நற்றினை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நற்றினை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

யாமத்து மழை - கி. வா. ஜகந்நாதன்

தோழி : உன்னுடைய காதலன் பெரிய வளப்பம் மிக்க மலை நாட்டை உடையவன்; இயற்கை எழில் குலுங்கும் மலைகளை உடையவன்.

தலைவி : அப்பெருமானுடைய அன்பு வளத்தை நான் அறிவேன். அவருடைய ஊரை யார் அறிவார்கள்? நாட்டைத்தான் யார் அறிவார்கள்?


தோழி : நீதான் அறிந்து கொள்ளப் போகிறாயே!


தலைவி : அது எவ்வாறு? அவர் இன்னும் திருமணத்துக்கு உரிய முயற்சிகளைச் செய்யாமலே இருக்கிறாரே!


தோழி : அதைப்பற்றி நீ ஏன் கவலை அடைகிறாய்? அவனுடைய கடமையை அவன் மறக்க மாட்டான். உனக்கு வேண்டிய பரிசத்தைக் கொண்டு வந்து, உன்னுடைய தாய் தந்தையரிடம் வழங்கி, உன்னை மணம் செய்து கொடுக்க வேண்டுமென்று கேட்பான், முதியோர்களை முன்னிட்டுக் கொண்டு வரைந்து கொள்ள வருவான்.


தலைவி : அவருடைய நாட்டின் வளப்பத்தைச் சொல்ல வந்தாயே! அவர் எவ்வகை நிலத்துக்குத் தலைவர்?


தோழி : குறிஞ்சிநிலத் தலைவன்; மலை நாடன்,


தலைவி : நாமும் குறிஞ்சி நிலத்தில் வாழ்கிறோம். இங்குக் கள்வர்களைப்போல அங்கும் மகளிர் உண்டோ? தினை கொல்லைகள் உண்டோ?


தோழி : அங்கும் மலைச்சாரல்களில் பசிய தினைப்பயிரை மலைநாட்டு மக்கள் விளைவிப்பார்கள். அடுக்கலிலே விளையும் அந்தத் தினையைக் குறமகளிர் காவல் புரிவார்கள்.


தலைவி : நாம் காத்தோமே, அது மாதிரியா?

ஆவாரம்பூ... ஆக்காட்டி! - முனைவர் விமலா அண்ணாதுரை

தமிழ்நாட்டில், இன்று கணந்துள் பறவையை எங்கே காணலாம்? என்று கேட்டால் என்ன பதில் வருமோ தெரியாது. ஆனால், ஆள்காட்டிப் பறவை என்றால், அந்தப் பறவையைக் காட்டிக் கொடுக்கப் பெரும்பான்மையோர் முன்வரக்கூடும். ஏனென்றால், இந்தப் பறவைகளின் குரல், ஆளைக் காட்டிக்கொடுக்கும் இயல்புடையது. இவை சிவப்பு ஆள்காட்டி, மஞ்சள்ஆள்காட்டி என இரு நிறங்களில் காணப்படுகின்றன. ஆள்காட்டிப் பறவைகள், இனப்பெருக்கக் காலத்தில், எதிரிகள் தொலைவில் வரும்போதே இனம் கண்டுகொண்டு, கூட்டையும் குஞ்சுகளையும் காக்கக் கடுங்குரல் எழுப்புகின்றன. இவற்றின் அபயக்குரலைக் கேட்டு அருகிலிருக்கும் பிற பறவைகளும் விலங்குகளும் அந்த இடத்திலிருந்து விலகிவிடுகின்றன.


கணந்துள் பறவைதான், ஆள்காட்டிப்பறவை என்று பி.எல். சாமி எழுதியுள்ள சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம் (பக்-147-157) என்ற நூலில், பறவையியலின் அடிப்படையில் மிகத்தெளிவாக விளக்குகிறார்.


நற்றிணை 212-ஆவது பாடலிலும், குறுந்தொகை 350-ஆவது பாடலிலும் இரு செய்திகள் கணந்துளைப் பற்றி ஒரேமுறையாகக் கூறப்பட்டுள்ளன. கணந்துள் பறவைக்கு கால் நீளம் என்பது "நெடுங்கால்" என்று இரு பாடல்களிலும் கூறுவதிலிருந்து தெரிகின்றது. இரு பாடல்களிலும் கணந்துள் பறவை ஓசையிடுவது குறிப்பாகக் கூறப்பட்டுள்ளது. நற்றிணை "புலம்புகொள் தெள்விளி" என்று கூறியுள்ளது. குறுந்தொகையில் கணந்துளின் ஆளை அறிவித்துக் காட்டும் குரல் குறிப்பிடப்பட்டுள்ளது.


குஞ்சு பொரித்துள்ள காலகட்டத்தில் இவை வாழுமிடத்தில் விலங்குகளோ, மனிதரோ சென்றால் திரும்பத் திரும்ப கடுங்குரலிட்டு, சுற்றச்சுற்றிப் பறந்து பாய்ந்து, ஆரவாரம் செய்யுமாம். சிவப்பு ஆள்காட்டிக் குருவி குரலிடுவது ஈண்க்-ட்ங்-க்ர்-ண்ற், ஈண்க்-ட்ங்-க்ர்-ண்ற் என்று திருப்பித் திருப்பி ஆங்கிலத்தில் கத்துவது போல் இருக்குமென்று கூறுவர். அதனால் ஆள்காட்டிக் குருவியை ஈண்க்-ட்ங்-க்ர்-ண்ற் குருவி என்றும் கூறுகின்றனர்.

சங்க இலக்கியங்களில் இசைத்தமிழ் - முனைவர் வெ.வரதராசன்

கலைகளுள் சிறந்தது இசைக்கலை. இசையில் இன்பக்கூறு இயல்பாகவே அமைந்துள்ளது. இசை உயிரினங்களைத் தன்வயப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இசைக்கலை உணர்வின் உறைவிடம்; இறைமையின் மறைவிடம்.


சங்ககாலத்து மக்களின் அன்றாட வாழ்வில்இசைபெரிதும் இடம்பெற்றிருந்தது. இசையை அனுபவிக்க மொழி தடையில்லை, பகுத்தறிவும் தேவையில்லை, பொருள் விளக்கமும் கட்டாயமன்று. பொருநராற்றுப்படையில் முடத்தாமக்கண்ணியார்,


ஆறலைக் கள்வர் படைவிட அருளின

மாறுதலைப் பெயர்க்கும் மருவின் பாலை (21-22)


எனப் பாலை யாழின் சிறப்பை, “வழிப்பறி செய்து பொருளை அபகரிக்கும் கள்வர்களின் கல்மனதையும் கரையச்செய்யும் தன்மை யாழிசைக்கு உண்டு. அதனால் அவர்தம் கையிலுள்ள கொலைக் கருவிகளை கைவிட்டு நல்லவர்களாக மாறிவிடுவர்என்று கூறியுள்ளார்.


ஐங்குறுநூற்றுப் பாடல் ஒன்றில், “தலைவியின் பேச்சு யாழிசையின் இன்பம் போன்றதுஎன்பதை, “நரம் பார்ந்தன்ன தீங்கிளவி” (185) எனப் பாராட்டியுள்ளான் தலைவன். கலித்தொகைப் பாடல் ஒன்றில்,

‘கிழார்' போற்றுதும்… - சிவமானசா

சங்க காலத்தில் ‘கிழார்' எனும் சிறப்புப் பெயர் உழுவித்து உண்ணும் வேளாண் மக்களைக் குறிக்கும் பட்டம் என்பது அறிஞர்கள் கருத்து. இதை, உ.வே.சாமிநாதையரின் சங்கப்பாடல் பதிப்பிலும், ஆ.சிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணி நூலிலும் காணலாம். பிற்காலத்தில் கல்வெட்டுகள் முதலியவை பல சமூகத்தினரைக் குறித்தது என்று கூறுகிறது. ஆனால், சங்க காலத்தில் வேளாண் மக்களையே குறிப்பதாகக் கூறுவர்.

பாண்டிய மன்னன் வேளாண்குடி மக்களுக்கு வழங்கிய பட்டத்தின் பெயர் "காவிதி' என்பது அறிஞர்கள் கூற்று. அத்தகைய ‘கிழார்'கள் பலர் அன்னைத் தமிழுக்கு அணி சேர்த்துள்ளனர். அவர்களுள் சிலரைக் காண்போம்.

அரிசில் கிழார் : தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையைப் பாடி எண்பத்து நூறாயிரம் பொற்காசுகளைப் பெற்றவர் இவர். வையாவி கோப்பெரும் பேகனையும், அவனுடைய இல்லத்தரசியான கண்ணகியையும் இணைத்து வைத்தவர். குறுந்தொகையில் 193, புறம்-146, 230, 281, 285, 300, 304, 342 ஆகிய பாடல்களைப் பாடியவர்.

ஆலந்தூர் கிழார் : குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனையும், நலங்கிள்ளியையும் பாடியுள்ளார். குறு.112, 350, புறம்.34, 36, 69, 225, 324 ஆகிய பாடல்களைப் பாடியவர்.

ஆவூர்க்கிழார் : உறையூர் அருகிலுள்ள ஆவூரைச் சேர்ந்தவர். புறம்-322வது பாடலைப் பாடியவர்.

கண்ணனார் கிழார் : இவர் ஆவூர்க்கிழாரின் மகனார். அகம்-202-ஆம் பாடலைப் பாடியவர்.

ஆவூர் மூலங்கிழார் : குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடியுள்ளார். அகநானூற்றில் 24, 156, 341, புறநானூற்றில் 38, 166, 177, 196, 261, 301 ஆகிய பாடல்களைப் பாடியுள்ளார்.

பெருந்தலைச் சாத்தனார் கிழார் : இவர் ஆவூர் மூலங்கிழாருடைய மகன். நற்றிணையில் 262, அகம்.13, 224, புறம் 151, 164, 165, 205, 208, 294 ஆகிய பாடல்களைப் பாடியுள்ளார்.

இடைக்குன்றூர் கிழார் : இவர் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடியவர். புறம்.76-79 (4 பாடல்கள்) வரை உள்ள பாடல்களைப் பாடியவர்.

உகாய்க்குடி கிழார் : குறுந்தொகையில் 63-ஆம் பாடலைப் பாடியவர்.

பரங்கொற்றனார் கிழார்: இவர் உமட்டூர் கிழாரின் மகனார். அகநானூற்றில் 69-ஆம் பாடலை இயற்றியுள்ளார்.

ஐயூர் மூலங்கிழார் : இவர், பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதியைப் பாடியவர். புறம் 21-ஆம் பாடலைப் பாடியுள்ளார்.

கயத்தூர் கிழார் : இவர் குறுந்தொகையில் 354-வது பாடலைப் பாடியுள்ளார்.

கருவூர்க்கிழார் : இவர் குறுந்தொகை 170வது பாடலைப் பாடியவர்.

காரிக்கிழார் : இவர் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பாடியுள்ளார். புறம் 6-வது பாடலைப் பாடியவர்.

கிள்ளி மங்கலங்கிழார் : குறுந்தொகையில் 76, 110, 152, 181 ஆகிய பாடல்களைப் பாடியுள்ளார்.

குறுங்கோழியூர் கிழார் : சேரமான் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையைப் பாராட்டிப் பாடியுள்ளார். புறம் 17, 20, 22-வது பாடலைப் பாடியவர்.


நன்றி - தமிழ்மணி 19 8 12

நற்றிணையில் மாயோனும் வாலியோனும்... - குமரன்

கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலன்களாலும் காதல் கொண்டு தலைவனும் தலைவியும் பகலிலும் இரவிலும் ஒருவரை ஒருவர் தனிமையில் கண்டு கூடிக் குலாவி மகிழ்ந்து பின்னர் தலைவியைப் பிரிந்து தலைவன் சென்ற போது அவன் பிரிவை எண்ணி வருந்தும் தலைவியரையே சங்க இலக்கியத்தில் பல முறை காண்கிறோம். நற்றிணையில் தொகுக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடலோ கூடிப் பிரிந்த தலைவன் தலைவியை மீண்டும் காண்பதற்காக வருந்தி வரும் போது அவனை ஏதோ ஒரு காரணத்தால் மறுத்து விலகியிருக்கும் தலைவியைக் காட்டுகிறது.

மாயோன் அன்ன மால் வரைக் கவாஅன்
வாலியோன் அன்ன வயங்கு வெள்ளருவி!
அம்மலை கிழவோன் நம் நயந்து என்றும்
வருந்தினன் என்பதோர் வாய்ச்சொல் தேறாய்!
நீயும் கண்டு நுமரொடும் எண்ணி
அறிவறிந்து அளவல் வேண்டும்! மறுதரற்கு
அரிய! தோழி வாழி! பெரியோர்
நாடி நட்பின் அல்லது
நட்டு நாடார் தம் ஒட்டியோர் திறத்தே!

