திருப்புகழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருப்புகழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அறிஞர் வ.த.சுப்பிரமணிய பிள்ளை - ரெங்கையா முருகன்


வ.த.சுப்பிரமணிய பிள்ளை 1871-ம் ஆண்டு மஞ்சக்குப்பம் வழக்காடு மன்றத்தில் மாவட்ட முன்சீப்பாகப் பணிபுரிந்த காலம் அது. சிதம்பரம் நடராஜர் கோயில் சம்பந்தமான வழக்கு நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்த வழக்கில் சாட்சிக் கூண்டில் நின்ற தீட்சிதர்கள் தங்களுடைய வாதத்தில் கோவில் உரிமை தீட்சிதர்களாகிய எங்களுக்கே என்று பொருள் தரக் கூடிய திருப்புகழ் பாடலை மேற்கோள் காட்டி வாதாடினர். அப்பாடலின் வரி;

“தாது மலர் முடியிலே வேத நன்முறை
வாளுவமே தினம் வேள்வி யாலிலில்
புனை மூவாயீர வேட்டியர் மிகவே பூசனை புரிகோவே

(கடவுளே வேத முறைகளில் கண்டிப்பாக இருந்தபடி பல்வேறு தியாகங்கள் செய்த மூவாயிரவர் என்ற பெருமை பெற்ற அந்தணர்களால் தினமும் துதிக்கப்படுபவரே நீங்கள்)

தீட்சிதர்கள் கூறிய வாசகத்தைக் கேட்டவுடன் வ.த. சுப்பிரமணிய பிள்ளை அவர்களுக்கு அக்கணமே பொறி தட்டியது. அருணகிரி நாதர் பாடிய பதினாறாயிரம் பாடல்களில் ஒரு ஆயிரம் பாடல்களையாவது சேகரித்து அச்சிட்டு வெளியிட வேண்டும் என்று திட்டமிட்டார்.

தலங்கள் தோறும் சென்று செல்லேறிப் போன பல வழுக்கள் பொதிந்திருந்த திருப்புகழ் ஓலைச்சுவடிகள் பலவற்றைச் சேகரித்து ஒத்துப்பார்த்து, பாட பேதங்களைக் கண்ணுற்று வெவ்வேறு சுவடிகளில் காணும் வித்தியாசங்களைப் பண்டிதர்களைக் கொண்டு திருத்தி அச்சிட்டுப் புத்தக வடிவில் யாவரும் எளிதில் பெறுமாறு செய்த ஏந்தல் வ.த.சுப்பிரமணிய பிள்ளை.

அரசாங்கப் பணிகளுக்கிடையில் தமக்குத் தெரிந்த பல நண்பர்களிடம் தொடர்பு கொண்டுத் திருப்புகழ் ஏட்டுச் சுவடிகளைத் தேடத் தொடங்கினார். ஆங்காங்கு அவை கிடைக்கத் தொடங்கின. 1876-ம் ஆண்டு ஆறுமுக நாவலர் எழுதிய சைவ வினா-விடையில் திருப்புகழின் ஆறு பாடல்கள் இருந்தன. 1878-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ம் தேதி அன்று காஞ்சிபுரம் புத்தேரி தெரு அண்ணாமலை பிள்ளை என்பவரிடமிருந்து 750 பாடல்கள் கொண்ட ஏட்டுச்சுவடிகள் கிடைத்தன. அதே வருடம் பின்னத்தூர் சீனிவாச பிள்ளையிடம் 450 பாடல்களும், பின்னர் அவரிடமே 150 பாடல்களும் கிடைத்தன. 20.03.1881-ல் கருங்குழி ஆறுமுக ஐயர் என்ற வீர சைவரிடமிருந்து 900 பாடல்கள் திருப்புகழ்ச் சுவடிகள் கிடைத்தன. 1903-ம் ஆண்டு திருமாகறல் என்ற ஊரில் 780 பாடல்கள் கிடைத்தன.

உ.வே.சாமிநாதையர் தமிழகமெங்கும் தமிழ் இலக்கிய ஏட்டுச் சுவடிகளைத் தேடிக்கொண்டிருந்த காலம் அது. வ.த.சுப்பிரமணிய பிள்ளையவர்கள், உ.வே.சாவிடம் தொடர்பு கொண்டு திருப்புகழ் சுவடிகளைக் கண்டால் தெரிவிக்குமாறு வேண்டிக் கொண்டார். இதை உ.வே.சா, தனது ‘என் சரித்திரம்’ நூலில் பதிவுசெய்துள்ளார்.

ஓலைச்சுவடிகளின் குறைகளைக் களைந்து சீர் செய்வதற்கு மஞ்சக்குப்பம் பள்ளி ஆசிரியர் சிவசிதம்பர முதலியார், சேலம் சரவணப்பிள்ளை, ஆனந்த ராம ஐயர் போன்றவர்கள் ஆற்றிய பங்கு பெரிது.

திருப்புகழ் முதல் பதிப்பை 05.06.1891 அன்று சிவசிதம்பர முதலியார் செப்பம் செய்து சீர்திருத்தி வ.த.சுப்பிரமணிய பிள்ளை அவர்களிடம் ஒப்படைத்து விட்டார். 9.04.1895-ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட திருப்புகழ் பாடல்களை அச்சிற்குப் பதிப்பிக்கக் கொடுத்தார். திருப்புகழ் கட்டம் செய்யப்பட்டு அழகிய வடிவில் அச்சில் பதிப்பித்து முதன்முதலாக புத்தக வடிவில் பிள்ளையவர்கள் அப்போது பணிசெய்து கொண்டிருந்த திருத்துறைப்பூண்டிக்கு அனுப்பப்பட்டது. புத்தக வடிவில் திருப்புகழைக் கண்ட பிள்ளையவர்கள் பேரானந்தம் அடைந்தார். அதே சமயம் ஓலைச்சுவடியிலிருந்து பெயர்த்து எழுதிச் செப்பம் செய்து தந்த சிவ சிதம்பர முதலியார் அச்சு வடிவத் திருப்புகழ் புத்தகத்தைக் காணாமலேயே இறந்துபோய் விட்டார்.

வ.த.சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் திருப்புகழைப் புத்தக வடிவில் கண்ட அன்று தனது டைரிக்குறிப்பில் 09.04.1895-ம் ஆண்டு இவ்வாறாகக் குறிப்பிடுகிறார். கடந்த 24 வருடங்களுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட திருப்புகழ் பதிப்பு வேலை முடிய இவ்வளவு காலம் சென்றுள்ளது. இப்போதும் பாதி அளவே முடிந்துள்ளது என்று கவலையுடன் குறிப்பிட்டுள்ளார்.

1909-ம் ஆண்டு சில திருத்தங்களுடன் இரண்டாம் பதிப்பு வெளிவந்தது. அதே ஆண்டு ஏப்ரல்-16-ம் தேதி இரவில் படுக்கைக்குச் சென்றவர் நள்ளிரவில் உயிர்துறந்துவிட்டார். வ.த.சுப்பிரமணிய பிள்ளையின் புதல்வர்கள் வ.சு.செங்கல்வராய பிள்ளை மற்றும் வ.சு.சண்முகம் பிள்ளையும் புதிய பாடல்களை இணைத்து திருப்புகழினைத் தொடர்ந்து வெளியிடலாயினர்.

வ.த.சுப்பிரமணிய பிள்ளையின் விருப்பப்படி அவருடைய சமாதி, திருத்தணி கோவிலை நோக்கியபடி அமைக்கப்பட்டுள்ளது.


உ.வே.சாமிநாதையர் தமிழகமெங்கும் தமிழ் இலக்கிய ஏட்டுச் சுவடிகளைத் தேடிக்கொண்டிருந்த காலம் அது. வ.த.சுப்பிரமணிய பிள்ளையவர்கள், உ.வே.சா.விடம் தொடர்பு கொண்டு திருப்புகழ் சுவடிகளைக் கண்டால் தெரிவிக்குமாறு வேண்டிக் கொண்டார்.

நன்றி - தி இந்து 09 08 2014

அதிசயத் தமிழ் செய்த அருணகிரி

இன்றைக்கு, பத்திரிகைகளில் புதிதாய் வெளிவருகிற நூல்களுக்கு மதிப்புரை என்ற பெயரில் அந்த நூல் குறித்த செய்திகளோடு அறிமுகப்படுத்துகிறார்கள். இதைப் புதிய முறையிலான "நூல் அறிமுக இலக்கியம்' எனலாம். இந்த முறையையும் பாரதியாரே முதன்முதலில் துவக்கி வைக்கிறார்.

வள்ளுவனைப் போல், கம்பனைப் போல், இளங்கோவைப் போல் என்று இவர் சுட்டுகிற தமிழ் ஆன்றோர் வரிசையில் பட்டியல் இன்னும் நீள்கிறது. பட்டினத்தாரையும், தாயுமானவரையும், இராமலிங்க அடிகளாரையும் அதே வரிசையில் வைத்துப் புகழ்கிறார். ஆழ்வார்கள், ராமானுஜர், விவேகானந்தர் என நீளும் வரிசையில் அதிசயத் தமிழ் செய்தவர் என அருணகிரியாரைக் குறிப்பிட்டுப் புகழ்ந்திருக்கிறார்

திருப்புகழை இயற்றிய அருணகிரிநாதரையும் அவர்தம் தமிழ்ப் புலமையையும் குறித்து பாரதியார் மதிப்புரை எழுதியிருக்கிறார். இந்த மதிப்புரை ஆங்கிலத்திலும் வெளிவந்திருக்கிறது. அவர்தம் பாடல்களைத் தாம் முன்னமே விருப்பமுடன் தெரிந்திருப்பினும், அவர்தம் பாடல்கள் அமைந்திருக்கும் முறைகளைச் சுட்டி, அவற்றை ஆராய்கிறவிதமாய் மதிப்புரை எழுதியிருக்கிறார். அருணகிரியின் கவிதை என்ற தலைப்பில் இம்மதிப்புரை 29.3.1917 சுதேசமித்திரன் இதழில் வெளியாகியுள்ளது.
அருணகிரியாரின் தமிழை அதிசயத் தமிழ் என்று தலைப்பிட்டு நூல் குறித்த மேற்கண்ட முதல் அடையாளத்தைத் தருகிறார்.

""இவருடைய கவிதையின் கனிவைப் பார்க்க வேண்டுமானால் பஞ்சரத்நத் திருப்புகழ், கந்தரலங்காரம், வேல்வகுப்பு மூன்றையும் படித்தால் போதும். சந்தக் கணக்கை வைத்துக் கொண்டு தெளிவாகவும், இயற்கையாகவும் சொல்லுதல் மிகவும் அருமை. காலிலும் கையிலும் தளைகளைப் பூட்டிக் கொண்டு கூத்தாட முடியாதென்று பழமொழி சொல்லுவார்கள். இந்த மஹானுடைய கவிதையோவென்றால், மிகவும் கடினமான தளைகளைப் பூட்டிக் கொண்டு தெய்வீகக் கூத்தாடுகிறது.

பஞ்சரத்நத் திருப்புகழின் முதற்பாட்டில் இவர் தமக்கு அதிசயமான தமிழ் பாடுந் திறமை வேண்டுமென்று முருகனிடம் கேட்கிறபொழுதே தெய்வ அருள் தோன்றி, இவருடைய கவிதை அதிசயமாகி விடுகின்றது''.
""மலடி வயிற்றில் குழந்தை பிறந்தால் அவளுக்கு எப்படி ஆச்சரியமும் மகிழ்ச்சியும் உண்டாகுமோ, கங்கா நதி வானத்திலிருந்து பொழிவதுபோல, புதையலெடுத்த செல்வத்தைக் கண்டு ஏழை மகிழ்ச்சி அடைவதுபோல, இளம்பெண் வலியத் தழுவியதுபோலத் தமது பாட்டைப் படிக்கும்போது அத்தகைய இன்பமெல்லாம் தோன்ற வேண்டும் என்கிறார் அருணகிரியார்'' என்று அருணகிரியாரின் கவிக்கடலில் மூழ்கி அதற்கு மதிப்புரை எழுதுகிறார் பாரதியார். இது மதிப்புரை என்னும் இலக்கியவரிசையில் பாரதியார் செய்த புதுமை எனலாம்.

மேற்காட்டிய வரிகளில் அந்த ரஸம் இருக்கத்தான் செய்கிறது என தான் ருசித்த அந்த ரஸம் நிறைந்த கவிதையை மேற்கோளிட்டுக் காட்டுகிறார்.
பின்வரும் பாடலைப் பாருங்கள்.

கலியை.......
கடின........
அலையு......
அறிவை யுருட்டித் திரட்டி வைத்துநின்
அமுத குணத்தைத் துதிக்க வைத்தனை
அடிமை படைக்கக் கருத்து முற்றிலும் - நினையாயோ

பாரதியாரின் பாடல்களில் பல இடங்களிலும் கலியுகத்தை ஒழிப்பதும், கிருதா யுகத்தைச் சமைப்பதும் தொடர்ந்து ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
அதுபோலவே இப்பாடல்களுக்கு விளக்கம் எழுதுகிறபோது, ""கலியுகத்தை ஒழித்து, நோயைத் துரத்தி, கவலைத் தீயைத் தணித்துக் கசப்பை இனிப்பாக்கி, உயிரை அழுக்கறுத்து, கருணை மழையிலே குளிக்க விட்டு, அலைகிற மனதை நிறுத்தி, அதிலுள்ள இருட்டைத் தொலைக்கும் பொருட்டு முருகனுடைய அழகாகிய விளக்கை அதில் நாட்டி, அந்த விளக்கு நீடித்தெரியும்படி அறிவைத் திரட்டி முருகனுடைய அமிர்த குணங்களை புகழும்''படி தம்மை வரகவியாக்கச் சொல்கிறார்.

அருணகிரியாரின் கவிதைகளில் வீரம், ரெüத்ரம் என்ற ரஸங்கள் செறிந்து கிடக்கின்றன எனக் கூறுகிறார் பாரதியார்எனினும், இவர்தம் கவிதையின் முக்கியப் பொருள் தெய்வபக்தி; ஆகையால் அதை முன்னிறுத்தியே மதிப்புரை வரைகிறார்.

பதிப்பாசிரியர், குறிப்பாக சீனி.விசுவநாதன் குறிப்பிடுகிறபோது இந்தக் கட்டுரையை இன்னார் எழுதினார் என்ற விவரம் சுதேசமித்திரனில் குறிக்கப்பெறவில்லை. என்றாலும், இந்தக் கட்டுரையைப் பாரதியார்தான் எழுதினார் என்பதை நிரூபிக்க, "நியூ இந்தியா' பத்திரிகையில் அவர் எழுதிய ஆங்கிலப் படைப்பான "தி போயஸி ஆப் அருணகிரி' என்னும் படைப்பையே ஆதாரமாகக் கொள்ளலாம் என்பது அருணகிரியாரைப்
புகழ பாரதியாரைப் போல யாருளர் என்பதாய் அமைகிறது.

நன்றி - தமிழ்மணி