத் தொடர்புபடுத்திப் புத்திபுகட்டுதல், கற்றுக்கொடுத்தல், தெளிவித்தல், ஞானம் பிறக்கச்செய்தல் அதன் மூலம் அறிவொளி அல்லது மெய்யறிவு தோன்றல் இவைகளில் ஏதேனும் ஒரு சொல்லைக் கையாளலாம்' என்றும், புலவர் சி.செந்தமிழ்ச்சேய், "ஞானம், மெய்ஞானம், மெய்ஞான விளக்கம், மெய்ஞானத்தெளிவு, மெய்மைத் தெளிவு, மெய்மை விளக்கம் என்னும் சொற்களையும், முனைவர் ஜி.ரமேஷ், "தெளிவாக்குதல், விளக்குதல், போதித்தல், அறிவூட்டுதல், புலமை' என்னும் சொற்களையும், தி.அன்பழகன் "ஒளிரறிவு' என்ற சொல்லையும், புலவர் உ.தேவதாசு, "மெய்யுணர்தல்' என்ற சொல்லையும், முனைவர் பா.ஜம்புலிங்கம், "பயில்வித்து உணரவைத்தல், தெளிவுபடுத்துதல், தெளிவித்தல், ஐயம் அகற்றல்' ஆகிய சொற்களையும்-  இவ்வாறு பலரும் பல சொற்களைப் பரிந்துரைத்துள்ளனர்.

ஆங்கில அகரமுதலிகள் அளித்திருக்கும் பொருள்களை வைத்துப் பார்க்கும்போது, இச்சொல் ஆங்கிலத்தில் அறிவுசார்புடைய சொல்லாகவே பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிகிறது. ஆனால், பெரும்பாலும் நடைமுறையில், அதிலும் நமது கலாசாரப் பின்னணியில் இச்சொல் "ஞானம்' என்ற பொருளிலேயே பயன்படுத்தப்படுகிறது. எனவே, இச்சொல்லுக்கு "ஞானோதயம்' என்ற சொல்லே பொருத்தமாகத் தெரிகிறது.

என்லைட்டென்மென்ட் என்ற சொல்லுக்கு வாசகர்கள் தேர்ந்தெடுத்த இணையான தமிழ்ச் சொல் ஞானோதயம்.

நன்றி - தமிழ்மணி 21 04 2013

சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 23

தி.அன்பழகன், தம் கூட்டத்தாருக்கு மட்டுமே பொருள் விளங்கும் அடையாளச் சொல் தமிழ் இலக்கணத்தில் "குழுஉக்குறி' எனப்படும் என்றும், இதன் அடிப்படையில், "குறிக்குழுக்கூடல்' (சந்திப்பு) என்று கூறலாம் என்கிறார்.

வெ.ஆனந்தகிருஷ்ணன், காலமும், பொழுதும் கனியும் வரை காத்திருப்பதும்; இடம், பொருள், காலம் அறிந்து சந்திப்புக்கள் நிகழ்வதும்; குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில் பல அரசு மற்றும் அரசியல் நிகழ்வுகள் நடைபெறுவதும் திட்டமிட்ட சந்திப்பு என்ற சொல்லால் குறிப்பிடப்படுவதால், அதையே சரியான இணைச்சொல்லாகக் கொள்ளலாம் என்கிறார்.

முனைவர் பா.ஜம்புலிங்கம், ட்ரிஸ்ட் என்ற சொல்லை இடத்திற்குத் தகுந்தாற்போல் பயன்படுத்தலாம் என்றும், இச்சொல்லுக்கு நட்புறவு, பரீட்சயம், அனுபவம், நெருக்கம், பழக்கம், சந்திப்பு, உறவாடல், உரையாடல் முதலிய சொற்களைப் பரிசீலிக்கலாம் என்கிறார்.

என்.ஆர்.ஸத்யமூர்த்தி, ஜவஹர்லால் நேரு, இச்சொல்லைப் பயன்படுத்தியதிலிருந்து, இச்சொல் புதுமையும், பொலிவும் பெற்றது என்றும், ஸ்காட்டிஷ் சொல்லான (TRISTE) என்ற சொல்லிலிருந்து இச்சொல் தோற்றமெடுத்தது என்றும், இச்சொல்லின் பொருளை இது அடித்தளமாகக் கொண்டது என்றும், தொடக்கத்தில் வேடுவர்கள் சந்திப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட இச்சொல், பின்னர் காலப்போக்கில் காதலர்கள் தாங்கள் சந்திப்பதற்காக முன்னரே ஏற்பாடு செய்துகொண்ட இடம், நேரம் இவற்றைக் குறிப்பதாக அமைந்தது. எனவே, ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில் முன்னரே குறித்தபடி நடக்கும் சந்திப்பு இச்சொல்லால் அறியப்படும் என்றும், இத்தகைய சந்திப்புக்கான ஒப்பந்தம், சந்திப்பு, சந்திப்பிடம் ஆகியவைகளையும் இச்சொல்லின் பொருளாகக் கொள்ளலாம் என்றும் எழுதியுள்ளார். மேலும், தேச விடுதலையை ஒட்டி நேரு ஆற்றிய சொற்பொழிவின் காரணமாக இச்சொல் உலகப்புகழ் பெற்றது என்பதால், மேற்கூறிய வழக்கமான பொருள்களைத் தாண்டி, நாட்டு மக்களின் வறுமை, படிப்பின்மை, வேலையின்மை போன்ற சவால்களைச் சந்திப்பது முதலிய பொருள்களில் பயன்படுத்தப்படுவதால், "ட்ரிஸ்ட்' என்ற சொல்லில் உட்பொதிந்துள்ள ஒளிவுமறைவுத் தன்மையை நீக்கி ஓர் உத்வேகமும், தன்மையும் உள்ள சொல்லாக இதை நேரு மாற்றியதைக் கருத்தில் கொண்டு, "சவால்களுடன் சலியாச் சந்திப்பு' என்று பொருள் கொள்ளலாம் என்கிறார். இதைத் தவிர, முன்குறி சந்திப்பு, முன்குறி சந்திப்பு ஒப்பம், காதலர் முன்குறி சந்திப்பு, முன்குறி சந்திப்பிடம் முதலிய சொற்களையும் பயன்படுத்தலாம் என்கிறார்.

தமிழாசிரியர் சிவ.எம்கோ, "அமர்த்தப்பட்ட நிகழ்வு' (An Appointed meeting), "மதிவுடம்படுத்தல்' (Meeting between lovers) என்னும் சொற்களைப் பரிந்துரைத்துள்ளார். டாக்டர் ஜி.ரமேஷ், திட்டமிட்ட சந்திப்பு, சந்திக்கும் நேரம், சந்திக்கும் இடம் போன்றவற்றைக் குறிப்பிட்டுள்ளார். தெ.முருகசாமி, "திட்டமிட்டுச் செய்தல்' என்றும், ச.மு.விமலானந்தன் பணிவு அல்லது அடக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

ஆக்ஸ்ஃபோர்டு அகரமுதலி, இச் சொல்லுக்கு காதலர்களின் ரகசியமான சந்திப்பு என்ற பொருளைக் கொடுக்கிறது. அதைப்போல், மெரியம் வெப்ஸ்டர் அகரமுதலி காதலர்கள் சந்திப்பதற்கான ஒப்பந்தம் மற்றும் ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பு அல்லது சந்திக்கும் இடம் ஆகிய பொருள்களைத் தருகிறது.

முனைவர் அ.சிதம்பரநாதன் செட்டியாரால், சென்னைப் பல்கலைக்கழகத்திற்காக வெளியிடப்பட்ட ஆங்கிலம்-தமிழ் சொற்களஞ்சியத்தில், "இடந் தலைப்பாடு, குறியிடச் சந்திப்பு, குறியிடந் தலைப்பாடு ஏற்பாடு செய், குறியிடந் தலைப்பாட்டிற்குரிய கால இடங் குறியீடு, குறியிடஞ் சந்திக்க உறுதிகொடு' ஆகிய சொற்கள் தரப்பட்டுள்ளன.

சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம்-தமிழ் சொற்களஞ்சியத்தில் இச்சொல்லுக்கான பொருள் குறித்த இடம், நேரம், சந்திப்பு ஆகிய முப்பொருள்களையும் அடக்கியதாக உருவாக்கப் பட்டிருக்கிறது. ஆனால், அவையனைத்தையும் உள்ளடக்கிய ஒரு சொல்லாக அது அமையவில்லை. என்.ஆர்.ஸத்யமூர்த்தி குறிப்பிட்டதைப் போல், இச்சொல்லின் வீச்சு, நேருவின் பேச்சுக்குப்பின் வீரியமுள்ளதாக மாறிப் போனாலும், அதன் அடிப்படைப் பொருள் சந்திப்பு என்பதே. காதல், போர், சோதனைகள், சவால்கள், நெருக்கடியான சூழ்நிலைகள் இவையனைத்தையும் நேர்கொள்ளும் செயல்பாடும் சந்திப்பே ஆகும்.

எனவே, ட்ரிஸ்ட் என்ற சொல்லுக்குப் பொருத்தமான தமிழ்ச்சொல் முன்குறி சந்திப்பு.

நன்றி - தமிழ்மணி 14 04 2013

சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 22

"மாடஸ்டி' என்ற சொல்லுக்கு மெரியம் வெப்ஸ்டர் அகரமுதலி இரண்டு வகையான பொருள்களைத் தருகிறது. ஒன்று, தற்பெருமை அல்லது வீண் கர்வத்திலிருந்து விடுபட்டவர் என்பது. இன்னொன்று உடை, பேச்சு அல்லது நடத்தையில் ஒரு ஒழுங்கு அல்லது மேம்பாடு என்பது. ஆனால், குற்றவியலில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 354-இல் மாடஸ்டி என்ற சொல், ஒரு பெண்ணின் மானத்தைக் குறிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டு, மானபங்கம் என்பது (outraging the modesty) தண்டனைக்குரிய குற்றமாகக் குறிப்பிடப்படுகிறது.

இச்சொல் ஆதியில் எப்படித் தோன்றியது என்று வரலாற்றைப் புரட்டிப்பார்த்தால், மனித குலம்,  சமயம்-மதம் சார்ந்த வாழ்க்கையை வாழத் தொடங்கியபோது விதிக்கப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகளில் மிக முக்கியமான ஒன்றான உடைக் கட்டுப்பாடு தோன்றியபோது உருவானதாகத் தெரிகிறது. கத்தோலிக்கத் திருச்சபையின் சட்ட விதிமுறைகள்  (canon law) நான்கு காலகட்டங்களில் உருவாக்கப்பட்டது என்றும், அதில் முதல் காலகட்டம் கி.பி.12-ஆம் ஆண்டின் இடைப்பட்ட பகுதியிலும், இரண்டாவது காலகட்டம் கி.பி.1100-ஆம் ஆண்டு முதல் 1500-ஆம் ஆண்டு வரையும், மூன்றாவது காலகட்டம் 1917-ஆம் ஆண்டு வரையும், நான்காவது காலகட்டம் 1917க்குப் பின்னும், உருவாக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. 1917-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கத்தோலிக்கத் திருச்சபையின் விதிமுறைகளில் பிரார்த்தனைக் கூட்டத்திற்கு வரும்பொழுது, தலை மூடப்பட்டிருக்க வேண்டும் என்ற விதி அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னாளில் தளர்வு படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. யத மதம், ஜொராஸ்டிரிய மதம், இஸ்லாம், சீக்கிய மதம் போன்ற பல மதங்கள் வழிபாட்டிற்குச் செல்லும்போது, தலையைத் துணியால் மூடிக் கொண்டு போக வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கி இருப்பதை நாம் அறிவோம். இதன் உட்பொருள், இறைவன் சந்நிதியில் அடக்கமும், பணிவும் அவசியம் என்பதை வலியுறுத்துவதாகும் என்று ஒரு கருத்து உண்டு. எனவே, பெரும்பாலும் ஒருவரின் நடத்தை மற்றும் தோற்றத்தில் காணப்படும் ஒழுங்கை அடிப்படையாக வைத்து இச்சொல் தோன்றியிருப்பதாகத் தெரிகிறது. அதனால் தான், 1867-இல் தொடங்கப்பட்ட அமெரிக்கப் பெண்மணிகளுக்கான நவநாகரிகப் பத்திரிக்கையான "ஹார்பர்ஸ் பஜார்' என்ற பத்திரிக்கை ஒரு காலத்தில் பெண்களின் வயது கூடக்கூட, அவர்கள் அணியும் கவுனின் நீளமும் கூடவேண்டும் என்பதை ஒரு சித்திரமாக வரைந்து காட்டியது. இத்தகைய தகவல்களோடு இந்த வாரக் கடிதங்களுக்கு வருவோம்.