நற்றிணை 32ம் பாடல்
திணை: குறிஞ்சி
துறை: இது தலைவிக்குக் குறைநயப்புக் கூறியது
இயற்றியவர்: கபிலர் (பாடியவர் என்றும் சொல்லலாமோ?)

பாடலின் பொருள்: மாயோனைப் போல் கரு நிறம் கொண்டு ஓங்கி உயர்ந்து நிற்கும் மலையின் ஒரு பக்கத்தில் மாயோனின் முன்னவனாகத் தோன்றிய பலராமன் என்னும் வாலியோனின் நிறம் போல் வெள்ளை நிறம் கொண்ட அழகிய அருவி இருக்கிறது. அந்த மலையின் தலைவன் உன் உறவினை விரும்பி வேண்டி நமது அண்டையில் அடிக்கடி வந்து நின்று வருந்துகிறான் என்று நான் சொன்னால் அந்த வார்த்தையை நீ ஏற்றுக் கொள்ளவில்லை! நீயே அதனை நேரில் கண்டு உனது மற்ற தோழியரோடு சேர்ந்து சிந்தித்து அவனது காதலை உணர்ந்து அவனுடன் அளவளாவுதல் வேண்டும். அவனது காதல் மறுத்தற்கு அரியது. தோழி நீ வாழ்க! பெரியவர்கள் நட்பு கொள்வதற்கு முன்னர் நட்பு வேண்டி வந்தவர்களைப் பற்றி ஆராய்வார்கள்! உன்னைப் போல் நட்பு கொண்ட பின்னர் நட்பு கொண்டவர்களிடத்து ஆராய்ச்சியைச் செய்ய மாட்டார்கள்!

செல்வத்திலும் அறிவிலும் வலிமையிலும் ஆற்றலிலும் சிறந்த ஆளும் திறத்தவராகிய தலைமக்களே சங்க இலக்கியத்தில் பெரும்பாலும் பேசப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பாடலில் காதலன் 'மலைக் கிழவோன்' என்று குறிக்கப்படுவதன் வழி அவனும் அப்படி செல்வத்திலும் ஆட்சியிலும் மற்ற வகைகளிலும் சிறந்த ஒரு தலைமகன் என்பது சொல்லப்படுகிறது. அதனை இங்கே 'அவன் உனக்கு ஏற்றவன். அவன் மலையின் தலைவன். அதனால் உன் காதலைப் பெறும் தகுதியுடையவன்' என்று தோழி சுட்டிக் காட்டுவதன் மூலம் காதலியும் ஒரு தலைமகள் என்பதைக் காட்டுகிறது. சங்கப் பாடல்கள் பெரும்பாலும் தலைமக்களையும் அவர்தம் காதலையும் உணர்வுகளையுமே பேசியதால் தான் அவர்களைக் காதலன் காதலி என்று குறிக்காமல் தலைவன் தலைவி என்றும் கிழவன் கிழத்தி என்றும் பாடலை எழுதியவர்களும் உரையாசிரியர்களும் குறித்தார்கள் போலும்.

கபிலரின் இந்தப் பாடலில் வரும் 'பெரியோர் நாடி நட்பின் அல்லது நட்டு நாடார் தம் ஒட்டியோர் திறத்தே' என்னும் கருத்தே கொஞ்சம் மாற்றத்துடன் திருக்குறளில் 'நாடாது நட்டலின் கேடில்லை நட்டபின் வீடில்லை நட்பாளவர்க்கு' என்று (கருத்தை அழுத்தமாய் வலியுறுத்த?) எதிர்மறையாக வருவதைக் காணலாம். அதனால் 'ஆராய்ந்து நட்பு கொள்ள வேண்டும்; நட்டபின் ஆராய்தல் பிழை' என்பது ஒரு பழமொழியைப் போல் சங்க காலத்தில் வழங்கியிருத்தல் கூடும் என்று தோன்றுகிறது.

குறிஞ்சித் திணைப் பாடலாகிய இந்தப் பாடலில் முல்லைக்குரிய மாயோனும் அவனுடனே பெரும்பாலும் குறிக்கப்படும் வாலியோனும் பேசப்படுகிறார்கள். மக்கள் நன்கு அறிந்த ஒன்றையே உவமையாகக் கூறுவார்கள் என்பதால் மாயோன் என்னும் கண்ணனின் கருநிறமும் அவனது நெடிய தோற்றமும் இங்கே மலைக்கு உவமையாகவும், வாலியோன் என்னும் பலதேவனின் வெண்ணிறமும் அவனது வலிமையும் இங்கே அருவிக்கு உவமையாகவும் அமைந்திருக்கிறது.

நன்றி - கூடல்

இலக்கிய உத்திகள்

சங்ககாலப் புலவர்கள், சங்கப் பாடல்களில் அக உணர்வை மறைமுகமாக, குறிப்பாக உணர்த்த, உள்ளுறை உவமை, இறைச்சி என்னும் இலக்கிய உத்திகளைப் (நயங்களை) பயன்படுத்தி, மிகச் சிறப்பாகக் கையாண்டுள்ளனர். இவை இரண்டையும் "குறிப்புப் பொருள் உத்தி' எனவும் அழைப்பர்.

வெளிப்படையாகத் தெரியும் பொருளோடு வேறொரு பொருள் புலப்படுவதுபோல அமைப்பது உள்ளுறை உத்தியாகும். உள்ளுறை உத்தியில் உவமையைச் சொன்ன அளவில் உவமிக்கப்படும் பொருள் வெளிப்படையாக இருக்காது. உவமிக்கப்படும் பொருள், தெய்வம் ஒழிந்த கருப்பொருளாக இருத்தல் வேண்டும் என்பது இலக்கண விதி.

உள்ளே மறைவாகப் படிந்து இருக்கும் குறிப்புப் பொருளை உவமை ஆற்றலால் வெளிப்படுத்துவதால் இதனை உள்ளுறை உவமை என்றனர்.

உள்ளுறை உவமைக்கு நாற்கவிராச நம்பி தரும் இலக்கணம் பின்வருமாறு:
""ஆராய்ந்தறியும் பகுதியினையுடைத்தாய்ப் புள்ளொடும்
விலங்கொடும் பிறவொடும் தோன்றும் உள்ளுறை உவமை''
(ஒழிபியல்-28)

அவற்றுள், ""உள்ளுறையுவமம் உய்த்துணர் வகைத்தாய்ப் புள்ளொடும் விலங்கொடும் பிறவொடு புலப்படும்'' (ஒழி-29) இதற்கு எடுத்துக்காட்டுப் பாடலாக அமைவது,

""இழை விளையாடும் இளமுலை சாயற்கு இடைந்தமஞ்ஞை
கழை விளையாடும் கடிப்புனம் காத்தும் கலையகலாது
உழை விளையாடும் உயர் சிலம்பா! இன்னும் உன் பொருட்டால்
மழை விளையாடும் மதிற்றஞ்சை வாணன் மலையத்திலே
"மானைப் பிரியாது கழை விளையாடும்''

என்பதனால், நீயும் தலைவியைப் பிரியாது விளையாட வேண்டும் என்ற பொருள் உள்ளுறை உவமம், விலங்கொடு தோன்றிப் புலப்படுமாறு அமைந்துள்ளது.

தொல்காப்பியர், எல்லையற்ற இன்பம் தருவதே உள்ளுறை அமைப்பதன் நோக்கம் என்பதை,

""அந்தமில் சிறப்பின் ஆகிய இன்பம்
தன்வயின் வருதலும் வகுத்த பண்பே''
(பொரு-48)

என்று கூறியுள்ளார். குறிப்புப் பொருள் சார்ந்து இவ்வுள்ளுறை ஐந்து வகைப்பட்டு வரும் என்பதை தொல்காப்பியர்,

""உடனுறை, உவமம், சுட்டுநகைச் சிறப்பென
கெடலரு மரபின் உள்ளுறை ஐந்தே''
(பொரு-47)

என்று கூறியுள்ளார். உடனுறை உள்ளுறை, சுட்டு உள்ளுறை, சிறப்பு உள்ளுறை, உவம உள்ளுறை, நகை உள்ளுறை என்னும் ஐந்து உள்ளுறைகளைக் கூறிய அவர், உவம உள்ளுறையைப் பற்றியும் (தொல்.அகத்.49,51) சிறப்பு உள்ளுறையைப் பற்றியும் (தொல்.பொரு-50) சில கருத்துக் கூறி விளக்கியுள்ளார்.

