சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வைகுண்டத்தில் நாரதரின் ‘ஜிப்ளி’ எஃபக்ட் - எஸ்.பாலாஜி


வைகுண்டம்! ஒளியால் ஆன ஓர் உலகம். அங்கே ஒவ்வொரு அணுவும் தெய்வீகமான ஒளியால் துடிப்புடன் மின்னிக்கொண்டிருந்தது. வண்ண ஒளிக்கதிர்கள் வானவில் போல் சிதறி, மிருதுவான வெளிச்சம் தந்து ஆழ்வார்களின் பாசுரங்களைப் போல் இனிமையாக பரவிக்கொண்டிருந்தது.


வைகுண்டத்தின் ஒவ்வொரு மூலையிலும் அழகிய தடாகங்கள் மின்னின. அந்தத் தடாகங்களில் தங்கமயமான தாமரைகள் பூத்துக் குலுங்கின. வாசலில் தொங்கிய சுவர்ண மணிகள் தென்றலில் ஆடி, கோபியரின் கோலாட்டம் போல் இனிமையான ஓசையை எழுப்பிக்கொண்டிருந்தன.


பாற்கடலின் நுரைபோல் வெண்மையான ஆதிசேஷனின் மேலே, ஸ்ரீமந்நாராயணன் இன்பமயமாக அமர்ந்திருந்தார். ஆதிசேஷன் தனது ஆயிரம் தலைகளை ஒருங்கே உயர்த்தி, வெண்மையான ஒளியால் பிரகாசித்துக் கொண்டிருந்தான். அவனது பச்சைநிற தோலில் பெருமாளின் நீல வண்ண தோற்றம் பிரதிபலித்து, அற்புதமான வண்ண ஜாலங்களை உருவாக்கிக் கொண்டிருந்தது.


தாயார் மகாலட்சுமி பெருமாளின் அருகில் அமர்ந்து, மெல்லிய குளிர்ச்சியான தன் செந்தாமரை கரங்களால் பெருமாளின் திருவடிகளை அழுத்திக்கொண்டிருந்தாள். அவளது முகத்தில் சாந்தமும் அன்பும் நிறைந்திருந்தது. அவளது கண்களில் பரம்பொருளின் மீதான பக்தியின் ஒளி தெரிந்தது. வைகுண்டம் முழுவதும் அமைதியும், பேரின்பமும் நிரம்பியிருந்தது.


இந்த பேரமைதியை கிழிப்பது போல், திடீரென நாரதர் வைகுண்டத்திற்குள் நுழைந்தார். அவரது கையில் வழக்கமான வீணைக்குப் பதிலாக ஒரு புதிய பொருள் இருந்தது. அதிலிருந்து அவரது 'சி' தம்புராவின் ஒலி சீராக ஒலித்துக் கொண்டிருந்தது.


"நாராயண நாராயண," என்ற மந்திரத்தை உச்சரித்தவாறே நாரதர் உள்ளே வந்தார். அவரது முகத்தில் ஒரு சிறுவனின் உற்சாகமும், புதிய விளையாட்டுப் பொருளைக் கண்டுபிடித்த மகிழ்ச்சியும் தெரிந்தது.


தாயார் லட்சுமியின் கண்கள் படபடப்பாகின. "ஆகா, நாரதர் இங்கு வருகிறார், ஏதோ கலகம் செய்யப் போகிறார்" என்ற கவலை தோய்ந்த பார்வையை பெருமாளிடம் வீசினாள். அவரோ "கவலை வேண்டாம், 'மா சுச'" என்று அர்ஜூனனுக்கு கீதோபதேசம் சொன்னது போல் கைகளை உயர்த்தி சமாதானப்படுத்தினார்.


இவையனைத்தையும் நாரதர் தன் ஓரக்கண்களால் கவனித்துக் கொண்டே, "தாயே, கவலைக் கொள்ளாதீர்கள்! நான் கலகம் செய்ய வரவில்லை. எனக்கு ஒரு அற்புதமான பொருள் கிடைத்தது, அதை பகவானிடம் சமர்ப்பிக்கவே வந்தேன்," என்றார் ஆர்வத்துடன்.


"என்ன நாரதா? எப்பொழுதும் ரொம்ப பீடிகை போட்டுப் பேசுவாய். ஆனால் இன்றோ எதுவுமில்லாமல் உடனே விஷயத்திற்கு வந்துவிட்டாய்," என்று பெருமாள் புன்முறுவலுடன் கேட்டார்.


"இல்லை ஸ்வாமி, நான் சமீபத்தில் பூலோகம் சென்றிருந்தேன். அங்கு இருந்த அனைவரின் கைகளில் ஒரு பொருள் இருந்து அவர்களை அல்லோலகல்லோலப் படுத்துகிறதோ என்று எண்ணினேன். ஆனால் இன்று அதன் பிடியில் நானே விழுந்துவிட்டேன். அதனை தங்களிடம் காண்பிக்கவே ஓடோடி வந்தேன் கண்ணா," என்றார் நாரதர்.


"ஆக, உன் கலகத்திற்கு பூலோகத்திலிருந்து ஏதோ கொண்டு வந்துள்ளாய். சரி, உன் விளையாட்டை ஆரம்பி. எங்கே அது? எனக்குக் காண்பி," என்றார் பெருமாள், ஆர்வம் தன் கண்களில் மின்ன ஒன்றும் தெரியாத சிறுவனாய் தாய் யசோதையிடம் மாட்டிக் கொண்டு நிற்பவர் போல.


"இதோ ஸ்வாமி, இதுதான் அது," என்று நாரதர் தன் கையில் இருந்த பொருளைக் காட்ட, அதிலிருந்து பளிச்சென்று வெளிச்சம் பரவியது.


சற்று நீளமாக செவ்வக வடிவில் இருந்த பொருளை ஆச்சரியமாக வாங்கினார் பெருமாள். அதன் பளபளப்பான மேற்பரப்பில் தனது பிரதிபிம்பம் தெரிவதைக் கண்டார்.


"என்ன இது நாரதா?" என்று கேட்டார் பெருமாள், அதன் விளிம்புகளை தடவியபடி.


"ஸ்வாமி, இதனை 'ஸ்மார்ட்போன்' என்கின்றனர் பூலோகத்தார்," என்றார் நாரதர் பெருமையுடன்.


"என்ன, ஸ்மார்ட்போனா? இதன் பயன் என்னவோ?" பெருமாள் அதன் பக்கவாட்டிலுள்ள பொத்தான்களை ஆராய்ந்தபடி கேட்டார்.


"ஸ்வாமி, இதை வைத்துக் கொண்டு ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும், சிலர் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டும் கொள்கிறார்கள். சிலர் பைத்தியம் போல் கத்துகிறார்கள்," என்றார் நாரதர், இன்னும் பல வேடிக்கைகள் சொல்ல ஆயத்தமாக.


"நாரதா... நிறுத்து! இப்படிப்பட்ட மோசமான ஒன்றை எதற்காக இங்கு கொண்டு வந்தாய்?" கோபத்துடன் கேட்டாள் தாயார்.


"இல்லை தாயே, இதிலும் நிறைய நல்ல விஷயங்கள் உள்ளன. அதனைக் கொஞ்சம் பார்ப்போமா?" நாரதர் கெஞ்சினார். 


பெருமாள் தன் அபய ஹஸ்தத்தை தாயாரிடம் காண்பித்து, “லட்சுமி, கவலைப்படாதே! நான் இருக்கிறேன்," என்று சமாதானப்படுத்தினார்.


"சரி ஸ்வாமி, நீங்கள் சொல்வதால் இந்த நாரதனை விட்டு விடுகிறேன். நாரதா, நீ வந்த வேலையை தொடங்கு!” என்றாள் தாயார், இன்னும் முழுமையாக சமாதானம் அடையாமல்.


"நாராயண நாராயண, ஸ்வாமி இதனை வைத்து பூலோகத்தில் உள்ள யாரிடமும் பேசிக் கொள்ளலாம். தங்களுக்கு யாரையாவது தொடர்பு கொள்ள வேண்டுமா?" என்றார் நாரதர் உற்சாகத்துடன்.


தாயார் கோபத்துடன் "நாரதா!" என்று கூப்பிட்டதும், நாரதர் வேகமாக தன் விளக்கத்தைத் தொடர்ந்தார்.


"இல்லை தாயே, நம் பெருமாள் கண்ணனாக அவதாரமெடுத்து தாய் யசோதாவிடமும் தேவகியிடமும் ஏதாவது பேசாமல் விட்டு வந்திருந்தால் தொடர்பு கொண்டு பேசலாமே என்று..." நாரதர் தன் வாக்கியத்தை முடிக்க முடியாமல் தவித்தார்.


"வேண்டாம் நாரதா, வேண்டாம். வேறு ஏதாவது இதனுள் இருக்கிறதா?" பெருமாள் சற்று ஆர்வத்துடன் கேட்டார், தாயாரின் கோபம் அதிகரிப்பதை உணர்ந்து.


"ஸ்வாமி, தற்சமயம் இதில் டிரென்டிங்காக ஒன்று உள்ளது, அதற்கு 'ஜிப்ளி எபக்ட்' என்று பெயர். நம் படத்தை இதனுள் கொடுத்தோமானால் அதனை நல்ல காமெடியான கார்ட்டூன் படமாக உருவாக்கிக் கொடுக்கும்," என்றார் நாரதர், கண்கள் மின்ன.


"ஆகா, நன்றாக உள்ளதே, இதனை வேண்டுமானால் செய்து பார்க்கலாம்," என்றார் பெருமாள், புன்னகையுடன்.


"இதோ ஸ்வாமி, நீங்களும் தாயாரும் சேர்த்தியாய் இருக்கும் இந்தப் படத்தை இதனுள் செலுத்துகிறேன், என்ன நடக்கிறது என்று பார்ப்போம். ஆனால் அதற்கு இங்கு வைபை வேண்டுமே... நம் ஆதிசேஷன் தான் இருக்கிறானே, அவனையே நெட் கொண்டு வரச் சொல்லலாம்," என்றார் நாரதர், ஆதிசேஷனை நோக்கிக் கை சைகை காட்ட.


ஆதிசேஷன் தன் ஆயிரம் தலைகளில் ஒன்றை உயர்த்தி, "நான் என்ன இன்டர்நெட் ரவுட்டரா?" என்று கேட்பதுபோல் பார்த்தான். 


உடன் நாரதர் "வேண்டாம், பூலோகத்தில் எலான் மஸ்க் என்ற ஒருவன் ஸ்டார்லிங்க் என்று வானிலேயே இன்டர்நெட் தொடர்பு கொள்ள வைத்திருக்கிறான் அதனை தொடர்பு கொள்ளலாம். இதோ கனெக்ட் ஆகிவிட்டது." 


"சரி, என்ன வருமென்று காட்டு! ஆர்வத்தைத் தூண்டி விட்டாய்," பெருமாள் சற்றே கோபமுடன் கேட்டார்.


"இதோ ஸ்வாமி, வருகிறது, வருகிறது, இதோ வந்தேவிட்டது. பாருங்கள். தாங்களும் தாயாரும் இருக்கும் சேர்த்தி படம் எப்படி வந்துள்ளது என்று பாருங்கள்," என்று நாரதர் காட்ட, இருவரும் ஆர்வமுடன் பார்த்தனர்.


ஆனால் தாயாரின் முகம் சற்றே வாடத் தொடங்கிவிட்டது. சற்று கோபத்துடன் நாரதரை பார்த்து, "நாரதா! என்ன காரியம் செய்துள்ளாய்? ஸ்வாமியின் அருகில் என் படத்திற்கு பதில் யாரோ ஒருத்தியின் படத்தை வைத்துள்ளாய்! மேலும் என்னை யாரோ அருகில் நிற்க வைக்கிறாய்! உன்னை சபிக்கப் போகிறேன்!" என்றாள் தாயார், கோபத்தில் பொங்க.


"இல்லை தாயே, கோபித்துக் கொள்ளாதீர்! நெட்வொர்க் இஷ்யு, இதோ சரி செய்து விடுகிறேன்," என்று நாரதர் படபடத்தார்.


"பரவாயில்லை நாரதா, என் அருகில் இருக்கும் அந்தப் பெண் யாரென்று தெரிந்து கொள்ளலாமா?" சற்றே ஓரப் புன்னகையுடன் பெருமாள் நாரதரிடம் கேட்டார், தாயார் அருகில் இருப்பதை மறந்து.


