29/05/2012

அகத்தியம் - கி.வா.ஜகந்நாதன்

அகத்தியர் இயற்றிய அகத்தியம் என்னும் இலக்கணம் மிக விரிவாக அமைந்தது. அந்த நூல் நமக்குக் கிடைக்காவிட்டாலும் அதைப் பற்றிய செய்திகளைப் பழைய உரையாசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள்.சில இடங்களில் அகத்தியத்திலிருந்து சூத்திரங்களை எடுத்து மேற்கோள் காட்டியிருக்கிறார்கள்.

இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழுக்கும் தனித்தனிப் பிரிவாக இலக்கணங்கள் அகத்தியத்தில் இருந்தன. எழுத்து, சொல், பொருள் என்றவற்றைப் பற்றிய இலக்கணங்களை இயல் தமிழ்ப் பிரிவில் அமைத்தார். பண்கள், அவற்றின் இனங்களாகிய திறங்கள், பாடல் வகை, நரம்புகளின் வகை, வாத்தியங்களின் அமைப்பு முதலிய செய்திகள் இசையிலக்கணத்தில் வந்தன. கூத்தன் இலக்கணம், அபிநயம், பாவம் முதலியவற்றைப் பற்றிய செய்திகளை நாடகத்தமிழ் இலக்கணத்தில் வைத்துச் சொன்னார்.

இப்போது கிடைக்கும் சில சூத்திரங்களிலிருந்து அகத்திய மென்னும் கடலின் ஒரு துளியை அறிந்து கொள்ளலாம்; அவ்வளவுதான்.

தமிழில் உள்ள சொற்களை ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு வகையாகப் பிரிப்பார்கள். சொல்லில் உள்ள எழுத்துக்களையும் பொருளையும் பற்றிய பிரிவுகள் இருக்கின்றன. அர்த்தத்தை எண்ணிப் பிரித்த சொற் பிரிவு நான்கு. பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என்று நான்காகச் சொல்வர். இடைச்சொல், உரிச்சொல் என்ற பாகுபாட்டை இலக்கண அறிவு வந்தவர்களே அறிவார்கள். ஆனால் பெயர்ச்சொல், வினைச்சொல் என்ற பாகுபாட்டைப் பொதுவாக யாவருமே அறியக்கூடும். அந்த இரண்டுமே முக்கியமானவை என்பது இலக்கண ஆசிரியர் கொள்கை. ஒரு பொருளின் பெயரைச் சொல்வது பெயர்ச்சொல். அதன் தொழிலைச் சொல்வது வினைச்சொல்.

இந்த இரண்டுமே தலைமையானவையென்று அகத்தியர் சொல்லுகிறார். "ஒரு மொழியின் மூலங்களைப் பகுத்துப் பார்த்தால் அதில் உள்ள சொற்களெல்லாம் பெயரிலும் வினையிலும் அடங்கிவிடும்" என்பது அவர் கூறும் இலக்கணம்.

"பெயரினும் வினையினும்
மொழிமுதல் அடங்கும்"

எழுத்துக்கள் சேர்ந்து சொல் ஆகின்றன. சொல் ஒரு பொருளை உணர்த்துவது. அர்த்தமில்லாத வார்த்தை இல்லை. அப்படி இருந்தால் அதற்குச் சொல் என்ற பெயர் இல்லை. அது வெறும் ஒலியாகவே இருக்கும். ஒருவன் முக்கி முனகுகிறான்; அந்த ஒலி காதில் விழுகிறது. அது சொல்லாகாது. ஒருவன் சீட்டி அடிக்கிறான். அது வெறும் ஒலியே ஒழியச் சொல்லாகாது.

சொல்லும் ஒலிதான். அந்த ஒலிக்கு ஓர் உருவம் உண்டு. முதலில் நாம் அந்த ஒலியைத்தான் கேட்கிறோம். அந்த ஒலியைக் காது கேட்டவுடன் அறிவு அதன் பொருளை ஆராய்கிறது. இன்ன அர்த்தம் என்று தெரிந்து கொள்கிறோம். சொல்லின் ஒலி காதில் விழுந்த மறுகணமே அதன் அர்த்தம் நமக்குத் தெரிகிறது. அதிகப் பழக்கத்தினால் சொல்லின் ஒலியும் பொருளும் ஒரே சமயத்தில் தோன்றுவதாகத் தெரிகிறது. உண்மையில் ஒலிதான் முதலில் தெளிவாகிறது. பிறகுதான் அதைப் பொருளோடு சேர்த்துப் பார்க்கிறோம்.

இந்த விஷயத்தை நமக்குத் தெரிந்த மொழி மூலம் அறிவது கடினம். நமக்குத் தெரியாத மொழிமூலம் இந்த அமைப்பை உணரலாம். யாரோ ஒருவன் பஞ்சாபியில் பேசுகிறான். அவன் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் நம் காதில் விழுகின்றன.ஆனால் அவை காதளவிலேயே நின்று விடுகின்றன. மூளையில் ஏறுவதில்லை. அது முதல் வாசலிலேயே நின்று போகிறது. ஆனால் பஞ்சாபி தெரிந்த ஒருவருக்கு அது வெகு வேகமாக இரண்டாவது கட்டத்துக்குப் போய் விடுகிறது. அந்த ஒலியின் பொருள் அவருக்குப் புலப்படுகிறது. இந்த இரண்டும் வெகு வேகமாக நடப்பதனால் சப்தத்தைக் கேட்பது அவ்வளவாகக் கவனத்துக்கு வருவதில்லை. ஏதாவது பாட்டில் புரியாத வார்த்தை ஒன்று வந்து அதற்கு வாத்தியார் அர்த்தம் கேட்டுவிட்டால் பையன் தலையைச் சொறிந்து கொண்டு நிற்பதைப் பார்த்திருக்கிறீர்களா? அப்போது அவனுக்கு அந்தச் சொல்லின் ஒலி மாத்திரம் தெரிகிறது. மேலே மூளைக்கு அது ஏறாமல் போகிறது.

ஆகவே ஒரு சொல் முதலில் தன் உருவமாகிய ஒலியைப் புலப்படுத்துகிறது. அதன் பிறகே பொருளைத் தெரிவிக்கிறது. "சொல்லானது தன்னை யும் தன் பொருளையும் உணர்த்தும் இயல்பை உடையது" என்று இலக்கணக்காரர் சொல்வர். அகத்தியர் இதற்கு உவமைகள் கூறி விஷயத்தை விளக்குகிறார்.

வயிரம் வயிரத்தை அறுக்கும் என்று சொல்வார் கள். வயிர ஊசி கண்ணாடி முதலிய பொருள்களை அறுத்த உபயோகப்படும் கருவி. அது வயிரத்தையும் அறுக்க உபயோகப்படும். அப்படியே இரும்பாலான அரம் மற்ற உலோகங்களை அராவுவதற்கு உபயோகமாவதோடு இரும்பையும் அராவப் பயன்படுகிறது. பொன்னை உரைத்துப் பார்க்கும் உரையாணியும் இந்த இனத்தைச் சார்ந்ததே. இவை மற்றவற்றைச் சோதிக்கும் விஷயத்தில் கருவியாக நிற்பதோடு தம் மைச் சோதிக்கும் கருவியாகவும் நிற்கின்றன. சொல்லும் அத்தகையதுதான். பிற பொருளைச் சுட்டுவ தோடு தன்னையே, தன் உருவத்தையே, சுட்டுவதற்கும் அது உதவுகிறது. அகத்தியர் இந்தச் செய்திகளைச் சூத்திரமாகச் சொல்லியிருக்கிறார்.

வயிர ஊசியும்
      மயன்வினை இரும்பும்
செயிரறு பொன்னைச்
      செம்மைசெய் ஆணியும்
தமக்கமை கருவியும்
      தாமாம் அவைபோல்
உரைத்திறம் உணர்த்தலும்
      உரையது தொழிலே.

இந்தச் சூத்திரத்திலிருந்து மொழியின் இலக் கணத்தைத் தெரிந்து கொள்வது ஒன்று. அதைக் காட்டிலும் சுவாரசியமான விஷயம் ஒன்று உண்டு. இலக்கண நூல் கூடச் சரித்திர ஆராய்ச்சியாளருக்குப் பயன்படும் என்ற உண்மையை இதனால் தெரிந்து கொள்ளலாம். அதைப்பற்றிக் கொஞ்சம் கவனிப்போம்.

'தமிழ்ச்சொல் தன் ஒலி உருவத்தைப் புலப்படுத்துவதோடு அதனாலே சுட்டப்படும் பொருளையும் தெரிவிக்கும்' என்பது இந்தச்சூத்திரத்திலிருந்து நாம் தெரிந்து கொள்ளும் மொழி இலக்கணம். இந்தச் செய்திக்கு உபமானமாக அகத்தியர் மூன்று கருவிகளை எடுத்துக் காட்டுகிறார்.

வயிர ஊசி, மயன்வினை யிரும்பாகிய அரம், உரை யாணி என்ற மூன்று கருவிகளை இந்தச் சூத்திரம் சொல்கிறது. அந்த மூன்றையும் உபமானமாகச் சொன்னால் சொல்ல வந்த விஷயம் தமிழர்களுக்கு நன்றாக விளங்குமென்பது முனிவர் கருத்து. ஆகவே, இந்த மூன்று கருவிகளும் இவற்றால் நடைபெறும் காரியங்களும் அகத்தியர் காலத்துத் தமிழர்களுக்குத் தெரிந்தவை என்று சொல்லலாம் அல்லவா? இது தான் சரித்திரம். இலக்கணத்திலிருந்து கூடச் சரித்திரத்தைக் காட்டலாம் என்று சொல்வதில் ஏதாவது பிழை உண்டா?

வயிரம், இரும்பு, பொன் என்பவற்றைத் தமிழர் தம் வாழ்க்கையிலே பயன்படுத்திக் கொண்டனர். வயிரத்தால் ஊசி செய்து வேறு மணிகளை அறுத்ததோடு, வயிரத்தையும் அதனாலே சாணையிட்டு வந்தனர். இரும்பை அராவி இருப்புக் கலங்களை இயற்றினர். பொன்னின் மாற்றை உரையாணியால் அறிந்தனர். அகத்தியர் காலத்தில் வயிரமும், பொன்னும், இரும்பும் தமிழர் வாழ்க்கையில் வந்துவிட்டன. அவற்றைத் தக்க வண்ணம் பயன்படுத்திக் கொண்டனர். அவர்களுடைய நாகரிகம் உயர்ந்ததென்று இதனால் தெரிகிறது.

*
ஒன்று, பல என்ற வித்தியாசத்தைப் பற்றிய ஆராய்ச்சி ஓரிடத்தில் வருகிறது. ஒரே பொருள் ஒரு வகையிலே பலவாகவும் ஒரு வகையிலே ஒன்றாகவும் இருக்கும். மாலையில் பல மலர்கள் இருக்கின்றன. பல பொருள்கள் கூடி அமைந்த பொருள் அது. ஆயினும் அப்படிக் கூடிய தொகுதியாக நிற்கும்போது அத்தொகுதிப்பொருளை ஒன்றாகக் குறிக்கிறோம்; மாலை யென்ற ஒன்றாக வழங்குகிறோம். மாலையாகப் பார்க்கும் போது அது ஒன்று; மலர்களாகப் பார்க்கும்போது பல. இப்படியே ஒரு பெரும்படை இருக்கிறது. பல ஒன்றுகள் சேர்ந்த ஒன்று அது. பல வீரர்கள் சேர்ந்த படை. வீரர்களாகப் பார்க்கையில் பன்மை தோன்று கிறது. படையாகப் பார்க்கையில் ஒருமை தோன்றுகிறது. இப்படியே சோறு, கறி, பச்சடி என்ற பல பண்டங்கள் சேர்ந்து உணவு என்ற ஒன்று ஆகின் றன. பல ஏடுகள் சேர்ந்து ஒரு புத்தகம் ஆகின்றன.

பல பலகைகளும் ஆணியும் சேர்வதனால் ஒரு கதவு அமைகிறது. பலநூல்கள் கூடி ஒரு கம்பலத்தை உண் டாக்குகின்றன. மலராகிய ஒன்றுக்கும் மாலையாகிய ஒன்றுக்கும் வித்தியாசம் உண்டு. மலர் தனியான ஒன்று. மாலையென்பது பலபொருள்கள் சேர்ந்த ஒன்று. அதைப் பலவின் இயைந்த ஒன்று என்று அகத்தியர் சொல்கிறார்.

பலவின் இயைந்தவும் ஒன்றெனப் படுமே
அடிசில் புத்தகம் சேனை அமைந்த
கதவம் மாலை கம்பலம் அனைய

என்பது அவர் கூறும் சூத்திரம்.

பல பொருளும் சுவையும் கலந்த உணவை உண்டு பல ஏடுகளைச் சேர்ந்த சுவடிகளைப் பயின்று, பல வீரர்கள் சேர்ந்த படைகொண்டு போர் செய்த னர் தமிழர். பல பலகைகளை இணைத்த கதவை மனை யில் அமைத்தனர். மலர் மாலை சூடினர். கம்பலத்தைப் பயன்படுத்தினர். இந்தச் சரித்திரச் செய்தி களையும் சூத்திரம் தெரிவிக்கின்றது. அன்றியும் புத்தகம், சேனை, கம்பலம் என்ற வடசொற்கள் அகத்தியர் காலத்திலே தமிழாகிவிட்டன என்ற செய்தியும் தெரிய வருகிறது.*
---------
* இந்தச் சூத்திரங்கள் பழைய அகத்தியர் சூத்திரங்கள் அல்ல என்பது சில ஆராய்ச்சியாளர் கொள்கை.

இவ்வாறு அகத்தியத்தில் இப்போது கிடைக்கும் சூத்திரங்களைக் கொண்டு ஆராய்ந்தால் தமிழர் வாழ்க்கையைக் குறித்த சில செய்திகள் தெரியவரும்.

அகத்தியர் காலத்தில் வடமொழி வியாகரணம் ஒன்று எட்டாம் வேற்றுமையை முதல் வேற்றுமையில் அடக்கிக் கூறியது. இந்திரன் இயற்றிய வியாகரணம் ஒன்று வழக்கில் இருந்தது. ஒரே சொல்லைப் பொருள் சிறந்து நிற்பதற்காக இரண்டு தடவையும் மூன்று தடவையும் நான்கு தடவையும் சொல்வதுண்டு. இவை சில சூத்திரங்களால் தெரியவரும் செய்திகள்.

அகத்தியர் செய்யுள் சம்பந்தமாகச் சொல்லியிருக்கும் சில சூத்திரங்களும் கிடைக்கின்றன. இசைத் தமிழ் சம்பந்தமாக அவர் இயற்றிய சூத்திரம் ஒன்றும் கிடைக்கவில்லை. ஆயினும் "அகத்தியனார் இப்படிச் சொன்னார்" என்று தெரிவிக்கும் சூத்திரங்கள் சில உண்டு. அவற்றால் இசை நாடகங்களுக்கும் அவர் இலக்கணம் வகுத்தார் என்பது தெரிய வரும்.

பாலையென்பது ஒரு பண். பண்ணிலிருந்து பிறக்கும் இனங்களைத் திறம் என்று கூறுவர். ஒவ்வொரு பண்ணுக்கும் திறங்கள் உண்டு. பாலைப்பண்ணுக்கு ஐந்து திறங்கள் உண்டு. ஜனக ராகம், ஜன்ய ராகம் என்று கர்நாடக சங்கீதத்தில் இரண்டு வகை இருக் கின்றன. ஜனக ராகத்தை மேளகர்த்தா என்றும் சொல்வர். அதைப்போன்றதுதான் பண். அதிலிருந்து பிறப்பது திறம். பாலைப்பண் ஒரு மேளகர்த்தாவைப் போன்றது. அதிலிருந்து பிறக்கும் திறங்கள் தக்க ராகம், நேர்திறம், காந்தாரபஞ்சமம், சோமராகம், காந் தாரம் என்ற ஐந்துமாகும். இப்படி அகத்தியனார் சொன்னதாக வேறொரு புலவர் எடுத்துக் காட்டுகிறார்.

..... என்றைந்தும்
பாலைத்திறம் என்றார்
பூந்தார் அகத்தியனார்
போந்து

அகத்தியத்தில் பண்களையும் திறங்களையும் பற்றிய இலக்கணங்கள் இருந்தன என்பதற்கு இது சாட்சி யாக நிற்கிறது.

அவைதாம் சாந்திக் கூத்தும்
      விநோதக் கூத்தும்என்று
ஆய்ந்துற வகுத்தனன்
      அகத்தியன் றானே

என்பது போன்ற சூத்திரங்களிலிருந்து கூத்திலக் கணத்தையும் அகத்தியர் இயற்றினரென்று தெரிய வருகிறது.

தமிழர் அவர் காலத்தில் பண்ணும் திறமும் பயின்ற இசையிலே வல்லவராகி பல்வகைக்கூத்தும் ஆடி, அவற்றுக்கு இலக்கணமும் வகுத்துக் கொண்ட னர் என்ற செய்தியையும் அறிகிறோம்.