இவ்வகை உள்ளுறைகளில் உவம உள்ளுறை நீங்கலாக, மற்றவை சங்க இலக்கியங்களுக்கு உரை வகுத்த உரையாசிரியர்களால் பாடல் உரையில் பொதுவாக விளக்கிக் காட்டப்படவில்லை.

நற்றிணைக்கு உரைவகுத்த பின்னத்தூர் நாராயணசாமியும், உவம உள்ளுறை என்பதையும் (இறைச்சி என்ற பெயரில்) வேறு உள்ளுறையையும் மட்டும் கூறிச் சென்றுள்ளார். இந்நிலையில், நற்றிணையில் ஐவகை உள்ளுறைகளும் பொருந்தி வருவது குறிப்பிடத்தக்கது.

உவம உள்ளுறைக்கு ஓர் எடுத்துக்காட்டு: தலைவனைத் தோழி வரைவு கடாவுகிறாள் (களவில் தோழி-தலைவனிடம் தலைவியை மணந்து கொள்ளும்படி வேண்டுதல்). ""கொல்லவல்ல ஆண்புலியானது, களிற்றியானையை நீர் அருந்தவரும் நீர்த்துறையிலே பிடியானை புலம்புமாறு தாக்கிக் கொல்லும் வெற்பனின் சொற்களை மெய்யெனத் தேறி, யாம் நடுஇரவிலும் உறங்கப்பெறாது, எமது நலத்தை இழந்துவிட்டோம். இப்பழி தூற்றும் ஊர், அலர் கூறும் பெண்களின் அம்பல் மொழியை மெய்யென நம்பி, மேன்மையிலாத் தீய சொற்களைப் பொதித்த ஒலியை உடையதாகத் தான் இழந்தது என்ன?'' (நற்றி-36) என்பது பாடலின் கருத்து.

""கொல்லவல்ல ஆண் புலியானது, களிற்றியானையை நீர் அருந்தவரும் நீர்த்துறையிலே, பிடியானை புலம்புமாறு தாக்கிக் கொல்லும் வெற்பன்'' என்பது குறிப்புப் பொருளை உள்ளடக்கி உள்ளது. இஃது உவம வகையால், கொடுமை நிறைந்த தலைவியின் தமர் (உறவினர்) தலைவியை நாடிவரும் இடத்திலே தலைவி புலம்புமாறு தலைவனுக்குத் துன்பம் இழைப்பர்-என்று குறிப்புப் பொருளைத் தோற்றுவித்தலின் உள்ளுறை உவமம் ஆயிற்று. இவ்வகையில் மேலும் சில இடங்களைச் சுட்டலாம்.

இறைச்சி:

இறைச்சி என்ற கோட்பாட்டினைத் தொல்காப்பியம் ஆறு இடங்களில் குறிப்பிடுகிறது. வடமொழியில் உள்ள "தொனி'-கோட்பாடுடன் இதனை இணைத்துப் பார்க்கும் போக்கு தமிழறிஞர்களிடம் காணப்படுகிறது. கூறவந்த பொருள் வெளிப்படாது மறைவாக இருக்க, அதை உணர்த்த, வோறொரு பொருள் வெளிப்படையாக நிற்குமாறு அமைக்கும் இலக்கிய உத்தியே இறைச்சி.

""இறைச்சி தானே உரிப்புறத் ததுவே''
(தொல்.1175)

மக்களின் காதல் ஒழுக்கங்கள் உரி; பிற உயிர்களின் காதல் செயல்கள் உரிப்புறத்தன. எனவே இறைச்சி என்பது உரிப்புறத்தது. இது எந்த ஒரு குறிப்புப் பொருளையும் சுட்டித் தன்னுள்ளே வேறொரு பொருள் தருவது. இலக்கியங்களில் பாடப்படும் இறைச்சியின் பொருளுக்கும், விலங்கினம்-பறவையினம் போன்ற கருப்பொருளுக்கும் உள்ள தொடர்பைக் கூறுவது. உயிரினங்களின் அன்புச் செயல்களை மிகுவிப்பன "இறைச்சி' என்பர்.

