22/02/2012

வேருக்கு நீர் வார்த்தவர்கள் - 17 : திரிபுரி பழமொழிகளுக்கு இணையான தமிழ்ப் பழமொழிகள்!

 "நாட்டுப்புறவியலின் தந்தை' பேராசிரியர் நா.வானமாமலை

துஷார் காந்தி நியோகி என்ற ஆய்வாளர் திரிபுரி மக்களது சில பழமொழிகளை ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளியிட்டுள்ளார். முடிந்த அளவிற்கு திரிபுரி பழமொழிகளுக்கு இணையான ஆங்கிலப் பழமொழிகளையும் தொகுத்துள்ளார். அக் கட்டுரையில் வெளியிடப்பட்ட திரிபுரி பழமொழிகள், பரேந்திரதேவ் வர்மன் என்ற கிராமவாசியினால் சேகரிக்கப்பட்டது. அவருக்குத் திரிபுரி மொழியும் வங்காளி மொழியும் தெரியும். இப்பழமொழிகளை அவர் தமது வயது முதிர்ந்த தாய்-தந்தையரிடம் கேட்டு அறிந்தார்.


நியோகி மேற்குறிப்பிட்ட கட்டுரையின் முன்னுரையில் ""பலமொழி பேசும் மக்களிடையே ஒரே விதமான கருத்துக்களும் கொள்கைகளும் நிலவுவதை அவர்களுடைய பழமொழிகள் காட்டுகின்றன'' என்று எழுதுகிறார்.
இதற்கு உதாரணமாக சில பழமொழிகளுக்கு வங்காளியில் இணைப் பழமொழிகளைக் காண்பித்து, அவை ஒரே கருத்தைக் கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

""இவற்றின் கருத்தொற்றுமைக்குக் காரணம் என்ன? இருவேறு மொழிகளில் வழங்கும் இப்பழமொழிகள் ஒரே மூலத்திலிருந்து தோன்றியவையா?'' என்று வினவுகிறார்.

இக்கேள்விகளுக்கு அவர் விடையளிக்க முயலுகிறார். ""ஒரு மூலத்தோற்றம்'' என்ற விடை பொருத்தமற்றது என்று கூறிவிட்டு, அவர் ""மனிதனுடைய அறிவாற்றல் அளவில் வேறுபட்டபோதிலும் தன்மையில் ஒன்றாகவே இருக்கிறது'' என்று அபிப்பிராயம் கூறுகிறார்.

பின்னர் ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்குக் கடன் பெறுவது என்ற கொள்கையையும் - திரிபுரிப் பழமொழிகள் சிலவற்றை வங்காளிப் பழமொழிகளோடு ஒப்பிட்டு ஆராய்கிறார். எந்த மொழியிலிருந்து எந்த மொழி கடன் வாங்கியது என்பதை உறுதியாகக் கூறமுடியாது என்ற முடிவுக்கு வருகிறார். இவ்வொற்றுமைக்குக் காரணம், இவ்விரு நாகரிகங்களின் சமூகப் பின்னணி ஒரே மாதிரி இருந்த காலத்தில் இப்பழமொழிகள் தோன்றியிருக்க வேண்டுமென கருத்துத் தெரிவிக்கிறார்.

இது, மிகவும் உண்மையான கூற்றாகும். வெவ்வேறு மொழிகளில் உள்ள பழமொழிகள் கருத்தில் மட்டுமல்லாமல் உவமைகள், உருவகங்கள், குறியீடுகள், படிமங்கள் முதலிய வெளியீட்டுக் கூறுகளில்கூட ஒற்றுமை உடையனவாய் இருப்பதைப் பல மொழிகளில் உள்ள பழமொழிகளை ஒப்பிட்டு ஆராய்ந்தவர்கள் அறிவார்கள். உலகில் வெகு தூரத்திற்கு வழங்கிவரும் இரு மொழிகளில் ஒரே கருத்தும், ஒரே உருவ அமைப்பும் கொண்ட பழமொழிகள் கடன் வாங்கல் முறையால் தோன்றியிருக்க முடியாது. தமிழும் திரிபுரியும் நெடுந்தொலைவில் வாழ்கின்ற மக்கள் கூட்டத்தினரால் பேசப்படுபவை.

இந்திய நாட்டின் வடகிழக்கிலுள்ள இமயமலைப் பள்ளத்தாக்கில் வாழ்கின்ற திரிபுரி மக்களும், இந்திய நாட்டின் தென் கோடியில் வாழ்கின்ற தமிழ் மக்களும், எந்தக் காலத்திலும் பண்பாட்டுத் தொடர்பு கொண்டவர்களல்லர்.
ஆயினும் பரேந்திர தேவ் வர்மன் தொகுத்துத் தந்துள்ள 35 பழமொழிகளில் 32-க்குக் கருத்தொருமை உடைய இணைப் பழமொழிகள் உள்ளன என்பதை எளிதான முயற்சியால் நான் கண்டேன். இவற்றுள் 32 பழமொழிகளுக்கு நேரிடையான தமிழ்ப் பழமொழிகள் உள்ளன. தமிழ் நாட்டுப் பாடல் ஆய்வாளர்களான டி.மங்கையும், .மீனாட்சிசுந்தரமும் 32 திரிபுரிப் பழமொழிகளுக்கு இணையான 32 தமிழ்ப் பழமொழிகளைத் தேடித் தந்தார்கள்.
தமிழ், திராவிட மொழி வகையைச் சேர்ந்தது. இதனை நாலரைக்கோடி மக்கள் பேசுகின்றனர். திரிபுரி மொழியைச் சில லட்சம் மக்கள்தாம் பேசுகிறார்கள். ஆயினும், இவ்விரண்டு மொழிகளிலும் கருத்தொற்றுமை உடைய பழமொழிகளைக் காணமுடிகிறது.

ஒப்பிடுதலை எளிதாக்குவதற்காக நான் ஒரு பட்டியல் தயாரித்துள்ளேன். அப்பட்டியலில் முதல் காலத்தில் திரிபுரிப் பழமொழியைத் தமிழ் மொழிபெயர்ப்போடு கொடுத்துள்ளேன். இரண்டாவது காலத்தில் தமிழ்ப் பழமொழியும், மூன்றாவது காலத்தில் பழமொழியின் விளக்கமும் தரப்பட்டுள்ளன. அவைகளுள் சில...

நன்றி - தமிழ்மணி


கருத்துகள் இல்லை: