28/03/2012

அறிந்தோர் வாக்கும் அறிவியல் நோக்கும்!

தமிழர்கள் பேசிவந்த, இன்றும் வழக்கிலுள்ள தமிழ்ச் சொற்களில் நாட்டுப்புறப் பேச்சுவழக்கில்; பழமொழிகளில் சொலவடைகளில் கூறப்பட்டுள்ள அறிவியல் செய்திகள், உலக அறிவியல் அறிஞர்கள் வியந்து ஒத்துக்கொள்ளக்கூடிய ஒப்பற்ற தேடல்களாகும். நம் தமிழர்கள் வாழ்வோடு அறிவியலையும் வகுத்து வைத்துள்ளனர். அவைகளில் சிலவற்றை மட்டும் காண்போம்.

""காட்டாடு மலையேறும்; கடலுதண்ணி மேடேறும்''. இதன் பொருளாவது, கடல் சீற்றமெடுத்துப் பொங்கி மேட்டு நிலத்தை அடையும் முன்பே அங்கிருக்கும் ஆடுகள் உயர்ந்த மேடான இடத்துக்கு ஓடிவிடும் என்பதாகும்.

""கொடிக்கா மின்னல் ஒடிக்கா வெத்திலை'' - கொடிக்கால் மின்னல் (தென்கிழக்கில் மின்னல்) மின்னினால், வெற்றிலை எல்லாம் வீணாகும் அளவுக்கு மழை உண்டு என்பதாகும்.

""போத்திடம் பெயரப் பேத்தடி வைக்காதே'' - காட்டில் சென்றுகொண்டு இருக்கும்போது செம்போத்து என்னும் பறவை நமக்கு முன்னால் சென்றால், அங்கு பாம்பு இருக்கிறது; அதை விரும்பி உண்ணச் செம்போத்துப் பறவைச் செல்கிறது; அதனால் அங்கு செல்லாதே! என்று கூறப்பட்டுள்ளது.

""மாரித் தென்னல் மாடுகொண்டு மலைஏறு'' அதாவது, மழைக்காலத்தில் திடீரென்று தென்றல் காற்று வீசினால் வெள்ளம் வரப்போகிறது; அதனால் மாடு-கன்றுகளை ஓட்டிக்கொண்டு மேடான பகுதிக்குச் செல் என்று பொருள்.

""நகுலம்பாய நல்லதுதானே!'' - நகுலம் (கீரிப்பிள்ளை) நமக்கு முன்னாலே பாய்தோடினால், அங்கே நல்ல பாம்பு இருக்கிறது, அதை உண்பதற்காகக் கீரிப்பிள்ளை செல்கிறது என்று பொருள்.

இதுபோன்ற அறிவியல் கருத்துகள் நம் முன்னோர்களால் இன்னும் ஏராளமாகச் சொல்லப்பட்டுள்ளன. அவைகளைத் தேடிப்பிடித்து, அதன் வழி நடப்பது தமிழர்களின் தலையாய கடமை.

நன்றி - தமிழ்மணி

கருத்துகள் இல்லை: