21/09/2014

சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 7

கடந்த ஆறு வாரமாக நடக்கும் சொல் வேட்டை, பல பாடங்களை நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது. அவற்றில் ஒன்று, எங்கெங்கோ தமிழ் ஆர்வலர்களும், தமிழ் அறிஞர்களும் குடத்தில் இட்ட விளக்கு போல், முகவரி தெரியாமல் தங்களை ஒடுக்கிக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே. சொல் வேட்டையின் மூலம் புதுச்சொற்களைப் போலவே, அவ்வறிஞர்களும் வெளிக்கொணரப் பட்டால், அது நமக்கு மிகப் பெரிய மகிழ்வைத் தரும். எனவே, சொல் வேட்டையை வாரந்தோறும் படித்து மகிழ்ந்த அல்லது படித்த பின் மாற்றுக் கருத்து கொண்ட அனைவரும், தங்களது கருத்துகளைப் பதிவு செய்ய ஒரு மேடையாகவோ, மன்றமாகவோ இத்தொடரைப் பயன்படுத்திக் கொண்டால், அது அவர்கள் செய்யும் மிகப் பெரிய தொண்டாக அமையும். ஆகவே, வாரந்தோறும் தொடர்ந்து நம்மோடு களத்தில் இறங்கும் வாசகர்களைப் போலவே, இன்னும் பலரும் நம்மோடு பயணிக்க வேண்டும் என்ற வேண்டுகோளோடு, இந்தவார வேட்டைக்கு வருவோம்.

ஆங்கிலச்சொல் அகராதிகளின் படி, "இன்புட்' என்ற சொல் இரு சொற்களின் கூட்டுச் சேர்க்கை ஆகும். எனவே, அச்சொல் உள்ளே செலுத்தப்படும் அல்லது கொடுக்கப்படும் பொருளையும் குறிக்கலாம் அல்லது கொடுப்பதான செய்கையையும் குறிக்கலாம். இவை தவிர, ஒருவர் மற்றவர்க்கு வழங்கும் கருத்துகளையும், ஆலோசனைகளையும், செய்திகளையும் கூட அச்சொல்லால் குறிக்கலாம். அதேபோல் "அவுட்புட்' என்ற சொல்லும் இரு சொற்களின் சேர்க்கையே. அச்சொல்லும் ஒன்றிலிருந்து வெளியேற்றப்படும் பொருளையோ, அதன் அளவையோ குறிக்கலாம், வெளியேற்றுவதான செய்கையையும் குறிக்கலாம். கணினி மயமாகிவிட்ட இவ்வுலகில், அச்சொல் செய்தித் தொகுப்புகளின் பரிமாற்றத்தையும் குறிக்கலாம். இவற்றைக் கருத்தில் கொண்டு, இந்தவாரக் கடிதங்களைப் பார்ப்போம்.

 தாராபுரத்திலிருந்து பல் மருத்துவர் கந்தவேள், "உட்படுதல் - வெளிப்படுத்துதல் அல்லது உள்ளாக்குதல் - வெளியிடுதல்' என்னும் சொற்களை எழுதியிருக்கிறார். காஞ்சிபுரத்திலிருந்து டி.சிவா, இன்புட்-அவுட்புட் சொற்களை மருத்துவத்தோடு பொருத்திப் பார்த்து "இன்புட்' என்பதற்கு "அகஞ்சேரல்' அல்லது "உள்வாங்கல்' என்றும், "அவுட்புட்' என்பதற்கு "புறந்தள்ளல்' அல்லது "வெளியேற்றல்' என்றும் குறிக்கலாம் என்று பரிந்துரைக்கிறார்.

சென்னை உள்ளகரத்திலிருந்து வி.ந.ஸ்ரீதரன், "உள்ளீர்ப்பு, வெளிக்கொணர்வு' என்னும் சொற்களைப் பரிந்துரைக்கிறார். புலவர் அடியன் மணிவாசகன், "இன்புட்' என்ற சொல் பெயர்ச்சொல்லாகவும், வினைச்சொல்லாகவும் பயன்படுத்தப்படும் காரணத்தால், "அகநிகழ்வு' என்று கூறலாம் என்றும், அதே போல் "அவுட்புட்' என்பதை "புறநிகழ்வு' என்று குறிப்பிடலாம் என்றும் சொல்கிறார்.

வேலூரிலிருந்து புலவர் அரு.சுந்தரேசன், பொருளியல் மற்றும் வணிகத்தின் அடிப்படையில் "முதலீடு-வருவாய்' என்ற சொற்றொடரைப் பயன்படுத்தலாம் என்கிறார். பேராசிரியர் க.பாஸ்கரன், "அகபங்களிப்பு-புறவிளைவு' என்னும் சொற்களையும் பயன்படுத்தலாம் என்கிறார்.

ஆலந்தூர் புலவர் இரா.இராமமூர்த்தி, இன்புட், அவுட்புட் என்னும் சொற்கள் அறிவியல், மின்சாரம், கணினி சார்ந்த சொற்களாக இருப்பதால், இவற்றிற்கு "ஆகாறு - போகாறு, உள்ளீடு - வெளியீடு, உள்ளிறக்கம் - வெளியேற்றம், பெறுதல் - வழங்குதல், தரவு - விளைவு' என்னும் பல்வேறு சொற்களைக் காட்டுகிறார்.

அண்ணா நகரிலிருந்து திரு.ஆனந்தகிருஷ்ணன், உள்ளீடு மற்றும் வெளியீடு என்பவை எல்லோராலும் அறியப்பட்ட சொற்களாக இருப்பதாலும், கருவிகள் மற்றும் இயந்திரங்களின் உற்பத்தியிலும், தொழில்துறையிலும், புழக்கத்தில் இருப்பதாலும் இச்சொற்களைப் பயன்படுத்தலாம் என்கிறார்.

திருச்சி தி.அன்பழகன், தொழில்துறை சார்ந்தும், கணினி சார்ந்தும் இச்சொற்களுக்கு இணைச்சொற்களைக் காண வேண்டுமென்றும், அதனால் இன்புட்-அவுட்புட் என்பதை "உள்ளுட்டம்-வெளிவாட்டம்' என்று அழைக்கலாம் என்றும் கூறுகிறார்.

புதுச்சேரி தே.முருகசாமி, சிலப்பதிகாரத்தில் பொற்கொல்லன் சிலம்பை ஆய்ந்த நிலையைக் கருதி இன்புட்-அவுட்புட் ஆகிய சொற்களுக்கு "அகவேலைப்பாடு, புறவேலைப்பாடு' என்பவை பொருத்தமாகும் என்கிறார். கடலூர் என்.ஆர்.சத்தியமூர்த்தி, "இடுவன-தருவன' என்ற சொற்களைத் தந்திருக்கிறார்.

அச்சொற்களுள் "இடுவன-தருவன' என்ற சொற்கள் பொருள் நயமும், ஓசை நயமும் மிக்கவையாக அமைந்திருந்தாலும், அவை "இடுகின்ற-தருகின்ற' பொருளைக் குறிக்குமேயன்றி, "இடுகின்ற-தருகின்ற' செயல்களைக் குறிக்குமா என்பது ஐயமாக இருக்கிறது. தரவு, விளைவு என்ற சொற்கள் கற்றோர் மனதைக் கவரும் வகையில் இருந்தாலும், உள்ளீடு-வெளியீடு என்ற சொற்கள் புழக்கத்தில் வருவதற்கு எளிமையாக இருக்கும் என்ற காரணத்தால் அச்சொற்களைப் பயன்படுத்துவதே சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்.

சொல் வேட்டை தொடரும்…

நன்றி - தமிழ்மணி 23 12 12

சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 6

சொல் விளையாட்டு ஒரு சுவையான விளையாட்டே. ஒரே சொல்லுக்கு பல்வேறு பொருள்களும் ஒரே பொருளைக் குறிக்கும் பல்வேறு சொற்களும் நமது அன்னைத் தமிழில் இருப்பது போலவே ஆங்கிலத்திலும் உண்டு. "ஆப்ஜக்ட்' என்ற சொல் ஒரு பொருளையும் குறிக்கலாம். ஒரு இலக்கையும் குறிக்கலாம். அதே போல் "சப்ஜக்ட்' என்பது ஒரு பொருளை அறியும் அல்லது உணரும் ஒன்றையும் குறிக்கலாம். அதே சமயம் ஒரு கூட்டத்திலோ, ஓர் அவையிலோ, விவாதிக்கப்படும் பொருளையும் குறிக்கலாம். எனவே சில சமயங்களில் இவ்விரு சொற்களுமே ஒரே பொருளில் பயன்படுத்தப்படலாம். சில நேரங்களில் ஒன்றுக்கொன்று அப்பாற்பட்ட (எதிர்மறையாகக் கூட) பயன்படுத்தப்படலாம்.

ஆனால் இவ்விரு சொற்களும் அப்ஜக்டிவ்-சப்ஜக்டிவ் என்ற குறிப்பிட்ட வரையறையில் பயன்படுத்தப்படும் போது, இலக்கு, பொருள் போன்றவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டு மனம்சார்ந்த குறியீடுகளாக இச்சொற்கள் மாறிவிடுகின்றன. இந்த நுணுக்கத்தின் அடிப்படையில் இந்தவாரக் கடிதங்களைப் பார்ப்போம்.

புலவர் அடியன் மணிவாசகன் சப்ஜக்டிவ் என்பதை வினைமுதல் என்றும், அப்ஜக்டிவ் என்பதை "எதிர்மறை பொருள்' என்றும் சென்னை பல்கலைகழக அகரமுதலியை அடிப்படையாக வைத்தும், ஆனால் அதிலிருந்து கொஞ்சம் மாறுபட்டும் எழுதியிருக்கிறார்.

வேலூரிலிருந்து புலவர் அரு.சுந்தரேசன், சப்ஜக்டிவ் என்பது "மனதில் தூண்டுதல் இல்லாமல் எழுகிற எண்ணம்' என்றும், அப்ஜக்டிவ்  என்பது "நோக்கம், இலக்கு' என்கிற பொருளிலேயும் குறிக்கப்படுவதால் இவ்விரு சொற்களையும் எண்ணம், கருத்து, நோக்கம், இலக்கு என்ற சொற்களால் குறிப்பிடலாம் என்கிறார்.

கோவையிலிருந்து வழக்குரைஞர் நந்திவர்மன், அப்ஜக்டிவ் என்ற சொல்லுக்கு அகரமுதலியில் "புறவயமான குறிக்கோள்' மற்றும் "நோக்கம்' என்ற சொற்கள் குறிப்பிடப்பட்டிருந்தாலும், "நோக்கம்' என்ற சொல் சரியாக இருக்கலாம் என்று சிவபுராணத்திலிருந்து மேற்கோள் காட்டி எழுதியிருக்கிறார். சப்ஜக்டிவ் என்ற சொல்லுக்கு "அக எண்ணம் சார்ந்த' என்ற பொருளை எடுத்தியம்பியுள்ளார்.

கடலூர் சத்தியமூர்த்தி, அப்ஜக்டிவ் என்ற சொல்லை "குறிக்கோள்' என்று சொல்லலாம் என்றும், தனிமனித விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட நிலையில் அச்சொல்லை பயன்படுத்தும் போது முனிவு, கனிவு இன்றி, என்று கூறலாம் என்று சொல்லிவிட்டு அதே போல் சப்ஜக்டிவ் என்பது தனிமனித விருப்பு வெறுப்புக்கு உட்பட்டு ஏற்படும் காரணத்தால் அதை  "விழைவு வழி' என்று குறிப்பிடலாம் என்றும் எழுதியுள்ளார்.

கோவை கோவில்பாளையத்திலிருந்து முனைவர் வே.குழந்தைசாமி, அப்ஜக்டிவ் என்பதை "ஒருதலையன்மை' அல்லது "கோடாத சிந்தை' என்றும், சப்ஜக்டிவ் என்பதை "ஒருதலைச்சிந்தை' அல்லது "மனக்கோட்டம்' என்றும் அழைக்கலாம் என்கிறார்.

ஆலந்தூர் புலவர் இரா.ராமமூர்த்தி, அகம், புறம் இந்த இரண்டின் வெளிப்பாடே அனைத்தும் என்பதனால்      சப்ஜக்டிவ் என்பதை "அகவயம்' என்றும், அப்ஜக்டிவ் என்பதை "புறவயம்' என்றும் குறிக்கலாம் என்றும் இது அறிவியலுக்கும், அருளியலுக்கும், காதலுக்கும் பொருந்தும் என்றும் குறிப்பிடுகிறார்.

திருச்சியிலிருந்து தீ.அன்பழகன், சப்ஜக்டிவ் என்பதை "தன்முனைப்பு' என்றும், அப்ஜக்டிவ் என்பதை "தன்மிதப்பு' என்றும் கூறலாம் என்கிறார்.

திருப்பத்தூர் புலவர் ச.மு.விமலாநந்தன், அப்ஜக்டிவ்  என்பதை "பயனுறு நோக்கம்' என்றும், சப்ஜக்டிவ்  என்பதை "தானாக மனதில் எழுகிற' என்றும் குறிப்பிடலாம் என்கிறார்.   ஆனால், இவை அனைத்தும் மிகச் சரியான சொற்களாகத் தெரியவில்லை.

ஆங்கில அகரமுதலிகள் அப்ஜக்டிவ் என்ற சொல்லை சாதாரண எண்ணங்கள், உணர்வுகளிலிருந்து மாறுபட்டு புறப்பொருள்களை ஒரு சரியான துலாக்கோலில் இட்டு எடைபோடுவது என்று குறிப்பிடுகின்றன. சப்ஜக்டிவ் என்ற சொல்லை ஆங்கில அகரமுதலிகள் மனதில் உதிக்கின்ற அல்லது எண்ணுபவரின் எண்ண ஓட்டத்தைச் சார்ந்த ஒன்றாகக் குறிக்கின்றன. ஆக, தான் என்ன நினைக்கிறோம் என்பதை ஒதுக்கிவிட்டு, அறிவியலின்பாற்பட்டு ஒரு செய்தியையோ, ஒரு நிகழ்வையோ, ஒரு நபரையோ எடை போடுவதை அப்ஜக்டிவ் என்றும்; தான் கொண்ட கொள்கை அல்லது முடிவு அல்லது கருத்துகளின் அடிப்படையிலோ அல்லது அறிவியல் சார்பில்லாமலோ எடைபோடும் முயற்சியை சப்ஜக்டிவ் என்றோ சொல்லலாம்.

அந்த வகையில் பார்க்கும் போது வழக்குரைஞர் சேலம் அ.அருள்மொழி தொலைபேசியில் என்னிடம் "அகக்காரணிகளைக் கொண்டு ஒன்றை ஆராய அல்லது எடைபோடப் புகுங்கால், அதை "சப்ஜக்டிவ்' என்று சொல்லலாம் என்றும், புறக்காரணிகளைக் கொண்டு ஆராயும் அல்லது எடைபோடும் முயற்சியை "அப்ஜக்டிவ்' என்றும் சொல்லாமே' என்றார். அந்த வகையில் பார்க்கும்போது, "அப்ஜக்டிவ் - சப்ஜக்டிவ்' என்ற சொற்களுக்கு "புறத்தாய்வு - அகத்தாய்வு' என்றும் சொல்லலாம் என்று கருதுகிறேன்.

"அப்ஜக்டிவ் - சப்ஜக்டிவ்'  என்ற சொற்களுக்கான வாசகர்களின் தேர்ந்த முடிவு  புறத்தாய்வு - அகத்தாய்வு

அடுத்த சொல் வேட்டை

அடுத்த வார சொல் வேட்டைக்கான சொல் - “இன்புட்-அவுட்புட்'

சொல் வேட்டை தொடரும்…

நன்றி - தமிழ்மணி 16 12 12

சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 5

எடுத்த எடுப்பில் நான் இரு செய்திகளை உங்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும். ஒன்று, நான் கனவிலும் எதிர்பார்க்காத அளவில், இந்தச் சொல் வேட்டை எங்கெங்கோ தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் குறியீடாக இந்த வாரம் புழல் சிறையிலிருந்து ஒரு சிறை வாசி (அவரைக் கைதி என்று சொல்ல மனம் ஒப்பவில்லை) நான்கு சொற்களை எழுதி அனுப்பியிருக்கிறார். நான் நெகிழ்ந்து போனேன். இரண்டாவது, சொல் வேட்டையில் பங்கேற்கும் வாசகர்கள் ஆங்காங்கே அவரவர்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்து வட்டார வழக்காக இருந்து, இன்று வழக்கொழிந்து போன அல்லது போய்க்கொண்டிருக்கும், சொற்களையும் தேடிப்பிடிக்கலாம். உண்மையில் சொல்லப்போனால், வழக்குச் சொற்களுக்கு தமிழ் மொழியில் தனி இடம் உண்டு.

கம்பன் தன் காப்பியத்தில் முதலில் பாடிய பாட்டு "குமுதனிட்ட குலவரைக் கூத்தரில்'' என்றும், அப்பாட்டில் வரும் "துமி' என்ற ஒரு வழக்குச் சொல் ஒரு சர்ச்சையைக் கிளப்பியது என்றும், கலைவாணியின் அருளால் அந்த சர்ச்சை முடிவுற்றது என்றும் ஒரு கதை உண்டு. எனவே, வாசகர்கள் பண்டைய இலக்கியங்களில் வேட்டை நடத்தும்போதே, கூடவே வழக்குச் சொற்களைத் தேடுவதும் நலம் பயக்கும் என்று கருதுகிறேன். இனி இந்த வார வேட்டைக்கு வருவோம்.

நான் மேலே கூறியது போல் புழல் சிறையிலிருந்து தே.புதுராஜா, தனது கடிதத்தில் "பாரநோய' என்ற சொல்லுக்கு தன்னிலை அறியாக் குறைபாடு, அவ நம்பிக்கை, தொடர்புத் திறன் குறைபாடு, வேண்டா பயம் குறைபாடு என்னும் நான்கு சொற்களைப் பரிந்துரைத்திருக்கிறார்.

சென்னை சேத்துப்பட்டிலிருந்து மு.கேசவராமன், "பாரநோய' என்ற சொல்லுக்கு மன மாயை, கற்பனை, பொய்த் தோற்றம், கற்பனை நினைப்பு, கானல், எதிர்மறை ஏற்பு, அச்சம், பீதி, மன மயக்கம் ஆகிய சொற்களைப் பரிந்துரைத்திருக்கிறார்.

கிழவன் ஏரியிலிருந்து புலவர் செ.சத்தியசீலன், திருக்குறளைச் சான்றாகக் காட்டி "பாரநோய' என்ற சொல்லுக்கு "மிகை அச்சம்' என்பது பொருத்தமாக இருக்கும் என்கிறார்.

நங்கநல்லூர் டி.வி. கிருஷ்ணசாமி, "மனப்பிரமை' என்ற சொல்லையும், புதுச்சேரி தே. முருகசாமி, வீண் குழப்பம், தற்சார்பின்மையுடன் கலங்கி மருகுவது ஆகிய சொற்களையும் எடுத்துரைத்துள்ளார்கள்.

அண்ணாநகர் ஆனந்தக்கிருஷ்ணன், மனப்பிறழ்வு, மனச்சிதைவு ஆகிய சொற்களையும், திருப்பத்தூர் புலவர் விமலாநந்தன், "கற்பனையான அச்சம்' அல்லது "புதிரான அச்சம்' என்ற சொற்களையும் எழுதியிருக்கிறார்கள்.

பாடியிலிருந்து மு.அரங்கசுவாமி, தமிழ் லெக்சிகன்-இல் "பாரநோய' என்ற சொல் குறிப்பிடப்படவில்லை என்றும், ""மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்'' என்ற பழமொழியை அடியொற்றி பாரநோய என்ற சொல்லுக்கு "மருள்' அல்லது "மருளி' சரியான தமிழ்ச் சொல்லாக அமையும் என்றும் கூறுகிறார்.

வில்லிவாக்கம் சோலை.கருப்பையா, கானல் கற்பனை பீதி, கானல் உணர்வு அச்சம் அல்லது கற்பிதவாதம் என்னும் சொற்களைப் பயன்படுத்தலாம் என்கிறார்.

புலவர் அடியன் மணிவாசகன், "பாரநோய' என்ற சொல்லுக்கு சென்னைப் பல்கலைக்கழக அகர முதலியிலிருந்து "அறிவுப்பிறழ்ச்சி' அல்லது "தருக்கியல்', "சித்தப்பிரமை' ஆகிய சொற்கள் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், நல்ல மனநலக் குறைவினால் ஏற்படும் நோயாக இது இருப்பதால் "மனநோய்' என்று கூறுவதே மருத்துவத்தை நாடும் அறிவு திரிபுக்கும், மூளை கலக்கத்திற்கும் செயல் மாறாட்டத்திற்கும் பொருந்தி வரும் என்றும் உரைத்திருக்கிறார்.

திருச்சி தி.அன்பழகன், தெளிவின்மையைக் குறிக்கும் தமிழ்ச்சொல் "ஆசு' என்பதால், "பாரநோய' என்ற மனநோய் அல்லது மனக்கோளாறை "ஆசுள்ளம்' என்று அழைக்கலாம் என்கிறார்.

கோயம்புத்தூர் கோவில்பாளையம் முனைவர் வே.குழந்தைசாமி, திருவருட்பாவில் வள்ளலார் பல இடங்களில் "மருள்' என்ற சொல்லை (மருளுடைய மனப்பேதை நாயினேன்) குறிப்பதாலும், திருவாசகத்தில் மணிவாசகப் பெருமானும் ""மருளனேன் மனத்தை மயக்கு அற நோக்கி'' என்றும், நம்மாழ்வார் ""மருளே இன்றி உன்னை என் நெஞ்சத்து இருத்தும் தெருளே'' என்றும் கூறுவதால், "மருள்' என்ற சொல் சரியாக இருக்கலாம் என்கிறார். மேலும், திருவருட்பாவில் "மருட்பகை தவிர்த்து' என்ற சொல்லால் மருளையும், பகை அச்சத்தையும் வள்ளலார் சுட்டிக் காட்டுவதால், மருட்பகை அல்லது மருள் என்ற சொல் பொருத்தமாக இருக்கும் என்கிறார்.

ஆலந்தூரிலிருந்து புலவர் இரா.இராமமூர்த்தி, தியங்குதல், வெருவருதல், திகைத்தல் ஆகிய சொற்களையும், வி.ந.ஸ்ரீதரன், மன மயக்கம் அல்லது மதி மயக்கம் என்ற சொற்களையும் பரிந்துரைத்திருக்கிறார்கள்.

இவற்றைப் பார்க்கும்போது சென்னைப் பல்கலைக்கழக அகர முதலியில் குறிப்பிட்டிருக்கும் "தருக்கியல்', "சித்தப்பிரமை' என்பது பொருத்தமாக இருக்கலாமோ என்று தோன்றுகிறது. அதை விட, "மனப்பிறழ்வு என்பது பொருத்தமாக இருக்கும்.

சொல் வேட்டை தொடரும்...

நன்றி - தமிழ்மணி 09 12 12

சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 4

அனேகமாக தேர்வுக்கும், தேர்வு முடிவுக்கும் காத்திருக்கும் பிள்ளைகளைப் போல் நமது வாசகர்களும் ஞாயிறு அன்று உதயமாகும் தமிழ் மணிக்காக எழுதுகோலோடும், ஏட்டோடும் காத்திருப்பார்கள் போல் தெரிகிறது. அந்த அளவிற்கு இலக்கியச் சான்றுகளோடு அளப்பரிய சொற்செல்வங்களை வாசகர்கள் கொண்டுவந்து கொட்டுகிறார்கள்.

கோவில்பாளையம் முனைவர் வே.குழந்தைசாமி, ""பாடுகின்றிலை பதைப்பதும் செய்கிலை'' என்ற திருவாசகக் கூற்றையும், ""மனம் பதைப்பு அறல் வேண்டும்'' என்ற திருப்புகழ் வரியையும் சுட்டிக்காட்டி "பதைப்பு' அல்லது "பதற்றம்' என்பது "டென்சன்' என்ற சொல்லுக்குச் சரியான சொல்லாக இருக்கலாம் என்கிறார். "ஹைப்பர் டென்சன்' என்ற சொல்லுக்குக் கம்ப இராமாயணத்தில் பயன்படுத்தப்படும் மனக்கொதிப்பு, என்ற சொல்லைச் சுட்டிக் காட்டுகிறார்.

தஞ்சாவூரிலிருந்து பா.ஜம்புலிங்கம், இரத்தத்தில் ஏற்படும் அழுத்தம் இரத்த அழுத்தம் (ஹைப்பர் டென்சன்) என்றும், சித்தத்தில் ஏற்படும் அழுத்தம் டென்சன் என்று குறிப்பிடப்படுவதால், "மன அழுத்தம்' அல்லது "மன இறுக்கம்' என்ற சொல் சரியாக இருக்கும் என எழுதியிருக்கிறார். அதே கருத்தை பொன்னமராவதியிலிருந்து அ.கருப்பையாவும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

பவானிசாகரிலிருந்து பெரு.தமிழ்வேந்தன், "டென்சன்' என்ற சொல்லுக்கு உள்ளழுத்தம், உட்படு சினம், உள்ளழற்சி, உள்ளரவம், உள்ளிடல் போன்ற பல சொற்களைப் பயன்படுத்தலாம் என்கிறார்.
சென்னையிலிருந்து ஓய்வு பெற்ற வட்டாட்சியர் ஆனந்தகிருஷ்ணன் என்பவர், உணர்ச்சி மிகுதியின் காரணமாக மன நெருக்கடிக்கு ஆளாவதால் "மிகு உணர்ச்சி' என்ற சொல்லைப் பரிந்துரைக்கிறார்.

சென்னை கோட்டூரிலிருந்து ஜெயகிருஷ்ணன் என்பவர், "டென்சன்' என்ற சொல்லை "அழுத்தம்' என்று சொல்வது சரியாக இல்லை என்றும், "இறுக்கம்' அல்லது "மன இறுக்கம்' என்பதே முறையானதாக இருக்கும் என்கிறார்.

திருச்சியிலிருந்து தி.அன்பழகன், "டென்சன்' என்ற சொல்லுக்கு "கொந்தளிப்பு' என்ற சொல் பொருத்தமாக இருக்கும் என்றும், தமிழ் இலக்கணத்தின் வழி "கடல் கொந்தளிப்பு' என்பது இயல்பு வழக்காகும் என்றும், "ஊர் கொந்தளிப்பு' என்பது தகுதி வழக்காகும் என்றும் குறிப்பிடுகிறார்.

சென்னை வில்லிவாக்கத்திலிருந்து சோலை. கருப்பையா என்பவர், ஒரு கிராமத்திலோ அல்லது சமூகத்திலோ ஏற்படும் டென்சன் "பதட்டம்' என்ற சொல்லாலும், மனோநிலையில் ஏற்படும் டென்சன் "படபடப்பு' என்ற சொல்லாலும் உளவியல் சார்ந்த டென்சன் "மன இறுக்கம், மன அழுத்தம், கொந்தளிப்பு' ஆகிய சொற்களாலும் அழைக்கப்பட்டு ஏற்கனவே புழக்கத்திற்கு வந்துவிட்ட காரணத்தால், நாம் டென்சன் என்ற சொல்லுக்கு ஓர் ஒற்றைச் சொல்லைத் தேடி அலையத் தேவையில்லை என்கிறார்.

புலவர் அடியன்மணிவாசகன், டென்சன் என்ற சொல்லுக்கு அகரமுதலியில் "மனத்தாக்க அழுத்த உணர்வு' என்றும், "உள அழுத்த அலைவு' என்றும் பல பொருள்கள் குறிப்பிடப் பட்டிருப்பதாகவும், மனச்சோர்வு, மனக்களைப்பு, மனஉளைச்சல், மனவலி, மனப்போராட்டம் ஆகிய யாவும் மனதிற்கு சுமையாகி விடுவதால் டென்சன் என்ற சொல்லுக்கு "மனச்சுமை' என்ற பெயர் கொடுக்கலாம் என்கிறார். ""களைப்பின் வாராக் கையறவு உளவோ'' என்று பட்டினத்தார் கூறுவதால் "கையறவு' என்றும் சொல்லும் மனச்சுமை அழுத்தத்திற்குப் பொருந்தும் என்று சொல்லிவிட்டு, இறுதியில் மனச்சுமை, கையறவு, மன அழுத்தம், அகப்பிதுங்கல், அகவேக்காடு, பொறுக்க இயலாமை மனவுறுத்தம், மனச்செறுக்கம் ஆகிய சொற்களைப் பரிந்துரைக்கிறார்.

கல்லூரிக் கல்வி மேனாள் இணை இயக்குநர் பேராசிரியர் திருக்குறள் க.பாஸ்கரன், அகரமுதலியிலிருந்து "இழுவிசை' மற்றும் "நெருக்கடி நிலை' ஆகிய சொற்களைச் சுட்டிக்காட்டி, அமைதியின்மை அல்லது இதய இறுக்கம் என்கிற சொற்கள் பொருத்தமாக இருக்கும் என்கிறார்.

அம்பத்தூரிலிருந்து புலவர் உ.தேவதாசு, பொதுவாக டென்சன் என்ற சொல்லுக்கு மறுகுதல், அலமரல், பதைபதைப்பு, நிலைதிரிதல், ஊசலாட்டம் எனப் பல சொற்களை இணையாகக் கொள்ளலாம் என்றாலும், இத்தகைய நிலை தடுமாறலுக்கு அவரவர் மனநிலை காரணமாக அமைவதால், "மன உளைச்சல்' என்ற சொல் பொருந்தும் என்கிறார். அதற்குச் சான்றாக கம்ப இராமாயணத்திலிருந்து சீதையின் மனநிலையைக் குறிக்கும் ஒரு பாடலையும், இராமனின் மனநிலையைக் குறிக்கும் ஒரு பாடலையும் எடுத்துக் காட்டியிருக்கிறார்.

நங்கநல்லூரிலிருந்து டி.வி. கிருஷ்ணசாமி, மன இறுக்கம் என்ற சொல் பொருத்தமாக இருக்கும் என்கிறார். ச. இராசதுரை "கொடுநோய்' என்பது பொருந்தும் என்று எழுதுகிறார்.

கிழவன் ஏரியிலிருந்து செ.சத்தியசீலன், திருவாசகத்தில் திருச்சதகப் பகுதியில் வருகின்ற ""மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து'' என்று வருவதை மேற்கோள்காட்டி எழுதியிருக்கிறார். எனவே, டென்சன் நேரத்தில் இருக்கும் மனநிலையைக் குறிக்க "பெருவிதிர்ப்பு' என்ற சொல்லைப் பயன்படுத்தலாம் என்று குறிப்பிடுகிறார்.

புதுச்சேரியிலிருந்து நா.கிருஷ்ணவேலு, டென்சன் என்ற சொல்லுக்கு "கூடுதல் சக்தி' மற்றும் "வலியவிசை' (வலிமையான விசை) என்ற சொற்களையும், புதுச்சேரி தெ.முருகசாமி, டென்சன் என்ற சொல்லுக்கு "பரபரப்பு' என்ற சொல்லையும் பரிந்துரைக்கிறார்கள்.

பாடியிலிருந்து முனைவர் மு.அரங்கசுவாமி, டென்சன் என்ற சொல்லுக்கு தனிமனித அளவில் நிலையழிதல், தடுமாறுதல், மனக்கொதிப்பு, பதறுதல் ஆகிய சொற்களையும் சமூக அளவில் பதற்றம், இறுக்கம், கொந்தளிப்பு ஆகிய சொற்களையும் பயன்படுத்தலாம் என்று கூறி, சேக்கிழார் பெருமானுடைய அப்பூதியடிகள் நாயனார் புராணத்திலிருந்தும், திருவாசகத்திலிருந்தும் மேற்கோள் காட்டியிருக்கிறார்.

ஆலந்தூர் புலவர் இரா. இராமமூர்த்தி, தொல்காப்பியம் மற்றும் நற்றிணை ஆகியவற்றிலிருந்து " கையறவு' என்ற சொல்லையும், சிவப்பிரகாசர் அருளிய நால்வர் நான்மணிமாலையிலிருந்து "விதிர்விதிர்ப்பு' என்ற சொல்லையும் சிலம்பு மற்றும் புறநானூற்றிலிருந்து "அடர்' என்ற சொல்லையும் பரிந்துரைக்கிறார். அவர் எழுதிய கடிதத்தில் ஒரு அற்புதமான புதுச்சொல்லை நற்றிணையிலிருந்து எடுத்துக் கையாண்டிருக்கிறார். அந்தச் சொல், "அஞர்' என்பதாகும். கடற்பயணத்தில் கலம் உடைந்து நீரில் வீழ்ந்தோர் மரப்பலகையைப் பற்றிக் கொள்வதை ""பலர் கொள் பலகைபோல வாங்க வாங்க நின்ற ஊங்கு அஞர் நிலையே'' என்று நற்றிணை விளக்குவதையும், புறநானூற்றில் 238-ஆவது பாடல் ""ஆர் அஞர் உற்ற நெஞ்சமொடு'' என்று கூறியதையும் எடுத்துக்காட்டியிருக்கிறார். இறுதியில் டென்சன் என்ற சொல்லுக்கு மருட்கை, ஆரஞர், விதுப்புறுதல், பதுறுதல், படர்மெலிதல் என்ற சொற்களைப் பரிந்துரைக்கிறார். இந்தக் கடிதத்தில் நம்மை மகிழ்விப்பது தற்போது பேச்சுவழக்கில் இல்லாத "அஞர்' மற்றும் "ஆரஞர்' என்னும் சொற்களாகும்.

இவையெல்லாம் பார்க்கும் போது, டென்சன் என்ற சொல்லுக்கு "கொதிப்பு' என்ற சொல் சரியாக வரும்போல் தெரிகிறது. காரணம், இரத்தத்தில் வரும் கொதிப்பு இரத்தக் கொதிப்பாகவும், சித்தத்தில் ஏற்படும் கொதிப்பு மனக்கொதிப்பாகவும் வழக்கத்திலும் புழக்கத்திலும் வந்துவிட்டதாகப் பலர் எழுதியிருக்கிறார்கள்.

நன்றி - தமிழ்மணி 01 12 12


சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 3

இந்த வாரச் சொல் வேட்டைக்குள் நுழைவதற்கு முன், ஒரு வாக்கு மூலத்தை வாசகர்களுக்கு நான் அளிக்க வேண்டும். நான் தமிழ் அறிஞன் அல்லன். ஆனால் தமிழ் ஆர்வலன். இந்த வேட்டையில் பங்கேற்கும் வாசகர்களும், படித்து மகிழும் அல்லது படித்துப் பார்க்கும் பலரும், மொழியியலில் என்னைவிட மிகப்பெரிய அறிஞர்கள் என்பதை நான் நன்கு அறிவேன். எனவே, இந்த வேட்டையில் தேர்ந்தெடுக்கப்படும் சொற்கள், என்னுடைய அல்லது தினமணி ஆசிரியருடைய இறுதித் தீர்ப்பல்ல. தீர்ப்பளிப்பதற்கு, இது நீதி மன்றமும் அல்ல. இதில் தேர்ந்தெடுக்கப்படும் சொற்களை நாங்கள் தமிழ்கூறும் நல்லுலகம் முன் பரிசீலனைக்கு வைக்கிறோம். அவர்களது தீர்ப்பிற்கு நாம் கட்டுப்படுவோம். இனி இந்தவார வேட்டைக்கு வருவோம்.

"அடிக்ட்' என்ற சொல்லை சென்ற வாரம் நாம் வேட்டைக்கு விட்டோம். பட்டுக்கோட்டையில் இருந்து பன்னீர்செல்வம் என்னும் வாசகர் சிலப்பதிகாரத்தை மேற்கோள் காட்டி "விடுதல் அறியா விருப்பினன்' என்ற சொற்றொடரையும், வேட்கை, கூடுதல் விருப்பம், மிகு விருப்பம் என்னும் சொற்களையும் மாற்றாகக் குறிப்பிட்டு விட்டு, "அடிக்ட்' என்ற சொல்லுக்குக் "கொடு வேட்கை'' என்னும் சொல்லும் பொருத்தமாக இருக்கும் என்று எழுதியிருக்கிறார்.

அம்பத்தூரிலிருந்து புலவர் உ.தேவதாசு, கள், கவறு (சூது), காமம் இவற்றுக்கு ஆட்பட்டு மீள முடியாமல் போகும் நிலையையே "அடிக்ட்' என்ற சொல் குறிப்பதானால் சிலப்பதிகாரம் கூறும் "விடுதல் அறியா விருப்பம்' அல்லது "வேட்கை' என்ற சொல் பொருத்தமாக இருக்கும் என்றும் உரைத்திருக்கிறார். கோவை கோவில்பாளையம் முனைவர் வே. குழந்தைசாமியும் விடுதல் அறியா விருப்பினன், மீளா வேட்கை, வேட்கை அடிமை, மீளா விருப்பினன், மீளா விருப்பு ஆகிய சொற்களை எழுதியுள்ளார்.

வில்லிவாக்கம் சோலை. கருப்பையா பித்து, பைத்தியம் ஆகிய சொற்களையும், உள்ளகரத்திலிருந்து வி.ந.ஸ்ரீதரன் "மீளான்' என்ற சொல்லையும், பட்டாபிராம் பாரதி நேசன் "பண்பில் பழக்கம்', "மது மயக்கம்' என்ற சொற்களையும், திருவாரூர் தனபாலன்,  "ஆட்படுதல்' என்ற சொல்லையும், காஞ்சிபுரம் முனைவர் அமுத.இளவழகன், "விடுதல் அறியா விருப்பினன்', "விடா விருப்பு', "விடா வேட்கை' என்னும் சொற்களையும், போளூர் ரகுபதி முழுகுதல், அனுபவித்தல், திளைத்தல், மகிழ்தல், துர்பழக்கம் என்னும் சொற்களையும் குறிப்பிட்டுள்ளார்கள்.

புலவர் அடியன் மணிவாசகன் திருவள்ளுவர், அக நிலையிலும், புற நிலையிலும் தீமை செய்து ஒழுகுதலை, படிறு + ஒழுக்கம் = படிற்றொழுக்கம் என்று சொல்வதையும், தேவாரத்தில் "மீளா அடிமை உனக்கே' (சுந்தரர்) என்று சொல்லப்படுவதையும் சுட்டிக்காட்டி, காட்சி நிலையில் திடீரென அறிவு மயங்குவது "மருட்கை' எனப்படும் எனவும், தொல்காப்பியத்தில் மருட்கை என்பது அறிவுக்குப் பொருந்தாத சிறுமைச் செயல் என்று குறிப்பிடப்படுவதால், அடிக்ட் என்ற சொல்லுக்கு, படிற்றொழுக்கம், "சிறுமைச் செயல்' என்ற சொற்கள் பொருத்தமாக இருக்கும் என்றும் எழுதியிருக்கிறார். பாடியில் இருந்து முனைவர் மு. அரங்கசுவாமி திருமூலரின் வாக்காகிய "வேட்கை விட்டார் நெஞ்சில்'' என்பதைக் குறிப்பிட்டு, வேட்கை என்னும் சொல் சரியாக இருக்கும் என்கிறார்.

போதை என்னும் சொல், "போதல்' என்னும் சொல்லில் இருந்து வருவதாலும், போதல் என்ற சொல்லுக்கு நன்கு பயிலுதல் என்று பொருள் உள்ளதாலும், ஆட்பட்ட மனம், தீமையைப் பழகுவதால், அடிக்ட் என்ற சொல்லுக்கு "தீயொழுழுக்கம்' என்பதே பொருத்தமான சொல்லாக இருக்கும் என்றும் ""நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்'' என்ற குறளைச் சுட்டிக் காட்டி, புதுச்சேரி தெ.முருகசாமி எழுதியுள்ளார்.

நாமக்கல் கா. சிவராஜ், அடிமை உணர்ச்சி தன்னுணர்ச்சியால் வருவதால் "அடிக்ட்' என்ற சொல்லுக்குத் "தன்னடிமை' என்ற சொல் பொருத்தமாக இருக்கும் என்கிறார். அதற்குச் சான்றாக பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் வரும் "தன்னை இழந்து அடிமையான பின்னர் தாரம் ஏது வீடு ஏது?' என்ற பாடலைச் சுட்டிக் காட்டுகிறார்.

திருச்சியிலிருந்து தி.அன்பழகன், தீய பழக்கங்களுக்கு மனிதன் அடிமையாவது பலவீனம் என்பதால், "அடிக்ட்' என்ற சொல்லுக்கு "பழக்கவீனம்' அல்லது "மாறாப்பழக்கம்' என்ற சொற்கள் பொருத்தமாக இருக்கும் என்கிறார். ஜெயகிருஷ்ணன் என்பவர், "வேட்கை' என்றும், கே.ஆர்.சுரேந்திரன் "விடாப் பழக்கம்'' பொருத்தமாக இருக்கும் என்றும் எழுதி இருக்கிறார்கள்.

சேக்கிழார் சிவநெறிக் கழகத்திலிருந்து சைவப் புலவர் தமிழ்ச்செல்வி, பகுத்தறிவுள்ள மனிதன் தகாத செயல்களைச் செய்யும் பொழுது அவனை "அறிவு இல்லாதவன்', "மடையன்' என்று அழைப்பதால், "அடிக்ஷன்' என்ற சொல்லுக்கு "அறிமடம்' என்ற சொல் பொருத்தமாக இருக்கும் என்றும், அதே சமயம் மனம் அறிவுக்குக் கட்டுப்படாமல் இருப்பதால், "மனக்கோட்டம்' அல்லது "ஒளவியம்' என்ற சொற்களாலும் இதைக் குறிக்கலாம் என்கிறார். "கோட்டி' என்ற சொல் ஏற்கனவே வழக்கத்தில் உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவை அனைத்தையும் பார்க்கும் பொழுது "அடிக்ட்'  என்ற சொல்லுக்கு "மீளா வேட்கையன்' என்ற சொல்லும், "அடிக்ஷன்' என்ற சொல்லுக்கு "மீளா வேட்கை' என்பதும் பொருத்தமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.  "மீளா அடிமை' என்ற சொல்கூட பொருத்தமாக இருக்கலாம். ஆனால், இறைவனுக்கு ஆட்பட்டவர்களை அப்படிக் குறிப்பிடுவதால் "அடிக்ட்'  என்ற சொல்லுக்கு அதே சொல்லை பயன்படுத்துவதை மனம் ஒப்ப மறுக்கிறது. "விடுதல் அறியா விருப்பினன்'' என்பது பொருத்தமாக இருந்தாலும், அது நீண்ட தொடராக இருக்கும் காரணத்தால் அதைவிட "மீளா வேட்கை' என்ற சொல்லே பொருத்தம் என்று தோன்றுகிறது.

அடுத்த சொல் வேட்டை

"டென்ஷன்'.  "பதட்டம், பதற்றம் என்கிற சொற்கள்  ஏற்கெனவே இருந்தாலும், ஒரு மனிதனின் உடல் நிலையில் ஏற்படும் "ஹைபர் டென்ஷன்' "இரத்தக் கொதிப்பு' என்று கூறப்படுகிறது. மனோ நிலையில் ஏற்படும் டென்ஷன் சில சமயம் "நிலைகொள்ளாமை' என்று அழைக்கப்படுகிறது. ஒரு கிராமத்திலோ, ஒரு சமூகத்திலோ ஏற்படும் பதட்டமும் டென்ஷன் என்றே அழைக்கப்படுகிறது. எது சரியாக இருக்கும்?

அடுத்த வார சொல் வேட்டைக்கான சொல் - “டென்ஷன்'

வேட்டை தொடரும்…

நன்றி - தமிழ்மணி 25 11 12

சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 2

ஃபோபியா என்ற சொல்லை முதற்சொல்லாக வைத்து இந்தச் சொல் வேட்டையைத் "தமிழ்மணி'யில் சென்ற வாரம் தொடங்கியபோது வாசகர்களும், தமிழ்ச் சான்றோரும், மொழியியல் வல்லுநர்களும் என்ன தீர்ப்பு அளிப்பார்களோ என்று எனக்கு ஒரு புதுவகையான ஃபோபியா ஏற்பட்டது. ஆனால், ஆன்றவிந்த சான்றோர் பலர், பண்டைத் தமிழ் இலக்கியங்களில் இருந்தும் கொண்டுவந்து கொட்டியிருக்கும் இணைச்சொற்களைப் பார்க்கும்போது மலைப்பும், வியப்பும் ஏற்பட்டிருக்கிறது.

அறந்தாங்கியிலிருந்து மு.சீவானந்தம் என்ற வாசகர் ஃபோபியா என்ற சொல்லுக்கு "அரட்டி' என்ற சொல்லையும், தூத்துக்குடி மெஞ்ஞானபுரத்திலிருந்து அ.ஜெயசிங் என்ற வாசகர் "கற்பனை அச்சம்' என்ற சொல்லையும், தஞ்சாவூரிலிருந்து மருத்துவர் ச.தமிழரசன் "வெறுப்பு' என்ற சொல்லையும், சென்னை வழக்குரைஞர் இ.தி.நந்தகுமார் "பேரச்சம்' என்ற சொல்லையும், மயிலையிலிருந்து ஜி.ஸந்தானம் என்ற வாசகர் "பேரச்சம்' அல்லது "தொடரச்சம்' என்ற சொல்லையும், ஃபோபியாவைக் குறிக்கும் சொற்களாக எழுதி அனுப்பியிருக்கிறார்கள்.

கோயம்புத்தூர் கோவில்பாளையத்திலிருந்து முனைவர் வே.குழந்தைசாமி, கம்பராமாயணத்திலிருந்து மேற்கோள் காட்டி, ஃபோபியா என்ற சொல்லுக்கு "வெருள்' அல்லது "வெருட்சி' என்பது சரியான இணைச்சொல்லாக அமையும் என்று குறிப்பிட்டிருக்கிறார். புலவர் அடியன்மணிவாசகன் என்னும் அன்பர் மனம் கலங்கிக் குழம்புதலை, "அலமரல்', "தெருமரல்' என்றும், அச்சத்தால் மனம் நடுங்குதலை "அதிர்வு', "விதிர்ப்பு' என்றும், மனம் துணுக்குறுதலை "வெருவுதல்' என்றும் இலக்கியச் சான்றோடு சுட்டிக்காட்டியிருக்கிறார். இதைத் தவிர சூழ்நிலை மற்றும் இயற்கைதரும் அச்சத்தை பேம், நாம் மற்றும் உரும் என்ற சொற்களால் நம் இலக்கியங்கள் குறித்திருக்கின்றன என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

திருவண்ணாமலையிலிருந்து புலவர் சி.சம்பந்தன் என்பவர் "நலிதல்', "கலங்குதல்', "அலமரல்' ஆகிய சொற்களை பத்துப்பாட்டு, நெடுநல்வாடையிலிருந்தும், "விதிர் விதிர்ப்பு' என்ற சொல்லை சிவப்பிரகாசர் அருளிய நால்வர் நான்மணி மாலையிலிருந்தும் எடுத்துக்காட்டியிருக்கிறார்.

முத்தாய்ப்பாக, பொன்புதுப்பட்டி சேக்கிழார் சிவநெறிக்கழகத்தைச் சேர்ந்த சைவப்புலவர் தமிழ்ச்செல்வி என்பவர் ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையையே அனுப்பியிருக்கிறார். தமிழில் சொற்கள் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல், பண்புச்சொல் என்று பிரிக்கப்பட்டு, அவை மேலும் தெய்வப்பெயர், மக்கள் பெயர், விலங்கு, மரம், இடம், பல்பொருள் பெயர், செயற்கை வடிவம், பண்பு, செயல், ஒலி என்று பிரிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி அச்சம் என்ற தமிழ்ச்சொல் பண்புச்சொல் என்றும், பல்வேறு பண்பு நிலைகளில் ஏற்படும் அச்சங்கள் 47 தமிழ்ச் சொற்களால் குறிக்கப்பட்டிருப்பதாகவும் எழுதியிருக்கிறார்.

அவை: (1) ஓடல், தேங்கல், ஞெரேலெனல், கூசல், திட்கல், உலமரல், அளுக்கல், ஞொள்கல், துடுக்கெனல், துட்கல், குலைதல், வெய்துறல், துண்ணெனல் என்பவை அச்சம் தோன்றுவதற்கான குறிப்புகளை உணர்த்துபவை என்றும்; (2) அப்படித் தோன்றி நம் மனதை ஆக்கிரமிக்கும் அச்சத்தை வெருவு, சூர், பீர், வெறுப்பு, வெறி, வெடி, கவலை, பீதி, உருவு, பேம், பிறப்பு, கொன், உட்கு, பனிப்பு, அணங்கு, புலம்பு, அதிர்ப்பு, அடுப்பு, பயம், உரும், தரம் ஆகிய சொற்கள் அடையாளம் காட்டும் என்றும்; (3) அச்சம் அடைந்த மனதில் சிந்தனையும், எண்ணங்களும் மாறுபட்டு, சிதிலமடையும் போது, அது கலக்கம் என்றும், துரிதம், பிரமம், கதனம் என்று குறிப்பிடப்படுவதாகவும்; (4) கலக்கமுற்ற மனதில் ஏற்படும் நடுக்கம், விதிர்ப்பு, விதப்பு, கம்பம், விதலை, கம்பிதம், பனிப்பு, பொதிர்ப்பு, உலைவு என்ற சொற்களால் உணர்த்தப்படுவதாகவும் எழுதியிருக்கிறார்.

மேலும், ஃபோபியா என்ற சொல்லில் உள்ள 3 எழுத்துகளும் பேம், பீதி, பயம் என்ற 3 தூய தமிழ்ச் சொற்களின் சேர்க்கையில் உருவாகிப்பின் மருவியிருக்கலாம் என்றும் குறிப்பிட்டு, தமிழ்ச்சொல் அகராதி சூளாமணி நிகண்டு நுலைச் சான்றாகக் காட்டியுள்ளார்.

அரியலூரிலிருந்து முனைவர் சா.சிற்றரசு என்பவர் கடலால் தோன்றும் அச்சத்தை "நாம்' (நாமநீர் வேலி உலகுக்கு.... சிலம்பு) என்றும், எதிரியால் - பகைவரால் தோன்றும் அச்சத்தை "பேம்' என்றும், ஆட்சியாளரால் - சூரியனின் வெம்மையால் தோன்றும் அச்சத்தை "உரும்' என்றும், தனிமையால் உள்ளத்தில் தோன்றும் அச்சத்தை "உள்நடுங்கல்' என்றும், காட்டில் உண்டாகும் அச்சத்தை "சூர்' என்றும், இலக்கியச் சான்றுகளோடு சுட்டிக்காட்டி, ஃபோபியா என்ற சொல்லை "அச்சம்' என்று குறிப்பிட்டாலே போதும் என்றும் எழுதியிருக்கிறார்.

எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற் போல் அருள் நடராசன் என்னும் வாசகர் ஃபோபியா என்ற சொல்லுக்கு "வெருளி' என்ற சொல்லை அவர்கள் (மருத்துவர்கள்) பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டு, 128 வகையான ஃபோபியாக்களையும், அவை அனைத்திற்கும் உரிய 128 வகை வெருளிகளையும் பட்டியல் போட்டே அனுப்பி விட்டார்.

மூடப்பட்ட இடத்திற்குள் ஏற்படும் க்ளாஸ்ட்ரோஃபோபியாவை "அடைப்பிட வெருளி'ó என்றும், கம்ப்யூட்டரால் வரும் ஃபோபியாவை "கணினி வெருளி' என்றும் அவர் குறிப்பிட்டிருப்பது சுவையாக இருக்கிறது.

ஆக, தமிழ்ச் சான்றோர் அனுப்பியுள்ள குறிப்புகளைக் கூர்ந்து நோக்கின், இரண்டு செய்திகள் நமக்குப் புலப்படுகின்றன. ஒன்று, பல்வேறு வகையான அச்சங்களைக் குறிக்கும் சொற்கள் பண்டைத் தமிழ் இலக்கியங்களில் இருக்கின்றன என்பது; இரண்டாவது, "வெருளி' அல்லது "வெருட்சி' என்னும் சொல் ஏற்கனவே இலக்கியங்களில் காணப்படுவது மட்டுமன்றி, மருத்துவர்களாலும் பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிகிறது. எனவே, வெருளி அல்லது வெருட்சி என்னும் சொல் ஃபோபியாவைக் குறிக்கும் சொல்லாகக் கொள்ளலாம்.

அடுத்த சொல் வேட்டை

அடிக்ட் (Addict) என்கிற சொல்லுக்கும் பொருத்தமான ஒரு சொல் தமிழில் இருப்பதாகத் தெரியவில்லை. "அடிமை' என்ற சொல் பொருத்தமாக இல்லை. "போதை' என்ற சொல் சரியான தமிழ்ச் சொல்லா என்று தெரியவில்லை. அதைக் குறிக்கும் சரியான தமிழ்ச் சொல்லை (சொற்களை) வாசகர்கள் உருவாக்கி அனுப்பி வைக்கலாம்.

வேட்டை தொடரும்…

நன்றி - தமிழ்மணி 18 11 12

சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 1

புதுச் சொற்களை உருவாக்குவதற்கான சொல் வேட்டையில் ஈடுபடும் முன்னால், வாசகர்கள் ஒரு செய்தியை கவனத்தில் கொள்ளுதல் நலம். நீதிமன்றங்களில் சாட்சி விசாரணையின் போது குறியிடப்படும் பத்திரங்களை ஆங்கிலத்தில் எக்சிபிட்(exhibit) என்று சொல்வார்கள். இந்தச் சொல்லுக்கு சரியான மொழிபெயர்ப்பு "காட்சிக்கு வைக்கப்படுவது' என்பதே ஆகும்.

ஆனால், இந்தச் சொல்லை தமிழில் மொழிபெயர்த்த மொழியியல் வல்லுநர்கள் இதைச் "சான்றாவணம்' என்று மொழிபெயர்த்தார்கள். அதற்குக் காரணம், வழக்குகளில் காட்டப்படும் பத்திரங்களை "ஆவணம்' என்று சொல்லும் வழக்கம் தமிழகத்தில் இருந்ததற்கு இலக்கியச் சான்றுகள் இருந்ததுதான்.

இறைவன், சுந்தரமூர்த்தி நாயனாரைத் தடுத்தாட்கொண்ட போது, இறைவனிடம் சுந்தமூர்த்தி நாயனார் கேட்ட கேள்வி:

"ஆட்சியில் ஆவணத்தில் அன்றி மற்று
அயலார் தங்கள்
காட்சியில் மூன்றில் ஒன்றைக் காட்டுக''

என்பதாகும். எனவே, சொல் வேட்டையில் ஈடுபடும்போது, இலக்கியச் சான்றுகளோடு நாம் புதுச் சொற்களைத் தேடிக் கண்டுபிடித்தால் மிகப் பயனுள்ளதாக இருக்கும். அப்படி முடியாதபோது, சொற்களின் வேர்களுக்குப் போய் (root of the word) புதுச் சொற்களை உருவாக்குவதில் தவறில்லை.

சில நேரங்களில், சில மொழிபெயர்ப்புகள் ஒரு காலத்தில் சரியானவையாகவும், பிற்காலத்தில் சரியற்றதாகவும் ஆகிவிட வாய்ப்பு உண்டு. உதாரணத்திற்கு ட்ரெயின் (train) என்கிற ஆங்கிலச் சொல்லை மொழிபெயர்க்கும் போது நீராவி என்ஜினைக் கருத்தில் கொண்டு அது விடும் புகையை மையப்படுத்திப் "புகை வண்டி' என்று மொழிபெயர்த்தார்கள். ஆனால், இன்றைக்கு எந்த ரயில் வண்டியும் புகை விடுவதே இல்லை. எனவே, இனிமேலும் ரயில் வண்டியைப் புகை வண்டி என்று அழைப்பது பொருத்தமாகுமா என்பது தெரியவில்லை. சிலர் இதைத் "தொடர் வண்டி' என்று குறிப்பிடுகின்றனர். ஆனால், "ட்ரெய்லர்' கூட தொடர் வண்டிதான் என்பதால் ரயிலைத் தொடர்வண்டி என்று அழைப்பது எங்ஙனம் சரியாக இருக்கும்?

"ஃபோபியா' (phobia) என்கிற ஆங்கிலச் சொல் உயரம் குறித்த அச்சம், இருள் குறித்த அச்சம், தனிமை குறித்த அச்சம், தண்ணீர் குறித்த அச்சம் போன்ற பல்வேறு வகையான அச்சங்களைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல். ஆங்கிலச் சொல் அகராதிகளில் இந்தச் சொல்லுக்கு "அச்சம்' என்ற பொருள் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரே காரணத்தால், தமிழில் இந்தச் சொல்லை "அச்சம்' என்றே குறிப்பிடுகிறோம். ஆனால், "ஃபோபியா' என்கிற சொல்லுக்கு அச்சம், பயம், நடுக்கம் போன்ற சொற்களைத் தாண்டி வேறு ஒரு பொருள் இருக்கிறது. ஆனால், அதை உணர்த்தும் சரியான தமிழ்ச்சொல் இல்லை என்றே தோன்றுகிறது. எனவே "ஃபோபியா' என்கிற சொல்லுக்கு சரியான தமிழ்ச் சொல்லை அடுத்த வாரத்திற்குள் உருவாக்கி வாசகர்கள் அனுப்பி வைக்கலாம்.

முன்பே கூறிய இக்கருத்துகளை மனதிலே கொண்டு, இந்த வாரம் "ஃபோபியா' என்கிற ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச் சொல்லை நாம் தேடுவோம்.

இனி, அடுத்த வாரம் "ஃபோபியா'வுக்குப் புதிய தமிழ்ச் சொல்லைக் கண்டுபிடித்த களிப்பில் இன்னொரு புதுச் சொல் வேட்டையில் இறங்குவோம்…

(தொடரும்…)

நன்றி - தமிழ்மணி 11 11 12

கபிலரின் வானியலறிவு - முனைவர் அ.சிவபெருமான்

'கற்றறிந்தோர் ஏத்தும் கலி' என்று சிறப்பிக்கப்பெற்ற கலித்தொகையில் குறிஞ்சிக் கலியில் கார்த்திகை நட்சத்திரத்தின் வடிவம் மிக அழகாகக் குறிக்கப்பெற்றுள்ளது.

தலைவி நுண்ணிய நூலால் கட்டப்பெற்ற பூக்களைக் கொண்ட மாலையைத் தன் கூந்தலில் அணிந்திருந்தாள். அவ்வாறு அவள் அணிந்திருந்த அம் மலர்மாலை கார்த்திகை நட்சத்திரத்தைப் போல விளங்கியதாம். இக்கருத்தைக் குறிஞ்சிக் கபிலர்,

 "விரிநுண்ணூல் சுற்றிய ஈரித ழலரி

அரவுக்கண் அணியுறழ் ஆரல்மீன் தகையொப்ப''

(கு.கலி 28,அடி 3,4)

என்றவாறு குறித்துள்ளார். மேற்பாடலடியின் கருத்துப்படி கார்த்திகை நட்சத்திரம் பூமாலைக்கு உவமையாகக் குறிக்கப்பட்டுள்ளதால், பூமாலை போன்ற வடிவத்தை அந்நட்சத்திரம் பெற்றிருப்பதாக அறியமுடிகிறது. சூடாமணி நிகண்டு மாலைக்குரிய பல்வேறு பெயர்களைக் (மரப்பெயர்த்தொகுதி, செய்யுள், 66) குறித்துள்ளது. அப்பெயர்களுள் "கத்திகை' என்பது ஒன்றாகும். கலித்தொகை குறித்தவாறு கார்த்திகை நட்சத்திரம் மாலைபோல் விளங்குவதாலும், "கத்திகை' என்னும் சொல்லிலிருந்து கார்த்திகை என்னுஞ்சொல் தோன்றியிருக்கலாம் என்றும் கருதலாகின்றது.

விழுப்புரம் மாவட்டக் கிராமப்புற மக்கள் கார்த்திகை நட்சத்திரத்தை "அஞ்சு குஞ்சு தாய்ப்பெட்டை' என்ற தொடரால் அழைப்பர். தாய்க் கோழியைச் சுற்றி ஐந்து கோழிக்குஞ்சுகள் நிற்கும் வடிவத்தை ஒத்தநிலையில் கார்த்திகை நட்சத்திரம் காணப்படுவதால் அப்பெயர் பெற்றது போலும். கார்த்திகை நட்சத்திரம் "ஆறுமீன் கூடிய ஒரு தொகுதி' என்பதை "ஐந்து குஞ்சுகளும் ஒருதாய்க்கோழியும்' (எண்ணிக்கையால் ஆறு) என்னும் தொடரால் உணர்க.

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகிய நற்றிணையும் (பா. 202) அகநானூறும் (பா.141) கார்த்திகை நட்சத்திரத்தை "அறுமீன்' என்னும் சொல்லால் குறித்துள்ளது ஒப்புநோக்கத்தக்கது. எல்லாவற்றையும் தொகுத்துணரின், வானில் விளங்கிக் கொண்டிருக்கும் கார்த்திகை நட்சத்திரம் ஆறுமீன் தொகுதி என்றும், அதுவட்ட வடிவமாக மாலை போல் விளங்கும் என்பதும் பெறப்பட்டது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சங்கப் புலவராகிய கபிலர், குறிஞ்சிக்கலியில் கூறியுள்ள கார்த்திகை நட்சத்திரத்தின் வடிவம் இன்றைய வானியலோடும் ஒத்துவருவதை வானத்தைப் பார்த்து உணருங்கள். கோளரங்கில் கண்டு மகிழுங்கள், கபிலரின் வானியல் அறிவை எண்ணிப் பெருமிதம் கொள்ளுங்கள்.

நன்றி - தமிழ்மணி

வையாபுரிப் பிள்ளையும் தமிழும் - முனைவர் தமிழண்ணல்

பேரா.வையாபுரிப் பிள்ளையின் சில கருத்து முடிபுகள் மட்டும் விமர்சனத்திற்கு உட்பட்டன என்பது உண்மையே. அதற்காக அவரது தமிழ் ஆய்வுப் பணியைக் குறைத்து மதிப்பிட இயலாது.

அவரது காலத்தில் வடமொழிச் சார்புக் கருத்துரு, தமிழ்ச் சார்புக் கருத்துரு என இரண்டு பார்வைகள் முளைவிட்டிருந்தன என்பதும் உண்மையே. இதில் வடமொழிச் சார்பினர் "தமிழ் தம் மொழியின் துணையோடுதான் வளர்ந்தது' என்பது போன்ற கருத்தினைப் பலவாறு வெளிப்படுத்தினர். மேலும், இது சிலருக்கு விமர்சனத்திற்கு உட்பட்டது. இது, வடமொழிச் சார்பினர் சிலர், "தமிழில் எதுவுமே சொந்தமாக இல்லை' என்ற கருத்துக்கு இட்டுச் சென்றது. இதற்கு மறுதலையாக எல்லாமே தமிழ்தான் என்ற குரல் ஓங்கி ஒலிப்பதாயிற்று. அன்று வடமொழிச் சார்பினர்க்கு செல்வாக்கு மிகுதி. இதுவும் சிலருக்கு எரிச்சலை உண்டாக்கியது. குறிப்பாக சிலவற்றைப் பார்ப்போம்:

1.   திருக்குறள் வடமொழி அர்த்த சாத்திரம், காமசூத்திரம் போன்றவற்றைப் பார்த்து எழுதப்பட்டது.

2.   திருக்குறளின் காலம் கி.பி. 6-ஆம் நூற்றாண்டு.

3.   புறநானூற்றில் "மோரியர்' என்று வரும் ஐந்து இடங்களையும் மாற்றி "ஒளரஸ்' என்ற சொல்லே "மோரியர்' என ஆயிற்று எனக் குழம்பியது.

4.   சிலப்பதிகாரத்தின் காலத்தினைப் பின்னுக்குத் தள்ள பெருமுயற்சி மேற்கொண்டமை. வஞ்சிக்காண்டம் பிற்சேர்க்கை என்றெல்லாம் பலவாறு திரித்து எழுதியதில் பிள்ளை அவர்கட்கும் பங்குண்டு.

5.   அவர் தொகுத்த பேரகராதியில் பல சொற்கள் வடமொழி வழிப்பட்டவை எனக் குறித்திருப்பது. தமிழர் - விளிம்பில்லாத பாத்திரம் என எழுதியிருப்பது.

6.   தமிழ் அகத்திணைப் பாடல்களை, கிரந்தத்தில் உள்ள "கதா சப்தகவியோடு' ஒப்பிட முயல்வது.

7.   தொல்காப்பியம் வடமொழிப் பாணினியத்தைப் பார்த்து எழுதப்பட்டது எனல்.

8.   பல்வேறு இடங்களில் தமிழ் வடமொழி வழிப்பட்டு வளர்ந்தது என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயல்வது.

9.   பாரதப் போரில் கடுமை காரணமாகப் படைகள் சோர்வுற்றபோது, சேரமன்னன் இரண்டு படைகளுக்கும் பெருஞ்சோறு படைத்தான் என வருவதைப் "புனைகதை' என்பார். அது பாரதப்போர் என்ற நாடகம் என்பார். சங்கப் பாடல்களில் புனைவு என்பதில்லை.

10.   குறுந்தொகையில் "பொன்மலி பாடலி பெறீஇயர்' என வருமிடத்தில், "பாடிலி' என்பது தவறான பாடம். பாடலி என்பதே சரியான பாடம் என்று கண்டு சொன்னவர், "அப்பாடல் கேள்விப்பட்டு பாடியது' என்பார். அவர் உள்ளம் தமிழின் தொன்மையை ஏற்க மறுக்கிறது. பாடலி (பாடலிபுத்திர நகரம்) எனக் கண்டு சொன்னவர், அந் நகரத்தின் காலத்தே பாடப்பட்டது அது என்பதை ஏற்கவில்லை. சுருங்கச் சொன்னால், அவர்தான் வையாபுரிப் பிள்ளை!

இன்னோரன்னவற்றையும் எண்ணிப் பார்க்க வேண்டும். நிறையும் குறையும் உள்ளதில் குறையைச் சுட்டிக் காட்டினாலே, "இவர்கள் தனித் தமிழார்வலர்கள்' என்ற சிமிழுக்குள் அடக்க முயன்ற காலம் மலையேறிவிட்டது. நடுவுநிலை என்றால் அது இரு சார்பினருக்கும் பொருந்தும்தானே!

நன்றி - தமிழ்மணி