தெய்வம் முதலாகிய கருப்பொருளின் கண்ணே பிறப்பதே ûறைச்சிப் பொருள் என்பது அகப்பொருள் வரையறை.
""கருப்பொருட் பிறக்கும்
இறைச்சிப் பொருளே'' (ஒழி-31)

கருப்பொருளின் வகைகளாக அகப்பொருள் பதினான்கு வகைகளைக் குறிப்பிடுகிறது. "ஆரணங்கு (தெய்வம்), உயர்ந்தோர், தாழ்ந்தோர் (அல்லாதோர்), புள், விலங்கு, ஊர், நீர், பூ, உணவு, பறவை, யாழ், பண், தொழில் எனக் கருவீரெழுவதைத் தாகும்' (அகத்-19). ஐந்து திணைகளுக்கு உரிய கருப்பொருள் இவையிவை என பொருள் தெளிவாகக் கூறுகின்றன.

வழியிடைக் காணப்படும் இயற்கையையும் அவற்றின் அன்புணர்வைத் தூண்டும் காட்சிகளையும், காதல் செய்திகளையும் குறிப்பது; சிறப்பான ஒருவகை உணர்வை அடிப்படையாகக் கொண்ட குறிப்புணர்வு என்றும் இறைச்சியைக் கூறுவர்இதை ஆய்வு நோக்கில், கருப்பொருள் இறைச்சி, தெரிபொருள் இறைச்சி, குறிப்புப்பொருள் இறைச்சி என மூன்று வகையாகப் பிரிக்கலாம். அது அன்பு, காதல், அருள், மனிதநேயம் ஆகியவற்றுக்குத் தூண்டுதலாக அமையும். மனிதனின் உள்ளுணர்வாகிய காதலைத் தூண்டும் புறச்சூழல்களே இறைச்சி என்றும் கூறப்படுகிறது.

தெரிபொருள் இறைச்சிக்கு ஓர் எடுத்துக்காட்டு:

தெரிபொருள் இறைச்சியில் கருப்பொருள்களின் செயல்களும் அவற்றிற்கான முடிவுகளும் உடன் கூறப்படும்.
""விருந்தெவன் செய்கோ தோழி சாரல்
அரும்பர மலர்ந்த கருங்கால் வேங்கைச்
சுரும்பிமிர் அடுக்கம் புலம்பக் களிறட்டு
உரும்பின் உள்ளத்து அரிமா வழங்கும்
பெருங்கல் நாடன் .....   ......''(நற்-112)

வினைவயிற் பிரிந்த தலைவன் குறித்த பருவம் வந்ததும், அவன் வராதது கண்டு ஆற்றாமையில் வாடிய தலைவியை ஆற்றுவிக்கும் தோழி, ""அடுக்கம் புலம்பக் களிற்று யானையைக் கொன்று சிங்கம் இயங்கும் மலைநாடன் உன் தலைவன். எனவே, அவன் உனது பசப்பு வருந்திக் கெட, உனக்கு உண்டான காமநோயைப் போக்கி உன்னைவிட்டு அகலாமல் இருப்பான்'' என்பது குறிப்பு. இந்தக் கருப்பொருளாகிய களிற்று யானையின் செயல்களும் அவற்றிற்கான முடிவுகளும் உடன் கூறப்பட்டதால் இது இறைச்சிப் பொருளானது. நற்றிணையில் மட்டுமே 165 பாடல்கள் இறைச்சிப் பொருளில் அமைந்துள்ளன.

காதல் உணர்வைக் குறிப்பதற்கும், தூண்டுவதற்கும் தலைவனை நெறிப்படுத்துவதற்குமே இறைச்சிப் பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சங்ககால மக்கள் தங்கள் மகிழ்ச்சியையும், மன வருத்தத்தையும் நேரடியாகக் கூறாமல் மறைமுகமாகக் கூற, "உள்ளுறை உவமை' மற்றும் "இறைச்சி'யை இலக்கிய உத்திகளாகக் கையாண்டு கூறியுள்ளது நாகரிகத்தின் வெளிப்பாடு என்பதை விட உச்சநிலையைக் கடைபிடித்துள்ளனர் என்றே கூறத்தோன்றுகிறது.

நன்றி - தமிழ்மணி