"ஸ்வாமி, அது வந்து இன்றைய இளைஞர்களின் கிரஷ் ராஷ்மிகாவின் படமது. திரைப்பட நடிகை அவர்," என்றார் நாரதர், தாயாரின் முகத்தில் படரும் ரோஷத்தைக் கவனிக்காமல்.


"ஓகோ, தமிழ் நடிகையா? சரி சரி, இருக்கட்டும். மற்றொரு முறை சரி செய்கிறேன் என்றாயே, இப்பொழுது எந்த ஹாலிவுட் நடிகை வருகிறார்கள் என்று பார்ப்போம்," என்றார் பெருமாள் சற்று நகைச்சுவையுடன், தாயாரின் கோபம் அதிகரிப்பதை உணராமல். 


"இதோ ஸ்வாமி, வந்துவிட்டது, பாருங்களேன்," என்று நாரதர் மீண்டும் காட்டினார்.


"ஆகா அருமை! என் ராமவதாரத்தில் எனக்கு துணை புரிந்த அனுமன் வந்திருக்கிறான். கூட ஒரு சிறிய பெண் வந்திருக்கிறாளே, அவள் யார்?" என்று பெருமாள் கேட்டார், முகம் மலர.


"ஸ்வாமி, மன்னிக்கவும், மறுபடியும் தவறு நேர்ந்துவிட்டது. இது சுட்டிக் குழந்தைகளின் நட்சத்திரம் டோரா மற்றும் அதன் நண்பன் புஜ்ஜி, ஸ்வாமி," என்றார் நாரதர், தலைகுனிந்து.


"போதும் நாரதா! இத்துடன் உன் விளையாட்டை நிறுத்து. கோமாளித்தனங்களை செய்து எங்களின் ஏகாந்த நேரத்தை வீணாக்காதே," தாயார் கடுமையாகக் கூறினாள், தனது மங்கலான முகத்துடன்.


"மன்னித்து விடுங்கள் ஸ்வாமி, நம் வைகுண்டம் பூலோகத்திலிருந்து வெகுதூரம் உள்ளதால் நெட்வொர்க் இஷ்யூ என்று நினைக்கிறேன்," என்றார் நாரதர், சமாளிக்க முயன்று.


"நான் அப்பொழுதே சொன்னேன், நாரதரை உள்ளே விடாதீர்கள் என்று. பாருங்கள், இன்று நம் இனிமையான நேரத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கிறான்," லட்சுமி தாயார் மிகுந்த கோபத்துடன் கூறினாள்.


"இல்லை லட்சுமி, சற்றுப் பொறு. அவன் நம்மிடம் புதிதாக வந்த ஒரு விஷயத்தைக் காட்டி ஏதோ நமக்கு எதுவும் தெரியாதென்று நினைத்து வந்துள்ளான். இதனை நாம் திட்டலாமா?" பெருமாள் சமாதானப்படுத்த முயன்றார்.


"பரவாயில்லை. என்ன ஆனாலும் உங்களுக்கு என்னைத் தவிர உங்கள் அடியார்கள் தான் முதல். நான் ஏதோ தொட்டுக் கொள்வதற்குத்தான் நான் வருகிறேன். என் பிறந்த வீட்டை நோக்கிப் போகிறேன்," என்றாள் தாயார், கண்ணீர் பொங்க.


தாயார் மிகுந்த கோபத்துடன் தன் பெட்டி படுக்கைகளை எடுத்துக் கொண்டு, அவளின் பிறந்த வீடான திருப்பாற்கடலுக்குச் சென்றுவிட்டாள். அவள் செல்லும்போது, வைகுண்டத்தின் ஒளியே சற்று மங்கியது போல் தோன்றியது.


"நாரதா, நீ வந்த வேலை முடிந்ததா? இதற்குத்தானே ஆசைப்பட்டாய், நாரதா?" பெருமாள் சற்று வருத்தத்துடன் கேட்டார்.


"ஸ்வாமி, இல்லை, இல்லை! தாயார் இவ்வாறு கோபித்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கவில்லை. மன்னிக்கவும்," என்றார் நாரதர், உண்மையான வருத்தத்துடன்.


பெருமாள் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினார். சற்று நேரம் கழித்து, "நாரதா, இந்த ஸ்மார்ட்போன் என்பது மனிதர்களை எவ்வளவு எளிதில் பிரிக்கிறது பார்த்தாயா? எங்கள் இடையே கூட பிளவை ஏற்படுத்திவிட்டது. மனிதர்கள் இந்த சிறிய கருவியில் இவ்வளவு மயங்குவது எப்படி?" என்று கேட்டார்.


"ஸ்வாமி, அதுதான் இதன் மாயை. இது மனிதர்களை ஒன்றிணைக்கவும் செய்கிறது, பிரிக்கவும் செய்கிறது. அவர்கள் உண்மையான உறவுகளை மறந்து, இந்த சிறிய பொருளில் காட்டப்படும் போலி உலகில் வாழ்கிறார்கள்," என்றார் நாரதர்.


"சரி நாரதா, இனி நீ இந்த ஸ்மார்ட்போனை எடுத்துக்கொண்டு செல். நான் தாயாரை சமாதானப்படுத்த வேண்டும். உனக்கு நன்றி, ஒரு புதிய அனுபவத்தைத் தந்ததற்கு. ஆனால் எப்போதும் போல, அது ஒரு சிக்கலையும் உருவாக்கிவிட்டது," என்று பெருமாள் புன்னகைத்தார்.


நாரதர் தலை குனிந்து வணங்கி, தன் ஸ்மார்ட்போனை எடுத்துக்கொண்டு மெதுவாக வெளியேறினார். பின்னால் பெருமாள் தன் சக்கரத்தையும் சங்கத்தையும் எடுத்துக்கொண்டு, தாயாரை சமாதானப்படுத்த திருப்பாற்கடலை நோக்கிச் சென்றார்.


நாரதர் வெளியேறும் வழியில், "நாராயண நாராயண, பூலோக மனிதர்களுக்கு ஸ்மார்ட்போனால் வரும் சிக்கல்கள் எல்லாம் இப்படித்தான் இருக்கும் போல!" என்று சிந்தித்தார், தன் ஸ்மார்ட் போனில் தம்புராவை மீட்டியபடி, கைலாயத்தை நோக்கிப் பயணமானார்.


(யார் மனதையும் புன்படுத்தும் எண்ணம் எதுவுமில்லை)

வாசனை அறியா நாட்கள் (Days Without Scent) - எஸ்.பாலாஜி


இருளில் பாய்ந்து வந்த தெரு நாய் சட்டென வண்டியின் முன் குறுக்கிட்டது. ஆக்ஸை இறுக்கிப் பிடித்த விநோத் பதற்றத்துடன் திருப்ப முயன்றான், ஆனால் நேரம் தாமதமாகிவிட்டது. வேகமாக விரைந்துகொண்டிருந்த வண்டி திடீரென குறுக்கே வந்த நாயினால் பேலன்ஸ் செய்ய முடியாமல் சாலையோரத்து மரத்தில் மோதியது. 

"ஐயோ!" என்ற கூக்குரல் அவன் வாயிலிருந்து வெளிப்பட்டது.

சத்தம், இருள், சுழற்சி, வலி... அடுத்த நினைவு வந்தபோது அவன் மருத்துவமனை படுக்கையில் இருந்தான். மங்கலான வெளிச்சம் அவன் கண்களைக் குத்தியது. மயக்கமும் குழப்பமும் அவனை ஆட்கொண்டன.

விநோத், வயது 27. ஒரு சாஃப்ட்வேர் என்ஜினியர், எதிர்காலத்தைப் பற்றிய கனவுகளுடன் வாழ்ந்து கொண்டு வருவபவன். பெங்களூரில் ஒரு பெரிய ஐ.டி.  நிறுவனத்தில் வேலை செய்யும் அவன், தன் நண்பர்களுடன் வீக் எண்டுக்கு ஊட்டி செல்லும் வழியில்தான் இந்த விபத்து நேர்ந்தது.

"காலைல மழை பெஞ்சதால எல்லாரும் ஒரு நாள் லேட்டா வரோம்னு சொன்னாங்க. ஆனா நான் மட்டும் முன்னாடியே கிளம்பிட்டேன்... தப்புப் பன்னிட்டேன்.. தனிமையில் ஒரு ட்ரைவ் பன்னலாம்னு நினைத்தால் என்னவெல்லாமோ நடக்குது. இனிமே தனியா எங்கேயும் போக மாட்டேன்," விநோத் தனக்குள் முணுமுணுத்தான்.

கண் விழித்துப் பார்த்ததும் முகத்தில் ஒரு கட்டு, கையில் இரண்டு கட்டு, உடலெல்லாம் அங்கங்கே சிராய்ப்புகள் என்று பார்க்கவே பாவமாகத் தான் இருந்தான். அந்த நேரத்தில், ஒரு மருத்துவர் அவன் அறைக்குள் நுழைந்தார். நடுத்தர வயதுடைய அவர் கரிசனமான பார்வையுடன் விநோத்தை நோக்கினார்.

"நல்ல வேளை, தம்பி. பெரிய ஆபத்திலிருந்து தப்பிச்சுட்டீங்க," டாக்டர் அவனருகே வந்து சொன்னார்.

"என்னாச்சு டாக்டர்?" விநோத் பதற்றத்துடன் கேட்டான்.

மருத்துவர் அவனது ரிக்கார்டைப் பார்த்தபடி, "உங்களுக்கு மூக்குல சில நரம்பு உடைஞ்சிருக்கு, தலையில சின்ன அடி, உங்கள் மண்டையோட்டின் அடிப்பகுதியில் உள்ள சென்ஸ்க்கான நரம்பு கொஞ்சம் மேமேஜ் ஆயிருக்கு. ஆனா கவலைப்படாதீங்க, எல்லாம் சரியாகிடும். நல்லவேளை ஹெல்மெட் போட்டிருந்ததால தலைக்கு பெரிசா ஏதும் அடிபடல" 

விநோத் கவலையுடன் பெருமூச்சு விட்டான். ஆனால் மருத்துவரின் முகத்தில் ஏதோ கவலை தெரிந்தது.

"ஆனா... இதுல ஒரு சின்ன சிக்கல் இருக்கு," மருத்துவர் தயக்கத்துடன் சொன்னார்.

"என்ன ஆச்சு டாக்டர்?" விநோத்தின் குரலில் பதற்றம் தெரிந்தது.

"உங்களுக்கு அனோஸ்மியா (anosmia) ஏற்பட்டுள்ளது," மருத்துவர் மெதுவாகச் சொன்னார். 

"மூக்கின் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக ஸ்மெல்லிங் திறனை நீங்கள் இழந்துவிட்டீர்கள்."

"என்ன சொல்றீங்க டாக்டர்?" விநோத் அதிர்ச்சியுடன் நம்ப முடியாமல் கேட்டான்.

"ஆமாம், முன்ன கொரோனா வந்தப்போ அதோட சிம்ப்டமா இந்த பிராப்ளமும் சேர்த்து வருமே..." மருத்துவர் விளக்கத் தொடங்கினார்.

"ஆனா அது கொஞ்ச நாளைக்கு அதாவது கொரோனா போனவுடன் சரியாயிடும் ஆனா இது... எவ்வளவு நாள் இருக்கும்?" விநோத் சந்தேகத்துடன் குறுக்கிட்டான்.

மருத்துவர் அவனைப் பார்த்து கருணையுடன் புன்னகைத்தார். 

"கொஞ்சம் கஷ்டம் தான். காலத்துக்கும் இப்படித்தான் இருக்கும். சிலருக்கு நாளடைவில் திரும்ப வரலாம். ஆனால் உங்க கேஸில் மூக்கின் ஆல் ஃபாக்டரி நரம்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன."

அந்த வார்த்தைகளை விநோத் உள்வாங்கிக்கொண்டிருந்தபோது, அவற்றின் முழு தாக்கத்தை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவன் மெதுவாக தன் மூக்கைத் தொட்டுப் பார்த்தான்.

“என்னால எதையும் ஸ்மெல் பன்ன முடியாதா? எப்போதுமே?" அவன் குரல் நடுங்கியது.

"நாங்க என்ன செய்ய முடியுமோ செய்யறோம். தெரபி, மாத்திரைகள்  எல்லாம் தரோம். ஆனால் எதுக்கும் நீங்க பிரிப்பேரா இருங்க," மருத்துவர் அவன் தோளைத் தட்டிவிட்டு வெளியேறினார்.

அறையில் தனியாக விடப்பட்ட விநோத் சுற்றிலும் பார்த்தான். இரண்டு மூன்று நாட்களுக்குப் பின், அவன் வீட்டிற்குத் திரும்பலாம் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். 

உடன் அம்மாவுக்கு போன் செய்தான். கூட சில நண்பர்களுக்கும் கால் செய்து நடந்ததை சொன்னான். 

முதல் சில நாட்கள் விநோத்திற்கு சற்று விசித்திரமாக இருந்தது, ஆனால் பெரிய பிரச்சனை என்று தோன்றவில்லை.

"பரவாயில்லை, ஸ்மெல் பன்ன முடியாவிட்டால் என்ன? பார்க்க முடிகிறது, கேட்க முடிகிறது, சுவைக்க முடிகிறது," என்று அவன் தனக்குத்தானே சொல்லிக்கொண்டான் மருத்துவமனையில் இருந்தபோது.

பக்கத்து படுக்கையில் இருந்த நோயாளி  ராஜன், அவனிடம் பேசினார். "நான் ஒரு வருஷத்துக்கு முன்னாடி இதே மாதிரி ஒரு விபத்துல காது கேட்கும் திறனை இழந்துட்டேன். முதல்ல ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. ஆனா இப்போ காதுக்கு மெஷின் போட்டு பழகிட்டேன். அதனால பயப்படாத தம்பி நீயும் பழகிக்குவே."

"எப்படி சார் பழகினீங்க?" விநோத் ஆர்வத்துடன் கேட்டான்.

"நமக்கு ஒரு திறமை போனா, இன்னொரு திறமை வளரும். கவனமா பாருப்பா," ராஜன் புன்னகைத்தார்.

ஆனால் வீட்டிற்குத் திரும்பிய பின் தான், அவன் வாழ்க்கை எவ்வளவு மாறப்போகிறது என்பதை கொஞ்சம் கொஞ்சமாக உணரத் தொடங்கினான்.

மூன்று நாட்கள் போன பிறகு வீட்டுக்கு டிஸ்சார்ஜ் ஆனான். அம்மா ஆரத்தித் தட்டுடன் வீட்டிற்கு வரவேற்றாள். அந்த நாள் முழுவதுமாக ஓய்வு எடுத்து கொண்டான். 

மறுநாள் காலையில் அம்மா உற்சாகமாக சத்தமிட்டார்: "விநோத், எழுந்திரு! உனக்குப் பிடிச்ச இட்லி-சாம்பார் செஞ்சிருக்கேன்!"

"இதோ அம்மா, நான் வரேன்," என்றபடி பாத்ரூமுக்குச் சென்றான் விநோத். இயல்பாக காலையில் இருக்கும் ஷேவிங் க்ரீம், சோப், டூத்பேஸ்ட் - எதையும் இவனால ஸ்மெல் பன்ன முடியவில்லை. கண்ணாடியில் தன் பிம்பத்தைப் பார்த்தான்.

"சரி, இதுதான் புது வாழ்க்கை," என்று முணுமுணுத்தான்.

சாப்பிட உட்கார்ந்தபோது, தனக்கு மிகவும் பிடித்த உணவை ஸ்மெல் பன்ன  முடியாதது அவனை வேதனைக்குள்ளாக்கியது. அம்மா செய்த இட்லியும் அதோட சாம்பாரின் மணத்தையும் அவனால் உணர முடியவில்லை. ஆனால் சாப்பிடத் தொடங்கியதும், இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது.

"அம்மா, சாம்பார் ஏதோ வித்தியாசமா இருக்கு,” என்றான் விநோத், சிறிது சாப்பிட்டு விட்டு.

"எப்போதும் போலத்தான் செஞ்சிருக்கேன், ஒன்னும் மாத்தலடா,” அம்மா குழப்பத்துடன் பதிலளித்தார்.

"இல்ல அம்மா, சுவையே வேற மாதிரி இருக்கு, எனக்கு ஸ்மெல் தான் பன்ன முடியாதுன்னு சொன்னார் டாக்டர் ஆனா..." விநோத் தன் தட்டைப் பார்த்தபடி சொன்னான்.

அப்பா, பத்திரிகையிலிருந்து தலையை நிமிர்த்தினார். "டாக்டர் சொன்னார் இல்லையா, விநோத்? வாசனை உணர முடியாதபோது, சுவையும் பாதிக்கப்படும்னு. உணவின் சுவையில் 80 சதவீதம் அதன் மணத்தால் தான் வருகிறது."

விநோத்துக்கு அப்போதுதான் புரிந்தது. "ஓ... அப்படியா? அப்போ என்னால சுவைக்கவும் முடியாதா” அவன் அதிர்ச்சியுடன் கேட்டான்.

"சரி, சரி... விடு இதப்பத்தி பெரிசா நினைக்காத நீ எங்ககூட இருக்கறதே பெருசா நினைக்கிறோம்” அம்மா கண்கள் குளமாகி தன் முந்தானையால் கண்களை துடைத்துக் கொண்டு அவன் தோளைத் தட்டிக்கொடுத்தார். 

"உனக்குப் பிடிச்ச சாப்பாடெல்லாம் செய்யறேன். கொஞ்சம் கொஞ்சமா பழகிக்கலாம்."

அன்று முழுவதும் விநோத் தன் வீட்டைச் சுற்றி நடந்து, எதை ஸ்மெல் பன்ன முடியும், எதை முடியாது என்று சோதித்துப் பார்த்தான். 

அவன் விரும்பிய ஸ்ட்ராங் காபியின் வாசனை, வீட்டுத் தோட்டத்து மல்லிகைப் பூவின் மணம், அம்மா பயன்படுத்தும் கற்பூரம், அப்பாவின் அத்தர் பர்ஃப்யூம் - எதுவுமே அவனுக்கு தெரியவில்லை. உலகம் திடீரென்று வாசனையை இழந்ததைப் போல இருந்தது. சில சமயங்களில் மிகக் கவலையோடு அமர்ந்திருப்பான் பின் அம்மாவை நினைத்து கண்களை துடைத்துக்கொண்டு ஒன்றும் பாதிக்காதவனைப் போல் நடிப்பான்.

வாரங்கள் கடந்தன. விநோத் மீண்டும் அலுவலகத்திற்குச் செல்லத் தொடங்கினான். முதல் நாள், அவனுடைய நெருங்கிய நண்பன் கார்த்திக் அவனைப் பார்த்ததும் ஓடி வந்தான்.

"டேய், என்னடா ஆச்சு? இப்ப எப்படிடா இருக்கு பரவாயில்லையா வலியெதுவும் இல்லையே? கார்த்திக் கேள்விகளை அடுக்கினான்.

விநோத் தயங்கினான். "எல்லாம் சரிதான். ஆனா... என்னால இனிமே எதையும் ஸ்மெல் பண்ண முடியாது."

"என்னடா சொல்ற?" கார்த்திக் நம்ப முடியாமல் கேட்டான்.

"ஆமாம்டா. அனோஸ்மியா. வாசனையை உணர முடியாத நிலை. எப்போதும் இப்படித்தான் இருக்குமாம்," விநோத் துக்கத்துடன் சொன்னான்.

"அட கடவுளே! அப்படின்னா நீ நம்ம ஆபிஸ் நாத்தத்தை உணர முடியாதா?" கார்த்திக் சிரித்தபடி கேட்டான், சூழலை இலகுவாக்க முயற்சி செய்து.

விநோத் புன்னகைத்தான். "ஒரு வகையில நல்லதுதான்டா. எதுவுமே தெரியாது, நம்ம பிரியாவுடைய வியர்வை நாத்தம் கூட தெரியாது”

இருவரும் சிரித்தனர். ஆனால் அந்தச் சிரிப்புக்குப் பின்னால் விநோத்தின் வலி மறைந்திருந்தது.

அலுவலகத்தில் சக ஊழியர்கள் நெருக்கமாக வந்து பேசும்போது அவர்களின் நறுமணம், உடல் நாற்றம் எதையும் உணர முடியாமல் இருந்தது. அந்த அனுபவம் விநோத்தை சமூக உறவுகளிலிருந்து தனிமைப்படுத்தியது. சிலர் நல்ல பெர்ஃப்யூம் அடித்திருப்பார்கள், சிலர் வியர்வை நாற்றத்துடன் இருப்பார்கள் - ஆனால் அவனுக்கு எல்லோரும் ஒரே மாதிரிதான்.

"இப்போ எனக்கு ஆபீஸ் கேன்டீன் ஸ்பெஷல் வடை சாப்பிட்டாலும், விலையுயர்ந்த ரெஸ்டாரண்ட்ல சாப்பிட்டாலும் ஒரே சுவை தான்," அவன் கார்த்திக்கிடம் புலம்பினான்.

"ஈஸியா எடைய குறைக்கலாம் போலருக்கே," கார்த்திக் கிண்டலாகச் சொன்னான்.

விநோத் வலிமையாகச் சிரித்தான், ஆனால் உள்ளுக்குள் அழுதான்.

நாட்கள் சென்றன, அலுவலகத்தில் அன்று நடந்த சம்பவம் அவனுக்கு அதிர்ச்சியளித்தது. மதிய உணவு நேரத்தில், அவனுடைய டீம் லீடர் விஜய் கேட்டார்:

"விநோத், என்ன சாப்பிடற சான்ட்விச்சா? எனக்கு கெட்டுப்போனா மாதிரித் தெரியுது.”

விநோத் குழப்பத்துடன் சான்ட்விச்சைப் பார்த்தான். அதன் காலாவதி தேதியைப் பார்க்க முயன்றான், ஆனால் அது தெளிவாகத் தெரியவில்லை.

"எனக்குத் தெரியவில்லை, சார்... என்னால எதையும் ஸ்மெல் பன்ன முடியாது" அவன் வெட்கத்துடன் சொன்னான்.

“ஐயையோ இப்ப ஆக்சிடென்ட் ஆச்சே அதனாலயா?” விஜய் கவலையுடன் கேட்டார்.

“ஆமாம் சார்” விநோத் பெருமூச்சு விட்டான். "நான் இப்ப எல்லாத்தையும் வெறும் பார்வையால மட்டும் தான் அறிய முடியும்."

“பாத்துக்கோ விநோத், எதையும் ஒருவாட்டி எக்ஸ்பையரி டேட் பாத்து சாப்பிடு“ விஜய் விநோத்தின் தோளினைத் தட்டி “எதுவும் பன்ன முடியாதாமா ஏதாவது ஆபரேஷன் அந்த மாதிரி“ என்றார்.

“இல்லை சார், டாக்டர்கிட்ட கேட்டேன் சில பேருக்கு நாளடைவில சரியாயிடுமாம் சிலருக்கு இல்லையாம்“ கவலையுடன் சொன்னான்.

“எதுக்கும் செகன்ட் ஒப்பினியன் பாரேன்“ விஜய் உற்சாகத்துடன்.

“ஓ கே சார், அதான் கார்த்திக்கும் சொன்னான், நாளைக்கு இன்னொரு ஹாஸ்பிடல் போகலாம்னு இருக்கோம்“ விநோத் தெனிவுடன்.

“டேக் கேர் விநோத், இங்க ஆபிஸ் பிராஜெக்ட் பத்திலாம் கவலைப்படாதே நான் பாத்துக்கறேன், நீ பர்ஸ்ட்டு உன் உடம்ப பாத்துக்கோ“ விஜய் கையசைத்து அந்த இடத்திலிருந்து சென்றவுடன் கார்த்திக் விநோத்திடம் ஓடிவந்து “டேய் முட்டை போண்டா  என்னடா சொன்னான்“ என்று சிரித்துக்கொண்டே.

“நல்லவருடா மச்சான் அப்படிலாம் சொல்லாத“ விநோத் கார்த்திக்கை தட்டியபடியே…

“நாளைக்கு ஜே.பி. நகரில ஒரு ஹாஸ்பிடல் போலாம்டா, செகண்ட் ஒப்பினியன் கேட்போம் காலைல லீவு சொல்லிடு“ என் கார்த்திக்கிடம் விநோத் சொன்ன மறுநிமிடம் “எதுக்குடா ஆஃப் டே ஃபுல் டே லீவு போட்டு எங்கயாவது சுத்துவோம்டா“

“மச்சான் இல்லைடா ஹாஸ்பிடல் போயிட்டு வந்திருவோம் ஏன்னா லீவு கொஞ்சம் வச்சுக்கனும்டா எப்ப என்ன நடக்கும்னே தெரிய மாட்டேங்குது“ விநோத் சொல்ல கார்த்திக் ஆமோதிப்பது போல் தலையை ஆட்டினான்.

மறுநாள் ஹாஸ்பிடல் போய் அதே கருத்தை இந்த டாக்டரும் சொல்ல விநோத் கொஞ்சம் தயங்கினான். சரி தெய்வம் விட்ட வழி என்று ஆபிசுக்கு அவனும் கார்த்திக்கும் சோகமாகத் திரும்பினர். டீம் லீடர் விஜயிடம் சென்று நடந்ததை கூறினார்கள் விஜய் விநோத்தை தைரியபடுத்தி “விநோத் கடவுள் நம்ம கிட்டேருந்து ஒன்ன பறிச்சா இன்னொன்னு நல்லதா கொடுப்பான் நீ கவலைப்படாம உனக்கு எது சரினு படுதோ அதுப்படியே நடந்துக்க இங்க உனக்கு புல் சப்போர்ட் நான் தரேன் உன்னால ஏதாவது வொர்க் பன்ன முடியலையா சொல்லு நான் வேற யாரையாவது வெச்சு முடிச்சிடுறேன். ஆனா இந்த விஷயத்திற்காக மனசு உடைஞ்சிடாதே“ என்று தைரியப் படுத்தினார். கார்த்திக் விஜயை பார்த்தவாறு கண்கள் கலங்கினான்.

நாட்கள் சென்ற ஒரு நாள் ரூமில் நடந்த சம்பவம் அவனை அதிகமாக யோசிக்க வைத்தது.

அன்று காலையில் அவன் சமையலறையில் நுழைந்து தோசை ஊற்றி முடித்து பின் காஸ் அடுப்பை அனைக்காமல் ஹாலில் சென்று சாப்பிட்டு உட்கார்ந்திருந்தான். மறந்திருந்தான். எதேச்சையாக அவன் நண்பன் முரளி அங்கு வந்தான்.

"டேய், காஸ் லீக் ஆகுது உனக்குத் தெரியலயாடா?” முரளி பதற்றத்துடன் கத்தினான்.

அடுப்பில் இருந்து காஸ் கசிந்து கொண்டிருந்தது, ஆனால் விநோத் அதை உணரவில்லை. காஸ் ஸ்மெல் சுத்தமாக அவன் உணர முடியவில்லை!

"சாரிடா, எனக்கு தெரியலீயேடா," விநோத் திகைப்புடன் சொன்னான்.

"இது ரொம்ப ஆபத்து விநோத்! இனிமே கவனமா இரு" முரளி எச்சரித்தான், உடன் கதவு, ஜன்னல்களைத் திறந்து விட்டு.

அன்றுதான் விநோத்துக்கு புரிந்தது - மணம் என்பது ஒரு பாதுகாப்பு கருவியும் கூட. அது உணவு கெட்டுப்போனதை, ஆபத்தான வாயுக்கள் கசிவதை, தீ ஏற்படுவதை அறிய உதவுகிறது.

"இன்னிக்கு எவ்வளவு பெரிய விஷயம் நடந்திருக்கு இனி எப்படி உயிர் வாழப்போறேன்?" அவன் அன்றிரவு படுக்கையில் கிடந்து யோசித்தான்.

அடுத்த நாள், விநோத் பல காஸ் லீக் கண்டறியும் சாதனங்களை கேஸ் கடையில் கேட்டு வாங்கினான். அவற்றை தனது சமையலறையிலும் அடுப்பு அருகிலும் நிறுவினான். அவன் சமைக்கும் போதெல்லாம் அடுப்பை அணைப்பதை நினைவூட்ட டைமர்களை அமைக்கத் தொடங்கினான்.

"என் மூக்கு எனக்காக செய்தவற்றை மாற்றிட புதிய அமைப்புகளை நான் உருவாக்க வேண்டும்," என்று கார்த்திக்கிடம் கூறினான்.

மாதங்கள் கடந்தன. விநோத் புதிய வாழ்க்கைக்குப் பழகிக்கொண்டிருந்தான், ஆனால் அவனுடைய மனம் மரத்துப்போனது போல் உணர்ந்தான். கவிதை, சினிமா, உணவு - எல்லாவற்றிலும் ஏதோ ஒன்று குறைவாக இருப்பதாக உணர்ந்தான்.

அடிக்கடி அவன் தனக்கு பிடித்த கவிதைப் புத்தகங்களைப் படிப்பான். ஒரு கவிதையில் ரோஜாப்பூவின் மணம் பற்றிய வரிகள் இருந்தன. அவன் தன் தோட்டத்தில் இருந்த ரோஜாவைப் பறித்து, மூக்கருகே கொண்டு சென்றான். எதுவுமில்லை. வெறுமை.

"எனக்கு இனி கவிதைகளின் அழகை முழுமையாக உணர முடியாதா?" அவன் வருந்தினான்.

பிரகாஷ்ராஜின் உன் சமையறையில் திரைப்படம் பார்க்கும்போது உணவுகளின் மணத்தை உணர்ந்து ஆனந்தப்படும் காட்சிகள் வரும்போதெல்லாம், அவனுக்கு பொறாமையாக இருந்தது. 

"எத்தனை விஷயங்களை நான் இழந்துவிட்டேன்?"

ஒருநாள், அவன் மருத்துவமனைக்கு ஃபாலோ-அப் பரிசோதனைக்காகச் சென்றான். அங்கே, அவனுக்கு ஏற்பட்ட வேதனையை மீண்டும் அளவிட்டுப் பார்க்க ஒரு ஆல்ஃபாக்டரி டெஸ்ட் நடத்தப்பட்டது.

"ஸ்மெல் ஏதாவது தெரிகிறதா?" மருத்துவர் பல மாதிரிகளை அவனிடம் காட்டினார்.

"இல்லை டாக்டர், எதுவும் தெரியவில்லை," விநோத் சோர்வுடன் சொன்னான்.

"பரவாயில்லை, டோன்ட் கிவ் அப். சில நேரங்களில் இந்த நிலை மாறலாம்," மருத்துவர் ஆறுதல் சொன்னார்.

அப்போது ஒரு இளவயதுப் பெண் அறைக்குள் வந்தாள்.

"டாக்டர், இந்த டெஸ்ட் ரிசல்ட்ஸ்," என்று சில பேப்பர்களைக் கொடுத்தாள்.

"தேங்க் யூ, தீபா," என்றார் டாக்டர்.

தீபா. அவள் பெயர் தீபா. ஏதோ ஒரு காரணத்தால், விநோத் அந்த பெயரைக் கவனித்தான். அவள் புன்னகையும் அவனை ஈர்த்தது. டாக்டர் சென்ற பிறகு, அவள் அறையில் தனியாக இருந்த விநோத்தைப் பார்த்து சிரித்தாள்.

"நீங்க அனோஸ்மியா கேஸா?" தீபா கேட்டாள், அவனுடைய ரிகார்டுகளைப் பார்த்தபடி.

"ஆமாம்," விநோத் சுருக்கமாகப் பதிலளித்தான்.

"என் அக்காவுக்கும் இதே பிரச்சனை இருந்தது. ஆக்சிடென்ட்டுக்குப் பிறகு," தீபா சொன்னாள்.

விநோத் ஆர்வத்துடன் எழுந்து உட்கார்ந்தான். "உண்மையாவா? இப்ப எப்படி இருக்காங்க?"

"முதல்ல அவங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. ஆனா இப்போ ஓரளவுக்கு சரியாகிடுச்சு," தீபா சொன்னாள். "ஆனா அதுக்கு ரெண்டு வருஷம் ஆச்சு."

"அப்படின்னா எனக்கும் திரும்ப வருமா?" விநோத் நம்பிக்கையுடன் கேட்டான்.

தீபா தயக்கத்துடன் புன்னகைத்தாள். "ஒவ்வொருவருக்கும் வித்தியாசமா இருக்கும். சிலருக்கு முழுசா திரும்ப வரும், சிலருக்கு கொஞ்சம் கொஞ்சமா, சிலருக்கு..." அவள் வார்த்தைகளை முடிக்கவில்லை.

"சிலருக்கு வராது," விநோத் முடித்துக் கொண்டான், அவள் சொல்ல வந்ததை புரிந்து கொண்டு.

"ஆனா நான் ஒன்னு சொல்றேன்," தீபா அவன் அருகில் வந்து உட்கார்ந்தாள். “உங்களால ஸ்மெல் பன்ன முடியாவிட்டாலும், வாழ்க்கையின் மற்ற அனுபவங்களை நீங்க முழுமையாக உணரலாம். உங்க மற்ற சென்ஸ்களைக் கூர்மையாக்க முயற்சி செய்யுங்க."

விநோத் குழப்பத்துடன் அவளைப் பார்த்தான். "எப்படி?"

"உதாரணமாக, நீங்க சாப்பிடும்போது... வாசனை இல்லாமல் சுவை குறைவா இருக்குமே?"

"ஆமாம், எல்லாமே ஜீரோவா இருக்கு," விநோத் ஒப்புக் கொண்டான்.

"அப்போ நீங்க உணவோட டெக்ஸ்சரை கவனியுங்க. கரகரப்பா இருக்கா, மெத்துன்னு இருக்கா, நார்ச்சத்து உள்ளதா, எண்ணெய் கலந்ததா. நிறத்தைக் கவனியுங்க. வெப்பநிலையைக் கவனியுங்க," தீபா விளக்கினாள். "இசை கேட்கும்போது, கூடுதல் கவனம் செலுத்துங்க. ஒவ்வொரு வாத்தியத்தையும் தனித்தனியா கேட்க முயற்சி செய்யுங்க."

விநோத் அவள் சொன்னதை ஆழமாக யோசித்தான். "அப்படியா... அப்ப நான் இதை முயற்சி செய்யலாம்."

தீபா அவனுடைய கைப்பேசி எண்ணைக் கேட்டு வாங்கிக் கொண்டாள். "எனக்கு இந்த விஷயத்தில அனுபவம் இருக்கு. நீங்க எப்ப வேணும்னாலும் என்னை அழைக்கலாம்."

அன்று மாலை, விநோத் வீட்டிற்குத் திரும்பியபோது, தன்னுடைய சாப்பாட்டுத் தட்டை முன்பை விட கவனமாகப் பார்த்தான். சாதம், சாம்பார், காய்கறி கூட்டு - ஒவ்வொரு உணவின் நிறம், அமைப்பு, ஒன்றுடன் ஒன்று சேரும்போது எப்படி இருக்கின்றன என்பதை அவன் கவனித்தான்.

ஒரு வாரம் போனது, விநோத் அம்மாவை பார்க்க அவர்கள் வீட்டிற்கு போனான். வழக்கம்போல் அம்மாவும் அப்பாவும் அவனை வரவேற்று கட்டியணைத்தனர். “வாப்பா கண்ணு இப்ப எப்படிடா கண்ணு இருக்க" வாஞ்சையுடன் அவனின் முகவாயை பிடித்துக் கொண்டு அம்மா விசாரிக்க அவன் கண்கள் குளமாகின. “அம்மா இப்ப கொஞ்சம் பரவாயில்ல இரண்டு நாள் ஆபிஸ் லீவு அதான் புறப்பட்டு வந்துட்டேன், ரொம்ப பசிக்குதும்மா என்ன செஞ்சிருக்க சாப்பிட" கேட்ட அடுத்த நொடி “என்ன மன்னிசுடுடா கண்ணு சாப்பிட்டியான்னு கேட்கல இந்த சிறுக்கி, நீ போய் கை காலு கழுவிட்டு வா உடனே உனக்கு புடிச்சத செஞ்சுடுறேன் இந்த அம்மா" 

உடனே அவன் குளித்து விட்டு வருவதற்குள் அவனுக்கு பிடித்த முருங்கைக்காய் சாம்பார் கத்திரிக்காய் மசாலா செய்து தயாராய் இருந்தாள் அம்மா.

"இந்த சாம்பார் கொஞ்சம் கெட்டியா இருக்கு. அதிகமா வேக வச்சிருக்கீங்க போல," அவன் அம்மாவிடம் சொன்னான்.

அம்மா ஆச்சரியப்பட்டாள். "ஆமாம்டா கண்ணு, இன்னைக்கு கொஞ்சம் அதிக நேரம் வேக வச்சேன். உனக்கு எப்படித் தெரிஞ்சது?"

விநோத் சிரித்தான். “அம்மா இப்ப என்னால ஸ்மெல் பன்ன முடியலனாலும் மற்றத கவனிக்க ஆரம்பிச்சுட்டேன்."

அம்மா மிகவும் ஆனந்தப் பட்டாள் தன் மகன் மறுபடியும் சந்தோஷமாய் சாப்பிடுவதைக் கண்டு.

