13/11/2015

தமிழர்கள் நோக்கிலும் போக்கிலும் திருத்தம் வேண்டும் - முனைவர் க ப அறவாணன்

பேராசிரியர் க.ப. அறவாணர் உலகத் தமிழர்களுக்கெல்லாம் உறவானவர். வறுமை வயப்பட்ட சூழலிலில் பிறந்து, தன் கடும் உழைப்பால் ஒவ்வொரு நாளையும் திட்டமிட்டு வாழ்க்கையின் உச்சத்தில்போய் உட்கார்ந்திருப்பவர் .மானுடவியல், சமூகவியல் அடிப்படையில் தமிழ்ச் சமுதாயத்தை ஆய்வு செய்து வேறு எவரும் தொடநினைக்காத துறையில் ஆழங்கால் பட்டு நிற்பவர். எண்பது நாடுகளுக்குமேல் பயணித்து அம்மக்களின் வாழ்க்கையோடு தமிழர்களின் வாழ்க்கையை, பண்பாட்டை ஒப்பிட்டுப்பார்த்து உள்ளம் கசிந்து எழுதிக்கொண்டிருப்பவர். எளிமை, கடும் உழைப்பு, சிக்கனம், சகிப்புத்தன்மை, புதிது புதிதாய் ஆய்வு செய்தும், தொடர்ந்து படிப்பதும் படைப்பதுமாகத் தன் வாழ்க்கையைச் செதுக்கிக் கொண்டு, இளைய சமுதாயத்திற்கு  எடுத்துக்காட்டாக இயங்கிவருபவர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் நம் "இனிய உதயத்'துக்காகத் தந்த நேர்காணலில் ஒளிவுமறைவு இல்லாமல் வெடிப்புறப் பேசியிருக்கிறார்.

பூஜ்ஜியத்திலிலிருந்து வாழ்க்கையைத் தொடங்கியவர் நீங்கள். மிக வறுமை வயப்பட்ட சூழலிலிருந்து படிப்படியாக முன்னேறி உலகத் தமிழர்களிடம் எல்லாம் உறவாடும் நிலைக்கு உயர்ந்திருக்கிறீர்கள். சிறு விதையாய் இருந்த நீங்கள் எப்படி விருட்சமானீர்கள்? ஓடி விளையாடிய அந்தச் சிறு பருவத்தில் உங்களுக்குள் எதைத் தேடிக் கொண்டிருந்தீர்கள்?

நெல்லை மாவட்டம் கடலங்குடியில் பிறந்தவன் நான். படித்த குடும்பத்தில் வந்தவன் அல்லன் நான்; நல்லவேளையாக, உள்ளூரில் இருந்த அஞ்சாம் வகுப்பு வரை நடத்தப்பட்டுவந்த பஞ்சாயத்துப் பள்ளியில் என்னைச் சேர்த்துவிட்டார்கள். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை அங்குப் படித்தேன்.ஐந்தாம் வகுப்பு முடிந்தவுடன் வழக்கமாகப் படிப்பை நிறுத்தி விடுவதுதான் எங்கள் ஊர் வழக்கம். மாறாக, என்னை நான்கு மைல் தொலைவில் விஷ்ணுபுரம் என்ற ஊரில் இருந்த ஜார்ஜ் உயர்நிலைப் பள்ளியில் படிக்க வைத்தார்கள். அப்பள்ளியில் சேர்ந்து படித்தேன். ஏழாம் வகுப்பில் ஆங்கிலத்தில் தோற்றுப்போனேன். எட்டாம் வகுப்பு தாண்டி ஒன்பதாம் வகுப்புக்கு வரும்போது இரா. கந்தசாமி குருக்கள் என்ற ஆசிரியர் தமிழ்ப் பாடம் எடுத்தார். அவரே என்னை முன்னிலைப்படுத்தி ஏனைய தமிழ் வகுப்புகளில் என்னைப் பற்றிப் பேசினார். வகுப்புத் தேர்வில் முதல் மதிப்பெண் வாங்கும் நாட்களில் அவர் என் விடைத்தாளை வகுப்பில் காட்டுவார். என்னை எழுந்து நிற்கச் சொல்லுவார். இவ்வாறு அவர் கொடுத்த ஊக்கம் என் உள்ளுணர்வைத் தூண்டியது. அதனால், மிக நன்றாகத் தமிழ் படிக்கத் தொடங்கினேன். ஒன்பதாம் வகுப்பு முதல் பள்ளிப் படிப்பாகிய பதினோராம் வகுப்பு படிக்கும் வரை தமிழில் முதல் எண் பெறுவது என் வழக்கமாக இருந்தது. 

இருபத்தேழாம் வயதில் கல்லூரி முதல்வர், முப்பத்தேழாம் வயதில் அயல்நாட்டுப் பல்கலைக்கழகத்தில் ஐந்து ஆண்டுகள் பணி. கல்லூரி, பல்கலைக்கழகங்களில் துறைத் தலைவராகப் பதினேழு ஆண்டுகள் பணி. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் என்று  பல நிலைகளில் பரிணமித்திருக்கிறீர்கள். ஒன்றரை ஆண்டுகளில் உங்களின் முனைவர் பட்ட ஆய்வையே முடித்திருக்கிறீர்கள். அனைத்துமே உங்கள் திட்டமிடல்படிதான் நடந்தனவா?

பள்ளிப் பருவத்தில் நூல்கள் படிக்கும் பழக்கம் உண்டாயிற்று. எம்.ஆர். எம். அப்துற் றஹீம் என்பவர் எழுதிய வாழ்க்கை முன்னேற்றப் புத்தகங்களை மலேசியாவில் இருந்த என் மாமா திரு. இராமையா வாங்கிக் கொடுத்தார். அவற்றைப் படிக்கத் தொடங்கினேன். அப்துற் றஹீம் புத்தகங்களே என் மனதில் உயரவேண்டும் என்ற துடிப்பை ஆழமாக விதைத்தன. 

அதைத் தொடர்ந்து மு.வ. நூல்கள் எனக்கு அறிமுகமாயின. அந்நூல்கள் அனைத்தையும் படித்தேன். மு.வ.வின் வாழ்க்கையையும் படித்தேன். மு.வ.வைப்போல் நாமும் ஆகவேண்டும் என்ற எண்ணம் என் மனதில் தோன்றி கிளைக்கத் தொடங்கியது. 

சிறு வயதில் இராமகிருஷ்ண மடத்தோடு தொடர்புகொண்டிருந்த துறவி காசிநாதர், இராஜநாயகம் அடிகளார் போன்றோர் தங்கள் வாழ்வில் எப்படி ஒளியேற்றி வைத்தனர்? அதுபோலவே மூத்த தமிழறிஞர் வ.ஐ. சுப்ரமணியம் அவர்களிடம் தாங்கள் கற்றுக் கொண்டவை எவை?

சின்ன வயது முதலே என்னை உருவாக்கியவர் எங்கள் ஊர் கிழக்குத் தெருவில் இருந்த துறவி காசிநாதர் ஆவார். தம்பிக்குத் திருமணம் செய்வித்து, தான் மட்டும் துறவியாக வாழ்ந்தார் காசிநாதர். கோவிலடிமையோ, சாமி அடிமையோ அல்லர் அவர். முற்போக்குச் சிந்தனையாளர். அவரே விவேகானந்தர் நூலகம் என்ற ஒன்றை தான் இருக்கும் தெருவில் ஒரு கொட்டகை இட்டு அமைத்தார். பள்ளி சென்ற காலம் போக, எஞ்சிய நேரங்களில் நான் துறவி காசிநாதர் அவர்களோடும், அவர் உருவாக்கிய நூலகத்திலும் நேரத்தைச் செலவழித்தேன். இப்பழக்கம் பல நல்ல பழக்கங்களை இளம் வயதிலேயே ஊன்றிவிட்டது. 

கத்தோலிலிக்கத் துறவி ராஜநாயகம் அடிகளார் என்னை உயர்த்திவிட்ட பெரும் துறவி ஆவார். எம்.ஏ. முடித்த பிறகு வேலை பெறுவதற்காக நேர்முகத்தில் பங்கேற்க திருநெல்வேலிலி இந்துக் கல்லூரிக்குச் சென்றிருந்தேன். முதல் வகுப்பும் முதன்மையும் பெற்றிருந்த என்னை அவர்கள் தேர்ந்தெடுக்கவில்லை (1967). அதே ஊரில் தாமிரவருணி ஆற்றுக்குத் தெற்கே தூய சேவியர் கல்லூரி இருந்தது. இங்கு வந்த நான் அங்கும் சென்று முயல்வோமே என்று விண்ணப்பம் எழுதிக்கொண்டு என்னுடைய வெளியீடுகள், முதல் வகுப்புச் சான்றிதழ் ஆகியவற்றை இணைத்து அக்கல்லூரி முதல்வர் அலுவலகத்தில் சேர்ப்பித்துவிட்டு சென்னையிலிருந்த என் தங்கை வீட்டுக்குத் திரும்பிவிட்டேன். 

அடுத்த சில நாளில் ராஜநாயகம் அடிகளாரிடமிருந்து தந்தி வந்தது. அத்தந்தியில் நான் அக்கல்லூரி விரிவு ரையாளராக அமர்த்தப்பட்ட செய்தி என்னை மிக மகிழவைத்தது. அவர் இருந்த திசை நோக்கித் தொழுதேன். பாளையங்கோட்டை சென்று அக்கல்லூரி விரிவுரையாளராக இணைந்தேன். கத்தோலிலிக்க நிறுவனங்களில் பணியாற்றும் அரிய வாய்ப்பை அமைத்துக்கொடுத்தவர் ராஜநாயகம் அடிகளார்தான். 

