07/03/2012

கவிதை - புதுமைப்பித்தன்

கவிதை, கவிதை என்று சொல்லுகிறார்களே அதைப் பற்றி எழுத வேண்டும் என்று எனக்கு வெகு நாளாக ஆசை. இன்றைக்குத்தான் முடிந்தது.
'பேனா எங்கேயடா ? அடே ராசா நீ யெடுத்தையா ? குரங்குகளா ஒன்றை மேஜை மேல் வைக்க விடாதீர்கள். அது பேனாவாகவா இருக்கிறது ? இருந்தாலும், இந்தக் குழந்தைகள் இருக்கிறதே, சனியன்கள். மழலையாம், குழலாம், யாழாம்! அதைவிட ஒரு ஓட்டை கிராமபோனை வைத்துக்கொண்டு காதைத் துளைத்துக் கொள்ளலாம் '.


குழந்தைகளால் என்ன பிரயோஜனம் ? சுத்தத் தமிழ் பேசத் தெரியுமா ? அவைகளுக்குத்தான் என்ன ஒரு கூட்டத்திலே பழகத் தெரியுமா ? இன்னும் அழாமல் இருக்கத் தெரியுமா ?

எங்கள் வீட்டு ராஜாவைப் பற்றிச் சொல்லவா ? சோற்றுக்குத் தாளம் போட்டாலும், வீட்டுக்கொரு ராஜாவிற்குக் குறைவில்லை. அதில் மட்டும், பாரதி சொன்னதிற்கு ஒரு படி மேலாகவே யிருக்கிறோம். எல்லாரும் இன்னாட்டு மன்னர்களின் தகப்பன்மார்!

எங்கள் வீட்டு ராஜா இருக்கிறானே அவன் பேச்செல்லாம் பாட்டு; பாட்டெல்லாம் அழுகை. அதுதான் கிடக்கிறது. அவனிடத்தில் என்ன அதிசயம் இருக்கிறது ? அவனுக்கு இருக்கும் அசட்டுத்தனத்திற்கு என்ன சொல்லுகிறது ? என்னுடைய கைத்தடியை எடுத்துக் கொண்டான், அதுதான் அவனுக்குக் குதிரையாம்! குதிரைக்கும் தடிக்கம்பிற்கும் வித்தியாசம் தெரியாத அசட்டைப் பார்த்து யாரால் உத்ஸாகப்பட முடியும் ? அதற்கும் ஒரு பிரகிருதி இருக்கிறது. அதுதான் அவன் தாயார். குதிரை மட்டுமா ? காராக மாறுகிறது, மோட்டார் சைக்கிள், இரட்டை மாட்டு வண்டி, இன்னும் என்ன வேண்டும் ?
அதுதான் கிடக்கிறது தமிழைத் தமிழாகப் பேசத் தெரிகிறதா ? இலக்கணம் தெரியுமா ? தொல்காப்பியம் படித்திருக்கிறதா ? இந்தக் குழந்தைகளினால் என்ன பிரயோஜனம் ? உங்களுக்குத் தெரியுமா அவைகளினால் என்ன பிரயோஜனம் ?

... ஓஹோ ? கவிதையா ? இன்னொரு தடவை பார்த்துக் கொள்ளலாம்.

(நன்றி : புதுமைப்பித்தன் கட்டுரைகள் - மீனாட்சி புத்தக நிலையம், மதுரை - பிப்ரவரி, 1954)
***

கருத்துகள் இல்லை: