க நா சு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
க நா சு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

க.நா.சு. உருவாக்கிய புரட்சி - தமிழவன்


என்போன்றோர் பரவலாக அன்று படிக்கக் கிடைத்த நாவல்களைத்தான் படித்தோம். முக்கியமாகப் படிக்கக் கிடைத்தது அகிலன், நா.பார்த்தசாரதி, சாண்டில்யன், கல்கி, மு.வரதராசன் ஆகியோரின் நாவல்கள். ஜனரஞ்சகமான நாவல்களுக்கும் கலைத்தரமான நாவல்களுக்கும் வித்தியாசமுண்டு என்று தெரியாது.

இது நடந்தது 1965 வாக்கில். தி.மு.க. அலை அப்போது இளைஞர்களை வசீகரித்தது. சிறுநகரங்களில் இருந்து பெருநகரங்கள் வரை தி.மு.க. பேச்சாளர்களின் பெயர்கள் எல்லோருக்கும் பரிச்சயம். ஒவ்வொரு இரவிலும் பிரச்சாரக்கூட்டங்கள். ‘அண்ணா என்பது ஒருமாயமந்திரச்சொல். ஆனால் என் போன்றோர் படித்த கல்லூரிகளில் காங்கிரஸ் பரவியிருந்ததால் பல இளைஞர்கள் காங்கிரஸ் சார்பில் வாதாடினார்கள். அவர்களின் விவாதமும் கவர்ச்சியாகத்தான் அமைந்திருந்தன. பெரும்பாலும் திருநெல்வேலி மாவட்டம் காங்கிரஸ் கோட்டை. அப்பகுதிகளில் காங்கிரஸ் கொள்கை பரவியிருந்தது. இளைஞர்களிடமும் காங்கிரஸ் பரவியிருந்தது. இந்த இளைஞர்கள் அதிகம் உணர்ச்சிவயப்படாதவர்களாய்க் காணப்பட்டனர். இவர்களிலும் நிறைய மேடைப்பேச்சாளர்கள் இருந்தனர்.

என்றாலும் நான் படித்த கல்லூரியில் வை.கோபாலசாமியும் வலம்புரி ஜானும்தான் பட்டிமன்ற இரட்டையர்கள். எந்தத் தலைப்பிலும் வெட்டியும் ஒட்டியும் பேசும் இரட்டையர்கள். காங்கிரஸ் இளைஞர்களுக்கு இவர்கள் முன் நிற்கும் திறமை இருக்கவில்லை.

எங்கள் ஆசிரியர்கள் எல்லோரும் தி.மு.க. சார்பாளர்கள்தாம். எனவே மு.வரதராசன்தான் அவர்களின் சிறந்த நாவலாசிரியர். இரவில் இரண்டு மூன்று மணி என்று கண்விழித்து மு.வ. நாவல்களைப் படித்தோம். அந்த வயசில் எங்களைக் கவர்ந்தவை காதல் சார்ந்த நாவல்கள் என்பதால் அந்த மு.வ.பாணி நாவல்களைப் படித்தோமா, அல்லது அந்த நாவல்களில் வரும் இலட்சியத்திற்காகப் படித்தோமா என்று தெரியவில்லை.

அதுபோல்தான் நா.பார்த்தசாரதியின், பூரணி, அரவிந்தன் என்ற இரண்டு பெயர்களைத் தெரியாத நாவல் வாசகர்கள் யாரும் எங்கள் மத்தியில் இல்லை. ஒருவித லட்சியம், தூய்மை, உணவுக்கட்டுப்பாடு (மறைமுகமாக பாலியல் கட்டுப்பாடும்) போன்றன இந்த நாவல்களில் பரப்பப்பட்ட கருத்துகள்.

இரண்டு ஆண்டுக்குள் இந்த இலக்கிய உலகமும் அதன் கருத்துகளும், இலட்சியங்களும் தகர்ந்து போகும் என்று அறிந்திருக்கவில்லை.

தகர்த்தவரின் பெயர் க.நா.சு.

நான் க.நா.சு. வை எண்பதுகளில்தான் சந்தித்தேன். ஆனால் ‘எழுத்து தொடங்கி எல்லாச் சிறு பத்திரிகைகளும் அவர் பெயரை உச்சரித்தன. போதாக்குறைக்கு க.நா.சு. வின் ‘இலக்கியவட்டம் என்ற இதழ் 60களில் என் கைக்குக் கிடைத்தது. பாதுகாப்பாய் பைண்ட் செய்யப்பட்ட ‘இலக்கிய வட்டம் இதழ்கள். என் 22-ஆம் வயதில் இலக்கிய வட்டம் புரியவேயில்லை. ஆனால் எனக்கு அந்த இதழ்களில் ஒரு கவர்ச்சி இருந்தது.

இன்று தமிழ் படிக்கவரும் 22-ஆம் வயது மாணவ மாணவிகளிடம், எனக்கு புத்திலக்கிய ஈடுபாட்டை ஏற்படுத்த முடிந்ததேயில்லை. ஒருவேளை சுமக்க முடியாத அளவு பக்தி இலக்கியம், தொல்காப்பியம் அது இது என்று சுமையைக் கொடுப்பதால் அவர்களுக்கு அந்த வயதில் வரக்கூடிய புதியதைக் கண்டால் தோன்றும் ஆர்வம் மங்கிவிட்டதா? தெரியவில்லை.

க.நா.சு.வுக்கும் தி.மு.க.வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் மெதுமெதுவாக க.நா.சு. வின் இலக்கியக் கருத்துகளை அறிய அறிய அவர் ஒரு பெரிய புரட்சிக்காரர்போலத் தென்பட்டார். தி.மு.க. பரப்பிய கருத்துப்புரட்சி ஒருவிதமென்றால் க.நா.சு. பரப்பிய கருத்துப் புரட்சி முற்றிலும் மாறுபட்டது.

அகிலன் எழுத்தாளர் அல்ல என்றார் க.நா.சு. என் கற்பனை இலக்கிய உலகம் ஒரே அடியாய் தகர்ந்தது. க.நா.சு. ஒரு தகராறு பேர்வழி என்று நான் நினைக்கவில்லை. மற்றவர்கள் ஒன்று சொன்னால், தான் இன்னொன்றைச் சொல்லி கவனத்தைத்தன் பக்கம் திருப்பும் ஆசை கொண்டவரல்ல என்று ஏனோ மனதில் உறுதியாகப் பட்டது.

அடுத்ததாக, நா.பார்த்தசாரதி எழுதுவது நாவல் அல்ல என்றார். எனக்கு ஒரே குழப்பம்; அப்படியென்றால் நாவல் என்றால் என்ன? ஒரே கலவரம் என்னைப் பிடித்தாட்டத் தொடங்கியது.

இன்னும் ஒரு போடு போட்டார். மு.வரதராஜனுக்கு நாவல் எழுதத் தெரியாது.

என் புரிதல் உலகம் கொஞ்சம் கூட மிச்சமில்லாம் தகர்ந்தது. அப்படியென்றால் நானும் என் போன்ற பிற இளைஞர்களும் மோசடி செய்யப்பட்டுவிட்டோமா?

எங்கள் தமிழாசிரியர்கள், நாங்கள் படித்த இலக்கிய வரலாறுகள் எல்லாம் வெறும் பொய்யா? பொய்தான் என்று அடித்துச் சொன்னார் க.நா.சு.

இங்குக் கவனிக்க வேண்டியது க.நா.சு. சொன்ன சிந்தனைகளின் பின்னால் அமைந்திருந்த தத்துவம். அவற்றைக் க.நா.சு. அவரின் வாழ்க்கை முழுவதும் பரப்பிக் கொண்டிருந்தார். இவரளவுக்கு ஆழம் இல்லாவிட்டாலும் சி.சு.செல்லப்பா முக்கியமான காலகட்டத்தில் ஒரு பத்திரிகையை நடத்தியதால் இருபதாம் நூற்றாண்டின் முக்கியமான இலக்கிய ஆளுமையாக இலக்கிய வரலாற்றில் பதிவு செய்யப்படுவார். க.நா.சு.விடம் வேதாந்த விசாரம் உள்ளோட்டமாய் இருந்தது என்று ஒரு பெரிய தாக்குதலைச் செய்து ஒருநூல் எழுதியிருந்தார் க. கைலாசபதி. தனிப்பட்ட முறையில் க.நா.சு.வை அது பாதித்தது. ஒருமுறை பெங்களூருக்கு க.நா.சு. வந்தபோது சுமார் 8 மணிநேரம் ‘படிகள் சிறு பத்திரிகைக்காக நாங்கள் ஒரு பேட்டி எடுத்து நாடாவில் பதிவு செய்தோம். அதிலிருந்து சில பகுதிகளை அப்போது வெளிவந்துகொண்டிருந்த ‘படிகளில் பிரசுரித்தோம்.

மார்க்சியர்கள் க.நா.சு.வை வெறுக்கத் தேவையில்லை என்பதே அந்தப் பேட்டியின் அடிநாதமாக இருந்தது.

அதுவரை இடதுசாரியினர் க.நா.சு.வை அகில உலக சுதந்திர காங்கிரஸ் என்ற வலதுசாரி இலக்கிய அமைப்பைச் சார்ந்தவராகவே பார்த்தார்கள். ஆனால் க.நா.சு. எனக்கு மார்க்சியம் தெரியாது, பின் எப்படி நான் மார்க்சிய எதிரியாக இருக்கமுடியும் என்று கேட்டார். இதனை நாங்கள் படிகள் இதழில் பதிவு செய்தோம்.

அது உண்மைதான். மார்க்சிய எதிரியாக இருக்கவேண்டுமென்றால் நிரம்ப படித்திருக்க வேண்டும். சமீபத்தில் நான் உம்பர்த்தோ எக்கோவின் (Umberto Eco) இலக்கியத்தின்மீது (On Literature) என்ற கட்டுரைத் தொகுப்பைப் படித்தேன். அதில் மார்க்ஸின் ‘கம்யூனிஸ்ட் அறிக்கை என்ற பிரச்சார நூல், இரண்டு நூற்றாண்டுகளைப் பாதித்து மாற்றியது என்கிறார் எக்கோ. அவ்வளவு பெரிய சிந்தனை இயக்கத்தை வெள்ளை கதர் சட்டையும் கதர் வேட்டியும் அணிந்து கறுப்புக் கண்ணாடியுடன் அலைந்து கொண்டிருந்த ஒரு வயதான பிராமணர் மறுக்கமுடியுமா? அவருடன் பேசிப் பார்த்ததில், கநாசுவுக்கு ஆங்கிலம் மூலம் படைப்பு இலக்கியம் பற்றி ஆழ்ந்த படிப்பு இருந்த அளவு மார்க்சியம் பற்றி இல்லை எனத் தெரிந்தது. படிகளில் வெளிவந்த பேட்டி க.நா.சு. மீது அதிக மதிப்புகொண்ட ச.கந்தசாமி போன்ற இலக்கியவாதிகளைக் கவர்ந்தது.

ஆனால் மார்க்சிய கம்யூனிஸ்டு மற்றும் இந்திய கம்யூனிஸ்டு என்ற இரு பிரிவினரையும் அதிகமாக ஈர்க்கவில்லை. அதற்கான காரணம் க.நா.சு. தமிழிலக்கியம் பற்றிச் சொல்லிக்கொண்டு வந்த கருத்துகளை ‘கசடதபற போன்ற பத்திரிகைகள் பெருவாரியாக தமிழில் நிலைநாட்டிய கட்டம் அது. பெரும்பாலும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்குள்ளும் க.நா.சு.வின் இலக்கியக் கருத்துகள் பரவியிருந்தன. எழுபதுகளின் ஆரம்பத்தில தமிழில் கம்யூனிஸ்டு கட்சிக் கருத்துகள் ஒருவகையாகவும் எண்பதுகளின் இறுதியில் கம்யூனிஸ்டு தோழர்களின் கருத்துகள் வேறு வகையாகவும் அமைந்தன.

அதிர்ச்சி அடையத்தக்க உண்மை என்ன என்றால் தமிழகத்தில் இலக்கியக் கருத்துகள் மிக விரைவில் மாறிவிட்டன. ஒரு இருபது வருடங்களில் இலக்கியம் தமிழில் மாறிவிட்டது. ‘ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் என்ற மாந்திரிக எதார்த்தவாத நாவல் வந்தபோது பெரியவர் தி.க.சி.யும் சில இடதுசாரி நண்பர்களும் எதிர்த்தார்கள். இன்று அவர்களின் கட்சியினர் மாந்திரிக எதார்த்த வாத நாவலை எழுதுகிறார்கள்; பாராட்டி விமரிசனம் எழுதுகிறார்கள்.

அதாவது க.நா.சு.வின் இலக்கியக் கருத்துகள் இன்று இடதுசாரிக் கட்சிப் படைப்பாளர்களால் பின்பற்றப்படுகிறது. படைப்பில் கருத்து வெளிப்படையாக வரக்கூடாது என்பது க.நா.சு.வின் கொள்கை. சோசலிச எதார்த்தவாதம் என்ற பெயரில் பிரச்சார எழுத்தைத் தமிழக கம்யூனிஸ்டுகள் எழுத ஊக்கப்படுத்தப்பட்டனர். இதில் வேடிக்கை என்னவென்றால் மார்க்சும் எங்கெல்சும் கூட பிரச்சாரமாக கலைப்படைப்பு அமையக்கூடாது என்றே கூறுகிறார்கள். அதாவது க.நா.சுவும் மார்க்சிய மூலவர்களும் இவ்விஷயத்தில ஒரே கருத்தைத்தான் கொண்டிருந்தார்கள். ஆக மார்க்சியர்கள் மற்ற வர்களின் இலக்கியப் போக்குகளைப் பின்பற்ற ஆரம்பித்துள்ளார்கள். இது ஆரோக்கியமான போக்கு. தமிழ்மொழிதான் நல்ல மார்க்சிய இலக்கியம் பற்றி அறிவுறுத்தமுடியுமே தவிர, தமிழ் தெரியாத ஏதோ மொழிபேசும் கட்சித் தலைவர்கள் அல்ல.

அன்று க.நா.சு. அகிலனையும் நா.பார்த்தசாரதியையும் மு.வரதராஜனையும் தாக்கித் தகர்த்ததால் இலக்கியம் பல்வகையாகப் பரவ வாய்ப்பு ஏற்பட்டது என்பதை க.நா.சு. விளம்பரப்படுத்தியிருக்கிறார்.

தமிழ் மொழியில் இன்று நடக்கும் அதிவேக மாற்றங்கள் புதிது புதிதாக இலக்கியப் படைப்புகளைத் தமிழுக்குத் தந்துகொண்டிருக்கின்றன.

இங்கு நடந்த மாற்றங்களைக் கவனிக்கும்போது பொதுவாக ஒரு கருத்தைச் சொல்லலாம். இலக்கிய வடிவம் என்பது ஒரு மண்ணெண்ணெய் டப்பா போன்றதல்ல; இலக்கியக்கருத்து என்பது டப்பாவில் ஊற்றும் மண்ணெண்ணெய் அல்ல. வடிவம்கூட ஒரு செய்திதான். உள்ளடக்கம்கூட ஒரு வடிவம்தான் என்பது இப்போது தமிழில் உறுதிப்பட்டுவருகிறது.

க.நா.சு. சொல்லிவந்த கருத்துகள் இவைதாம் என்று கூறலாம். மேடைகளில் உரக்க, அடுக்கு மொழியில் கருத்துகள் கருத்துகளாக எல்லோரும் பேசிக் கொண்டிருந்த தருணத்தில், க.நா.சு. அன்று புறக்கணிக்கப்பட்டார். ஆனால் தொடர்ந்து அவர் புறக்கணிக்கப்படமுடியாது. அவரது படைப்புகள் பற்றி வேறுபட்ட கருத்து உள்ளவர்கள்கூட அவரது இலக்கியம் பற்றிய கருத்துகளைப் புறக்கணிக்க முடியாது.

ஆனால் பிரச்சினை என்னவென்றால் க.நா.சு.வின் கருத்துகளைவிட அரூபமான இலக்கியக் கருத்துகள் இன்று களத்திற்கு வந்துவிட்டன. அந்த அளவு தமிழ் வேகமான மொழி ஆகிவிட்டது.

நன்றி - உயிரோசை

வாசகரும் எழுத்தாளரும் – க.நா.சுப்ரமணியம்

இது ஜனநாயக யுகம்அதனால் வாசகனுக்கு ஒரு முக்கியத்துவம் ஏற்பட்டிருக்கிறது என்று பலரும் நினைக்கிறார்கள். அது உண்மையில் அப்படியில்லை. உலகில் முதல் எழுத்தாளன் தோன்றிய முதலே வாசகர்களின் முக்கியத்துவமும் தொடங்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் இன்று பழைய காலத்திய முக்கிய இலக்கியாசிரியர்கள் என்று கருதப்படுபவர்களில் பெரும்பாலோர் வாசகர்களை மறந்து விட்டு, தன் பாட்டில், எழுதியவர்கள்தான். வாலி வதத்தைப் பற்றியோ, விபீஷண சரணாகதி பற்றியோ இன்று வரை ஏற்பட்டுள்ள வாசக விவாதங்களை வால்மீகி என்கிற கவிமட்டும் கேட்டு அவற்றைக் கொண்டு தன் காரியத்தை அமைக்க முயன்றிருப்பாரேயானால், அவர் காவியம் முற்றுப்பெறாமலேதான் இருந்திருக்கும் என்று சொல்லலாம். ஆனால் வால்மீகி மகரிஷி என்று சொல்லித் தப்பித்துக்கொள்ள முடியாது. இன்று எழுதுகிற ஒவ்வொருவருமே மகரிஷிதான்; சந்தேகமில்லை.

இலக்கியாசிரியன் தன் வாசகனை எந்த அளவுக்கு நினைவில் கொண்டு தன் படைப்புக்களைச் செய்கிறான் என்பது விவாதத்துக்குரிய விஷயமாகும். நினைப்பதேயில்லை என்பதிலிருந்து, ‘ஏதோ கொஞ்சம் லேசாக நினைவிருக்கும்என்பதுவரை சொல்லலாம். ஆனால் இலக்கியச் சரித்திரத்தில் காணக்கிடக்கிற ஒரு உண்மை தப்ப முடியாததாக இருக்கிறதுஎந்தக் காலத்தில் வாசகன் முக்கியத்துவம் உச்ச கட்டத்தை எட்டுகிறதோ அந்தக்காலத்தில் இலக்கிய சிருஷ்டி ஓரளவுக்குத் தரம் குறைந்ததாக இருப்பது தெரிகிறது. உதாரணமாக சமஸ்கிருத இலக்கியத்தில் 9,10 நூற்றாண்டுகளில் கவிக்குத் தருகிற அளவுக்கு வாசகனுக்கும் முக்கியத்துவம் தந்து, அந்த வாசகன் கவியேபோல, சில சமயங்களில் கவியையும் விட முக்கியமானவன் என்று அவனுக்கு ஸஹ்ருதயன் என்று பெயர் தந்து பாராட்டினார்கள். இதற்கு ஓரிரண்டு நூற்றாண்டு கவிதையே க்ஷ£ணமடைந்து தரங்குறைந்து தேய்ந்து ஒடுங்கிவிட்டது என்பது சரித்திர உண்மை.

வாசகனே இல்லாவிட்டால் இலக்கியம் எதற்கு, ஏது என்று சொல்பவர்கள் இருக்கலாம். வாசகன் இல்லாத நிலையோ, முக்கியத்துவம் பெறாத நிலையோயல்ல விஷயம். சர்வ ஆதிக்கமும் வாசகனுடையதாக இருப்பதற்கும், சர்வ ஆதிக்கமும் எழுதுபவன் கையிலேயே என்று இருப்பதற்கு இடை நிலையில் ஒரு இடம் இருக்கவேண்டியதுதான் லக்ஷிய நிலை என்று சொல்ல வேண்டும். வா¡சகனை மனதில்கொண்டு, வாசகனை நாடி எழுதுகிற இலக்கியாசிரியர்களை விட, வாசகனை மனதில் கொள்ளாத, எவனுக்கெந்தக் கலை இருக்கிறதோ படிக்கட்டும், சர்வ ஜனரஞ்சகமானது என்று ஒரு தரம் இலக்கியத்திலேயே கிடையாது என்று நினைக்கிறவனே நல்ல இலக்கியாசிரியனாக இருக்கவேனும்இருந்து வந்திருக்கிறான் என்று சொல்ல வேண்டும்.

பொதுவாக இதெல்லாம் சரி. உன் கதைகளையோ உன் நாவல்களையோ, உன் கவிதைகளையோ, உன் விமர்சனக் கட்டுரைகளையோ பற்றி உனக்குள்ள (அது ஒன்றைரையே அரைக்காலோ, அல்லது இருநூறோ) வாசகன் என்ன நினைக்கிறான், அவன் நினைப்பது பற்றி நீ என்ன நினைக்கிறாய்?” என்று கேள்வி கேட்கப்பட்டால், என்னால் நிதானித்து ஒரு பதில்தான் சொல்ல முடியும். “அது அப்படியொன்றும் விவரிக்ககூடிய உறவு அல்ல. வாசகனுக்கும் எழுத்தாளருக்கும் உள்ள உறவு வார்த்தைகளுக்கு அகப்படாது,” என்று சொல்லத் தோன்றுகிறது. இருந்தும் அதையும்தான் சற்றுச் சொல்லிப் பார்க்கலாமே என்று நினைத்துக் குறிப்புக்காட்டுகிற மாதிரிதான் வாசகர்கள் சிலருடன் கடித மூலமாகவோ நேரடியாகவோ நான் நடத்திய சம்பாஷணைகள் என்னை என்ன நினைக்கத் தூண்டுகின்றன என்பதைச் சொல்லுகிறேன்.

மதுரையிலிருந்து ஒரு வாசகர் மணி மணியான எழுத்துக்களில் சுதேசமித்திரன் வாரப்பதிப்பில் என் ஒவ்வொரு கதையும் வெளிவந்தவுடன் பாராட்டிஆஹா அற்புதம்! பிரமாதம்என்றெல்லாம், ஒரு தபால் கார்டில் அடங்கக்கூடிய அளவில் எழுதுவார். இந்தக் கடிதங்களுக்கெல்லாம் முக்கியத்துவம் தரப் போதுமான அறிவு எனக்கில்லை. என் மனைவி அவற்றைத் தொகுத்துப் பத்திரப்படுத்தி வைப்பாள். இன்னமும் வைத்திருக்கிறாள் என்று எண்ணுகிறேன். இந்த அன்பரின் பெயரை வெளியிட எனக்கிஷ்டமில்லை. ஏனென்றால் இன்று அவர் தன்னைப் பிரபலமான எழுத்தாளராகக் கருதிக்கொண்டிருக்கிறார். ஒரு விசேஷம் என்னவென்றால், அவர் பிரபலமாகத் தொடங்கிய தேதியிலிருந்து எனக்குக் கடிதம் எழுதுவதை நிறுத்திவிட்டார். இந்த ஒருவர் தன்னுடைய ஸஹ்ருதயா என்று நான் இவர் எழுதிய கடிதங்களை வைத்து ஏற்றுக் கொண்டால் நான் எழுதுவதன் தொடக்கம், நான் எழுதுகிற பாணி, இலக்கியம்பற்றி என் கொள்கைகள் எல்லாவற்றையுமே மாற்றியமைத்துக்கொள்ள வேண்டிவரும். அதற்கு நான் தயாரில்லை. அதற்காக இந்த வாசகர் தான் நம்பாததைச் சொன்னதாகவும் நான் கருதவில்லை. ஏதோ சொன்னார்கார்டு எழுத வசதியிருந்தது அவ்வளவுதான். அவருடைய கையெழுத்தைப் பார்த்து நான் பொறாமைப்பட்டதுண்டு என்றும் சொல்ல விரும்புகிறேன்.

இன்னொருவரிடமிருந்தும் எனக்கு அந்த நாட்களில் அடிக்கடி கடிதம் வரும். நாவல், கதை, எது எழுதினாலும் அதைப்பற்றித் தீர்க்கமாக விவாதித்து இது சரியென்று எனக்குத் தோன்றுகிறதுஇது சரியல்ல என்று எண்ணுகிறேன் என்று எழுதுவார். அவர் கடிதங்களுக்கு நான் பதில் எழுதியதில்லைஆனால் அவர் அதற்காக எழுதுவதை நிறுத்திவிடவில்லை; எழுதிக்கொண்டே இருந்தார். ஆனால் பின்னர் சற்றுக் காலதாமதமாக அவரே ஏதோ நாவல், கதை ஒன்று எழுத ஆரம்பித்த பிறகு, அவர் சரியல்ல என்று எனக்குச் சொன்ன பாணியைப் பின்பற்றி எழுதுகிறார் என்று கண்டு, அவரைச் சந்தித்தபோது அது பற்றிக் கேட்டேன். “உண்மைஎன்று ஒப்புக்கொண்டார். ஆனால் ஏன் அப்படி என்று சொல்ல அவருக்குத் தெரியவில்லை.

என் வாசகர்கள் பற்றி இது போதும் என்று எண்ணுகிறேன். ஆனால் பொதுவாக விமர்சனக்கட்டுரைகள் எழுதும்போதுதான் மனதில் வைத்துக்கொண்டுதான் எழுதுகிறேன். “நீங்கள் அழிக்கும் விமரிசனம் ஏன் எழுதுகிறீர்கள்? ஆக்க விமர்சனம் செய்யக்கூடாதா?” என்றுதான் விமர்சனம் எழுத ஆரம்பித்த காலத்தில் பல வாசகர்கள் என்னைக் கேட்டதுண்டு. அதற்கு ஒரே பதில்தான் உண்டு. “அழிக்கப்பட வேண்டியது அதிகமாக இருக்கும்வரை அழிக்கும் விமரிசனம் செய்தேதான் தீரவேண்டும். ஆனால் ஆக்க விமரிசனம் இல்லாமல் அழித்தல் விமரிசனம் என்று ஒன்று கிடையாது. இலக்கிய விமர்சனத்தில் ஒரு நோக்கில் அழிப்பதும் ஆக்குவதும் ஒன்றேஎன்றுதான் பதில் தரவேண்டும்.

மற்றபடி கவிதை, சிறுகதை, நாவல் என்று எழுதுகிறபோது நான் எழுதியதை எந்தச் சுண்டைக்காய் வாசகன் ஏற்றுக்கொள்ளுவான் என்பது பற்றி எனக்கு நினைப்பு இருப்பதில்லை. தான் இன்று கவிதை என்று எழுதுவதை, கம்பனும் இளங்கோவும் டாண்டேயும் ஷேக்ஸ்பியரும் இன்று இருந்தால் ஏற்றுக் கொள்வார்களா என்பதுதான் என் நினைப்பு. நிகழ்கால வாசகன் அறிவால், ஆற்றலால், அரசியலால் அவர்களை விடச் சிறந்தவனாக இருக்கலாம்ஆனால் இலக்கியத் தரத்தால் எந்த வாசகனும் எந்தக் காலத்திலும் எட்டாத ஒரு தரத்தையே பழங்கால, நிகழ்கால, வருங்கால எழுத்தாளர்கள் எல்லாம் எட்ட முயலுகின்றனர். அந்தத் தரம் ஒரு சரடுஅதைக் கண்டுகொள்ளத்தான் நம் பொது ஸீரியஸ் எழுத்தாளனும், தரமுள்ள இலக்கியாசிரியனும் முயலுகிறான். அந்தத் தரத்தை வாசகர்கள் தேடிக் கண்டுகொள்ள வேண்டும்.

இன்றைய வாசகர்கள் தேடத் தயாராக இல்லை. ஆனால் அவர்கள் தேடுவது அவர்களுக்குக் கிடைக்கும்.

நன்றி: ஞானரதம்மே 1970.

விமர்சனக் கலைக்கு வளம் சேர்த்த க.நா.சுப்ரமணியம் - செங்கோட்டை ஸ்ரீராம்

மிழின் இலக்கிய வளமையும் தொன்மைச் சிறப்பையும் நமக்குள்ளே வைத்திருத்தல் தகாது; உலக மொழிகளில் எடுத்துச் சென்றால் அதன் பெருமை உயரும் என்றெண்ணியவர் க.நா.சு. அதனால் தமிழின் தலைசிறந்த படைப்புகளை ஆங்கிலத்தில் கொண்டுசெல்ல மொழிபெயர்ப்புக் களம் கண்டார். உலக இலக்கியத்துக்கு இணையாக உயர்ந்த தரத்தில் நவீனத் தமிழ் இலக்கியமும் திகழ வேண்டும் என்ற விருப்பத்தால், இப்பணியில் தன்னை முழுவதும் ஈடுபடுத்திக் கொண்டவர்.

க.நா.சு. என்ற மூன்றெழுத்தால் இலக்கிய உலகில் செல்லமாக அழைக்கப்பட்டவர் க.நா.சுப்ரமணியம். கந்தாடை நாராயணசாமி ஐயரின் புதல்வராக சுவாமிமலையில், 1912-ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி பிறந்தார்.

40 நாவல்கள், 10 சிறுகதைத் தொகுதிகள், 80க்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்பு நூல்கள், தத்துவ விசார நூல்கள் 10, இலக்கிய விசாரம் என்ற கேள்வி பதில் நூல் ஒன்று, உலகத்துச் சிறந்த நாவல்கள், உலகத்துச் சிறந்த நாவலாசிரியர்கள், உலகத்துச் சிறந்த சிந்தனையாளர்கள் என மூன்று தொகுதிகள், இலக்கிய விமர்சன நூல் ஒன்று. இன்னும் பல நூல்களை தம் 86 வயதுக்குள் எழுதிக் குவித்தவர் இவர். அதற்கு மூல காரணமாக அமைந்தது, சிறுவயதிலேயே இவர் ஊன்றிப் படித்த இலக்கியங்கள் மற்றும் பிற நூல்கள்தான்.