டி.வி.கிருஷ்ணசாமி, "மாடஸ்டி' என்ற ஆங்கிலச்சொல் அடக்கம், நிதானம் என்ற நல்ல பண்புகளைக் குறிக்கிறது என்றும், அச்சொல் மாடஸ்ட், மாடரேட் என்பவற்றிலிருந்து வந்ததாகவும் கருதலாம் என்றும் கூறியுள்ளார். தெ.முருகசாமி, "நடைத்தூய்மை' என்ற இணைச் சொல்லைப் பரிந்துரைத்துள்ளார்.

என்.ஆர்.ஸத்தியமூர்த்தி, ஆக்ஸ்ஃபோர்டு அகரமுதலியில் தன்னுடைய தகுதிகள், சாதனைகள் பற்றிய பணிவான அல்லது அடக்கமான மதிப்பீடுகளைக் கொள்ளுதல் என்னும் பொருள்கள் தரப்பட்டுள்ளதாகவும், சேம்பர்ஸ் அகரமுதலியில் தூய்மையுள்ள, கற்புள்ள என்னும் பொருள்கள் உள்ளதாகவும், பெண்கள் குறித்துப் பயன்படுத்தப்படும்போது, "கற்பு' என்ற பொருளிலும், இருபாலருக்கும் பயன்படுத்தப்படும்போது, அடக்கம், எளிமை, பணிவு என்னும் பொருள்களைத் தரலாம் என்கிறார்.

வி.ந.ஸ்ரீதரன், "அடக்கம்' என்றும், வே. குழந்தைசாமி "அடக்கமுடைமை' என்றும் கூறியுள்ளனர். புலவர் உ.தேவதாசு, சென்னைப் பல்கலைக்கழக ஆங்கில-தமிழ்ச்சொல் அகராதியில் நாணம், தன்னடக்கம் என்ற பொருள்கள் தரப்பட்டிருப்பதாகவும், வள்ளுவப் பெருந்தகை இருவகைப் பொருள்களில் "நாண்' என்ற சொல்லைக் கையாள்வதால், "நாணம்' என்ற சொல் பொருந்தும் என்கிறார்.

முனைவர் பா.ஜம்புலிங்கம், மாடஸ்டி என்ற சொல்லைப் பெரும்பாலும் மகளிரோடு தொடர்புபடுத்தியே கூறமுடியும் என்றும், அதனால் பெண்மை, அடக்கம், தன்னடக்கம், பணிவு, நாணம். தனித்தன்மை என்னும் சொற்களே பொருந்தும் என்கிறார். புலவர் சத்தியசீலன், "ஒழுக்கத்தின் தன்மையே பணிவு' என்ற கிரேக்க அறிஞரின் கூற்றை அடிப்படையாக வைத்தும், வள்ளுவரின் "பணிவுடையன் இன்சொலன்' என்ற குறளை ஒத்தும், மாடஸ்டி என்ற சொல்லுக்குப் பொருத்தமான தமிழ்ச்சொல் "பணிவு' என்கிறார்.

புலவர் சி.செந்தமிழ்ச்சேய், கடலூர் மின்வாரியத் தமிழார்வலர் தமிழ்ப்பணிமன்ற அறக்கட்டளை வெளியிட்டுள்ள ஆட்சிச் சொற்கள் அகரமுதலியில் இச்சொல்லுக்கு தன்னடக்கம், நாணம், எளிமை என்ற பொருள்கள் தரப்பட்டுள்ளதாகவும், குறள்வழி நோக்கின் "ஐந்தடக்கல்' என்ற தொடரும் பொருந்தி வரலாம் என்கிறார்.

முனைவர் அ.சிதம்பரநாத செட்டியாரைத் தலைமைப் பதிப்பாசிரியராகக் கொண்டு, சென்னைப் பல்கலைக்கழகம் பதிப்பித்த, ஆங்கிலம்-தமிழ் சொற்களஞ்சியத்தில், இச்சொல்லுக்கு நாணம், தன்னடக்கம், பணிவு நயம் என்ற பொருள்களோடு, பெண்டிர் ஆடையின் கீழ்க்கழுத்தை சிறிதே மூடியுள்ள பின்னல் வேலைப்பாட்டுத் துகில் (ஸ்கார்ஃப் ஆக இருக்கலாம்) என்ற பொருளும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதிலிருந்து, மாடஸ்டி என்ற சொல் ஒருவரது ஆடை, தோற்றம், நடத்தை, இப்படிப் பல பொருள்களில் விரிவது தெரிகிறது. இதனடிப்படையில் நோக்கும்போது, இச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் ஒரு மேன்மையான நடத்தையைக் குறிக்க வேண்டும், அதே சமயம் கண்ணியமான ஆடை அலங்காரத்தையும் குறிக்க வேண்டும். இது இருபாலருக்கும் பொருந்தும் என்பதையே வரலாறு காட்டுகிறது. ஆகவே, இச்சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் "கண்ணியத் தோற்றம்'.

"மாடஸ்டி' என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் "கண்ணியத் தோற்றம்’.

நன்றி - தமிழ்மணி 07 04 2013

சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 21

நாம் அன்றாடம் ஆங்கிலப் பேச்சு வழக்கில் "ஃபுல் - ஃப்ளெட்ஜ்டு' (full-fledged) என்ற சொல்லை சர்வ சாதாரணமாகப் பயன்படுத்துகிறோம். அந்தச் சொல் "ஃப்ளெட்ஜ்' என்ற சொல்லிலிருந்து உருவாக்கப்பட்டதே. ஆக்ஸ்ஃபோர்டு அகரமுதலியில், இச் சொல்லுக்கு "பறப்பதற்குப் போதுமான அளவுக்குச் சிறகுகள் வளர்தல்' என்ற பொருளும், "ஃபுல்-ஃப்ளெட்ஜ்டு' என்ற சொல்லுக்கு "முழுமையாகப் பயிற்சி அளிக்கப்பட்ட அல்லது முறையாகப் பயிற்றுவிக்கப்பட்ட' என்ற பொருள்களும் உள்ளன.

ஆங்கிலத்தில் பல சொற்கள் லத்தீன், கிரேக்க மற்றும் பிரெஞ்சு மொழிகளிலிருந்து தழுவப்பட்டிருந்தாலும், "ப்ளெட்ஜ்' என்ற சொல், "பறக்கும் திறன் கொண்ட' என்ற பொருளுடைய தொன்மையான ஜெர்மானியச் சொல்லான "ஃப்ளக்கி' (flucki) என்ற சொல்லிலிருந்து தொன்மையான ஆங்கிலத்திற்கு "ஃப்ளைஜ்' என்ற சொல்லாகவும், இடைக்கால ஆங்கிலத்தில் "ஃப்ளெஜி' என்ற சொல்லாகவும் மருவி வந்தது என்றும், அப்படி வந்த காலம் 1566 என்றும், மெரியம் வெப்ஸ்டர் அகரமுதலி தெரிவிக்கிறது.

ஆர்னிதாலஜி (ornithology) என்று அழைக்கப்படும் பறவையியலில், பறவைகளுக்குச் சிறகு முளைப்பதைப் பற்றியும், தாய்ப் பறவைகள் தன் குஞ்சுகளை சிறகு முளைக்கும் வரை எப்படிப் பாதுகாக்கின்றன; அதன் பின், அவை எப்படிப் பிரிந்து விடுகின்றன என்பதைப் பற்றியும் பல சுவையான தகவல்கள் உண்டு. மூர் அல்லது முர்ரெலெட் என்று அழைக்கப்படும் ஒருவகை கடற்பறவை, தன் இனத்தோடு கூட்டமாக கடற்கரையில் உள்ள பாறைகளின் இடுக்குகளிலோ, பொந்துகளிலோ, வளைகளிலோ முட்டையிட்டு விட்டுப் போய்விடும். பின்னர், அப்பறவைகளின் முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளியே வந்ததும், அவை தாமாகவே கடல் அருகில் வந்து குரல் எழுப்பும். உடனே தாய்ப் பறவைகள் கூட்டமாகக் கரைக்கு அருகில் வந்து, அதனதன் குஞ்சுகளை அவற்றின் குரலில் இருந்தே அடையாளம் கண்டு, கடலுக்குள் அழைத்துச் சென்றுவிடும். மனித இனத்தில் கூட, எந்தத் தாயாலும் குரலை வைத்தே பிறந்த குழந்தையை அடையாளம் காண முடியுமா? என்பது சந்தேகம்தான். இந்தச் சுவையான தகவலோடு, இந்தவாரக் கடிதங்களுக்கு வருவோம்.

ஷா.கமால் அப்துல் நாசர், கம்பராமாயணத்தில் சடாயுகாண் படலத்தில், "உருக்கிய சுவணம் ஒத்து' என்று தொடங்கும் பாடலில் வரும் "தெரிப்புறு செறி சுடர் சிறை விரித்து' என்ற வரியையும், "பெரிதும் நன்று' என்று தொடங்கும் பாடலில் வரும் "திண்சிறை விரியும் நீழலில் செல்ல' என்ற வரியையும், "மழைபுரை பங்குழல்' என்று தொடங்கும் பாடலில் வரும் "தழை புரையும் சிறைக்கூகை, பாறுமுதல் பெரும் பறவை' என்னும் வரிகளையும் மேற்கோள்காட்டி, "சிறைவிரி' என்ற சொல்லைப் பரிசீலனை செய்யலாம் என்கிறார்.

என்.ஆர்.சத்யமூர்த்தி, பறவைக்குச் சிறகுகள் முளைப்பதைக் குறிக்கும் என்றும், இடியமாடிக்காகப் (idiom) பயன்படுத்தும் போதுகூட, சிட்டுக்குச் சிறகு முளைத்துவிட்டது எனக் கூறுகிறோம் என்றும், இப்பயன்பாடு, ஒருவன் தன் காலிலேயே நிற்கும் நிலையை எய்துவதைக் குறிப்பிடவும் கையாளப்படுகிறது என்றும், எனவே இதை "தன் கால்நிலை' என்று குறிப்பிடலாம் என்கிறார். அவ்வாறு குறிப்பிடுகையில், தன் காலிலேயே நிற்கும் நிலை என ஏழாம்வேற்றுமை உருபும், பயனும் உடந்தொக்கத்தொகையாக விரியும் என்பதால் "தளிர்நிலை' என்றும் சொல்லலாம் என்கிறார். மேலும் ப்ளெட்ஜ்லிங்க் என்பது ஓர் இளம் பறவையையோ அல்லது அனுபவமற்ற ஒரு மனிதனையோ குறிக்கும் என்றும் கூறுகிறார்.

எம்.எஸ்.இப்ராகிம், "சிறகடிப்பு' என்ற சொல்லையும், சோலை.கருப்பையா, சிறகு முளைத்து, துளிர்விட்டு, பருவமெய்தி போன்ற சொற்களையும், தெ.முருகசாமி, "பக்கத்துணை' என்ற சொல்லையும் பரிந்துரைக்கின்றனர்.

அ.கு.மான்விழி, வழக்கமான பொருள்களைத் தாண்டி, சார்பற்றத் தன்மை (indipendent nature) என்ற ஒரு பொருள் உள்ளதாகவும், இச்சொல்லின் நீட்சி நிலைகளான வினைச்சொல், பெயர்ச்சொல், பெயர் உரிச்சொல், அடைமொழி ஆகியவற்றிலேயே நிறைய விளக்கங்கள் தரப்பட்டுள்ளன என்றும், அவை ஆரம்ப நிலையில் உள்ளவர், அனுபவமில்லாத ஒருவர் என்ற பொருள்களிலேயும் பயன்படுத்தப்படலாம் என்றும், இச்சொல்லின் பயன்பாட்டை நாம் வழக்கில் கொண்டுவரும் பொழுது, தனிநபர் சார்ந்த செய்திகளுக்கு, துவக்க நிலை (யாளர்), முதல் முயற்சியாளர், அனுபவத்தேடல், புதிய அனுபவம் போன்ற சொற்களையும், வணிக அமைப்பு, வணிக நிறுவனம் அல்லது பொது அமைப்புகள், நிறுவனங்கள் போன்றவற்றின் செய்திகளுக்கு தடம்பதித்தல், காலூன்றல், அடியெடுத்துவைத்தல் போன்ற சொற்களைப் பயன்படுத்தலாம் என்றும், "அணியமாதல்' என்ற சொல்லும் பொருந்தலாம் என்கிறார்.

இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது, இச்சொல் மனிதர்களுக்கான பயன்பாட்டை மட்டுமே வைத்து உருவாக்கப்படும்போது, அதன் வீச்சு குறைவாகவும், பறக்கும் செயல்பாட்டை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படும்போது, பொதுத்தன்மை உடையதாகவும் மாறுவதை உணரலாம். அந்த அடிப்படையில் பார்க்கும்போது, இச்சொல்லுக்குப் பொருத்தமான இணைச்சொல் "சிறகு வளர்தல்' என்றே எண்ணுகிறேன். சிறகு என்ற சொல் இலக்கியத் தமிழில் சிறை என்றும் காணப்படுகிறது. எனவே, சிறைவிரி அல்லது சிறகுவிரி என்ற சொற்கள் சுருக்கமாகவும், அழகாகவும் இருப்பினும், அவை வளர்தல் அல்லது முளைத்தல் என்னும் செயல்பாட்டைக் குறிக்காது.

நன்றி - தமிழ்மணி 31 03 2013

சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 20

நான் நினைத்ததைப் போலவே, ஒரு சிலர் "சப்லிமினல்' என்ற சொல்லுக்கும், "சப்ளைம்' என்ற சொல்லுக்கும் தொடர்பிருப்பதாக எண்ணிவிட்டார்கள். ஆனால், சில நேரங்களில் மொழியியலில், அதிலும் குறிப்பாக ஆங்கிலச் சொற்பிறப்பியலில் (எடிமாலஜி) நம்முடைய தர்க்கம் (லாஜிக்) வேலை செய்வதில்லை. "சப்ளைம்' என்ற சொல் மேன்மையான, உயர்வான, சிறப்பான, பெருமையான என்ற பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், "சப்லிமினல்' என்ற சொல் நம் புலனுணர்வு அல்லது உணர்ச்சி நிலையின் நுழைவாயிலில் தூண்டப்படும் அல்லது நிகழும் ஒரு மனப்போக்கு அல்லது உளவியக்கம் என்று ஆக்ஸ்ஃபோர்டு அகரமுதலி பொருளுரைக்கிறது. அப்படித் தூண்டப்படும் மனப்போக்கு நம்மால் உணர முடியாததாகவும், அதே சமயம், நம்முடைய மனப்பாங்கை மாற்றக்கூடியதாகவும் இருக்குமென்றும், அந்த அகரமுதலி குறிக்கிறது.

இதே சொல்லுக்கு மெரியம்-வெப்ஸ்டர் அகரமுதலி, உணர்ச்சியை (சென்சேஷன்) அல்லது புலப்பாட்டைத் (பெர்சப்ஷன்) தூண்டுவதற்கியலாத என்ற பொருளையும் கொடுக்கிறது. இச்சொல் 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் நுழைவாயில் என்ற சொல்லைக் குறிக்கும் "சப்-லிமன்' என்ற லத்தீன் சொல்லிலிருந்து ஆங்கிலத்திற்குக் கொண்டுவரப்பட்டது. இன்று பெரும்பாலும் உளவியலில் பயன்படுத்தப்படும் இச்சொல், பல நுகர் பொருள்களுக்கு நம்மை அடிமையாக்குவதற்கு விளம்பரங்களில் பயன்படுத்தப்படும் சில யுக்திகளைக் குறிக்கும் சொல்லாகப் பெரிய அளவில் உருவெடுத்திருக்கிறது.

1959-ஆம் ஆண்டு சந்தை - அங்காடிகளைப் பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட ஜேம்ஸ் வைகரி என்பவர், ஒரு திரைப்படத்தின் இடையில் ""பசியா? பாப்கார்ன் உண்ணுங்கள்; தாகமா? கொகொகோலா பருகுங்கள்'' என்ற விளம்பரத்தை நுழைத்தார். அந்த விளம்பரம் ஒளிபரப்பாகிய கால அளவு பொதுவாக ஒரு மனிதனின் கவனத்தை ஈர்ப்பதற்குத் தேவையான கால அளவைவிடக் குறைவானதாகவும், ஆனால் உள்மனதின் அல்லது ஆழ்மனதின் (சப்கான்ஷியஸ்) கவனத்தை ஈர்ப்பதற்குப் போதுமானதாகவும் இருந்தது. ஆனால், இந்த விளம்பரம் பாப்கார்ன் விற்பனையை 57.8 சதவிகிதமும், கொகொகோலா விற்பனையை 18 சதவிகிதமும் அதிகரித்தது. 1999-இல் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் இதைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டது. அந்த ஆராய்ச்சிகளின் முடிவில் ஒரு மனிதனின் ஆழ்மனதில், அவனுக்கு வெளிப்படையாகத் தெரியாமலேயே தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் சில கருத்துகளை விளம்பரங்கள் மூலம் செலுத்திவிட முடியும் என்ற உண்மையைக் கண்டறிந்தனர். அதன் விளைவு, மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் தற்பொழுது புலன் உணர்வுகளைத் தூண்டும் கிளர்ச்சியூட்டும் செய்திகளையும், படிவங்களையும் தங்களுடைய விளம்பரங்களில், யாரும் வெளிப்படையாகக் கண்டுபிடிக்க முடியாத வகையில் உள்ளே புகுத்தத் தொடங்கிவிட்டன. ஆனால், இவை இளைஞர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை, அவர்கள் அறியாமலேயே அவர்களது அடிமனதில் ஏற்படுத்தி விடுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. பல போட்டி நிறுவனங்களுக்கிடையே நிகழும் விளம்பரப் போரிலும், "சப்லிமினல் மெசேஜ்' என்ற உத்தி தற்போது கையாளப்படுகிறது. இந்த முன்னுரையோடு, இந்தவாரக் கடிதங்களுக்கு வருவோம்.

டி.வி.கிருஷ்ணசாமி, "சப்ளைம் என்ற சொல்லின் பொருளை வைத்து நோக்கும்போது, சப்லிமினல் என்ற சொல்லுக்கு எல்லாவற்றிலும் அடக்கமானதாகவும், மேலானதாகவும் இருப்பதாகும். எனவே, இதற்கு இணையான தமிழ்ச்சொல் "மேல் அடங்கல்' என்று எழுதியுள்ளார்.

புலவர் உ.தேவதாசு, "ஆங்கில அகராதிகள் தரும் பொருள்களின் அடிப்படையில், சென்னைப் பல்கலைக்கழக ஆங்கில தமிழகராதி உணர்வு நிலையின் அடி எல்லை, உணர்வுக்கருநிலை என்னும் பொருள்களைக் கொடுத்துள்ளதாகவும், "ஆழ் மனநிலை' என்ற சொல் மிகப் பொருத்தமாக இருக்கலாம்' என்றும் தெரிவித்துள்ளார். மேலும், சங்க இலக்கியங்களில் காணப்படும் "உள்ளுறை உவமம்' என்ற சொல்லும் பொருத்தமாகலாம் என்பதனால் "உள்ளுறை உணர்நிலை' என்ற சொல்லையும் பரிந்துரைத்துள்ளார்.

ஷா.கமால் அப்துல் நாசர், "நம் உள்ளுணர்வில் ஒளிந்திருக்கிற அல்லது உணர முடிகிற சப்லிமினல் கிரேட்னஸ், சப்லிமினல் ட்ரூத் என்ற தொடர்புடைய பயன்பாடுகளை எண்ணிப் பார்க்கும்போது, சப்லிமினல் என்ற சொல்லுக்கு "உணர்வுக்கப்பாலான' என்ற சொல் பொருந்தலாம் என்கிறார். 

முனைவர் வே.குழந்தைசாமி, "ஒருவரது எண்ண ஓட்டத்தில் அவரை அறியாமல் ஏற்படும் அகமாற்றத்தை இச்சொல் குறிப்பதாலும், வெளியிடா எண்ணங்களைத் திருவள்ளுவர் "கரந்து - கரப்பு' என்ற சொற்களால் குறிப்பிடுவதாலும், இதற்கு "கரந்துபடு மாற்றம்' அல்லது "புலனுணரா மாற்றம்' என்ற சொற்கள் பொருந்தும் என்கிறார்.

 "உளவியலில் இச்சொல் நாம் விழிப்புணர்வோடு அறியமுடியாத வகையில் ஏற்படும் ஒரு மனநிகழ்வைக் குறிக்கும் என்பதால், இச்சொல்லுக்கு மேலோட்டமான முயற்சி, செயற்கையான, ஊக்கமளிக்காத, உணர்வுகளைத் தூண்டாத, உணர்ச்சியை எழுப்பாத, திடமான ஞானமிலாத என்னும் சொற்களை ஜ.ரமேஷ் பரிந்துரைத்துள்ளார்.

புலவர் சி.செந்தமிழ்ச்சேய், "இச்சொல்லுக்கு சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலி தூண்டுதல் புலப்பாட்டு எல்லைக்குக் கீழ்ப்பட்ட, புலப்படாத தூண்டுதல் நெய்மையுடைய என்ற இரண்டு பொருள்களைக் கொடுத்துள்ளதாகவும், ஆனால் ஆழ்மன உணர்நிலை, அறிதுயில்நிலை என்னும் தொடர்கள் கிட்டத்தட்ட பொருந்துவது போல் தோன்றினாலும், அவை ஏற்புடைத்தாய் அமையாது' என்றும், "விளிம்பிரு உள்மறை உணர்நிலை' என்றோ, "விளிம்புறை உணர்மறைநிலை' என்றோ பொருள் கொள்ளலாம் என்றும் கூறியுள்றார்.

வெ.ஆனந்தகிருஷ்ணன், "சப்லிமினல் என்ற சொல்லுக்கு ஒருவர் அறியாமலேயே உள்ளம் நெய்மை அடையும் நிலை என்று அகராதியில் காணப்படுவதாலும், இச்சொல் கனவுக்கும், நனவுள்ளத்திற்கும் இடையில் இருக்கும் காரணத்தால், "துணை நனவுள்ளம்' என்ற சொல் பொருத்தமாக இருக்கும் என்றும் எழுதியுள்ளார்.

இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு நோக்குங்கால், விழிப்புணர்வின் அடிமட்டத்தில் அல்லது நுழைவாயிலில் நாம் உணராமலேயே நம்மைத் தாக்கும் மனப்போக்கை இச்சொல் குறிப்பதால் "உணர்வறியாப் போக்கு' என்பது பொருத்தமாகலாம். அதைவிட, புலவர் செந்தமிழ்ச்சேய் பரிந்துரைக்கும் "உள்மறை உணர்நிலை' என்ற சொல் மிகப் பொருத்தமாகும்.

 "சப்லிமினல்' என்ற சொல்லுக்கு வாசகர்கள் தரும் இணைச் சொல் "உள்மறை உணர்நிலை'.

நன்றி - தமிழ்மணி 24 03 2013

சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 19

எழில் சோம.பொன்னுசாமி "ஃப்ளாம்பாயன்ட்' என்ற சொல்லுக்கு செம்மாந்தன், செம்மாந்த மறவன், பகட்டுவண்ணன் போன்ற சொற்களைப் பரிந்துரைக்கிறார். சோலை.கருப்பையா, கெட்டிக்காரன், துறுதுறுப்பானவன், சுறுசுறுப்பானவன் என்னும் சொற்களையும், "சகலகலை வல்லவன்' என்பது பொருத்தமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

புலவர் பொறிஞர் சி.செந்தமிழ்ச்சேய், "கடலூர் மின்வாரிய தமிழார்வலர் தமிழ்ப்பணி அறக்கட்டளை' வெளியிட்டுள்ள ஆட்சிச் சொற்கள் அகரமுதலியில் பகட்டான, ஆரவாரமிக்க, ஆர்ப்பாட்டமான என்னும் பொருள்கள் தரப்பட்டுள்ளதாகவும், ஆங்கில அகரமுதலி தரும் பொருள்களை அடிப்படையாக வைத்துப் பார்த்தால், பெயரெச்சமான இச்சொல் பிறர் நாட்டத்தைக் கவரும் தன்மை உடையதால், "கவர்கவின்' என்ற சொல் பொருந்தும் என்கிறார்.

முனைவர் வே.குழந்தைசாமி, கம்பராமாயண வாக்கியமான ""பொற்பின் நின்றன பொலிவு'' என்பதை அடிப்படையாகக் கொண்டு, "பொங்கும் பொலிவு' அல்லது "பொலிவு' என்னும் சொற்கள் பொருந்தும் என்கிறார். ஆனந்தகிருஷ்ணன், பகட்டான, வேலைப்பாட்டுடன் கூடிய, ஒளிர்வான, நிறமுள்ள, அலங்காரத்துடன் பிறரைக் கவரும் தன்மை, கவரழகு, கவர்ச்சி அரசியல், ஆர்வத்துடன் இயங்கும் சுறுசுறுப்பு முதலியவற்றைக் கொண்ட ஒருவனைக் குறிப்பதால், "பன்முகப் பண்பாளன்' என்ற பொருள் பொருந்தும் என்கிறார்.

ஷா.கமால் அப்துல் நாசர், "ஃப்ளாம்பாயன்சி' என்ற இச்சொல், வள்ளுவர் பொருட்பாலில் குறிப்பிடும் ஊக்கமுடைமை, மடியின்மை, ஆள்வினையுடைமை, இடுக்கணழியாமை, சொல்வன்மை, அவையஞ்சாமை ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு சொல்லாகும் என்றும், இச்சொல்லுக்கு ""இணையாக உரமொருவற்கு'' என்று தொடங்கும் குறளில் உள்ள "உள்ளவெறுக்கை' அல்லது "ஊக்கமிகுதி' என்பது பொருத்தமாக இருக்கும் என்கிறார்.

"ஃப்ளாம்பாயன்ட்' என்ற சொல்லுக்கு மெரியம் வெப்ஸ்டர் அகரமுதலி இரண்டு வகையான பொருள்களைக் குறிக்கிறது. ஒன்று, தீப்பிழப்புகளைக் குறிக்கும் "ஃப்ளேம்' என்ற சொல்லை வேராகக் கொண்டமைந்த "அலையலையாய் எழும் மடிப்புகள்' என்ற பொருள். மற்றொன்று, பளிச்சென்று கண்ணில் தென்படும் "வண்ணமயமான காட்சி' அல்லது "நடத்தை'. பிரெஞ்சு மொழியில் உள்ள "ஃப்ளாம்பாயர்' என்ற சொல்லிலிருந்து 1832-இல் இச்சொல் ஆங்கிலத்திற்கு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இச்சொல்லுக்கு ஆக்ஸ்போர்டு அகர முதலி, பகட்டு, தன்னம்பிக்கை, துடிப்பு இவற்றின் மூலமாக மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் நபர் அல்லது நடவடிக்கை என்றும்; பிரெஞ்சு கோதிக் கட்டடக்கலையில் அலையலையாய்த் தீப்பிழம்புகள் எழும் வகையில் வடிவமைக்கப்பட்ட அலங்காரம் என்றும் இரு வகையான பொருள்களைத் தருகிறது. இந்தச் சொல் உருவான வரலாற்றைப் பார்த்தால், 13-ஆம் நூற்றாண்டு முதல் 16-ஆம் நூற்றாண்டில் மறுமலர்ச்சிக் கட்டடக்கலை தோன்றும் வரை, பிரெஞ்சு நாட்டில் கோதிக் கட்டடக்கலையின் ஒரு குறிப்பிட்ட வடிவமைப்பைக் குறிக்கும் சொல்லிலிருந்து இது தோன்றியதாகக் கூறப்படுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், கோதிக் கட்டடக்கலை என்று அழைக்கப்படும் கட்டடக்கலையில் உள்ள "கோத்' என்ற சொல் ஆங்கிலத்தில் கீழ்மகனைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டது. மிகப் பழைமையான கிறிஸ்தவ கோயில்கள், கோதிக் கட்டடக்கலையில் வடிவமைக்கப்பட்டவை என்பதும், அவை மற்ற கட்டடங்களிலிருந்து மாறுபட்டவைகளாகக் காட்டும் வகையில் கட்டப்பட்டவை என்பதையும் வரலாறு கூறுகிறது. மிக நீண்ட கூர்மையான கோபுரம் இக்கட்டடங்களின் ஒரு முக்கியமான அம்சமாகும்.

சென்னையில் உள்ள சாந்தோம் கத்தோலிக்க தேவாலயம், நவீன கோதிக் அடிப்படையில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. எனவே, கட்டடக்கலையின் ஒரு வடிவத்தைக் குறிக்கும் பிரெஞ்சு சொல்லிலிருந்து ஆங்கிலத்துக்கு இறக்குமதி செய்யப்பட்ட இச்சொல், காலப்போக்கில் தடம்மாறி நம்முடைய வழக்கில் மனிதர்களையோ, அவர்களுடைய நடத்தையையோ குறிப்பதற்காகவே பெரும்பாலும் பயன்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு நாம் இந்த வாரக் கடிதங்களுக்கு வருவோம்.

புலவர் செந்தமிழ்ச்சேய் பரிந்துரைத்துள்ள "கவர்கவின்' என்ற சொல்லைப் பயன்பாட்டில் கொண்டு வருவதில் சில சிக்கல்கள் உள்ளன. காரணம், "ஃப்ளாம்பாயன்ட்' என்ற சொல், ஒரு நபர் அல்லது நடத்தை இரண்டிற்கும் பொதுவானதாக அமைந்திருக்கிறது. அந்த அடிப்படையில் பார்க்கும்போது, "கவர்திறன்' என்ற சொல் இரண்டுக்கும் பொருந்தும் என்று எண்ணுகிறேன்.

நன்றி - தமிழ்மணி 17 03 2013

சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 18

மதுரை பாபாராஜ், "ஹைரார்கி' என்ற சொல்லுக்கு சென்னைப் பல்கலைக்கழக சொற்களஞ்சியம், "படிநிலை அமைப்பு' என்றும், ஆட்சிச் சொல் அகராதியில் அங்காடிச் சொல், படிமரபு, அதிகார வைப்பு முறை ஆகிய பொருள்களும், சுரா ஆங்கிலத் தமிழ் அகரமுதலியில் "குருக்களின் படிநிலைக் குழுமம்' என்றும் பொருள் தரப்பட்டுள்ளதால், "தரவரிசை' அல்லது "நிலை வரிசை' என்னும் சொல் பொருத்தமாக இருக்கும் என்கிறார்.

எழில் சோம.பொன்னுசாமி, அதிகார மரபு, அதிகார வரிசை, அதிகார அமைப்பு நிலை, அதிகாரப் படிநிலை என்னும் சொற்களைப் பரிந்துரைத்துவிட்டு, அருங்கலைச் சொல்லகராதியில், "படிமரபு' என்ற பொருள் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார்.

பேராசிரியர் ஜி.ரமேஷ், படிநிலை, பதவிப்படிநிலை, பொருள் படிநிலை, குருமரபு ஆகிய பொருள்கள் காணப்படுவதால், பல்வேறு சமூக அமைப்புகளைக் குறிக்கும் வகையில் கையாளப்படும்போது, இச்சொல்லுக்கு "வகுப்புப் படிநிலை' என்ற சொல்லையும் அதிகாரத்தின் பொருட்டு கையாளப்படும்போது, "அதிகாரப் படிநிலை' என்ற சொல்லையும் பயன்படுத்தலாம் என்கிறார். 

முனைவர் ப.ஜம்புலிங்கம் வம்சாவளி, வழிவழியாக, பரம்பரை பரம்பரையாய், தலைமுறை தலைமுறையாய் என்னும் சொற்களையும், அலுவல் நிலை பயன்பாட்டில் பதவி நிலையைக் குறிக்கும்போது, "பதவிப் படிநிலை' என்ற சொல்லையும் பயன்படுத்தலாம் என்கிறார்.

முனைவர் வே.குழந்தைசாமி, "ஹைரார்கி' என்ற சொல் சமூக தளத்தில் அல்லது நிறுவன மற்றும் ஆட்சியமைப்பில் காணப்படும் உயர்வு, தாழ்வு அடிப்படையிலான கட்டமைப்பைக் குறிக்கும் என்பதாலும், பதவி, பணம், இனம் போன்றவற்றால் ஒருவருக்குக் கிடைக்கும் தகுதி மற்றும் மதிப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுடைய ஓர் அடுக்குமுறை அமைப்பு உருவாவதாலும், இச் சொல்லுக்கு அடுக்குமுறை அமைப்பு' அல்லது "படிநிலை அமைப்பு' என்னும் சொற்களைப் பயன்படுத்தலாம் என்கிறார்.

ஆக்ஸ்ஃபோர்டு அகரமுதலி இச்சொல்லுக்கு ஓர் அமைப்பிலோ அல்லது நிறுவனத்திலோ அதைச் சார்ந்தவர்கள் அல்லது குழுக்கள் அவர்களது அந்தஸ்தையோ, அதிகாரத்தையோ ஒட்டி ஒருவர் மேல் ஒருவராக அல்லது ஒன்றன்மேல் ஒன்றாக தரவரிசைப்படுத்தப்படுவது என்ற பொருளைக் குறிக்கிறது. இவை தவிரவும், சில பொருள்களை அவற்றின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தியோ, பல பிரிவுகளாகப் பிரித்தோ வைப்பது என்ற பொருளையும் கொடுக்கிறது. மேலும், கிறிஸ்தவ மெய்யியலில் தேவதைகளும், வானவர்களும், பாரம்பரியமாய் குறிக்கப்படும் "வரிசை' என்ற பொருளையும், கத்தோலிக்க திருச்சபையின் குருமார்களின் வரிசை அல்லது மரபு என்னும் பொருளையும் கூட ஆக்ஸ்ஃபோர்டு அகரமுதலி அளிக்கிறது.

மெரியம் வெப்ஸ்டர் அகரமுதலி ஐந்து விதமான பொருள்களைக் கூறுகிறது. அவை: (1) தேவதைகளின் வரிசை அல்லது பிரிவுகள், (2) குருமார்களின் மரபு, (3) அதிகாரத்தில் இருப்பவர்களின் வரிசை, (4) திறமை அல்லது சமூக, பொருளாதார அல்லது தொழில் மேம்பாட்டின் அடிப்படையில் ஒரு குழுவைச் சார்ந்த மக்களை வரிசைப்படுத்துவது, (5) மதிப்பீடுகளை வரிசைப்படுத்துவது.

"ஹைரார்கி' என்ற சொல் ஆதியில் கிரேக்க மொழியில் விண்ணகவரிசை அல்லது வான்வெளிவரிசை ((Celestial Hierarchy)) என்ற பொருளிலும், கிறிஸ்தவ திருச்சபையின் குருமார் மரபு (Ecclesiastical) என்ற பொருளிலேயும் பயன்படுத்தப்பட்டு, பிற்காலத்தில் 14, 15-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலத்திற்கு இறக்குமதி செய்யப்பட்டது. முதன் முதலில் இச்சொல்லை கிறிஸ்தவ மெய்யியல் அறிஞர் சூடோ-டெனிஸ் பயன்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது.

இப்படி கோள்கள், வானவர்கள், தேவதைகள், மதகுருமார்களின் படிவரிசையைக் குறிப்பிடுவதற்காகத் தோற்றுவிக்கப்பட்ட இச்சொல், காலப்போக்கில் ஆட்சியிலும், அதிகாரத்திலும் அதிகார வரிசையைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்பட்டு, அங்கிருந்து ஆட்சியல்லாத மற்ற நிறுவனங்களுக்கும் பரவியது. பின்னாளில், பொருளின் தரவரிசை அல்லது படிவரிசையைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. 20-ஆம் நூற்றாண்டில் இவற்றையும் தாண்டி, உளவியலில் ஒரு மனிதனின் தேவைகளை முக்கோண பிரமிடு வடிவில் வரிசைப்படுத்தி ஆப்ரஹாம் மாஸ்லோ என்பவர் மாஸ்லோவின் தேவைகளின் வரிசை (Maslow's Hierarchy of Needs) என்ற ஒரு கோட்பாட்டை உருவாக்கினார். இப்படி இச்சொல் எங்கோ தொடங்கி, எங்கெங்கோ போய், இன்று பல்வேறு பரிமாணங்களைத் தாங்கி நிற்கிறது. இதைவிட வியப்பு என்னவென்றால், "ஹைரார்கி' என்ற சொல்லின் வேர்ச்சொல்லிருந்து தாய்வழிச் சமூகம், தந்தைவழிச் சமூகம் மற்றும் ஒரு சிறுகுழு ஆட்சி (Matriarchy, Patriarchy and Oligarchy) என்ற சொற்களெல்லாம் உருவாகிவிட்டன. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, ஹைரார்கி என்ற சொல்லின் அடிப்படை வீச்சு அதிகாரம், படி, வரிசை ஆகியவற்றைச் சுற்றிச்சுற்றி அமைவதைப் பார்க்கிறோம். 

அது அந்த வரிசையிலுள்ள மக்களைக் குறிக்கத் தொடங்கிய காலத்தைத் தாண்டி, பொருள்களையும், தேவைகளையும் கூட உள்ளடக்கும் நிலைக்கு வந்து விட்டதால், பெருவாரியான வாசகர்கள் குறிப்பிட்டுள்ள "படிநிலை வரிசை' என்ற சொல்லே பொருத்தமாக இருக்கும். ஆனால், படிநிலை என்பதும் வரிசை என்பதும் கிட்டத்தட்ட ஒன்றாக இருக்குமென்பதால் "படிநிலை அமைப்பு' என்ற சொல் மிகவும் பொருத்தமாக இருக்கும்.

நன்றி - தமிழ்மணி 10 03 2013