என் மாணாக்கப் பருவத்தில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் வ.ஐ.சு. 

அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அதிசய குணங்கள் பல. பத்து மணிக்குத் தொடங்கும் கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைக்கு காலை 8.30 மணிக்கு வந்துவிடுவார். இரவு 8.30 மணி வரை அவர் துறையில் இருப்பார். அதிகம் பேசமாட்டார். 

எனக்கு எம்.ஏ. மொழியியல் திறனாய்வு வகுப்புகளை அவரே எடுத்தார். நாற்காலிலியில் அமர்ந்து வகுப்பெடுக்க மாட்டார். நின்றுகொண்டேதான் வகுப்பு எடுப்பார். கரும்பலகையை நன்கு பயன்படுத்துவார். அடிக்கடி தேர்வு வைப்பார். உடனே விடைத்தாளைத் திருத்தி மறுநாள் கொடுத்துவிடுவார். பல்கலைக்கழகத்திற்கு நான் சம்பளப் பணம் கட்டாமல் தண்டனைக்கு (ஃபைன்) ஆளாகும்போது அவரே பணத்தைக் கட்டிவிடுவார். நிறைய படிப்பார். எங்களுக்கு எம்.ஏ. வகுப்புகள் அவர் ஆங்கிலத்தில்தான் எடுத்தார். மிகமிகக் கண்டிப்பானவர்; நேர்மையானவர். 

பதினாறு வயதிற்குப்பின் உங்கள் உறவுகளை விட்டுத் தொலைவில் சென்றுவிட்டீர்கள். உங்களை வளர்த்துக்கொள் வதிலேயே முழுக் கவனத்தையும் செலுத்தியிருக் கிறீர்கள்... இதனால் என்ன பயன் கண்டீர்கள்? சொந்த வாழ்க்கையில் இது குறித்து உங்கள் மனதில் வருத்தம் ஏற்படவில்லையா?


பிறந்த குடும்பத்தை விட்டும் ஊரை விட்டும் பள்ளிக்கல்வி முடித்தவுடன் சென்றுவிட்டேன். சிதம்பரம் வாழ்க்கை, வேலை கிடைத்தவுடன் திருநெல்வேலிலி வாழ்க்கை, தொடர்ந்து சென்னை வாழ்க்கை. விடுமுறையில்கூட நான் பிறந்த ஊர் செல்வதில்லை. பிறந்த ஊர் பாதிப்பு, ஈர்ப்பு ஆகியன சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்ற ஓரிரு ஆண்டுகளிலேயே  எனக்கு நின்றுபோய்விட்டன. அம்மா, அப்பா, குடும்பம் ஆகியவற்றின் நினைவு எனக்கு வராத அளவிற்கு சிதம்பரத்திலேயே நான் தங்கியிருந்த வீட்டின் அம்மையார் திருமதி நாகரத்தினம் அம்மாள் என்னைப் பேரன்போடு கவனித்துக் கொண்டார். வேலைக்குப் போன பிறகு என் அப்பா, அம்மா மறைகிற வரை மாதம்தோறும் அவர்களுக்குப் பணம் அனுப்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். நான் வெளிநாடு சென்றிருந்த ஐந்தாண்டுகளிலும்கூட அவர்களுக்குத் தொடர்ந்து பணம் கிடைக்க ஏற்பாடு செய்திருந்தேன். என் சகோதரிகளுக்கும் என்னால் இயன்ற எல்லா உதவிகளையும் செய்தேன். என் கடைசி சகோதரி திருமதி வைரம் திருமணத்தை நானே முன்னின்று நடத்தி வைத்தேன். அவர் சில ஆண்டுகளுக்குமுன் மறைந்துவிட்டார். நான்கு சகோதரிகளோடும், மூன்று சகோதரர்களோடும் உடன்பிறந்தவன் நான். தற்போது மூத்த சகோதரி, நான் ஆகியோர் மட்டும்தான் எஞ்சியுள்ளோம். 

ஒவ்வொரு நாளையும் திட்ட மிட்டுப் பயன்படுத்தியிருக்கிறீர்கள். '"பேசுவதைக் குறை முடிந்தால் நிறுத்து' என்பதில் உறுதியா யிருந்தி ருக்கிறீர்கள். விடுப்பெடுக்காமலேயே பணிபுரிந்திருக்கிறீர்கள். கோடை விடுமுறையை நூல்கள் எழுதப் பயன்படுத்தி இருக்கிறீர்கள்... தாங்கள் எழுதிய முதல் நூல் எது? எப்படி எழுதினீர்கள்?

நான் பணியாற்றும் இடங்களில் அளிக்கப்பட்டிருக்கிற விடுமுறையைக்கூட நான் எடுப்பதில்லை. எடுக்கக்கூடாது என்பதைக் கொள்கை யாக வைத்திருந்தேன். சென்னை லயோலா கல்லூரியில் எனது விடுமுறை எடுக்காத இந்தப் பழக்கத்திற்காக ஆண்டுதோறும் கல்லூரி விழாவில் மேடையேற்றி சிறப்பளித்து பணமும் அன்பளிப்பாகக் கொடுத்தார்கள். துணைவேந்தராக இருந்தபோதும் நான் விடுமுறை எடுக்கவில்லை. அறுவை மருத்துவத்திற்காக எடுத்த விடுமுறை தவிர. எப்போதும் படித்துக் கொண்டிருப்பதும், எழுதிக்கொண்டிருப்பதும் என் வழக்கம். விடுமுறை நாட்களில் படிப்பதும் எழுதுவதும் இருமடங்காக இருக்கும். பல நூல்களை விடுமுறையிலேயே நான் எழுதிமுடித்தேன். 

"பொறுத்துப்போ, புறக்கணி, கடந்துபோ' என்பதுதான் உங்கள் வெற்றியின் மந்திரமாய் இருக்கிறது... இதைப்பற்றி கொஞ்சம் குறிப்பிட முடியுமா?

கீழ்மட்டத்தில் இருந்து துணைவேந்தர் பொறுப்பு என்ற உச்ச நிலை வரை வந்த நான், சந்தித்த இடையூறு களை அவற்றைக் கடந்த விதங்களை அடுத்த தலைமுறைக்கு விட்டுப்போக நினைத்தேன். எனக்கு உதவி செய்தவர்களின் பெயர்களையும் பதிவு செய்ய விரும்பி னேன். அதன்விளைவாக எழுதப்பட்ட நூல்கள்தான் "பொறு, புறக்கணி, புறப்படு' என்ற நூலும், "அனுபவங்கள் பேசுகின்றன' என்ற நூலும் ஆகும். 

தாங்கள் எழுதிய நூல்களுக்குப் பல பரிசுகள் கிடைத்திருக்கின்றன. ஒருமுறை தாங்கள் எழுதிய இரண்டு நூல்களுக்குத் தமிழக அரசின் பரிசு கிடைக்கவிருந்தும் ஒரு நூலுக்குத்தான் பரிசு வழங்கப்பட்டது. மழுப்பலான காரணங்களால் ஒரு நூலுக்குப் பரிசு கிட்டாமல் போனது... தங்கள் மனநிலை அப்பொழுது எப்படி இருந்தது? தகுதியை மதிக்கத் தெரியாத பேர்வழிகள் என்று ஒதுக்கிவிட்டீர்களா?

என் வாழ்க்கை வெற்றியில் உதவிய சான்றோர்கள் பலர். ஊறு செய்தோர் சிலர். ஊறு பற்றிக் கேள்விப்படும்பொழுது சில மணி நேரம் கவலைப் படுவதோடு சரி, என்னுடைய கொள்கையான "ஓவர்டேக்' என்ற அடுத்த கட்டத்திற்குப் போய்விடுவேன். 

தமிழர்களின் வாழ்க்கையில் எத்தகைய மாற்றம் வேண்டியிருக்கிறது என்று கருதுகிறீர்கள்?

தமிழர் வாழ்க்கையில் நிறைய மாற்றங்களைச் செய்யவேண்டி இருக்கிறது. தமிழர்- அமெரிக்கர், ஐரோப்பியர், ஜப்பானியர் கண்டுபிடித்த பொருள்களை நுகரக் கற்றுகொண்டிருக்கிறார்களே தவிர, அவற்றைக் கண்டுபிடிக்க அந்த மக்கள் செய்த உழைப்பைக் கடைப்பிடிப்பதில்லை. சான்றாக, சாலை விதிகளை மிக அருமையாகப் பிடிவாதமாகக் கடைப்பிடிப்பார்கள். அலுவலகக் கடிதங்களுக்கு உடனுக்குடன் பதில் வரும். செனகால் குடியரசுத் தலைவருக்கு நான் எழுதிய கடிதங்களுக்கு அதே நாள் மாலைகூட விடை மடலும் வந்ததுண்டு. மாறாகபுறங்கூறும் பழக்கம் தமிழர்களிடம் மிக மிகுதி. பொய் சொல்வதிலும் ஒன்றை மிகைப்படுத்திப் பேசுவதிலும் தமிழர்கள் முன்னணியில் இருக்கிறார்கள். தமிழர்கள் நோக்கிலும் போக்கிலும் திருத்தம் வேண்டும். காலம் தவறாமையில் அயல்நாட்டார் உறுதியானவர்கள். குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ச்சி தொடங்கும். நிகழ்ச்சி முடியும். சினிமாவுக்கு முக்கியத்துவமே கொடுக்க மாட்டார்கள். பெரும்பாலும் திரையரங்குகள் காலிலியாக இருக்கும். தமிழரிடம்,. முதலமைச்சராக வரும் அளவிற்கு நடிக, நடிகையருக்குச் செல்வாக்கு இருப்பதுபோல எந்த நாட்டிலும் செல்வாக்கு இல்லை. 

தமிழ் இலக்கிய வரலாற்றைப் பலர் எழுதியிருக்கிறார்கள். தாங்களோ தமிழ் மக்களுடைய வரலாற்றை கால வரிசைப்படி எழுதிக்கொண்டிருக் கிறீர்கள். இந்த எண்ணம் எப்படி எழுந்தது? இதற்குரிய தரவுகளை எப்படித் திரட்டினீர்கள்? ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழர் வாழ்வில் ஏற்பட்ட... ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் என்று எவற்றைக் கருதுகிறீர்கள்?

செனகால் டக்கார் பல்கலைக்கழகத்தில் நான் மானுட இயல் ஆராய்ச்சியாளராக அமர்த்தப்பெற்றேன். திராவிடர்களுக்கும் கறுப்பு ஆப்பிரிக்கர்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளைக் கண்டறிந்து விளக்குவது எனக்கு இட்ட பணி. பணி ஏற்பதற்கு முன்பு சென்னைப் பல்கலைக்கழகத்தில் மானுட இயல் சான்றிதழ் வகுப்பை நான் முடித்திருந்தேன். என் ஆராய்ச்சிக்கு அந்தக் கல்வி போதாமையால், அயல்நாட்டில் பொறுப்பேற்ற தொடக்க காலங்களில் சமூக இயல் நூல்களையும் மானுட இயல் நூல்களையும் அடிப்படையாக இருப்பவற்றை வாங்கி மீண்டும் மீண்டும் படித்தேன். அவற்றை அடியொற்றித்தான் ஐந்தாண்டு அங்கே நிகழ்ந்த என் ஆராய்ச்சியும் அக்காலத்தில் எழுதப்பட்ட கட்டுரைகளும் நூல்களும் அமைந்தன. 1982-ல் தாயகம் திரும்பி தொடர்ந்து லயோலா கல்லூரி தமிழ்த் துறைத் தலைவராகப் பொறுப்பேற்ற பின் தொடர்ந்து எழுதவேண்டும் என்று முடிவு செய்தேன். இலக்கணங்கள் பற்றியும், இலக்கியங்கள் பற்றியும் எழுதுவதைவிட, அயல்நாட்டில் கற்ற சமூக இயல், மானுட இயலை அடிப்படையாக வைத்து நூல் எழுத விரும்பினேன். தமிழரைப் பொறுத்த அளவு, அதுவரை ஏன் இன்றுவரைகூட தமிழருடைய அரசியல் வரலாறு எழுதப்பட்டிருக்கும் அளவுக்குத் தமிழ்ச் சமுதாய வரலாறு எழுதப்படவில்லை. எனவே, தமிழ்ச் சமுதாய வரலாற்றை எழுதுவது என்று முடிவெடுத்தேன். அதற்கு முன்மாதிரியாக, ஆங்கிலத்தில் வெளிவந்த ´Trevelyon For Social History of England என்ற நூலைப் பெற்று ஒரு முறைக்குப் பலமுறை அந்த நூலைக் கற்றேன். அந்நூலை அடிப்படையாக வைத்தே தமிழ்ச் சமுதாய வரலாற்றை எழுதத் தொடங்கினேன். 

இதுவரை தொல் தமிழர் காலம் தொடங்கி, நாயக்கர் காலம்வரை ஏழு தொகுதிகளை எழுதி முடித்துத் தற்போது ஐரோப்பியர் காலம் பற்றி எழுதத் தொடங்கியுள்ளேன். 

தமிழர் நிலை மாறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கருதுகிறீர்கள்?

 தமிழ்ச் சமுதாயத்தில் சிறுமதி படைத்தோரின் பழிகளையும் குறுக்கீடுகளையும் பொருட்படுத்தக்கூடாது. நம் அடிப்படைப் பண்பாட்டை மாற்றினால் ஒழிய, இவற்றைத் தவிர்த்துவிட முடியாது. தமிழர்கள் அடிப்படைப் பண்பாடு இல்லாதவர்கள் என்பதுதான் சமூக இயல் கற்ற என்னுடைய முடிவாகும். நாம் பின்பற்றும் இந்திய அரசியல், இந்திய நீதி முறை, தண்டனை முறை தற்போதைய தமிழரின் போக்கை மாற்றிவிட முடியாது. மேலும் கூட்டவே செய்யும். இந்தியா, சீனா மாதிரிக்கு மாறினால் மாற்றங்கள் ஏற்பட வழி உண்டு. நம் முன்னோர் இந்திய சுதேசியம் பேசிக் கொண்டிருந்தார்கள். அரசியல் சாசனத்தை வகுக்கிறபொழுது அப்படியே இங்கிலாந்து மாடலைக் காப்பியடித்தார்கள். நூற்றுக்கு நூறு படித்த பண்பாடு உடைய குறைந்த மக்கள் தொகையுடைய இங்கிலாந்து மக்களுக்காக அமைக்கப்பட்ட சட்டதிட்டம், நீதிமுறை, அரசு முறை, கட்சி ஆட்சி முறை இந்தியா விற்குப் பொருந்தவே பொருந்தாது. இந்திய மக்கள் தொண்ணூறு விழுக்காடு படிக்காதவர்கள் (1947). 85 விழுக்காடு பண்பாடு குறைந்தவர்கள் 60 விழுக்காடு பரம ஏழைகள். அனைத்திற்கும் சமயங்களையும் கோவில்களையும் விதியையும் நம்பிக்கொண்டிருப்பவர்கள். இவர்களிடையே இங்கிலாந்து சட்டதிட்டம் எடுபடவே படாது. 

 கல்கத்தா தமிழ்ச்சங்கத்தில் பேசிய தொடர் பேச்சினைப் பல ஆண்டுகளுக்கு முன்னரே "கவிதையின் உயிர் உள்ளம் உடல்' என்ற தலைப்பில் அருமையான நூலாக்கினீர்கள். "கவிதை கிழக்கும் மேற்கும்' என்ற தலைப்பில் மேலைக் கவிஞர்களின் கவிதை குறித்தும் எழுதியிருக்கிறீர்கள். கவிதை படைப்பதில் ஆர்வம் காட்டாமல் ஆய்வு நெறியிலேயே சென்றுவிட்டீர்கள்... என்ன காரணம்?

என்னுடைய முதல் நூல் கவிதை நூல்தான். அச்சிறு நூலிலின் பெயர் "ஒளி பரவட்டும்' என்பது. தொடர்ந்து என் வாழ்க்கை ஆராய்ச்சி செய்வது என்று அமைந்துவிட்டமையால், கவிதை படைப்பது நின்றுவிட்டது. 

"அற இலக்கியக் களஞ்சியம்' என்று மிகப்பெரிய தொகுப்பு நூலை வெளியிட்டு வியக்க வைத்தீர்கள்... இந்தத் தொகுப்புக்கு எத்தனை ஆண்டு உழைப்பு தேவைப்பட்டது. தமிழர்களிடம் அதற்குக் கிட்டிய வரவேற்பு எப்படி?

துணைவேந்தராக இருந்து ஓய்வு பெற்ற 2001-ல் ஏதேனும் தமிழுக்குப் பயனுள்ள நிலையான, வேலை செய்யவேண்டும் என்று தீர ஆலோசித்தேன். 

அதன்விளைவே, "அற இலக்கியக் களஞ்சியம்' எனும் பாரிய நூல். அந்த நூலுக்காக ஏழாண்டுகள் தொடர்ந்து உழைத்தேன். உழைப்பு வீண் போகவில்லை. நல்ல வரவேற்பு. ஆயிரம் ரூபாய் விலையுள்ள அந்நூலிலின் முதல் பதிப்பு விற்று இரண்டாம் பதிப்பு வந்துவிட்டது. தொடர்ந்து நிலையான வரவேற்பு அந்த நூலுக்குக் கிடைக்கும்;. கிடைக்கிறது.

உங்கள் கண்ணோட்டத்தில் திருவள்ளுவம் நூல் படைத்தீர்கள். அதற்குச் சில பேராசிரியர்கள்கூட எதிர்ப்புக் கிளப்பினார்கள். ஒரு படைப்பை மறுவாசிப்பு செய்வதோ இன்றைய காலகட்டத் திற்கு ஏற்ப கருத்துச் சொல்வதோ கூடாது என்பது சரியான நிலைப்பாடா?

திருவள்ளுவம் நூல் பற்றி சிலர் குறிப்பாக, மதுரையில் எதிர்ப்புக் குரல் எழுப்பினார்கள். சிற்றேடுகளில் எழுதினார்கள். வியப்பு என்னவென்றால் முதற்பதிப்பு விற்று இரண்டாம் பதிப்பு வந்துவிட்டது. மூன்றாம் பதிப்பை எதிர்நோக்கிக் கொண்டுள்ளது. புதிதாகச் சிந்திப்போரிடமிருந்து அந்த நூலுக்கு நல்ல வரவேற்பு. 

தாங்கள் சிறுகதைகளையும் எழுதி யிருக்கிறீர்கள். "கண்ணீரில் எழுதிய கதைகள்' என்ற தலைப்பிலும் நூலாக வெளிவந்திருக்கிறது. அதைப் பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா?

என்னுடைய எழுத்துப்பயணம் சிறுகதைப் படைப்பிலேயே தொடங்கியது. பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபொழுது மதுரைத் திருவள்ளுவர் கழகத் தலைவர் ஐயா கி. பழனியப்பன் (பழ. நெடுமாறன் தந்தையார்) சிறுகதைப் போட்டி ஒன்றை பள்ளி மாணவர்களுக்கு என வைத்திருந்தார்கள். அப் போட்டியில் நான் கலந்துகொண்டேன். என்னுடைய கதைக்குப் பரிசு அளிக்கப்பட்டது. ரூபாய் 40 அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இதுவரை நான் எழுதி பின்வரும் தலைப்புகளில் உள்ள சிறுகதை நூல்கள் வெளிவந்துள்ளன.

"அவள் அவன் அது', "தென்னைமரத் தீவுகளும் தீவோர மனிதர்களும். செதுக்காத  சிற்பங்கள்', "சொல்ல முடிந்த சோகங்கள்', "நல்லவங்க இன்னும்' இருக்காங்க', "கண்ணீரில் மிதக்கும் கதைகள்'.

இத்தனை காலமாக எவருமே தொல் காப்பியத்தை எளிய மக்கள் படித்துப் புரிந்து கொள்ளும்படி உரை எழுதவில்லையே. வெளி வந்திருக்கும் சில உரைநூல்களும் தமிழாசிரியர்கள் படிப்பதற்கேற்றவையாக உள்ளனவே தவிர மக்களிடம் சென்று சேரத்தக்கவையாக இல்லையே... இதற்கு என்ன வழி?


நல்ல கருத்து. தொல்காப்பியத்திற்கு அறிஞர் சிலர் எளிய உரை வரைந்துள்ளனர். என் பேராசிரியர் அறிஞர் ச.வே. சுப்பிரமணியம் எளிய உரை எழுதியுள்ளார்கள். என்.பி,எச்.டி. ஆராய்ச்சிப் பொருள் தொல்காப்பியமாக இருந்ததாலும், தொல்காப்பியக் களஞ்சியம் என்ற பெரிய நூலை வெளியிட்டதாலும் தொல்காப்பியத்திற்கு உரை எழுதுவது பயனுள்ளதாக இருக்கும். தற்போதைய என் வேலைத்திட்டம் தமிழ்ச் சமுதாய வரலாற்றை எழுதி நிறைவுசெய்வது. எட்டாவது தொகுதியாக ஐரோப்பியர் வரலாறு நிறைவுற்றுள்ளது. தொடர்ந்து தற்காலம் என ஒரு தொகுதி எழுதுவது பற்றி யோசித்து வருகிறேன். இப்பணி முடிந்தபின் தாங்கள் சொல்லும் தொல்காப்பிய உரை எழுதுதல் பற்றிச் சிந்திப்பேன்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் போன்றவை ஆங்கிலத்தை மிக எளிதாகக் கற்பதற்கு அடிப்படை இலக்கணத்திலிலிருந்து மிகச்சிறப்பாக நூல்கள் வெளியிட்டு வருகின்றன. தமிழில் அப்படி நூல்களைக் கொண்டுவர எந்தப் பல்கலைக்கழகமும் தீவிர முயற்சி எடுத்ததாகத் தெரியவில்லையே. சும்மா தமிழ் அழிந்து வருகிறது, சிதைந்து வருகிறது என்று புலம்பி என்ன பயன்?

ஆங்கில மொழியைத் தாய்மொழியாகக் கொள்ளாதோர் எளிதாகப் படித்து அறிவு பெற உலகெங்கும் பலவேறு முயற்சிகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதுபோன்று தமிழுக்கும் செய்யவேண்டும் என்பது நல்ல கருத்தே. பேராசிரியர் மா. நன்னன் இக்கருத்தில் எழுதியுள்ள நூல்கள் குறிப்பிடத்தக்கவை. "தமிழில் எழுதிப் பழக' எனும் தலைப்பில் நானும் நூல் ஒன்றை எழுதி உள்ளேன். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. 

வாழும் கவிஞர்களில் எழுதும் முறையிலும் கவிதை நுட்பத்திலும் தங்களை வியக்க வைத்த, விரும்ப வைத்த பத்துக் கவிஞர்களைப் பட்டியலிலிடமுடியுமா?

நான் விரும்பும் கவிஞர்கள் வரிசைப்பட: 1. மகாகவி பாரதியார் 2. பாரதிதாசன் 3. பேரரசு கண்ணதாசன் 4. மீரா 5. வைரமுத்து 6. சிற்பி 7. தங்களுடையவை 8. பெருஞ்சித்திரன் 9. வேலூர் நாராயணன் 10. செதார் செங்கோர்.

 தாங்கள் தேர்ந்த ஆய்வாளர். எதிர்காலத் தமிழ்க் கவிதை எப்படி இருக்கும்? எப்படி இருக்கவேண்டும் என்று கருதுகிறீர்கள்?

எதிர்காலத் தமிழ்க் கவிதை ஆண்- பெண் மோகம், காதல் ஆகிய பாடுபொருளில் இருந்து முற்று மாக விடுதலை பெறவேண்டும். பத்தாண்டு காலத்திற்குக் காதல் கருப்பொருள் பற்றி எழுதாமல் இருந்தாலும் இழப்பு ஒன்றுமில்லை. சமுதாயத்தை மீட்டெடுக்க சமுதாய அழுக்குகளைப் போக்க, நம் கவிஞர்கள் முழுக் கவனம் செலுத்தவேண்டும்.

மானுட இயல்துறையில் தங்களுக்கு நாட்டம் வந்த வரலாறு பற்றி சொல்லுங்கள்.

சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் 1970-ஆம் ஆண்டு துணைப் பேராசிரியராக இணைந்தேன். நன்னூலைப் பற்றி எம்.லிலிட். ஆய்வு செய்தேன். தொடர்ந்து சென்னைப் பல்கலைக்கழகத்திலேயே பகுதி நேர பிஎச்.டி. ஆய்வுக்கு இணைந்தேன். தலைப்பு தொல்காப்பிய உரையாசிரியர். என் நெறியாளராக இருந்தவர் அப்போதைய சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவர். அவர் சென்னைப் பல்கலைக்கழகத்திலேயே மானுட இயலில் டிப்ளமா பெற்று அக்கல்வியில் ஆர்வமுடையவராக இருந்தார். 

அவருடைய வழிப்படுத்தலுக்கு இணங்க நானும் சென்னைப் பல்கலைக்கழகம் மாலை நேரத்தில் நடத்தும் மானுட இயல் சான்றிதழ் வகுப்பில் இணைந்தேன். 

இதனை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் எனக்குக் கிடைத்த அயல்நாட்டுப் பல்கலைக்கழகப் பணியும் அமைந்தது. செனகால் நாட்டு டக்கார் பல்கலைக்கழகத்தில் ஆப்பிரிக்க கருப்பின மக்களைப் பற்றியும் தென்னிந்தியர்களைப் பற்றியும் அவர்தம் பழக்கவழக்கங்களைப் பற்றியும் ஒப்பிட்டு ஆராய்வதே என் பணி. 

விளைவாக நான் எழுதும் கட்டுரைகளும் வெளியிடும் நூல்களும் சமூக இயல், மானுட இயல் சார்ந்தே அமைந்தன. தொடர்ந்து இன்று வரை அக்கொள்கையையே பின்பற்றி வருகிறேன். இதன் பயனாகப் பலவேறு புதிய விளக்கங்கள் கிடைத்தன. ஒரு சான்று: தமிழர் சங்க காலம் முதல் தமிழ்ப் பேசும் மக்கள் என ஓரணியில் திரண்டு ஒன்றுபட்டு வாழ்வதைக் காட்டிலும் தம்முள் சேர, சோழ, பாண்டியர், வேளிர் என்று பல்வேறு பிரிவினராகப் பிரிந்து கிடந்தனர். தம்முள் போர் செய்துகொண்டே இருந்தனர். 

மானுட இயல் கொள்கையின்படி எந்தச் சமுதாயத்தில் தற்கொலைக்கான சூழல் கூடுதலாக உள்ளதோ அந்தச் சமுதாயம் ஒன்றுபட்டிராமல் பிரிந்து கிடக்கும். சமூகக் கட்டொருமைப்பாடு குறையக் குறைய அவ்வினத்தில் உள்ள மக்களுக்குப் பாதுகாப்பு உணர்வு குன்றி எளிதாக தற்கொலையை நாடுவர். சங்க காலம் முதல் இன்னபிற காலங்களிலும் தமிழ்ச் சமுதாயத்தில் தற்கொலை வரவேற்கப்படுவதும் மானத்தை வெளிப்படுத்துவதாகவும், தெய்வநிலைக்குக் கொண்டு செல்வதாகவும் கருதப்படுவது வழக்கம். இந்நிலையையும் சமூகக் கட்டொருமைப்பாட்டுக் கொள்கையையும் பொருத்தி விளக்கினேன்.  எமில் துர்கேம் எனும் ஃபிரென்ச் சமூக இயல் அறிஞர் இக்கொள்கையை விளக்கி 'சூசைட்' எனும் தலைப்பில் பெரிய நூல் ஒன்றை எழுதியிருக்கிறார். 

நானும் தமிழர் - தன்னம்பிக்கை -தற்கொலை எனும் நூல் ஒன்றும் எழுதினேன். இந்நூலுக்குப் பரிசும் கிடைத்தது.

உங்கள் வாழ்க்கைக் குறிக்கோள் வாசகமாக எதைக் குறிப்பிடுவீர்கள்?

முயன்று வரலாற்றைப் படித்தல் வேண்டும்!

முடிந்தால் வரலாற்றைப் படைத்தல் வேண்டும்!

இயன்றால் வரலாறாகவே வாழ்தல் வேண்டும்!

இவ்வாசகங்களைப் பலரும் எடுத்தாள்வதை அவர்களே கூறுகின்றனர்.

நேர்காணல் - சென்னிமலை தண்டபாணி


நன்றி - இனிய உதயம் 01 11 2013

கருத்துகள் இல்லை: