13/11/2015

விலைமகளிரே, உங்களுக்கு ஒரு ஆலயம் - எம்.முகுந்தன் (தமிழில் சுரா)

ஹரித்வாருக்கு செல்லும்போது தன்னுடன் ஒரு விலைமாதுவையும் அழைத்துச் செல்லவேண்டு மென்று அவன் முடிவுசெய்தான்.

அவனுடைய வீட்டிற்கு எப்போதும் விலைமகளிர் வருவதுண்டு. அலுவலகத் திலோ எப்போது பார்த்தா லும் விலைமகளிர் தொலை பேசியில் தொடர்புகொண்ட வண்ணம் இருப்பார்கள். ரெஸ்ட்டாரென்டில் விலை மகளிருடன் ஒன்றாக அமர்ந்துதான் அவன் காபி குடிப்பதே. காலரிகளில் ஓவியக் கண்காட்சிகளைப் பார்ப்பதற்குப் போகும்போது கூட அவனுடன் விலை மகளிர் இருப்பார்கள். எல்லா செவ்வாய்க்கிழமைகளிலும் அனுமன் கோவிலுக்கு வழிபடச் செல்வதும் விலைமகளிர் புடைசூழத் தான்.

சிதைக்குச் செல்வதுகூட விலைமகளிருடன்தான் இருக்கும்.

அவன் வாழ்க்கையே விலைமாதர்களின் தெருக்கோவிலாகிவிட்டது.

ஒரு விலைமகளின் வயிற்றில் பிறக்காமல் போய்விட்டோமே என்பதுதான் அவன் வாழ்க்கையிலேயே இருக்கும் மிகப்பெரிய கவலை. ஒரு நல்ல குடும்பத்தைச் சேர்ந்த- பொன் போன்ற குணத்தைக்கொண்ட தாயின் கர்ப்பப்பையில்தான் அவன் உருவானான். தந்தைக்கு சொந்தமானதைத் தவிர, வேறு யாருடைய உயிரணுக்களும் உள்ளே நுழைந்திராத அந்த கர்ப்பப்பையில்தான் அவன் ரத்தத்திலும், சதையிலும் எலும்பிலும் உருவானான். அதுதான் துயரமே.

நெப்போலியன், சே குவேரா, பாப் டைலன் ஆகியோரின் துயரங்களும் அதேதான். எர்வின் ஸ்ட்ரீட் மேட்டரும், விற்றோல்ட் காம்போவிக்கும் அதே துயரம் நிறைந்த சிலுவைகளில் கிடக்கிறார் கள். புத்தன், ஏசு ஆகியோரின் துயரமும் அவனுடைய துயரம்தான்.

நெப்போலியனும் சே குவேராவும் பாப் டைலனும் ஏன் ஒரு விலைமகளின் கர்ப்பப்பையில் பிறக்க வில்லை?

ஸ்ட்ரீட் மேட்டரும், காம்போவிக்கும் ஏன் விலைமாதுக்களின் பிள்ளைகளாக இருக்கவில்லை?

புத்தனும் இயேசுவும் ஏன் விலைமாதுக்களின் வயிற்றில் பிறவி எடுக்கவில்லை?

அவன் விலைமாதின் கர்ப்பப்பையில் பிறக்க வில்லை; உண்மைதான். ஆனால் அவன் விலைமகள் களுடன் வாழ்வான். அவர்களை இறுக அணைத்துக் கொண்டுதான் இறப்பான். ஒரு விலைமகளுடன் சேர்ந்து மட்டுமே அவன் இறப்பான்.

ஹரித்வாருக்கு செல்வதுகூட ஒரு விலைமகளுடன் சேர்ந்துதான் என்பதும் உண்மைதான்.

"கரால்பாக்'கில் இருக்கும் சாந்தா என்ற விலைமாது சொன்னாள்:

""ஹரித்வாருக்கு நானும் வருகிறேன்.''

சாந்தா திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்தவள். 

அவள் கருத்து, மெலிந்துபோய் காணப்படுவாள். 

அவளுக்கு காலில் ஊனம்.

"தரியாகஞ்ச்'சை சேர்ந்த காந்தா என்ற விலைமாது கேட்டாள்:

""நானும் வரட்டுமா?''

காந்தா திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்தவள் 

அல்ல. கருத்து மெலிந்திருப்பவள் அல்ல. கால் ஊனம் உள்ளவளும் அல்ல.

காந்தா சாந்தா அல்ல.

காந்தா பஞ்சாபைச் சேர்ந்தவள். அவளுக்கு கோதுமையின் நிறம். தலைமுடியில் கடுகெண் ணெய்யைத் தேய்த்து, எப்போதும் சீவி விட்டிருப் பாள்.

காந்தா காந்தாதான்.

சாந்தா சாந்தாதான்.

காந்தா காந்தாவாகவும், சாந்தா சாந்தாவாகவும் இருக்கிறார்கள்.

"டிஃபன்ஸ் காலனி'யில் இருக்கும் லதாவிற்கு பதினெட்டு வயது. "யாங்கி' பாணியில் ஆங்கிலம் பேசுவாள். பீட்டில்ஸை வழிபடக் கூடியவள். பெல் பாட்டம் பேன்ட்டையும், கோகோ குர்தாவையும் அணிந்திருப்பாள். மூக்கின்மீது மூக்குத்தி இருக்கிறது.

லதா என்ற விலைமாது சொன்னாள்.

""நானும் வருகிறேன்.''

அவள் வெறுமனே வரமாட்டாள். பணம் தரவேண்டும். ஒவ்வொரு நிமிடமும் அவளுக்கு விலைமதிப்பு கொண்டது. ஒரு மணி நேரத்திற்கு எழுபத்தைந்து ரூபாய் அவளுடைய விலை. ஹரித்வாரில் மூன்று நாட்களை செலவழிக்க திட்டமிட்டிருக்கிறான்.

""உனக்கு எவ்வளவு ரூபாய் வேண்டும்?''

""ஐந்நூறு ரூபாய் தர முடியுமா?''

""தருகிறேன்.''

லதா போதும். அவளுடைய மூக்குத்தி போதும். அவளுடைய பெரிய பின்பாகம் போதும். ஐந்நூறு ரூபாய் புல்லுக்கு இணை. பத்து நாட்களுக்கான சம்பளம். பத்து நாட்களுக்கான சம்பளத்தை மட்டுமல்ல... ஒரு மாதத்திற்கான சம்பளம் முழு வதையும்கூட கொடுக்கலாம். ஒரு வருடம் வாங்கக் கூடிய சம்பளத்தைத் தரலாம். வாழ்நாள் முழுவதும் பெறக்கூடிய சம்பளத்தையும் கொடுக்கலாம்.

நீ போதும்... உன்னுடைய மூக்குத்தி போதும்...

""ஐந்நூறு அதிகமா?''

""இல்லை. குறைவு...''

""அப்படின்னா ஆயிரம் ரூபாய் தர முடியுமா?''

""பத்தாயிரம் தரலாம்.''

பத்தாயிரம் என்பது யானையின் விலை. யானையைவிட மதிப்பு உள்ளவளாயிற்றே விலைமாது!
""கையில் இருந்தால் தருவீர்கள் என்பது எனக்குத் தெரியும்.''

தொலைபேசியில் மணி ஒலிப்பதைப்போல 

அவள் சிரித்தாள். அவளுக்கு அவன்மீது காதல். 

அவனுடைய சதைப் பிடிப்பான கைகள், கால்கள், நீளமான கழுத்து, விரிந்த நெஞ்சு, பைப்பின் கறை படிந்த சிரிப்பு.. அனைத்துமே அவளுக்கு பிடித்த விஷயங்கள்தாம்.

அவளுக்கு மட்டுமல்ல அவன் மீது காதல்.

"கரால்பாக்'கின் சாந்தாவிற்கும் காதல்...

சாந்தாவிற்கு மட்டுமல்ல காதல்-

"தரியாகஞ்ச்'சின் காந்தாவிற்கும் அவன்மீது காதல்...

லதாவிற்கும் சாந்தாவிற்கும் காந்தாவிற்கும் மட்டுமல்ல; நகரத்தின் எல்லா விலைமாதர்களும் அவனைக் காதலிக்கிறார்கள்.

அவன் விலைமகன்களின் ஆலயம்.

இராவணன் என்ற அரக்கனுக்காக மனிதன் ஆலயங்களை உருவாக்கினான். அனுமன் என்ற குரங்கிற்காகவும் நாடு முழுவதும் அவன் ஆலயங்கள் கட்டினான். சிவனுடைய சிறுநீர் கழிக்கும் உறுப்பை அவன் பிரதிஷ்டை செய்து வழிபட்டான்.

விலைமகள்களுக்காக யாரும் ஆலயங்கள் உருவாக்கவில்லை.

அவன் உருவாக்குவான். நாடு முழுவதும், வாழ்க்கை முழுவதும் அவர்களுக்காக அவன் ஆலயங்களைக் கட்டுவான்.

திரிவேணி கட்டத்தில் இருக்கும் துறவிகளே, விலைமகள்களுக்காக காயத்ரி மந்திரங்களைக் கூறுங்கள்.

அர்ச்சகர்களே, விலைமகள்களுக்காக பூஜை செய்யுங்கள்.

மணிகளே, விலைமகள்களுக்காக ஒலியுங்கள்.

தீபங்களே, விலைமகள்களுக்காக பிரகாசமாக எரியுங்கள்.

மனிதனுக்கு சுகத்தைக் கொடுத்துக் கொடுத்து, சமுதாயம் என்ற நாறிக் கொண்டிருக்கும் ஓடையில் பால்வினை நோய் வந்து இறந்து அழிந்துபோகும் விலைமாதுக்களுக்காக உலகமே, நீ கண்ணீரைச் சிந்து... விலைமகள்கள் கடவுளின் தூதுவர்கள்... தவம் செய்யும் துறவிகள்... தேவதைகள்.. விலைமகள்களே, உங்களுக்காக நான் கண்ணீர் சிந்துகிறேன்.

""நான் எங்கு வரணும்?''

லதாவின் குரல் மீண்டும் தொலைபேசியில் கேட்டது. 

""வீட்டில் தயாராக இரு. காலையில் ஆறு மணிக்கு...''

சூட்கேஸில் சட்டைûயும் பேன்ட்டையும் எடுத்து வைத்தான். தேவைப்படக்கூடிய வேறுசில சிறுசிறு பொருட்களையும்... அந்தப் பட்டியலில் ஆஃப்டர் ஷேவ் லோஷனும் ஓடிகொலானும் இருந்தன. ஒரு பெரிய டின் புகையிலையும், மூன்று பைப்புகளும்...

சூட்கேஸை பூட்டிவிட்டு, டாக்ஸிக்காக தொலைபேசியில் பேசினான். டாக்ஸி கூறியது:

""இரண்டு நிமிடங்கள் சார்.''

அறையைப் பூட்டிவிட்டு வெளியே வந்தபோது, டாக்ஸி வந்து சேர்ந்திருந்தது.

""எங்கே?''

டாக்ஸி கேட்டது.

""டிஃபன்ஸ் காலனி...''

""எந்த ப்ளாக்?''

டாக்ஸி ஓடுவதற்கிடையில் கேட்டது.

""லதா என்ற விலைமகள் வசிக்கக்கூடிய ப்ளாக்கிற்கு...''

டாக்ஸி பான் தின்று சிவக்க வைத்த சிரிப்புகளில் வெறுப்பு கலந்திருக்க, டிஃபன்ஸ் காலனியை நோக்கி வேகமாக விரைந்தது. லதாவின் வீடு அவனுக்குத் தெரியும். அவனுக்கு மட்டுமல்ல; எல்லா டாக்ஸி களுக்கும் தெரியும். டாக்ஸிகளுக்கு மட்டுமல்ல- காடிலாக்குகளுக்கும் ஷெப்ரோலாக்களுக்கும் தெரியும். அவளுடைய வீடு ஒரு புனிதத் தலம்...

புனிதப் பயணிகளே, நீங்கள் ஏன் ரிஷிகேஷுக்குச் செல்கிறீர்கள்? புனிதப் பயணிகளே, நீங்கள் ஏன் அலஹாபாத் சங்கமத்தில் மூழ்குகிறீர்கள்? புனிதப் பயணிகளே, நீங்கள் எதற்கு மலைமீது ஏறி அமர்நாத்துக்கும் பத்ரிநாத்துக்கும் செல்கிறீர்கள்?

சாந்தா வசித்துக்கொண்டிருக்கும் கரோல் பாக்தான் ரிஷிகேஷ். காந்தா வசித்துக்கொண்டிருக்கும் தரியாகஞ்ச்தான் பத்ரிநாத். லதா வசித்துக் கொண்டி ருக்கும் டிஃபன்ஸ் காலனிதான் அமர்நாத்.

லதா வாசலில் எதிர்பார்த்துக் காத்திருந்தாள். கண்களில் தூக்க சாயல் இருந்தது. பச்சை நிறப் புடவையை உடலில் சுற்றியிருந்தாள். கன்னத்தில் பற்களின் சிவந்த அடையாளங்கள்...

""உன்னைப் பார்க்கும்போது விலைமகள் என்றே தோன்றுவதில்லை.''

""பிறகு... என்ன தோன்றுகிறது?''

""தேவதை என்று...''

""நான் விலைமகள்தான்... என்னுடைய உடலுக்கு பாவத்தின் நாற்றம் இருக்கிறது.''

""உன்னுடைய உடலுக்கு அமிர்தத்தின் நறுமணம் இருக்கிறது.''

அவள் இருக்கையில் அவனுடன் நெருங்கி உட்கார்ந்தாள்.

""நேற்று தூங்கவில்லையா? எத்தனை வாடிக்கை யாளர்கள் வந்தார்கள்?''

""இரண்டு...''

அவர்கள் யார் என்று அவள் விளக்கிக் கூறினாள். ஒரு மனிதன் ஒரு தூதரகத்தின் இரண்டாவது செகரட்டரி. அவனுக்கு பொன் நிறத்தில் கிருதாக்கள் இருந்தன. இன்னொரு ஆள் நகரத்தின் பெயர்பெற்ற ஒரு ஓவியன். அவனுக்கு நீளமான தலைமுடி இருந்தது.

""பல் யாருடையது?''

""ஓவியனின்...''

ஓவியன் அவளுடைய கன்னத்தில் தன்னுடைய பற்களால் ஓவியங்கள் வரைந்திருப்பானோ?

டாக்ஸி புதுடெல்லி புகைவண்டி நிலையத்தை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது.

""நான் உன்னைத் தேடி ஏன் வருகிறேன்?''

"காமவெறியைப்போக்கிக் கொள்வதற்கு...''

""இல்லை.... என்னிடம் இருக்கும் பாவங்களைக் கழுவிக்கொள்வதற்கு...''

சாந்தாவின் கருத்து காய்ந்துபோன ஊனமுற்ற காலைக் கட்டிப் பிடித்துக்கொண்டு இவன் அழுதான்.

"என்னை என்னுடைய பாவங்களிலிருந்து காப்பாற்று!'

அவள் அழுதாள்.

"நீ தேவதை!'

பால்வினை நோயால் பாதிக்கப்பட்டிருந்த தேவதையின் கண்களிலிருந்து கண்ணீர் தொடர்ந்து வழிந்துகொண்டிருந்தது.

மஸ்ஸுரி எக்ஸ்பிரஸ்ஸின் முதல் வகுப்பு அறையில் விலைமாதுவின் தோளில் தலை சாய்த்துக் கொண்டு அவன் உறங்கினான்.

விலைமகளின் கையைப் பிடித்துக்கொண்டு 

அவன் ஹரித்வாரில் வண்டியைவிட்டு இறங்கினான்.

""உனக்கு பால்வினை நோய் இருக்கிறதா?''

""இல்லை... சீக்கிரம் வரும்...''

அவள் புன்னகைத்தாள்.

கஜுராஹோவில் இருக்கும் புண்ணிய ஆலயங்களே, என்னை உங்களுடைய சுவர்களில் பதித்துக் கொள்ளுங்கள்.

தேவதாசிகளே, சிதைகளிலிருந்து விழித்தெழுங்கள்... கலியுகத்தின் தலைவிதியைத் திருத்தி எழுதுவதற்காக வாருங்கள்.. வாருங்கள்...

நான் காத்திருந்தேன்.

முதல் உடலுறவின் களைப்பிலிருந்து விழித்தெழு...

அவன் சொன்னான்.

""நாம் மானஸாதேவியைப் பார்ப்பதற்காகச் செல்வோம்.''

ஆடைகளை மாற்றிக்கொண்டு அவர்கள் சுற்றுலா மாளிகையைவிட்டு வெளியே வந்தார்கள். அப்பர் சாலையின் வழியாக நடந்தார்கள். மானஸாதேவியின் சந்நிதிக்குப் போய்ச் சேரவேண்டுமென்றால் மலையில் ஏற வேண்டும். கணக்கற்ற படிகளின் வழியாக அவர்கள் மேலே ஏறினார்கள். படிகள் முடிவுக்கு வந்தன.

மலர்களுடனும் வாசனைப் பொருட்களுடனும் ஏராளமான பக்தர்கள் மலையின்மீது ஏறி வந்து கொண்டிருந்தார்கள்.

மானஸாதேவிக்கு முன்னால் நின்று வணங்கினார்கள்.

தேவி, உனக்காக நான் மலர்கள் கொண்டுவரவில்லை. என்னிடம் வாசனைப் பொருட்களும் இல்லை. மலர்களுக்கும் வாசனைப் பொருட்களுக்கும் பதிலாக நான் அவை எல்லாவற்றையும்விட மிகவும் புனிதமான விலைமகளை அழைத்து வந்திருக்கிறேன். ஏற்றுக் கொண்டாலும்...

மக்கள் ஏராளமாகக் குழுமியிருந்த படித்துறைகளின் வழியாக விலைமகளின் கையைப் பிடித்துக் கொண்டு நடந்தான்.

அவள் சொன்னாள்:

""நான் குளிக்க வேண்டும்.''

படித்துறையில் ஏராளமான புனிதப் பயணிகள் மூழ்கிக் குளித்துக் கொண்டிருந்தார்கள். அவர் களுடைய பாவங்களின் மூலம் நதி கலங்கிப் போயிருந் தது. அவர்களுடைய பாவத்தை உண்டு நாறிப்போன மீன்கள் நதியில் இப்படியும் அப்படியுமாக நெளிந்து விளையாடிக் கொண்டிருந்தன.

""நான் என்னுடைய பாவத்தை இங்கு கழுவட்டுமா?''

அவள் மீண்டும் கேட்டாள்.

அவள் எதற்காக கங்கையில் குளிக்கிறாள்? அவள் தானே கங்காதேவி?

ஆமாம்... நீ குளி... நீ தொடுவதால், கங்கைக்கு பாவத்திலிருந்து விடுதலை கிடைக்கட்டும். கங்கை புனிதமாகட்டும்...

"சப்த தாரை' பகுதியைக் கடந்து நதி மிகுந்த ஓசையுடன் ஓடிக்கொண்டிருந்தது.

""நாம் நிர்வாணமாகக் குளிப்போம்.''

""யாராவது பார்த்துவிட்டால்...?''

""உன்னுடைய நிர்வாணம் யாரும் பார்க்காததா என்ன?''

சப்தரிஷிகளே, லதா என்ற விலைமகளின் பாதம் பட்டு உங்களுடைய சப்ததீவுகள் புனிதமாகி விட்டி ருக்கிறது.

ரிஷிகளே, லதாவிற்காக தியானம் செய்யுங்கள்.

ப்ரம்மகுண்டமே, லதாவிற்காக விளக்குகளை எரியச் செய்யுங்கள்.

"வா...'

நதி அழைத்தது.


விலைமகளின் கையைப் பிடித்துக்கொண்டுஅவன் நதிக்குள் இறங்கினான். நதியில் அவர்கள் பயணித் தார்கள். சப்த தரையைக் கடந்து, ப்ரம்ம குண்டத்தை கடந்து, ஏராளமான பாலங்களுக்குக் கீழே, வங்காள விரிகுடா கடலை நோக்கி அவர்கள் மிதந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

நன்றி - இனிய உதயம் 01 09 2013

பிசாசு - வைக்கம் முஹம்மது பஷீர் (தமிழில் சுரா)

ஒருவேளை? எதையாவது பார்த்துவிட்டுதான் நாய்கள் இப்படி ஊளையிடுகின்றன. மையைப்போல கறுத்து, இருண்டு கிடக்கும் இந்த நள்ளிரவு வேளையிலும் நாய்களால் பார்க்கமுடியும். அதனால் தான் வாசனை பிடித்துக்கொண்டு, ஒவ்வொன்றையும் தேடி இங்குமங்குமாக அது ஓடித்திரிந்து கொண்டிருக்கிறது! என்ன? பிசாசு என்ற ஒன்று இருக்கிறதா? சரிதான்... பிசாசும் பூதமும் யானை மருதாயும், 

அறுகொலையும் கருங்காளியும் சாத்தானும்- சகல வித ஷைத்தானும் இருக்கத்தான் செய்கின்றன. சரியான நள்ளிரவு வேளையில் நெருப்பைப் போன்ற கண்களை ஜொலிக்க வைத்துக்கொண்டு, உடுக்கையால் ஓசை உண்டாக்கியவாறு வரும் யானை மருதாய்...? நிச்சயமாக உண்டு. ஆனால் நான் பார்த்ததில்லை. எனக்கு ஒரு ஆளைத் தெரியும். நெருப்புருண்டைகளை வைத்துப் பந்தாடும் எலும்புக்கூடுகளின் ஊர்வலத்தைப் பார்த்தவர் அவர்! ஒரு வெள்ளிக்கிழமை. நள்ளிரவு வேளையில், ஒரு வயலின் நடுவில் அவர் பார்த்தார்- ஒரு பெரிய நெருப்பு. எரிந்து எரிந்து அது அப்படியே வானத்தின் உயரத்திற்கு உயர்ந்தது. திடீரென்று இடி முழங்கியதைப் போல ஒரு அட்டகாசம்! சிறிது சிறிதாக ஆன அந்த நெருப்பு அப்படியே அணைந்துவிட்டது. அதற்குப் பிறகும் இரைச்சலுடன் அது மலைபோல எரிந்து உயர்ந்தது- லட்சம் குரவ மலர்கள் ஒரே நேரத்தில் எரிவதைப் போல. திடீரென்று இதயத்தை நடுங்கச் செய்கிற அளவிற்கு ஒரு சிரிப்பு வெடித்துச் சிதறி வானத்தின் விளிம்பை அடைந் தது. அத்துடன் ஆயிரக் கணக்கில் அந்த நெருப்பு பிரிந்தது. கழுத்தில் தீப்பந்தத்தைச் சொருகிக் கொண்டு, ரத்தத்தில் குளித்த தலையில்லா சரீரங்களுடன்... தொடர்ந்து அவை அனைத்தும் அந்த ஆளைச் சுற்றி நடனமாடுகின்றன! ஆமாம்... ஆள் பயங்கரமான தைரியசாலிதான். வீட்டிற்குள் சென்று நுழைந்தவுடன், அவருடைய சுய உணர்வு இல்லாமல் போனது. மூன்று மாத காலத்திற்கு எந்தவொரு ஞாபகமும் இல்லை. வெறும் முனகல்களும் உளறல்களும். என்னவெல்லாம் நடந்தன தெரியுமா? அவர் ஒரு சமுதாய சீர்திருத்தவாதியாக இருந்தார். அவருக்கு சில எதிரிகள் இருந்தார்கள். 

அவர்களை அவர் அழித்துவிட்டார். எப்படித் தெரியுமா? தேநீர்க்கடைக்காரனுக்கு கொஞ்சம் பணம் கொடுத்தார். தனக்கு எதிராக இருக்கும் நண்பர்களுக்குத் தரும் தேநீரில் ஒரு வகையான "ஆஸிட்'டை கலந்து கொடுப்பதற்காக. அந்த வகையில் ஒரு ஆறு மாதங்கள் கடந்தோடி விட்டன. அவர்கள் யாரும் இறக்கவில்லை! ஆனால், அவர்களுடைய ஆண்மைத்தனம், மதிப்பு எல்லாம் இல்லாமற்போயின. அவர்கள் எல்லாரும் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த ஆள் மட்டும் மரணமடைந்துவிட்டார். தன்னைத் தானே கழுத்தை அறுத்துக்கொண்டு அவர் இறந்துவிட்டார். ங்ஹா... இதைப் போன்ற பயங்கரமான சம்பவங்கள் தினமும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. நம் அனைவரது கண்களுக்கும் முன்னால்தான்! ஆமாம்... ஆமாம். உணவில் "ஆஸிட்'டைக் கலந்துகொடுத்து எதிரிகளை அழிப்பதென்ற விஷயம் அந்தக் காலத்திலிருந்தே நடைமுறையில் இருந்து வந்திருக்கும் ஒரு செயல்தான். ங்ஹா... பிசாசுகள்தான்! நண்பரே! மனிதர்கள் மட்டுமே பிசாசுகளாக இருக்கிறார்கள். ஒரு ஆன்ம பரிசோதனை நடத்தப்பட்டால், மனசாட்சிக்கு முன்னால் அனைவரும் அவலட்சண உருவம் கொண்டவர்களாக மாறி விடுவார்கள். அவ்வளவுதான்... ...பிசாசுகள்!

அந்த விளக்கை அணைத்துவிடு. பொருட்களுக்கு அதிகமான விலையிருக்கும் இந்த போர்க்காலத்தில் எண்ணெய்யை வெறுமனே வீணாக்க வேண்டாம். கை பட்டு சிம்னி விளக்கு உடைந்து விடாத இடத்தில் அதை வைக்கவேண்டும். ங்ஹா... சரிதான். உண்மையிலேயே இருட்டு ஒரு சுகம்தான். மறைந்துபோன காரியங் கள், அனுபவங்கள் அனைத்தும் இருளின் பேரமைதியில்தான் முகத்தைக் காட்டுகின்றன. என்ன? மேலே "கிருகிரா' என்ற சத்தம் கேட்கிறதோ? ஓ... அது ஏதாவது பூனையாக இருக்கவேண்டும். நாய்கள் இங்குமங்குமாக ஓடிக் கொண்டிருப்பதையும் ஊளையிடு வதையும் பார்த்து பயந்துபோய் வீட்டின் மேலே இருந்தபடி பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். அந்த தீப்பெட்டியை இங்கே கொடு. தீக்குச்சிகள் மிகவும் மெல்லியவையாக இருக்கின்றவே! நான் அதை "ப்ளேடை' பயன்படுத்தி நான்கு துண்டுகளாக்கி வைத்திருக்கிறேன். விலை அரை அணாதானே? (மூன்று பைசா). எப்படி தவறு செய்ய முடியும்? ஓஹோ! ஆறு, எட்டு துண்டுகளாகக்கூட ஒரு தீக்குச்சியை ஆக்கலாம். ஆனால், அதற்கு மிகுந்த அனுபவம் வேண்டும். இதோ... தலையணைக்கு அடியில் வைத்திருக்கிறேன். இரவு வேளைகளில் என்னிடம் ஏதாவது இருக்க வேண்டும். ஒரு தீப்பெட்டியோ டார்ச் விளக்கோ... ஆமாம்... ஒரு கட்டாயமாக அது ஆகிவிட்டது. 1933-ஆம் ஆண்டில் டும்கூரில் நடைபெற்ற ஒரு அனுபவம்தான் காரணம். 

அதுவா? பயங்கரம்! நினைத்துப் பார்க்கும்போது என் இதயம் "கிடுகிடு' என்று நடுங்குகிறது. கதையல்ல- உண்மையாகவே நடைபெற்ற சம்பவம்! ஆமாம்... கதையென்று கூறுவதாக இருந்தால், அது நடக்காத சம்பவமாக இருக்கவேண்டும் என்று என் காதலி கூறுகிறாள். 

ஆமாம்- நானும் காதலிக்கிறேன். அளவற்ற காதலின் -சுவாரசியத்தை நானும் தெரிந்துகொண்டுவிட்டேன். காதல்! அது என்னை மூச்சை அடைக்கச் செய்கிறது. என் இதயத்தை அது நூறு இடங்களில் காயப்படுத்தி விட்டது. ஆமாம்... இப்போதும் நான் காதலின் நெருப்பு அடுப்பில்தான் இருக்கிறேன். என்னை அது சாம்பலாக்கட்டும். நான் வெந்து நீறாக ஆகட்டும். 

அதற்குப் பிறகும்... அதற்குப் பிறகும்... நான் யுகங்களின் தீவிரத்தன்மையுடன் காதலிக்கிறேன். தாகம்-அடங்காத தாகம் என்னை வாட்டுகிறது. காதலின் அந்த அமிர்தம் எனக்கு வேண்டும். நான் அதை நிறைய... நிறைய... பருகி... நீங்கள் ஏன் சிரிக்கிறீர்கள்? ங்ஹா... அது பிடித்துக் கொண்டது. எல்லையற்ற காலத்திலிருந்தே கற்பனையில் வலம்வந்து கொண்டிருக்கும் அந்தப் பிசாசு! நரகத்தின் ஆழத்திற்குள்ளிருந்து சொர்க்கத்தின் தளத்திற்கு வாழ்க்கையை அப்படியே பந்தாடும் அந்த கோபம் கொண்ட, கெட்ட எண்ணம் நிறைந்த பூதம்! காதல் என்னைப் பிடித்துக்கொண்டிருக்கிறது.

ஒரு மூன்று வருடங்கள் ரகசியமாக நான் காதலித் துக் கொண்டிருந்தேன். என்னுடைய "ஹெல'னை... பெயர் அதுவல்ல. எனினும், நான் "ஹெலன்' என்றுதான் அழைக்கிறேன். "மைடியர் ஹெலன் ஆஃப்...' -இப்படித்தான் காதல் உணர்வு நிறைந்த என்னுடைய இதயம் அவளை அழைக்கிறது. நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் அல்லவா? "ஹெலன் ஆஃப் ட்ராய்'யைப் பற்றி... ங்ஹா... அதே போலத்தான் தோற்றம். இருண்ட ஆழமான பகுதிகளை வெளிப்படுத்தும்- சற்று முன்னோக் கியிருக்கும் கறுத்த விழிகள்... நீண்டு, சிவந்த முகம்... சிவந்த, மென்மையான உதடுகள். பிப்ரவரி 23-ஆம் தேதிதான் நான் முதல் முறையாக அவளுக்கு ஒரு காதல் கடிதம் எழுதினேன். அதைத் தொடர்ந்து இதுவரை ஒரு தொண்ணூறு காதல் கடிதங்கள் எழுதி அனுப்பியிருப்பேன். என்னுடைய உயிரோட்டம் நிறைந்த குருதியில் அமிழ்த்தி எழுதிய காதல் கடிதங்கள்! ம்... அவள் பதில் எழுதினாள். என் ஹெலன் பரந்த மனம் கொண்டவள். சாப்பிட்டு முடித்து ஒரு பெரிய கொட்டாவி விட்டுக்கொண்டே அவையனைத்தையும் வாசித்து முடித்துவிட்டு, ஹெலன் எனக்கு பதில் எழுதினாள்: 

என்மீது அவள் அன்பு வைத்திருக்கிறாள்- ஆனால் ஒரு சகோதரனிடம்  அன்பு வைத்திருப்பதைப்போல. என்ன? என் ஹெலனை பிசாசு என்கிறீர்களா? சட்! உன்னை நான் அடித்து நொறுக்கிவிடுவேன்! ங்ஹா! மன்னிப்பு கேட்கவேண்டிய அவசியமில்லை. இனிமேல் எச்சரிக்கையுடன் இருந்துகொண்டால் போதும்.

என் ஹெலன்! எல்லையற்ற பெண்மைத்தனத்தின் அடையாளம். ஆமாம்... அவளை நான் வழிபடுகிறேன். என்ன? கேட்பதற்கு சுவாரசியமாக இல்லையா? ஓ... அப்படியென்றால், தூங்கிக் கொள்ளுங்கள். குட் நைட்!... ங்ஹா! பள்ளிக்கூடம் எங்கே இருக்கிறது என்று கேட்கிறீர்களா? மைசூர் சமஸ்தானத்தில். அங்கு போயிருக்கிறேனா என்று கேட்கிறீர்களா? சரிதான்! இந்தியா முழுவதும் நான் பயணம் செய்திருக்கிறேன். ஒன்பது பத்து வருடங்கள் தொடர்ந்து அலைந்து கொண்டிருந்தேன். எங்கெங்கெல்லாம் தெரியுமா? இந்தியாவின் பூகோள வரைபடத்தை விரித்துப் பார்க்கும்போது கவனித்திருக்கிறீர்கள் அல்லவா? சிறிது சிறிதாக இருக்கும் கறுப்பு நிற வட்டங்கள்? ங்ஹா... அவையனைத்தும் நகரங்கள். அவற்றில், நூற்றுக்கு எழுபத்தைந்தில் நான் வசித்திருக்கிறேன். ஆஃப்கானிஸ்தான் வழியாக ரஷ்யாவிற்குச் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், வைக்கத்திலிருந்து புறப்பட்டு கைபர் கணவாயை அடைந்தபோது, ஐந்து வருடங்கள் கடந்து விட்டிருந்தன. நத்தை ஊர்வதைப்போல நடவடிக்கை இருந்தது. அப்படியே ரஷ்யாவை அடையும்போது வாழ்க்கையே முடிவுக்கு வந்துவிடும் என்ற பயம் உண்டானதால், திரும்பி வந்துவிட்டேன். போனது? நாடுகளைப் பார்ப்பதற்கு. பணம்? அவற்றை எப்படியோ உண்டாக்கினேன். செய்யாத வேலையும், ஏற்காத ஜாதியும், போடாத வேடமும் இல்லை. சூழ்நிலைக்கேற்றபடி நான் எல்லாவற்றையும் செய்திருக்கிறேன். ஊ...? அந்த கிருகிரா சத்தத்தைப் பற்றி கேட்கிறீர்களா! ஓ... அது ஏதாவது நாயாக இருக்கும். காதுகளைத் தீட்டி வைத்துக்கொண்டு கேளுங்கள். அது வாசனை பிடித்துக்கொண்டே காய்ந்து போன சருகுகளின் வழியாக பதுங்கிப் பதுங்கி நடந்து போய்க் கொண்டிருக்கிறது. 

டும்கூரில் உண்டான அனுபவத்தைக் கேட்கிறீர்களா? நான் கூற மாட்டேன். நீங்கள் பயந்து விடுவீர்கள். நாய்கள் ஊளையிட்டுக் கொண்டு  ஓடித்திரிந்துகொண்டிருக்கும் இந்த நள்ளிரவு வேளை கூறுவதற்கு ஏற்றதல்ல. ஒரு பிசாசைப் பற்றிய விஷயமது. பயமில்லை என்கிறீர்களா? ஓ எஸ்... அப்படியென்றால், கூறுகிறேன். ஆனால், இடையில் புகுந்து எதுவும் கேட்கக்கூடாது. வெறுமனே "உம்' கொட்டிக்கொண்டு கேட்டால் போதும். 

ங்ஹா! அந்தக் காலத்தில் நாங்கள் "உலக சுற்றுப் பயணம் போய்க்கொண்டிருந்தவர்கள்'. ஆமாம்... என்னுடன் ஒரு நண்பனும் இருந்தான். பறவூரைச் சேர்ந்தவன். என்னுடைய நெருங்கிய தோழனும், சம வயதைக் கொண்டவனுமாக அவன் இருந்தான். பெயர்- சிவராமன் கர்த்தா. மெலிந்து, உயரமாக, மாநிறத்தில் அவன் இருந்தான். நுனி கூர்மையாகவும், மெலிய ஆரம்பித்துமிருந்த மூக்கும், பிரகாசமான கறுப்பு நிறக் கண்களும், சற்று அகலமான முகமும், மெல்லிய உதடுகளும்... பற்கள் இரண்டு வரிசைகளிலும் வெளியே நன்கு தெரியும் வண்ணம் சிரித்துக் கொண்டிருப்பான். கரகரப்பான குரலில் இருக்கக்கூடிய உரையாடலைக் கேட்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருக்கும். யாரையும் பேசியே மயக்கிவிடுவான். யாரும் கோபம் கொள்ள முடியாத அளவுக்கு ஒரு குணத்தைக் கொண்டிருந்தான் கர்த்தா. என்னுடைய நீண்டகால பயணத்திற்கு மத்தியில் எனக்கு ஏராளமான நண்பர்கள் கிடைத்திருந்தார்கள். ஆனால், நான் கோபம் கொண்டு பிரியாத ஒரே ஒரு நண்பன் கர்த்தா மட்டுமே. "உங்களுடைய மிகப் பெரிய நண்பன்' - இந்த வார்த்தைகளை ஒவ்வொரு நாளும் பத்து முறையாவது கர்த்தா கூறாமல் இருக்கமாட்டான். எதுவுமே தெரியாத ஒரு சிறிய குழந்தை நான் என்று கர்த்தா தன் மனதில் நினைத்துக்கொண்டிருந்தான். அதே நேரத்தில், என்னைப் பார்த்து அவனுக்கு மிகப்பெரிய அச்சம் இருந்தது. என்னுடைய விருப்பத்திற்கேற்றபடிதான் அவன் ஒவ்வொரு செயல்களையும் செய்வான். எங்காவது சென்றால் மனிதர்களைப் பார்ப்பது, உணவிற்கான வழியைக் கண்டுபிடிப்பது- இவைதான் கர்த்தாவின் வேலை.

கையில் கிடைக்கும் பணம் முழுவதையும் என்னிடம் கொடுத்துவிட வேண்டும் என்பதை கொள்கையாகக் கொண்டிருந்தான். கண்களில் படும் பலகாரங்கள் எல்லாவற்றையும் வாங்கிவிட வேண்டும்... பெரிய சாப்பாட்டுப் பிரியன் அல்ல. எனினும், அவற்றை வாங்கியே ஆகவேண்டும் என்று நினைப்பான் கர்த்தா. மூக்குப் பிடிக்க சாப்பிட்டு முடித்து, வெளியே சென்று ஐந்து நிமிடங்கள் கழித்து வந்தவுடன், ஒரு பொட்டலம் அல்வாவோ, ஜிலேபியோ, வேர்க்கடலையோ... இவற்றில் ஏதாவது கர்த்தாவின் கையில் இல்லாமல் இருக்காது. அப்போது அவனுடைய முகத்தில் தெரியும் உணர்ச்சிகளைப் பார்த்தால், நான் ஏங்கி, ஆசைப்பட்டுக் கொண்டிருக்கும் ஏதோ ஒரு கனியை- மிகப்பெரிய தியாகம் செய்து, பறித்துக்கொண்டு வருவதைப்போல இருக்கும். நான் கோபப்பட்டால், சிரித்துக்கொண்டே கூறுவான்:

""டேய் மகனே, உனக்காகத்தான் வாங்கிக்கொண்டு வந்திருக்கேன்!''

அதனால் காசு முழுவதையும் என்னிடம் கொடுத்துவிட வேண்டும் என்ற கட்டாயச் சட்டத்தைச் செயல் வடிவத்திற்குக் கொண்டுவர வேண்டிய சூழ்நிலை உண்டானது. ங்ஹா... "டேய் மகனே' என்றுதான் நாங்கள் ஒருவரையொருவர் அழைத்துக் கொள்வோம். பள்ளிக்கூடம் மூடப்படாத காலமாக இருந்தால், நாங்கள் சொற்பொழிவு நடத்துவோம். சொற்பொழிவு ஆற்றுவதோ நாட்டு நிலைமைகளை பற்றி... ஏய்! நான் சொற்பொழிவு ஆற்றமாட்டேன். கர்த்தாதான் சொற்பொழிவுகளை நடத்திக் கொண்டிருப்பான். நான் பெரிய ஒரு மனிதனைப்போல- வேட்டைக்குச் செல்லும் வெள்ளைக்காரன் அணியும் ஆடைகளை அணிந்துகொண்டு, கூடியிருப்பவர்களுக்கு முன்னால் கம்பீரமாக அமர்ந்திருப்பேன். "ஒருமுறை நான் ஒரு புலியுடன் ஒரு மணி நேரம் கடுமையாகப் போரிட்டேன். அதன் வாலைப்பிடித்து, தலையை சுற்றச் செய்து பாறையில் அடித்துக் கொன்றேன் என்று கர்த்தா அள்ளி விட்டுக் கொண்டிருந்தான். ஒரு நான்கய்யாயிரம் கண்கள் என்னை நோக்கி ஆச்சரியத்துடன் திரும்பின. காதலும் மரியாதையும் வியப்பும் கலந்த பெண்மணிகளின் கண்மணிகள் என்மீது பதிந்தபோது, வெட்கத்தால் அன்று என்னால் மூச்சே விடமுடியவில்லை. ங்ஹா... சிவராமனின் சொற்பொழிவு! ஃபர்ஸ்ட் க்ளாஸ் ஆங்கிலத்தில்... ஒரு எம்.ஏ., படித்தவனின் ஸ்டைலில். இண்டர்மீடியட் வரைதான் படித்திருக்கிறான். சொற்பொழிவை எழுதி சீர் செய்வது நான். கர்த்தா  யாருக்கும் தெரியாமல் படிப்பான். மிகவும் அருமையாக சொற்பொழிவு ஆற்றுவான். சரி... பள்ளிக்கூடம் மூடப் பட்ட காலத்தில்தான் நாங்கள் டும்கூருக்குச் சென்றோம். டும்கூர்... எதுவுமே இல்லாத தரிசு நிலங்களால் சூழப்பட்ட ஒரு சிறிய நகரம். மைசூர் மாநிலம் பெரும்பாலும் வறண்டு காய்ந்துபோன தரிசு பூமியைக் கொண்டதே. மலையும், குன்றுகளும், தரிசு நிலமும். நீருக்கு மிகவும் சிரமம். குளங்கள் ஏராளமாக இருந்தன. விவசாயத்திற்குத் தேவைப்படும் நீர் பெரும்பாலும் குளங்களில் இருந்துதான் கிடைத்தன. ஏதாவதொரு மலையின்மீது ஏறி நின்று கொண்டு மதிய நேரத்தில் பார்க்க வேண்டும். மேகக்கூட்டங்கள் பிரகாசிப்பதைப்போல, ஒளிர்ந்து கொண்டிருக்கும் ஏராளமான  குளங்களைப் பார்க்கலாம். மைசூர் மாநிலத்தில்தான் "நீர்கள்' இருக்கின்றன. உப்பு நீர், சுண்ணாம்பு நீர், புளிப்பு நீர், கந்தக நீர்... சில கிணறுகளில் கசப்பான நீரும் இருக்கும். இருக்கும் ஆறுகள் பெரும்பாலான காலங்களிலும் வறண்டு காய்ந்துபோய்தான் கிடக்கும். வெண்மணல்...

அந்த வகையில் நீர் வற்றிப்போன ஒரு ஆற்றுக்கு அருகிலிருந்த ஒரு  சத்திரத்தில்தான் நாங்கள் தங்கியிருந் தோம். பொதுவாக இருக்கக்கூடிய சோம்பலுடனே நான் சத்திரத்தில் அமர்ந்திருந்தேன். நல்ல மதிய நேரம்! கடுமையான வெப்பம் இருந்தது. வயிறு நிறைய சாப்பிட்டு முடித்து, வெறுமனே உட்கார்ந்துகொண்டிருந்த காரணத்தால் நான் சற்று கண் அயர்ந்துவிட்டேன். கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, திடுக்கிட்டுக் கண் விழித்தேன். 

""திறக்கடா, மகனே...'' அன்பு கலந்த கர்த்தாவின் குரல்... கண்ணைக் கசக்கிக்கொண்டே நான் கதவைத் திறந்தேன். என் கண்கள்- கறுத்த, உயரம் குறைவாக இருந்த- அறிமுகமில்லாத ஒரு முகத்தின்மீது சென்று பதிந்தன. ஒரு அங்குலம் நீளத்தில் முடி இருந்த உருண்டையான தலை, தடிமனான மேலுதடு முழுவதும் நீளமாக வளர்ந்திருந்த மீசை, சதைப்பிடிப்பு கொண்ட கூர்மையான நாசி, மிகவும் நெருக்கமாகக் காணப்பட்ட பூனைக் கண்கள், நீளமான கதர் ஜிப்பா, பாதங்கள் வரை நீண்டிருந்த  கதர் வேட்டி, காலில் தோல் செருப்பு, கையில் பெரிய பிரம்புக் கழி... அனேகமாக முப்பத்தைந்து வயதிருக்கும்.

""இவர் பெண்கள் பள்ளிக்கூடத்தின் ஆசிரியர். பெரிய இந்தி பண்டிதரும்கூட. பண்டிட் நரசிம்மன். உங்களுடன் அறிமுகமாக வேண்டும் என்பதற்காக வந்தார்'' என்ற முன்னுரையுடன் கர்த்தா அறிமுகப்படுத்தினான். எனக்கு நன்கு இந்தி தெரியும் என்பதால், நாங்கள் வெகுசீக்கிரம் நண்பர்களாகி விட்டோம். அவருடைய அமைதியான உரையாடல் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. சிரிக்கும்போது அந்த கறுத்து இருண்ட முகத்திலிருந்த இரண்டு வரிசைப்பற்களும் "பளபள' வென பிரகாசிக்கும். பூனைக் கண்கள் எந்தவித அசைவுமில்லாமல் ஒளிர்ந்துகொண்டிருக்கும். ஈர்க்கக்கூடிய குரலும், அழகான புன்னகையும்... அரை மணிநேரம் கழிந்து அவர் சென்ற பிறகு கர்த்தா சொன்னான்:

""டேய் மகனே... உன்னுடைய நடத்தையின்மீது அவருக்கு நல்ல அபிப்ராயம் உண்டானது மிகவும் நல்லதாகி விட்டது.''

எனக்கு தாங்கமுடியாத அளவிற்கு கோபம் வந்தது. ""நான் என்ன அந்த அளவிற்கு நாகரீகமற்ற மனிதனா? உனக்கு மட்டும்தான் எப்படி நடந்துகொள்வது என்று தெரியுமாக்கும்!'' கர்த்தா குலுங்கிக் குலுங்கி சிரித்தான். ""அது இல்லடா மகனே! அவர் மிகவும் பெரிய மனிதர். நல்ல செல்வாக்கு கொண்ட ஒரு பொதுநல செயல்பாட்டாளர். விடுமுறைக் காலமாக இருப்பதால் அவர் இப்போது ஒரு இந்திப் பள்ளிக்கூடத்தை நடத்திக்கொண்டிருக்கிறார். இது தவிர, அதிகாரிகளின் வீடுகளிலிருக்கும் மாணவிகளுக்கு ட்யூஷன் கற்றுத் தருகிறார். அவருடைய ஆதரவிருந்தால், நமக்கு இங்கிருந்து நல்ல ஒரு தொகை...'' 

கர்த்தாவின் அந்தக் கருத்து உண்மையான ஒன்று என்பதாக எனக்குப் பட்டது. நான்கைந்து நாட்கள் தொடர்ந்து பழகியதையடுத்து அவருடைய செல்வாக்கு எந்த அளவுக்கு பெரிதாக இருக்கிறது என்பதையும் என்னால் தெரிந்துகொள்ள முடிந்தது. அவருக்கு இருந்தது வெறும் செல்வாக்கு மட்டுமல்ல; மக்கள் அவர்மீது உயர்ந்த மதிப்பு வைத்திருந்தனர். அவர்மீது ஈடுபாடு வைத்திருந்தனர். பணக்காரர்களும், ஏழைகளும், பதவியில் இருப்பவர்களும்...

நாங்கள் மனதில் நினைத்திருந்ததைவிட அதிகமான உதவி டும்கூரில் எங்களுக்குக் கிடைத்தது. இந்தி மாஸ்டரின் செல்வாக்கே அதற்குக் காரணம்.

அதிகாலை வேளையில் டும்கூரைவிட்டுப் புறப் படவேண்டுமென்று முடிவு செய்திருந்ததால், கர்த்தா பொருட்கள் அனைத்தையும் கட்டி தயார் செய்துகொண்டிருந்தான். மாஸ்டரிடம் நானும் சென்று விடை பெற்றுக் கொள்ளவேண்டுமென்று கர்த்தா கட்டாயப்படுத்திக் கூறினான். என்னுடன் ஒரு கர்நாடக மாணவனையும் துணைக்கு அனுப்பி வைத்தான். அவன் மாஸ்டரின் இந்தி சிஷ்யன். அரைமைல் தூரத்திலிருந்த பெண்கள் பள்ளிக்கூடத்தில் தற்போதைக்கு மாஸ்டர் தங்கியிருந்தார். நகரத்திற்கு வெளியே இருந்த ஒரு மைதானத்திற்கு அருகில் அந்த பள்ளிக்கூடம் இருந்தது. 

வழியில் நாங்கள் பேய்களைப் பற்றி பேசிக்கொண்டு வந்தோம்... என்னுடைய "ஸ்டாக்'கில் இருந்த ஒரு பேய் பற்றிய கதையை நான் கூறினேன். மலையைப் போல இருந்த ஒரு கரும்பூதம் என்னுடைய நெஞ்சின்மீது ஏறி உட்கார்ந்து, கழுத்தை இறுகப் பிடித்து மூச்சுவிட முடியாமல் செய்த விஷயம்... மாணவனுக்குத் தோன்றியது வேறொன்று. அவன் ஒரு காட்டில் சிக்கிக்கொண்டான். திடீரென்று நான்கு ஆட்கள் தோன்றினார்கள். ஒரு ஆளின் தோல் உரிந்தது. தோல் உரிந்த மனிதனின் சதையை மூன்று ஆட்களும் சேர்ந்து அறுத்து துண்டு துண்டாக்கி பச்சையாக சாப்பிட்டார்கள். அவனையும் கட்டாயப்படுத்தி சாப்பிட வைத்தார்கள். அது ஒரு கனவு. 
தான் உணர்ந்த வேறொன்றையும் அவன் கூறினான். 

இறந்துபோன குழந்தையை தோளில் போட்டுக்கொண்டு அழுதவாறு நடந்துபோய்க்கொண்டிருந்த ஒரு பெண்ணின் ஆவியைப் பற்றி... அதை பலரும் பார்த்திருக்கிறார்கள் என்பது அந்த மாணவனின் கருத்தாக இருந்தது. நாங்கள் நகரத்தைவிட்டு மைதானத்தில் கால்களை வைத்தோம். இரவு பத்துமணி தாண்டியிருக்க வேண்டும். 

வறட்சியான காற்று மெதுவாக முனகியவாறு வீசிக்கொண்டிருந்தது. நல்ல இருட்டு. நட்சத்திரங்கள் மின்னிக்கொண்டிருந்த இருண்ட வானத்திற்குக் கீழே, மேலும் சற்று கறுப்பாக பள்ளிக்கூடம் தெரிந்தது.

பள்ளிக்கூட கட்டடத்தை நாங்கள் நெருங்கிக் கொண்டிருந்தோம். பேரமைதி... காற்றின் இடைவிடாத முனகல் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. 

அடைக்கப்பட்டிருந்த மாஸ்டரின் அறையின் சாளர இடைவெளி வழியாக பொன்னாலான நூலைப்போல வெளிச்சம் தெரிந்தது.

""நரசிம்மஜீ...'' சாளரத்தைத் தட்டியவாறு வெளியே நின்றுகொண்டு நான் அழைத்தேன். மாணவனும் அழைத்தான். கன்னடத்தில் என்னவோ கூறி அழைத்தான். எந்தவொரு அசைவும் இல்லை. நாங்கள் தொடர்ந்து தட்டிக்கொண்டே அழைத்தோம். பேரமைதி... யாரும் இருப்பதாகத் தெரியவில்லை.

""தூங்கிவிட்டிருப்பார்...'' -நான் கூறினேன். ""ஏய்... இவ்வளவு சீக்கிரம் தூங்கும் பழக்கமில்லை. இன்னொரு கதவு மூடப்பட்டிருக்கிறதா என்று பார்ப்போம்...'' மாணவன் திரும்பினான். சிறிய தோட்டத்தின் வழியாக விளையாட்டு மைதானத்தையும் தாண்டி நாங்கள் முன்பக்கத்திற்குச் சென்றோம். தூரத்தில் எங்கோ ஊளையிட்டுக்கொண்டிருக்கும் குள்ளநரிகளின் சத்தம். பொதுச்சாலையிலிருந்த விளக்கின் ஒளி கறுத்த சிமெண்ட் படிக்கட்டில் விழுந்துகொண்டிருந்தது. கதவு திறந்துதான் கிடந்தது. மாஸ்டரின் அறை, கூடத்தின் வடக்கு மூலையில் இருந்தது. நாங்கள் பேசிக்கொண்டே உள்ளே சென்றோம். அடர்த்தியான இருட்டு... காற்றின் முனகல் சத்தத்திற்கு மத்தியில் குள்ளநரியின் ஊளைச் சத்தம் தெளிவில்லாமல் கேட்டது. நான் முன்னாலும், மாணவன் பின்னாலுமாக தட்டுத்தடுமாறி முன்னோக்கி போய்க்கொண்டிருந்தோம். தூண்கள்! தூண்கள்! தலை இடிக்காமல், இருட்டில் தூண்களில் போய் மோதிவிடாமல், கண்பார்வை தெரியாமல், கையையும் கால்களையும் கொண்டு தேடியவாறு நீளமான கூடத்தின் வழியாக முன்னேறிச் செல்லும்போது, என்னுடைய கை குளிர்ச்சியான மென்மையான ஏதோ ஒன்றில் பட்டது. திடீரென்று ஒரு முனகல் சத்தம். இருட்டில் ஏதோவொன்று என்னுடைய சரீரத்தின்மீது சாய்ந்தது. உறுப்புகள் அனைத்தையும் பிடிப்பதைப்போல ஒரு பிடி! என்னுடைய சரீரம் முழுவதும் குளிர்ந்து போய்விட்டது. அதிர்ச்சியடைந்த நான், ஒரு நிமிடம் திகைப்பில் உறைந்துபோய் நின்றுவிட்டேன்.  பயப்படவில்லை. பலத்தைப் பயன்படுத்தி அதைப் பிடித்திழுத்து விலக்கி உதறியெறிந்துவிட்டு தப்பிப்பதற்கு நான் முயற்சித்தேன். என்னுடைய வாயில் நீர் இல்லை. தொண்டை வற்றிப்போன நிலை. என்னுடைய கை படுவது வெப்பமுள்ள, வழுவழுப்பான மனித சரீரத்தில்! அவிழ்ந்து தாறுமாறாக சிதறிக் கிடக்கும் தலைமுடி! மென்மையான முகம்! உருண்ட, மினுமினுத்துக் கொண்டிருக்கும் மார்பகங்கள்! நிர்வாணமான உடல்! வாயில் எதையோ இறுகக் கடித்துப் பிடித்துக்கொண்டிருக்கிறாள்! இருட்டுக்கு மத்தியில் நடத்திய ஆராய்ச்சியில் நான் தெரிந்துகொண்டது இவ்வளவுதான்... என் இதயம் மிகவும் வேகமாக அடித்துக்கொண்டிருந்தது. நெற்றியில் குளிர்ச்சியான வியர்வை அரும்பிவிட்டிருந்தது. தலைக்குள் லட்சக்கணக்கான வண்டுகள் ஒரே நேரத்தில் இரைச்சல் போடுவதைப் போல தோன்றியது. அது மூச்சுவிட்டுக் கொண்டிருந்தது! அதன் இதயம் துடித்துக் கொண்டிருந்தது! என்ன செய்வதென்று தெரியாமல் நான் நின்றுகொண்டிருந்தபோது, மாணவன் பதை பதைப்புடன் கேட்டான்: ""எ... என்ன... அது?'' வேகமாக மூச்சு விட்டுக்கொண்டிருந்ததால், உடனடியாக அவன் மனதை அமைதிப்படுத்த முடியவில்லை. ஒரு வகையில் மூச்சைப் பிடித்துக்கொண்டு நான் சொன்னேன்: ""என்னவா? ஒரு பெண்...''

""பெண்?''

""ங்ஹா... பெண்ணேதான். தீப்பெட்டியை உரசு.''

""அய்யோ! தீப்பெட்டி இல்லையே...''

""பரவாயில்லை... பேசாமல், எச்சரிக்கையுடன் திரும்பி நட...''

என்னுடைய இடுப்பிலிருந்த பிடியை விடுவித்துக் கொண்டு, அதன் கையை இறுகப் பற்றிக்கொண்டு, நான் தட்டுத் தடுமாறியவாறு திரும்பி நின்றேன். பின்னால் என்னவோ அசைந்தது. என்ன அது?

தட்டுத் தடுமாறி நாங்கள் மேல்மூச்சு கீழ்மூச்சு விட்டவாறு கதவுக்கு அருகிலிருந்த வெளிச்சத்தில் போய்ச் சேர்ந்தோம். என் இதயம் நடுங்கிக் கொண்டிருந்தது. நிர்வாணமான ஒரு கறுத்த இளம்பெண்! பதினான்கு பதினைந்து வயதிருக்கும். அவளுடைய சிவப்பு நிறப் புடவையின் பாதியளவு வாய்க்குள் திணித்து வைக்கப்பட்டிருக்கிறது. எப்படியோ நாங்கள் அதை வெளியே எடுத்தோம். அவள் மூச்சு விட்டாள். வேகமாக அவள் புடவையைச் சுற்றிக் கட்டினாள். அந்த வேகத்தில் ஒரு நாலணா நாணயம் (கால் ரூபாய்) "க்ணிம்' என்று ஓசை எழுப்பியவாறு படிக்கட்டில் விழுந்தது. வெட்கத்துடன் அவள் அதை குனிந்து எடுத்தாள். மாணவன் கன்னட மொழியில் என்னவோ கேட்டான். நிறுத்தி நிறுத்தி தேம்பித் தேம்பி அழுதுகொண்டே அவள் என்னவோ சொன்னாள். பயம் நிறைந்திருந்த அந்த பெரிய கண்களைத் திருப்பி இடையில் அவ்வப்போது என்னைப் பார்த்தாள். எனக்கு எதுவுமே புரியவில்லை. மாணவனின் முகம் வெளிறிப் போய், சிறிதுகூட ரத்தமே இல்லாததைப்போல காணப்பட்டது. அவன் தன் தலையிலிருந்த தொப்பியைக் கழற்றி தனக்குத் தானே வீசிக்கொண்டு நின்றான். அவள் சாலையின் அந்தப் பக்கத்திலிருந்த ஒரு சிறிய வீட்டைச் சுட்டிக்காட்டினாள். மாணவன் தலையால் கட்டளை யிட்டான். கண்ணீரில் குளித்த விழிகளை அவள் என் முகத்தை நோக்கி உயர்த்தினாள்.

""ஹய்யா... நான்...''

அவள் முழுமை செய்யவில்லை. சிவந்த கன்னங்களின் வழியாக கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது. 

அந்தக் கண்களில் ஒரு பதைபதைப்பும் பரபரப்பும் காணப் பட்டன. அவள் படிக்கட்டைவிட்டுக் கீழே இறங்கினாள். 

எங்கள் இருவரின் முகங்களையும் மாறிமாறிப் பார்த்து விட்டு, தலையை குனிந்துகொண்டே அவள் நடந்து சென்றாள். இடையில் அவ்வப்போது புடவை நுனியால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். நடந்து நடந்து சாலையைக் கடந்து அந்தச் சிறிய வீட்டின் கதவை அடைந்து, மீண்டும் ஒரு முறை அவள் திரும்பிப் பார்த்தாள். ஒரு கதவு மெதுவாக மூடப்படும் "கிர்கிரா' சத்தம் காற்றில் கலந்து ஒலித்தது. அதற்குப் பிறகும் காற்று முனகியவாறு வீசிக்கொண்டிருந்தது. மாணவன் நீண்ட பெருமூச்சு விட்டுக்கொண்டே மெதுவான குரலில் சொன்னான்:

""பால்காரியின் மகள். மாஸ்டருக்கு தினமும் பால் கொண்டு தருபவள் இவள்தான்... இன்று...''

அவன் என்னுடைய "முகத்தைப் பார்த்தான். கவலை நிறைந்த அந்தப் பார்வை என் இதயத்தில் ஆழமாகப் பதிந்தது. நான் எதுவும் கூறவில்லை. பேரமைதியாக சில நிமிடங்கள் நகர்ந்தன. படிக்கட்டுகளில் கிடந்த ரத்தத் துளிகளின்மீது என்னுடைய பார்வை பதிந்தபோது, மாணவன் தன் முகத்தைத் திரும்பிக் கொண்டான். கவலையுடன் அவன் கேட்டான்.

""மாஸ்டரைப் பார்க்கணுமா?''

""ம்... கட்டாயமில்லை...''

எனினும், கூடத்திற்குத் திரும்பி வந்தோம். நான் அழைத்தேன்: ""நரசிம்மஜீ! நாங்கள் அதிகாலையில் புறப்படுகிறோம். விடைபெற்றுக் கொள்வதற்காக வந்தேன்.''

என்னுடைய குரல் எங்கும் மோதாமல் கூடம் முழுக்க கேட்டது. அதற்குப்பிறகும் கூடம் பேரமைதியுடன் இருந்தது. எந்தவொரு அசைவும் இல்லை. எந்தவொரு பதிலும் வரவில்லை. நாங்கள் வெளியேறி நடந்தோம். மாஸ்டரின் அறைச் சாளரத்தின் இடைவெளியில் நூலைப்போல இருந்த அந்த வெளிச்சம் அப்போது இல்லை.

""நீங்கள் மிகவும் தைரியசாலிதான்...'' அந்த மாணவன் சொன்னான்.

நான் எதுவும் கூறவில்லை.

எதுவும் பேசாமலேயே நாங்கள் நடந்தோம். மாணவன் தன் வீட்டு வாசற்படி வந்ததும், அவன் விடை பெற்றுக்கொண்டான். மிகவும் கவலையைத் தரக்கூடிய ஒரு இறுதிப் பயணம்! ஒன்பது பத்து வருடங்களுக்கிடையில் ஒரு ஐம்பதாயிரம் பெண்களும் ஆண்களும் என்னிடம் இறுதிவிடை கூறியிருக்கிறார்கள். எனினும், வெறுப்பும் ஏமாற்றமும் கோபமும் கவலையும் நிறைந்த அந்த மாணவனின் முகம் என்னுடைய நினைவு மண்டலத்தில் அப்படியே பசுமையாக நின்று கொண்டிருந்தது.

கனவில் நடப்பதைப்போல நடந்து நான் சத்திரத்தை அடைந்தேன். ""என்னடா மகனே... மாஸ்டருடன் சந்திப்பு எப்படி இருந்தது? நீ சண்டை போடவில்லையே?'' வழக்கமான சிரிப்புடன் இருந்த கர்த்தாவின் கேள்விக்கு பதில் கூறுவதற்கு என்னால் முடியவில்லை. மொத்தத்தில்- எனக்கு ஒரு தர்மசங்கடமான நிலைமை. சாக்கடைக்குள் புதைந்து போய்விட்டதைப்போல எனக்கொரு தோணல். என்னுடைய நிலைமையைப் பார்த்து கர்த்தா ஆச்சரியமடைந்து. காலிலிருந்து தலை வரை என்னையே பார்த்தான். வியப்புடன் எழுந்து சுட்டிக்காட்டியவாறு கேட்டான்.

""இந்த ரத்தம் எங்கேயிருந்து வந்தது?''

""ரத்தமா?''

பெண்ணின் பிறப்பு உறுப்பிலிருந்து...!

என்னுடைய மனம் அதிர்ந்துபோய்விட்டது. பதைபதைப்புடன் நான் பார்த்தேன். ரத்தம்! ஆமாம்... வெள்ளை நிற வேட்டியில் நான்கைந்து இடங்களில் ரத்தம்! என்னுடைய சரீரம் முழுவதும் குளிர்ந்து போய்விட்டது. அணிந்திருந்த ஆடையை வெறுப்புடன் சுழற்றி வராந்தாவில் வீசி எறிந்தேன். தீப்பெட்டியைத் தடவி எடுத்து ஒரு குச்சியை உரசி நெருப்பைப் பற்ற வைத்தேன். காற்று ஓசை உண்டாக்கியவாறு வேகமாக வீசியது. கர்த்தாவின் முகத்தில் வெளிச்சத்தை உண்டாக்கியவாறு நெருப்பு பெரிதாக பற்றி எரிந்தது. குள்ள நரியின் ஊளையிடும் சத்தம் உரத்துக் கேட்டது. கதராடை எரிந்து கொண்டிருப்பதை நான் பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன். வாழ்க்கையில் முதல்முறையாக நான் எரியச் செய்யும் கதராடை!

பதைபதைப்புடன் கர்த்தா என் கண்களையே பார்த்தான். தோளைப் பற்றிக் குலுக்கியவாறு கேட்டான்: ""என்னடா மகனே, இதன் அர்த்தம் என்ன?''

""அர்த்தம்?''

""ங்ஹா... என்ன? சொல்லு... உனக்கு என்ன ஆனது?'' 

வேட்டி நன்கு எரிந்து முடிந்தது. கொஞ்சம் கறுத்த சாம்பல் மட்டும் எஞ்சியது. அதை காலால் தட்டி விட்டு, முற்றத்தில் சிதறச் செய்தேன். காற்றில் அது பறந்து சென்றது. நான் அறைக்குள் நுழைந்து ஒரு பீடியைப் பற்றவைத்தேன். இடையில் அவ்வப்போது ஓரக் கண்களைக் கொண்டு என்னுடைய செயல்களைக் கூர்ந்து கவனித்தவாறு கர்த்தா அறைக்குள் இப்படியும் அப்படியுமாக நடந்துகொண்டிருந்தான். நண்பனின் பார்வையையும் நடவடிக்கைகளையும் பார்த்து, நான் எழுந்து சென்று கதவின் தாழ்ப்பாளைப் போட்டேன். நடந்த சம்பவத்தை விளக்கிக் கூறினேன். கர்த்தாவின் முகம் பிரகாசமானது. அவன் அறிவுரை கூறினான்:

""டேய், மகனே... நீ குளித்துவிட்டு படுத்துக்கிடந்தால் போதும். எனினும், அந்த இருட்டில் நீ பயப்படவில்லையே! பிடித்து வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருக்கிறாயே!''

அன்றிரவு அந்தக் குளிரில், கிணற்றின் உப்பு நீரில், கர்த்தா கட்டாயப்படுத்தி என்னை குளிக்கச் செய்தான்.


ங்ஹா! அதிகாலை வேளையில் நாங்கள் டும்கூரை விட்டுப் புறப்பட்டோம். என்ன? பயணத்தின் ஆரம்பத்திலிருந்து கூற வேண்டுமா? சரிதான்... அதற்கு இதைப் போன்ற எவ்வளவோ இரவுகள் வேண்டும். சரி... இருக்கட்டும். நாம் தூங்குவோம். என் சரீரத்தில் உரச வேண்டாம்... சற்று தள்ளிப்படு... ங்ஹா... குட்நைட்! விஷ் யூ ஸ்வீட் ட்ரீம்ஸ்! குட் நை....

நன்றி - இனிய உதயம் 01 10 2013

நாம் வசிப்பதற்கு முந்திரித் தோப்புகள் - சக்கரியா (தமிழில் சுரா)

டேய், ராதாகிருஷ்ணா...'' சந்தீபன் என்னிடம் தொலைபேசியில் கூறினான்: ""நீ கொஞ்சம் இங்கே வா. ஒரு முக்கியமான விஷயம்...''

அவன் புகழ்பெற்றவன்; பலம் வாய்ந்தவன். டில்லியில் அவனைத் தெரியாதவர்கள் யார் இருக்கிறார்கள்? ஆனால், அவனுக்கு நான் வேண்டும். அது எனக்கும் பிடித்த விஷயம். 

நான் கேட்டேன்: ""என்னடா விஷயம்?''

""தொலைபேசியில் அதைச் சொன்னால் சரியாக இருக்காது!. நீ வா...''

சற்று முன்பே நான் அலுவலகத்திலிருந்து வெளியேறி, மாலை நேரத்தில் கனாட் ப்ளேஸில் இருக்கும் அவனுடைய அலுவலகத்தை அடைந்தேன்.

அவனுடைய ரிஷப்ஷனிஸ்டுக்கும், செக்ரட்டரிக்கும், ப்யூனுக்கும் என்னைத் தெரியும். அதனால் வரிசையில் காத்திருக்கத் தேவையில்லை. அவனைச் சந்திப்பதற் கான நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பெரிய மனிதர்களுக்கு மத்தியில் நான் மிடுக்காக நடந்துசென்றேன். மல்லப்பள்ளி புனித மரியா பள்ளிக்கூடத்தில், முதல் வகுப்பிலிருந்து ஒரே பெஞ்சில் அமர்ந்து மேலே வந்தவர்கள் நாங்கள் என்ற விஷயம் அவர்களுக்குத் தெரியுமா? அவன் மிகப்பெரிய ஆளாகிவிட்டான். நான் குமாஸ்தாவாகி விட்டேன்.

சந்தீபனின் அறை ஒரு கால்பந்து மைதானத்தின் அளவு கொண்டதாக இருக்கும். அதன் மெதுமெதுப்பான தரை விரிப்பின் வழியாக அவனுடைய மேஜையை அடைவதற்கு பல நிமிடங்கள் ஆகுமென்று தோன்றும். "இவையெல்லாம்தானேடா நம்முடைய வித்தைகள்!' அவன், கூறுவான்: "ஷோ இல்லாமல் இங்கு எதுவுமே நடக்காது.'

சந்தீபன் தன்னுடைய செக்ரட்டரியிடம் இன்டர் காமில் சொன்னான்: ""இன்னும் பத்து நிமிடங்களுக்கு தொலைபேசி அழைப்புகள் எதுவும் வேண்டாம். அடுத்த விசிட்டரிடம் சிறிது தாமதமாகும் என்ற விஷயத்தைச் சொல்லிவிடு.''

தொடர்ந்து அவன் என்னிடம் சொன்னான்: ""ராதாகிருஷ்ணா, மொத்தத்தில் பிரச்சினையாகி விட்டது. மாதுரிக்கு முறை தவறிவிட்டது.''

""என்ன முறை?'' நான் கேட்டேன். மாதுரி -அவனுடைய காதலிகளில் ஒருத்தி. என்ன முறை என்று உண்மை யிலேயே எனக்குத் தெரியவில்லை. அவனைப்போல பெண்களுடன் நான் குதித்து விளையாடுவதில்லை.

""டேய், தரித்திரம் பிடிச்சவனே!'' - அவன் சொன்னான்: 

""மாத முறை... அவள் கர்ப்பமாக இருக்கிறாள்.''

""ஓ...'' என்றேன்.

""அவ்வளவுதான் உன்னால சொல்ல முடியுதா?'' அவன் என்னிடம் கேட்டான்.

""கர்ப்பம் என்றால் கர்ப்பம்தான். வேறு என்ன பிரச்சினை?'' நான் கேட்டேன். வேறு எதுவும் எனக்குத் தெரியவில்லை.

சந்தீபனுக்கு கோபம் வந்துவிட்டது. அவன் சொன்னான்: ""உன்னைப் போன்ற ஒரு பிறவியை, பிறந்தவுடனே கொன்றிருக்க வேண்டும். டேய், எனக்கும் மாதுரிக்குமிடையே வெறும் காதல் மட்டும்தானே இருக்கிறது. அவள் எப்படி பிள்ளை பெறுவாள்? உனக்கு இந்த மனித உருவத்தில் இருக்கிறோம் என்பதைத் தவிர, வாழ்க்கையுடன் வேறு ஏதாவது தொடர்பு இருக்கிறதா? இதுவரை நீ ஒரு பெண்ணைத் தொட்டிருக்கிறாயா?''

""தொட்டிருக்கிறேன்...'' நான் சொன்னேன்: ""என்னுடைய தாயைத் தொட்டிருக்கிறேன்.''

""ஃபா...'' என்றான் சந்தீபன்.

அவன் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தான். தொடர்ந்து சொன்னான்: ""டேய், மாதுரிக்கு அபார்ஷன் செய்யவேண்டும். அதற்கான ஏற்பாடுகள் எல்லாவற்றையும் நான் செய்திருக்கிறேன். "கரோல் பாக்'கில் இருக்கும் ஒரு லேடி டாக்டரின் வீட்டில்தான் அது நடக்கப் போகிறது. 

நீ என்னுடன் வரவேண்டும். தனியாக என்னால் இருக்கமுடியாது. இந்த ஏற்பாடுகளெல்லாம் செய்து முடித்தும், மாதிரி அழுதுகொண்டும் புலம்பிக்கொண்டும் இருக்கிறாள்.''

""என்ன காரணம்?''

""அவளுக்கு குழந்தையின்மீது பாசம் தோணுதாம். இதற்கு என்னடா பதில் சொல்றது?''

""ம்... நீ காதலிச்சப்போ இதைப் பற்றி நினைச்சிருக் கணும். அவளுக்கு  குழந்தைமீது பாசம் தோன்றாமல் இருக்குமா?''

அவன் சிகரெட்டை ஒரு புழுவைப்போல ஆஷ்ட் ரேயில் நசுக்கிப் போட்டான். என்னை ஒரு பார்வை பார்த்தான். தொடர்ந்து சொன்னான்: ""டேய், நான் இன்னும் மூன்று, நான்கு "க்ளயன்ட்'களைப் பார்க்க வேண்டியதிருக்கு. நீ கொஞ்சம் சுற்றிவிட்டுவா. சரியாக ஏழு மணிக்கு இங்கேயிருந்து புறப்படுவோம். நீ ஏமாற்றி விடாதே.''

""சரி'' என்றேன். 

நான் சென்ட்ரல் பார்க்கிற்குச் சென்று மரத்தின்மீது சாய்ந்து உட்கார்ந்தேன். மனிதர்கள் வருவதையும் போவதையும் பார்த்துக்கொண்டு, அணில்கள் ஓடித்திரிவதைப் பார்த்துக்கொண்டு, காகங்கள் தங்களின் கூடுகளுக்குள் சென்று அடைவதைப் பார்த்துக் கொண்டு, வானத்தில் என்னென்னவோ பறவைகள் எங்கெங்கெல்லாமோ பறந்து போவதைப் பார்த்துக்கொண்டு... சிறிது நேரம் கழித்து நான் புல்லின்மீது மல்லாந்து படுத்துக்கொண்டு வானத் தைப் பார்த்தேன். சந்திரனைப் பார்த்தேன். சந்திரனின் புழுதி படிந்த மண்ணில், உதித்து மேலே உயர்ந்துவரும் பூமியைப் பார்த்துக்கொண்டே நடக்கவேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டானது. நான் சிந்திப்பதை நிறுத்தி விட்டு, கைக் கடிகாரத்தைப் பார்த்தபோது மணி எட்டு.

சந்தீபன் என்னைக் காணாததால் உண்டான பதைபதைப்புடன், தன் காருக்கு அருகில் சுற்றிலும் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான்.

""என்னடா... பயந்துட்டயா?'' நான் கேட்டேன்.

அவனுடைய அரண்மனையைப் போன்ற கார்கள் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும். ""இது என்ன கார்?'' நான் கேட்டேன்: ""புதிதாக இருக்கிறதே?''

அவன் சொன்னான்: ""டேய், காரைப் பற்றி பேசிக்கொண்டிருப்பதற்கான நேரமில்லை இது... மாதுரி டாக்டரின் வீட்டில் எதிர்பார்த்துக்கொண்டு உட்கார்ந் திருக்கிறாள். பின்பக்க கதவின் வழியாக நாம் யாருக்கும் தெரியாமல் உள்ளே நுழைய வேண்டும். நீ என்னுடன் இருந்தால் போதும். என்னுடைய மனநிலையை உன்னால் புரிந்துகொள்ள முடிகிறது அல்லவா?'' 

""அபார்ஷன் உனக்கில்லையே! பிறகு, நீ ஏன் இப்படி கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறாய்? காசு செலவாகிறதே என்பதை நினைத்தா?''

""காசு போய்த் தொலையட்டும்...'' சந்தீபன் சொன்னான்: 

""இப்படிப்பட்ட காரியங்களில் உண்டாகக்கூடிய மன அழுத்தங்கள் எந்த அளவுக்கு இருக்குமென்பது என்றைக் காவது உனக்கு தெரியுமா? பயங்கரம்டா... பயங்கரம்!''

நான் எதுவும் பேசவில்லை.

நாங்கள் டாக்டரின் வீட்டிலிருந்து சற்று தூரத்தில் காரை "பார்க்' செய்துவிட்டு, இருளோடு இருளாகக் கலந்து நடந்தோம். மூன்று நான்கு பேராவது சந்தீபனைத் திரும்பிப் பார்த்திருப்பார்கள்.

""நாசமாப் போச்சு...'' அவன் சொன்னான்: ""இவனுங்க ஏன் பார்க்கிறானுங்க?''

""டேய்...'' நான் சொன்னேன்: ""நீ பெரிய மனிதனாக வேண்டுமென்று தீர்மானித்தபோது நினைத்திருக்க வேண்டும்.''

பின்பக்கத்திலிருந்த வாசலின் வழியாக உள்ளே நுழைந்தோம். எங்களை ஒரு மனிதன் உள்ளே அழைத்துச் சென்றான். அந்த அறைக்குள் நுழைந்ததும் சந்தீபனும் நானும் சற்று அதிர்ச்சியடைந்து விட்டோம். அங்கு லேடி டாக்டரும், அவளுடைய கணவரும், நான்கு குழந்தைகளும், அவர்கள் போதாதென்று பக்கத்து வீடுகளைச் சேர்ந்த எட்டு, பத்து பேர்களும் குழந்தைகளுடன் சந்தீபனை வரவேற்பதற்காகக் காத்திருந்தார்கள். எங்களைக் கண்டவுடன் அவர்கள் வேகமாக எழுந்து மரியாதையுடன் கைகளைக் குவித்து வணங்கினார்கள். ஒரு சிறுமி முன்னால் வந்து சந்தீபனுக்கு ஒரு ரோஜா மலரைத் தந்தாள். 

அவனுடைய முகம் வெளிறிப் போவதை என்னால் பார்க்க முடிந்தது. அவன் உருக்கத்துடன் கையில் ரோஜா மலருடன் விழித்துக்கொண்டு நின்றிருந்தான். ஒரு சிறுமி ஆட்டோக்ராஃப் புத்தகத்துடன் வந்தாள். மற்றவர்கள் சந்தீபனிடம் நலம் விசாரிக்க ஆரம்பித்தனர்.

அப்போது உள்ளே இருந்த கதவை சற்று திறந்து ஒரு நர்ஸ் லேடி டாக்டரை அழைத்தாள். டாக்டர் அவளிடம் என்னவோ பேசிவிட்டு சந்தீபனிடம் சொன்னாள்: ""சரி... நாம் இனியும் நேரத்தை வீணாக்க வேண்டாம்...'' மற்றவர்களிடம் சொன்னாள்: ""ப்ளீஸ், எக்ஸ்க்யூஸ் அஸ்...'' அங்கிருந்தவர்கள் பிரிந்து சென்றார்கள். லேடி டாக்டர் சந்தீபனின் முதுகைத் தட்டியவாறு சொன்னாள்: ""டோண்ட் ஒர்ரி... எல்லாம் சரியாகும். இப்போதெல்லாம் அபார்ஷன் என்பது ஒரு சாதாரண விஷயம்...''

நாங்கள் மூவரும் உள்ளே நுழைந்தோம். அங்கிருந்த குளிர்ந்து காணப்பட்ட ஒரு அறையில், ஒரு நீளமான மேஜையில், ஒன்றிரண்டு ஸ்பாட் லைட்டுகளுக்குக் கீழே, ஒரு தொலைக்காட்சியில் படுத்திருப்பதைப்போல மாதுரி படுத்திருந்தாள். அவள் உலோகத்தால் ஆனதைப் போன்ற ஒரு ஆடையை அணிந்திருந்தாள். நாங்கள் உள்ளே நுழைந்தவுடன், மாதுரி குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தாள். சந்தீபன் கதவிற்கு அருகிலேயே அசையாமல் நின்றிருந்தான். 

""போங்க... போங்க... பக்கத்துல போங்க. எந்தவொரு பிரச்சினையும் இல்லை.'' டாக்டர் சந்தீபனிடம் 
சொன்னாள். ஆபரேஷன் டேபிளின்மீது கொண்ட மரியாதையின் காரணமாக அவன் அருகில் செல்லாமல் இருக்கிறான் என்று அவள் நினைத்தாள். சந்தீபன் ஒரு கையால் என்னுடைய தோளைப் பற்றினான். அவனையும் என்னையும் மாதுரியால் சரியாகப் பார்க்க முடியவில்லை. எங்களுக்கு நேராக கூர்ந்து பார்த்துவிட்டு அவள் தேம்பிக்கொண்டே அழைத்தாள்: ""சந்தீபா! சந்தீபா!''

அவன் அசைவே இல்லாமல் நின்றிருந்தான். நான் அவனிடம் மெதுவான குரலில் சொன்னேன்: ""நீ அருகில் சென்று ஏதாவது சொல்லு...''

""அது யார்? ராதாவா?'' மாதுரி அழுதுகொண்டே கேட்டாள். அவள் என்னை ராதா என்றுதான் அழைப்பாள். 

நகரத்தில் வாழ்பவர்களின் ஒரு நாகரீகம்...

நான் அடி விழுந்ததைப்போல அதிர்ச்சியடைந்து சொன்னேன். ""ஆமாம்...'' தொடர்ந்து சந்தீபனை முன்னோக்கித் தள்ளினேன். அவன் பயிற்சியில் ஈடுபடும் பட்டாளத்துக்காரனைப்போல மேஜைக்கு அருகில் நடந்தான். மாதுரியை நோக்கி ஒரு இயந்திரத்தைப்போல கையை நீட்டினான். அவள் அதைப் பற்றினாள். அவன் அவளுடைய கையைக் குலுக்கினான். பிறகு கையை விடுவித்தான். பட்டாளத்தில் நடப்பதைப் போல திரும்பி நடந்து வெளியே வந்தான். நானும் அவனைப் பின்தொடர்ந்தேன். டாக்டர் வெளியே தலையை நீட்டிக்கொண்டே சொன்னாள்: ""முடிந்த பிறகு நாங்கள் அழைக்கிறோம்.''

வரவேற்பறை ஆட்கள் யாரும் இல்லாமல் வெறுமனே இருந்தது. நான் ஒரு ஸோஃபாவிலும் சந்தீபன் இன்னொரு ஸோஃபாவிலும் போய் உட்கார்ந்தோம். எனக்கு எதுவும் பேச வேண்டுமென்று தோன்றவில்லை. அவனுடைய சிரமமான சூழ்நிலையை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. பேயைப்போல வெறித்த கண்களுடன் அவன் அமர்ந்திருந்தான். ஓரிரண்டு முறை சிகரெட்டை எடுத்தான். அதை புகைக்காமல் திரும்பவும் வைத்தான். உள்ளேயிருந்து சிறிய அழுகைச் சத்தம் கேட்டதைப்போல எனக்கு சந்தேகம் உண்டானது. அவன் என்னைப் பார்த்தான். உடனே தெளிவான ஒரு அழுகைச் சத்தம் வருவதை நாங்கள் கேட்டோம்.

சந்தீபன் எழுந்து நின்றான். நான் அவனுக்கு அருகில் சென்றேன். அவன் சொன்னான்: ""ராதாகிருஷ்ணா, நீ இங்கேயே இரு. நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வர்றேன்.''

""டேய்...'' நான் சொன்னேன். ""இப்போது மது அருந்தாமல் இருப்பதுதான் நல்லது. இனியும் மீதி வேலைகள் இருக்கின்றனவே! அது மட்டுமல்ல; உன்மீது எனக்கு நம்பிக்கை வரவில்லை. நீ பயந்து போய், வயிற்றுப் போக்கு உண்டாகி, மது அருந்திவிட்டு எங்காவது இருந்தால்...? நான் இங்கே மாட்டிக்கொள்வேன். அதனால் நீ எங்கேயும் போக வேண்டாம்.''

அவன் ஸோஃபாவில் போய் உட்கார்ந்தான். 

பின்னோக்கிச் சாய்ந்து கண்களை மூடினான். நான் எழுந்து டாக்டரின் கண்ணாடி அலமாரியில் வைக்கப்பட்டிருந்த மருத்துவ அறிவியல் சம்பந்தப்பட்ட நூல்களின் பெயர்களை வாசித்துக் கொண்டிருந்தேன். தொடர்ந்து திரும்பிவந்து பழைய, கிழிந்து போய் காணப்பட்ட ஒரு சினிமா மாத இதழை வாசித்தேன். அதன் இறுதி பக்கத்தை அடைந்தபோது, உள்ளே இருந்த அறையின் கதவு திறந்தது. 

டாக்டர் புன்னைகத்துக் கொண்டு, சற்று வியர்வை வழிய வெளியே வந்தாள். சந்தீபன் கண்களை மூடி உட்கார்ந்திருந்தான். நான் அவனைத் தொட்டு எழுப்பினேன். டாக்டர் சைகை செய்ததைத் தொடர்ந்து அவன் உள்ளே சென்றான். உள்ளேயிருந்து மீண்டும் தேம்பி அழும் சத்தங்கள்...

சந்தீபன் வெளியே வந்தான். அவன் மிகவும் கவலையில் இருக்கிறான் என்று அந்த முகத்திலேயே எழுதி வைக்கப்பட்டிருந்தது. எனக்கு அருகில் வந்து அவன் கூறினான்: ""ராதாகிருஷ்ணா, இன்று நான் ஹாஸ்டலுக்குப் போகமுடியாது என்று மாதுரி கூறுகிறாள். 

இன்றிரவு நான் அவளுடன் இருக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்துகிறாள். என்ன செய்வது? நீ அவளிடம் கொஞ்சம் பேசுகிறாயா?''

""சந்தீபா, நீ நல்ல ஹோட்டலில் அறை எடு. பிறகு இரவில் அவளுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, காலையில் ஹாஸ்டலில் கொண்டுபோய் விடு.''

""ஹோட்டல் அறையா?'' அவன் கேட்டான். 

""நீ காதலிப்பதற்கு விருப்பம்போல ஹோட்டலில் அறை எடுப்பாய் அல்லவா? அதேபோல் ஒரு அறையை எடு.''

""டேய்... அதுவல்ல...'' அவன் சொன்னான்: ""அவளுடன் இருக்கவேண்டுமென்று எனக்குத் தோன்றவில்லை. நீ என்னை கொஞ்சம் புரிஞ்சுக்கோ.''

""உனக்கென்ன பயமா? உன்னை அவள் ஏதாவது செய்துவிடுவாளோ என்று பயப்படுறியா? இல்லா விட்டால் அந்தக் குழந்தையின் ஆவி வந்து உன்னை பிடிச்சிடப்போகுதோன்னு தோணுதா? பயப்படாதேடா. நீயும் அவளும் கட்டிப் பிடிச்சு தூங்குங்க. கொஞ்சம் கண்ணீர் உன் உடல்மீது விழும். அவ்வளவுதான்...''

அப்போது சந்தீபன் சொன்னான்: ""டேய், கட்டிப் பிடிக்கிறது இருக்கட்டும்... அவளைப் பார்க்க வேண்டு மென்றுகூட எனக்குத் தோன்றவில்லை. அவளுடன் சேர்ந்து ஒரு இரவு எப்படி இருக்க முடியும்?''

சந்தீபன் ஒரு கையால் தலையில் அடித்துக்கொண்டான். சிறிது நேரம் கழித்து அவன் சொன்னான்: ""நீயும் எங்களுடன் வரணும்.''

""எங்கே?'' நான் கேட்டேன்.

""ஹோட்டல் அறைக்கு. சிறிது நேரம் கழித்து நீ போய் விடு. ஆனால், முதலில் நீ வேண்டும்.''

எனக்கு சத்தம் போட்டு சிரிக்கவேண்டுமென்று தோன்றியது. நான் சொன்னேன்: ""டேய் சந்தீபா, இதுவரை நான் ஒரு பெண்ணுடன் சேர்ந்து இரவு நேரத்தில் தூங்கியதில்லை. இப்போது... இதோ... உனக்கும் உன்னுடைய காதலிக்கும் இரவு வேளையில் துணையாக நான்! நான் சிரிக்க வேண்டுமா அழவேண்டுமா என்று நீ சொல்லு. நான் சீக்கிரம் அறைக்குப் போய் இன்றைய மலையாளத் திரைப்படத்தைப் பார்க்க வேண்டும். டேய்... "நமுக்கு பார்க்கான் முந்திரித் தோப்புகள்' படத்தைப் பார்ப்பதற்கு நான் எவ்வளவு காலமாகக் காத்திருக்கிறேன் என்ற விஷயம் உனக்குத் தெரியுமா?''

சந்தீபனின் முகம் வாடிவிட்டது. அவன் சொன்னான்: 

""ராதாகிருஷ்ணா, நான் உன்னுடைய காலைப் பிடிக்கி றேன். நீ என்னைவிட்டுப் போய்விடாதே.''

""சரி... அப்படின்னா... செய்...'' நான் சொன்னேன்.

அவன் வேகமாக ஃபோன் பண்ணி ஹோட்டலில் ஒரு டபுள் ரூமை புக் செய்தான். ஹோட்டலின் பெயரைக் கேட்டதும் நான் நினைத்தேன்- தொலைந்தது மூவாயிரம் ரூபாய். கருக்கலைப்பு செய்ததற்கு ஒரு இருபத்தய்யாயிரம் ரூபாய் செலவாகியிருக்கும்- டில்லி கணக்குப்படி. இனி மாதுரிக்கு ஏதாவது பொருட்கள் வாங்கிக் கொடுக்கும்போது, பையனுக்கு ஒரு நாற்பது... ஐம்பது ரூபாய் அன்புப் பரிசாக கிடைக்கும். வெறும் காதல் மட்டும் காரணம்!

சந்தீபன் சொன்னான்: ""நாங்கள் அறை எடுக்கும்போது நீ வரவேற்பறையில் இருந்தால் போதும். நாங்கள் லிஃப்ட்டில் நுழையும்போது, நீயும் அதற்குள் நுழைய வேண்டும். ரூம் பாய் போன பிறகு, நீ அறைக்குள் வரவேண்டும். டேய். ஏமாற்றி விடாதே.''

""டேய்... நான் இதுவரை ஆணையோ பெண்ணையோ ஏமாற்றியதே இல்லை.''

அவன் எதுவும் சொல்லவில்லை.

மாதுரி வெளியே வந்தாள். ஒப்பனை செய்திருந்தாலும், கருத்துப் போன முகத்துடனும், கலங்கிய கண்களுடனும் இருந்தாள். ஒரு நர்ஸ் அவளுடைய சூட்கேஸை உருட்டிக் கொண்டு வந்தாள். நல்ல வேளை- நான் நினைத்தேன்- இனி ஹோட்டலில் சூட்கேஸ் பிரச்சினை இல்லை. மாதுரி சிரமத்துடன் சுவரை ஒரு கையால் பற்றிக்கொண்டே நடந்தாள்.

""நீ போய் கையைப் பிடிடா.'' நான் சந்தீபனிடம் கூறினேன்.

அவன் எங்கோ பார்த்துக்கொண்டே நடந்து சென்று மாதுரியின் கையைப் பற்றி, அவளை முன்னோக்கி நடத்திக்கொண்டு வந்தான். என்னைப் பார்த்ததும் மாதுரி மிகவும் பலவீனமான குரலில் சொன்னாள்: ""ஹலோ... ராதா...''

சந்தீபன் பின்வாசலுக்கு அருகில் காரைக் கொண்டு வந்தான். மாதுரி பின்னிருக்கையில் அமர்ந்தாள். பிறகு... படுத்துக் கொண்டாள். நான் முன்னால் உட்கார்ந்தேன். யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

எந்தவொரு பிரச்சினையும் இல்லாமலே நாங்கள் அடுத்தடுத்து ஹோட்டலின் அறைக்கே வந்தோம். ஸோஃபாக்கள் போடப்பட்டிருந்த உட்காரும் அறைக்குப் பின்னால் படுக்கையறை இருந்தது. மாதுரி கட்டிலில் போய் கவிழ்ந்து படுத்துக்கொண்டாள். நான் அறைக் குள் நுழைந்ததும், சந்தீபன் கதவில் "டூ நாட் டிஸ்டர்ப்' போர்டைத் தொங்கவிட்டு கதவை அடைத்தான். விளக்குகள் அனைத்தையும் அணைக்க ஆரம்பித்தான்.

""இது என்ன விளையாட்டுடா?'' நான் முணுமுணுத்தேன். ""இந்த இருட்டில் எப்படி உட்கார்ந்திருப்பது? டெலிவிஷன்கூட அந்த அறையில்தான் இருக்கிறது. இல்லா விட்டால்... நான் "நமுக்கு பார்க்கான் முந்திரித்தோப்புகள்' திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருப்பேன்.''

சிறிது நேரம் அவன் எதுவும் பேசாமலே ஸோஃபா வில் உட்கார்ந்திருந்தான். பிறகு எழுந்து நின்றுகொண்டு சொன்னான்: ""ராதாகிருஷ்ணா, நீ எங்கúயும் போயிடாதே...''

அவன் படுக்கையறைக்குள் தட்டுத்தடுமாறிச் சென்றான். 

என்னுடைய காலை மிதித்து அவன் விழப் போனான். 

எனக்கு கடுமையான வேதனை உண்டானது. நான் மனதிற்குள் நினைத்தேன்- காதல் என்பது இந்த அளவிற்கு  பயங்கரமான ஒரு விஷயமா? இது கொஞ்சம் கஷ்டமான விஷயமாச்சே! இதைவிட என்னுடைய விஷயம் எவ்வளவோ பரவாயில்லையே!

படுக்கையறைக்குள்ளிருந்து தேம்பியழும் சத்தமும், சிணுங்கல்களும், இதுதான் என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு இருக்கக்கூடிய ஓசைகளும், ஒரு பூகம்பம் உண்டாவதைப்போல உண்டாக ஆரம்பித்தன. இருட்டைக் கிழித்துக்கொண்டு அவையனைத்தும் வடிவமெடுத்து என்னை நோக்கி வருவதைப்போலத் தோன்றியது.

சந்தீபன் என்னவோ கூறிக்கொண்டிருந்தான். ஆனால், மாதுரியின் அழுகைச் சத்தத்தின் அளவு கூடிக்கொண்டே இருந்தது. பஞ்சாபிப் பெண்களுக்கே இருக்கும் ஒரு பழக்கமாக அது இருக்கவேண்டும் என்று நான் நினைத்தேன். சந்தீபனின் ஒவ்வொரு முட்டாள்தனமான செயல்களையும் பார்த்தால்...! மாதுரியின் கண்ணீர் தரை வழியாகவும் ஓடிக்கொண்டிருப்பதைப்போல அங்கே அமர்ந்திருக்கும்போது எனக்கு தோன்றியது.

நான் கால்கள் இரண்டையும் தூக்கி நடுவிலிருந்த மேஜையின்மீது வைத்தேன். சிறிது நேரம் சென்றதும் இருட்டுக்குள்ளிருந்து வந்த அழுகைச் சத்தத்தின் வடிவங்கள் தெளிவாகத் தெரிந்தன. அவற்றில் மனித உருவங்களும் மிருக உருவங்களும் இருந்தன. சில வடிவங்களைச் சுற்றிலும் வெளிச்சம் இருந்தது. சில தூரத்தில் நின்றுகொண்டிருந்தன. ஒவ்வொன்றின் சத்தமும் வெவ்வேறாக இருந்தன. 

பிறகு நான் எப்போதோ காதுகளைக் கூர்மைப் படுத்திக்கொண்டு கேட்டபோது, படுக்கையறையில் முழுமையான அமைதி நிலவிக் கொண்டிருந்தது. நான் நீண்ட பெருமூச்சு விட்டேன். இனி சந்தீபன் அங்கு படுத்து உறங்காமல் வெளியே வந்தால் நான் இங்கிருந்து கிளம்பலாம். அப்போது இருட்டுக் குள்ளிருந்து ஏதோவொன்று என்னைத் தொட்டது. நான் அதிர்ச்சியடைந்து பின்னோக்கி நகர்ந்து நின்றேன். சந்தீபனின் குரல் முணுமுணுப்பாக வந்தது: ""ராதாகிருஷ்ணா, அவள் தூங்கிவிட்டாள். நீ இன்னும் அரைமணி நேரம் இருந்தால் போதும். நான் கொஞ்சம் வெளியே போய்விட்டு வருகிறேன்.''

""சந்தீபா...'' நான் மெதுவான குரலில் சொன்னேன்: ""அதிகமாக மது அருந்தாதே. நான் இங்கே இருக்கிறேன் என்ற விஷயத்தை மறக்கவும் வேண்டாம். நீ வந்தாலும் வராவிட்டாலும் முப்பத்தைந்தாவது நிமிடத்தில் நான் இங்கிருந்து கிளம்பிவிடுவேன்.''

""சரி...'' அவன் சொன்னான். தொடர்ந்து சத்தம் உண்டாக்காமல் கதவைத் திறந்து வெளியேறினான்.
நான் ஸோஃபாவில் நன்றாக சாய்ந்து படுத்தேன். கால்களை மீண்டும் நடுவிலிருந்த மேஜையின்மீது வைத்தேன். கஷ்டம்! "நமுக்கு பார்க்கான் முந்திரித் தோப்புகள்' திரைப்படம் இப்போது முடிந்திருக்கும்!

அப்போது நான் அதிர்ச்சியடையும் அளவிற்கு உள்ளே இருந்து மாதுரி அழைத்தாள்: ""ராதா...'' அவளுடைய குரல் சத்தமாகக் கேட்கவில்லை.

நான் சொன்னேன்: ""ஹலோ...''

""இங்கே வாங்க ராதா...'' - அவள் சொன்னாள். அவள் கூறியதை மிகவும் சிரமப்பட்டே கேட்க முடிந்தது.

நான் எதுவும் பேசாமல், அசைவே இல்லாமல் அங்கு அமர்ந்திருந்தேன். தூக்கத்தில் கூறியிருக்க வேண்டும். தூங்கட்டும். 

அப்போது மாதுரி மீண்டும் அழைத்தாள்: ""ராதா... இங்கே வாங்க.''

என்னவோ பிரச்சினையாகிவிட்டது. நான் நினைத்தேன். சந்தீபனும் இல்லை. டாக்டரின் எண்ணும் இல்லை. ஊர் சுற்றிப்பயல்... மது அருந்துவதற்கு அவன் தேர்ந்தெடுத்திருக்கும் நேரம்...

நான் அவளுடைய கட்டிலுக்கு அருகில் பதைபதைப் புடன் சென்றேன். ஒருவேளை... அவள் தற்கொலை செய்துகொண்டாளோ?

""இங்கே உட்காருங்க...'' கட்டிலின் ஓரத்தைச் சுட்டிக்காட்டியவாறு அவள் சொன்னாள்.

நான் அமர்ந்தேன். சாளரத்தின் திரைச் சீலையின் வழியாக உள்ளே வந்த சிறிய வெளிச்சத்தில் நான் அவளுடைய முகத்தை தெளிவாகப் பார்க்க முடிந்தது.

""என்னை கட்டிப் பிடி, ராதா.'' அவள் சொன்னாள்.

நான் என்னவோ கூற முயற்சித்தேன். ஆனால், என்னுடைய குரல் வெளியே வரவில்லை.

""என்னை கட்டிப் பிடி...'' அவள் சொன்னாள்.

நான் கட்டிலின்மீது சாய்ந்து அவளைக் கட்டிப் பிடித்தேன். தொடர்ந்து எழ ஆரம்பித்தேன். அவள் கூறினாள்: ""வேண்டாம்...''

சிறிது நேரம் சென்றதும் மாதுரி சொன்னாள்: ""என் மார்பில் கையை வை.''

நான் அவளுடைய மார்பில் கையை வைத்தேன்.

""என் அடிவயிற்றில் தடவு...''

நான் அவளுடைய அடிவயிற்றில் தடவினேன். 

""இங்கே...'' என்னுடைய கையைப் பிடித்து வைத்துக் கொண்டு அவள் சொன்னாள். ""என் குழந்தை இப்போது எங்கே இருக்கிறது?'' அவள் கேட்டாள். தொடர்ந்து என்னை அழுத்திப் பிடித்தாள்.

அவளுடைய தலைமுடி என்னுடைய வாயிலும், முடியில் தேய்க்கப்பட்டிருந்த நறுமணம் என்னுடைய நாசியையும் நிறைத்தன.

""என் தொடைகளில் ரத்தம் இருக்கிறதா என்று பார்.''

நான் தடவிப் பார்த்துவிட்டு சொன்னேன்: ""இல்லை...''

""என் குழந்தையின் முகச்சாயல் எப்படி இருந்திருக் கும்?''

நான் எதுவும் கூறவில்லை.

""என் கண்களைத் துடைத்து விடுங்க, ராதா.'' அவள் சொன்னாள்.

நான் அவளுடைய கண்களைத் துடைத்து விட்டேன். கொஞ்சம் குளிர்ச்சியான ஈரம் மட்டும்...

""என் உதடுகளில் முத்தமிடுங்க...''

நான் என்னுடைய உதடுகளை அவளுடைய உதடுகளில் வைத்தேன்.

அவள் சொன்னாள்: ""தேங்க்ஸ், ராதா.''

""தேங்க்ஸ்...'' நான் எழுந்து நின்றவாறு சொன்னேன். அவள் தூங்கிவிட்டாள்.

நான் ஸோஃபாவிற்குத் திரும்பிவந்து உட்கார்ந்த நேரம் -சந்தீபன் மெதுவாக கதவைத் திறந்து உள்ளே வந்தான். அவனிடமிருந்து நன்றாகவே மதுவின் வாசனை வந்துகொண்டிருந்தது.

""சந்தீபா...'' நான் சொன்னேன்: ""நீ இனிமேல் மாதுரியை எழுப்ப வேண்டாம். இந்த ஸோஃபாவில் படுத்துத் தூங்கு.''

""சரி...'' -அவன் ஷுக்களைக் கழற்றிக்கொண்டே சொன்னான்: ""உன்னை நான் நாளை அழைக்கிறேன்.''

கால்க்காஜிக்குச் செல்லும் இறுதிப் பேருந்து எனக்குக் கிடைத்தது. பேருந்தில் அமர்ந்து தூக்கம் வந்து கண்களைக் கசக்கியபோது, கைகளிலிருந்து வந்த ஒரு புதிய வாசனை என்னை ஆச்சரியப்படச் செய்தது. அதிர்ச்சியடைந்து நான் என் கைகளை பேண்ட் பாக்கெட்டிற்குள் நுழைத்தேன்.


நன்றி - இனிய உதயம் 01 10 2013

தமிழர்கள் நோக்கிலும் போக்கிலும் திருத்தம் வேண்டும் - முனைவர் க ப அறவாணன்

பேராசிரியர் க.ப. அறவாணர் உலகத் தமிழர்களுக்கெல்லாம் உறவானவர். வறுமை வயப்பட்ட சூழலிலில் பிறந்து, தன் கடும் உழைப்பால் ஒவ்வொரு நாளையும் திட்டமிட்டு வாழ்க்கையின் உச்சத்தில்போய் உட்கார்ந்திருப்பவர் .மானுடவியல், சமூகவியல் அடிப்படையில் தமிழ்ச் சமுதாயத்தை ஆய்வு செய்து வேறு எவரும் தொடநினைக்காத துறையில் ஆழங்கால் பட்டு நிற்பவர். எண்பது நாடுகளுக்குமேல் பயணித்து அம்மக்களின் வாழ்க்கையோடு தமிழர்களின் வாழ்க்கையை, பண்பாட்டை ஒப்பிட்டுப்பார்த்து உள்ளம் கசிந்து எழுதிக்கொண்டிருப்பவர். எளிமை, கடும் உழைப்பு, சிக்கனம், சகிப்புத்தன்மை, புதிது புதிதாய் ஆய்வு செய்தும், தொடர்ந்து படிப்பதும் படைப்பதுமாகத் தன் வாழ்க்கையைச் செதுக்கிக் கொண்டு, இளைய சமுதாயத்திற்கு  எடுத்துக்காட்டாக இயங்கிவருபவர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் நம் "இனிய உதயத்'துக்காகத் தந்த நேர்காணலில் ஒளிவுமறைவு இல்லாமல் வெடிப்புறப் பேசியிருக்கிறார்.

பூஜ்ஜியத்திலிலிருந்து வாழ்க்கையைத் தொடங்கியவர் நீங்கள். மிக வறுமை வயப்பட்ட சூழலிலிருந்து படிப்படியாக முன்னேறி உலகத் தமிழர்களிடம் எல்லாம் உறவாடும் நிலைக்கு உயர்ந்திருக்கிறீர்கள். சிறு விதையாய் இருந்த நீங்கள் எப்படி விருட்சமானீர்கள்? ஓடி விளையாடிய அந்தச் சிறு பருவத்தில் உங்களுக்குள் எதைத் தேடிக் கொண்டிருந்தீர்கள்?

நெல்லை மாவட்டம் கடலங்குடியில் பிறந்தவன் நான். படித்த குடும்பத்தில் வந்தவன் அல்லன் நான்; நல்லவேளையாக, உள்ளூரில் இருந்த அஞ்சாம் வகுப்பு வரை நடத்தப்பட்டுவந்த பஞ்சாயத்துப் பள்ளியில் என்னைச் சேர்த்துவிட்டார்கள். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை அங்குப் படித்தேன்.ஐந்தாம் வகுப்பு முடிந்தவுடன் வழக்கமாகப் படிப்பை நிறுத்தி விடுவதுதான் எங்கள் ஊர் வழக்கம். மாறாக, என்னை நான்கு மைல் தொலைவில் விஷ்ணுபுரம் என்ற ஊரில் இருந்த ஜார்ஜ் உயர்நிலைப் பள்ளியில் படிக்க வைத்தார்கள். அப்பள்ளியில் சேர்ந்து படித்தேன். ஏழாம் வகுப்பில் ஆங்கிலத்தில் தோற்றுப்போனேன். எட்டாம் வகுப்பு தாண்டி ஒன்பதாம் வகுப்புக்கு வரும்போது இரா. கந்தசாமி குருக்கள் என்ற ஆசிரியர் தமிழ்ப் பாடம் எடுத்தார். அவரே என்னை முன்னிலைப்படுத்தி ஏனைய தமிழ் வகுப்புகளில் என்னைப் பற்றிப் பேசினார். வகுப்புத் தேர்வில் முதல் மதிப்பெண் வாங்கும் நாட்களில் அவர் என் விடைத்தாளை வகுப்பில் காட்டுவார். என்னை எழுந்து நிற்கச் சொல்லுவார். இவ்வாறு அவர் கொடுத்த ஊக்கம் என் உள்ளுணர்வைத் தூண்டியது. அதனால், மிக நன்றாகத் தமிழ் படிக்கத் தொடங்கினேன். ஒன்பதாம் வகுப்பு முதல் பள்ளிப் படிப்பாகிய பதினோராம் வகுப்பு படிக்கும் வரை தமிழில் முதல் எண் பெறுவது என் வழக்கமாக இருந்தது. 

இருபத்தேழாம் வயதில் கல்லூரி முதல்வர், முப்பத்தேழாம் வயதில் அயல்நாட்டுப் பல்கலைக்கழகத்தில் ஐந்து ஆண்டுகள் பணி. கல்லூரி, பல்கலைக்கழகங்களில் துறைத் தலைவராகப் பதினேழு ஆண்டுகள் பணி. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் என்று  பல நிலைகளில் பரிணமித்திருக்கிறீர்கள். ஒன்றரை ஆண்டுகளில் உங்களின் முனைவர் பட்ட ஆய்வையே முடித்திருக்கிறீர்கள். அனைத்துமே உங்கள் திட்டமிடல்படிதான் நடந்தனவா?

பள்ளிப் பருவத்தில் நூல்கள் படிக்கும் பழக்கம் உண்டாயிற்று. எம்.ஆர். எம். அப்துற் றஹீம் என்பவர் எழுதிய வாழ்க்கை முன்னேற்றப் புத்தகங்களை மலேசியாவில் இருந்த என் மாமா திரு. இராமையா வாங்கிக் கொடுத்தார். அவற்றைப் படிக்கத் தொடங்கினேன். அப்துற் றஹீம் புத்தகங்களே என் மனதில் உயரவேண்டும் என்ற துடிப்பை ஆழமாக விதைத்தன. 

அதைத் தொடர்ந்து மு.வ. நூல்கள் எனக்கு அறிமுகமாயின. அந்நூல்கள் அனைத்தையும் படித்தேன். மு.வ.வின் வாழ்க்கையையும் படித்தேன். மு.வ.வைப்போல் நாமும் ஆகவேண்டும் என்ற எண்ணம் என் மனதில் தோன்றி கிளைக்கத் தொடங்கியது. 

சிறு வயதில் இராமகிருஷ்ண மடத்தோடு தொடர்புகொண்டிருந்த துறவி காசிநாதர், இராஜநாயகம் அடிகளார் போன்றோர் தங்கள் வாழ்வில் எப்படி ஒளியேற்றி வைத்தனர்? அதுபோலவே மூத்த தமிழறிஞர் வ.ஐ. சுப்ரமணியம் அவர்களிடம் தாங்கள் கற்றுக் கொண்டவை எவை?

சின்ன வயது முதலே என்னை உருவாக்கியவர் எங்கள் ஊர் கிழக்குத் தெருவில் இருந்த துறவி காசிநாதர் ஆவார். தம்பிக்குத் திருமணம் செய்வித்து, தான் மட்டும் துறவியாக வாழ்ந்தார் காசிநாதர். கோவிலடிமையோ, சாமி அடிமையோ அல்லர் அவர். முற்போக்குச் சிந்தனையாளர். அவரே விவேகானந்தர் நூலகம் என்ற ஒன்றை தான் இருக்கும் தெருவில் ஒரு கொட்டகை இட்டு அமைத்தார். பள்ளி சென்ற காலம் போக, எஞ்சிய நேரங்களில் நான் துறவி காசிநாதர் அவர்களோடும், அவர் உருவாக்கிய நூலகத்திலும் நேரத்தைச் செலவழித்தேன். இப்பழக்கம் பல நல்ல பழக்கங்களை இளம் வயதிலேயே ஊன்றிவிட்டது. 

கத்தோலிலிக்கத் துறவி ராஜநாயகம் அடிகளார் என்னை உயர்த்திவிட்ட பெரும் துறவி ஆவார். எம்.ஏ. முடித்த பிறகு வேலை பெறுவதற்காக நேர்முகத்தில் பங்கேற்க திருநெல்வேலிலி இந்துக் கல்லூரிக்குச் சென்றிருந்தேன். முதல் வகுப்பும் முதன்மையும் பெற்றிருந்த என்னை அவர்கள் தேர்ந்தெடுக்கவில்லை (1967). அதே ஊரில் தாமிரவருணி ஆற்றுக்குத் தெற்கே தூய சேவியர் கல்லூரி இருந்தது. இங்கு வந்த நான் அங்கும் சென்று முயல்வோமே என்று விண்ணப்பம் எழுதிக்கொண்டு என்னுடைய வெளியீடுகள், முதல் வகுப்புச் சான்றிதழ் ஆகியவற்றை இணைத்து அக்கல்லூரி முதல்வர் அலுவலகத்தில் சேர்ப்பித்துவிட்டு சென்னையிலிருந்த என் தங்கை வீட்டுக்குத் திரும்பிவிட்டேன். 

அடுத்த சில நாளில் ராஜநாயகம் அடிகளாரிடமிருந்து தந்தி வந்தது. அத்தந்தியில் நான் அக்கல்லூரி விரிவு ரையாளராக அமர்த்தப்பட்ட செய்தி என்னை மிக மகிழவைத்தது. அவர் இருந்த திசை நோக்கித் தொழுதேன். பாளையங்கோட்டை சென்று அக்கல்லூரி விரிவுரையாளராக இணைந்தேன். கத்தோலிலிக்க நிறுவனங்களில் பணியாற்றும் அரிய வாய்ப்பை அமைத்துக்கொடுத்தவர் ராஜநாயகம் அடிகளார்தான். 

என் மாணாக்கப் பருவத்தில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் வ.ஐ.சு. 

அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அதிசய குணங்கள் பல. பத்து மணிக்குத் தொடங்கும் கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைக்கு காலை 8.30 மணிக்கு வந்துவிடுவார். இரவு 8.30 மணி வரை அவர் துறையில் இருப்பார். அதிகம் பேசமாட்டார். 

எனக்கு எம்.ஏ. மொழியியல் திறனாய்வு வகுப்புகளை அவரே எடுத்தார். நாற்காலிலியில் அமர்ந்து வகுப்பெடுக்க மாட்டார். நின்றுகொண்டேதான் வகுப்பு எடுப்பார். கரும்பலகையை நன்கு பயன்படுத்துவார். அடிக்கடி தேர்வு வைப்பார். உடனே விடைத்தாளைத் திருத்தி மறுநாள் கொடுத்துவிடுவார். பல்கலைக்கழகத்திற்கு நான் சம்பளப் பணம் கட்டாமல் தண்டனைக்கு (ஃபைன்) ஆளாகும்போது அவரே பணத்தைக் கட்டிவிடுவார். நிறைய படிப்பார். எங்களுக்கு எம்.ஏ. வகுப்புகள் அவர் ஆங்கிலத்தில்தான் எடுத்தார். மிகமிகக் கண்டிப்பானவர்; நேர்மையானவர். 

பதினாறு வயதிற்குப்பின் உங்கள் உறவுகளை விட்டுத் தொலைவில் சென்றுவிட்டீர்கள். உங்களை வளர்த்துக்கொள் வதிலேயே முழுக் கவனத்தையும் செலுத்தியிருக் கிறீர்கள்... இதனால் என்ன பயன் கண்டீர்கள்? சொந்த வாழ்க்கையில் இது குறித்து உங்கள் மனதில் வருத்தம் ஏற்படவில்லையா?


பிறந்த குடும்பத்தை விட்டும் ஊரை விட்டும் பள்ளிக்கல்வி முடித்தவுடன் சென்றுவிட்டேன். சிதம்பரம் வாழ்க்கை, வேலை கிடைத்தவுடன் திருநெல்வேலிலி வாழ்க்கை, தொடர்ந்து சென்னை வாழ்க்கை. விடுமுறையில்கூட நான் பிறந்த ஊர் செல்வதில்லை. பிறந்த ஊர் பாதிப்பு, ஈர்ப்பு ஆகியன சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்ற ஓரிரு ஆண்டுகளிலேயே  எனக்கு நின்றுபோய்விட்டன. அம்மா, அப்பா, குடும்பம் ஆகியவற்றின் நினைவு எனக்கு வராத அளவிற்கு சிதம்பரத்திலேயே நான் தங்கியிருந்த வீட்டின் அம்மையார் திருமதி நாகரத்தினம் அம்மாள் என்னைப் பேரன்போடு கவனித்துக் கொண்டார். வேலைக்குப் போன பிறகு என் அப்பா, அம்மா மறைகிற வரை மாதம்தோறும் அவர்களுக்குப் பணம் அனுப்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். நான் வெளிநாடு சென்றிருந்த ஐந்தாண்டுகளிலும்கூட அவர்களுக்குத் தொடர்ந்து பணம் கிடைக்க ஏற்பாடு செய்திருந்தேன். என் சகோதரிகளுக்கும் என்னால் இயன்ற எல்லா உதவிகளையும் செய்தேன். என் கடைசி சகோதரி திருமதி வைரம் திருமணத்தை நானே முன்னின்று நடத்தி வைத்தேன். அவர் சில ஆண்டுகளுக்குமுன் மறைந்துவிட்டார். நான்கு சகோதரிகளோடும், மூன்று சகோதரர்களோடும் உடன்பிறந்தவன் நான். தற்போது மூத்த சகோதரி, நான் ஆகியோர் மட்டும்தான் எஞ்சியுள்ளோம். 

ஒவ்வொரு நாளையும் திட்ட மிட்டுப் பயன்படுத்தியிருக்கிறீர்கள். '"பேசுவதைக் குறை முடிந்தால் நிறுத்து' என்பதில் உறுதியா யிருந்தி ருக்கிறீர்கள். விடுப்பெடுக்காமலேயே பணிபுரிந்திருக்கிறீர்கள். கோடை விடுமுறையை நூல்கள் எழுதப் பயன்படுத்தி இருக்கிறீர்கள்... தாங்கள் எழுதிய முதல் நூல் எது? எப்படி எழுதினீர்கள்?

நான் பணியாற்றும் இடங்களில் அளிக்கப்பட்டிருக்கிற விடுமுறையைக்கூட நான் எடுப்பதில்லை. எடுக்கக்கூடாது என்பதைக் கொள்கை யாக வைத்திருந்தேன். சென்னை லயோலா கல்லூரியில் எனது விடுமுறை எடுக்காத இந்தப் பழக்கத்திற்காக ஆண்டுதோறும் கல்லூரி விழாவில் மேடையேற்றி சிறப்பளித்து பணமும் அன்பளிப்பாகக் கொடுத்தார்கள். துணைவேந்தராக இருந்தபோதும் நான் விடுமுறை எடுக்கவில்லை. அறுவை மருத்துவத்திற்காக எடுத்த விடுமுறை தவிர. எப்போதும் படித்துக் கொண்டிருப்பதும், எழுதிக்கொண்டிருப்பதும் என் வழக்கம். விடுமுறை நாட்களில் படிப்பதும் எழுதுவதும் இருமடங்காக இருக்கும். பல நூல்களை விடுமுறையிலேயே நான் எழுதிமுடித்தேன். 

"பொறுத்துப்போ, புறக்கணி, கடந்துபோ' என்பதுதான் உங்கள் வெற்றியின் மந்திரமாய் இருக்கிறது... இதைப்பற்றி கொஞ்சம் குறிப்பிட முடியுமா?

கீழ்மட்டத்தில் இருந்து துணைவேந்தர் பொறுப்பு என்ற உச்ச நிலை வரை வந்த நான், சந்தித்த இடையூறு களை அவற்றைக் கடந்த விதங்களை அடுத்த தலைமுறைக்கு விட்டுப்போக நினைத்தேன். எனக்கு உதவி செய்தவர்களின் பெயர்களையும் பதிவு செய்ய விரும்பி னேன். அதன்விளைவாக எழுதப்பட்ட நூல்கள்தான் "பொறு, புறக்கணி, புறப்படு' என்ற நூலும், "அனுபவங்கள் பேசுகின்றன' என்ற நூலும் ஆகும். 

தாங்கள் எழுதிய நூல்களுக்குப் பல பரிசுகள் கிடைத்திருக்கின்றன. ஒருமுறை தாங்கள் எழுதிய இரண்டு நூல்களுக்குத் தமிழக அரசின் பரிசு கிடைக்கவிருந்தும் ஒரு நூலுக்குத்தான் பரிசு வழங்கப்பட்டது. மழுப்பலான காரணங்களால் ஒரு நூலுக்குப் பரிசு கிட்டாமல் போனது... தங்கள் மனநிலை அப்பொழுது எப்படி இருந்தது? தகுதியை மதிக்கத் தெரியாத பேர்வழிகள் என்று ஒதுக்கிவிட்டீர்களா?

என் வாழ்க்கை வெற்றியில் உதவிய சான்றோர்கள் பலர். ஊறு செய்தோர் சிலர். ஊறு பற்றிக் கேள்விப்படும்பொழுது சில மணி நேரம் கவலைப் படுவதோடு சரி, என்னுடைய கொள்கையான "ஓவர்டேக்' என்ற அடுத்த கட்டத்திற்குப் போய்விடுவேன். 

தமிழர்களின் வாழ்க்கையில் எத்தகைய மாற்றம் வேண்டியிருக்கிறது என்று கருதுகிறீர்கள்?

தமிழர் வாழ்க்கையில் நிறைய மாற்றங்களைச் செய்யவேண்டி இருக்கிறது. தமிழர்- அமெரிக்கர், ஐரோப்பியர், ஜப்பானியர் கண்டுபிடித்த பொருள்களை நுகரக் கற்றுகொண்டிருக்கிறார்களே தவிர, அவற்றைக் கண்டுபிடிக்க அந்த மக்கள் செய்த உழைப்பைக் கடைப்பிடிப்பதில்லை. சான்றாக, சாலை விதிகளை மிக அருமையாகப் பிடிவாதமாகக் கடைப்பிடிப்பார்கள். அலுவலகக் கடிதங்களுக்கு உடனுக்குடன் பதில் வரும். செனகால் குடியரசுத் தலைவருக்கு நான் எழுதிய கடிதங்களுக்கு அதே நாள் மாலைகூட விடை மடலும் வந்ததுண்டு. மாறாகபுறங்கூறும் பழக்கம் தமிழர்களிடம் மிக மிகுதி. பொய் சொல்வதிலும் ஒன்றை மிகைப்படுத்திப் பேசுவதிலும் தமிழர்கள் முன்னணியில் இருக்கிறார்கள். தமிழர்கள் நோக்கிலும் போக்கிலும் திருத்தம் வேண்டும். காலம் தவறாமையில் அயல்நாட்டார் உறுதியானவர்கள். குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ச்சி தொடங்கும். நிகழ்ச்சி முடியும். சினிமாவுக்கு முக்கியத்துவமே கொடுக்க மாட்டார்கள். பெரும்பாலும் திரையரங்குகள் காலிலியாக இருக்கும். தமிழரிடம்,. முதலமைச்சராக வரும் அளவிற்கு நடிக, நடிகையருக்குச் செல்வாக்கு இருப்பதுபோல எந்த நாட்டிலும் செல்வாக்கு இல்லை. 

தமிழ் இலக்கிய வரலாற்றைப் பலர் எழுதியிருக்கிறார்கள். தாங்களோ தமிழ் மக்களுடைய வரலாற்றை கால வரிசைப்படி எழுதிக்கொண்டிருக் கிறீர்கள். இந்த எண்ணம் எப்படி எழுந்தது? இதற்குரிய தரவுகளை எப்படித் திரட்டினீர்கள்? ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழர் வாழ்வில் ஏற்பட்ட... ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் என்று எவற்றைக் கருதுகிறீர்கள்?

செனகால் டக்கார் பல்கலைக்கழகத்தில் நான் மானுட இயல் ஆராய்ச்சியாளராக அமர்த்தப்பெற்றேன். திராவிடர்களுக்கும் கறுப்பு ஆப்பிரிக்கர்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளைக் கண்டறிந்து விளக்குவது எனக்கு இட்ட பணி. பணி ஏற்பதற்கு முன்பு சென்னைப் பல்கலைக்கழகத்தில் மானுட இயல் சான்றிதழ் வகுப்பை நான் முடித்திருந்தேன். என் ஆராய்ச்சிக்கு அந்தக் கல்வி போதாமையால், அயல்நாட்டில் பொறுப்பேற்ற தொடக்க காலங்களில் சமூக இயல் நூல்களையும் மானுட இயல் நூல்களையும் அடிப்படையாக இருப்பவற்றை வாங்கி மீண்டும் மீண்டும் படித்தேன். அவற்றை அடியொற்றித்தான் ஐந்தாண்டு அங்கே நிகழ்ந்த என் ஆராய்ச்சியும் அக்காலத்தில் எழுதப்பட்ட கட்டுரைகளும் நூல்களும் அமைந்தன. 1982-ல் தாயகம் திரும்பி தொடர்ந்து லயோலா கல்லூரி தமிழ்த் துறைத் தலைவராகப் பொறுப்பேற்ற பின் தொடர்ந்து எழுதவேண்டும் என்று முடிவு செய்தேன். இலக்கணங்கள் பற்றியும், இலக்கியங்கள் பற்றியும் எழுதுவதைவிட, அயல்நாட்டில் கற்ற சமூக இயல், மானுட இயலை அடிப்படையாக வைத்து நூல் எழுத விரும்பினேன். தமிழரைப் பொறுத்த அளவு, அதுவரை ஏன் இன்றுவரைகூட தமிழருடைய அரசியல் வரலாறு எழுதப்பட்டிருக்கும் அளவுக்குத் தமிழ்ச் சமுதாய வரலாறு எழுதப்படவில்லை. எனவே, தமிழ்ச் சமுதாய வரலாற்றை எழுதுவது என்று முடிவெடுத்தேன். அதற்கு முன்மாதிரியாக, ஆங்கிலத்தில் வெளிவந்த ´Trevelyon For Social History of England என்ற நூலைப் பெற்று ஒரு முறைக்குப் பலமுறை அந்த நூலைக் கற்றேன். அந்நூலை அடிப்படையாக வைத்தே தமிழ்ச் சமுதாய வரலாற்றை எழுதத் தொடங்கினேன். 

இதுவரை தொல் தமிழர் காலம் தொடங்கி, நாயக்கர் காலம்வரை ஏழு தொகுதிகளை எழுதி முடித்துத் தற்போது ஐரோப்பியர் காலம் பற்றி எழுதத் தொடங்கியுள்ளேன். 

தமிழர் நிலை மாறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கருதுகிறீர்கள்?

 தமிழ்ச் சமுதாயத்தில் சிறுமதி படைத்தோரின் பழிகளையும் குறுக்கீடுகளையும் பொருட்படுத்தக்கூடாது. நம் அடிப்படைப் பண்பாட்டை மாற்றினால் ஒழிய, இவற்றைத் தவிர்த்துவிட முடியாது. தமிழர்கள் அடிப்படைப் பண்பாடு இல்லாதவர்கள் என்பதுதான் சமூக இயல் கற்ற என்னுடைய முடிவாகும். நாம் பின்பற்றும் இந்திய அரசியல், இந்திய நீதி முறை, தண்டனை முறை தற்போதைய தமிழரின் போக்கை மாற்றிவிட முடியாது. மேலும் கூட்டவே செய்யும். இந்தியா, சீனா மாதிரிக்கு மாறினால் மாற்றங்கள் ஏற்பட வழி உண்டு. நம் முன்னோர் இந்திய சுதேசியம் பேசிக் கொண்டிருந்தார்கள். அரசியல் சாசனத்தை வகுக்கிறபொழுது அப்படியே இங்கிலாந்து மாடலைக் காப்பியடித்தார்கள். நூற்றுக்கு நூறு படித்த பண்பாடு உடைய குறைந்த மக்கள் தொகையுடைய இங்கிலாந்து மக்களுக்காக அமைக்கப்பட்ட சட்டதிட்டம், நீதிமுறை, அரசு முறை, கட்சி ஆட்சி முறை இந்தியா விற்குப் பொருந்தவே பொருந்தாது. இந்திய மக்கள் தொண்ணூறு விழுக்காடு படிக்காதவர்கள் (1947). 85 விழுக்காடு பண்பாடு குறைந்தவர்கள் 60 விழுக்காடு பரம ஏழைகள். அனைத்திற்கும் சமயங்களையும் கோவில்களையும் விதியையும் நம்பிக்கொண்டிருப்பவர்கள். இவர்களிடையே இங்கிலாந்து சட்டதிட்டம் எடுபடவே படாது. 

 கல்கத்தா தமிழ்ச்சங்கத்தில் பேசிய தொடர் பேச்சினைப் பல ஆண்டுகளுக்கு முன்னரே "கவிதையின் உயிர் உள்ளம் உடல்' என்ற தலைப்பில் அருமையான நூலாக்கினீர்கள். "கவிதை கிழக்கும் மேற்கும்' என்ற தலைப்பில் மேலைக் கவிஞர்களின் கவிதை குறித்தும் எழுதியிருக்கிறீர்கள். கவிதை படைப்பதில் ஆர்வம் காட்டாமல் ஆய்வு நெறியிலேயே சென்றுவிட்டீர்கள்... என்ன காரணம்?

என்னுடைய முதல் நூல் கவிதை நூல்தான். அச்சிறு நூலிலின் பெயர் "ஒளி பரவட்டும்' என்பது. தொடர்ந்து என் வாழ்க்கை ஆராய்ச்சி செய்வது என்று அமைந்துவிட்டமையால், கவிதை படைப்பது நின்றுவிட்டது. 

"அற இலக்கியக் களஞ்சியம்' என்று மிகப்பெரிய தொகுப்பு நூலை வெளியிட்டு வியக்க வைத்தீர்கள்... இந்தத் தொகுப்புக்கு எத்தனை ஆண்டு உழைப்பு தேவைப்பட்டது. தமிழர்களிடம் அதற்குக் கிட்டிய வரவேற்பு எப்படி?

துணைவேந்தராக இருந்து ஓய்வு பெற்ற 2001-ல் ஏதேனும் தமிழுக்குப் பயனுள்ள நிலையான, வேலை செய்யவேண்டும் என்று தீர ஆலோசித்தேன். 

அதன்விளைவே, "அற இலக்கியக் களஞ்சியம்' எனும் பாரிய நூல். அந்த நூலுக்காக ஏழாண்டுகள் தொடர்ந்து உழைத்தேன். உழைப்பு வீண் போகவில்லை. நல்ல வரவேற்பு. ஆயிரம் ரூபாய் விலையுள்ள அந்நூலிலின் முதல் பதிப்பு விற்று இரண்டாம் பதிப்பு வந்துவிட்டது. தொடர்ந்து நிலையான வரவேற்பு அந்த நூலுக்குக் கிடைக்கும்;. கிடைக்கிறது.

உங்கள் கண்ணோட்டத்தில் திருவள்ளுவம் நூல் படைத்தீர்கள். அதற்குச் சில பேராசிரியர்கள்கூட எதிர்ப்புக் கிளப்பினார்கள். ஒரு படைப்பை மறுவாசிப்பு செய்வதோ இன்றைய காலகட்டத் திற்கு ஏற்ப கருத்துச் சொல்வதோ கூடாது என்பது சரியான நிலைப்பாடா?

திருவள்ளுவம் நூல் பற்றி சிலர் குறிப்பாக, மதுரையில் எதிர்ப்புக் குரல் எழுப்பினார்கள். சிற்றேடுகளில் எழுதினார்கள். வியப்பு என்னவென்றால் முதற்பதிப்பு விற்று இரண்டாம் பதிப்பு வந்துவிட்டது. மூன்றாம் பதிப்பை எதிர்நோக்கிக் கொண்டுள்ளது. புதிதாகச் சிந்திப்போரிடமிருந்து அந்த நூலுக்கு நல்ல வரவேற்பு. 

தாங்கள் சிறுகதைகளையும் எழுதி யிருக்கிறீர்கள். "கண்ணீரில் எழுதிய கதைகள்' என்ற தலைப்பிலும் நூலாக வெளிவந்திருக்கிறது. அதைப் பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா?

என்னுடைய எழுத்துப்பயணம் சிறுகதைப் படைப்பிலேயே தொடங்கியது. பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபொழுது மதுரைத் திருவள்ளுவர் கழகத் தலைவர் ஐயா கி. பழனியப்பன் (பழ. நெடுமாறன் தந்தையார்) சிறுகதைப் போட்டி ஒன்றை பள்ளி மாணவர்களுக்கு என வைத்திருந்தார்கள். அப் போட்டியில் நான் கலந்துகொண்டேன். என்னுடைய கதைக்குப் பரிசு அளிக்கப்பட்டது. ரூபாய் 40 அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இதுவரை நான் எழுதி பின்வரும் தலைப்புகளில் உள்ள சிறுகதை நூல்கள் வெளிவந்துள்ளன.

"அவள் அவன் அது', "தென்னைமரத் தீவுகளும் தீவோர மனிதர்களும். செதுக்காத  சிற்பங்கள்', "சொல்ல முடிந்த சோகங்கள்', "நல்லவங்க இன்னும்' இருக்காங்க', "கண்ணீரில் மிதக்கும் கதைகள்'.

இத்தனை காலமாக எவருமே தொல் காப்பியத்தை எளிய மக்கள் படித்துப் புரிந்து கொள்ளும்படி உரை எழுதவில்லையே. வெளி வந்திருக்கும் சில உரைநூல்களும் தமிழாசிரியர்கள் படிப்பதற்கேற்றவையாக உள்ளனவே தவிர மக்களிடம் சென்று சேரத்தக்கவையாக இல்லையே... இதற்கு என்ன வழி?


நல்ல கருத்து. தொல்காப்பியத்திற்கு அறிஞர் சிலர் எளிய உரை வரைந்துள்ளனர். என் பேராசிரியர் அறிஞர் ச.வே. சுப்பிரமணியம் எளிய உரை எழுதியுள்ளார்கள். என்.பி,எச்.டி. ஆராய்ச்சிப் பொருள் தொல்காப்பியமாக இருந்ததாலும், தொல்காப்பியக் களஞ்சியம் என்ற பெரிய நூலை வெளியிட்டதாலும் தொல்காப்பியத்திற்கு உரை எழுதுவது பயனுள்ளதாக இருக்கும். தற்போதைய என் வேலைத்திட்டம் தமிழ்ச் சமுதாய வரலாற்றை எழுதி நிறைவுசெய்வது. எட்டாவது தொகுதியாக ஐரோப்பியர் வரலாறு நிறைவுற்றுள்ளது. தொடர்ந்து தற்காலம் என ஒரு தொகுதி எழுதுவது பற்றி யோசித்து வருகிறேன். இப்பணி முடிந்தபின் தாங்கள் சொல்லும் தொல்காப்பிய உரை எழுதுதல் பற்றிச் சிந்திப்பேன்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் போன்றவை ஆங்கிலத்தை மிக எளிதாகக் கற்பதற்கு அடிப்படை இலக்கணத்திலிலிருந்து மிகச்சிறப்பாக நூல்கள் வெளியிட்டு வருகின்றன. தமிழில் அப்படி நூல்களைக் கொண்டுவர எந்தப் பல்கலைக்கழகமும் தீவிர முயற்சி எடுத்ததாகத் தெரியவில்லையே. சும்மா தமிழ் அழிந்து வருகிறது, சிதைந்து வருகிறது என்று புலம்பி என்ன பயன்?

ஆங்கில மொழியைத் தாய்மொழியாகக் கொள்ளாதோர் எளிதாகப் படித்து அறிவு பெற உலகெங்கும் பலவேறு முயற்சிகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதுபோன்று தமிழுக்கும் செய்யவேண்டும் என்பது நல்ல கருத்தே. பேராசிரியர் மா. நன்னன் இக்கருத்தில் எழுதியுள்ள நூல்கள் குறிப்பிடத்தக்கவை. "தமிழில் எழுதிப் பழக' எனும் தலைப்பில் நானும் நூல் ஒன்றை எழுதி உள்ளேன். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. 

வாழும் கவிஞர்களில் எழுதும் முறையிலும் கவிதை நுட்பத்திலும் தங்களை வியக்க வைத்த, விரும்ப வைத்த பத்துக் கவிஞர்களைப் பட்டியலிலிடமுடியுமா?

நான் விரும்பும் கவிஞர்கள் வரிசைப்பட: 1. மகாகவி பாரதியார் 2. பாரதிதாசன் 3. பேரரசு கண்ணதாசன் 4. மீரா 5. வைரமுத்து 6. சிற்பி 7. தங்களுடையவை 8. பெருஞ்சித்திரன் 9. வேலூர் நாராயணன் 10. செதார் செங்கோர்.

 தாங்கள் தேர்ந்த ஆய்வாளர். எதிர்காலத் தமிழ்க் கவிதை எப்படி இருக்கும்? எப்படி இருக்கவேண்டும் என்று கருதுகிறீர்கள்?

எதிர்காலத் தமிழ்க் கவிதை ஆண்- பெண் மோகம், காதல் ஆகிய பாடுபொருளில் இருந்து முற்று மாக விடுதலை பெறவேண்டும். பத்தாண்டு காலத்திற்குக் காதல் கருப்பொருள் பற்றி எழுதாமல் இருந்தாலும் இழப்பு ஒன்றுமில்லை. சமுதாயத்தை மீட்டெடுக்க சமுதாய அழுக்குகளைப் போக்க, நம் கவிஞர்கள் முழுக் கவனம் செலுத்தவேண்டும்.

மானுட இயல்துறையில் தங்களுக்கு நாட்டம் வந்த வரலாறு பற்றி சொல்லுங்கள்.

சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் 1970-ஆம் ஆண்டு துணைப் பேராசிரியராக இணைந்தேன். நன்னூலைப் பற்றி எம்.லிலிட். ஆய்வு செய்தேன். தொடர்ந்து சென்னைப் பல்கலைக்கழகத்திலேயே பகுதி நேர பிஎச்.டி. ஆய்வுக்கு இணைந்தேன். தலைப்பு தொல்காப்பிய உரையாசிரியர். என் நெறியாளராக இருந்தவர் அப்போதைய சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவர். அவர் சென்னைப் பல்கலைக்கழகத்திலேயே மானுட இயலில் டிப்ளமா பெற்று அக்கல்வியில் ஆர்வமுடையவராக இருந்தார். 

அவருடைய வழிப்படுத்தலுக்கு இணங்க நானும் சென்னைப் பல்கலைக்கழகம் மாலை நேரத்தில் நடத்தும் மானுட இயல் சான்றிதழ் வகுப்பில் இணைந்தேன். 

இதனை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் எனக்குக் கிடைத்த அயல்நாட்டுப் பல்கலைக்கழகப் பணியும் அமைந்தது. செனகால் நாட்டு டக்கார் பல்கலைக்கழகத்தில் ஆப்பிரிக்க கருப்பின மக்களைப் பற்றியும் தென்னிந்தியர்களைப் பற்றியும் அவர்தம் பழக்கவழக்கங்களைப் பற்றியும் ஒப்பிட்டு ஆராய்வதே என் பணி. 

விளைவாக நான் எழுதும் கட்டுரைகளும் வெளியிடும் நூல்களும் சமூக இயல், மானுட இயல் சார்ந்தே அமைந்தன. தொடர்ந்து இன்று வரை அக்கொள்கையையே பின்பற்றி வருகிறேன். இதன் பயனாகப் பலவேறு புதிய விளக்கங்கள் கிடைத்தன. ஒரு சான்று: தமிழர் சங்க காலம் முதல் தமிழ்ப் பேசும் மக்கள் என ஓரணியில் திரண்டு ஒன்றுபட்டு வாழ்வதைக் காட்டிலும் தம்முள் சேர, சோழ, பாண்டியர், வேளிர் என்று பல்வேறு பிரிவினராகப் பிரிந்து கிடந்தனர். தம்முள் போர் செய்துகொண்டே இருந்தனர். 

மானுட இயல் கொள்கையின்படி எந்தச் சமுதாயத்தில் தற்கொலைக்கான சூழல் கூடுதலாக உள்ளதோ அந்தச் சமுதாயம் ஒன்றுபட்டிராமல் பிரிந்து கிடக்கும். சமூகக் கட்டொருமைப்பாடு குறையக் குறைய அவ்வினத்தில் உள்ள மக்களுக்குப் பாதுகாப்பு உணர்வு குன்றி எளிதாக தற்கொலையை நாடுவர். சங்க காலம் முதல் இன்னபிற காலங்களிலும் தமிழ்ச் சமுதாயத்தில் தற்கொலை வரவேற்கப்படுவதும் மானத்தை வெளிப்படுத்துவதாகவும், தெய்வநிலைக்குக் கொண்டு செல்வதாகவும் கருதப்படுவது வழக்கம். இந்நிலையையும் சமூகக் கட்டொருமைப்பாட்டுக் கொள்கையையும் பொருத்தி விளக்கினேன்.  எமில் துர்கேம் எனும் ஃபிரென்ச் சமூக இயல் அறிஞர் இக்கொள்கையை விளக்கி 'சூசைட்' எனும் தலைப்பில் பெரிய நூல் ஒன்றை எழுதியிருக்கிறார். 

நானும் தமிழர் - தன்னம்பிக்கை -தற்கொலை எனும் நூல் ஒன்றும் எழுதினேன். இந்நூலுக்குப் பரிசும் கிடைத்தது.

உங்கள் வாழ்க்கைக் குறிக்கோள் வாசகமாக எதைக் குறிப்பிடுவீர்கள்?

முயன்று வரலாற்றைப் படித்தல் வேண்டும்!

முடிந்தால் வரலாற்றைப் படைத்தல் வேண்டும்!

இயன்றால் வரலாறாகவே வாழ்தல் வேண்டும்!

இவ்வாசகங்களைப் பலரும் எடுத்தாள்வதை அவர்களே கூறுகின்றனர்.

நேர்காணல் - சென்னிமலை தண்டபாணி


நன்றி - இனிய உதயம் 01 11 2013