23/07/2011

காமன் - அரிச்சந்திரன் பாடல்கள் ஒப்பீடு (மதுராந்தக வட்டம்) - முனைவர் பொன். சண்முகம்

மனித வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் பல்வேறு சடங்குகள் பின்னிப் பிணைந்துள்ளன. பிறப்பு முதல் இறப்பு வரை இவை நிகழ்த்தப்படுகின்றன. இறந்தவர் மோட்சம் பெற வேண்டிப் பல்வேறு சடங்குகள் நிகழ்த்தப் பெறுகின்றன. இந்நிகழ்ச்சியில் காமன் பாடலும், அரிச்சந்திரன் பாடலும் பாடப்பெறுகின்றன. இதன் நோக்கம் விளைவு பற்றி ஆராய்வதற்காக ஓப்பீட்டு முறையில் காமன் பாடலும், அரிச்சந்திரன் பாடலும் ஆராயப்படுகின்றன.

காமன் - விளக்கம்:-

 

காமன் என்ற சொல் காமம் என்ற சொல்லிலிருந்து வந்தது. காமம் என்பதற்கு இச்சை, சிற்றின்பம், ஆசை, விருப்பம் என்று தமிழகராதி விளக்கமளிக்கிறது. இச்சொல் இலக்கிய வழக்கில் மன்மதனையும், உலக வழக்கில் சிற்றின்பத்தையும் குறிப்பதாகவே அமைகிறது. (Tamil Lexicon, Vol. 1929, 871)

 

புராணங்களில் காமன் காதல் தெய்வமாகக் குறிக்கப் பெறுகிறான். காமன் ஆன்மாவின் முதற்பிறப்பு என்று ரிக்வேதம் கூறுகின்றது. இவன் மிகவும் அழகான இளமையான கடவுள் என்று நாட்டுபுறவியல் அகராதி விளக்கமளிக்கிறது (ASDF 1950, 50). அபிதான சிந்தாமணி காமனை விஷ்ணு மூர்த்தியின் மனதில் பிறந்தவன் என்று கூறுகின்றது. காமன் இந்து மதத்திற்கு உரிய கடவுளாகக் காட்சி தருகின்றான்.

 

வடமொழி நூல்கள் காமனைப் பிராமணக் கடவுள் என்றும் பிரம்மாவின் மகன் என்றும் கூறுகின்றன. இந்திய இலக்கியங்களில் காமத்தைத் தூண்டக்கூடிய கடவுள் மன்மதனைப்போல, கிரேக்க நாட்டில் ஈராஸ், இலத்தீனில் கூபிட் கடவுளர் உள்ளதாகக் குறிப்பிடுகின்றனர். ஈராஸ் கடவுளும் கூபிட்டும் காம உணர்வைத் தூண்டி அதன் மூலம் உயிரினப் பெருக்கத்திற்கு உதவும் தெய்வங்களாக வணங்கப் பெறுகின்றன. தமிழ் இலக்கியங்களில் காதல் கடவுள் என்று காமன் அழைக்கப்பெறுகிறான். சைன, புத்த மதங்களில் காமன் கீழ்நிலையில் வைக்கப்பட்டுள்ளான்.

 

காமன் பாடல்:-

 

தமிழகத்தில் காமன் பாடல் ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு வடிவங்களில் பாடப்படுகிறது. குறிப்பாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் காமன் பாடல் என்றும், தஞ்சை மாவட்டத்தில் இலாவணி என்றும், மதுரை மாவட்டத்தில் எரிந்த கட்சி, எரியாத கட்சி என்றும் அழைக்கப்படுகிறது.

 

பல்வேறு ஊடகங்களில் பாடப்படும் காமன் பாடலின் நோக்கம் ஒன்றாக உள்ளது. எரிந்த கட்சி, எரியாத கட்சி என்று பாடப்படும் பாடலில் காமனைச் சிவன் எரித்தான் என்று ஒரு குழுவினரும், சிவன் அவனை எரிக்கவில்லை என்று மற்றொரு குழுவினரும் பாடுகின்றனர். எரிந்த கட்சியினர் காமதேவன் சிவனால் எரிக்கப்பட்டான் என்பதற்குத் தக்க ஆதாரங்களைக் கொடுக்கின்றனர். எரியாத கட்சியினர் காமன் எரியவில்லை, எரிந்தது காமனின் மனமே என்ற கருத்து அடிப்படையில் மறுத்துப் பாடுகின்றனர். எரியாத கட்சி எரிந்த கட்சியின் வாதத்திற்குத் தகுந்த விளக்கம் கூறித் தன் கட்சிக்கு ஆதரவாக சில கதைகளைச் சொல்கின்றனர். இந்த வாதங்கள் பிணம் வீட்டில் இருக்கும்போது பறை அறைந்து பாடுவார்கள். இதன் நோக்கம் உயிர்விட்டவுடன் பிணத்தையும் வீட்டையும் உயிரானது பிரிய முடியாமல் வீட்டைச் சுற்றி வந்து கொண்டிருக்கும்போது இப்பாடலைக் கேட்டு உயிரானது விண்ணுலகம் செல்லும் என்ற நம்பிக்கைக்காகப் பாடுகின்றனர்.

 

காமன் பாடல் சாவுச் சடங்கில் பாடுவதற்கான காரணம் பின்வருமாறு நம்பப்படுகிறது. தொடக்கக் காலத்தில் காமன் பாடல் மதுராந்தகம் வட்டாரத்தில் இறந்துவிட்ட ஆண்களுக்கு மட்டுமே பாடப்பட்டு வந்தது. சிவன் காமனை எரித்த உடன் இரதிதேவி சிவனிடம் வந்து புலம்புகின்றாள். அப்போது சிவன் மனம் இரங்கி இரதிதேவியிடம் உன் கணவன் இரவில் மட்டுமே உன் கண்ணுக்குத் தெரிவான். அப்பொழுது அவனைக் கண்டு நீ அழக்கூடாது, அழுதால் அப்பொழுதே மறைந்து விடுவான் என்று சிவபெருமான் கூறியதாகக் கூறுகின்றனர். இந்த நம்பிக்கையில் இன்றும் விதவைப் பெண்கள் கனவில் தன் கணவன் வந்தால் அவனைப் பார்த்து அழக்கூடாது என்ற நம்பிக்கை நாட்டுப்புற மக்களிடையே காணப்படுகிறது. இதனால் காமன் பாடல் ஆண்களுக்கு மட்டுமே பாடப்பட்டு வந்துள்ளது. இறந்து விட்ட கணவனுக்கு இரதி புலம்புவது போன்று ஒப்பாரியாகப் பெண்கள் பாடி வந்துள்ளனர். பிற்காலத்தில் காமன் பாடல் தொழில் முறைக் கலைஞர்களால் பாடப்பட்டபோது இறந்தவர்களின் ஆண், பெண் வேறுபாடின்றிப் பாடி வருகின்றனர்.

 

அரிச்சந்திரன் பாட்டு:-

 

இந்து மதத்தைச் சேர்ந்தவர்களின் பிணம் சுடுகாட்டுக்குள் நுழையும்போது அரிச்சந்திரன் பாட்டு பாடப்பட்டு வருகிறது. இடுகாடு, சுடுகாடு, நன்காடு எனப் பலபெயர் இவ்விடத்துக்கு உண்டு. குழிவெட்டிப் பிணத்தை அதில் இட்டுப் புதைத்து அடக்கம் செய்யும் இடமாதலின் அது சுடுகாடு எனவும், வாழ்ந்து அமைதியடைந்து அமரராகி உறையும் இடமாதலின் அவ்விடம் நன்காடு எனவும் வழங்கப்படுகிறது. மதுராந்தகம் வட்டாரத்தில் இசுலாமியர், கிறித்தவர்கள் பிணத்தைப் புதைத்து விடுவார்கள். இந்துக்கள் புதைப்பதும், எரிப்பதும் உண்டு. தலைச்சன் பிள்ளை இறந்தால் (முதல் பிள்ளை) எரித்துவிடுவார்கள். பில்லி, சூனியம், ஏவல் வைக்கும் மந்திரவாதிகள் தலைச்சன் பிணத்தை நிலத்திலிருந்து தோண்டித் தலையை மட்டுமே துண்டித்து எடுத்துச் சென்று மை தயாரிக்கிறார்கள் என்ற நம்பிக்கை நிலவுவதால் தலைச்சன் பிணத்தை எரித்து விடுகின்றனர். அவை மட்டுமல்லாமல் இறந்துபோன தன் பிள்ளையின் ஆவியானது தங்கள் குடும்பத்தை என்றும் காக்காது என நம்புகின்றனர். எனவே தலைச்சன் பிள்ளையை எரித்துவிடுவது மதுராந்தகம் வட்டாரத்தில் காணப்படுகிறது. சுடுகாட்டின் வாயிலில் சிறிய கோவில் ஒன்று காணப்படும். இதனை அரிச்சந்திரன் கோவில் என்பர். அரிச்சந்திர புராணத்தின்படி முன்னொரு காலத்தில் சுடுகாட்டைக் காவல் புரிந்தவன் அரிச்சந்திரன். அந்நினைவைப் போற்றும் விதத்தில் அந்நம்பிக்கையின் எச்சமாக இக்கல்லை அரிச்சந்திரனாக பாவிக்கின்றனர். பிணத்தைச் சுடுகாட்டுக்குள் கொண்டு செல்ல அரிச்சந்திரனின் அனுமதியை வேண்டுகின்றனர். இந்து மதத்தினர் கொண்ட நம்பிக்கையின் அடிப்படையில் அரிச்சந்திரனை வழிவிடும்படி வேண்டுதல் செய்கின்றனர். இந்த வேளையில் அரிச்சந்திரன் பாடல் பாடப்படுகிறது.