அன்றிரவு, தீபாவுக்கு ஒரு மெசேஜ் அனுப்பினான்: "உங்க யோசனை நல்லா இருந்தது. சாப்பாடு இன்னைக்கு கொஞ்சம் வித்தியாசமா இருந்தது நான் நல்லா சுவைச்சு சாப்பிட்டேன்.”

தீபா உடனே பதிலளித்தாள்: "👍 சந்தோஷம். இது புதிய பயணத்தின் தொடக்கம் மட்டும்தான்."

அடுத்த சில வாரங்களில், விநோத்தும் தீபாவும் அடிக்கடி பேசிக் கொண்டனர். அவள் அவனுக்கு மற்ற புலன்களை மேம்படுத்த பல குறிப்புகளைக் கொடுத்தாள். ஒரு நாள், அவள் அவனை ஒரு அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் சென்றாள்.

"இங்கே வரும்போது எனக்கு எப்பவுமே மலர்களின் நறுமணம் தெரியும். ஆனா இப்போ..." அவள் சூழலை மாற்ற வார்த்தைகளைத் தேடினாள்.

"பரவாயில்லை. சொல்லுங்க" விநோத் புன்னகைத்தான்.

"ஆனா இப்போ ஓவியங்களின் அழகை, வண்ணங்களின் ஒளியை நான் கவனிக்கிறேன்" தீபா சொன்னாள்.

அன்று அவர்கள் ஓவியங்களை ஆழமாக ரசித்தனர். காட்சிகளை விவரித்தனர். விநோத்தின் பார்வை முன்பைவிட கூர்மையாகியது.

"நான் பார்க்கும் உலகம் முன்பைவிட வேறுமாதிரி இருக்கிறது" என்று விநோத் ஒருநாள் தீபாவிடம் சொன்னான். "ஒரு சென்ஸை இழந்தாலும், மற்ற சென்ஸ்லாம் கூர்மையாகிவிட்டன. நான் இப்போ கண்ணால் பார்ப்பதை, காதால் கேட்பதை, தோலால் உணர்வதை - எல்லாவற்றையும் முன்பைவிட தீவிரமாக அனுபவிக்கிறேன்."

"பார்த்தீங்களா?" தீபா புன்னகைத்தாள். "வாழ்க்கை ஒரு சென்ஸைப் பறித்துக்கொண்டாலும், மற்றவைகளின் அழகை உணர வாய்ப்பு கொடுக்கிறது."

நாட்கள் செல்லச் செல்ல, விநோத்தும் தீபாவும் நெருங்கினர். அவர்கள் ஒன்றாகப் பூங்காக்களுக்குச் சென்றனர், திரைப்படங்கள் பார்த்தனர், கலை நிகழ்ச்சிகளுக்குச் சென்றனர்.

எல்லாவற்றையும் விட, விநோத் உணவுகளை ருசிப்பதற்கான புதிய வழிகளைக் கண்டுபிடித்தான். சுவைக்கும் மொட்டுக்களை, சுவையின் வகைகளை - இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, துவர்ப்பு - ஆகியவற்றை நுகர முடியவில்லை என்றாலும் ஆழமாக அனுபவித்தான். உணவின் வெப்பநிலை, நெருப்பில் சமைத்த சுவை, பதம் - இவற்றில் கவனம் செலுத்தினான்.

"நான் இப்போது சாப்பிடும்போது, முன்பை விட அதிக கவனத்துடன் சாப்பிடுகிறேன்," அவன் தீபாவிடம் சொன்னான். "ஒவ்வொரு கவளத்தையும் ருசிக்கிறேன், சுவைக்கிறேன். முன்பு எல்லாவற்றையும் அவசரமாக சாப்பிட்டு முடித்துவிடுவேன்."

ஓராண்டு கடந்தது. விநோத்தின் வாழ்க்கையில் ஒரு புதிய சமநிலை உருவாகியது. தன் அனுபவங்களைப் பகிர, அவன் ஒரு புத்தகத்தை எழுதத் தொடங்கினான் - "நுகர்ந்தறியா நாட்கள்." 
ஒரு புலனை இழந்த பின் வாழ்க்கையை எப்படி மீண்டும் கட்டமைப்பது என்பதைப் பற்றிய அந்தப் புத்தகம், தன்னைப் போன்று அதே நிலையில் இருப்பவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமையும் என்றே எழுதினான்.

"நாம் இழப்புகளை எதிர்கொள்ளும்போது, அதை ஒரு முடிவாகப் பார்க்காமல், ஒரு புதிய தொடக்கமாகப் பார்க்க வேண்டும்," என்று அவன் எழுதினான். "ஒரு கதவு மூடப்படும்போது, மற்றொரு கதவு திறக்கப்படுகிறது. ஆனால் அந்தக் கதவைக் காண நாம் கவனமாக இருக்க வேண்டும்."

புத்தகம் வெற்றி பெற்றது. பல வாசகர்கள் அவனுக்கு எழுதினார்கள், அவர்களும் இதே போன்ற இழப்புகளை எதிர்கொண்டதாகவும், அவனுடைய அனுபவம் அவர்களுக்கு ஆறுதலளித்ததாகவும் தெரிவித்தனர்.

அந்த ஒரு வருட காலத்தில், தீபாவும் விநோத்தும் காதலில் விழுந்தனர். அவர்கள் ஒரு சிறிய சிக்கனமான முறையில் திருமணம் செய்து கொண்டனர். 

திருமண நாளன்று, விநோத் தீபாவிடம் சொன்னான், "உன் வாசனையை என்னால் நுகர முடியாது. ஆனால் உன் குரலின் இனிமையை, உன் கைகளின் வெப்பத்தை, உன் முகத்தின் அழகை நான் உணர்கிறேன். அது எனக்குப் போதுமானது."

தீபா புன்னகைத்தாள், அவன் கன்னத்தில் மென்மையாகத் தொட்டு, "வாழ்க்கை என்பது இழப்புகளைப் பற்றியது அல்ல, இழப்புகளுக்கு மத்தியிலும் நம்மால் கண்டுபிடிக்கப்படும் புதிய அர்த்தங்களைப் பற்றியது."

விநோத்தின் வாழ்க்கை நிறைவானதாக மாறியது. அவன் மீண்டும் வாசனைகளை உணரவில்லை, ஆனால் வாழ்க்கையின் மற்ற அனுபவங்களில் இருந்து அவன் பெற்ற அர்த்தம் ஆழமானதாக இருந்தது. அவன் இழந்தது ஒரு புலன், ஆனால் பெற்றுக்கொண்டது புதிய பார்வை.

"வாழ்க்கையில் சில விஷயங்களை நாம் கட்டுப்படுத்த முடியாது," அவன் ஒரு நண்பனிடம் சொன்னான். "ஆனால் அந்த விஷயங்களுக்கு நாம் எப்படி பதிலளிக்கிறோம் என்பதை கட்டுப்படுத்த முடியும்."

இரண்டு ஆண்டுகள் கழித்து, தீபாவும் விநோத்தும் தங்கள் முதல் குழந்தையைப் பெற்றனர் - ஒரு அழகான பெண் குழந்தை. அவளுக்கு "அருந்ததி" என்று பெயரிட்டனர் - வானில் ஒளிரும் நட்சத்திரம் போல.

ஒரு நாள் காலையில், அருந்ததியை முத்தமிட குனிந்தபோது, விநோத் ஏதோ வித்தியாசத்தை உணர்ந்தான். ஒரு மென்மையான, இனிமையான... வாசனை. அது குழந்தையின் மென்மையான தலை மணமா? அவனால் நம்ப முடியவில்லை.

"தீபா!" அவன் ஆச்சரியத்துடன் அழைத்தான். "நான் ஏதோ ஸ்மெல் பன்றேன்னு நினைக்கிறேன்!"

தீபா ஓடி வந்தாள். "என்ன சொல்றீங்க?"

"குழந்தை... அவளுக்கு ஒரு ஸ்மெல் இருக்கு என்னால அத உணர முடிகிறது!” அவன் கண்களில் கண்ணீர் வழிந்தது.

"உண்மையாவா?" தீபா ஆச்சரியத்துடன் கேட்டாள். 

அடுத்த நாள் மருத்துவ பரிசோதனையில், மருத்துவர் உறுதிப்படுத்தினார்: விநோத்தின் ஸ்மெல்லிங் சென்ஸ் திறன் சிறிது சிறிதாகத் திரும்பி வருகிறது. இது முழுமையாக திரும்பி வருமா என்று கூற முடியாது, ஆனால் ஒரு நல்ல அறிகுறி.

"எப்படி இது நடந்தது?" விநோத் ஆச்சரியத்துடன் கேட்டான்.

"மூளை ஒரு அற்புதமான உறுப்பு," மருத்துவர் புன்னகைத்தார். "சில நேரங்களில் நாம் நினைப்பதை விட அது ரெகவர் ஆகிவிடும் திறன் கொண்டது. உங்கள் விஷயத்தில, குறிப்பிட்ட ஒரு ஸ்மெல்லை - உங்கள் குழந்தையின் மணத்தை - உணரும் திறன் திரும்பியுள்ளது. இது படிப்படியாக மேலும் மேம்படக்கூடும்."

தீபா விநோத்தின் கையைப் பிடித்துக் கொண்டாள், அவள் கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது. "இந்த மகிழ்ச்சியான செய்திக்கு உங்க புத்தகத்தில ஒரு கூடுதல் அத்தியாயம் எழுதணும். அத அடுத்த பதிப்புல வெளியிடனும்”

விநோத் தலையசைத்தான். "ஆமாம். ஆனால் எல்லா மணங்களும் திரும்பி வந்தாலும், வராவிட்டாலும், இந்த அனுபவம் என்னை ஒரு புதிய மனிதனாக மாற்றியிருக்கிறது. உலகத்தைப் பார்க்கும் என் பார்வையை மாற்றியிருக்கிறது."

ஒவ்வொரு காலையிலும் எழும்போது, விநோத் தன் மகளை மூக்கருகே கொண்டு சென்று, அவளது மணத்தை ஆழமாக உள்ளிழுப்பான். நாளுக்கு நாள், அவனால் புதிய மணங்களை உணர முடிந்தது - காப்பியின் வாசனை, மழைக்குப் பின் மண்ணின் வாசனை, தீபாவின் கூந்தலின் வாசனை.

புதிய வாசனைகளை உணரும் ஒவ்வொரு முறையும், அவன் ஒரு புதிய உலகத்தைக் கண்டுபிடிப்பது போல உணர்ந்தான். ஆனால் இழப்பு அவனுக்குப் போதித்த பாடங்களை அவன் ஒருபோதும் மறக்கவில்லை.

"சில நேரங்களில் நாம் வாழ்க்கையில் ஏதாவது இழக்கும்போது தான், நம்மிடம் இருப்பவற்றின் மதிப்பை உணர்கிறோம்," அவன் தன் புத்தகத்தின் இறுதி பக்கத்தில் எழுதினான். "ஆனால் இழப்புகளுக்கு மத்தியிலும், நாம் புதிய அர்த்தங்களைக் கண்டுபிடிக்கலாம் - ஒரு புதிய வாழ்க்கையைக் கட்டமைக்கலாம், ஒரு புதிய பார்வையைக் கண்டெடுக்கலாம், புதிய அழகுகளை அனுபவிக்கலாம். இதுதான் மனித அனுபவத்தின் அழகு."

மந்து - வெள் உவன்

அந்த முற்றிய காலைக்கும் துளிர்க்கும் மதியத்திற்கும் இடையேயான வேளை அழுத்தமான இருட்டை கொண்டிருந்ததால் கங்குல் வேளையின் தோற்றத்தைப் பெற்றிருந்தது. கத்தும் கடலின் மொத்த நீரையும் உறிஞ்சிக் குடித்தது போல், சூலிப் பெண்ணின் வயிறாய் பருத்து கருத்து நகர்ந்து கொண்டிருந்த கார்மேகங்களின் கைங்கரியம்தான் இந்த அகால இருட்டு. அழுத்தமான இறுக்கமான இந்த பொழுது மிக எளிமையாக மழையைக் கொண்டுவந்து கொண்டிருக்கிறது. பஞ்சுத் துகள்கள் போலல்லாமல் கல்மழை போல் நீர் மழை கனத்து பொழியத் தொடங்கியது.


சாலையில் சென்று கொண்டிருந்த மக்களை பதட்டமடைய வைத்த மழை பதுங்கு குழியைத் தேட வைத்தது. பேருந்து நிறுத்த நிழற்குடை, அடர்ந்த மரத்தடி, திறந்திருந்த கடைகளின் முன் சாய்வு என்று மக்கள் தஞ்சம் புகுந்தனர். பகட்டாக ஒளிர்ந்து கொண்டிருந்த அந்த உணவு விடுதியின் உள்ளேயும் மழையிலிருந்துத் தப்பிக்க சிலர் நுழைந்தனர்.


அந்த உணவு விடுதியில்தான் நாராயணன், தன் மனைவி தமிழ்ச்செல்வி மற்றும் மகள் வெண்மதியுடன், அந்த மேசையின் முன் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தார். ‘என்ன சாப்பிடுறீங்க’ என்று இரண்டு முறை கேட்ட சர்வர், ‘கொஞ்சம் இருப்பா நண்பர் வரணும் வரட்டும்’ என்ற நாராயணனின் பதிலில் நகர்ந்து சென்றார்.


நட்சத்திர ஓட்டலின் ஆடம்பரமும் நடைபாதை ஓரத்துத் தட்டுக்கடைப் பதார்த்தத்தின் இனிய மணமும் கலந்தது போன்றதொரு விசித்திரக் கலவையில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது அந்த உணவு விடுதி. கல்லாவுக்குப் பின்னே ஆரஞ்சு வண்ண சுவற்றில் அஞ்சுக்கு மூன்று அளவில் திருப்பதி வெங்கடாசலபதி பூரண அலங்காரத்துடன் தொங்கிக் கொண்டிருந்தார். கூடவே வெங்கடாசலபதிக்கு அணியப்பட்டிருந்த மஞ்சளும் சிவப்புமான மலர்களை அடுத்து அடுத்து வசீகரமான அழகியலோடு தொடுத்து இருந்த கனத்த மாலையும்.


நாராயணன் அதிகாரமிக்க பதவியில் இருக்கும் அரசு ஊழியர். இளம் வயதிலேயே பகுத்தறிவு, கடவுள் மறுப்பு என்று கொள்கைப் பிடிப்புள்ள கறார் பேர்வழி. அவர் மனைவியும் அப்படியே வளர்த்த குடும்பத்தில் இருந்து வந்தவர்தான். இப்போது இந்த உணவு விடுதிக்கு அவர்கள் வந்து காத்திருப்பது தங்கள் மகளுக்கு மணமகன் தேடுவதன் ஒரு அங்கம்தான்.


இதிலும்கூட அவர்களின் பகுத்தறிவு மனமே வேலை செய்கிறது. மரபான பெண் பார்த்தல், வரன் தேடுதல் போன்றவற்றை மீற வேண்டும் என்ற உள்ளுணர்வின் விளைவுதான் இதுவும். முக்கியமாக சாதி மறுத்தல் அவர்களுக்கு முதன்மையாக இருந்தது. இதற்கு ஏற்றார்போல் அவர்களின் நண்பர் அறிவழகன் குடும்பமும் இதைப்போன்ற எண்ணத்துடன் இருப்பதை அறிந்து, அறிவழகன் மகன் செழியனை மாப்பிள்ளை ஆக்கிக்கொள்ள நாராயணனும் அவர் மனைவியும் முடிவு செய்தனர். இதற்கு வெண்மதியும் சம்மதம் தெரிவித்தாள். அதன் பின் நண்பர் அறிவழகனிடம் நாராயணன் தனது என எண்ணத்தை சொல்ல அறிவழகன் தன் மனைவி மகனுடன் இந்த உணவு விடுதியில் சந்திப்பதாக முடிவு செய்யப்பட்டதன் விளைவே நாராயணன் குடும்பத்தினரின் இந்த காத்திருப்பு.


கூடுதல் நேரக் காத்திருப்பில் கொஞ்சம் சலிப்பு ஏற்பட்ட நாராயணன் அந்த உணவு விடுதியை சுற்றி ஒரு கண்ணோட்டம் விட்டார். கல்லாவின் பின்னே அட்டகாசமாக தொங்கிக்கொண்டிருந்த வெங்கடாசலபதியின் படம் அவர் கண்ணை உறுத்தியது. ‘இந்தப் படத்திற்கு இவ்வளவு பெரிய மாலையை போட்டு பணத்தை வீணடிக்கும் இவர்களுக்கு பகுத்தறிவு என்பதும் கொஞ்சமும் கிடையாதா?’ என்பதான தனது விமர்சனத்தை மனைவியிடமும் பகிர்ந்துகொண்டார். அவர் சொல்லுவதை ஆமோதிப்பது போல் குறுஞ்சிரிப்புடன் தலையை மெதுவாக ஆட்டிக்கொண்டார் மனைவி.


கிணி கிணி என்று மணி சப்தம் கேட்க, என்னவென்று பார்க்க நாராயணனும் அவர் மனைவியும் மணி சத்தம் கேட்ட திக்கில் கவனத்தை திருப்ப, க்ஷ்நடுத்தர வயதுள்ள தட்டிகமான ஆள் ஒருவர் வெங்கடாசலபதி படத்திற்கு மணி அடித்தபடியே தீபாராதனை கட்டிக்கொண்டிருந்தார். நாராயணன் எதையோ முணுமுணுத்தபடி மனைவி பக்கம் திரும்பியவர், மனைவி அனிச்சையாய் தனது வலது கையால் கன்னத்தில் போட்டுக்கொண்டதை கண்டு திடுக்கிட்டார்.


“என்ன செய்கிறாய் நீ?”


அனிச்சையான தனது செயலால் கேள்வி கேட்ட கணவருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தடுமாறினார் மனைவி. இப்போது அவர்களின் இந்தக் காத்திருப்பு ஒரு பெண் பார்க்கும் நிகழ்வுதான்.


செழியன் மத்திய அரசில் ஒரு பொறுப்பான அதிகாரியாய் பணிபுரிந்துவரும் முற்போக்கு சிந்தனை கொண்ட இளைஞன்தான். மரபுகள் மீது வெறுப்போடு வளர்ந்தவன்தான். எனவே, உணவு விடுதி சந்திப்பிற்குப் பின் இரு குடும்பத்தாரும் கலந்து எடுத்த முடிவின்படி செழியன் – வெண்மதி திருமணம், அதாவது அவர்கள் மொழியில் சொன்னால், வாழ்க்கை ஒப்பந்த விழா அதற்கே உரிய தன்மையுடன் சிறப்பாக நடந்தேறியது.


வெண்மதி, நாராயணனின் ஒரே மகள் என்பதனால் மகளும் மருமகனும் அவர்களுடனே இருந்து வருவது என்று முடிவு செய்யப்பட்டது. வெண்மதியின் கணவன் செழியனும் அதே ஊரில் பணியாற்றி வந்ததால் இந்த முடிவை எந்த சிரமமுமின்றி நிறைவேற்ற முடிந்தது.


ஆனால், பத்து ஆண்டுகள் கழிந்தும் செழியன் – வெண்மதி தம்பதியருக்கு குழந்தை பேறு இல்லாமல் இருந்து வந்தது. அவர்கள் முற்போக்கு சிந்தனையால், அக்கம்பக்கத்தார் சொல்லுகிற பரிகாரங்களை எதையும் ஏற்றுக்கொள்ளாமல், பிள்ளை பேற்றுக்கான சிகிச்சையை மேற்கொண்டு வந்தனர்.


பெண் மருத்துவரின் அறையின் முன்னே இருந்த இருக்கையில் அம்மாவுடன் அமர்ந்திருந்தாள் வெண்மதி. இந்தப் பத்து ஆண்டுகளில், மனதில் ஒரு இனம் புரியாத பதட்டத்துடன், இதுபோல் இந்த இருக்கையில் எத்தனை முறை அமர்ந்துருக்கிறாள். திருமணமாகி பத்து ஆண்டுகள் ஆகியும் கைகூடாத ஆசைக்காய் எத்தனை முயற்சிகள், எத்தனை வகை பிரயத்தனங்கள். அதே அளவிற்குத் தோல்விகள். இவை கொடுத்த மன அழுத்தங்கள் மட்டுமல்லாமல் சுற்றியிருக்கும் சொந்தங்கள், நண்பர்கள் என்று அத்தனை பேருடைய கேள்விகள், விசாரிப்புகள் கொடுத்த அழுத்தங்கள் கணக்கிட முடியாதவை.


செழியன் சந்திக்கிற எல்லா பிரச்சினைகளையும் தெளிவான சிந்தனைகளுடனும் ஆழமான விவாதங்களுடன் அணுகி சமாளிக்கும் திறன் உடையவன்தான் என்றாலும், அவனையே இந்த குழந்தைப்பேறு இன்மை என்பது சற்று கலங்க அடிக்க செய்கிறதே என்ற வருத்தமும்கூட வெண்மதியின் மன அழுத்தத்தைக் கூட்டியது. ஏதேதோ எண்ணங்கள் மனதில் ஓட, பலமுறை கேட்ட எதிர்மறை சோதனை முடிவுகளின் காட்சிதான் கண்ணுக்குள் வந்துவந்து போய்க் கொண்டிருந்தது.


வெண்மதிக்கு. மற்றுமொரு முறை தள்ளிப் போயிருந்ததால் இன்றைய இந்த ரத்தப் பரிசோதனை. ஒவ்வொரு முறையும் மருத்துவர் அறையின் திரைச்சீலையை விலக்கி யாரையோ அழைக்கும் செவிலிப் பெண்ணின் தலையை காணும்போதும் மனம் கொஞ்சம் திடுக்கிட செய்தது. இந்த முறை செவிலிப்பெண் தலை நீட்டி உச்சரித்தப் பெயர் வெண்மதி. தன் பெய்ரை செவிலிப் பெண் உச்சரித்து முடிப்பதற்குள் எழுந்து தாயுடன் கொஞ்சம் படப்படப்புடனே மருத்துவர் அறைக்குள் நுழைந்தாள் வெண்மதி.


மருத்துவர் மேசையின் முன், இருக்கையின் நுனியில் இனம் புரியாதத் தவிப்புடன் அமர்ந்திருந்த வெண்மதியை நோக்கி, மருத்துவரின் பின் நின்றிருந்த செவிலிப் பெண், முக மலர்ச்சியுடன், மற்ற விரல்களை மடக்கி ஆட்காட்டி விரலை மட்டும் நிமிர்த்தி, இரண்டு முறை கையை மேலும் கீழும் அசைத்து சைகைக் காட்டினாள். அந்த நிமிட சந்தோசம் வெண்மதியின் கண்களைக் கலங்க வைத்தது. பெண் மருத்துவர் முறையாக அவளிடம் அந்த மகிழ்வான செய்தியைச் சொல்லி அவளுடன் கை குலுக்கிக் கொண்டார்.


குடும்பத்தாரின் மகிழ்ச்சி சொல்லில் அடங்காததாக இருந்தது. செய்தி கேட்ட குடும்பத்தாரும் மிகவும் சந்தோஷம் கொண்டனர். கருவுற்றவளை மிகவும் கவனத்துடன் பேணி வந்தனர். கணவரும் பெற்றோரும் அவளிடம் மாறிமாறி கேட்டு அவளுக்கு விருப்பமானவற்றை வாங்கிக் கொடுத்துக் கொண்டே இருந்தனர்.


ஒருநாள் ஊரிலிருந்து நாராயணனின் சித்தி, கருவுற்றிருந்த பேத்தி பொண்ணை பார்க்க வந்திருந்தாள். ஊரிலிருந்து வந்திருந்த சித்தி பேத்திக்கு பால் கஞ்சி செய்துகொண்டிருந்தாள். அப்போது, வெளியிலிருந்து வந்த செழியன், “வெண்மதி நான் என்ன வாங்கிக்கொண்டு வந்திருக்கிறேன் தெரியுமா உனக்கு?” என்று கேட்க, “தெரியவில்லையே” என்றாள் வெண்மதி.


“உனக்கு ரொம்ப பிடிக்குமே என்று சப்பாத்தி ஸ்டால் புரூட் சாலட் வாங்கி வந்திருக்கிறேன்; இந்தா சாப்பிடு” என்று கடையிலிருந்து வாங்கி வந்திருந்த ஃப்ரூட் சாலட் கிண்ணத்தை அவளிடம் தந்தான். அவளும் அதை ஆசையுடன் வாங்கி சாப்பிட தொடங்கினாள்.


பாட்டி பதட்டத்துடன், “அதை சாப்பிடாத வேண்டாம் அது” என்று சொன்னாள்.


இந்த நேரத்தில் வெளியில் சென்றிருந்த தமிழ்ச்செல்வியும் வீட்டிற்குள் நுழைந்தாள். பாட்டியின் பதட்டத்தை கண்டு திகைத்துப் போன தமிழ்ச்செல்வி, “அத்தை ஏன் அதை சாப்பிட வேண்டாம்” என்று சொல்கிறீர்கள் என்று கேட்டாள்.


“ஐயையோ உங்களுக்குத் தெரியாதா? ஃப்ரூட் சாலட்டில் அன்னாசிப் பழம் சேர்த்திருப்பார்கள். கருவுற்ற பெண் அன்னாசிப்பழம் சாப்பிட்டால் கரு கலைய வாய்ப்பு இருக்கிறது. எனவேதான் புரூட் சாலட் சாப்பிட வேண்டாம் என்று சொல்கிறேன்” என்றாள் பாட்டி.


பாட்டி சொல்லி முடிப்பதற்குள், பதறிப்போய் மகளின் கையில் இருந்த ஃப்ரூட் சாலட் கோப்பையை புடுங்கி, விடுவிடுவென்று மூலையிலிருந்த குப்பை கூடையில் கொட்டிவிட்டாள், தமிழ்ச்செல்வி.


இதை எதிர்பார்க்காத வெண்மதி, “அம்மா அம்மா என்ன செய்கிறாய்?” என்று புரியாமல் கேட்டாள்.


“கருகலையும் என்றால் அந்த வாடையே உனக்கு வேண்டாம். அதுதான் தூக்கித் தள்ளி எறிந்தேன். நீ அதை சாப்பிட வேண்டாம்” என்று பதட்டத்துடன் சொன்னாள் தமிழ்ச்செல்வி.


பாட்டியும், “அம்மா நீ அதை சாப்பிட வேண்டாம். நான் உனக்கு சுக்கு முருங்கைப்பூ பூண்டு எல்லாம் போட்டு பால் கஞ்சி வைத்திருக்கிறேன். அதை வயிறு நிறைய குடி. உன் உடம்புக்கு நல்லது. உன் குழந்தைக்கும் நல்லது. இதோ கொண்டுவருகிறேன்” என்று சொல்லியபடி அடுக்களைக்குள் நுழைந்தாள்.


கருவுற்ற பெண்ணிற்கு கவனமாக செய்யவேண்டிய அனைத்து காரியங்களும் சிறப்பாக நடந்தன. மருத்துவரை பார்ப்பது, மருந்துகளை உண்ணுவது குழந்தையின் வளர்ச்சியை ஸ்கேன் செய்து பார்ப்பது என்று எல்லாமும் நிறைவாக நிறைவேற்றப்பட்டன.


ஆறு மாதங்கள் முடிந்து போயின. ஒரு நாள் தமிழ்ச்செல்வியின் அண்டை வீட்டுப் பெண், “உங்கள் மகளுக்கு ஆறு மாதம் முடியப்போகிறதே சீமந்தம் செய்ய வேண்டாமா?” என்று கேட்டாள்.


பொதுவாக அவர்களின் முற்போக்கு சிந்தனையை கடைப்பிடிக்கும் தன்மையினால் இதுபோன்ற வாழ்க்கை வட்டச் சடங்குகளைப் பற்றி எதுவும் தெரியாத நிலைதான் தமிழ்ச்செல்வியினுடையது. எனவே, சீமந்தம் செய்வது என்றால் என்ன என்பதை அண்டை வீட்டுப் பெண்ணிடம் கேட்டு தெரிந்தபின் பத்து ஆண்டுகள் கழித்து கருவுற்றிருக்கும் தன் மகளுக்கு இதுபோன்ற மரபுரீதியான சடங்கை செய்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகியது.


பின் தனது கணவர் நாராயணனிடமும் மருமகனிடமும் பேசி சிறப்பான முறையில் வெண்மதிக்கு சீமந்தம் என்னும் வளைகாப்பு செய்வது என முடிவு செய்யப்பட்டது.


ஒரு நல்ல நாள் பார்த்து முறைப்படி சீமந்தம் சிறப்பாக செய்து முடிக்கப்பட்டது.


“அம்மா வெண்மதி நாளை பரிசோதனைக்காக டாக்டரிடம் போக வேண்டிய நாள். அவரிடம் ஞாபகப்படுத்தி விடு. நாளை நாம் ஆஸ்பத்திரி போக வேண்டும்” என்று மகளிடம் நினைவூட்டினார் தமிழ்ச்செல்வி. மறுநாள் மூவரும் மருத்துவமனைக்குச் சென்றார்கள். அந்த ஊரிலேயே மிகவும் ராசியான மருத்துவமனை என்று பிரபலம் அடைந்து இருந்தது அந்த மருத்துவமனை. சாலையிலிருந்து சற்று உள்வாங்கி பிரமாண்ட தோற்றத்துடன் காட்சியளித்தது. பெரிய பெரிய மரங்கள் மருத்துவமனை வளாகத்தில் காணப்பட்டன. அரசும் வேம்பும் பின்னி வளர்ந்திருந்த மரத்து மூட்டை சுற்றிக் கட்டப்பட்டிருந்த மேடையில் ஒரு பிள்ளையார் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. அதற்கு வஸ்திரமும் புது மாலையும் அணியப்பட்டிருந்தன. தினமும் பிள்ளையாருக்கு பூஜை நடந்து வருவதை அந்த புது மாலை செய்தியாய் சொல்லிக் கொண்டிருந்தது.


பெண் மருத்துவரின் அறையின் முன்னே இருந்த இருக்கைகளில் மூவரும் காத்திருந்தனர். நிறைமாத வயிற்றுடன் வெண்மதி மூச்சு விடுவதற்குக் கொஞ்சம் சிரமப்பட்டு கொண்டுதான் இருந்தாள். தமிழ்ச் செல்வியும் மகளை ஆசுவாசப் படுத்துவது போல் அவளின் முதுகைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.


இந்த வேளையில் அங்கு வந்த ஒரு 50 வயதைத் தாண்டிய பெண்மணி தமிழ் செல்வியிடம், “அம்மா இது உங்கள் மகளா? இது தலை பிரசவமா?” என்பதாக கேள்விகளை அடுக்கிக் கொண்டிருந்தாள்.


இரண்டு கேள்விகளுக்கும் ஒரே பதிலாய், “ஆம், ஆம்” என்று இரண்டு தடவை சொன்னாள் தமிழ்ச்செல்வி.


“நல்லபடியாக பிரசவம் நடக்கும் கண்ணே நீ பயப்படாதே” என்று ஆறுதல் வார்த்தை சொல்லிய அந்தப் பாட்டி, தமிழ்செல்வியிடம், “பிள்ளையார் கோவிலில் இப்பொழுதுதான் சாமி கும்பிட்டுவிட்டு வந்தேன். எனது பேத்தியையும் இங்கேதான் பிரசவத்திற்கு சேர்த்து இருக்கிறோம். அவளுக்கு சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்று வேண்டிக்கொண்டு இந்த விபூதியை கொண்டு வந்திருக்கிறேன் எடுத்துக் கொள்.” என்று உள்ளங்கையில் இருந்த விபூதி பொட்டலத்தை நீட்டினாள்.


“உன் மகளுக்கும் சுகப்பிரசவம்தான் ஆகும். இந்த விபூதியை நீயும் பூசிக்கொண்டு உன் மகளுக்கும் பூசி விடு” என்று கூறினாள்.


தமிழ்செல்வி ஒரு சில நொடி தயங்கி பின் ஏதோ தீர்மானத்திற்கு வந்ததுபோல் அந்தப் பாட்டி நீட்டிய விபூதி பொட்டலத்தில் இருந்த விபூதியை எடுத்து வெண்மதிக்கு பூசிவிட்டாள். பாட்டியும் தனது வலது உள்ளங்கையை வெண்மணியின் தலைமேல் வைத்து, “கவலைப்படாதே கண்ணு உனக்கு சுகப்பிரசவமாகி நல்லபடியாய் பிள்ளையை பெற்றெடுப்பாய்” என்று நல்வாக்கு சொல்லி, “நான் வரேன் கண்ணு” என்றபடி அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.


மருத்துவர்கள் குறிப்பிட்டிருந்த நாளிலேயே வெண்மதி சுகப்பிரசவத்தில் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். இரு குடும்பத்தினரும் மிகவும் சந்தோசம் அடைந்தனர். அந்தக் குழந்தை வெற்றிமாறன் என்ற பெயருடன் இரு குடும்பத்தாரின் செல்லத்துடன் வளர்ந்து வந்தான்.


இந்த சூழ்நிலையில் வெண்மதியின் கணவர் செழியனுக்கு வேறு ஊருக்கு மாற்றல் ஆனது. அதே நேரத்தில் அறிவழகன் பணி நிறைவடைந்து ஓய்வு பெற்றார். எனவே, எல்லோரும் செழியனுக்கு மாற்றலான ஊருக்கே குடிபெயர்ந்தனர். அங்கே செழியனுக்கு அடுக்ககத்தில் அரசு வீடு ஒதுக்கப்பட்டதால் அந்த வீட்டிலேயே குடியேறினர்.


வெற்றிமாறனுக்கு இப்பொழுது ஆறு வயது நிறைவடைந்து இருந்தது. இந்நிலையில், ஒரு நாள் திடீரென வெண்மதி வாந்தி எடுத்தாள். பதறிப்போன குடும்பத்தார் அவளை மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். அவளை சோதித்த பெண் மருத்துவர் அவள் கருவுற்று இருப்பதாக குடும்பத்தாருக்கு செய்தி சொன்னார். இதைக் கேட்ட அனைவரும் மிகவும் மகிழ்ந்து போயினர்.


இந்தமுறையும் குழந்தை பேற்றை சிறப்பாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் வெண்மதியின் உடல் நலம் மிகவும் கவனத்துடன் பேணப்பட்டு வந்தது. ஆறுமாதம் முடிந்தவுடன் தமிழ்ச்செல்விக்கு ஒரு எண்ணம் உண்டானது. முதல் குழந்தைக்கு செய்ததைவிட இந்த முறை சிறப்பான விதத்தில் சீமந்தம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அந்த முடிவுக்கு ஏற்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டன.


தமிழ்செல்விக்கு அந்த அடுக்ககக் குடியிருப்பில் தங்கள் வீட்டை ஒட்டி குடியிருந்து வரும் சிவகாமி அம்மாள் குடும்பத்தினருடன் நெருக்கமான பழக்கம் உண்டு. அந்தப் பழக்கத்தின் காரணமாக சிவகாமி அம்மாளிடம், “அம்மா அடுத்த வாரம் எனது மகளுக்கு வளைகாப்பு செய்ய ஏற்பாடு செய்திருக்கிறோம். நீங்கள் வந்து இருந்து அந்த விழாவை நல்லபடியாக நடத்தி தந்து எங்களுக்கு உதவ வேண்டும்” என்று கேட்டுக்கொண்டாள்.


“என்ன தமிழ் சொல்றீங்க, வெண்மதிக்கா வளைகாப்பு?” அதிர்ச்சியும் ஆச்சரியமும் கலந்த குரலில் கேட்டார் சிவகாமி அம்மாள்.


“ஆமாம், வெண்மதிக்குதான் ஏன் இப்படிக் கேட்கிறீர்கள்?”


“அப்படியென்றால் மாறன் வெண்மதி பெற்றக் குழந்தை இல்லையா?” என்ற சிவகாமி அம்மாள் கேள்வி தமிழ் செல்வியை துணுக்குற வைத்தது.


“அம்மா ஏன் இப்படி சொல்கிறீர்கள்?” என்று பதற்றத்துடன் கேட்டபடியே, “மாறன் தமிழ் செல்வி பெற்ற குழந்தைதான்” என்று படபடவென்று சொல்லி முடித்தாள் தமிழ்செல்வி.


“அப்படி என்றால் இரண்டாவது குழந்தைக்கு ஏன் சீமந்தம் செய்கிறீர்கள்?” என்று சிவகாமி அம்மாள் கேட்ட கேள்வியை புரிந்துகொள்ள முடியவில்லை தமிழ்ச்செல்வியால்.


“நீங்கள் சொல்வது ஒன்றும் எனக்கு புரியவில்லை; தயவு செய்து விளக்கமாக சொல்லுங்கள்?”


“’சீமந்தம் என்பது முதல் கருதரிக்கும் பொழுதுதான் ஏழாவது மாதம் செய்யும் சடங்கு. அதற்குப் பின் உருவாகும் குழந்தைகளுக்கு இந்த சடங்கு செய்வது நமது வழக்கம் அல்ல’’ என்று விளக்கிச் சொன்னார் சிவகாமி அம்மாள்.


தமிழ்ச்செல்விக்கு குழப்பமும் வெட்கமும் உண்டானது. “அப்படி என்றால் இந்த சீமந்தம் நடத்தக்கூடாது என்று சொல்கிறீர்களா?”


“இப்படி இரண்டாவது குழந்தைக்கு சீமந்தம் நமது மரபில் பழக்கம் இல்லை என்றுதான் என்னால் சொல்ல முடியும்” என்று சொல்லி முடித்தார் சிவகாமி அம்மாள்.


சீமந்த ஏற்பாடுகள் நிறுத்தப்பட்டன. இப்பொழுது நாராயணனுக்கு சீமந்தம் என்பதைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும் என்று தோன்றியது. அதுதொடர்பாக வலைதளத்தில் தேடியபோது அந்த கட்டுரை அவர் கண்ணில்பட்டது.


“புராதன கால இந்தியாவில், ஆண்களும் பெண்களும் தாராளமான பாலியல் சுதந்திரம் அனுபவித்தார்கள். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இன்று வாழும் மேலை தேய மக்கள்கூட, அக்கால இந்தியர்கள் அளவுக்கு பாலியல் சுதந்திரம் அனுபவிக்கவில்லை. மேலைத்தேய நாட்டவர்கள், இருபதாம் நூற்றாண்டில்தான் பாலியல் கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து கொண்டனர். இந்திய கலாச்சாரத்தில், அது தொன்று தொட்டு பின்பற்றப்பட்டு வந்து இருக்கிறது.


இந்தியா வந்த மொகலாயர்களும் ஆங்கிலேயர்களும் இந்தியர்களின் பாலியல் சுதந்திரத்தை பறித்து, ‘நாகரீகமடைந்த ஒழுக்கசீலர்களாக’ மாற்றினார்கள் என்பதுதான் வரலாற்று சமூகவியலாளர்களின் கருத்து. குறிப்பாக பிரிட்டனில் விக்டோரியா மகாராணி விதித்த ஒழுக்கநெறிகளை நாம் இன்றைக்கும் ‘தமிழ் கலாச்சாரம்’ என்ற பெயரில் பின்பற்றி வருகின்றோம்.


இன்றைக்கும் இந்தியாவில் வாழும், பழங்குடி இனங்கள் மத்தியில் பாலியல் சுதந்திரம் நிலவுகின்றது என்பதாகத்தான் இந்திய வாழ்வு முறை பற்றி ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இந்தத் தகவலை பார்க்கையில் பலருக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகக்கூட இருக்கக்கூடும். ஆனாலும், இதில் அதிர்ச்சி அடைய ஏதும் இல்லை.


நமது வாழ்க்கை வட்டச் சடங்குகள் ஆழ்ந்து நோக்கினால் அவை நமக்கு புரியவரும். சீமந்தம் என்பது நமது பண்பாட்டில் கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு முக்கியமான சடங்காகும். இது ஒரு பெண் முதல் கர்ப்பமுற்ற ஏழாவது மாதம் கணவன் வீட்டில் வைத்து நடத்தப்படும் ஒரு சடங்காகும். சீமந்தத்தின் உண்மையான தாத்பரியம் நம்மில் பலருக்கும் இன்று தெரியாமல் இருக்கிறது.


பழங்குடி வாழ்வு முறையில் வயதுக்கு வந்த ஆணும் பெண்ணும் திருமணத்திற்கு முன்னமேயே நெருங்கி பழகுவார்கள். ஊர் மன்றில் உள்ள மந்தை என்னும் மந்தில்தான் இரவுகளில் இருவரும் தங்குவர். மந்தை என்பது பொது நிகழ்வுகளுக்கு முடிவெடுக்க அனவரும் கூடும் பொது இல்லம். ஆணும் பெண்ணும் இந்த இல்லத்தில் தங்கி பழகி மூன்று மாதத்தில் கருவுற்றால்தான் இருவருக்கும் ஊர் பெரியவர்களால் திருமணம் நடத்தி வைக்கப்படும். அவ்வாறு பெண் கருவுறாவிட்டால் அவர்களுக்குத் திருமணம் நடக்காது. இப்படி அந்தப் பெண் கருவுற்றால் ஏழாவது மாதம் ஊர் கூடி சீமந்தம் என்ற சடங்கை சிறப்பாக செய்து இருவருக்கும் திருமணம் நடத்தி வைப்பர். மந்தையில், அதாவது மந்தில் இருவரும் கூடியதால் நிகழ்ந்த நிகழ்வு சீமந்தம் ஆனது. சீ என்பது சீர், மேன்மை, சிறப்பு என்ற பொருளில் முன்னொட்டானது.


இதன் எச்சம்தான் நமது பண்பாட்டில் சீமந்தம் அல்லது வளைகாப்பு என்கிற சடங்காக ஒட்டிக்கொண்டு இன்று வரை தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. முதல் குழந்தையை சீமந்தபுத்திரன் அல்லது சீமந்தபுத்திரி என்று சொல்லும் வழக்கம் இன்றும் நம்மிடையே உண்டுதானே.


சீமந்தம் என்று இன்றைய சமூகத்தில் பரவலாக நடத்தப்பட்டு வரும் சடங்கின் ஆதிமூலம் இப்படித்தான் இருந்தது என்றபடியே புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது”.


இப்படியாக அந்த இணையதளக் கட்டுரை முடிந்தது.


இணையதளத்தில் படித்த கட்டுரை நாராயணனின் மனதில் எந்தவிதமான உணர்வை ஏற்படுத்தியது என்பதை புரிந்துகொள்ள முடியாத வகையில் அவர் முகத்தில் குழப்ப ரேகை படர்ந்து இருந்தது.


இப்போது அவரது மூளையின் நினைவுப் பெட்டகத்தில் ஒரு சிற்றறை திறந்துகொண்டது. நினைவகத்தின் திறப்பில் விரிந்த காட்சி அவர் கண் முன்னே ஓடியது.


அது ஒரு சித்திரை மாத நண்பகல். தார் சாலையின் ஜல்லிகளைப பிடிப்புடன் பிடித்து இருந்த தார்கூட அந்த கத்திரி வெயிலில் இளக்கம் கண்டிருந்தது. சாலையில் வந்து கொண்டிருந்த நாராயணன் தனக்கு எதிரே அந்த கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் விரைவாக நடந்து வந்து கொண்டிருந்த தம்பி மகனின் மனைவியான அமுதவல்லியை எதிர்கொண்டார். அவர் தம்பியின் குடும்பம் நாராயணனின் பகுத்தறிவு கொள்கையிலிருந்து முரண்பட்ட கடவுள் நம்பிக்கை கொண்ட ஒரு நடுத்தரக் குடும்பம்.


தொடக்க காலத்தில் தம்பியிடம் தனது பகுத்தறிவு சார்ந்த சிந்தனைகளைக் கடைப்பிடிக்க வற்புறுத்தி வந்த நாராயணன் ஒருகட்டத்தில் சலிப்படைந்து தம்பி அவன் இஷ்டம்போல் நடந்து கொள்ளட்டும் என்று விட்டுவிட்டார்.


எதிர்ப்பட்ட தம்பியின் மருமகளிடம், “அமுதா இந்த வேனா வெயிலில் இவ்வளவு விரசலா எங்க போற” என்று கேட்டார்.


“மாமா இன்னைக்கு வெள்ளிக்கிழமை 12 மணிக்கு ராகு காலம் முடியுது. அதுக்குள்ள நாகராஜன் கோவில் பாம்பு புற்றுக்கு பால் ஊத்தனுமுன்னுதான் விரசலா போறேன் மாமா” என்று அவர் பதிலுக்கு காத்திராமல் அவரை கடந்து சென்று கொண்டிருந்தாள் அமுதவல்லி.


அவரைக் கொஞ்சமும் பொருட்படுத்தாத அமுதவல்லியின் அலட்சியமான பதிலில் நிறையவே கடுப்பாகிப் போன நாராயணன், “இந்த ஜனங்களுக்கு எத்தனை சொன்னாலும் புத்தியில் ஏறுவது இல்லையே. ஏன் எங்காவது பாம்பு பால் குடிக்குமா? முட்டையை குடிக்குமா? இந்த அறிவு இல்லாமல் மூட நம்பிக்கையோடு எப்படித்தான் இவர்கள் வாழ்கிறார்களோ தெரியவில்லை” என்று வாய்விட்டே புலம்பித் தீர்த்துவிட்டார்.


நாராயணன் தனக்கு பின்னே இருந்து கலகலவென்று யாரோ சிரிக்கும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தார். அங்கே இடுப்பில் காவி வேஷ்டியும் தலையில் காவி துண்டு தலைப்பாகையுமாக வெண் தாடியுடன் பரதேசி போல காணப்பட்டவர் சிரித்துக் கொண்டிருந்தார்.


ஏற்கனவே மருமகளின் அலட்சியத்தால் கடுப்பாகி போயிருந்த நாராயணன் அந்த சாமியாரின் சிரிப்பில் மேலும் கடுப்பாகிப் போனார். “ஏன்யா இப்போ இவ்வளவு சத்தமா சிரிக்கிறியே ஏன்?” என்று சற்று கோபமாகவே கேட்டார்.


சிரிப்பதை நிறுத்திக்கொண்ட அந்த சாமியாரின் தோற்றத்தில் இருந்தவர் நாராயணனை நோக்கி, “நீங்களெல்லாம் படித்துவிட்டால் பகுத்தறிவு பேச வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள். ஆனால், இங்கு மரபில் உள்ள பல விஷயங்களில் புதைந்திருக்கும் அறிவுபூர்வமான காரணங்களை புரிந்துகொள்ள மறுக்கிறீர்கள். உங்களை கடுப்பாக்குகிற பாம்புக்கு பால் ஊற்றும் செய்கை அறிவுப்பூர்வமான ஒன்று என்பதை நீங்கள் புரிந்துகொள்ள போவதே இல்லை.


மூடநம்பிக்கை என்று நீங்கள் விமர்சிக்கும் இந்த பழக்கம் பெரியவர்களால் ஒரு நோக்கத்தின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. விளக்கமாகச் சொல்கிறேன் கேட்டுக் கொள்ளுங்கள்.


பாம்பு ஒரு நச்சுயிரி. பாம்புக்கடி பெரும்பாலும் மரணத்தைத் தரக் கூடியது. எனவே, மனிதர்களுக்கு பாம்பை கண்டாலே அச்சமும் அதை அடித்துக் கொல்ல வேண்டும் என்ற உணர்வும் உண்டாகும்.


ஆனால், நமது மரபில் எந்த ஒரு உயிரையும் கொல்லுவது என்பது பெரும் பாவம் என்று கருதப்படுவது உண்டு. எனவே, பாம்புகள் விஷயத்தில் அவற்றை கொல்லுவதைத் தவிர்த்து அவற்றின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் விதத்தில்தான் பாம்பு புற்றில் பால் ஊற்றும் பழக்கம் உருவானது.


பெரும்பாலும் இயற்கையில் இனச்சேர்க்கைகான உணர்வு, பெண்பால் உயிரியிடம் இருந்து வெளிவரும் ஒரு வகையான மணத்தால், ஆண் இனம் தூண்டப்பட இனச்சேர்க்கை நடைபெறுகிறது. இந்த மணத்தைக் கட்டுப்படுத்தவே புற்றில் பாலும் முட்டையும் ஊற்றப்படுகிறது. இந்த இரண்டில் இருந்து வெளிப்படும் மணம் இயற்கையாய் பெண் உயிரியிடம் இருந்து வெளிப்படும் மணத்தை அமுக்கி விடுவதால், ஆணால் பாலுணர்வைத் தூண்டும் மணத்தை உணர முடியாது போய்விடுகிறது. இதன் மூலம் இனவிருத்தி கட்டுப்படுத்தப்படுகிறது.


இந்த நோக்கத்தின் அடிப்படையில்தான் புற்றில் பால் ஊற்றப்படுகிறது. இதையெல்லாம் அறிவுபூர்வமாக என்றுதான் நீங்கள் புரிந்துகொள்ள போகிறீர்களோ?” என்று சொல்லிய சாமியார் மறுபடியும் கலகலவென்று சிரித்தபடியே அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.


சீமந்தம் பற்றி இணையத்தில் படித்தக் கட்டுரை இந்த நிகழ்வை ஏன் அவருக்கு நினைவு படுத்தியது என்பது புரியாமல் குழம்பிக் கொண்டிருந்தார் நாராயணன்.


நன்றி - அம்ருதா 2021