÷சுவாமிமலை கோவிலருகே தொடக்கப்பள்ளியில் தொடங்கி, பின்னர் கும்பகோணம் நேட்டிவ் உயர்நிலைப் பள்ளியில் படிப்பு தொடர்ந்தது. அவருடைய தந்தைக்கு சுப்பிரமணியத்தை ஏதாவது ஓர் அரசுப் பணியில் அமர்த்திவிட எண்ணம். எனவே, ஆங்கிலக் கல்வி முறைக்கு மாற்றிப் படிக்க வைத்தார். கும்பகோணம் அரசுக் கல்லூரி, அண்ணாமலைப் பல்கலை என விரிந்த அவருடைய கல்விப் பயணம், அவருக்கு இலக்கிய அறிவையும் கூடவே ஆங்கிலப் புலமையையும் தந்தது.

படிக்கும் காலத்திலேயே ஐரோப்பியப் பத்திரிகைகளுக்கு கதைகள் அனுப்பி வைத்தார் சுப்ரமணியம். வெளிநாட்டு மற்றும் இந்திய ஆங்கிலப் பத்திரிகைகளில் அவருடைய கதை கட்டுரைகள் வெளிவந்தன. 1935-இல் டி.எஸ்.சொக்கலிங்கம் நடத்திவந்த "காந்தி' இதழில் வெளிவந்த கதைகள் அவரது சிந்தனையை தமிழின்பால் திருப்பின. தொடர்ந்து மணிக்கொடி அவரை ஈர்த்தது. தமிழில் எழுதத் தொடங்கினார் க.நா.சு.

÷தமிழ் இலக்கியப் பணிக்காகச் சென்னை வந்தவர், தன் எழுத்துகளுடன் கால் பதித்தது "தினமணி' அலுவலகத்தில். அங்கே எழுத்தாளர் வ.ரா. இவருடைய கையெழுத்துப் பிரதிகளை வாங்கிப் பார்த்தார். கே.என்.சுப்ரமண்யம் என்று கையெழுத்துப் போட்டிருந்தார்.

வ.ரா. கேட்டார்... ""நீர் என்ன ஆங்கிலேயனுக்குப் பிறந்தவரா... கே.என்.சுப்ரமண்யம் என்று எழுத?'' வெடுக்கென்று கேட்டார். சுப்ரமண்யமோ யோசித்துக் கொண்டிருந்தார். ""கே.என்.சுப்ரமண்யம் என்றெல்லாம் எழுதாதீர்... கந்தாடை நாராயணசாமி ஐயர் மகன் சுப்ரமண்யம் அல்லவா நீர்; க.நா.சு. அல்லது க.நா.சுப்ரமண்யம் என்றே எழுதும்'' என்று கட்டளையிட, இவரும் அதை ஏற்றுக்கொண்டார். அதுமுதல் க.நா.சு. என்ற மூன்றெழுத்துப் பெயர் தமிழ் இலக்கிய வானில் சுடர்விடத் தொடங்கியது.

ஒரு நாளைக்கு குறைந்தது 10 பக்கங்கள் தமிழில் சுயமாக எழுதுவது, 15 பக்கங்கள் தமிழில் மொழிபெயர்ப்பது, 10 பக்கங்கள் ஆங்கிலத்தில் புதிதாகப் படைப்பது, இத்துடன் மதிப்புரை, விமர்சனங்கள் எழுதுவது என்பதை எழுத்துப் பணிக்கான திட்டமிடலாகக் கொண்டார். தழுவல் எனும் உத்தியோடு விகடன், சுதேசமித்திரன், இமயம், சக்தி, ஜோதி உள்ளிட்ட இதழ்களில் பிறமொழி இலக்கியங்களைத் தமிழில் தந்தார்.

"சூறாவளி' எனும் இலக்கிய இதழைத் துவக்கினார். ராமபாணம், சந்திரோதயம், இலக்கிய வட்டம், ஞானரதம், முன்றில்... இவை எல்லாம் க.நா.சு.வால் தொடங்கப்பட்ட இதழ்கள்தான். இவற்றால் ஏற்பட்ட பொருளாதார நஷ்டம், தமிழுலகுக்கு மாபெரும் மொழிபெயர்ப்பு இலக்கிய நஷ்டத்தைத் தந்துவிட்டது.

÷தயவு தாட்சண்யமற்ற கண்டிப்பான விமர்சனங்களுக்குப் பெயர் பெற்றவர் க.நா.சு. "தினமணி'யில் இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் அதிகம் எழுதியவர். அசுரகணம், பித்தப்பூ, தாமஸ் வந்தார், கோதை சிரித்தாள் எனப் பல நாவல்களையும் எழுதியுள்ளார். 1979-இல் குமாரன்ஆசான் நினைவு விருது, 1986-இல் சாகித்ய அகாதெமி விருது என விருதுகளும் பெற்றவர். பொய்த்தேவு - இவரது பிரபலமான நாவல்களுள் ஒன்று.

அந்நாவலில் இவரது எழுத்து நடை கதை நடையாக இல்லாமல் பல இடங்களில் கட்டுரை நடையாகவே இருக்கிறது என்பது அந்தக் கால விமர்சகர்களின் கணிப்பு.

க.நா.சு. மேற்கத்திய எண்ணம் கொண்டவர்; தமிழ்நாட்டைப் பற்றி அக்கறை இல்லாதவர் என்றெல்லாம் அந்தக் காலத்தில் அவர் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அவர் மேற்கொண்ட மொழிபெயர்ப்புப் பணி அதற்குக் காரணமாக இருக்கலாம். இருப்பினும், மொழிபெயர்க்கப் படைப்புகளைத் தேர்வு செய்யும்போது அதை உணர்வுப்பூர்வமாகவே செய்தார் என்பது புரியும். ÷தமிழர்களை, தமிழ்க் கலாசாரத்தை மனதில் கொண்டே, அவர்களுக்கு ஒட்டக் கூடியதைத்தான் நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தார் என்பதையும் உடனிருந்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால், க.நா.சு.வே விமர்சனக் கலைக்கு உரமிட்டவர். அவருடைய விமர்சனங்கள் இன்றளவும் பேசப்படுகின்றன. அந்த வகையில், க.நா.சு.வுக்கு எழுத்துத் துறைக்கு அப்பால் நண்பர்கள் அதிகம் இருந்ததில்லை. சம காலத்து எழுத்தாளர்கள் பற்றி, படைப்புகள் பற்றி நிறைய விமர்சனங்கள் செய்துள்ளார் க.நா.சு. ஆனால், பாரதி பற்றி அவரிடம் ஒரு மெüனமே இருந்திருக்கிறது. பாரதியைக் குறைசொல்லி எழுதியதுமில்லை; பாராட்டியும் சொன்னதில்லை.

தன் விமர்சனங்கள் பற்றி அவர் ஓரிடத்தில் சொன்னது...

"நீங்கள் அழிக்கும் விமர்சனம் ஏன் எழுதுகிறீர்கள்; ஆக்க விமர்சனம் செய்யக்கூடாதா என்றுதான் விமர்சனம் எழுத ஆரம்பித்த காலத்தில் பல வாசகர்கள் என்னைக் கேட்டதுண்டு. அதற்கு ஒரே பதில்தான் உண்டு. அழிக்கப்பட வேண்டியது அதிகமாக இருக்கும்வரை அழிக்கும் விமர்சனம் செய்தேதான் தீரவேண்டும். ஆனால், ஆக்க விமர்சனம் இல்லாமல் அழித்தல் விமர்சனம் என்று ஒன்று கிடையாது. இலக்கிய விமர்சனத்தில் ஒரு நோக்கில் அழிப்பதும் ஆக்குவதும் ஒன்றே என்றுதான் பதில் தரவேண்டும். மற்றபடி கவிதை, சிறுகதை, நாவல் என்று எழுதுகிறபோது நான் எழுதியதை எந்தச் சுண்டைக்காய் வாசகன் ஏற்றுக் கொள்ளுவான் என்பது பற்றி எனக்கு நினைப்பு இருப்பதில்லை. தான் இன்று கவிதை என்று எழுதுவதை, கம்பனும் இளங்கோவும், டாண்டேயும், ஷேக்ஸ்பியரும் இன்று இருந்தால் ஏற்றுக் கொள்வார்களா என்பதுதான் என் நினைப்பு. நிகழ்கால வாசகன் அறிவால், ஆற்றலால், அரசியலால் அவர்களை விடச் சிறந்தவனாக இருக்கலாம்; ஆனால், இலக்கியத் தரத்தால் எந்த வாசகனும் எந்தக் காலத்திலும் எட்டாத ஒரு தரத்தையே பழங்கால, நிகழ்கால, வருங்கால எழுத்தாளர்கள் எல்லாம் எட்ட முயலுகின்றனர். அந்தத் தரம் ஒரு சரடு; அதைக் கண்டுகொள்ளத்தான் நம் பொது ஸீரியஸ் எழுத்தாளனும், தரமுள்ள இலக்கியாசிரியனும் முயலுகிறான். அந்தத் தரத்தை வாசகர்கள் தேடிக் கண்டுகொள்ள வேண்டும். இன்றைய வாசகர்கள் தேடத் தயாராக இல்லை. ஆனால் அவர்கள் தேடுவது அவர்களுக்குக் கிடைக்கும்...'' என்கிறார் க.நா.சு.

நன்றி – தமிழ்மணி

அன்பின் வழி - பேர் லாகர் குவிஸ்ட் - க நா சு

நோபல் பரிசு பெற்ற கதை!


இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மரண அவஸ்தையை அனுபவித்துக்கொண்டு இருந்தார். உடல் தளர்ந்துபோய் மூச்சுவிடவே சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். அவரின் உயிர் பிரியும் நேரம் நெருங்கிவிட்டது.
சிலுவையின் அருகில் அன்னை மரியாளும் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்ட சிலரும் மட்டுமே நின்று கொண்டிருந்தனர். அவர்களின் முகங்கள் வேதனையால் வாடிப்போய், கண்ணீரால் நனைந்திருந்தது.


அவர்களிடமிருந்து சற்றே விலகி மறைவாய் நின்றுகொண்டு ஒரு இளைஞன் இயேசுவையே பார்த்து கொண்டிருந்தான்.
யார் அவன்? எதற்காக மறைந்து நிற்கிறான்?
இயேசு கிறிஸ்துவுக்கு பதிலாக அவன்தான் சிலுவையில் அறையப்பட்டிருக்க வேண்டும். அவன் பெயர் பாரபாஸ்.



மன்னரின் பிறந்தநாளன்று யாரேனும் ஒரு கைதியை விடுதலை செய்வது வழக்கம். அந்த வாய்ப்பு இம்முறை இயேசுவுக்கு வழங்கப்படும் என்று அவரின் நம்பிக்கையாளர்கள் எதிர்பார்த்திருந்தார்கள்.
அவர்களின் நம்பிக்கை பொய்த்துவிட்டது. திருடனும் கொலைகாரனுமான பாரபாஸ் விடுதலை செய்யப்பட்டான். அவனுக்கே தான் விடுதலை செய்யப்பட்டது ஆச்சர்யமாகத்தான் இருந்தது. எனினும், இயேசு நிச்சயமாக ஒரு குற்றவாளியாக இருக்க முடியாது என்று அவன் புரிந்துகொண்டான். அவரை சிலுவையில் அறையவேண்டும் என்ற சூழ்ச்சி திட்டத்தின் காரணமாகவே தான் விடுதலை செய்யப்பட்டிருக் கிறோம் என்பதையும் உணர்ந்து கொண்டான்.
பாவச்செயல்கள் செய்வதையே தொழிலாக கொண்டிருந்தவன் பாரபாஸ். இருந்தாலும், அவனும்கூட இயேசுவின் மரணத்தால் குற்ற உணர்ச்சிக்கு ஆளானான்.

பாரபாஸ் விடுதலையடைந்ததை அவனது நண்பர்கள் விருந்து வைத்து கொண்டாடினார்கள். பாரபாஸ் அதில் கலந்துகொண்டாலும் கொண்டாட்டத்தில் அவன் மனதில் மகிழ்ச்சியில்லை.'யார் அந்த இயேசு கிறிஸ்து? எதற்காக அவரை சிலுவையில் அறைந்தார்கள்? அவர் செய்த குற்றம்தான் என்ன?'
இப்படி பாரபாஸின் மனம் இயேசுவையே எண்ணிக்கொண்டிருந்தது.
ஜெருசலேம் நகரத்தில் அங்குமிங்குமாக அலைந்து திரிந்தான். இயேசுவின் மீது நம்பிக்கை கொண்ட மனிதர்களை சந்தித்தான். 'இயேசு, தேவனின் குமாரன். மனிதர்கள் செய்த பாவங்களை தானே ஏற்றுக்கொண்டு தண்டனை அனுபவித்திருக்கிறார்' என்று அவர்கள் நம்பினர்.
பாரபாஸ் அதில் உண்மையிருப்பதாக ஒப்புக்கொண்டாலும் அவனால் முழுமையாக நம்ப முடியவில்லை. எனினும், மனிதர்கள் செய்யும் பாவச்செயல்களுக்கு மன்னிப்பு உண்டு என்று அவர்கள் நம்பியது பாரபாஸின் மனதிற்கு ஆறுதலாக இருந்தது. தான் செய்த பாவங்களும் மன்னிக்கப்படும், அதன்பிறகு திருந்தி வாழ வேண்டும் என்று அவன் உறுதிகொண்டான்.
ஆனால், அதற்குள் பாரபாஸ் யார் என்பதை இயேசுவின் நம்பிக்கையாளர்கள் கண்டு கொண்டனர். தங்களது குருநாதர் சிலுவையில் அறையப்பட்டது அவனுக்கு பதிலாகத்தான் என்பதால் பாரபாஸின் மீது கோபம் கொண்டு அவனை விரட்டியடித்தனர்.
நகரத்தை விட்டு நீங்கிய பாரபாஸ், மீண்டும் தனது கூட்டத்தினருடன் சேர்ந்துகொண்டான். அவர்களுடன் சேர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டான். ஆனாலும் அதில் அவன் ஆர்வம் காட்டவில்லை. ஜெருசலேம் நகரத்தில் நடந்த சம்பவங்களையே திரும்ப திரும்ப நினைத்துக் கொண்டிருந்தான். பாரபாஸின் கூட்டாளிகள் அவன் தங்களுடன் இருப்பதையே வெறுக்க ஆரம்பித்துவிட்டனர். அதை உணர்ந்துகொண்ட பாரபாஸ் திடீரென்று ஒருநாள் அந்த இடத்தை விட்டு கிளம்பிவிட்டான். அவன் எங்கு போனான், என்ன ஆனான் என்று யாருக்குமே தெரியவில்லை.



சுரங்கம் ஒன்றில் பாரபாஸ் அடிமையாகி விட்டான். அவனோடு சேர்த்து விலங்கிடப்பட்ட மற்றொரு அடிமையின் பெயர் ஸஹாக். அந்த அடிமை இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டவனாய் இருந்தான். இருவரும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இயேவை பற்றியே பேசிக்கொண்டிருந்தனர். ஆனால் இன்னமும் கூட பாரபாஸிற்கு இயேசுவின் மீது முழு நம்பிக்கை வரவில்லை.
அவர்கள் இருவரும் இயேசுவைப்பற்றி பேசிக்கொள்வது உண்மைதானா என்று அரசரின் பிரதிநிதி விசாரித்தார். ஸஹாக் 'இயேசுவே என் கடவுள்' என ஒப்புக்கொண்டான். பாரபாஸோ 'எனக்கு முழு நம்பிக்கையில்லை' என்று உண்மையைக் கூறினான்.
இயேசுவை நம்புபவர்கள் அரசின் விரோதிகளாக கருதப்பட்டனர். எனவே ஸஹாக் சிலுவையில் அறைந்து கொல்லப் பட்டான். பாரபாஸை அந்த அதிகாரி தன் வீட்டிலேயே அடிமையாக வைத்துக் கொண்டார்.யாருடனும் பாரபாஸ் பேசுவதேயில்லை. அந்த அரச பிரதிநிதியின் வீட்டிலிருந்த அடிமை களிலும் சிலர் இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தனர். நகரத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கு அவர்கள்தான் காரணமென்று குற்றம்சாட்டப்பட்டனர். அவர்களுடன் சேர்த்து பாரபாஸ¨ம் சிறை வைக்கப்பட்டான்.



அங்கிருந்தவர்களில் சிலர் 'இயேசு வுக்குப் பதிலாக சிலுவையிலிருந்து தப்பித்த பாரபாஸ் அவன்தான்' என்று அடையாளம் கண்டு கொண்டனர். அவர்களும் அவனை புறக்கணித்துவிட தனியாக ஒதுங்கி நின்றான்.
கடைசியில் அவர்கள் எல்லோரையுமே சிலுவையில் அறைந்து கொன்றார்கள்.
முதல்தடவை பாரபாஸின் சிலுவையை இயேசு சுமந்தார். அவன் தப்பித்துக்கொண்டான். ஆனால் இப்போது அவன் சிலுவையை அவன்தானே சுமக்க வேண்டும்.
செய்யும் தவறுகளுக்கு தண்டனையை அனுபவித்தே ஆகவேண்டும். அதிலிருந்து தப்பிக்க ஒரே வழி செய்த தவறுக்கு மனம் வருந்தி திருந்த முயற்சிப்பதுதான். திருந்திவாழ விருப்பமில்லாத பட்சத்தில் தண்டனையை அனுபவிக்க தயாராக இருக்கவேண்டியதுதான்.



'அன்பின் வழி' என்ற இந்த நாவலை எழுதியவர் ஸ்வீடிஷ் மொழி எழுத்தாளரான பேர்லாகர் குவிஸ்ட். இந்த நாவலுக்கு 1951-ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.