உலகம் விளக்கமுற உதிக்கின்ற ஞாயிறு போல் உள்ளங்களில் விளக்கேற்றியவர் வள்ளுவர். வாசுகி என்னும் கற்புக்கரசியை மணந்து இல்லறமெனும் நல்லறத்தை உலகிற்கு உணர்த்திய உத்தமர்.
ஆணும், பெண்ணும் லயமும் சுருதியும் போல், சுடரும் கதிரும் போல், மலரும் மணமும் போல் இருவர் வாழ்வும் ஒன்றுபட்டு, ஒருவரை ஒருவர் நன்கறிந்து, நயம்பட அன்பாய் வாழ்வு நடத்துவதுதான் இல்லறம். காதல் இருவர் கருத்தொருமித்து ஆதரவுபட்டு வாழ்வதுதான் இல்வாழ்க்கை.
இல்வாழ்க்கைப் பண்பும் பயனும்
இல்வாழ்க்கையின் ஆணிவேரான பண்பு அன்பு; அதன் பயன் அறம். அறவழியில் இல்லறம் நடத்துபவரே உலகில் வாழ முயலும் அனைவரிலும் தலை மகனாவார்.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது
- - - (குறள் 45)
என்கிறார் வள்ளுவர்.