15/01/2014

கபிலரும் மருதனும் காற்றில் வாழ்கிறார்கள் - எஸ்.ராமகிருஷ்ணன்

சங்க காலத் தடயங்கள் என தமிழகத்தில் நூற்றுக்கும் மேலான ஊர்களைக் குறிப்பிடுகிறார்கள். அவற்றில் இன்றும் அகழ்வாய்வு மேற்கொள்கையில் அணிகலன்களும், முதுமக்கள் தாழியும், சங்கினால் பொருட்கள் செய்யும் தொழிலகங்களும் இருந்த மிச்சங்களைக் காண முடிகிறது. 

நான் சங்க கவிஞர்கள் வாழ்ந்த சுவடுகளைத் தேடிக்காண்பதில் விருப்பமுள்ளவன். வெள்ளிவீதியாரைப் படித்துவிட்டு மதுரையில் எந்த வீதி வெள்ளிவீதி, எங்கே வெள்ளிவீதியார் நடமாடியிருப்பார் என்று தேடி அலைந்திருக்கிறேன். ஆண்டாளின் திருப்பாவையை ஆண்டாள் கோவில் பிராகாரத்தில் உட்கார்ந்து வாசித்துவிட்டு அந்தவீதிகளில் சுற்றியலைவதில் சுகம் காண்கிறவன் நான்.  

சங்கப்பாடல்களில் இடம் பெற்றுள்ள ஊர்களைத் தேடிப்போய் காணும்போது மனதில் இனம் புரியாத ஏதோவொரு சந்தோஷம் உண்டாகிறது. சங்க இலக்கியத்தின் கபிலர் தனிப்பெரும் ஆளுமை கொண்ட கவி. அவர் பாடிய பறம்பு மலைக்கு நண்பர்களுடன் போயிருந்தேன். பறம்பு மலை, வள்ளல் பாரி வாழ்ந்த மலையாகும். சங்க காலத்தில் பறம்பு மலை, திருநெலக் குன்றம், திருக்கொடுங்குன்றம் என இரண்டு விதமான பெயர்களில் குறிப்பிடப்படுகிறது. தற்போது அதன் பெயர் பிரான்மலை. 

புதுக்கோட்டையிலிருந்து தென்மேற்கே நாற்பத்தைந்து கி.மீ. தொலைவில் உள்ளது. 2450 அடி உயரத்துடன்  கம்பீரமாக உள்ளது பிரான்மலை. பிரான்மலையைத் தொலைவில் இருந்து பார்க்கையில் ஒரு அனுபவமாகவும் நெருங்கி மேலேறிப் பார்க்கையில் இன்னொரு விதமான அனுபவமாகவும் இருக்கிறது.   

முந்திய நாள் அந்த மலையினை அருகாமை கிராமம் ஒன்றில் இருந்து பார்த்துக் கொண்டேயிருந்தேன். என்னுடன் இருந்த நண்பர் முரளி சொன்னார்:   

“மலையினைப் பார்க்கப் பார்க்க பாரியின் நினைவு வருகிறது. எவ்வளவு பெரிய வள்ளல்!”  

“எனக்கு கபிலரின் நினைவுதான் மேலோங்குகிறது. எவ்வளவு மகத்தான கவி கபிலர். அவரது கவிதைகளுக்கு நிகரில்லை” என்றேன். இருவரும் மலையைப் பார்த்தபடியே மௌனமாக இருந்தோம். இதமான காற்று கடந்து போனது. அந்தக் காற்றில் கபிலரின் குரல் புதையுண்டிருக்கிறது என என் மனதில் தோன்றியது.

இந்த மலை காலத்தின் ஒரு சாட்சி. கபிலர் நடமாடி அலைந்த சுவடுகள் இம் மலை யினுள் உள்ளன. காலம் அவற்றினை நம் கண்ணில் இருந்து அழித்து மறைத்திருந்தாலும் மனது அதைக்  கற்பனை செய்து கொள்ளத்தானே செய்கிறது. 

கவிதைகளின் வழியே கபிலர் இந்த மலையை விட மிகஉயரமானவராக எனக்குள் பதிந்து போயிருக்கிறார். கிரேக்க கவிதைகளை உலகின் சிறந்த கவிதைகள் என வாசித்து வியக்கும் நாம் அதே காலகட்டத்தில் கிரேக்க கவிதைகளை விடவும் உன்னதமான கவிதைகளைத் தந்த கபிலரை வியந்து கொண்டாடுவதில்லை.  
கபிலர் பறம்பு மலையின் வளம் குறித்துப் புகழ்ந்து பாடியிருக்கிறார். இங்கே பல்வேறுவிதமான பூக்கள், பழங்கள், அரிசி கிடைத்தன என்ற நீண்ட பட்டியலை கபிலர் தருகிறார்.  அத்துடன் பறம்புமலையில் சுரக்கும் நீரின் ருசி அலாதியானது என்ற குறிப்பும் காணப் படுகிறது.   

பறம்பு நாடு என்பது பறம்பு மலையைத் தலைமை யிடமாகக் கொண்ட நிலவெளி. இது பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாகவே இருந்து வந்திருக்கிறது. வள்ளல் பாரி இதனைச் சிறப்பாக ஆட்சி செய்திருக்கிறான். பாரியை ஔவையர், கபிலர், மிளைக்கந்தனார், நக்கீரர், புறத்திணை நன்னாகனார், பெருஞ்சித்திரனார், நல்லூர் நத்தத்தனார் ஆகியோர் பாடியிருக்கிறார்கள்.   

மலையின் அடிவாரத்தில் அருள்மிகு குயிலமுதநாயகி உடனுறை கொடுங்குன்றீசர் கோவில் ஒன்று காணப் படுகிறது. இது குன்றக்குடி ஆதீனத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கோவிலில் சுந்தரபாண்டியன் மண்டபம், ஆறுகால் மண்டபம், லட்சுமி மண்டபம் என மூன்று மண்டபங்கள் காணப்படுகின்றன.  

இங்கு குலசேகரப் பாண்டியன் காலத்துக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. 80 கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டுள்ளன என்கிறார்கள். கல்வெட்டுகள் முறையாகப் பராமரிக்கப்படாமல் கோடுகள் இழுத்தும் கரியால் பெயர்களை எழுதியும் அசிங்கப்படுத்தியிருக் கிறார்கள். இந்தக் கோவிலில் பெயரில்லாத விருட்சம் என்று ஒரு செடியைக் குறிப்பிடுகிறார்கள், சித்திரை மாதம்  இங்கே நடைபெறும் “பாரி உற்சவம்” அன்று, முல்லைக்குத் தேர் கொடுத்த வைபவம் ஒரு நிகழ்ச்சியாக நடக்கும் என்றார்கள். இம்மலையில் சிவன் பாதாளம், பூலோகம், கைலாயம் என மூன்று அடுக்குகளில் இருந்து காட்சி தருகிறார் என்ற ஐதீகம் உள்ளது.

குறிஞ்சி நிலத்தில்  அமைந்த கோயில் என்பதால், இந்நிலத்திற்கு உரிய தேன், தினைமாவு மற்றும் பச்சரிசி மாவில் செய்த தோசையை நைவேத்யமாகப் படைக்கின்றனர். கைலாயம் எனப்படும் மேலடுக்கிலுள்ள கோயில் குடவறையாக அமைந்துள்ளது. இந்த சன்னதி யின் முன்மண்டப மேற்சுவரில் கைலாயத்தில் சிவ, பார்வதி திருமணம் காணச்சென்ற தேவலோகவாசிகளின் சிற்பம் வடிக்கப்பட்டிருக்கிறது. சிவன், அகத்தியருக்கு திருமணக் கோலத்தில் காட்சி கொடுத்தபோது, நந்திதேவர் மத்தளம் வாசித்துக் கொண்டிருந்தார். எனவே, சிவன் இங்கு நந்திதேவர் இல்லாமல் காட்சி தருகிறார் என்கிறார்கள். பறம்பு மலையில்  தர்கா ஒன்று காணப்படுகிறது.  

கபிலர் பாரியோடு கொண்டிருந்த நட்பு நெகிழ்ச்சி யானது. கவிஞர், புரவலர் என்பதைத் தாண்டிய உறவது. பாரி கொல்லப்பட்ட துயரம் பற்றிய கபிலரின் பாடல்கள் நெஞ்சை உருக்குபவை.  பாரிக்குப் பின் பாரியின் மகளிரான அங்கவை, சங்கவை இருவருக்கும் நல்வாழ்வு அமைக்க கபிலர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டார், பாரியின் மகளிரைத் தம் மகளிராகவே கருதி அவர்களைத் திருமணம் செய்து கொள்ளும்படி விச்சிகோன், இருங்கோவேள் என்ற இரண்டு அரசர்களை கபிலர் வேண்டினார் என புறநானூறு தெரிவிக்கிறது. 

இறுதியில், பாரி மகளிரை திருக்கோவிலூர் மலை யமானுக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டு, தென் பெண்ணை ஆற்றில் உள்ள ஒரு குன்றில் வடக்கு நோக்கி அமர்ந்து உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தார் என்கிறார்கள்.  

கபிலர் வடக்கிருந்து உயிர் துறந்த இடம் கபிலர் குன்று என்று அழைக்கப்படுகிறது. இது விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர் பேரூராட்சி அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றினுள் அமைந்துள்ளது.  
இந்த கபிலக்கல்லையும் தேடிச்சென்று பார்த்தேன். தென்பெண்ணை ஆற்றினுள் உள்ளது இந்த கபிலர் குன்று. உள்ளுர் மக்கள் இதனை கபிலக்கல் என்றே குறிப்பிடுகிறார்கள். ஆற்றில் தண்ணீர் ஓடாத காலம் என்பதால் நான் சென்றபோது வறண்டு போயிருந்தது பாறை. ஆற்றில் தண்ணீர் ஓடும்போது அது மிகுந்த அழகுடையதாக இருக்கக்கூடும்.  

பெரிய ஒற்றைப் பாறை. அதன் மீது சிறுகோவில் போன்ற அமைப்பு காணப்படுகிறது, கோயிலின் மேலே நான்கு பக்க மேல்பகுதிகளிலும் சிற்பங்கள் தெரிகின்றன. அச்சிலையின் மேல்பகுதியில் இரண்டு ஆண் உருவங்களும், இரண்டு பெண் உருவங்களும் தெரிகின்றன. இந்தப் பெண் உருவங்கள் அங்கவை, சங்கவையாகவும், ஆண் உருவம் அவர்களை மணந்தவர்களாகவும் உள்ளுர் மக்கள் கருதுகிறார்கள். 

என்னோடு வந்திருந்த தமிழ் ஆய்வாளர் கணேசன்,  திருக்கோவிலூர் வீரட்டானேசுவரர் கோயிலின் கருவறை யின் வடபுறச்சுவரில் உள்ள முதலாம் இராசராசசோழனின் காலத்துக் கல்வெட்டில், “செஞ்சொற் கபிலன் மூரிவண் தடக்கைப் பாரிதன்னடைக்கலப் பெண்ணை மலை யர்க்குதவி மினல்புகும் விசும்பின் வீடுபேறெண்ணி அந்தரிக்ஷம் செல கனல்புகும் பெண்ணை அலைபுனல் அழுவத்து கபிலக் கல்லது”  என்ற குறிப்பு காணப்படுகிறது. ஆகவே தென் பெண்ணையாற்றில் உள்ள கபிலக்கல்லில் தான் கபிலர் உயிர்நீத்தார் என்பது வரலாற்று சாட்சி என்றார்.   

இருட்டும் வரை அங்கேயே இருந்தேன். உலர்ந்த காற்றும் மங்கிய மாலை வெளிச்சமும் அந்த இடத்தின் மீதான நினைவுகளைக் கொப்பளிக்கச் செய்து கொண்டிருந்தன.  

கபிலர் குன்றினைத் தொல்லியல் துறை பராமரிக்கிறது என்றார்கள். முறையான பராமரிப்பு இல்லாமல் வழியில் பாதி குடித்து எறிந்த மதுப்புட்டிகளுடன் அந்த இடம் அசுத்தமாகவே இருந்தது. தொகை நூல்களில் நூறு பாடல்களுக்கு மேல் பாடியவர்கள் ஐவரே. கபிலர், அம் மூவனார், ஓரம்போகியார், பேயனார், ஒதலாந்தையார். இவர்களில் கபிலர் முதன்மையானவர். இவர் மொத்தம் 235 பாடல்களைப் பாடியிருக்கிறார் என்கிறார் தமிழ் அறிஞர் ம. ரா. போ. குருசாமி.   

இவர் கபிலரின் பாடல்களை மட்டுமே தனித்து தொகுத்து கபிலம் என்றொரு நூலாக வெளியிட்டிருக்கிறார். வாசிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான நூலிது.   

கார்ப் பெயல் தலைஇய காண்பு இன் காலைக்
களிற்று முக வரியின் தெறுழ்வீ பூப்பச்  
செம் புற்று ஈயலின் இன்அளைப் புளித்து!   
மெந்தினை யாணர்த்து; நந்துங் கொல்லோ;   
நிழலில் நீளிடைத் தனிமரம் போலப்  
பணைகெழு வேந்தரை இறந்தும்  
இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே!  

என பாரி இல்லாமல் போனபிறகு பறம்புமலையின் வளம் கெட்டு அழிந்துவிடுமோ என்று பயந்து கபிலர் பாடுகிறார். இப்பாடலில் மழைபெய்து ஓய்ந்த பின்பு செந்நிறத்தெறுழம் பூ ஆங்காங்கே மலர்ந்து காட்சி தருவது யானையின் முகத்தில் உள்ள செம்புள்ளிகள் போல விளங்குகின்றன என்று மிகுந்த கவித்துவமான உவமை கூறுகிறார். பாரியில்லாமல் போன துக்கம் இந்தப் பாடலில் ஆழமாக எதிரொலிக்கிறது. 

பிரான்மலையும் கபிலர் குன்றும் பிரதான சாலையின் அருகாமையில் இருந்தபோதும் அவற்றைப் பொதுமக்கள் விருப்பத்துடன் தேடி வந்து காண்பதில்லை. தமிழ் பெருமை பேசும் பல்லாயிரம் பேரில் பத்துப் பேர் கூட இந்த இடங்களை நேரில் சென்று பார்த்து அதன் பெருமையை உணரவில்லை என்பது வருத்தமான உண்மை. 

கபிலரைப் போல இன்னொரு முக்கிய கவியாளுமை மாங்குடி மருதனார். இவர் பத்துப்பாட்டில் ஒன்றாகிய  மதுரைக் காஞ்சியை இயற்றியவர். பாண்டிய மன்னரான. தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்  அரசவையில் புலவராக இருந்தவர், புறநானூற்றில் இவரது பெயர் ‘மாங்குடி கிழார்’ என்று உள்ளது. 

மதுரையை ஆண்ட பாண்டிய மன்னனுக்கு  வாழ் வின் நிலையாமை பொருளுணர்த்த மதுரைக் காஞ்சி எழுதப்பட்டது. இவரது பிறந்த ஊரான மாங்குடி, ராஜபாளையத்தில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் சாலையில் விருதுநகர் மாவட்ட எல்லை முடியும் இடத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் உள்ளே சென்றால் இருக்கிறது. மாங்குடி மருதனாரைச் சிறப்பிக்க மாங்குடியில் ஒரு நினைவுத்தூண் அமைக்கப்பட்டுள்ளது. அதைக் காண்பதற்காகச் சென்றிருந்தேன். 

வெயிலேறிய சாலைகள், கையில் நாயைப் பிடித்த படியே முயல் வேட்டைக்கு அலையும் சிறுவர்கள், இரையெடுத்த பாம்பு போல வானில் மெதுவாக நகரும் சூரியன், மேற்கில் அடிவானம் தெரியும் வெட்டவெளி. 
பிரதான சாலையை விலக்கிச் செல்லச் செல்ல ஊரே கண்ணில் படவில்லை. சிறிய தார்சாலையில்  சென்று திரும்பும்போது ஊர் சரிவில் வீழ்ந்து கிடக்கிறது. பெரிய கண்மாய் ஒன்றும் அதன்முன்னால் பேருந்து நிறுத்தமும் காணப்படுகிறது. ஆயிரம் பேர் வசிக்கும் சிறிய ஊர். ஒரு காலத்தில் நாட்டுச்சாராயத்திற்குப் பேர்போன ஊராக இருந்திருக்கிறது. இன்று ஊரெங்கும் ஆயத்த ஆடைகள் அதிலும் குறிப்பாக, நைட்டி தயாரிக்கும் தொழிற்சாலைகள் காணப்படுகின்றன. 

சிறிய ஊர் ஆனாலும் பல்லாயிர வருசத் தொன்மை கொண்ட நிலம். 

மாங்குடியை ஒட்டிய பகுதிகளில் தொல்கற்காலத்திலே மனிதர்கள் வசித்த தடயங்கள் அகழ்வாய்வில் கிடைத்திருக்கின்றன. சங்ககாலத்தில் இந்தப் பகுதியில் நிறைய ஊர்கள் இருந்திருக்கின்றன. அவை காலமாற்றத்தில் அழிந்து போய்விட்டன என்கிறார்கள். இந்த ஊரில் நடைபெற்ற அகழ்வாய்வில் சங்க கால நாணயங்கள், பானைகள், கல் ஆயுதங்கள் கிடைத்திருக்கின்றன. 

மாங்குடி மருதனாரின் நினைவுத்தூண் ஒரு வேப்பமரத்தை ஒட்டி அமைக்கப்பட்டிருக்கிறது.  1992ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்தத் தூணின் இரண்டு பக்கமும் இரண்டு யானைகள். அடியில் ஒரு பீடம். அதில் புறநானூற்றுப் பாடல் பற்றிய குறிப்பு.  தூணில் மாங்குடி மருதனார் பற்றிய கல்வெட்டு காணப்படுகிறது. தமிழகத்தின் மூவேந்தர்களைக் குறிக்கும் புலி, மீன் மற்றும் வில் முத்திரை காணப்படுகிறது. மற்றபடி முறையான பராமரிப்பின்றி குப்பைகளும்  கழிவுநீரும் தேங்கிக் கிடக்க, நிழலுக்கு உறங்கும் நாயுமாக அந்த இடம் அதன் புராதனப் பெருமையை மறந்து கவனிப்பாரற்றுக் கிடக்கிறது. வருடம் ஒரு முறை பொங்கல் நாளில் இங்கே விழா எடுப்பதுண்டு என்கிறார்கள் உள்ளூர்வாசிகள். 

மதுரை மாநகரின் சிறப்புகளை ஒரு ஆவணப்படம் போல மிக நுட்பமாக விவரிக்கும் மதுரைக்காஞ்சி, பண் டைய மதுரையின் உன்னத சாட்சியாக உள்ளது, அதற்கு முக்கியகாரணம் மாங்குடி மருதனாரின் கவித்துவமே. 

ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி மாங்குடி மருதன்  தலைவனாக  
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பிற்  
என்ற புறநானூற்றுப் பாடலால் மாங்குடி மருதனாரின் பெருமை  நன்கு விளங்குகிறது.  

குறுந்தொகையில் மூன்று பாடல்கள்,  நற்றிணையில் இரண்டு பாடல்கள், அகநானூற்றிலே ஒரு பாட்டு, புறநானூற்றிலே ஆறு பாடல்கள், திருவள்ளுவமாலையில் ஒன்று மாங்குடி மருதன் பெயரால் இடம் பெற்றுள்ளன.  ஆசிரியப்பாவால் இயற்றப்பட்ட  மதுரைக் காஞ்சி 782 வரிகளைக் கொண்டது. 

மழைகொளக் குறையாது, புனல்புக மிகாது 
கரைபொருது இரங்கும் முந்நீர் போல,  
கொளக்கொளக் குறையாது. தரத்தர மிகாது.  

என்று மதுரை நகரில் நடைபெற்ற வணிகத்தைப் பற்றி மதுரைக்காஞ்சி விவரிக்கிறது. அதாவது  பொருள்களைக் குவிக்கக் குவிக்க, மக்கள் வாங்கிப் போய்க் கொண் டிருப்பார்களாம். கடல்நீரை மேகம் கொள்ளுவதால் கடல் ஒருபோதும் அளவில் குறைவதில்லை; ஆறுகள் சேர்வதால் கடல் மிகுதியாவதும் இல்லை. அதே போல் தான், மதுரையின் கடை வீதிகளும்.  

மக்கள் கூட்டமாக வந்து பொருள்களை வாங்குவதால் குறைந்து போனதாகவோ, பலர் விற்கக் கொண்டு வரும் பொருட்களால் அதிகமாகிப் போனதாகவோ இன்றி எப்போதும் போல் விரிந்து விளங்கியது என்கிறது மதுரைக்காஞ்சி. மதுரையில் ஒரு இரவு எப்படியிருக்கும் என்று அறிந்து கொள்ள அவசியம் மதுரைக்காஞ்சியை ஒருமுறையாவது வாசிக்க வேண்டும்.  முதல் யாம, இரண்டாம் யாம நிகழ்ச்சிகள் எப்படி நடைபெறுகின்றன, கடைகள் எப்படி மூடப்படுகின்றன என விரிவாக மாங்குடி மருதன் விவரிக்கிறார். 

கள்வரையும், அவர்கள் வராது ஊர்க்காவல் செய்யும் காவலர்களையும்  அவர் வர்ணிப்பது அற்புதமானது . பேய்களும், துஷ்ட தெய்வங்களும் கூடித்திரியும் மூன்றாம் சாமத்தில், பெண்யானையின் கருத்த தோலைப் போன்று அடர்ந்த கரிய இரவில் கள்வர் வருவார்கள்.  பயமற்ற கண்கள் கொண்ட அவர்கள் கையில் கல்லும், மரத்தையும் துண்டாக்கும் கூர்மையான வாளும் இருக்கும். காலில் செருப்பு அணிந்திருப்பார்கள்.  இடையில்  உடைவாள். கருமையான மேலாடை. சுவரில் ஏற ஒரு நூலேணி கொண்டு வருவார்கள். ஊரைக்காவல் காக்கும் காவலர் கள் தூக்கம் அறியாதவர்கள். அஞ்சாத வீரம் கொண்ட வர்கள். களவு சாஸ்திரம் கற்றுத் தேர்ந்தவர்கள். தப்பி ஓட முயலும் கள்வரை அம்புகளால் அடித்து வீழ்த்து வார்கள். யானையைப் பிடிக்கச் செல்லும் புலிபோல் கள்வரை மடக்கிப்  பிடிப்பார்கள் என்கிறார். 

மதுரை நகரில் விதவிதமான கொடிகள் பறந்ததை மருதனார் விவரிப்பது ஒலிம்பிக்ஸில் காண்பது போலவே இருக்கிறது,  தச்சர், கொல்லர், பூ விற்போர், நெசவாளர், உழவர் உள்ளிட்ட தொழிலாளர்கள் மதுரை நகரில் வாழ்ந்தனர். அறுத்த சங்கைக் கொண்டு வளையல் போன்ற அணிகலன்களைச் செய்பவர்கள்  தனியே இருந் தனர். இரத்தினக் கற்களிலே துளையிட்டு அவைகளை மாலையாகக் கோர்த்துக் கொடுப்போர் வசித்தனர்.   

புடம்போட்டு எடுத்த பொன்னால் நகைகள் செய்பவர்களும் புடவைகளை விலை கூறி விற்கும் வியா பாரிகள், செம்பை நிறுத்து விலைக்கு வாங்கும் வணிகர் கள், மலர்கள், அகில், சந்தனம் ஆகியவற்றை விற்பனை செய்வோரும் எதனையும் உயிரோட்டமாக வரையும்  ஓவியர்களும் இருந்தனர். இதனை, 

கோடுபோழ் கடைநரும் திருமணி குயினரும் சூடுறு நன்பொன் சுடர் இழை புனைநரும்  
பொன்உரை காண்மரும், கலிங்கம் பகர்நரும்  
செம்புநிறை கொண்மரும் கலிங்கம் பகர்நரும் செம்புநிறை கொண்மரும்,  
வம்புநிறை முடிநரும் பூவம்புகையும் ஆயும் மாக்களும்,  
எவ்வகைச் செய்தியும் உவமங்காட்டி நுண்ணிதின் உணர்ந்த நுழைந்த நோக்கின் கண்ணுள் விளைஞரும் 
என்ற மதுரைக்காஞ்சி வரிகள் தெளிவாக  எடுத்துக் காட்டுகின்றன.  

மதுரையில் சமணர்கள் வாழ்ந்த சமணப் பள்ளியின் சுவர்களில் அழகான இயற்கை வண்ண ஓவியங்கள் தீட்டப்பெற்றிருந்தமையை,  

கயம்கண் டன்ன வயங்குடை நகரத்துச் செம்பியன் றன்ன செஞ்சுவர் புனைந்து நோக்குவிசை தவிர்ப்ப மேக்குயர்ந் தோங்க  
இறும்பூது சான்ற நறும்பூண் சேக்கையும் என்று மாங்குடி மருதனார் எடுத்துக் காட்டுகின்றார். 

இப்படித் தமிழ் மக்களின் வாழ்வைக் கொண்டாடிய ஒரு கவிஞரின் நினைவுத்தூண் கவனிப்பாரற்றுக் கிடக்கிறது. எப்போதாவது வெளியூரில் இருந்து ஒரு தமிழ் ஆய்வாளர் அல்லது வரலாற்று அறிஞர் வந்து இந்த நினைவுத்தூணைப் பார்வையிடுவதோடு சரி, வேறு எந்தக் கவனமும் கிடையாது. எங்கள் ஊர் விருதுநகர், திருநெல்வேலி இரண்டு மாவட்டங்களுக்கும் எல்லையில் இருப்பதால் இருவருமே எங்களைக் கண்டுகொள்வதில்லை என்று குறைபடுகிறார்கள் உள்ளூர்மக்கள்.  

செம்மொழி நிறுவனங்கள் கல்லூரி கல்லூரியாக  ஆண்டிற்கு நூறு கூட்டங்கள் நடத்தி பல லட்சங்கள் செலவு செய்கின்றன. ஆனால் இது போன்ற நினை வகங்களைக் கண்டுகொள்வதேயில்லை. செம்மொழி மையமோ, தமிழக அரசோ இதையும் கபிலர் குன்றினை யும் முறையாகப் பராமரித்து மாங்குடி மருதனாருக்கும் கபிலருக்கும் விழா எடுத்துக் கௌரவிக்க வேண்டும். அதுதான் நம் மண்ணையும் மக்களையும் பாடிய கவிஞர் களுக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதை. 


நன்றி - உயிர்மை ஏப்ரல் 2013