வைகுண்டத்தில் நாரதரின் ‘ஜிப்ளி’ எஃபக்ட் - எஸ்.பாலாஜி


வைகுண்டம்! ஒளியால் ஆன ஓர் உலகம். அங்கே ஒவ்வொரு அணுவும் தெய்வீகமான ஒளியால் துடிப்புடன் மின்னிக்கொண்டிருந்தது. வண்ண ஒளிக்கதிர்கள் வானவில் போல் சிதறி, மிருதுவான வெளிச்சம் தந்து ஆழ்வார்களின் பாசுரங்களைப் போல் இனிமையாக பரவிக்கொண்டிருந்தது.


வைகுண்டத்தின் ஒவ்வொரு மூலையிலும் அழகிய தடாகங்கள் மின்னின. அந்தத் தடாகங்களில் தங்கமயமான தாமரைகள் பூத்துக் குலுங்கின. வாசலில் தொங்கிய சுவர்ண மணிகள் தென்றலில் ஆடி, கோபியரின் கோலாட்டம் போல் இனிமையான ஓசையை எழுப்பிக்கொண்டிருந்தன.


பாற்கடலின் நுரைபோல் வெண்மையான ஆதிசேஷனின் மேலே, ஸ்ரீமந்நாராயணன் இன்பமயமாக அமர்ந்திருந்தார். ஆதிசேஷன் தனது ஆயிரம் தலைகளை ஒருங்கே உயர்த்தி, வெண்மையான ஒளியால் பிரகாசித்துக் கொண்டிருந்தான். அவனது பச்சைநிற தோலில் பெருமாளின் நீல வண்ண தோற்றம் பிரதிபலித்து, அற்புதமான வண்ண ஜாலங்களை உருவாக்கிக் கொண்டிருந்தது.


தாயார் மகாலட்சுமி பெருமாளின் அருகில் அமர்ந்து, மெல்லிய குளிர்ச்சியான தன் செந்தாமரை கரங்களால் பெருமாளின் திருவடிகளை அழுத்திக்கொண்டிருந்தாள். அவளது முகத்தில் சாந்தமும் அன்பும் நிறைந்திருந்தது. அவளது கண்களில் பரம்பொருளின் மீதான பக்தியின் ஒளி தெரிந்தது. வைகுண்டம் முழுவதும் அமைதியும், பேரின்பமும் நிரம்பியிருந்தது.


இந்த பேரமைதியை கிழிப்பது போல், திடீரென நாரதர் வைகுண்டத்திற்குள் நுழைந்தார். அவரது கையில் வழக்கமான வீணைக்குப் பதிலாக ஒரு புதிய பொருள் இருந்தது. அதிலிருந்து அவரது 'சி' தம்புராவின் ஒலி சீராக ஒலித்துக் கொண்டிருந்தது.


"நாராயண நாராயண," என்ற மந்திரத்தை உச்சரித்தவாறே நாரதர் உள்ளே வந்தார். அவரது முகத்தில் ஒரு சிறுவனின் உற்சாகமும், புதிய விளையாட்டுப் பொருளைக் கண்டுபிடித்த மகிழ்ச்சியும் தெரிந்தது.


தாயார் லட்சுமியின் கண்கள் படபடப்பாகின. "ஆகா, நாரதர் இங்கு வருகிறார், ஏதோ கலகம் செய்யப் போகிறார்" என்ற கவலை தோய்ந்த பார்வையை பெருமாளிடம் வீசினாள். அவரோ "கவலை வேண்டாம், 'மா சுச'" என்று அர்ஜூனனுக்கு கீதோபதேசம் சொன்னது போல் கைகளை உயர்த்தி சமாதானப்படுத்தினார்.


இவையனைத்தையும் நாரதர் தன் ஓரக்கண்களால் கவனித்துக் கொண்டே, "தாயே, கவலைக் கொள்ளாதீர்கள்! நான் கலகம் செய்ய வரவில்லை. எனக்கு ஒரு அற்புதமான பொருள் கிடைத்தது, அதை பகவானிடம் சமர்ப்பிக்கவே வந்தேன்," என்றார் ஆர்வத்துடன்.


"என்ன நாரதா? எப்பொழுதும் ரொம்ப பீடிகை போட்டுப் பேசுவாய். ஆனால் இன்றோ எதுவுமில்லாமல் உடனே விஷயத்திற்கு வந்துவிட்டாய்," என்று பெருமாள் புன்முறுவலுடன் கேட்டார்.


"இல்லை ஸ்வாமி, நான் சமீபத்தில் பூலோகம் சென்றிருந்தேன். அங்கு இருந்த அனைவரின் கைகளில் ஒரு பொருள் இருந்து அவர்களை அல்லோலகல்லோலப் படுத்துகிறதோ என்று எண்ணினேன். ஆனால் இன்று அதன் பிடியில் நானே விழுந்துவிட்டேன். அதனை தங்களிடம் காண்பிக்கவே ஓடோடி வந்தேன் கண்ணா," என்றார் நாரதர்.


"ஆக, உன் கலகத்திற்கு பூலோகத்திலிருந்து ஏதோ கொண்டு வந்துள்ளாய். சரி, உன் விளையாட்டை ஆரம்பி. எங்கே அது? எனக்குக் காண்பி," என்றார் பெருமாள், ஆர்வம் தன் கண்களில் மின்ன ஒன்றும் தெரியாத சிறுவனாய் தாய் யசோதையிடம் மாட்டிக் கொண்டு நிற்பவர் போல.


"இதோ ஸ்வாமி, இதுதான் அது," என்று நாரதர் தன் கையில் இருந்த பொருளைக் காட்ட, அதிலிருந்து பளிச்சென்று வெளிச்சம் பரவியது.


சற்று நீளமாக செவ்வக வடிவில் இருந்த பொருளை ஆச்சரியமாக வாங்கினார் பெருமாள். அதன் பளபளப்பான மேற்பரப்பில் தனது பிரதிபிம்பம் தெரிவதைக் கண்டார்.


"என்ன இது நாரதா?" என்று கேட்டார் பெருமாள், அதன் விளிம்புகளை தடவியபடி.


"ஸ்வாமி, இதனை 'ஸ்மார்ட்போன்' என்கின்றனர் பூலோகத்தார்," என்றார் நாரதர் பெருமையுடன்.


"என்ன, ஸ்மார்ட்போனா? இதன் பயன் என்னவோ?" பெருமாள் அதன் பக்கவாட்டிலுள்ள பொத்தான்களை ஆராய்ந்தபடி கேட்டார்.


"ஸ்வாமி, இதை வைத்துக் கொண்டு ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும், சிலர் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டும் கொள்கிறார்கள். சிலர் பைத்தியம் போல் கத்துகிறார்கள்," என்றார் நாரதர், இன்னும் பல வேடிக்கைகள் சொல்ல ஆயத்தமாக.


"நாரதா... நிறுத்து! இப்படிப்பட்ட மோசமான ஒன்றை எதற்காக இங்கு கொண்டு வந்தாய்?" கோபத்துடன் கேட்டாள் தாயார்.


"இல்லை தாயே, இதிலும் நிறைய நல்ல விஷயங்கள் உள்ளன. அதனைக் கொஞ்சம் பார்ப்போமா?" நாரதர் கெஞ்சினார். 


பெருமாள் தன் அபய ஹஸ்தத்தை தாயாரிடம் காண்பித்து, “லட்சுமி, கவலைப்படாதே! நான் இருக்கிறேன்," என்று சமாதானப்படுத்தினார்.


"சரி ஸ்வாமி, நீங்கள் சொல்வதால் இந்த நாரதனை விட்டு விடுகிறேன். நாரதா, நீ வந்த வேலையை தொடங்கு!” என்றாள் தாயார், இன்னும் முழுமையாக சமாதானம் அடையாமல்.


"நாராயண நாராயண, ஸ்வாமி இதனை வைத்து பூலோகத்தில் உள்ள யாரிடமும் பேசிக் கொள்ளலாம். தங்களுக்கு யாரையாவது தொடர்பு கொள்ள வேண்டுமா?" என்றார் நாரதர் உற்சாகத்துடன்.


தாயார் கோபத்துடன் "நாரதா!" என்று கூப்பிட்டதும், நாரதர் வேகமாக தன் விளக்கத்தைத் தொடர்ந்தார்.


"இல்லை தாயே, நம் பெருமாள் கண்ணனாக அவதாரமெடுத்து தாய் யசோதாவிடமும் தேவகியிடமும் ஏதாவது பேசாமல் விட்டு வந்திருந்தால் தொடர்பு கொண்டு பேசலாமே என்று..." நாரதர் தன் வாக்கியத்தை முடிக்க முடியாமல் தவித்தார்.


"வேண்டாம் நாரதா, வேண்டாம். வேறு ஏதாவது இதனுள் இருக்கிறதா?" பெருமாள் சற்று ஆர்வத்துடன் கேட்டார், தாயாரின் கோபம் அதிகரிப்பதை உணர்ந்து.


"ஸ்வாமி, தற்சமயம் இதில் டிரென்டிங்காக ஒன்று உள்ளது, அதற்கு 'ஜிப்ளி எபக்ட்' என்று பெயர். நம் படத்தை இதனுள் கொடுத்தோமானால் அதனை நல்ல காமெடியான கார்ட்டூன் படமாக உருவாக்கிக் கொடுக்கும்," என்றார் நாரதர், கண்கள் மின்ன.


"ஆகா, நன்றாக உள்ளதே, இதனை வேண்டுமானால் செய்து பார்க்கலாம்," என்றார் பெருமாள், புன்னகையுடன்.


"இதோ ஸ்வாமி, நீங்களும் தாயாரும் சேர்த்தியாய் இருக்கும் இந்தப் படத்தை இதனுள் செலுத்துகிறேன், என்ன நடக்கிறது என்று பார்ப்போம். ஆனால் அதற்கு இங்கு வைபை வேண்டுமே... நம் ஆதிசேஷன் தான் இருக்கிறானே, அவனையே நெட் கொண்டு வரச் சொல்லலாம்," என்றார் நாரதர், ஆதிசேஷனை நோக்கிக் கை சைகை காட்ட.


ஆதிசேஷன் தன் ஆயிரம் தலைகளில் ஒன்றை உயர்த்தி, "நான் என்ன இன்டர்நெட் ரவுட்டரா?" என்று கேட்பதுபோல் பார்த்தான். 


உடன் நாரதர் "வேண்டாம், பூலோகத்தில் எலான் மஸ்க் என்ற ஒருவன் ஸ்டார்லிங்க் என்று வானிலேயே இன்டர்நெட் தொடர்பு கொள்ள வைத்திருக்கிறான் அதனை தொடர்பு கொள்ளலாம். இதோ கனெக்ட் ஆகிவிட்டது." 


"சரி, என்ன வருமென்று காட்டு! ஆர்வத்தைத் தூண்டி விட்டாய்," பெருமாள் சற்றே கோபமுடன் கேட்டார்.


"இதோ ஸ்வாமி, வருகிறது, வருகிறது, இதோ வந்தேவிட்டது. பாருங்கள். தாங்களும் தாயாரும் இருக்கும் சேர்த்தி படம் எப்படி வந்துள்ளது என்று பாருங்கள்," என்று நாரதர் காட்ட, இருவரும் ஆர்வமுடன் பார்த்தனர்.


ஆனால் தாயாரின் முகம் சற்றே வாடத் தொடங்கிவிட்டது. சற்று கோபத்துடன் நாரதரை பார்த்து, "நாரதா! என்ன காரியம் செய்துள்ளாய்? ஸ்வாமியின் அருகில் என் படத்திற்கு பதில் யாரோ ஒருத்தியின் படத்தை வைத்துள்ளாய்! மேலும் என்னை யாரோ அருகில் நிற்க வைக்கிறாய்! உன்னை சபிக்கப் போகிறேன்!" என்றாள் தாயார், கோபத்தில் பொங்க.


"இல்லை தாயே, கோபித்துக் கொள்ளாதீர்! நெட்வொர்க் இஷ்யு, இதோ சரி செய்து விடுகிறேன்," என்று நாரதர் படபடத்தார்.


"பரவாயில்லை நாரதா, என் அருகில் இருக்கும் அந்தப் பெண் யாரென்று தெரிந்து கொள்ளலாமா?" சற்றே ஓரப் புன்னகையுடன் பெருமாள் நாரதரிடம் கேட்டார், தாயார் அருகில் இருப்பதை மறந்து.


"ஸ்வாமி, அது வந்து இன்றைய இளைஞர்களின் கிரஷ் ராஷ்மிகாவின் படமது. திரைப்பட நடிகை அவர்," என்றார் நாரதர், தாயாரின் முகத்தில் படரும் ரோஷத்தைக் கவனிக்காமல்.


"ஓகோ, தமிழ் நடிகையா? சரி சரி, இருக்கட்டும். மற்றொரு முறை சரி செய்கிறேன் என்றாயே, இப்பொழுது எந்த ஹாலிவுட் நடிகை வருகிறார்கள் என்று பார்ப்போம்," என்றார் பெருமாள் சற்று நகைச்சுவையுடன், தாயாரின் கோபம் அதிகரிப்பதை உணராமல். 


"இதோ ஸ்வாமி, வந்துவிட்டது, பாருங்களேன்," என்று நாரதர் மீண்டும் காட்டினார்.


"ஆகா அருமை! என் ராமவதாரத்தில் எனக்கு துணை புரிந்த அனுமன் வந்திருக்கிறான். கூட ஒரு சிறிய பெண் வந்திருக்கிறாளே, அவள் யார்?" என்று பெருமாள் கேட்டார், முகம் மலர.


"ஸ்வாமி, மன்னிக்கவும், மறுபடியும் தவறு நேர்ந்துவிட்டது. இது சுட்டிக் குழந்தைகளின் நட்சத்திரம் டோரா மற்றும் அதன் நண்பன் புஜ்ஜி, ஸ்வாமி," என்றார் நாரதர், தலைகுனிந்து.


"போதும் நாரதா! இத்துடன் உன் விளையாட்டை நிறுத்து. கோமாளித்தனங்களை செய்து எங்களின் ஏகாந்த நேரத்தை வீணாக்காதே," தாயார் கடுமையாகக் கூறினாள், தனது மங்கலான முகத்துடன்.


"மன்னித்து விடுங்கள் ஸ்வாமி, நம் வைகுண்டம் பூலோகத்திலிருந்து வெகுதூரம் உள்ளதால் நெட்வொர்க் இஷ்யூ என்று நினைக்கிறேன்," என்றார் நாரதர், சமாளிக்க முயன்று.


"நான் அப்பொழுதே சொன்னேன், நாரதரை உள்ளே விடாதீர்கள் என்று. பாருங்கள், இன்று நம் இனிமையான நேரத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கிறான்," லட்சுமி தாயார் மிகுந்த கோபத்துடன் கூறினாள்.


"இல்லை லட்சுமி, சற்றுப் பொறு. அவன் நம்மிடம் புதிதாக வந்த ஒரு விஷயத்தைக் காட்டி ஏதோ நமக்கு எதுவும் தெரியாதென்று நினைத்து வந்துள்ளான். இதனை நாம் திட்டலாமா?" பெருமாள் சமாதானப்படுத்த முயன்றார்.


"பரவாயில்லை. என்ன ஆனாலும் உங்களுக்கு என்னைத் தவிர உங்கள் அடியார்கள் தான் முதல். நான் ஏதோ தொட்டுக் கொள்வதற்குத்தான் நான் வருகிறேன். என் பிறந்த வீட்டை நோக்கிப் போகிறேன்," என்றாள் தாயார், கண்ணீர் பொங்க.


தாயார் மிகுந்த கோபத்துடன் தன் பெட்டி படுக்கைகளை எடுத்துக் கொண்டு, அவளின் பிறந்த வீடான திருப்பாற்கடலுக்குச் சென்றுவிட்டாள். அவள் செல்லும்போது, வைகுண்டத்தின் ஒளியே சற்று மங்கியது போல் தோன்றியது.


"நாரதா, நீ வந்த வேலை முடிந்ததா? இதற்குத்தானே ஆசைப்பட்டாய், நாரதா?" பெருமாள் சற்று வருத்தத்துடன் கேட்டார்.


"ஸ்வாமி, இல்லை, இல்லை! தாயார் இவ்வாறு கோபித்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கவில்லை. மன்னிக்கவும்," என்றார் நாரதர், உண்மையான வருத்தத்துடன்.


பெருமாள் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினார். சற்று நேரம் கழித்து, "நாரதா, இந்த ஸ்மார்ட்போன் என்பது மனிதர்களை எவ்வளவு எளிதில் பிரிக்கிறது பார்த்தாயா? எங்கள் இடையே கூட பிளவை ஏற்படுத்திவிட்டது. மனிதர்கள் இந்த சிறிய கருவியில் இவ்வளவு மயங்குவது எப்படி?" என்று கேட்டார்.


"ஸ்வாமி, அதுதான் இதன் மாயை. இது மனிதர்களை ஒன்றிணைக்கவும் செய்கிறது, பிரிக்கவும் செய்கிறது. அவர்கள் உண்மையான உறவுகளை மறந்து, இந்த சிறிய பொருளில் காட்டப்படும் போலி உலகில் வாழ்கிறார்கள்," என்றார் நாரதர்.


"சரி நாரதா, இனி நீ இந்த ஸ்மார்ட்போனை எடுத்துக்கொண்டு செல். நான் தாயாரை சமாதானப்படுத்த வேண்டும். உனக்கு நன்றி, ஒரு புதிய அனுபவத்தைத் தந்ததற்கு. ஆனால் எப்போதும் போல, அது ஒரு சிக்கலையும் உருவாக்கிவிட்டது," என்று பெருமாள் புன்னகைத்தார்.


நாரதர் தலை குனிந்து வணங்கி, தன் ஸ்மார்ட்போனை எடுத்துக்கொண்டு மெதுவாக வெளியேறினார். பின்னால் பெருமாள் தன் சக்கரத்தையும் சங்கத்தையும் எடுத்துக்கொண்டு, தாயாரை சமாதானப்படுத்த திருப்பாற்கடலை நோக்கிச் சென்றார்.


நாரதர் வெளியேறும் வழியில், "நாராயண நாராயண, பூலோக மனிதர்களுக்கு ஸ்மார்ட்போனால் வரும் சிக்கல்கள் எல்லாம் இப்படித்தான் இருக்கும் போல!" என்று சிந்தித்தார், தன் ஸ்மார்ட் போனில் தம்புராவை மீட்டியபடி, கைலாயத்தை நோக்கிப் பயணமானார்.


(யார் மனதையும் புன்படுத்தும் எண்ணம் எதுவுமில்லை)

0 கருத்துகள்

புதியது பழையவை