குறிஞ்சிப் பாடல்களை வாசிக்கையில் இன்ப உணர்வு மேலோங்குவதற்கும், பாலை, முல்லைப் பாடல்களை வாசிக்கையில் இரக்க உணர்வு முன்னிற்பதற்கும் "உரிப்பொருளே' காரணம்.
அன்பின் ஐந்திணைகளுள் முல்லைத் திணைக்குரிய உரிப்பொருள் "இருத்தல்' என்பதாகும். அதாவது, "பிரிந்தவர் வருந்துணையும் ஆற்றியிருத்தல்' என்பதாகும். முல்லைப் பாடல்களில் இடம்பெற்றுள்ள தலைவியின் "இருத்தல்' சார்ந்த காட்சிப்படுத்தல்களை அறிஞர் பலர் சுட்டிச் செல்கின்றனர். தலைவியின் இருத்தல் செயலானது உறுப்பு நலன் அழிவு, கண்ணீர் விடல், தெய்வக் கற்புடன் வாழ்தல் எனும் செயல் நிலைகளை உடையனவாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய அகப்புறவய அவலங்களைத் தாண்டி மேலும் ஓர் அவலம் தலைவியைப் பெரிதும் துன்பத்தில் ஆழ்த்துகிறது.