 

நம் முன்னோர்கள் மகாபாரதக் கதை, இராமாயணக் கதை, பட்டி விக்கிரமாதித்தன் கதை, நல்லதங்காள் கதை, ஆகியனவற்றை இராகத்தோடு படிப்பதுபோல அரிச்சந்திரன் பாடலையும் பாடுகின்றனர்.

 

மதுராந்தகம் வட்டாரத்தில் சுடுகாடு ஊருக்குக் கிழக்குப் பக்கமாகக் காணப்படுகின்றது. பிணத்தைச் சுடுகாடு நோக்கிக் கொண்டு செல்லும்போது கால்கிழக்குத்திசை நோக்கியும் இருக்கும்படியாகக் கொண்டு செல்கின்றனர். பிணத்துடன் கொள்ளிச்சட்டி, வாய்க்கரிசி, வெற்றிலை, பாக்கு, பழம், ஊதுபத்தி, இளநீர், எலுமிச்சம்பழம் ஆகியனவற்றையும் கொண்டு செல்வர், அரிச்சந்திரன் கோவில் முன்பாகப் பிணத்தைத் தரையில் இறக்கி வைப்பர். சுடுகாட்டில் பரம்பரையாகத் தொழில் செய்து வரும் வெட்டியான் இறுதிக் கடனுக்குரிய ஏற்பாடுகளை ஆயத்தம் செய்துவிட்டு தயாராக இருப்பான். அவன் அரிச்சந்திரனுக்கு வழிபாடு செய்து இப்பாடலைப்பாடி சுடுகாட்டுக்குள் பிணம் நுழைய வழிவிடும்படி வேண்டுவான். பிணத்தைப் பாடையோடு நால்வர் சுமந்தபடி அரிச்சந்திரன் முன் நிற்க, பாட்டும் இதைத் தொடர்ந்து சடங்குகளும் நிகழும். அப்போது வெட்டியான் பாடத் தொடங்குவான். இதற்குரிய கூலியாக அரிச்சந்திரனுக்கு முன்னால் ஒன்றே காலணா வைப்பர். இக்காசு வெட்டியானைச் சேரும். பாட்டும் சடங்கும் முடிந்ததும் இதனை வெட்டியான் அரிச்சந்திரன் சார்பாக எடுத்துக் கொள்வான். அரிச்சந்திரன் வழிவிட்டதும் பிணம் சுடுகாட்டுக்குள் நுழையும். தற்போது கூலி அதிகமாக கொடுக்கப்படுகிறது.

 

அரிச்சந்திரன் - தோட்டி:-

 

அரிச்சந்திரன் சுடுகாட்டில் காவல் செய்து கொண்டு வாய்க்கரிசியும், பிணத்தை எரித்துத் தன் கடமையைச் செய்து கொண்டும் இருந்தான். அப்போது விசுவாமித்திர முனிவர் இவனது உண்மை நிலையை அறிந்து சாப விமோச்சனம் அளிக்கின்றார். அப்போது அரிச்சந்திரன் வீரபாகு என்ற பறையனிடம் இந்தத் தொழிலைக் கொடுத்துவிட்டுச் சென்று விடுகின்றான். அன்று முதல் இன்று வரை (தோட்டியர்) பறையர் பிணம் சுடும் தொழிலைச் செய்து வருகின்றனர். கிராமங்களில் தோட்டி மானியம் என்று கிராம மக்கள் சிறிதளவு நிலத்தை இவர்களுக்குத் தந்துள்ளனர். இதனால் வழிவழியாக இத்தொழிலைச் செய்து வருகின்றனர்.

 

அரிச்சந்திரன் பாடலில் நந்தன் கதை, பறையன் கூலி வாங்குதல், மாடுவெட்டிச் சாப்பிடுதல் போன்ற நிகழ்ச்சிகள் கூறப்படுகின்றன.

 

அந்தப் பாப்பானுக்கும்

பறையனுக்கும் பகை உண்டு ஆதியில்

நந்தன் குடை அரசாண்டான்

ஓர் பறையன்

நாலு நெல்லுக்கு வழக்காடினான்

ஓர் பறையன்

தை தாளாங்கு தோம் என்றான்

ஓர் பறையன்

 

இதன்வழி சாதிப் போராட்டம் சூழ்ந்திருந்த காலகட்டங்களில் இப்பாடல் பாடப்பட்டிருக்க வேண்டும். வர்ணப் பாகுபாடு தமிழகத்தில் வேரூன்றி வளர்ந்த நிலையிலும் இப்பாடல் பாடப்பட்டிருக்க வேண்டும். காமன் பாடல் தமிழகத்தில் ஆரியப் பண்பாடு வேரூன்றிய காலத்தில் பாடப்படும் முறை தொடங்கியது போன்று அரிச்சந்திரன் பாடல்பாடும் முறையும் வந்திருக்கலாம்.

 

மதுராந்தகம் வட்டத்தில் அரிச்சந்திரன் பாடலை நம்பிக்கையின் அடிப்படையில் பாடுகின்றனர். இறந்து போனவன் அரிச்சந்திரன் போன்று நேர்மையாகவும் பொய் சொல்லாதவனாகவும் இருந்தான் என்பதை உலகிற்கு உணர்த்தவே சாவுச் சடங்கில் இப்பாடலைப் பாடுகின்றனர். இறந்தவரின் ஆன்மா சொர்க்கம் அடையும் என்ற நம்பிக்கையிலும் பாடுகின்றனர்.

 

அரிச்சந்திரனும் காமனும் ஆரியக் கடவுள்கள். இவர்கள் சங்க இலக்கியங்களில் இடம் பெறாதவர்கள். எனவே தமிழர் கடவுளர்களாக இவர்களைக் கொள்ள முடியாது. பிற்கால வழக்கில் இவ்விரண்டு பேரின் கதை இறப்புச் சடங்கில் பாடப்பட்டு வருகின்றது.

 

நன்றி: வேர்களைத்தேடி

2 கருத்துகள்:

National Employment Exchange சொன்னது…

திருவள்ளுவர், ஔவையார்,நந்தனார், கண்ணபநாறும் பறையர் தான், பறையர்கள் தீண்டத் தகாதவர்கள் என்று யார் சொன்னது. பறையன் என்பது போர்காலங்களில் பறை அறிவிக்கும் பாணர்கள் ஆவார்கள். அரசவைகளில் ராஜ தந்திரிகலாகவும் சித்தர்களாகவும், புலவர்களாகவும் இருந்தவர்கள் என்பதிற்கு கல்வெட்டுகள் சாட்சியங்கள் இருகின்றன. திருவள்ளுவர் என்பவர் வள்ளுவர் என்கின்ற இனத்தில் பிறந்தவர். இந்த வள்ளுவர் என்கின்ற இனம் பறையர்களின் ஒரு பிரிவு "வள்ளுவ பறையர்கள்", வள்ளுவப் பறையர்களின் குலத் தொழில் ஆரூடம்,ஜோதிடம், இலக்கணம், பாடல் எழுதுவது. காமராஜர் ஆட்சி காலத்தில் நாடார்,சானார் எனப்படுகின்ற தீண்ட தகாக இனத்தினர்கள் SC to BC ஆக Convert ஆனார்கள், வள்ளுவப் பறையர் கள் BC to SC களாக Convert ஆனார்கள். மன்னர்கள் ஆட்சி காலத்தில் பள்ளர்களும்,பறையர்களும் தீண்டத் தகாத இனத்தை சார்ந்தவர்கள் களாக கருதப்படவில்லை சான்று ta.wikipedia.org/wiki/பறையர், அப்படி இருந்து இருந்தால் நந்தனார் அல்லது "திருநாளைப் போவார் நாயனார்", தமிழ் சாது , 63 நாயன்மார்களில் ஒருவராக இடம் இருந்து இருக்க மாட்டார். சான்று ta.wikipedia.org/wiki/பறையர்
இந்திய திரையுலகிற்கு பெருமை தந்த இசை ஜானி இளையராஜா, இளையதளபதி ஜோசப் விஜய், நடிகர் ஜெய் , பார்த்தீபன், மியூசிக் டைரக்டர் தேவா,நேர்மையான அதிகாரிகளுக்கு எடுத்துக்காட்டாக வாழும் கிரானைட் குவாரி.சகாயம் அனைவரும் பறையர்களின் இனத்தினை சார்ந்தவர்கள்.

இலட்சுமண குமார் சொன்னது…

பற புத்தி அரை புத்தி என்பது சரிதான் சானார் என்ற நாடார்sc பட்டியலில் இருந்தார்களா ஆதாரம் காட்டு அடுத்து சானார்கள் எல்லோரையும் விட மிகவும் தாழ்த்தப்பட்ட நிலையில் இருந்தார்களா?? சும்மா வாயிலில் வடைசுடாமல் ஆதாரம் காட்டு உன் வரலாறு என்ன என்று தேடு அதை விடுத்து சான்றோர் சாதியினரை வம்புக்கு இழுக்காதே