22/02/2012

பழகு தமிழ்: வேருக்கு நீர் வார்த்தவர்கள் - 1 - இடைமருதூர் கி.மஞ்சுளா


"தமிழ்' என்ற பயிருக்கு மிகச்சிறந்த தமிழறிஞர்கள் பலர் தங்களை வருத்திக்கொண்டு முன்பு நீர்வார்த்த காரணத்தால்தான், அப்பயிர் செழித்து வளர்ந்து இன்றைக்கு "செம்மொழி' என்னும் தகுதி பெற்றிருக்கிறது என்பது மறுக்க இயலாத உண்மை.

 இவ்வறிஞர்கள் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்னும் முத்தமிழுக்கும் நீர்வார்த்து உரமிட்டவர்கள். அவ்வாறு அவர்கள் நீர் வார்க்காது போயிருந்தால்... "நம் தாய்மொழியின் நிலைமை இன்று என்னவாகியிருக்கும்?' என்று ஒவ்வொரு தமிழரும் தங்களுக்குள்ளேயே வினா தொடுத்துக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பர்.
 அவ்வறிஞர்கள், "தமிழ்'மொழி (முத்தமிழ்) பற்றி படைத்தளித்த செம்மையான சில அரிய கட்டுரைகள் அவர்களது சிந்தனைச் சிதறல்களான எழுத்துகள் ஒன்றுகூட மாறுபடாமல் "வேருக்கு நீர் வார்த்தவர்கள்' என்ற இந்தப் புதிய பகுதியை அப்படியே அலங்கரிக்க உள்ளன.


 -ஆசிரியர் (தமிழ்மணி - தினமணி)

தமிழகத்தில் பல நாடுகள் உண்டு; பல குலங்கள் உண்டு. ஒரு நாட்டுத் தமிழுக்கும் இன்னொரு நாட்டுத் தமிழுக்கும் வேற்றுமையே இல்லை என்று கூற முடியாது. ஒரு குலத்தார் பேசுந்தமிழ் மற்றொரு குலத்தார் பேசுந்தமிழை எல்லா வகையிலும் ஒத்திருக்கும் என்று சொல்ல முடியாது.
 "பந்தல்' என்ற சொல்லின் ஆட்சியைப் பார்ப்போம்: திருமணத்திற்குப் பந்தல் போடும் வழக்கம் இந்நாட்டில் சாலப் பழமை வாய்ந்தது

காவிரிப்பூம்பட்டினத்திலே செல்வக் குடியிற் பிறந்த கண்ணகிக்கும் கோவலனுக்கும் முத்துப் பந்தலிலே திருமணம் நிகழ்ந்தது. ""மாலை தாழ் சென்னிவயிரமணித் தூணகத்து நீல விதானத்து நித்திலப் பூம்பந்தர்'' என்று அப்பந்தலைச் சிலம்பு பாடிற்று. கோடையிலே வழிநடந்து செல்வார்க்கு நீரும் நிழலும் தரும் பந்தலைத் "தண்ணீர்ப் பந்தல்' என்பர்.

 இத்தகைய மேன்மையான சொல் தனவணிகர் நாடு என்னும் செட்டிநாட்டிலே அமங்கலச் சொல்லாகக் கருதப்படுகின்றது. பந்தல் என்பது அந்நாட்டிலே மணப்பந்தலைக் குறிப்பதில்லை; பிணப் பந்தலையே குறிக்கும். இழவு வீட்டில் போடுவது பந்தல்; கல்யாண வீட்டில் போடுவது "காவணம்' அல்லது "கொட்டகை'. இலக்கியத்தில் வழங்கும் "காவணம்' என்ற சொல் செட்டிநாட்டிலே பழகு தமிழாய்ப் பயில்கின்றது.

 இனி, "தொண்டு' என்ற தொன்மையான சொல்லைப் பார்ப்போம்: தொண்டு என்பது சேவை. நாட்டுக்குச் செய்யும் சேவை "தேசத்தொண்டு' எனப்படும். இறைவனுக்குச் செய்யும் சேவை "திருத்தொண்டு' எனப்படும். ""தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே'' என்னும் வாய்மொழி (üவையார்) பண்டைக் காலத்தே தமிழ்நாட்டில் எழுந்தது. இத்தகைய சொல், கொங்கு நாட்டிலே இப்பொழுது இழிந்த பொருளில் வழங்குகின்றது. ஒழுக்கம் கெட்டவரைக் குறிக்கின்றது அச்சொல்.
 "பையச் சென்றால் வையத் தாங்கும்'' என்பது இந்நாட்டிலே ஒரு பழமொழி. பைய என்றால், மெல்ல என்பது பொருள். ""பையப் போ'' என்ற சொல் பாண்டிய நாட்டிலே பெருவழக்குடையது. தேவாரத்தில் இச்சொல் ஆளப்பட்டுள்ளது. மதுரை மாநகரில் சிவனடியார் திருமடத்தில் தீயோர் வைத்த தீயை அரசனிடம் செலுத்தத் திருவுளங்கொண்ட திருஞானசம்பந்தர், ""பையவே சென்று பாண்டியற்கு ஆகவே'' எனப் பணித்ததாகத் தேவாரம் கூறும். இத்தகைய சிறந்த ஆட்சியுடைய சொல் இப்போது சென்னை முதலிய இடங்களில் வழங்குவதில்லை.

 அங்காடி என்பது முன்னொரு காலத்தில் தமிழ் நாடெங்கும் வழங்கிய சொல். (தஞ்சை மாவட்டத்தில் அங்காடிக்காரி என்ற சொல் வழக்கில் உள்ளது. தெருவிலே கூவி விற்றுச் செல்வோரை அது குறிக்கிறது) இக்காலத்தில் "பசார்' என்று சொல்லப்படும் இடமே முற்காலத்தில் அங்காடி எனப்பட்டது. பெரிய நகரங்களில் அந்தியும் பகலும் அங்காடி நடைபெற்றது. அந்தியில் நடைபெற்ற அங்காடியை "அல்லங்காடி' என்றும், பகலில் நடைபெற்ற அங்காடியை "நாளங்காடி' என்றும் அழைத்தனர்.

 பட்டினத்தடிகள், அங்காடி என்ற சொல்லை எடுத்தாள்கின்றார். ""அங்காடி நாய்போல் அலைந்து திரிந்தேனே'' என்பது அவர் பாட்டு. கன்னடத்திலும் தெலுங்கிலும் இன்றும் "அங்கடி' என்ற சொல் வழங்குகின்றது. மலையாளத்திலும் அங்காடி உண்டு. தமிழ் மொழியில் அங்காடியை மீண்டும் ஆட்சியில் (மொழியில்) அழைத்தால் எத்துணை அழகாக இருக்கும்? செந்தமிழில் ஆர்வமுடைய செட்டியார் ஒருவர் தமது காசுக்கடைக்கு "அணிகல அங்காடி' என்று பெயரிட்டுள்ளார். சென்னையிலுள்ள மூர் மார்க்கட்டை, மூரங்காடி என்று வழங்கும் நாள் எந்நாளோ?
 பைத்தியக்காரனுக்குத் தமிழ்நாட்டிலே பல பெயர்கள் உண்டு. படிக்காதவர்கள் அவனைப் "பித்தன்' என்பார்கள்; பித்துக்கொண்டவன் என்னும் பொருள் நன்றாகத் தோன்றும்படி "பித்துக்கொள்ளி' என்றும் சொல்லுவார்கள். கிறுக்கன் என்பதும் அவனையே குறிக்கும். திருநெல்வேலியிலே பைத்தியக்காரனைக் "கோட்டிக்காரன்' என்பர். கோட்டி என்பது நல்ல தமிழ்ச் சொல். கோட்டம் என்றால், வளைவு அல்லது கோணல். மனத்திலே உள்ள கோணல் "மனக்கோட்டம்' எனப்படும். பேச்சிலே வளைவு நெளிவு காணப்பட்டால் அதைச் "சொற்கோட்டம்' என்பர். இவ்விருவகைக் கோட்டத்தையும் திருவள்ளுவர் எடுத்துக் காட்டியுள்ளார்.

 ""சொற்கோட்டமில்லது செப்பம்; ஒரு தலையா
 உட்கோட்ட மின்மை பெறின்'' (குறள்-119)

 என்பது திருக்குறள். எனவே, அறிவிலே கோட்டம் உடையவனைக் "கோட்டி' என்று சொல்வது பாண்டிய நாட்டு வழக்கு.

 கோட்டியைத் தீர்க்கும் குற்றால அருவியைச் சிறிது பார்ப்போம்: மலையினின்று விழும் அருவியைக் காண்பது கண்ணுக்கு இன்பம்; அருவியில் நீராடுவது உடலுக்கு இன்பம். திருநெல்வேலியில் உள்ள திருக்குற்றலாத்திலே அருமையான பல அருவிகள் உள்ளன. தேனருவி என்பது ஓர் அருவியின் பெயர். வட அருவி என்பது மற்றோர் அருவி; ஐந்தலை அருவி என்பது இன்னோர் அருவி. அருவியை நினைக்கும்பொழுதே கவிகள் உள்ளத்தில் ஆனந்தம் பிறக்கும்; கவிதை பொங்கும். "வீங்குநீர் அருவி வேங்கடம்' என்று திருப்பதியைச் சிறப்பித்துப் பாடியுள்ளார் சிலப்பதிகார ஆசிரியர். "பொங்கருவி தூங்கும் மலை பொதிய மலை என் மலையே' என்று செம்மாந்து பாடினாள் பொதியமலைக் குறத்தி. "தேனருவித் திரை எழும்பி வானின் வழி ஒழுகும்' என்று பாடினாள் திருக்குற்றாலக் குறவஞ்சி. இத்தகைய பழமையான சொல் இன்றும் திருநெல்வேலியில் வழங்குகின்றது. ஆனால், சென்னை முதலிய இடங்களில் அருவி என்றால் தெரியாது; நீர் வீழ்ச்சி என்றால்தான் தெரியும். நீர்வீழ்ச்சி என்பது waterfall என்ற ஆங்கிலப் பதத்தின் நேரான மொழிபெயர்ப்புபோல் காணப்படுகின்றது.
 மலையிலே வாழ்கின்ற ஒரு குலத்தாரை மலைப் பளிங்கர் என்பர். வேடர் வகுப்பைச் சேர்ந்தவர் அல்லர்; மலைநாட்டுப் பழங்குடிகள். பளிங்கன் என்ற சொல்லை ஆராய்ந்தால், அஃது ஒரு பழமையான தமிழ்ச் சொல்லின் சிதைவு என்பது புலனாகும். தமிழ் இலக்கியத்தில் மலையில் வாழும் வகுப்பார்க்குப் பல பெயர்கள் உண்டு. அவற்றுள் ஒன்று புளிஞர் என்பது. புளிஞர் என்ற சொல்லைக் கம்பர் எடுத்தாள்கின்றார். மறைந்து நின்று அம்பெய்த இராமனை நோக்கி,

 ""வெவ்விய புளிஞர் என்ன விலங்கியே மறைந்து
 வில்லால் எவ்விய தென்னை''

 என்று வாலி கேட்டான் என்பது கம்பர் பாட்டு. புளிஞன் என்ற சொல்லே பளிங்கன் என்று மருவி வழங்குகின்றது.

 தமிழ்நாட்டுப் பழங்குடிகளின் மற்றொரு வகுப்பார் பரதவர். கடற்கரையூர்களில் வாழ்பவர் பரதவர் என்று தமிழ் இலக்கியம் கூறும். பழங்காலத்தில் சிறந்திருந்த காவிரிப்பூம்பட்டினம், கொற்கை முதலிய துறைமுக நகரங்களில் பரதவர் செழித்து வாழ்ந்தார்கள். காவிரிப்பூம்பட்டினம் பரதவர் மலிந்த பயன் கெழு மாநகரமாக விளங்கியது. கொற்கைக் கடலில் மூழ்கி முத்தெடுத்து, "தென்னாடு முத்துடைத்து' என்று எந்நாட்டவர்க்கும் காட்டியவர் பரதவரே. பரதவர் என்பது பரதர் என்று குறுகி, பரவர் என்று மருவி வழங்குகின்றது. தூத்துக்குடியில் பரவர் குலத்தார் இன்றும் செழுமையுற்று வாழ்கிறார்கள்.

நன்றி - தமிழ்மணி

கருத்துகள் இல்லை: