25/09/2011

மொழிப் பயிற்சி – 58 : பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்! – கவிக்கோ ஞானச்செல்வன்

விபசாரிக்குத் தமிழில் பரத்தை என்று பெயர். இதற்கு நிகரான ஆண்பாற் சொல் பரத்தன் என்று தமிழில் இருக்கிறது. "நண்ணேன் பரத்த நின் மார்பு' (தலைவி கூற்று) எனும் சங்கத் தொடர் காண்க. சிலப்பதிகாரத்தில் இருபாலர்க்கும் ஏற்பப் பொதுமையில் பரத்தர் எனும் சொல் எடுத்தாளப்பட்டுள்ளது. "வம்பப் பரத்தர் வறுமொழி யாளர்' என்பது சிலம்பு. ஆதலின் தமிழில் பரத்தை - பரத்தன் இருபாற் சொற்களும் உண்டு எனக் கண்டு மகிழ்க. விதவைக்குத் தமிழ்ச் சொல் கைம்பெண். இச்சொல்லை நீட்டி கைம்பெண்டாட்டி ஆக்கி, இது மருவி கம்மனாட்டி என்று பேச்சு வழக்கில் உள்ளது. திட்டுகிறபோது, "போடா கம்மனாட்டி' என்றோ, "கம்மனாட்டிப் பயலே' என்றோ வழங்குதலும் காண்கிறோம். ஆகவே கைம்பெண் (விதவை) எனும் சொல்லுக்கு ஆண்பால் - கைம்(பெண்)பயல் என்பதே ஆகும்.

மீண்டும் சில வாக்கியப் பிழைகள் தொலைக்காட்சிச் செய்தியில் ஒருநாள், "வன்முறைத் தாக்குதல்களுக்கு உயிரிழந்தனர்' என்று படிக்கப்பட்டது.

தாக்குதல்களுக்கு உயிரிழந்தனரா?

தாக்குதல்களால் உயிரிழந்தனரா?

இரண்டாவதுதான் பொருத்தமாக உள்ளது. தாக்குதலுக்குப் பலி ஆயினர் என்னும்போது வாக்கியம் சரியாகும். இரண்டு வகையாலும் சொல்லிப் பாருங்கள். வேற்றுமை புலப்படும்.

மற்றொரு செய்தி: "ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் கொள்ளை'. இதைக் கேட்டவுடன், அடுக்குமாடி வீடுகளில் ஓரடுக்கு உண்டா? குறைந்தது இரண்டு அடுக்காவது இருக்குமே என்று நினைக்கத் தோன்றியது. ஒரு என்பதை அடுக்கு எனும் சொல்லோடு இணைத்துக் காண்பது இயல்பாக எழும் எண்ணமே. இவ்வாக்கியத்தை, "அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கொள்ளை' என்று எழுதினால் - படித்தால் பொருள் உணர்த்துதலில் பிழையின்றி அமையும். சற்றே கவனம் கொள்ளுதல் வேண்டும்.

ஓர் இலக்கியத் திங்களிதழில் ஒரு வாக்கியம்.

"இதெல்லாம் நடைமுறை நியாயங்கள்'. இத்தொடர் சரியா? இது என்பது ஒருமை. நியாயங்கள் பன்மை. இவையெல்லாம் நடைமுறை நியாயங்கள் என்று எழுதியிருக்க வேண்டும். (இப்படி நுட்பம் காண்பது நடைமுறை நியாயமா என்று முணுமுணுக்காதீர்)

மற்றொரு திங்களேட்டில், "எத்தகைய இடர்பாடுகள் ஏற்பட்டாலும், மக்கள் உந்தாற்றல் பெருகிறார்கள்' என்று கண்டோம். இவ்வாக்கியத்தில் இரண்டு பிழைகள். இடர்ப்பாடுகள் என்று ஒற்றுச் சேர்த்து எழுத வேண்டும். மற்றது, உந்தாற்றல் பெறுகிறார்கள் என்று (பெறுதல்) எழுத வேண்டிய இடத்தில் பெருகிறார்கள் என இடையினம் (பெருகுதல்) போட்டது பிழை. உந்தாற்றல் எனும் அருஞ்சொல் எழுதவல்லார் பெறுதலைப் பிழையாக்கலாமா?

அரித்துவார் கங்கையின் பெருக்கோடு இமயமலையின் மடியில் (அடிவாரத்தில்) அமைந்த இயற்கையெழில் செறிந்த இடம். அந்த ஊரைப் போல் மனத்திற்கு அமைதி தரும் மற்றொரு ஊர் பற்றி எழுதியுள்ள ஓர் எழுத்தாளர், "கங்கையில்லாத ஹரித்துவாரைப் போன்ற மனதுக்கு அமைதியளிக்கும் இதமான சூழ்நிலை' என்று குறிப்பிட்டுள்ளார். ஹரித்துவாரில் கங்கை ஓடவில்லை என்பதான ஒரு கருத்தும் இவ்வாக்கியத்தில் ஏற்படக் கூடுமன்றோ? இதனைத் தெளிவாக எப்படி எழுதலாம்?

"மனத்திற்கு அமைதியளிக்கும் இதமான - ஹரித்துவாரைப் போன்ற சூழ்நிலை - ஆனால் கங்கை மட்டும் இல்லை' என்று எழுதலாமே?

"மக்காவ்' என்பது ஒரு தீபகற்ப நாடு. இந்நாட்டைப் பற்றி எழுதிவரும் ஒருவர், மக்காவில் - என்று தொடங்கி ஒரு செய்தி. மக்கா என்று அரபுநாட்டில் ஓர் ஊர் உண்டே! முகம்மது நபி பிறந்தது மக்காவில். வெறியர்களால் துரத்தப்பட்டு மதீனா சென்றார். ஆதலின் மக்காவில் என்று எழுதும்போது மக்கா என்ற ஊரின் பொருள் தோன்றி வரும். பின் எப்படி எழுதலாம்?

"மக்காவ்' இல் என்று எழுதலாம். இது சற்றே கடினமாகத் தெரிகிறது. சற்று விரிந்து அமையினும், மக்காவ் நாட்டில் என்று எழுதுவதே பொருத்தமுடையதும், பிழையற்றதும் ஆகும்.

(தமிழ் வளரும்)

நன்றி – தினமணி கதிர்

24/09/2011

பாம்பும் பிடாரனும் - வண்ண நிலவன்

வெகு நேரமாக ஊதிக்காட்டியும் அதற்குச் சினம் தணியவில்லை. ஏதோவொரு அபூர்வநிலையை எய்துவதற்காக நின்றும், வளைந்தும் ஆடிக் கொண்டிருந்தது என்று நினைத்தான் பிடாரன். இருவரும் ஒருவரோடு ஒருவர் பழகி வாழ்ந்திருந்து, ஒத்த நிறத்தை அடைந்து இருந்தார்கள். சாம்பலும் கருப்பும் கலந்த ஒரு வர்ணத்தைப் பிடாரனும், பாம்பும் தோலின் நிறமாகப் பெற்றிருந்தார்கள்.யாரோ ஒருவருக்கு ஆதிநிறம் வேறொன்றாக இருந்து, நட்பின் நிமித்தம் சுய வர்ணத்தை அழித்துக் கொண்டிருந்தார்கள்.அபூர்வமான சிநேகத்தால் இருவரும் பீடிக்கப்பட்டுப் பல காலமாயிற்று. யாரிடமிருந்தும் யாரும் இனித் தப்பிப்பதற்க்கில்லை.

அவன் மகுடியின் ஊதுவாய் எச்சிலால் நிரம்பி வழிந்து விட்டது. அனேக விதமான பாம்புகளுக்குக் கிளர்ச்சியும்,ஆனந்தமும் நல்கிய மகுடியின் துவாரங்களில், பிடாரனின் நாற்றம் நிறைந்த எச்சில், நுரை நுரையாகக் கொப்பளித்து, அடைத்துக் கொண்டிருந்தது.

இன்றுபோல அது என்றும் நடந்துகொண்டதே இல்லை. இத்தனையிலும் இருவருக்கொள்ளும் எவ்விதமான குரோதமும் சமீபகாலத்தில் இல்லை.

அப்போது மகுடிகளைச் செய்ய இப்பிடாரன் தன் மாமனுடன் காட்டில் கல் மூங்கில்களைத் தேடி அலைந்தான். மாமன் அவனுக்கு ஆசானாயிருந்து, பாம்புகளையும், மகுடியின் நுட்பங்களையும் குறித்துப் பலவிதமான செய்திகளைச் சொல்லி இருந்தான்.மாமன் பாம்புகளோடு சிறு வயது முதலே வாழ்ந்து, கண்களும், அவன் இடுப்பின் மெலிந்த வளைவும், கால் தொங்கு சதைகளில் உள்ள வங்குச் செதில்களும் அவனையும் பாம்புகளோடு பொருத்திக் கொண்டிருந்தன. வீர்யமுள்ள விஷ ஜந்துகளோடு அவன் காலம் கழித்தும், நல்லதென்று தோன்றியதைச் செய்தும் வாழ்ந்திருந்தான். பாம்புகளிடம் பேசும்விதம் முப்பது வயதுக்கு மேல் பிடிபட்டதென்றும் , பிடாரன் பசி பொறுக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்றும் மாமன் அடிக்கடி சொல்லுவான்.

கிராமங்களை விட்டு மரங்களடர்ந்த சாலைகளின் வழியே போகிறபோது தான் மாமன் பாம்புகள் குறித்த ரகசியங்களைக் கூறுவான்.

கிராமங்களில் மாமன் பாம்புகளைப் பிடித்த விதம், வினோதம் தருவது. தூரத்தில் தெரியும் ஊர்களைப் பார்த்தபடியே இந்த ஊரில் ' பாம்பு வாழ நீதமில்லை' என்று சொல்லி ஒதுங்கிப் போவான். பாம்புகள் இல்லாத ஊர்களில் வாழ்ந்த மனிதர்களின் பேரில் மாமனுக்கு அளவற்ற குரோதமிருந்தது.

பாம்புகள் வாழும் ஊர்களை மாமன் நெருங்குவதைப் பார்க்க, உடனிருப்போர் மனம் புனித நிலை எய்தும். சடைகள் விழுந்த தலை அசைய, பாம்புகள் இருக்குமிடத்தைக் கிரகித்துத் தெய்வ அருள் வந்த பாவத்துடன் செல்வான். அவன் கண்களின் பாப்பா அப்போது ஜொலிக்கும். அவன் எய்திய தீக்ஷன்யத்தில் காது மடல்கள் சிவந்து போகும்.

தெருவின் ஆரம்பத்திலிருந்து தெருவின் இரு ஓரங்களுக்கும், அருள் வந்த உடம்போடு குறுக்கும் நெடுக்குமாக அலைவான். பழைய உடம்பை எங்கோ போக்கி, புடைகளில் ஒளிந்து வாழும் பாம்புகளே உணரும்படி, ஒவ்வொரு மயிர்க்கால்களும் கூட பாம்புகளுக்க்காயய்த் திடன் அடைந்து முகப்படுத்தப்பட்ட புது திரேக்கத்தை அப்போது மாமன் அடைவான். மண்ணை ஆள் காட்டி விரலால் தொட்டு நாவில் வைத்துச் சுவைத்துப் பார்த்தும், காற்றை ஆழமாக முகர்ந்தும் பாம்புகள் இருக்குமிடத்தை அறிந்து கொள்வான். பாம்புகளை அறியும் பிடாரர்களில் மாமன் மிகுந்த கீர்த்தி பெற்று இருந்து , அறுபத்தி ஏழாம் வயதில் காலாவதியானான்.

காற்றைவிட லேசாக மகுடியில் நாதத்தை விளைவித்தால் பாம்புகள் மயங்கித் தலை சாயும் என்பது மாமன் சொன்னது.பாம்புகளைப் போற்றிய மாமன் பாம்புகளைக் கொன்றதில்லை. பாம்புகளைப் பிடிக்க, ஒருவேளைச் சாப்பாட்டையே மாமன் கூலியாகப் பெற்று வந்தான். தனக்கென்று சிருஷ்டித்துக் கொண்ட, தர்மத்தின்படி, பிடித்த பாம்புகளை மலைகளின் மேல் பத்துப் பதினைந்து மைல்தூரம் சென்று விட்டு வந்தான். முதுமையால் பீடிக்கப்பட்ட காலத்திலும் கூட இதிலிருந்து அவன் நழுவ வில்லை. நாகங்களுக்குப் பயப்படும் ஜனங்களுக்குள் அமைதி உண்டாக்கவும், நாகங்களைக் காப்பாற்றவும் மாமன் வாழ்ந்தான் என்று இப்போது தோன்றுகிறது. சர்ப்பங்களைப் போஷித்தும், ஜனங்களுக்குப் பாம்புகளைப் பற்றிய பயத்தை போக்கியும் வாழ்ந்தவன், பட்டினியால் சீரழிந்து திரிந்த விதம் எப்படி என்று தெரியவில்லை.

இன்று இப்பாம்பின் சினத்தின் முன்னே, பிடாரனுக்கு வரக்கூடாதென்று மாமன் சொன்ன, பாம்பு பற்றிய பயம் பிடாரனுக்கு வந்தது. இருவரும் சிநேகமாகி எட்டு வருடங்களாகி விட்டன. ஆனாலும் இன்று பாம்பாடும் விசித்திரத்தைப புரிந்து கொள்ள முடியாத, பழக்கமற்றவன் போல பிடாரனின் நிலை ஆகி விட்டது. திசைக்குத் திசை சுற்றியாடியது. நிமிர்ந்தும் வளைந்தும் ஆடியதோடு திருப்தியுறாமல் ஆட ஆரம்பித்த குறுகிய பொழுதுக்கு உள்ளேயே ஆட்டத்தின் நுட்பத்தில் ஞானமெய்தி விட்ட பாவனையோடு வேகத்தையும், கண்களில் சாந்த குணத்தையும் காட்டியபடி பிடாரனைக் கிலேசத்திற்கு உள்ளாக்கியது.

தன்னுடைய அடிமைத்தளையை திடீரென்று உணர்ந்து, சுதந்திரமடைய வேண்டி இவ்விதமாய் நீண்ட ஆட்டம் போட்டு யுத்தி செய்கிறதோ என்று நினைத்தான். மகுடியிலிருந்து குதிரையின் வாய் நுரைக்குச் சமமான பிடாரனின் எச்சில் வலிந்து மண் தரையில் படிந்து இருந்தது. பாம்பின் உடம்பு ஆடலின்போது எச்சில் ஈரத்தில் பட்டு நகர்ந்து கொண்டிருந்தது, என்றாலும் குழலூதுவதை நிறுத்துவது விவேகமற்றதென்று உறுதியாக நம்பினான்.

சில வாசிப்புகளில் அது மகிழ்ந்து, அடங்கிச் சுருண்டு , நட்போடு முகர்ந்து அவனுடம்பில் ஏறி இறங்கிக் களிப்பதும் அதற்கொரு வழக்கம்தான். முதலில், இவ்விதமே பின்னால் செய்யுமென்று நம்பிக்கையோடுதானே குழல் ஊதினான் சிறிது நேரம்?. வித்தைகளைப் பணிவோடு செய்வதும், அதற்குள்ள கூலியாக மீண்டும் வித்தைகள் செய்து, ஜனத்திரளை மகிழ்விக்கச் சிறிது உணவே உண்டு ஓய்ந்து கிடப்பதும் அதன் வாழ்வாக இருந்தது.

அது ஆடும் ஆட்டத்தின் வேகமும், பிடாரனுக்கு அடங்காத தன்மையும், கூடியிருந்த திரளுக்கு அதி வினோதம் அளித்தது. எல்லோரும் வழியே செல்வோர்தான் என்றாலும், தங்கள் சுய காரியங்களை அழித்துப் பக்குவப் பட்டவர்கள் என்று நினைக்கும் விதமாய் லயித்து இருந்தார்கள்.

திடீரென்ற நிலையில் பாம்பின் தலை, வானத்தை நோக்கி அண்ணாந்துவிட , பாம்பு சூர்யனைத் தரிசித்து விட்டது. அண்ணாந்த நிலையில் அது கண்ட சூரிய தரிசனம், அதன் நாளில் அது காணாதது. நெருப்பென்று கண்கள் ஒளிர புதுப்புது வீச்சுக்களையும், ஆடல் நிலைகளையும் சிருஷ்டித்துத் திரும்பத் திரும்ப சூரியனை தரிசிக்க ஆரம்பித்தது. இடை இடையே சூரிய தரிசனத்தில் உண்டான மயக்கத்தினால் தலை மண்ணிலும் , பிடாரனின் நுரைத்த எச்சிலிலும் மோதி மோதி விழுந்து உழன்றது. இருந்த போதும் சூரியனைப் பார்க்கும் பிரயத்தனத்தை விட்டு விடவில்லை. தானடைந்த நிலை உன்னதமென்று உணர்ந்து, எங்கெங்கோ காட்டுப் பொந்துகளில் பதுங்கி உறைந்து காலம் கழிக்கும் சர்ப்பங்களை நினைத்தது.நின்றிருந்த திரள், பேசும் பாஷை சூரிய தரிசனத்திற்குப் பின் மெல்லவே புரிய ஆரம்பித்தது. ஆட்டத்தை மறக்காமல் எதிரே ஊதிச் சோர்ந்து கொண்டிருக்கும் பிடாரனோடு வாயைப் பிளந்து தன் சிவந்த இரட்டை நாக்குகளை வீசி, வீசி ஏதோவொரு விதமாய்ப் பேசியது.

சாந்த குணமும், அறிவும் நிரம்பிய நாகத்தைத் தான் இழந்து கொண்டு இருப்பதைப் பிடாரன் உணர ஆரம்பித்தான். நாகத்தின் இப்போதைய செயல்களுக்கு அவனால் அர்த்தம் காண முடியாத துர்பாக்கியத்தை அடைந்து இருந்தான். அது ஆடுதலில்லை என்றறிந்து கொண்டான். அதன் நாவுகள் மகுடியின் கீல்வாயை வருடி, வருடி மேலும் மேலும் புதிய இசை அனுபவத்தைக் கேட்டன. பிடாரனுக்கு தெரிந்த மகுடி ஞானத்தை அது மிஞ்சிப் போனது போல, வேறு வேறு நாத ரூபங்களை அவனிடம் யாசித்தது.

இறுதி நிலை மிகுந்த நிதானத்தோடு கவிந்துவர ஆரம்பித்தது. நெஞ்சடைந்த பிடாரன் மயங்கிச் சரிந்த சற்றைக்கெல்லாம் சர்ப்பம் உயிர் துறந்து சுருண்டது.

******

நன்றி அம்ருதா பதிப்பகம், புத்தகம்- வண்ண நிலவன் முத்துக்கள் பத்து.

அவ்வா - சாரு நிவேதிதா

ஒரு ஐப்பசி மாதத்து அடைமழை இரவின் போது தான் அந்த நாயின் தீனமான அழுகைச் சத்தம் கேட்டது.

அந்தத் திரு.வி.க. வீதியில் நாய்கள் அதிகம். அதிலும் விதவிதமான நாய்கள். பல இனத்தைச் சேர்ந்த நாய்கள் நறுக்கி விட்டதைப் போல் குட்டி வாலும் நீண்டு மெலிந்த உடலும் கொண்ட டாபர்மேன் வகை நாய்கள் கூட தெருவில் கேட்பாரற்று அலைந்து கொண்டிருக்கும்.

எனக்கானால் நாய்களைக் கண்டால் பிடிக்காது. இரவுகளில் இந்த நாய்கள் தான் பெரும் பிரச்சினை. மரணத்தின் வருகையை அறிவிப்பது போன்ற இதுகளின் ஊளைச் சத்தத்தைக் கேட்டு உறக்கம் கலைந்து எழும் அவந்திகா ‘ சூ… சூ…. ‘ என்ற அதுகளை விரட்டிக் கொண்டிருப்பது இன்னொரு பிரச்சினை.

மனிதக் குரல் கேட்டு மிரண்டு ஓடி தெரு மூலையில் நின்று கொண்டு மீண்டும் ஓலமிடும். அல்லது தங்களது தீராச் சண்டையை ஆரம்பிக்கும். அந்தச் சண்டையில் அடுத்த தெரு நாய்களும் கலந்து கொள்ளும். உச்ச ஸ்தாயியில் பல விதமாய்க் குரைத்து மூர்க்கமாகச் சண்டையிடும். நீண்ட நேரம் நீடிக்கும் அச் சண்டை எந்த இலக்கும் இல்லாமல் தானாகவே ஓய்ந்து போகும்.

காலையில் எழுந்து ” இரவெல்லாம் தூக்கமில்லை. கண் எரிகிறது ” என்பாள் அவந்திகா.

பகலில் பரம சாதுவாக எல்லாம் குப்பைத் தொட்டியில் இரை தேடி கொண்டிருக்கும். அப்போது அதுகளைப் பார்த்தால் பாவமாக இருக்கும்.

எங்கள் தெரு குப்பைத் தொட்டி கொஞ்சம் விசேஷமானது. முனிசிபாலிடியில் குப்பைத் தொட்டி என்று நான்கு உயரமான சுவர்களும் , கதவு அளவுக்கு ஒரு திறப்பும் கொண்ட ஒரு ஸ்ட்ரக்சரைக் கட்டிக் கொடுத்துக் ” குப்பைகளைத் தயவு செய்து குப்பைத் தொட்டியில் போடவும். உங்கள் சுற்றுப்புறம் அழகாக இருக்க உதவுங்கள் ” என்று எழுதியும் கொடுத்திருந்தார்கள்.

ஆனாலும் , எங்கள் தெரு ஜனங்கள் அந்தச் சுவர்களுக்கு உள்ளே போடாமல் (மிகச் சரியாக) வெளியில்தான் குப்பையைப் போடுவார்கள். சுவரைச் சுற்றிலும் குப்பை மலையாய்ச் சேர்ந்த பிறகு , குப்பையை உள்ளே போட நினைக்கும் சிலர் கூட சுவரை நெருங்க முடியாமல் வெளியிலேயே போட்டு விட வேண்டியிருக்கும்.

” சிவிக் சென்ஸே இல்லாத ஜனங்கள். இவ்வளவு பெரிய குப்பைத் தொட்டியைக் கட்டிக் கொடுத்தும் எங்கே போடுகிறார்கள் பாருங்கள் ” என்பாள் அவந்திகா.

உண்மை தான். அளவில் பெரியது தான். எப்போதாவது வெளியூர் போகும் போது , ஊருக்கு வெளியே இந்த மாதிரி ஸ்ட்ரக்சர்களைப் பார்த்திருக்கிறேன். மேலே கூரை ஒன்று இருக்கும். அது தான் வித்தியாசம். அந்த ஸ்ட்ரக்சர்களுக்கு வெளியே நரிக்குறவர் குடியிருப்பு , அம்பேத்கர் குடியிருப்பு என்று ஏதாவது எழுதியிருக்கும்.

இந்தக் குப்பைத் தொட்டியைப் பார்க்க எனக்கு வினோதமாக இருக்கும். அதில் என்னென்னவெல்லாம் கிடக்கும் என்று பார்க்க உள்ளுக்குள் ஒரு ஆசை கிளம்பும். இரை தேடும் நாய்களை விரட்டி விட்டு ப்ளாஸ்டிக் டப்பாக்களையும் , பாலிதீன் கவர்களையும் சேகரித்துக் கொண்டிருப்பார்கள் சில பேர்.

ஆனால் எங்கள் தெருவை அடுத்த பாரதியார் தெரு ஜனங்கள் பரவாயில்லை. அங்கே குப்பைத் தொட்டியும் இல்லை. குப்பையும் இல்லை. சுற்றுப் புறச் சூழல் பாதுகாப்பு மையத்தில் உறுப்பினராகி மையம் அனுப்பி வைக்கும் வண்டிகளில் தங்கள் குப்பைகளைச் சேர்த்து விடுகிறார்கள்.

அவந்திகாவுக்கும் அதில் சேர்வதில் தான் விருப்பம். ஆனால் அதற்கு அவள் வேலைக்கு முழுக்குப் போட வேண்டியிருக்கும். ஏனென்றால் மையத்தின் பையன் காலை பதினோரு மணிக்குத் தான் இந்தப் பக்கம் வருவான்.

பாரதியார் தெரு மக்கள் , சுற்றுப்புறச் சூழல் மீது கொண்ட ஆர்வத்தால் அந்தத் தெரு நாய்களின் பாடு மிகவும் திண்டாட்டமாகப் போய்விட்டது. அன்றைக்குப் பாருங்கள். நான் ஆபிஸ் முடிந்து வந்து கொண்டிருந்தபோது அந்தக் காட்சியைக் காண நேர்ந்தது. எலும்பும் தோலுமாய் நறுங்கிப் போயிருந்த நாய் ஒன்று காய்ந்த மனிதப் பீயைத் தின்று கொண்டிருந்தது. எனக்கு ஒரு மாதிரி மனசே சரியில்லாமல் போய்விட்டது.

அவந்திகா ஆபீசிலிருந்து வந்ததும் அவளுக்கு டீ போட்டுக் கொடுத்து விட்டு இதைச் சொன்னேன்.

” பாரேன். முறுக்கு சாப்பிடுவதைப் போல் அந்தப் பீஸை ‘ நறுக் முறுக் ‘ குனு சாப்பிடுது. பாவமா இருந்திச்சும்மா ” அவ்வளவுதான். குடித்துக் கொண்டிருந்த டீயோடு வாந்தியெடுத்து விட்டாள்.

” சரியான முட்டாள்ப்பா நீ. இப்படியா டீ குடிச்சுக்கிட்டு இருக்கும்போது இதைச் சொல்றது ?”

அன்று இரவு அவள் சாப்பிடவில்லை. தொடர்ந்து ஓக்களித்துக் கொண்டே இருந்தாள்.

” குடலே வந்திடும் போலருக்கே. இந்த வாந்தியை நிறுத்த ஏதாவது செய்யேன். ”

காய்ந்த உப்பு நாரத்தங்காயைப் பிய்த்துக் கொடுத்துத் தூங்கச் செய்தேன்.

அவளைப் பார்த்தாலும் பாவமாகத்தான் இருந்தது. ஆனால் ஆச்சரியமாகவும் இருந்தது. பீ என்று சொன்னால் வாந்தி வந்து விடுமா ? உங்களுக்கு வருகிறதா ?

எனக்கு சான்ஸே இல்லை. எங்கள் ஜாதியே பீயெடுக்கும் ஜாதிதான். நான் தான் கொஞ்சம் படித்து கிடித்து வேறு வேலைக்கு வந்து விட்டேன்.

என் தம்பி இன்னமும் பீ தான் எடுத்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு என்னைப் போல் படிப்பு வரவில்லை. ஆனால் தைரியசாலி , பட்லர் இங்கிலீஷ் பேசுவான். அதைப் பார்த்து எனக்கு ஆத்திரமாக வரும். ஒழுங்காகத் தெரிந்தால் பேச வேண்டும். இல்லாவிட்டால் பேசக் கூடாது. ஒழுங்காகத் தெரிந்த எனக்கே இங்கிலீஷ் பேச வராதது இன்னமும் ஒரு குறையாகத்தான் இருக்கிறது. ஆனால் , என் தம்பி அந்த பட்லர் இங்கிலீஷை வைத்தே பெரிய ஆளாகிவிட்டான். ஜெர்மன் எம்பஸியில் வேலை. இங்கிலீஷையே தப்பும் தவறுமாக உளறிக் கொட்டும் அந்த நாய் இப்போது ஜெர்மனில் பிளந்து கட்டுகிறது. இப்போது ஜெர்மனியில் இருக்கிறான். டாய்லெட் க்ளீனர் வேலையில் இருந்தாலும் வீடு , கார் எல்லாம் வைத்திருக்கிறான்.

” ஏண்டா இப்படி ஜெர்மனிக்குப் போயும் நம்மோட குலத் தொழிலைத்தான் செய்யணுமாடா ?” என்பேன்.

” அடப் போண்ணே நீ வேற…. அந்த ஊரு டாய்லெட்டெல்லாம் நம்ம சினிமா ஸ்டாருங்க கன்னம் மாதிரி இருக்கும். இன்னோரு விஷயம். அந்த வெள்ளக்காரப் பயலுவளோட பீ கூட நாற மாட்டேங்குது ”.

” அப்படியா ? அப்ப அதையே தின்னுக்கிட்டு அங்கயே இரு ”

” சாப்பிட்டாலும் தப்பில்லே. நம்ம அவ்வா குடுத்த சாப்பாட்டை விட நல்லாத்தான் இருக்கும் ” ( தம்பி சொன்னதைப் பற்றி விளக்க வேண்டுமானால் ஒரு ஆயிரம் பக்கங்களாவது எழுத வேண்டும். ஆனால் இந்தக் கதையோ நாய்களைப் பற்றியது. கதையின் இடையே புகுந்ததும் அல்லாமல் ஒரு முக்கியப் பிரச்சினையை வேறு கிளப்பி விட்டு விட்டான். அதைப் பற்றி சுருக்கமாகப் பார்த்துவிட்டுக் கதையைத் தொடருவோம்)

அவ்வாவுக்கு சித்தூர்தான் சொந்த ஊர். அங்கே பிழைக்க வழியில்லாமல் தஞ்சாவூர் ஜில்லா வந்து எப்படியோ நாகூரில் செட்டிலாகி விட்டது. பணக்கார வீடுகளின் எடுப்புக் கக்கூசில் பீ அள்ளுவது தான் வேலை. அப்பா சின்ன வயதிலேயே செத்துவிட்டார். கக்கூஸ் எடுக்கும் வீடுகளில் அரிசியும் , மிஞ்சிய சோறும் கொடுப்பார்கள். அரிசியை அப்படியே பத்திரப்படுத்திவிட்டு சோற்றை உபயோகித்துக் கொள்ளும். அந்தச் சோற்றை காய வைத்து எடுத்து வைத்துக் கொண்டு அவ்வப்போது வெந்நீர் விட்டுக் கலக்கிக் கொடுக்கும் அவ்வா. அந்தச் சோறு காயும் போது ஒரு நாற்றம் நாறும் பாருங்கள். பீ நாற்றமெல்லாம் பிச்சையெடுக்க வேண்டும். அரிசி இருந்தால் புயல் மழைக் காலங்களில் பட்டினி கிடக்காமல் வயிறு நிரம்பும். வெட்டாற்று வெள்ளம் ஊருக்குள் பாயும்போது அதன் தலைவாசலில் இருப்பது எங்கள் தொம்பங்குடிசை தான்.

சில வருடங்களுக்கு முன் நாகூர் போயிருந்த போது அந்தப் பெயரை ‘ தொல்காப்பியர் சதுக்கம் ‘ என்று மாற்றியிருந்ததைப் பார்த்தேன். ஆச்சரியமாக இருந்தது. தொல்காப்பியருக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் ? அவரும் அவ்வாவைப் போல் பீ அள்ளியிருக்கிறாரா ? அவர் எங்கள் ஜாதியைச் சேர்ந்தவரா ? ஆனால் பெயர் தான் மாறியிருந்ததே ஒழிய மற்றதெல்லாம் அப்படியே தான் இருந்தது. ஊரில் எடுப்புக் கக்கூசுகள் மறைந்து ஃப்ளஷ் அவுட் டாய்லெட் வந்திருந்தது. எங்கள் ஜனமும் நகராட்சியில் துப்புரவுத் தொழிலாளர்களாக மாறியிருந்தார்கள். ஊரைப் பெருக்கிச் சுத்தம் செய்யும் வேலை.

அவ்வா என் தங்கையோடு அவள் வீட்டுக்குப் போய் விட்டது. தங்கை கணவரும் என்னைப் போல் படித்தவர். போலீஸ் இன்ஸ்பெக்டர்.

அவ்வாவுக்கு என் மீது கோபம். நம் ஜாதிப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் அய்யர் வீட்டுப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டேன் என்று. அய்யர் இல்லை அய்யங்கார் என்று சொன்னால் அதற்குப் புரியாது.

வாந்தியெடுத்து விட்டுத் தூங்கிக் கொண்டிருந்த அவந்திகாவிடம் இதையெல்லாம் சொல்ல நினைத்தேன். ‘ நீ எங்கள் அவ்வா மாதிரி பீ அள்ளியிருந்தால் என்ன ஆகியிருப்பாய் அவந்திகா ?’ அவந்திகா எனக்காக பெங்களூர் போர்க் சமைத்துத் தருகிறாள். மிக ருசியாக , ஐந்து நட்சத்திர ஓட்டலின் செஃப் போல. நன்றி. ஆனால் , நான் இருபது வயது வரை மனிதப்பீயை மட்டுமே உணவாகக் கொண்ட கருப்புப் பன்றிகளையே சாப்பிட்டு வளர்ந்தவன் என்று உனக்குத் தெரியுமா ? அதையெல்லாம் பேச ஆரம்பித்தாலே ‘ வேண்டாம் , பழசை விடு ‘ என்பாள்.

தெருவில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருந்தது. ஒரு நாள் வீட்டு மாடியில் உலர்த்தியிருந்த என் சட்டைகளைத் துண்டு துண்டாய்க் கிழித்துப் போட்டிருந்தன நாய்கள்.

எனக்கு சட்டைகள் என்றால் மிகவும் விருப்பம். அழகழகான சட்டைகள். மாடியிலிருந்து கீழே பார்த்தேன். அடுத்த வீட்டு மாடியின் படிக்கட்டில் நான்கைந்து நாய்கள் தூங்கிக் கொண்டிருந்தன. சத்தம் செய்யாமல் கீழே வந்தேன். எவர்சில்வர் பாத்திரத்தில் வெந்நீர் வைத்து நன்றாகக் கொதிக்க விட்டு , வெகு பத்திரமாக என் மீது சிந்தி விடாமல் இரண்டு பக்கமும் துணி கொடுத்து மேலே எடுத்துச் சென்று மாடியின் கைப்பிடிச் சுவரில் வைத்து விட்டு ஓசையெழுப்பாமல் கீழே பார்த்தேன். நாய்கள் தூங்கிக் கொண்டிருந்தன. வெந்நீரை அவற்றின் மேல் சாய்த்தேன். செவிச்சவ்வுகளே கிழிந்து கிழிந்து விடுகிறாற் போல் கத்திக் கொண்டு ஓடின நாய்கள்.

காட்டூர் கந்தன் இப்படித்தான் கத்தினான். அவ்வா அவன் முகத்தில் வெந்நீரை ஊற்றியபோது.

அவ்வா நிறைய பன்றிகள் வைத்திருந்தது. ஆனால் , அதற்கு உடம்பு முடியாமல் போனபோது பன்றிகள் ஒவ்வொன்றாய்க் குறைய ஆரம்பித்தன. அதை விற்று வருகிற பணத்தில்தான் என் படிப்பும் , என் தங்கையின் படிப்பும் நடந்து கொண்டிருந்தது. நல்ல வேளை. தம்பிக்குப் படிப்பு வரவில்லை. ஒன்பதாம் கிளாசுக்கு மேல் தாண்டாமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்தான். இல்லா விட்டால் அவன் செலவும் சேர்ந்திருக்கும்.

நான் பி.எஸ்ஸி. ஃபைனல் இயர் படித்துக் கொண்டிருந்தேன் ஹாஸ்டலில் தங்கி. ஸ்டடி ஹாலிடேஸில் ஊருக்கு வந்திருந்தேன். ஹாஸ்டல் ஃபீஸ் , எக்ஸாம் ஃபீஸ் என்று பணம் கட்ட வேண்டியிருந்தது. வீட்டிலிருந்த கடைசிப் பன்றியையும் விற்று விட வேண்டியதுதான்.

” பொட்டப் பன்னி. குட்டி போட்டா நமக்குத்தான் நல்லது. விக்கணுமா அவ்வா ?” என்று கேட்டபோது , ” அதையெலாம் யோசிக்க முடியாது. நீ வேலைக்குப் போய்ட்டா நூறு பன்னி வாங்கலாம் ” என்று சொல்லி விற்று விட்டது அவ்வா. விற்ற விஷயம் எப்படியோ பன்றிக்குத் தெரிந்து போய் வீட்டை விட்டு ஓடி விட்டது.

பதைபதைப்புடன் கையில் சுளுக்கியோடு எங்கெங்கோ தேடியலைந்தது அவ்வா. எங்குமே கிடைக்கவில்லை. கடைசியில்தான் விஷயம் தெரிந்தது. காட்டூர் கந்தன் எங்கள் பன்றியைப் பிடித்து விற்று விட்டான் என்று.

காட்டூர் கந்தன் திருச்சிக்குப் பக்கத்திலுள்ள காட்டூரில் ஒரு கொலை செய்து விட்டு எங்கள் ஊருக்கு வந்து பதுங்கியவன். அதற்குப் பிறகு இங்கேயே தங்கி விட்டான். பக்கத்திலுள்ள மேட்டுத் தெருவில் தான் அவன் குடிசை. எந்த வேலைக்கும் போகாமல் சிறு வியாபாரிகளை மிரட்டிப் பணம் பறித்து வாழ்ந்து கொண்டிருந்தான். அவ்வப்போது திருடுவதும் உண்டு. ஊரில் அவனைக் கண்டால் எல்லோருக்கும் ஒரு பயம் உண்டு.

அவ்வா நேராகக் கந்தனின் குடிசைக்குப் போனது. அப்போது கந்தன் குடிசையில் இல்லை. பக்கத்தில் வந்து விசாரித்தவர்களிடம் , ” அவன் மட்டும் உண்மையிலேயே ஆம்புளையா இருந்தா என் வூட்டுப் பக்கம் வரச் சொல்லுங்க ” என்று சொல்லி விட்டு வந்து விட்டது அவ்வா.

எனக்கு உள்ளுக்குள் திகில். ‘ இன்று ஒரு கொலை தான் விழப் போகிறது ‘ என்று முடிவு கட்டி விட்டேன். என் உயிரைக் கொடுத்தாவது அவ்வாவின் உயிரைக் காப்பாற்றுவது என திட்டம் செய்து கொண்டேன். ‘ நான் செத்தால் கூடப் பரவாயில்லை. அவ்வா செத்து விட்டால் தம்பி தங்கைகளின் கதி ?’ ஆனால் அவ்வாவிடம் இது பற்றி நான் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை.

அடுப்பைப் பற்ற வைத்து சோற்றுப்பானையை வைத்துவிட்டு அரிசியைக் களைய ஆரம்பித்தது. அப்போது அங்கே புயலைப் போல் வந்தான் கந்தன்.

” ஏய் வாடி வெளியே…. எவடீ என்னெ ஆம்பளயான்னு கேட்டது ?”

” டேய் கந்தா… எம் பன்னியத் திருடி வித்தியா நீ ?”

ஆமான்டீ , வித்தேன். என்னடீ பண்ணுவே ? பீ அள்ளுற தேவுடியா செருக்கிக்கு அவ்வளவு திமிரா ? வாடீ …. நான் ஆம்பளயா இல்லையான்னு காமிக்கிறேன் ” என்று சொல்லியபடி ஒரே தாவாகத் தாவி அவ்வாவின் முடியைப் பற்றியிழுத்தான்.

நான் செய்வதறியாமல் திகைத்து நின்றேன்.

கண்ணிமைப்பதற்குள் ஒருக்கணம் அவன் கையைத் தட்டி விட்டு விட்டு உள்ளே ஓடிய அவ்வா அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த வெந்நீரை எடுத்து வந்து அவன் முகத்தில் ஊற்றியது.

இதைச் சிறிதும் எதிர்பார்க்காத கந்தன் பன்றியைப் போல் அலறினான். மறுபடியும் உள்ளே ஓடிய அவ்வா அடுப்பில் எரிந்து கொண்டிருந்த கொள்ளிக்கட்டையை எடுத்து வந்து அவன் ஆண்மையில் ஓங்கிச் செருகியது.

நல்ல வேளையாக அவ்வா ஜெயிலுக்குப் போகவில்லை. கந்தனை என்ன செய்வதென்று போலீஸே திணறிக் கொண்டிருந்தது போலும். விபத்தில் மரணம் என்று சொல்லி கேஸை முடித்து விட்டது போலீஸ்.

அதற்குப் பிறகு அந்த நாய்கள் மாடிப்பக்கம் வரவில்லை.

காலையில் எழுந்ததும் முதல் வேலையாக சத்தம் வந்து கொண்டிருந்த திசையில் தேடிப் பார்த்தேன்.

ஒரு சின்னஞ்சிறிய நாய்க்குட்டி. பிறந்து சில தினங்களே ஆகியிருக்கும் போல் தோன்றியது. முட்புதரில் சிக்கிக் கொண்டு குளிரில் நடுங்கியபடி கிடந்தது. அருகில் சென்றபோது குரைத்தது.

கவனமாக முட்களை விலக்கி விட்டுக் குட்டியை எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் வந்தேன். ஆர்வமாக வந்து பார்த்து விட்டுச் சென்ற அவந்திகா கம்பளியைக் கொண்டு வந்து போர்த்தினாள். ஒரு கிண்ணத்தில் பால் ஊற்றிக் கொடுத்தேன்.

ஆவலுடன் குடித்து விட்டு , ஓட முடியாமல் விழுந்தும் எழுந்தும் தடுமாறி வந்து என் மடியில் ஏறிக் கொண்டது அந்த நாய்க்குட்டி.

நன்றி: ஆறாம்திணை

வீடும் வெளியும் – தி.ஜானகிராமன்

வெகு காலமாக ஓர் ஆசை; சின்னப் பையனாக இருந்த போதே முளைத்த ஆசை – யாரும் இல்லாத ஒரு காடு; பரந்த காடு; புலி, கரடி இல்லாத காடு. அங்கே, நாணலும் புல்லும் வேய்ந்த குடிசை. அதன் வாசலில் ஓர் ஆறு – ஆற்றின் இரு பக்கமும் ஆலும் அரசும் நாவலும் வாகையும் நெடியனவாக நிற்கின்றன. ஆற்று நீர் மந்தமாக நகர்கிறது. சூரியன் மரங்களின் இடுக்கு வழியே தங்க ஊசிகளைத் தோகையாய் விரித்துக் கொண்டிருக்கிறான். ஆற்று நீரில் கணுக்காலளவில் நின்று இரண்டு கைகளையும் சேர்த்து, நீரை அள்ளி அர்க்கியமாக விழவிடுகிறேன். ஐயோ! ஐயோ! என்ன சாந்தி! என்ன சாந்தி என்னுள்ளே நிரம்பி வழிகிறது! பெரிய இன்பம் வேண்டும் என்று ஆசைப்படும் போதெல்லாம இந்தக் காட்சி தான் என்முன் நிற்கிற வழக்கம். ஆனந்தத்தின் எல்லையாக இது என் உள்ளே பொருள் கொண்டு நிற்கும். என்றோ ஒரு நாள் நான் இப்படி நிற்கப்போகிறேன். சாசுவதமாக நிற்கப் போகிறேன் என்ற ஒரு நம்பிக்கையும் உண்டு. பள்ளிக்கூடம் இராது, வீடு இராது, வேலை இராது, அப்போது.

இப்போது அந்த ஆனந்தமே கைக்கு எட்டிவிட்டாற்போல் இருந்தது. அந்தக் காலத்திலிருந்து நிலைத்துவிட்ட கனவுதான் நனவாகிவிட்டதா? அதே காட்சியின் நடுவே நின்று கொண்டிருக்கிறேன். காவிரி அரை மைல் அகலத்துக்குப் பரந்து நகர்கிறது. முக்கால் ஆற்றின் வெள்ளம். நான் இந்த ஓரத்தில், மணலாக இருந்த பகுதியில் நிற்கிறேன். இக்கரையிலும் அக்கரையிலும் வாழைத் தோப்புகள். அப்பால் வானையளக்கும் சவுக்கைக் காடு. குடிசைக்குப் பதில் ஒரு சின்னக் கோயில். இக்கரையில் எனக்குப் பின்னால் நிற்கிறது. கண்ணுக்கு எட்டிய வரையில் ஜன நடமாட்டமே இருப்பதாகத் தெரியவில்லை. ஒரே மௌனம். நீர் தனக்குத்தானே மோதி ஓடுகிற சலசலப்பைத் தவிர, ஓர் ஓசை இல்லை. அக்கரை அரை மைல் தூரம். அங்கே தோப்பில் பாடும் பறவை ஒலிகூடக் காதில் விழாமல் அந்த மோனத்தில் அடங்கி விடுகிறது.

நான் தன்னந் தனியாக நிற்கிறேன். குளிக்கக்கூட மனம் இல்லை. சட்டையைக் கழற்றிப் பக்கத்தில் வைத்து மணல்மீது உட்கார்ந்தேன். இரண்டு மூன்று நாளாகவே மழை பெய்து காற்று குளிர்ந்து விட்டிருந்தது. இன்று இரவுகூடப் பெய்யப் போகிறோம் என்று சொல்வதுபோல் வான் நீலத்தில் பொதி பொதியாக அங்கும் இங்கும் திரண்டு நின்ற மேகங்களுக்குள் சூரியன் மறைந்தான். வெயில் மேலே பட்டதும் படாததுமாக விழுகிறது. சூடு இல்லாத வெயில். காலேஜிலிருந்து வெளியே வந்தபிறகு இப்படி உட்காரும் அநுபவமே அற்றுப்போய்விட்டது. அதனால்தான் குளிக்ககூட மனம் இல்லாமல் ஓடும் நீரில் ஆவியைக் கொடுத்து உட்கார்ந்து கிடக்கிறேன். ஒரு நிறைந்த சூனியம். நடு நடுவே தனிமையின் நினைவும் வருகிறது.

மணி ஒன்பதுக்குமேல் இருக்கும். ஊர்க்காரர்கள் விடிய விடிய வந்து குளித்துவிட்டுப் போயிருக்க வேண்டும். இல்லாவிட்டால் இப்படியா நிர்ஜனமாக இருக்கும்? பட்டணத்தில் வெறும் கடலைத்தான் பார்க்கலாம். நீரின் சீற்றத்தைத்தான் பார்க்கலாம். இங்கே பரந்த நீர், பசுமை, சோலை, நிசப்தம் எல்லாவற்றிலும் தோய்ந்து கிடக்கமுடிகிறது. இருபது வருஷம் கழித்து இப்படி ஒரு வாய்ப்பு எப்படிக் கிடைத்தது? என் நண்பனை இந்த மோனக் கடவுள்தான் தூண்டியிருக்க வேண்டும்.

ஏதோ முனகல். யாரோ பேசுகிறார்கள். இல்லை, பாடுகிறார்கள். ‘தன்மாதச்வா அஜாயந்த, ஏகேசோபயாதத;’ திரும்பிப் பார்த்தேன் இவர்தாம் முனகிக்கொண்டு வருகிறார். கிழவர்-கையில் ஒரு குடம், ஒரு செம்பு, கழுத்தில் சின்ன ருத்திராட்ச மாலை. இடையில் தூக்கிச் சொருகிய பஞ்ச கச்சம். என்னைப் பார்க்கிறாரா? இல்லை. பார்வை சுமார் போலிருக்கிறது. கிட்ட வந்த பிறகுதான் என்னைப் பார்க்க முயலுகிறார். கண்ணை இடுக்கிக் கொண்டு. ஆனால் ஒன்றும் கேட்கவில்லை. வாய்சொல்லும் ஸூக்தம் முடியவில்லை. ‘தேவா யத் யஜ்ஞம் தந்வாநா;, அபத்நந் புருஷம் பசும்…’ புருவத்தைச் சுளித்து என்னைப் பார்த்துக் கொண்டே வாய் முணுமுணுக்கிறது. செம்பைக் கீழே வைக்கிறார். குடத்தை வைக்கிறார். ரசவாதம் போலச் செம்பின்மீது தங்கமெருகு ஏறுகிறது. ‘ஸ்ர்வம் ம நிஷாண.’

“யாரு? வாசுவா?” என்று கண்ணை இடுக்கிக் கொண்டே கேட்டார் அவர். ‘ஸூக்தம்’ முடிந்ததும்.

“இல்லை.”

“பின்னே யாரு?”

“அசலூர்.”

“அசலூரா? எந்த ஊரு?”

“பட்ணம்.”

“இங்கே யாரையாவது பார்க்க வந்துதாக்கும்?”

“ஆமாம், ரத்னாசலத்தைப் பார்க்க வந்திருக்கேன்.”

“ரத்னாசலத்தையா? அவருக்குப் பந்துவோ??”

“இல்லை.”

“சிநேகமோ?”

“இன்னிக்குத்தான் சினேகமானார். என் சிகேகிதர் ஒருத்தர் கல்கத்தாவிலிருந்து எழுதியிருந்தார். ரத்னாசலத்தின் பிள்ளை ஜாதகத்தை வாங்கியனுப்புன்னு. அதுக்குத்தான் வந்தேன். ஊர் அழகைப் பார்க்கப் பார்க்கத் தாங்கவில்லை. அவரும் குளிச்சுச் சாப்பிட்டுவிட்டு ஜாதகத்தை வாங்கிண்டு போகலாமேன்னார், தங்கிவிட்டேன்.”

“நீங்க சொல்லணுமா? இதோ நான் இருக்கேனே, நான் இந்த ஊரே இல்லை. இந்த ஜில்லாவே இல்லை. தென்னார்காடு ஜில்லா. முப்பது வருஷத்துக்கு முன்னாலே ஒரு நாள் இங்கே உத்யோக காரியமாப் ’காம்ப்’ போட்டேன். வந்து காலடி வச்ச க்ஷணமே தீர்மானம் பண்ணினேன். ரிடையரானப்புறம் இங்கேதான் நிரந்தரமாத் தங்கறதுன்னு. அதுக்கப்றம் அஞ்சு வருஷம் உத்யோகம் பார்த்துட்டு ரிடையரனேன். மறுமாசமே இங்கு வந்து பத்துக் காணி நிலத்தை வாங்கினேன். ஒரு வீட்டையும் வாங்கினேன். செட்டில் பண்ணிப்பட்டேன். இருபத்தஞ்சு வருஷம் ஆயாச்சு, இது ஊரா? கிராமமா? த்போவனம் இல்லையோ!” என்று பரவசமாகப் பேசிக்க்கொண்டிருந்த கிழவர், குடத்தை மணல் போட்டுத் தேய்க்கத் தொடங்கினார். “ஸ்நானத்தைப் பண்ணிட்டு இங்கே இப்படியே மணலில் கால் மணி உட்காருங்களேன். பிரம்ம சாட்சாத்காரம் வறதா இல்லையா, பாருங்கள். மோனநிலை, சமாதி எல்லாம் உட்கார்ந்து கண்ணை மூடின மாத்திரத்திலே லபித்து விடும். அப்பேர்ப்பட்ட இடம்” என்று குடத்தை அழுத்தித் தேய்த்தார்.

அவர் மிகைப்படுத்தவில்லை. குளித்துவிட்டு உடனே உட்கார்ந்து கண்ணைமூடி அந்த மோனத்தை எட்ட வேண்டும் போல் இருந்தது. அப்படி உட்காரக்கூட அவசியம் இல்லை. கண்ணைத் திறந்த நிலையிலேயே பேசும் போதே அப்படித்தான் இருந்தது. ஆற்று வெளியில் அகண்ட மோனத்தில் எங்கள் பேச்சு, பெரு வெள்ளத்தில் பிடிமணலைத் தூவியது போல் அமுங்கிக் கிடந்தது.

“ஜாதகம் வாங்கியாச்சோ?” என்று கேட்டார் கிழவர்.

“இனிமேல்தான்.”

“பையன் நல்ல பையன். டாட்டா நகர். ஆயிரத்துக்கும் மேலே சம்பாதிக்கிறான். கண்ணுக்கும் நன்னா இருப்பன். பையன் நல்ல பையந்தான்” என்று அடுத்த கேள்வியைக் கேளேன் என்கிறாற்போல் சொன்னார். நான் எப்படிச் சும்மா இருப்பது? “பையன் நல்ல பையன் தான்னா?” என்று கேட்டு விட்டேன்.

“நமக்குப் பையன்தானே ஸ்வாமி முக்கியம்? அதுக்காகச் சொன்னேன். தறைமுறை தலைமுறையா விசாரிச்சுண்டு போனா, சாத்தியப்படுமோ?” என்றார் அவர்.

“விசாரிக்கத்தானே வேணும்? ஏன், ரத்னாசலத்தின் குடும்பம் குலம் கோத்ரம் நல்லதுதானே?”

“ஏ ஒன் குடும்பம், சந்தேகமே வேண்டாம். ரத்னாசலந்தான் சரியா இல்லை. நல்லவர்தான். ஆனா சகவாசம் பொல்லாதோல்லியோ? முப்பது வயசிலே யாரோ அவரை ரேஸு, ரங்காட்டம்னு ஆசை காட்டி இழுத்து விட்டுட்டான். வேலையில் சூரன். அதனாலெதான் பல சீனியரை எல்லாம் பார்க்காம, சின்ன வயசாயிருந்தாலும் பாதகமில்லேன்னு டிப்டி கலெக்டராப் போட்டா அவரை. நன்னந்தான் நிர்வாகம் பண்ணினார். முக்காங்குடிப் பண்ணையோட ரொம்ப சிநேகமாயிருக்க ஆரம்பித்தார். அவனுக்கும் சின்ன வயது. பரம்பரைச் சொத்து. ஆத்திலே தண்ணி அமோகமாகப் போறது. காரியஸ்தன், ஆட்கள் எல்லாம் வெள்ளாமையைப் பண்ணி நெல்லும் பணமுமாகக் கொண்டு குடுத்துடறான். இந்தப் பிரபுகளுக்கு வேலை ஏது? வர்ற பணத்தை, பாங்கிலே போட வேண்டியது, சாப்பிட வேண்டியது, செலவழிக்க வேண்டியது. படிப்பு இருந்தா ஒரு பிஸ்னஸ் பண்ணுவோம், தொழில் பண்ணுவோம், பெருக்குவோம்னு மனசு பாயும். முக்காங்குடிப் பையனுக்கு மெட்ரிகுலேஷனே தேறலே. குதிரைப் பந்தயத்துக்குப் போவன். ஜமாவா ஹோட்டலுக்குப் போவான். அவனோட போய் டிப்டி கலெக்டர் சேரலாமோ? சேர்ந்தாலும் அவன் பழக்கத்தையெல்லாம் கத்துக்கலாமோ? என்னமோ கஷ்டக்காலம்! கத்துனூட்டார். கெட்டதுதானே சீக்கிரமாக் கத்துக்க முடிறது? ரத்னாசலத்துக்கு ஆயிரம் ஆயிரமாக் குதிரைப் பந்தயத்திலே போக ஆரம்பிச்சுட்டுது. சொத்தை அடகு வச்சு ஆடினார். ஆபீஸார்ஸ் கிளப்பிலே வேற ரங்காட்டம். கடனுக்குப் பூர்வீகம் எல்லாம் போச்சு. மாமனார் வந்தார். நாலுநாள் உட்கார்ந்து மிஞ்சியிருக்கிற நாலு காணியைப் பொண்ணு பேருக்கு எழுதி வைக்கச் சொல்லிட்டுப் போனார். அதை எடுக்க முடியலியா? வெளியிலே கடன் வாங்கினார் ரத்னாசலம். கடன்காரர்கள் சர்க்காருக்கு எழுதிப்டான்கள். சம்பளத்தை ஈடுகட்டிப்ட்டான் சர்க்காரிலே. கடைசியிலே இந்தச் சள்ளை தாங்காம, கட்டாயமா ரிடயர் பண்ணிவிட்டான். நாப்பத்தஞ்சு வயசிலே ரிடயராகிப் பத்து வருஷமா ஊரோட உட்கார்ந்திருக்கார். அவரோட தாத்தா நாள்ள நாப்பது காணி சொத்தாம். எப்படி இருந்தது குடும்பம். எப்படியாயிடுத்து! நினைச்சா வருத்தமாத்தானே இருக்கு? சொல்லிப்டேன். ஆனா வீணாச் சொல்லப்படாது, பையன்கள் தங்கமும் வெள்ளியுமாத்தான் பொறந்திருக்கு. இப்ப மூத்த பையனுக்குத்தானே ஜாதகம் வாங்க வந்திருக்கேள்?”

“ஆமாம்.”

“தங்கமான பையன். ரெண்டாவது பையன் அதுக்கு மேலே. அவன் கணக்குப் படிச்சுட்டுப் பாரிஸுக்கு மேல் படிப்புக்கு போயிருக்கான். மூணாவது பையன் காலேஜிலே படிக்கிறான். வீணாச் சொல்லப்படாது, தங்கமான பையன்கள். அவருக்கு என்னமோ கஷ்டகாலம், புத்தி இப்படிப் போச்சு; தலையைக் குனிஞ்சுக்கும்படியா ஆயிடுத்து.”

“வேறே ஒண்ணும் பழுது இல்லையே?”

“பழுதே கிடையாது ஸ்வாமி. இந்த இடம் கிடைச்சுதுன்னா அதிஷ்டம். உங்க சிநேகிதர் என்ன பண்ணிண்டிருக்கார்?”

“அவரும் பெரிய  உத்தியோகந்தான். ஒரு பெரிய கம்பெனியிலே விற்பனைப் பிரிவுக்குத் தலைவரா இருக்கார்.”

“பிசினெஸ் நெளு தெரிஞ்சவர். லோகம் தெரிஞ்சவர். இல்லாட்டா ஜாதகம் வாங்கறதுக்கே நேரே உங்களை வரச் சொல்லி எழுதுவாரா? முடிச்சு விடுங்கோ” என்றார்; “அது சரி நீங்க என்ன பண்றேள் பட்டணத்துலே?”

வேலையைச் சொன்னேன்.

“சொந்த ஊர்?”

அதையும் சொன்னேன்.

“அதுவும் செழிப்பான ஜில்லா தான். ஆனா அதுக்கும் இதுக்கும் ஒறை போடக் காணாது. உங்க ஊர்லெ நூறு ஏக்கரும் சரி; இந்த ஊர்லே பத்து ஏக்கரும் சரி. வருஷம் முழுக்க ஆத்திலே பிரவாகம் போயிண்டே இருக்கும். கழனியும் காடும் விளைஞ்சிண்டே இருக்கும். இல்லாட்டா எங்கேயோ திருக்கோவிலூர் கிட்டப் பிறந்துவிட்டு இங்கே வந்து பணத்தைக் கொட்டி வாங்குவேனா? பத்துக்காணிதான், உங்க ஊர்லெ ஒண்ணரை வேலின்னு சொல்லுவா. ஆனா இந்தப் பத்துக் காணியும் உங்க ஊர்லெ ஏழெட்டு வேலி வாங்கறத்துக்கு சமம்னேன். என்னமோ பகவான் மனசிலே பூந்து வாங்குன்னு நல்ல புத்தியைக் கொடுத்தார். வாங்கினேன். சௌக்யமா இருக்கேன். சௌக்கியமா சாப்பிடறது இருக்கட்டும்; இந்த எடத்தைச் சொல்லுங்கோ, ஒரு நாளைக்கு இப்படிக் குளிக்கக் கெடைக்குமா உங்க ஊர்லியும் எங்க ஊர்லியும்? பாருங்கோ, அகண்ட சச்சிதானந்தமே முன்னாலெ நிக்கறாப்பலவே இருக்கா இல்லையா? இருபத்தஞ்சு வருஷமா ஒரு நாள் பெசகலெ. இங்கே வந்து குளிக்கிறேன். கோயில் திண்ணையிலே உட்கார்ந்து கண்ணை மூடிக்கிறேன். கால தேசம் எல்லாம் அழிஞ்சு போறது. எத்தனை நேரம் உட்கார்ந்திருக்கேன்னு எனக்கே தெரியலை. ஒரு மணியோ, ரெண்டு மணியோ, இப்ப வயசு எண்பது முடிஞ்சு போயிடுத்து. தள்ளலை. இல்லாட்டா இப்படியா ஒன்பது மணிக்கு வருவேன் ஸ்நானத்துக்கு? பாஷண்டன் மாதிரி? நான் வந்து குளிச்சு, ஜபத்தை முடிச்சிண்டு எழுந்துக்கறபோதுதான் சூரியோதயம் ஆகும். ரெண்டு வருஷம் ஆச்சு. முடியலை.”

கிழவர் ஒல்லி அல்ல; நடுத்தரப் பருமன். நல்ல சதைப்பற்று. ஆனால் எண்பது வயசு என்று சொல்லமுடியவில்லை.

குளிக்கத் தொடங்கினார் அவர். நானும் குளிக்கத் தொடங்கினேன். மீண்டும் மீண்டும் அவர் ஊரின் வளத்தையே சொல்லிக் கொண்டிருந்தார். என் ஜில்லா டெல்டாவானாலும் இந்த ஊருக்குக் கால்தூசு பெறாது என்று என் மண்டையில் ஏற்றிக் கொண்டேயிருந்தார்.

“ஒங்க ஊர்லே ஒரு ஏக்கர் என்ன விலையாறது இப்ப?”

“சுமாரா இருந்தா மூவாயிரம் ஆகும். நல்லதாயிருந்துதுன்னா ஐயாயிரம்.”

“ரொம்ப நல்லதாயிருந்தா?”

“ஏழாயிரம் ஆகலாம்.”

“இந்த ஊர்லெ படுமோசமான பூமியாயிருந்தா ஏக்கர் பன்னண்டாயிரம், ஒண்ணா நம்பர் நிலமாயிருந்தா இருபதாயிரம் முப்பதாயிரம் ஆகும். இருந்தாலும் குடுக்க மாட்டான். லட்ச ரூபா குடுத்தாலும் கெடைக்காதுன்னேன். நானே அந்தக் காலத்திலே, நெல்லு கலம் ஒண்ணே கால் ரூபா வித்த காலத்திலே, காணிக்கு எட்டாயிரம் குடுத்து வாங்கினேன்னா, இப்ப கேப்பானேன்? இப்ப ரூபா மதிப்புத்தான் ஆறிலே ஒண்ணுகூட இல்லையே. அப்ப படி மூணு அணா அரிசி. இப்ப ஒண்ணரை ரூபாய்க்குக் கெடைக்கலே. பாத்துக்குங்கோ!”

“நீங்க ரொம்ப தீர்க்க தரிசனத்தோடதான் வாங்கியிருக்கேள்.”

“தீர்க்கமாவது தரிசனமாவது! ஏதோ வாச்சுது. எங்க தகப்பனார் இருந்து, அவருக்கும் நிலபுலன்னு இருந்தா இப்படி வாங்க விட்டிருப்பாரா? அவரும் இல்லை. ஒரு குழி நிலமும் அவருக்கு இல்லை. ஊரிலே அவருக்கு நிலம் இருந்திருந்தா, மேலே வாங்கிறதை அங்கன்னா வாங்கச் சொல்லியிருப்பார்? எனக்கும் சுயார்ஜிதம், நானாக் கஷ்டப்பட்டேன்? சம்பாதிச்சேன். அஞ்சு பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணினேன். மிச்சம் இருக்கிறதை, பகவானேன்னு இங்கே கொண்டு போட்டேன். போட்டேனோ பிழைச்சேனோ! ஒண்ணும் குறைச்சல் இல்லாம ஏதோ நடந்துண்டு வரது! காவேரி ஸ்நானம்.”

“நிஷ்டை!”

“நிஷ்டை, சமாதி, அகண்ட சச்சிதானந்தத்தை இந்த இடத்திலேன்னா பார்க்கணும்? வானாகி, வெளியாகி, எங்கும் பிரகாசமாகி, நின்ற பரிபூரண நந்த பரமே என்பாளே, அதை இங்கேன்னா பார்க்கணும்! இந்த ஊர்லே இருக்கிறவாளுக்கு அது தெரியலே. நிலம்புலம், சாகுபடி, மாடுகன்னுன்னு காசே தியானமா, பரம வ்ராத்யன்கனா இருக்கான்கள். போகட்டும் போகட்டும். ‘அத்வைதம் கோடிஜன்மஸு’ ங்கறாப்பல கோடி ஜன்மம் எடுத்தால்தானே அத்வைத ஆசை வரும்?”

இருபத்தைந்து வருஷமா ஒரு நாள்கூட விடாமல் இங்கே குளித்து, தினமும் அகண்ட மோன வெளியில் ஆழ்ந்துவிடும் கிழவரைக் கண்டு அசூசையாகத்தான் இருந்தது. அவர் மணலையடைந்து தலையைத் துவட்டிக் கொண்டார்.

“சர்க்கார் உத்யோகத்திலேருந்துதான் ரிடையரானாப்பலையாக்கும்?” என்று கேட்டேன்.

“ஆமாம் ஸ்வாமி, தாசில்தாரா இருந்தேன். கௌரமா இருந்தேன். நல்ல வேளையா அப்பவே ரிடயராயிட்டேன். இப்பத்தான் ஜாதி வாண்டாம், மதம் வாண்டாம், எல்லோரும் ஒண்ணாயிடுங்கோங்கறாளே. இதுக்கெல்லாம் முன்னாலேயே நான் ஒதுங்கிட்டேன்.”

என்னுடைய மோனங்கூடச் சற்றுக் கலைந்தது. தாசில்தாருக்கு அந்தக் காலத்தில் இருநூறு ரூபாய்தான் சம்பளம். அந்தச் சம்பளத்தை வைத்துக் கொண்டு ஐந்து பெண்களுக்குச் கல்யாணம் செய்து, எண்பதாயிரம் ரூபாய்க்குப் பத்துக்காணி நிலம் வாங்கி, ஒரு வீடும் வாங்கி… முப்பது வருஷம் இரு நூறு ரூபாய் சம்பளம் வாங்கினாலும் அதச் செலவழிக்ககாமல் சாப்பிடாமல் இருந்தால்தானே எண்பதாயிரம் சேர்த்திருக்க முடியும்?

சிறிது நேரம் இந்தப் பிரமாண்ட சாதனையை நினைத்து மலைத்துப்போய் நின்றவன், “எப்படி இவ்வளவு வாங்க முடிஞ்சுது?” என்று என்னை அறியாமல் கேட்டுவிட்டேன்.

“முடியும். அது இந்தக் காலம் இல்லை. தாசில்தார்னா கலெக்டர், கவர்னருக்கு இருக்கிற மரியாதை இருந்தது அப்பல்லாம். ’காம்ப்’புன்னு போனா, ஒரு ஒரு இடத்திலேயும் உள்ளங்கையிலே வச்சுன்னா ரச்சிப்பா. என்ன மரியாதை! என்ன உபசாரம்! அந்த பயம் பக்தி எல்லாமே போயிடுத்தே இப்ப. இருந்த இடம் தெரியலையே!”

கிழவரை இதே காவேரியில் தலையைப் பிடித்து நீரில் அமுக்கி, ஐந்து நிமிஷம் அப்படியே வைத்திருந்தால்…?

சீ! என்ன பாபசிந்தை!

ஒரு நாள் நிஷ்டையில் எல்லாப் பாவங்களும் சாம்பலாகி விடும். இருபத்தைந்து வருஷம் தினந்தோறும் காலதேசம் அறியாத நிஷ்டை என்றால் அவருக்கு முன்னும் பின்னுமான பத்துத் தலைமுறைகளின் பாவம் எரிந்து சாம்பலாகியிருக்கும்!

என்ன பாபசிந்தை!

கிழவர் பளபளவென்று தங்கமாகத் தேய்த்த குடத்திலும் செம்பிலும் காவிரி நீரை மொண்டு கையில் எடுத்துக் கொண்டே, “நீங்க வரதுக்கு நாழியாகும் போலிருக்கே?” என்று விடை பெறுகிற மாதிரி கேட்டார்.

“நீங்க போங்கோ, நான் வரதுக்கு இன்னும் ரொம்ப காலமாகும்” என்றேன்.

நேரம் என்று சொல்ல நினைத்துக் காலம் என்று வாய் தவறி வந்து விட்டது.

***

நன்றி: ஐந்திணைப் பதிப்பகம் / ‘அமரர்’ தி.ஜானகிராமனின் ‘மனிதாபிமானம்’-தொகுப்பு

துக்கம் – வண்ணநிலவன்

எல்லாம்  முடிந்து விட்டது. இனிமேல் மதுரைக்கும் உடன்குடி ஜமால்மைதீன் குடும்பத்துக்கும் ஒரு தொடர்பும் இருக்காது. பஸ்ஸில் சுபைதாளை அழைத்துக்கொண்டு திரும்பிக்கொண்டிருந்த மெஹ்ருன்னிஸாவுக்கு சுபைதாளைப் பற்றி நினைக்க நினைக்க வருத்தமாகத்தான் இருந்தது. எவ்வளவு தங்கமான பையன் சுலைமான். ஒரு கெட்ட பழக்கம் உண்டுமா? மவுத்துக்கு வந்தவர்கள் எல்லோரும் இந்தப் பையனுக்கு இப்படி ஆகியிருக்கவேண்டாமே என்று வருத்தப் பட்டார்கள். வருத்தப்படாதவர்கள் பாக்கியில்லை. மில்லில் டூட்டு முடிந்த பத்தாவது நிமிஷம் சுலைமானை வீட்டில்தான் பார்க்கலாம்.

பெட்டியைத் தூக்கிப் போகிற நேரத்துக்கு அந்தச் சின்ன முதலாளியே காரில் வந்துவிட்டார். வீடு ரொம்பச் சின்ன வீடு. ஒரே ஒரு பெஞ்ச் மட்டும்தான் வாசலில் போடப்பட்டிருந்தது. மில்லிலிருந்து வந்த ஜனம் பூராவும் சந்தில்தான் நின்றது. முதலாளி வந்துவிடுவார் என்று சொல்லித்தான் தாமதப்படுத்திக் கொண்டே இருந்தார்கள். தீபம் வைக்கிற நேரமாகிறது என்றுதான் அந்தச் சங்கத் தலைவரே – அவனும் இந்தச் சுலைமான¨ப் போல எவ்வளவு அருமையான புள்ளை – தூக்குகிறதுக்கு ஏற்பாடு செய்தான்.

சொல்லி வைத்தது மாதிரி நேரத்துக்கு முதலாளி வந்துவிட்டார். ‘சின்ன முதலாளி, சின்ன முதலாளி வந்தாச்சு..’ என்று ஒரே பேச்சாகக் கிடந்தது. அடக்கம் செய்கிற வரைக்கும் அவர் கூடவே இருந்தாராம். எவ்வளவு பெரிய கோடீஸ்வரன். அந்தப் புள்ளையாண்டான் காரை வீட்டுக்குப் பக்கத்தில் நிறுத்திவிட்டு ஜனத்தோடு ஜனமாய் அதுவும் அடக்க ஸ்தலத்துக்கு நடந்தே போயிருக்கிறதே. நல்ல மனுஷர்கள் எங்கேயும் இருக்கிறார்கள் என்று சொல்வதுதான் எவ்வளவு சரியானது.

இந்தப் புள்ளைக்குத்தான் எல்லாம் கொடுத்து வைக்காமல் போய்விட்டது. அவனும் வாப்பா, உம்மாவை அறியாத பையன். இதுவும் வாப்பாவைத் தின்ன பிள்ளை என்று பார்த்துத்தான், பட்டணத்து தாவுது சாச்சா சொல்லித்தான் எல்லாம் நடந்தது…என்னமோ ஆண்டவருக்கு இப்படித் தோணியிருக்குது, மூன்றாவது வருஷமே அறுத்துக்கிடனும் என்று.

மெஞ்ஞானபுரமே வந்துவிட்டது. ஒரு அஞ்சலில் உடன்குடி பஸ் ஸ்டாண்டில் போய் நின்றுவிடுவான். இந்தப் பிள்ளைகள் இரண்டும் என்ன செஞ்சிக்கிட்டிருக்குதுகளோ தெரியவில்லை. எல்லாம் ஹாஜியார் வீட்டில் பார்த்துக்கொள்வார்கள் என்றாலும், கிலேசப்படாமல் இருக்க முடியவில்லை. இந்த் மில்லுப் பணம் ஒரு வாரத்திற்குள் வந்துவிடுமாம். எட்டாயிரம் ரூபாய் வருமாம். அது வந்தால் நடுவுள்ளவளைத் தள்ளிவிட்டு விடலாம். ஆத்தாங்கரைப் பள்ளியில் ஆயிஷாவோட பையன் காப்ப்பிக் கடை வைத்து நடத்துகிறானாம். ஒண்ணுக்குள்ள ஒண்ணா இருக்கும். இங்கே பிறந்த வீட்டில்தான் கோரையை முடைந்து முடைந்து கை வாரியல் குச்சி மாதிரி ஆகிவிட்டது. அங்கேயாவது கொஞ்சம் உட்கார்ந்து சாப்பிடட்டும். ஆயிஷா பெற்றவளைப் பார்த்துக்கொள்ளுவாள். அதைத் தள்ளிவிட்டாயிற்று என்றால் அடுத்தது இந்த நொண்டிக் கழுத ஒண்ணுதான். இதுக்கும் ஒரு நொண்டியத் தேட வேண்டியதுதான். பாவி, பெத்ததுதான் பெத்தேன், ஒண்ணாவது ஆம்பளப் பிள்ளையாப் பெத்திருக்கக் கூடாதா?

பெரிய வீடுகளா இருந்தால், முதல் மாப்பிள்ளை போனால் அடுத்த மாப்பிள்ளையைப் பிடித்து விடுவார்கள். ஜமால் மைதீன் வாப்பா சாகும்போது ஒரு கட்டு கோரை புல்லைத்தானே விட்டுட்டுப் போயிருக்காரு.

சீக்கிரமே உடன்குடி வந்துவிட்டது. சுபைதாளை பஸ்ஸ்டாண்டிலேயே சாமான்களுக்குப் பக்கத்தில் காவலுக்கு வைத்துவிட்டு, பஞ்சாயத்து போர்டு ஆபீஸ் பக்கம் போய் முத்தையா கோனார் வண்டியை அழைத்துக்கொண்டு வந்தாள்.

வீட்டுக்குப் போனதுமே எல்லோரும் வந்து கூடிவிட்டார்கள். துஷ்டி கேட்க வேண்டாமா? ஜமால் மைதீன் என்னதான் தாழ்ந்து போய்விட்டாலும் ஊர் வளமை என்று ஒன்று இருக்கிறதே? அதை விட்டுக் கொடுத்து விடுகிறது என்பதுதான் அவ்வளவு லேசானதா என்ன?

சுபைதா அழுதுகொண்டே இருந்தாள். என்ன இருந்தாலும் சுலைமான் அவளுக்கு மற்ற மனிதர்களைப் போன்றவன் இல்லையே. மூன்று வருடங்கள் அவனோடு உடனிருந்து வாழ்ந்தவள் இல்லையா? வந்து விசாரித்தவர்கள் எல்லோரும் சுலைமானுடைய மவுத்துக்கு ஆற்றாமைப்பட்டு விட்டுத்தான் போனார்கள். சில பெண்கள், குறிப்பாக கொருக்கு முதலாளியின் சம்சாரம்கூட அழுவது என்பது லேசானதல்ல.

மெஹ்ருனிசாவுக்கு ஒரே ஒரு விஷயம் மட்டும் ஆச்சரியாயிருந்தது. துஷ்டி கேட்க வந்தவர்கள் எல்லோருமே அவளைப் போலவே, மில்லில் இருந்து வருகிற பணத்தை வைத்து நடுவுள்ளவளைத் தள்ளிவிட்டுவிட வேண்டும் என்று சொன்னார்கள். அப்படிச் சொல்லும்போதெல்லாம் மெஹ்ருன்னிஸா அதைப் பற்றி அவ்வளவாக அக்கறை இல்லாதவளைப் போல கண்களை இடுக்கிக்கொண்டு மெதுவான குரலில், “ஆமாம்ளா நானும் அப்படித்தான் நெனச்சிருக்கேன். ஆனா நாகூராரு என்ன நெனைச்சிருக்காரோ தெரிய இல்ல..இந்தப் புள்ள சுபைதாள நெனைச்சாதான் தாங்க முடியல. இத்தன வயசுல போயி இது இப்படி வந்து உக்காந்துட்டுதேங்கிறதை நெனச்சால் ஈரக்கொலையே அந்து விளுதாப்பல் இருக்கு’ என்று கண் கலங்க அழ ஆரம்பித்து விடுவாள்.

“பின்ன? பைத்தியக்காரி.. நீ பெத்தவளாச்சே கஷ்டமா இராதா?’” என்பார்கள்.

ஆனால், இதையும் எல்லோரும் ஒரே மாதிரியாகத்தான் சொன்னார்கள்.

***

தினமணி சுடர், டிசம்பர் 24,1994

23/09/2011

திருக்குறள் காட்டும் அரசியல் - ஆர்.அனுராதா

நாட்டின் தன்மை, ஆட்சியின் இயல்பு ஆகியவற்றின் நிலைகளை எடுத்துக் கூறுவதை அரசியல் எனலாம். இது ஒரு சமூகத்துள் வாழும் மக்களின் செயல்களின் நிலையை எடுத்துக்காட்டும். மனிதனின் எண்ணங்களும் கற்பனைகளும் பிறரால் கட்டுப்படுத்த முடியாதவை. உலகம் ஒரு குடும்பம். மக்கள் அதன் உறுப்பினர். ஆள்வோரும் ஆளப்படுவோரும் வேறல்லர். குடியரசு, முடியரசு, படையரசு என எதுவாக இருப்பினும் சிறப்பான முறையில் அரசு நடத்துவதை நோக்கமாய்க் கொள்ள வேண்டும். வள்ளுவரின் அரசியல் எப்படிப்பட்டது என்பதை அறிவதே இவ்வாய்வின் நோக்கமாகும்.

வள்ளுவர் இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தமிழகத்தில் வாழ்ந்த ஒரு தனிப்பெரும் புலவர். வள்ளுவர் வையகம் தழைத்து வாழ அறநூலாம் திருக்குறளை எழுதியுள்ளார். வள்ளுவரின் திருக்குறன் உலகப் பொதுமறையாகப் போற்றப்படுகின்றது. எக்காலத்தும், எந்நாட்டவராலும், எச்சமயத்தினராலும் பின்பற்றக்கூடிய கருத்துகள் அதில் இடம் பெற்றுள்ளன. வள்ளுவர் வாழ்வின் பல்வேறு கூறுகளை நன்கு ஆராய்ந்து தெளிந்து உலக உயிர்களின் செம்மையான வாழ்க்கைக்கு வேண்டிய அறிவுரைகளை விளக்கி உள்ளார். அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பிரிவுகளில் வாழ்க்கை பொலிவடையும் வழிவகைகளை வகுத்துள்ளார். இவர் பொருட்பாலின் முதல் 25 அதிகாரங்களிலும், ஒழிபியல், அங்கவியல் போன்ற அதிகாரங்களிலும் அரசியல் கருத்துகளை உள்ளடக்கி உள்ளார்.

நாட்டிற்கு ஓர் அரசு வேண்டும். அரசுக்கோர் தலைவன் வேண்டும் என்பது வள்ளுவம். தலைவன் வரும் வழி பற்றிக் கவலையில்லை. எவ்வழியாயினும், அரசேற்கும் தலைவனைப் பற்றியே ஆசான் கவலை கொண்டார். அரசன் தவறும் வழி பேசாது இறைமாட்சி அதிகாரத்து அவனுக்கு அமைய வேண்டும் அரசியல்புகளைப் பேசினார் என்பர் வ.சு.ப. மாணிக்கம்.

நாடாளுகின்ற அரசன், உயர்ந்த குறிக்கோள் உடையவனாகவும், பண்புடையவனாகவும், ஆற்றல்கள் நிறைந்தவனாகவும் இருக்க வேண்டும் என்பதே வள்ளுவரின் கருத்து. வள்ளுவர் மன்னனும் மக்களும் ஒன்றே என்னும் கருத்துடையவர். மனிதனுக்குரிய சிறந்த குணங்களை அரசன் பெற்றிருக்க வேண்டும் என விரும்புகின்றார். மன்னனிடமிருந்து மக்களை வேறுபடுத்துவது நாடாளும் பொறுப்பு மட்டுமே. மக்களுக்கு ஆட்சிக்கு உட்படும் கடமை. இந்த வேறுபாட்டைத் தவிர பிற வேறபாடில்லை. பண்டைக் காலத்தில் முடியாட்சி வழக்கத்திலிருந்தது. அரசன் தெய்வீகத் தன்மை வாய்ந்தவன் என்ற கருத்து நிலவி வந்தது. அரசன் தவறு செய்யமாட்டான். அரசனைத் தவறு செய்பவனாக நினைப்பதே மிகவும் பாவம் என நினைத்து வாழ்ந்தனர் மக்கள் என்றால் அது மிகையில்லை.

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு

இறைஎன்று வைக்கப் படும்

- - - (குறள் 388)

என்ற குறளின் மூலம் வள்ளுவர் கூறியதாவது: அரசனைக் கடவுளாக நினைத்த காலத்திலேயே நீ கடவுள் இல்லை. நீ நல்லபடி நடந்தால் மக்கள் உன்னைக் கடவுளாக நினைத்துப் போற்றுவார்கள் என்றார். இக்கருத்து எக்காலத்திற்கும் பொருந்தும் என்பது எவ்வளவு பெரிய உண்மை. குடியாட்சி மலர்ந்துள்ள இந்த நாளில் கூட மக்கள் அரசிடமிருந்து எதிர்பார்ப்பதும் இதையே தான். ''திருவள்ளுவர் ஆட்சித் தலைவனுக்கு என்று கூறும் இயல்புகள் நாட்டு மக்கள் பலருக்கும் வேண்டிய நல்லியல்புகளாக உள்ளன. நாட்டு மக்களும் நல்ல இயல்பும் திறனும் கல்வியும் உள்ள பலர்க்கும் ஆட்சித் தலைமை கிடைக்கக்கூடிய வாய்ப்பு இருக்கும். அரசியல் முறையே குடியாட்சி முறை" என்ற மு.வ. அவர்களின் கருத்து சிந்தனைக்குரியது.

மன்னன் என்பவன் மக்களைக் கண்ணாகவும் உயிராகவும் உடலாகவும் கருதினான் என்று பல்வேறு காலங்களில் வாழ்ந்த சான்றோர்கள் பல்வேறு கருத்துகளைச் சொல்லிச் சென்றுள்ளனர். வள்ளுவர் அரசன் ஆட்சி செய்த செங்கோல் ஆட்சியினையே இறைமைத் தன்மை உடையதாகக் கருதினார். இதனைப் பின்வரும் குறள் புலப்படுத்தும்.

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்

நின்றது மன்னவன் கோல்

- - - (குறள் 543)

இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை

முறைகாக்கும் முட்டாச் செயின்

- - - (குறள் 547)

தலைவன் செங்கோலாட்சி புரிந்தால் மக்கள் அவனை மதிப்பர். இல்லையாயின் அவனுடைய நிலை கெடும் என்பது,

வெருவந்த செய்தொழுகும் வெங்கோலன் ஆயின்

ஒருவந்தம் ஒல்லைக் கெடும்

- - - (குறள் 563)

எனும் குறளால் அறியப் பெறும். வள்ளுவர் கால அரசு மன்னனையும் மக்களையும் மையமாகக் கொண்டது. மக்கள் நினைத்தால் மன்னனை மாற்ற இயலும் என்னும் குரலைப் பல குறள்களில் காணலாம். மக்களை நீக்கியதற்கான சான்றுகள் இல்லை. மறைமுகமாக எடுத்துரைக்கிறார். சான்றாக,

இறைகடியன் என்றுஉரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்

உறைகடுகி ஒல்லைக் கெடும்

- - - (குறள் 564)

அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்­ர்அன்றே

செல்வத்தைத் தேய்க்கும் படை

- - - (குறள் 555)

என்ற குறள்களில் மன்னன் மக்கள் விருப்பத்திற்கு மாறாக ஆட்சி நடத்துவானேயானால் அவனுடைய ஆட்சி விரைவில் அழியும். அதற்கும் மாறாக ஆட்சி புரிபவனாக இருந்தால் அவன் கொடுங்கோலன் என்று மக்களால் தூற்றப்படுவான் என்று கூறுகிறார். அரசன் மக்கள் மனம் மகிழ அரசாட்சி நடத்த வேண்டும். இதற்கு அரண் சேர்க்கும் வகையில் பின்வரும் கருத்து அமைந்துள்ளது. அரசியல் என்பது மனித வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாத ஒரு தத்துவம் கொள்கை. அரசியல் என்பது வாழும் முறை (Way of life) அல்லது வாழ்க்கை முறை (Way of living) ஆகும். அஃதொரு சமுதாய வாழ்க்கை முறை. அரசியல் சமுதாய வாழ்க்கைக்கு ஒருங்கமைதியைத் தருவது. ஒருவர்க்கு மேற்பட்ட பலர் கூடி வாழ்வதற்கும், பொருளியல் ஒழுங்கியல் முறைகளுக்கும் அரசியலே வழிவகுத்துத் துணை செய்கிறது. அறநெறிகளில் மனிதகுலம் ஒன்றி நின்று வாழ்வதை உறுதிப்படுத்தத்தான் அரசியல் தோன்றுகிறது, தொண்டு செய்கிறது. அரசியல் தத்துவங்கள் மனித உலக வரலாற்றின் நிகழ்வுகளிலிருந்து தோற்றம் பெறுகின்றன. சிறந்த அரசியல் நிலவும் நாட்டில் ஒழுங்குகள் நிலவும். வாழ்க்கையின் துய்ப்புக்குரியன அனைத்தும் எளிதில் கிடைக்கும். அறிவுத்துறை மேம்பட்டு விளக்கமுறும். ஆங்குப் பகை ஒடுங்கிப் பண்பாடு விளங்கும். அரசியலின் பயன் அரசியலை நடத்துபவர்களுக்கன்று; மக்களுக்கேயாம்.

''முடி மன்னர்க்கு'' என்று வகுத்துக் கூறிய நெறிமுறைகள் குடிமக்களுக்கும் உரியதாக உள்ளன. குழந்தையைக் காப்பாற்றுவது தாயின் கடமை. தாய்மார்களை இரண்டு வகையில் அடக்கலாம். ஒன்று காலமறிந்து உணவு கொடுப்பவர்கள். மற்றொன்று அழுதபின் கொடுப்பது. எப்படி இருப்பினும் குழந்தையைக் காப்பாற்ற வேண்டியது தாயின் கடமை. மன்னன் மக்களைக் காப்பதில் தாயை ஒத்து விளங்க வேண்டும் என்பதனை,

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்

அடிதழீஇ நிற்கும் உலகு

- - - (குறள் 554)

என்று விளக்கிக் கூறியுள்ளார். ''மன்னன்'' என்பதை விட்டுவிட்டு வேறு சொல்லால் அழைத்தால் அது இன்று நடைமுறையில் இருக்கும். குடியாட்சியை உடைய எந்தவொரு நாட்டுத் தலைவனுக்கும் பொருந்துவதாக இருக்கும். குடிதழீஇக் கோலோச்சும் ஒருவருக்கு - குடி மக்களைத் தழுவி ஆளும் ஒருவருடைய ஆணைக்கு இவ்வுலகம் கட்டுப்படும். வள்ளுவரின் குறளில் குடியாட்சிக்குப் பொருந்தாத இறை மன்னன் வேந்தன் எனப் பல சொற்றொடர்கள் உள்ளன. இச்சொற்கள் பொதுமையாக ''ஆட்சித் தலைவன்'' எனும் பொருளில் கையாளப்பட்டுள்ளன. அரசுப் பொறுப்பில் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் குடிமக்களின் நன்மை கருதி வேண்டியன செய்ய வேண்டும். மக்களுக்கு நன்மை செய்ய வேண்டியது அவர்களின் கடமை என்பதை உணர்ந்து பொறுப்பாக நடக்க வேண்டும் எனும் கருத்து மக்களாட்சிக்கும் பொருந்துவதாக உள்ளது.

வள்ளுவர் விவசாயம், தொழில் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். விவசாயத்தை உலகின் உயிர்நாடி என்று கருதி நீர் மராமத்து, குடி மராமத்துகளைப் பெருக்குதல் அரசின் கடமை என்கிறார்.

வாரி பெருக்கி வளப்படுத்து உற்றவை

ஆராய்வான் செய்க வினை

- - - (குறள் 512)

அரசுக்கு வேளாண்மைத் துறையில் உள்ள பங்கு இதனால் பெறப்படுகிறது.

அரசுப் பொறுப்பில் உள்ளவர்கள் செய்ய வேண்டிய செயல்களை எடுத்துரைத்த வள்ளுவர், அடுத்ததாக அரசுக்குப் பொருள் வருவாயை அதிகரிக்கும் வழிவகைகளைச் சொல்லிச் செல்கிறார்.

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த

வகுத்தலும் வல்லது அரசு

- - - (குறள் 385)

இதில் இடம்பெற்றுள்ள இயற்றல் என்னும் சொல் மிகவும் முக்கியமான சொல்லாக ஆளப்பட்டுள்ளது. புதிய பொருளாதாரக் கொள்கையின் படி, புதிய தொழில்களை நிறுவியதால் ஏற்பட்ட புதிய அமைப்பின் மூலம் தேடிப் பெறப்பட்ட பொருள் என்பதையே இயற்றல் என்கிறார் வள்ளுவர். புதிய வரிகள் எனப் பொருள் கொள்ளக்கூடாது. நேர்மையான முறைகளில் புதிய வழிகளில் பொருளைத் தேடிச் செல்வத்தைக் குவிப்பதைக் கடமையாய்க் கொள்ள வேண்டும். இவ்வாறு பெறப்படும் பொருளை ஒழுங்கான முறையில் சேர்க்க வேண்டும். இதனை ஈட்டல் என்று குறிப்பிடுகிறார். அதைப் பாதுகாப்போடு வைத்திருப்பதைக் காத்தல் என்று கூறியுள்ளார். இயற்றல், ஈட்டல், காத்தல் ஆகியவற்றை அரசின் கடமைகளாக வள்ளுவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலுக்கும், ஆட்சியாளர்களுக்கும், அமைச்சர்களுக்கும் இது சாலவும் பொருந்தக்கூடியது. இறைமாட்சி என்ற அதிகாரத்தில் கூறியுள்ள அறிவுரைகளை அமைச்சர்கள் பின்பற்றி நடந்தால் நாடு நலமுறும். சான்றாக,

படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்

உடையான் அரசருள் ஏறு

- - - (குறள் 381)

என்ற குறளின் மூலம் உள்நாட்டு அமைதியைப் பாதுகாக்கவும், வெளிநாட்டுப் படையெடுப்பை, எதிர்க்கவும் தேவையான படைகள், ஆட்சிக்கு அடங்கி நடக்கும் மக்கள், தேவையான உணவு, அறிவும் திறமையும் வாய்ந்த அமைச்சர்கள் அண்டை நாடுகளுடன் நட்பு, நாட்டைக் காக்கும் இயற்கை அரண்கள் ஆகிய ஆறு உறுப்புகளைக் கொண்டவன் அரசர்களில் ஏறு போன்றவன். இவ்வடிப்படைத் தன்மைகள் யாரிடம் இருந்தாலும் அவர்கள் அரசாளலாம் என்பதே வள்ளுவரின் எண்ணம். அரசனின் ஆளுகைக்கு உட்பட்ட நாட்டைத் தம் உடைமையெனக் கருதாமல் உயிராகவே கருதுதல் வேண்டும். நாட்டிற்கு அழகு சேர்ப்பது,

பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம்

அணிஎன்ப நாட்டிற்குஇவ் வைந்து

- - - (குறள் 738)

எனக் கூறியுள்ளார். நாட்டைப் பாதுகாக்கும் வழி முறைகளையும் கூறுகிறார். இதனை,

இளைதாக முள்மரம் கொல்க களையுநர்

கைகொல்லும் காழ்த்த இடத்து

- - - (879)

பகைவர் வலிவடைவதற்கு முன்னரே அவரை வெல்ல வேண்டும். இல்லையாயின் அவர்கள் வலுவடைந்த பின் அவர்களை வெல்வது கடினம் என்று அறிவுறுத்துகிறார்.

ஒரு நாடு சுய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டுமானால் வெளிநாட்டுப் பொருள்கள் மீது வரி விதிக்க வேண்டும். உள்நாட்டுப் பொருள்கள் மீது வரி விதிக்கக் கூடாது என்கிறார். இதனை,

உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்

தெறுபொருளும் வேந்தன் பொருள்

- - - (குறள் 756)

என்ற குறளின் மூலம் வெளிநாட்டுப் பொருள்களின் மீது மட்டும் தான் வரி விதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

வள்ளுவருடைய அரசு அமைப்பில் ஆள்வோரும் ஆளப்படுவோரும் நெருங்கிய உறவினர்களாகக் காட்டப்பட்டுள்ளனர்.

பொறைஒருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு

இறைவருங்கு நேர்வது நாடு

- - - (குறள் 733)

அரசின் நெருக்கடி உணர்ந்து மக்கள் பொருளைத் தருகிறார்கள். இப்படி அரசை மக்களும், மக்களை அரசனும் புரிந்து நடப்பதையே நாடு என வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

அரசுக்குப் பலவிதமான அதிகாரங்கள் இருந்தாலும் அதனால் ஏற்பட்ட அகந்தையின் காரணமாய்த் தவறு செய்யாதிருக்கும் அரசே நல்ல அரசு என்றும் குறிப்பிடுகிறார். அதாவது அரசு ஒழுக்கம் நிறைந்ததாக இருக்க வேண்டும். அப்படியிருந்தால்தான் மக்களும் தவறு செய்ய மாட்டார்கள். மக்கள் தவறு செய்யாமல் வாழ்வதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொடுக்கும் அரசே நல்ல அரசு என்றும் குறிப்பிடுகிறார். அடுத்து அவர் தீமையை ஒழிக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றிக் கூறுகிறார். அரசு தீய செயல்களை தண்டிக்க வேண்டும். தீமை செய்தவர்களைத் தண்டிப்பதும், தீமையை ஒழிப்பதும் அரசின் தலையாய கடமையாகும். இதனை வள்ளுவர்,

குடிபுறம் காத்தோம்பிக் குற்றங் கடிதல்

வடுவன்று வேந்தன் தொழில்

- - - (குறள் 549)

என்று மிகச் சுருக்கமாகவும், தெளிவாகவும் குறிப்பிட்டுள்ளார். அஞ்சாத திண்மை, வறியவர்களுக்கு ஈயும் பண்பு, சோம்பல் இல்லாதிருத்தல், முயற்சியை நட்பாகக் கொள்ளுதல், கல்வி கேள்விகளிற் சிறத்தல், துணிவுடைமை, குடிகளின் குறை தீர்க்கும் மனம், காட்சிக்கு எளிமை, இனிய சொல், நன்மை தீமைகளை ஆராய்ந்து செய்தல் என பல நல்ல குணங்களில் சேர்க்கையே அரசன். இப்பண்புகளைப் பெற்ற ஒருவனால் மட்டுமே நாட்டைச் சிறந்த முறையில் நிருவகிக்க முடியும். இக்கருத்தும் எக்காலத்திற்கும் பொருந்துவனவாகவே உள்ளது.

வான்நோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்

கோல்நோக்கி வாழும் குடி

- - - (குறள் 542)

எனும் குறளும், செங்கோன்மை எனும் அதிகாரத்தில் உள்ள பிற குறள்களும் இக்கருத்திற்கு வலுச்சேர்ப்பனவாக உள்ளன. சுருங்கக் கூறின் திருவள்ளுவருடைய அரசியல் அமைப்பை மக்கள் நல அரசு என்பது பொருத்தமாக இருக்கும்.

பண்டைக் காலத்தில் முடியாட்சியைத் தவிர வேறு அமைப்புகள் இல்லை. எனினும், முடியாட்சியில் மக்களாட்சியையும், குடியாட்சியில் கொடுங்கோலாட்சியையும் காணமுடிகிறது.

ஆட்சி எந்த உருவத்தில் காணப்பட்டாலும், அதன் நோக்கம், பயன் ஆகியவை கருதித்தான் உயர்ந்தது என்றோ, தாழ்ந்தது என்றோ கொள்ளப்பட வேண்டும். திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ''மக்கள் நல அரசுக்கு'' வித்திட்டு விட்டார் எனில் அது மிகையாகாது.

அடிக்குறிப்புகள்

1. வ.சு.ப. மாணிக்கம், வள்ளுவம், பக். 253 - 254.

2. ந. சஞ்சீவி, திருக்குறள் கனிகள், ப. 169.

3. குன்றக்குடி அடிகளார், திருவள்ளுவர், சொர்ணம்மாள் நினைவுச் சொற்பொழிவுகள், ப. 60.

2004 ஆம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகமும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்திய பன்னாட்டு திருக்குறள் மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரை.

திருவள்ளுவர் கூறும் அரசியல் பொதுநெறி - கோ.இராதிகா

அறந்திறம்பா நெறியால் பொருளீட்டு மாறும், தன்னைப் போற்றித் தானுந் துய்த்துப் பிறர்க்கும் கொடுக்குமாறும் என்று பொருட்பாலுக்குரிய விளக்கம் கூறும் வள்ளுவர் அரசநீதியையும் கூறியுள்ளார். ஏனெனில் நாட்டில் உள்ள மெலியார் பொருட்களை வலியார் கவராமல் நாடுவளம் பெற்று, வாணிகம் பெருகிட, நல்லார்ககுத் தீது புரியுங் கொடியாரைக் கண்டித்து முறை செய்யும் மன்னன் இல்லையாயின் பொருளீட்டுதல் நிகழாதாகையால் இங்கு அரசநீதியைக் கூறியுள்ளார்.

பகுப்பு முறை

அரசியலில், அங்கவியல், குடியியல் என்பன அடங்குகின்றன. அரசன் செங்கோல் நடத்தும் முறையும், அவனுக்குத் துணைக்காரணமாகிய அங்கங்களின் இயல்பும், அவ்வரசனால் பாதுகாக்கப்படும் குடிமக்கட்குரிய ஒழுகலாறும் சொல்லல் என்ற அடிப்படையில் பகுக்கப்பட்டதால் இறுதி இயல் குடியியல் எனப்பட்டது. அப்பெயரை ஒழிபியல் என மாற்றியோர் பரிமேலழகரோ, அவர்க்கு முற்பட்ட உரையாசிரியரோ என்பது தெளியப்படவில்லை.

குறிக்கோள்

''திருவள்ளுவர் குறள் முப்பாலால் ஆகியது. அவை அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்பன. ''உலகம் ஒரு குலம்'' என்பதற்குக் கால்கொள்ளும் இடம் காமத்துப்பால், அப்பாலுக்கு உரம் அளிப்பது பொருட்பால் இரண்டையும் ஒழுங்கில் இயக்கிக்காப்பது அறத்துப்பால். மூன்றன் குறிக்கோளும் ''உலகம் ஒருகுலமாதல் வேண்டும்'' என்பதைத் திரு.வி. கலியாணசுந்தரனார் விளக்குகிறார்.

அரசியல்

அரசியல், அங்கவியல், ஒழிபியல் இம்மூன்றியலுள்ளுங் கூறும் பொது நெறிக்கருத்துகளை இங்குக் கூறுவதென்பது இயலாத செயல். ஆகையால், அரசியல் 25 அதிகாரத்தினுள் கூறப்பட்டுள்ள 250 குறட்பாக்களின் பொது நெறிக் கருத்துக்களைக் காண்போம். அவற்றுள் 61 குறள்கள் மட்டுமே அரசுக்கு (அ) அரசனுக்குக் கூறப்பட்டுள்ளன. 189 குறள்கள் ஆட்சித் தலைமை உட்பட ''எல்லாருக்கும்'' பொருந்தும் பொதுக் கொள்கைகளைப் பேசுகின்றன.

பொது நெறிக் கருத்துகள்

பண்டைத் தமிழகத்தில் ''அறங்கூறும் அவையங்கள்'' பல இருந்துள்ளன. அதற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன. அறம் என்பது மனித வாழ்வில் தீமைகளை அகற்றித் துன்பங்களை விலக்கி இன்பத்தைத் தருவது. இந்த அறநெறி மனித வாழ்வில் படிப்பினைகளிலிருந்தே தோன்றி வரலாற்றுக்கு வளமூட்டுகிறது. இந்த அறநெறிகளில் மனிதகுலம் ஒன்றி நின்று வாழ்வதை உறுதிப்படுத்தத்தான் அரசியல் தோன்றுகிறது; தொண்டு செய்கிறது.

அரசியல் தத்துவங்கள் மனித வரலாற்றின் நிகழ்வுகளிலிருந்து தோற்றம் பெறுகின்றன. வள்ளுவர் காட்டும் அரசு குடியாட்சி தழுவிய முடியாட்சியாகும்.

அரசர்க்குரிய தகுதிப்பேறுகள்

வடமொழிச் சாத்திரங்கள் கூறுவதைப்போல் ஆட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்கும் வேந்தன் பிறப்பாலோ வழிவழியாகவோ மரபு வழியிலோ அன்றிக் கடவுள்தன்மை பெற்றோ ஆட்சிக்குவர வேண்டும் என்ற எவ்வகை நியதியையும் வள்ளுவர் கூறவில்லை. ஆனால், மக்கள் ஆட்சியை மாண்புற நடத்துவதற்கான தகுதிகளையும், பண்புச் சிறப்புகளையும் ஆட்சித்தலைவருக்குரிய இலக்கணமாக,

படைகுடிகூழ் அமைச்சு நட்பு அரண்ஆறும்

உடையான் அரசருள் ஏறு

- - - (குறள் 381)

ஆகிய 6 உடைமைகளையும் பெற்று அரசையும், குடிமக்களையும் நடுமாய்க் கொண்டதாகும்.

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு

இறைஎன்று வைக்கப் படும்

- - - (குறள் 388)

எனவும்,

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த

வகுத்தலும் வல்லது அரசு

- - - (குறள் 385)

பொருள் வருவாய்களை மேன்மேலும் உண்டாக்குதலும், வந்த பொருள்களை ஓரிடத்துச் சேர்த்தலும், சேர்த்தவற்றைப் பிறர்கவராமல் காத்தலும், காத்தவற்றை அறம் பொருள் இன்ப வழிகளில் செலவிடப் பகுத்தலும் வல்லவனே சிறந்த அரசன் என்றும் (386, 387, 390) அறத்தின் வழிநின்று அரசர்க்குரிய தகுதிப்பேற்றுடன் வாழவேண்டும் என்றும் கூறுகின்றார்.

தலைமை முறைகாத்தல்

அரசனுக்குரிய குற்றங்களையும் (432) அக்குற்றத்தைக் கண்டு அவற்றை நீக்கிவிட்டுப்பின்பு பிறர் குற்றத்தைக் காண வல்லவனாயின், அரசனுக்கு வரக்கூடிய குற்றம் ஒன்றுமில்லை (436) என்றும்,

இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை

முறைகாக்கும் முட்டாச் செயின்

- - - (குறள் 547)

என்றும் வையகம் முழுவதையும் அரசன் காப்பான், முட்டுப்பாடு நேர்ந்தபோதும் முட்டில்லாது முறை செய்வானானால் அரசனை அச்செங்கோல் காக்கும் என்றும் கூறுகிறார். செங்கோன்மை (544, 546, 547, 549, 550, 551, 555), மன்னர்க்குச் சிற்றினம் சேராமை (452), குடி தழுவிய கோல், அடிதழுவி நிற்கும் குடி (542, 544), அருளற்ற ஆட்சி (557, 570, 558, 552), மழை விளைவு (545), மழை தவறும் நிலை (559), ஆட்சித் தலைமை கெடல் (548, 563, 564, 567, 569, 448) ஆகிய கருத்துகளும் கூறப்பட்டுள்ளன.

திருவள்ளுவர் சங்ககால மக்களிடம் பரவியிருந்த புராணக் கதையை எடுத்துக்காட்டிச் சோம்பலின்மையின் திறத்தை,

மடியில்லா மன்னவன் எய்தும் அடியளந்தான்

தாஅயது எல்லாம் ஒருங்கு

- - - (குறள் 610)

என்ற குறளில் ஓர் அரசன் சோம்பலில்லாத தன் முயற்சியால் திருமால் கடந்த (தாவிய) மாநிலம் முழுவதையும் அடைவான் என்கிறார். மேலும் தன்வலியும், துணை வலியும் அறிதல் பற்றிய கருத்துகளை 471-476 வரையிலான குறள்கள் புலப்படுத்துகின்றன.

ஊக்கமுடைமை

கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற மிகச்சிறந்த அழகு பண்புடையவரிடம் இருப்பதனாலேயே இவ்வுலகம் அழியாமல் இருந்து வருகிறது (571, 592, 593, 594, 595, 600, 605, 607). ஊக்கம் உடைமையே நிலையான உடைமை. ஏனென்றால் அது மனத்தில் உள்ள செல்வமாகும். பொருள் உடைமை நிலைத்தது அன்று; அது உடம்பைவிட்டு வேறாக இருப்பது ஆகையால் அழியக்கூடியது. நிலைத்த செல்வமான ஊக்கத்தைத் தம்மிடம் கொண்டவர்கள் பெற்ற நன்மை போய்விட்டதே என்று எப்போதும் வருந்த மாட்டார்கள்; ஊக்கம் கொண்டு உழைத்து மீண்டும் அதை அடையப் பாடுபடுவார்கள். சோர்வற்ற ஊக்கம் உடையவனிடத்தில் நன்மை தானே வழிகேட்டுப் போய்ச் சேரும். (611, 612, 613, 615).

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றுஇன்மை

இன்மை புகுத்தி விடும்

- - - (குறள் 616)

முயற்சி பொருள் வளத்தைப் பெருக்கும். முயற்சி இல்லாவிட்டால், வளம் எல்லாம் வறண்டு வறுமை அடையச் செய்யும். (616, 619, 620) என்கிறார் வள்ளுவர்.

பெரியாரைத்துணைக்கோடல்

அறத்தின் பெருமையை உணர்ந்தவர்களாகவும் தன்னை விட அனுபவம் முதிர்ந்தவர்களாகவும் உள்ள பெரியவர்களின் துணை வேண்டும். அவர்களுடைய துணையை முறை அறிந்து கொள்ள வேண்டும். வந்த துன்பத்தை நீக்கும் ஆற்றல் அவர்களுக்கு உண்டு; இனித்துன்பம் வராமல் காக்கும் ஆற்றலும் அவர்களுக்கு உண்டு. ஆகையால் அவர்களுடைய துணையைப் போற்ற வேண்டும்.

அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை

திறன்அறிந்து தேர்ந்து கொளல்

- - - (குறள் 441)

அத்தகைய பெரியவர்களின் துணை இருந்தால் அந்தத் தலைவனைக் கெடுக்கவல்ல பகைவர் ஒருவரும் இல்லை. அவ்வாறு இடித்துக் கூறித்திருத்தும் பெரியவர்களின் துணை இல்லாத தலைவன் கெடுவான். அவனுக்குத் தீமை செய்யப் பகைவர் இல்லாவிட்டாலும் அவன் எளிதில் கெடுவான் (447, 448).

தெரிந்து செயல்வகை

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு

- - - (குறள் 467)

செய்யத்தகுத்த செயலையும் வெற்றியாக முடிக்கும் வழிவகைகளையும் ஆராய்ந்து தொடங்க வேண்டும். தொடங்கிய பின் எண்ணுவோம் என்பது குற்றமாகும். எனவே தகுந்த வழியில் செய்யப்படாத முயற்சி, பின்பு பலரும் துணையாக நின்று காப்பினும் கெட்டுப் போகும் (468).

இடுக்கண் அழியாமை

துன்பம் வரும்போது சோர்ந்து அழியாமல் உள்ளத்தில் மகிழ வேண்டும். வந்த துன்பத்தை வெல்வதற்கு அதைப்போல் சிறந்த வழி இல்லை.

இடுக்கண் வருங்கால் நகுக அதனை

அடுத்துஊர்வது அஃதுஒப்பது இல்

- - - (குறள் 621)

வெள்ளத்து அனைய இடும்பை அறிவுடையான்

உள்ளத்தின் உள்ளக் கெடும்

- - - (குறள் 622)

இன்பம் வந்தபோது கடமையைச் செய்வதொடு நின்று இன்பத்தை விரும்பாமல் வாழ்ந்தால், துன்பம் வந்தபோது கடமையைச் செய்து கொண்டு துன்புறாமல் இருக்க முடியும் (622, 629).

பிறிதுமொழிதல்

திருவள்ளுவர் வேறு எப்பகுதியிலும் இல்லாத அளவிற்கு இப்பகுதியில் பிறிது மொழிதலாய்க் கருத்துகளை அமைத்துள்ளார். அந்த அமைப்பை எண்ணஎண்ணத் திருவள்ளுவரின் அற நெஞ்சம் புலனாகின்றது. வலியறிதலில் இருமுறையும் (475, 476) இடனறிதலில் மும்முறையும் (495, 496) கூறுகின்றார்.

கால்ஆழ் களரின் நரிஅடும் கண்அஞ்சா

வேல்ஆள் முகத்த களிறு

- - - (குறள் 500)

பாகரின் சினந்த பார்வைக்கும் அஞ்சாமல், போர்க்களத்தில் வேல் வீரரைக் கோட்டால் குத்திக் கோத்த மத யானைகளையும், அவை கால் புதையும் சேற்று நிலத்தில் சிக்கிய போது மிகச் சிறிய நரிகளும் கொன்று விடும் என்ற பிறிதுமொழிதல் அமைத்துள்ளார்.

அவை அல்லாமல் உவமைகளும், உருவகங்களும் பல உள்ளன. இவற்றை ஆராய்ந்தால் போர் அறநெறியிழந்து கெட்டு வருதலையும், பொது நன்மைக்குப் பயன்படாமல் பொது அழிவுக்குப் பயன்பட்டுவருதலையும் திருவள்ளுவரே உணர்ந்து உணர்ந்து போரை வெளிப்படையாய்க் கூறாமல் விட்டார் என்று எண்ணத் தோன்றுகிறது. எதிர்காலத்தில் அறிஞர்களாலும், பொதுமக்களாலும் போர் வெறுக்கப்படும் என்று உணர்ந்து போரற்ற காலத்திற்கும் பயன்படுமாறு எழுதினார் என்று கருத இடந்தருகின்றது.

உலகம் முன்னேற ஒழுக்கம் வேண்டும். அவ்வொழுக்கத்தை தானும் மன்னன் செங்கோலால் எய்தப் பெறுவதாகும். மன்னன் கோல் கோடின் மக்களின் ஒழுக்கங் குன்றும். குன்றின் அரசனுமில்லை, குடிகளுமில்லை. மன்னரும், அமைச்சரும், பிற உறுப்பினரும் தத்தம் பொறுப்புகளையும், கடமைகளையும் உணரப் பொருட்பாலிற் பல அதிகாரங்களை வள்ளுவப் பெருந்தகை வகுத்துள்ளார். திருக்குறள், ஒழுக்கம் கூற வந்த அறநூல் என்பது தெளிவு.

துணை நூல்கள்

1. திருவள்ளுவர், சொர்ணாம்பாள் நினைவுச் சொற் பொழிவுகள், முதல் பதிப்பு 1981, பக். 62, 63, 65, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்.

2. மறைமலையடிகள், திருக்குறள் ஆராய்ச்சி, இரண்டாம் பதிப்பு, ஏப்ரல், 1960, பக். 51, 52, பாரி நிலையம், சென்னை - 1.

3. கு.ச. ஆனந்தம், திருக்குறளின் உண்மைப் பொருள், முதற் பதிப்பு, திசம்பர் 1986, பக். 283, 281, 305, 313, 315, 317, தங்கம் பதிப்பகம், கோபி செட்டிபாளையம் - 638 451.

4. டாக்டர் மு. வரதராசன், திருவள்ளுவர் (அ) வாழ்க்கை விளக்கம், ஏழாம் பதிப்பு - 1967, பக். 107-108, 112, 152, 116-117, 119-120, 122, 148, தாயக வெளியீடு, சென்னை - 1.

5. வ.சு.ப. மாணிக்கம், வள்ளுவம், இரண்டாம் பதிப்பு - 25, திசம்பர், 1993, ப. 214, மணிவாசர் பதிப்பகம், சென்னை - 1.

6. டாக்டர் தி. முருகரத்தினம், வள்ளுவர் வகுத்த பொருளியல் (கருத்தரங்கக் கட்டுரைகள்), முதற் பதிப்பு - 1975, பக். 16, 17, திருக்குறள் ஆய்வக வெளியீடு & மதுரைப் பல்கலைக்கழகம், மதுரை - 1.

7. இலஞ்சி, வெள்ளிவிழா மலர், ஈஸ்வரன் பிள்ளை, முதல் வெளியீடு - 1953, ப. 274, திருவள்ளுவர் கழகம், தென்காசி.

2004 ஆம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகமும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்திய பன்னாட்டு திருக்குறள் மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரை.

வாய்மொழி இலக்கியமும் ஏட்டிலக்கியமும் - முனைவர் ச.செந்தில்குமார்

முன்னுரை

ஏட்டிலக்கியத்திற்கு முன்னோடியாகத் திகழ்வது வாய்மொழி இலக்கியமே. ஏட்டில் எழுதாத பாமர மக்களின் பரம்பரைச் சொத்தாக இருந்தது, இது படிப்படியே வரிவடிவம் பெற்றது. நாட்டுப்புறப் பாடல்களைப் பாடிய வாய், இலக்கணத்தைப் படித்ததில்லை.

''பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடம் நானறியேன்

ஏடறியேன் எழுத்தறியேன் எட்டுவகை நானறியேன்

ஏட்டுல எழுதவில்ல எழுதிவச்சி பழக்கமில்ல

இலக்கணமும் இதுக்குயில்ல தலக்கனமும் எனக்குயில்ல''

என்ற திரையிசைப்பாடல் இதனை உணர்த்துகிறது.

அறிவியல் வளர்ச்சியால் எத்தனையோ முன்னேற்றங்கள் ஊடுருவிய போதிலும், கிராமப்புறங்களில் வாழும் பாமரமக்கள் படிப்பறியா மக்கள் தம் வாழ்விலும் வாக்கிலும் பழந்தமிழ்ப் பண்பாட்டைக் கட்டிக்காத்து வருகின்றனர். அவர்கள் பாடும் பாடல்கள் யாவும் யதார்த்தமானவை. எனவே, அவர்களின் உள்ளத்தில் உணர்ச்சி துடித்தது. உயிர்ப்பு விளையாடியது. இதயம் விரிந்தது. தேனருவி பெருக்கெடுத்தது. வாய்மொழிப்பாடல் வயலெல்லாம் பாய்ந்து வளம் தந்தது. எனவே, பாமரர் பாடிய பாடல்கள் ஏட்டிலக்கியத்தில் இடம் பெற்றிருப்பதை இக்கட்டுரைவழி உணரலாம்.

தாலாட்டு

தாய் உலகுக்குத் தந்த முதல் இலக்கியப் பரிசுதான் தாலாட்டு. இது வாழ்வின் தொடக்கவுரை.

''நெருப்பைச் சந்திக்காத தங்கமோ

உளியைச் சந்திக்காத சிற்பமோ

யுத்தத்தைச் சந்திக்காத தேசமோ

பிரசவத்தைச் சந்திக்காத பெண்ணோ முழுமையடைவதில்ல'' எனவே, முழுமை அடைந்த அந்தத் தாய்மை கொடுத்த கொடைதான் தாலாட்டு.

''தாய் ஆழம் காணமுடியாத அன்புக்கடல். அக்கடலில் விளையும் வலம்புரி முத்தே தாலாட்டு'' என்பார் தமிழண்ணல்.

தூங்கி எழுவதற்காக பல பாடல்கள் இலக்கியத்தில் உள்ளன. தேம்பி அழுவதற்காகப் பல பாடல்கள் இலக்கியத்தில் உள்ளன. ஆனால், மயங்கி உறங்குவதற்காக உள்ள பாடல்கள்தான் நாட்டுப்புறப் பாடல்களில் அதிகம் காணப்படுகின்றன.

அளவும், ஓசையும்

தாலாட்டு, தாயின் அன்பின் வெளிப்பாடு. தாயின் மகிழ்ச்சியையும் துக்கத்தையும் வெளிப்படுத்த இது ஒரு கருவியாகப் பயன்படுகிறது. குழந்தையின் உறக்கத்திற்கு ஏற்பப் ''பலூன்'' போன்று அதிகம் நீளுவதும், கொஞ்சம் குறைவதும் உண்டு. தாலட்டுப் பாடும் பெண்கள் அனைவரும் ஒரே இசையிலே பாடுவார்கள் என்று கூற முடியாது. ஒலிமுறையே தாலாட்டின் உயிர். பொதுவாக நாட்டுப்புறப் பாடல்களில் ஓசை இனிமையும், பொருட்சிறப்பும், உணர்ச்சியும், உயிரோட்டமும் இருக்கும். தாலாட்டுப் பாடும் தாயின் ஒருவிதமான ஓசையின் ஒழுங்கே குழந்தையின் செவிகளில் பாய்ந்து மனதைக்கிறங்க வைத்து, கண்களை உறங்க வைக்கிறது.

இலக்கியத்தில் தாலாட்டு

தாய்மார்களின் தாலாட்டு இலக்கிய வடிவம் பெற்று இலக்கியத்திற்கு அழகு சேர்க்கிறது. இதனை, ''பாலுண்டு துயிலப் பச்சைத் தேரைதா ராட்டும் பண்ணை'' என்ற கம்பன் பாடல் வரியால் உணரலாம்.

பிள்ளைத்தமிழ் இலக்கியங்களில் தாலாட்டு ஒரு பருவமாக வளர்ச்சி பெற்றிருக்கின்றது. பெரியாழ்வார், குலசேகராழ்வார் ஆகியோர் கண்ணனையும் இராமனையும் குழந்தையாகப் பாவித்துப் பாடும் பாடல்கள் பயில்தொறும் இன்பத்தைத் தருகிறது.

ஒப்பாரி

ஒப்புச் சொல்லிப் பாடுவது ஒப்பாரி. இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடையவே இது பாடப்படுகிறது. ஒப்பாரி சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் ''காலக்கண்ணாடியாகத்'' திகழ்கிறது எனலாம். இறந்தவருடைய கடந்த கால வாழ்க்கையை விளக்கும் இப்பாடல்கள் பெண்களாலேயே பாடப்படுகின்றன.

ஒப்பாரியின் வகை

குழந்தை இறக்கதாயின் ஒப்பாரி, மகன் அல்லது மகள் இறக்கதாயின் ஒப்பாரி, தாய் தந்தை இறக்க மகளின் ஒப்பாரி, கணவன் இறக்க மனைவியின் ஒப்பாரி, மாமியார் இறக்க மருமகளின் ஒப்பாரி என ஒப்பாரிகள் பல வகையாகப் பாடப்பெறும். இதில் கணவனை இழந்த பெண்ணின் ஒப்பாரியும் பிள்ளையை இழந்த தாயின் ஒப்பாரியும் மிகவும் கொடுமையானவை எனலாம்.

இலக்கியத்தில் ஒப்பாரி

சங்க இலக்கியத்தில் காணப்பெறும் கையறுநிலைப் பாடல்களை ஒப்பாரிப் பாடல்களின் வழிவந்தனவாகவே கருதலாம்.

கம்பன் காப்பியத்தில் ஒப்பாரியின் வகைகளை விளக்கமாகக் காணலாம். தந்தை இறக்க மகன் புலம்புவதையும், (தசரதன், வாலி இறக்க முறையே இராமன், அங்கதன் புலம்பல்) மகன் இறக்க தாய் மட்டுமின்றி தந்தையும் சேர்ந்து புலம்புவதை, (இந்திரசித்து இறக்க மண்டோதரி, இராவணன் புலம்பல்) கம்பன் அழகுச்சுவை மிகுதிப்படத் தனது காவியத்தில் படைத்திருப்பதைக் காணலாம்.

மாமியார் இறக்க மருகமள் ஒப்பாரி வைத்ததாக எந்த இலக்கியத்திலும் காணமுடியலில்லை. ஒருக்கால் அது வாய்மொழி இலக்கியமாக இருக்குமோ? என எண்ணத் தோன்றுகிறது. மாமியார் இறக்க மருமகள் ஒப்பாரி வைக்கும் பாடலே இதற்குச் சிறந்த சான்று. இதோ அப்பாடல்.

''கொப்பரைய அடகு வச்சி

ஒப்பாரி படிக்கப் போனேன்

ஒப்பாரி படிக்கலியே

கொப்பரையும் திருப்பலியே''

மனைவியின் ஒப்பாரி

ஒரு பெண்ணுக்கு நெருங்கிய சுற்றம் கணவனே! கொண்டானின் துன்னிய கேளிர் பிறரியில்லை'' என்கிறது நான்மணிக்கடிகை. கணவன் இறந்துவிட்டால் வாழ்வில் எல்லாச் சுகங்களையும் பெண் இழந்து விடுகிறாள். அதனினும் பெருந்துயர் அவளுக்குப் பிறிதில்லை

''தள்ளிப் போ என்று சொல்லாத

தங்கராசா போயிட்டாரே

எட்டிப்போ என்று சொல்லாத

ஒசந்தராசா போயிட்டாரே''

என்று அழும் கணவனை இழந்தாளின் புலம்பலை ஈண்டுக் காணலாம்.

அப்பனோ, அம்மையோ, அண்ணனோ, மறைந்துவிட்டால் ''நான் அவர்களைப் போலிருந்து உனக்கு உதவுகிறேன்'' என்று ஆறுதல் கூறலாம். ஆனால், கணவனை இழந்தவளுக்கு எதைக் காட்டி ஆறுதல் கூறுவது? இதனையே, ''கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்'' என்று கூறுகிறது சிலப்பதிகாரம்.

பூதபாண்டியன் மனைவி பெருங்கோப் பெண்டு பாடிய ''பல்சான்றீரே! பல்சான்றீரே!" (புறம் 246) என்ற புறப் பாடலும் கணவனை இழந்தாளின் நிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறது. கணவனை இழந்த பெண் புலம்புவதைக் கேட்டு விண்ணும், மண்ணும் அழும்.

''தலைச்சம் பிள்ளை பெத்தவளுக்குத் தாலாட்டும்

புருசனை இழந்தவளுக்கு ஒப்பாரியும் தானே வரும்''

என்பது பழமொழி.

மகளின் ஒப்பாரி

தாய் இறந்து போனால் பிறந்த வீட்டில் பெண்ணுக்கு சிறப்பிருக்காது. இதனை, ''தாயத்துப் போனால் சீரத்துப் போகும்''

என்ற பழமொழியால் நன்கு உணரலாம்.

இங்கே ஒரு பெண்,

''தரையிலே நான் நடந்தால்

பாதம் நோகும் என்று

மடியிலே தாங்கியே

மாதா போயிட்டாளே''

என்று, தனக்கு நாளும் தலை சீவிவிட்ட தன் தாய், தன் தலையெழுத்தை அறியவில்லையே எனப் புலம்புகிறாள். எனவே, மகள் வைக்கும் ஒப்பாரியால் இனிமேல் பிறந்த வீட்டில் தனக்கு எத்தகைய சிறப்பும் இருக்காது என்பதனை அறிய முடிகிறது.

மன்னன் பாரி இறந்த பின்னர் அவன் மகளிர் பாடிய,

''அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்

எந்தையும் உடையேம் எம் குன்றும் பிறர் கொளார்

இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவில்

வென்றுஎறி முரசின் வேந்தர்எம்

குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே'' (புறம் -112)

என்ற பாடல், ஒப்பாரிப்பாடலின் அடிப்படையிலேயே தோன்றியது எனலாம்.

காதல்

நாட்டுப்புறக் காதல் இயற்கையானது. யதார்த்தமானது. எத்தகைய கற்பனைக்கும் இடமில்லாதது. தங்களுடைய காதலை மிக எளிமையாகவும், தாங்கள் அறிந்த பொருள்களை உவமையாக்கியும் கூறிவிடுகின்றனர். அதில் அம் மக்களின் உள்ள உணர்வு அழகாக வெளிப்படுகிறது.

''லோலாக்கு போட்டுக்கிட்டு

ரோட்டோரம் போர புள்ள

ரோட்டவிட்டு கீழிறங்கு

கேட்ட தெல்லாம் வாங்கித் தாரேன்''

எனவும்,

''ஓணா முகத்தழகி

ஒட்டவச்ச காதழகி

ஒட்ட வச்ச காதுக் கெல்லாம்

இட்டேனடி தங்க நக''

என யதார்த்தமாய் அமைந்திருப்பதைக் காணலாம்.

ஆனால் ஏட்டிலக்கியத்தில்,

''மாசறு பொன்னே, வலம்புரி முத்தே

காசறு விரையே, கரும்பே, தேனே"

என்றும்,

''அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்''

என்றும்,

''கற்பகத்தின் பூம் கொம்போ காமன்தன் பெருவாழ்வோ''

''முன்னே வந்தெதிர் தோன்றும் முருகனோ''

என்றும்,

''நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று''

என்றும் வருவதைக் காணலாம்.

எனவே, இலக்கியக் காதல் இலக்கணமுடையது என்றும், நாட்டுப்புறக் காதல் வழிதான் இலக்கியக் காதல் பிறந்தது எனவும் துணியலாம்.

அலர்

வாய்மொழி இலக்கியத்தில் அலரானது மிக அழகாகக் கூறப்பட்டுள்ளது.

''ஆலமரம் உறங்க

அடிமரத்து வேர் உறங்க

உன் மடியில் நான் உறங்க

உலகம் பொறுக்கலியே''

இவ்வாறு நாட்டுப்புறப்பாடலில் எளிமையாக விளக்கப்பெற்ற அலர், திரையிசைப் பாடலிலும் பயின்று வருவதைக் காணலாம்.

''உன்னையும் என்னையும் வச்சி

ஊருசனம் கும்மியடிக்குது''

எனவும்,

''ஊருக்குள்ள.......

உன்னையும் பத்தி என்னையும் பத்தி-அட

என்னென்னவோ சொல்லுராங்க.

அது நெசமா? இல்ல பொய்யா? - அத

நீதான் சொல்லவேணும் ராசா''

எனவும்,

''உன்ன நம்பி மூச்சிருக்குது- உள்ளூரில

என்னென்னவோ பேச்சிருக்குது''

எனவரும், திரை இசைப்பாடல் வரிகள் நம் சிந்தைக்கு விருந்தளிக்கின்றன.

நாட்டுப்புறப் பாடல்களில் வரும் அலர், ஏட்டிலக்கியத்தில் திருந்திய வடிவில் கூறப்பட்டுள்ளது.

காதலுக்குத் தடைகள் ஏற்படுவது உண்டு. அதை ஏட்டிலக்கியம்,

''நாய் துஞ்சாமை'' ''ஊர் துஞ்சாமை'',

''காவலர் துஞ்சாமை'', ''நிலவு வெளிப்படுதல்''

என்ற அடிப்படையில் சுவையாக விளக்குகின்றது.

வைதல் (திட்டுதல்)

ஏட்டிலக்கியத்தில் வரும் தலைவி தன்னேரில்லாத் தலைவியாகப் படைக்கப்படுகிறாள். தலைவன் இல்லாதபோது அவன் செய்தவற்றை நினைத்துக் கோபம் கொள்வதற்காகவும், அவனைப் பார்த்தபோது அதனை மறப்பதாயும் ஏட்டிலக்கியம் காட்டுகின்றது.

''எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்

பழிகாணேன் கண்ட விடத்து'' (குறள் -1284)

எனத் திருவள்ளுவர் மகளிர் மனதை உயர்த்தியே காட்டியுள்ளார்.

ஆனால், நாட்டுப்புறப் பெண்கள் தங்கள் துன்பத்தை வெளிப்படையாகவே சொல்லி விடுவதைக் காணலாம்.

''காலையிலே பூத்தப் பூ கனகாம்பரம் நானிருக்க

கவுச்சடிச்சப் பூவுக்கோ கடகடயாய் சுத்துரானே''

இத்தகைய முரண்பாடுகளை நாட்டுப்புற இலக்கியத்தில் காணலாமே தவிர ஏட்டிலக்கியத்தில் காணமுடியாது.

''இம்மை மாறி மறுமை ஆயினும்

நீ ஆகியர் என் கணவனை

யான்ஆ கியர்நின் நெஞ்சுநேர் பவளே'' (குறுந்.49)

ஏட்டிலக்கியத்தலைவி தலைவன் தவற்றை மறந்ததாகவே குறுந்தொகை காட்டுகிறது.

பெருந்திணை

வயதான ஒருவனுக்கு வறுமையின் காரணமாக இளமையும் அழகும் நிறைந்ந பெண்ணை மணமுடிக்க நிச்சயிக்கின்றார்கள் பெற்றோர். அதை எதிர்க்கின்றாள் மகள்.

அதனை,

''சோளச் சோறு தின்ன மாட்டேன்

சொன்ன பேச்சி கேக்கமாட்டேன்

நரச்ச கிழவங்கிட்ட

நானிருந்து வாழமாட்டேன்''

எனும் நாட்டுப்புறப்பாடல்வழி அதனை உணரமுடிகிறது. தொல்காப்பியர், பொருந்தாத் திருமணத்தைக் கண்டித்துள்ளார். ''ஏறிய மடற்றிறம் இளமை தீர்திறம்'' (அகத். நூ.51) எனும் நூற்பாவழி இதனை நன்கு உணரலாம்.

பகற்குறி

காதலர்களின் களவு மணம் பகற்குறி, இரவுக்குறி எனும் நிலையில் ஏட்டிலக்கியத்தில் விரிவாகப் பேசப்படுகிறது. தலைவிதான் பகலிலோ, இரவிலோ தன்னை சந்திக்க வரும் தலைவனிடம் இடத்தைத் தெரிவிப்பாள்.

வாய்மொழி இலக்கியத்திலும் காதலிதான் காதலனைச் சந்நிக்க நேரம் காலம் குறிக்கிறாள் என்பதை அறியமுடிகிறது.

''எப்பாவும் வயலிலதான்

எம்மாவும் ஊரிலதான்

காக்காவும் கரையிலதான்

கருக்கலிலே வாங்கமச்சான்''

இவ் வாய்மொழிப் பாடல்தான் ஏட்டிலக்கியத்தில் தலைவி எவ்வாறு விளங்க வேண்டும் என்பதை வற்புறுத்திக் கூறியதாகக் கூறலாம்.

உடன்போக்கு

தலைவன் பெண்கேட்டு வரும்போது தலைவியின் பெற்றோரும் உற்றோரும் மறுத்தால், அவர்களறியாமல் தலைவியை அழைத்துச் செல்லுதலும் உண்டு. இதற்குப் பெயர்தான் ''உடன்போக்கு''. உடன்போக்கினைச் சுவையாகக் காட்டுவன நாட்டுப்புறப் பாடல்கள்தான்.

''சந்தைக்குப் போவோமடி சட்டிப்பானை வாங்குவோமடி

சந்தை கலையுமுன்னே தப்பிடுவோம் ரெண்டுபேரும்

நீ கறுப்பு நான் சிவப்பு ஊருலேயும் ஓமலிப்பு

ஓமலிப்புத் தீருமுன்னே ஒடிடுவோம் ரெண்டுபேரும்''

எனவே, நாட்டுப்புறப் பாடல்களில் யதார்த்தமும், ஏட்டிலக்கியத்தில் காதலுக்கு இலக்கணமும் இருக்கும் என்பதை உணரலாம்.

முடிவுரை

வரிவடிவ இலக்கியத்திற்குப் பெருமையும் வாழ்வும் தந்தவை வாய்மொழி இலக்கியங்களே. வாய்மொழி இலக்கியம் யதார்த்தமானது. மனதிலே பட்டதை மறைக்காமல் சொல்வது உள்ளத்து உணர்ச்சிகளை அப்படியே வெளிப்படுத்துவது. சில நேரம் நாகரிகம் அற்ற நிலையிலும் இருப்பது. இருப்பினும் வரிவடிவ இலக்கியத்திற்கு வாழ்வு தருபவை ''வாய்மொழி இலக்கியக் கூறுகளே'' என்றால் அது மிகையாகாது.

வாய்மொழிப் பண்பை வரிவடிவமாக்கும்போது சில விதிகள் உருவாக்கப்படுகின்றன. உண்மையான மக்களின் வாழ்க்கையைத் தெளிவாக வெளிப்படுத்தும் நாட்டுப்புறக் கூறுகள் ஏட்டிலக்கியத்தில் இடம்பெறும்போது ஏட்டிலக்கியமும் வாழும். வாய்மொழி இலக்கியமும் வாழும்.

நன்றி - வேர்களைத் தேடி

சிறுமியர் விளையாட்டுக்கள் - முனைவர் வே.சசிகலா

1. முன்னுரை - விளையாட்டு விளக்கம்

விளையாட்டு என்பது சிறுவர்க்கு உரியது. ''பாலர்களுக்கு அழகு விளையாட்டு'' என்கிறது ஒரு வடமொழிப் பழமொழி. ''விளையாட்டாவது விரும்பியாடும் ஆட்டு'' என்கிறார் பாவாணர். (தமிழ் நாட்டு விளையாட்டுக்கள், ப.196) ''விளை'' என்பது விருப்பம் என்பதைக்குறிக்கும். ''ஆட்டு'' என்பது ஆட்டம் என்பதாகும் சிறுவர்கள் தாமாக விரும்பி அதில் ஒன்றி ஆடுவது விளையாட்டாகும். மனம் லயித்து ஆடும் விளையாட்டுகள் கிராமப்புறங்களில்தான் இன்றளவும் ஆடப்படுகின்றன. இன்றைய சூழலில் கல்விக் கூடங்களில் ''விளையாட்டு'' என்பதுற்குத் தனி வகுப்புகள் ஒதுக்கப்பட்டு, ஆசிரியர்களும் நியமிக்கப்படுகின்றனர். எனினும் அவை உண்மையில் விரும்பி ஆடும் ஆட்டமா என்பது கேள்விக்குறியே, ஏனெனில் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட நபர்களுடன் விளையாட வேண்டுமென்ற வரையறை கல்வி நிலையங்களில் காணப்படுகிறது.

இது போலன்றி இயல்பாகப் பலரோ, சிலரோ கூடி தங்கள் விருப்பப்படி விளையாட்டைத் தேர்ந்தெடுத்து விதிமுறைகளை வரையறுத்து, ஓர் ஒழுங்கு முறையை அமைத்துக் கொண்டு வெற்றி தேல்விக்கான வரன் முறைகளைத் தீர்மானித்து ஆடுவதே விளையாட்டாகும். நாட்டுப்புறங்களில் சிறுவர் சிறுமியர் இங்ஙனம் பல விளையாட்டுக்களை விளையாடுகின்றனர். பெரிய நகர்ப்புறங்களிலும் ஓரளவு கிராமச்சூழலிலும் கிரிக்கெட் விளையாட்டு விளையாடப்படுகிறது என்றாலும் நாட்டுப்புறங்களில் சிறுவர் சிறுமியர் ஆடும் விளையாட்டுக்கள் மிகுதி. நாட்டுப்புற விளையாட்டுக்களைச் சிறுவர்க்குரியவை, சிறுமியர்க்குரியவை, இருபான்மையர்க்கும் உரியவை என்று வகைப்படுத்தலாம். இக்கட்டுரை சிறுமியர்க்குரிய விளையாட்டுகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டமைகிறது.

2. சிறுமியர் விளையாட்டுகள்

தென்காசி வட்டாரத்தில் தட்டாங்கல், பல்லாங்குழி, பூப்பறிக்க வருகிறோம் பாட்டி பேத்தி, அல்லி மல்லி தாமரை, செங்கல் எடுத்துச் சிறு வீடு கட்டு, டில்லி அக்கா தண்ணிக்குள்ள, அக்கக்கா கிளி செத்துப் போச்சு, உருண்டை உருண்டை கல்லெடுத்தல், குளத்துக்குள்ள கரை மேல, கீ கீ ரோஜா, ஈஞ்சக்காத்தண்ணி இறைப்பேன், ஒரு குடம் தண்ணி எடுத்து ஒரு பூப் பூத்தது, கிச்சு கிச்சுத் தாம்பாளம், வெத்தலப் பெட்டியைக் காணல, வளையல் விளையாட்டு, பானை சட்டி, நொண்டி, ஆபத்துக்கு கை கொடுத்தல், பூச்சொல்லி விளையாட்டு, சூடு சூப்பி, துணி துவைத்தல், அக்கக்கா சிணுக்கோரி, மெல்ல வந்து கிள்ளிபோ ஆகிய சிறுமியர் விளையாட்டுக்கள் கண்டறியப்பட்டுள்ளன.

2.1. பங்கு பெறுவோர்

கண்டறியப்பட்ட விளையாட்டுகளில் இருவர் ஆடுவது, பலர் ஆடுவது ஆகிய இருபிரிவு விளையாட்டுக்கள் விளையாடப்படுகின்றன. பலர் ஆடும் விளையாட்டுகளில் ஒருவர் தலைமை பெறுவதும், இருவர் தலைமை பெறுவதும் காணப்படுகிறது. அதாவது பலர் ஆடிய போதிலும் ஒருவர் ஒருவராக இருவர் இருவராக ஆடும் முறை உள்ளது. சான்றாகப் பாட்டி பேத்தி விளையாட்டைக் குறிப்பிடலாம். பாட்டி பேத்தி விளையாட்டு பலர் ஆடும் வகையானது. எனினும், பாட்டி பேத்தி பங்கினை ஏற்போர் நிகழும் உரையாடல் இவ்விளையாட்டில் முக்கியத்துவம் பெறுகிறது. சான்றாக.

''பாட்டி பாட்டி என்ன வேணும்

தின்ன வேணும் என்ன தின்ன வேணும்''

என்பதைக் குறிப்பிடலாம்.

தட்டாங்கல், பல்லாங்குழி, ஈஞ்சக்காத் தண்ணி இறைப்பேன், கிச்சு கிச்சுத் தாம்பாளம் ஆகியன நான்கும் இருவர் ஆடும் விளையாட்டுக்கள். பிற அனைத்தும் பலர் அடங்கிய குழுவினர் ஆடும் விளையாட்டுக்களே. அவற்றுள்ளும் பாட்டிபேத்தி, வெத்தலைப் பெட்டியைக் காணல, கயிறு குதித்தல், பூப்பறிக்க வருகிறோம், ஆகியன ஒருவர் ஒருவராக அல்லது இருவர் இருவராக ஆடும் விளையாட்டுக்களாகும்.

2.2 விளையாடும் முறை

சிறுவர் விளையாட்டுகளினின்றும் பெரிதும் வேறுபடும் சிறுமியர் விளையாட்டுக்கள் ஓரிடத்தில் அமர்ந்தோ அல்லது வட்டமாக நின்று கொண்டோ, ஆடுபவையாக உள்ளன. தட்டாங்கல், பல்லாங்குழி, அல்லி மல்லி தாமரை, உருண்டை உருண்டை, அக்கக்கா கிளி செத்துப்போச்சு, கிச்சு கிச்சு தாம்பாளம் வளையல் விளையாட்டு, பானை சட்டி, பூச்சொல்லி, அக்கக்கா சிணுக்கோரி ஆகிய விளையாட்டுக்கள் ஓரிடத்தில் அமர்ந்து ஆடும் வகையின, பூப்பறிக்க வருகிறோம் பாட்டி பேத்தி, செங்கல் எடுத்து சிறு வீடு கட்டு, கல்லெடுத்தல், குளத்துக்குள்ள கரைமேல, கீ கீ ரோஜா, ஈஞ்சக்காத் தண்ணி இறைப்பேன், மெல்ல வந்து கிள்ளி போ, வெத்தலைப் பெட்டியை காணல, துணி துவைத்தல் கயிறு குதித்தல் ஆகியன ஓரிடத்தில் நின்று கொண்டு ஆடும் வகையின, டில்லி அக்கா தண்ணிக்குள்ள நொண்டி, ஆபத்துக்குக் கை கொடுத்தல், ஆகிய விளையாட்டுக்கள் மட்டுமே ஓடி விளையாடும் விளையாட்டுகளாகும்.

சிறுமியர் விளையாட்டுக்கள் விளையாடப்படும் முறையை நோக்கினால் இவை உடல் வலிமையை வளர்க்கும் நோக்கத்திற்காக ஆடப்படுவதில்லை எனலாம். பொழுது போக்குதல், கூடி மகிழ்தல் ஆகியவற்றுக்கே சிறுமியர் விளையாட்டுக்கள் முக்கியத்துவம் தருகின்றன.

2.3. விளையாடுமிடம்

சிறுமியர் விளையாட்டுக்கள் யாவும் அவர்கள் வசிக்கும் இல்லங்களை ஒட்டியே ஆடப்படுகின்றன. அவற்றுள் அமர்ந்து ஆடும் விளையாட்டுக்கள், வீட்டுக்குள்ளே விளையாடப்படும் பலர் கூடி விளையாடுவதற்கு வீட்டு முற்றங்களே போதுமானவை. வெளி இடங்களில் விளையாடப்படும் விளையாட்டுக்களாகிய நொண்டி முதலியனவற்றிற்கும் வீட்டைச் சுற்றியுள்ள ஒரு எல்லை வரையறுக்கப்டுகிறது.

''சிறுமியர் வயது வந்த சமூகத்தினருக்குக் கட்டுப்பட்டோர் என்ற முறையில் அச்சமுகத்தினரின் எதிர்பார்ப்புகளுக்கும், செல்வாக்கிற்கும், கட்டுப்பட்டவர்கள் பெண் மக்கள். பெற்றோர் கட்டுபாடின்றி அவர்களை தொலைதூரத்திற்குப் போக அனுமதிப்பதில்லை'' (தே.லுர்து, நாட்டார், வழக்காற்றியல் சில அடிப்படைகள் ப.333) எனவே நாட்டுப் புறங்களில் சிறுமியர் விளையாட்டுக்கள் சமுக ஒப்புதலுடன் நிகழத்தான் வாய்ப்புள்ளன.

2. சிறுமியர் விளையாட்டுகளின் தன்மைகள்

விளையாட்டுக்களில் சிறுமியர் விளையாட்டுக்கள் சிறுவர் விளையாட்டுக்களிலிருந்து பெரிதும் வேறுபடுகின்றன. சிறுமியர் விளையாட்டுகளிலிருந்து ஓடுதல், சாடுதல், தவ்வுதல், குதித்தல் தொங்குதல் போன்ற செயல்கள் அவற்றையும் சிறுமியர் விளையாட்டில் காண்பதரிது. சிறுமியர் விளையாட்டுக்கள் ஆடும் முறை ஆடும் இடம் போன்றவற்றால் பெரிதும் கட்டுப்படுத்தப்படுகின்றன. வருங்காலப் பெண் என்ற அடிப்படையில் கீழ்படிதல் (தலைமை இருக்கும் விளையாட்டுக்களில்) பொறுப்புணர்வு (ஒரு குடம் தண்ணி எடுத்து ஒரு பூப் பூத்தது) சுய கட்டுப்பாடு (கயிறு குதித்தல்) போன்ற பண்புகளை வளர்க்கும் விதத்தில் சிறுமியர் விளையாட்டுக்கள் அமைந்துள்ளன. ''கட்டுப்பாடு'' என்பதனை அவை பெரிதும் வலியுறுத்துகின்றன. சிறுமியர் விளையாட்டுக்களில் அமர்ந்து ஆடுதல், நின்று ஆடுதல் என்ற இருவகைகள் இதனைத் தெளிவாக்குகின்றன. ஓரிடத்தில் அமர்ந்து இருத்தல் என்பதே ஒரு வகை கட்டுப்பாடு. நின்னு ஆடும் விளையாட்டுக்களில் கூடப் பலவற்றில் வட்டமாக நிற்க வேண்டும் என்ற விதத்தில் உள்ளது. வட்டம் அமைத்து அந்த வட்டத்தில் நின்றுதான் விளையாடவேண்டும். என்பததைப் பலர் கூடி ஆடும் விளையாட்டுக்கள் உணர்த்துகின்றன. இவ்விளையாட்டுக்கள் வட்டத்தில் நிற்க வைக்கும் கட்டுப்பாட்டை வலியுறுத்துகின்றன.

4. பண்பாட்டுக் கூறுகள்

சிறுமியர்களின் விளையாட்டுக்கள் பண்பாட்டுக்கூறுகள் பலவற்றை எதிரொலிக்கின்றன. சிறுமியர் விளையாட்டுக்களில் பேச்சின்றி ஆடப்படுபவை வெகு சிலவேயாகும். பாடல் பாடிக் கொண்டோ உரையாடிக்கொண்டோ நிகழ்பவையாகப் பல சிறுமியர் விளையாட்டுக்கள் காணப்படுகின்றன. விளையாட்டுக்களில் பாடப்படும் பாடல்களிலும், நிகழும் உரையாடல்களிலும் உறவு முறைகள், அவற்றின் தன்மைகள் குறிப்பிடப்படுகின்றன. சான்றாக உருண்டை உருண்டை விளையாட்டில்,

''அடுப்புக்குள்ள மோதிரம் போட்டா

யார் எடுத்தா?

அம்மா எடுத்தா

அம்மன் கோயிலைக் கும்பிட்டு எடுத்தா

உருண்டே உருண்டே''.

என்ற பாடல் பாடப்படுகிறது. இதில் ''தாய்'' உறவு குறிப்பிடப்படுகிறது. அதுமட்டுமின்றித் தாய் அம்மனை வழிபடும் வழக்கமும் இடம் பெறுகிறது. கீ கீ ரோஜா என்னும் விளையாட்டில் ''எந்திரி பாப்பா எந்திரி'' என்று பெண் பிள்ளை குறிக்கப்படுகிறாள். மேலும் ''கண்­ரைத்துடை'' என்ற அடுத்த வரி பெண்களுக்குரிய இரக்ககுணத்தைக் குறிப்பிடுகிறது. பாட்டி பேத்தி விளையாட்டு மாமன் உறவினை எடுத்துரைக்கிறது.

''எங்க போனீங்க

மாமா வீட்டிற்கு

என்னென்ன தின்னீங்க

லட்டு பூந்தி மிக்சர் அல்வா

எனக்கு

ஐய்யய்யோ இல்லையே''.

என்ற பாடல் வரிகளில் மாமன் வீட்டுக்குச் செல்லுதலும், திண்பண்டங்கள் தின்னுதலும் உரைக்கப்படுகின்றன. தாய் இறைவழிபாடு பாப்பா, கண்­ர் துடைத்தல் மாமன்-தின்னத் தருதல் என்ற நிலையில் உறவுமுறைகள் அவற்றின் செயல்பாடுகள் ஆகியன உணர்த்தப்படுவது மிக சிறந்த பண்பாட்டுப் பிரதிபலிப்பு எனலாம்.

சிறுமியர் விளையாட்டுக்களில் பெண்களுடன் தொடர்புள்ள பல பொருட்கள் இடம் பெறுவதைக் காணமுடிகிறது. பூக்கள் அணிகலன்கள் ஆகியவை சிறப்பிடம் பெறுகின்றன. அல்லி மல்லி தாமரை என்னும் விளையாட்டில் பூக்களின் பெயர்கள் தாள்களில் எழுதிப் போடப்பட்டு விளையாட்டு நிகழ்கிறது. பூப்பறிக்க வருகிறோம் விளையாட்டில் சிறுமியர் பல பூக்களின் பெயர்களைத் தங்களுக்குச் சூட்டிக் கொண்டு விளையாடுகின்றனர். உருண்டை உருண்டை விளையாட்டில் மோதிரம் என்றும் அணி குறிக்கப்படுகிறது.

இது தவிரப் பெண்களுடன் தொடர்புடைய பல பொருட்கள் சிறுமியர் விளையாட்டுக்களில் குறிக்கப்படுகின்றன. ஈஞ்சக்காத் தண்ணி இறைப்பேன் விளையாட்டில் மஞ்சள் குறிக்கப்படுகிறது. வெத்தலைப் பெட்டியைக் காணல விளையாட்டில் வெத்தலைப் பெட்டி, நெல், சுண்ணாம்பு ஆகியன குறிக்கப்படுகின்றன. பானைசட்டி விளையாட்டில் சட்டி பானை இடம் பெறவில்லை. எனினும் சிறுபிள்ளைகள் சட்டிகளாகவும், சற்றே பெரிய சிறுமியர் பானைகளாகவும் உருவகப்படுத்தப்படுகின்றனர். பானைசட்டி விளையாட்டு சமையலறையை நினைவூட்டுகிறது. துணி துவைத்தல் விளையாட்டு துவைக்கும் வேலையை நினைவூட்டுகிறது. அக்கக்கா சிணுக்கோரி விளையாட்டு, பெண்கள் தலையைச் சிடுக்கு எடுக்கப் பயன்படுத்தும் சிணுக்கோரியைக் குறிப்பிடுகிறது.

சிறுமியர் விளையாட்டுக்களில் அவர்கள் இல்லம், அதில் அவர்கள் செய்யும் வேலைகள் பயன்படுத்தும் பொருட்கள் போன்றவைக் குறிப்பிடப்படுகின்றன என்பதை உணர முடிகிறது. எனவே சிறுமியர் விளையாட்டுக்கள் மிகச்சிறந்த பண்பாட்டுப் பிரதிபலிப்பு என்று குறிப்பிடலாம். இதனைச் சிறுமியர் விளையாட்டுக்களில் பெயர்களும் வலியுறுத்தப்பட்டு அமைகின்றன. குழுவாகக் கூடி விளையாடும் நிலையில் பலபயன்பாட்டுக் கூறுகளை இளம்பிஞ்சு உள்ளங்கள் தாமாகவே உணர்ந்துக் கொள்கின்றன. அதற்கு விளையாட்டுக்கள் வழிவகை செய்கின்றன.

முடிவுகள்

1. நாட்டுப்புற விளையாட்டுக்கள் மூவகையின. அவற்றுள் சிறுமியர் விளையாட்டுக்கள் ஒருவகை.

2. சிறுமியர் விளையாட்டுக்களில் இருவர், பலர் ஆடும் வகைகள் உள்ளன.

3. சிறுமியர் இல்லஞ்சார்ந்த இடங்களில் மட்டுமே விளையாடுகின்றனர்.

4. சிறுமியர் விளையாட்டுக்கள் உடல் வலிமையை வளர்ப்பதற்கு உதவுவதில்லை. மாறாகப் பொறுப்புணர்வு கீழ்ப் படிதல், கட்டுப்பாடு போன்ற பண்புகளை வளர்க்கின்றன.

5. சிறுமியர் விளையாட்டுக்கள் பெண்கள் பயன்படுத்தும் பொருட்கள், செய்யும் வேலைகள் போன்று உறவுமுறைகளைச் சுட்டுவதால் அவை மிகச் சிறந்த பயன்பாட்டுப் பிரதிபலிப்பாக விளங்குகின்றன.

நன்றி - வேர்களைத் தேடி

சிறுகதை இலக்கியம் - டாக்டர் மு.வெங்கடாஜலபதி பி.எச்.டி.

பழந்தமிழ்ப் பண்டிதர்கள் பெரும்பாலும் சிறுகதைகளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. அவைகளை அவர்கள் இலக்கியம் என்று கூட எண்ணுவதில்லை. புதிதாக வெளிவரும் சிறுகதைகளை அவர்கள் படிப்பதுகூட இல்லை. சிறுகதைகள் எழுதுவோரை அவர்கள் பரிகாசக் கண்ணோடுதான் பார்த்து வந்தனர்.

சிறுகதைகளை அலட்சியம் செய்துவந்த காலம் இன்று மலையேறிவிட்டது. அவைகள் இலக்கியச் சோலையிலே வளர்ந்து நிலை பெற்று வருகின்றன. சிறுகதைகளை அலட்சியம் செய்தவர்கள் கூட இன்று அவைகளைப் படிக்க ஆர்வமுடன் முன் வருகின்றனர். இலக்கியப் பத்திரிகைகளிலே சிறுகதைப் பகுதி முதன்மையிடம் பெற்றுவிட்டது. நாம் இருக்கும் இக்காலத்தைச் ''சிறுகதையுகம்'' என்று சொன்னால் இதை மறுப்போர் இல்லை.

மக்கள் மனப்போக்கை ஒட்டி வளர்வதே இலக்கியம். மக்கள் மனப்போக்கும், நடையுடைகளும் காலப்போக்கில் மாற்றம் அடைந்து வருவதைக் காண்கின்றோம். இதற்கு ஏற்றாற்போலவே இலக்கிய அமைப்பும் மாறிக் கொண்டுதான் வருகின்றது. இத்தகைய மாற்றந்தான் வளர்ச்சியாகும். மாற்றம் இன்றேல் வளர்ச்சியில்லை; மாற்றமும் வளர்ச்சியும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை. ஆதலால் இன்று வளர்ந்துவரும் சிறுகதை இலக்கிய வளர்ச்சியை யாரும் அலட்சியப்படுத்த முடியாது. இலக்கியத் துறையிலே இது ஒரு சிறந்த பகுதி என்பதை எவரும் மறுக்கவும் முடியாது.

சிறுகதைகளைப் படிப்பதிலே, எல்லாப்பகுதி மக்களுக்கும் ஆர்வம் இருக்கிறது. எழுத்தாளர்கள் பலரும் சிறுகதைகள் எழுதுவதிலே அக்கரை காட்டுகின்றனர். இப்பொழுது பத்திரிகைகள் மூலம் வீசிக்கொண்டிருக்கும் சிறுகதைத் தென்றல் தான் புதிய எழுத்தாளர்கள் பலரை எழுதத் தூண்டுகிறது. சிறப்பாக இளைஞர்கள் பலரை எழுத்துத் துறையிலே இழுப்பதற்குச் சிறுகதைகள்தாம் காரணம் என்று கூடச் சொல்லி விடலாம். இவ்வாறு, படிப்பதற்கும், எழுதுவதற்கும், சிறுகதைகள் உற்சாகம் ஊட்டுகின்றன என்பதில் ஐயமில்லை.

சிறுகதைகளை மிகுதியாகப் படிக்கின்ற ஆண்-பெண் இளைஞர்களிலே பலர் தாமும் சிறுகதைகள் எழுதவேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். ஆரம்பத்தில் தங்கள் உள்ளத்தில் தோன்றும் கற்பனைகளை வைத்துக்கெண்டு கதைகள் எழுதுகின்றனர். அல்லது தாங்கள் படித்த கதைகளில் அங்கொன்றும் இங்கொன்றும் அள்ளியெடுத்து ஒன்று சேர்த்து கதை உருவாக்குகின்றனர். கதை எழுதவேண்டும் ஆசை காரணமாக, ஏதோ காமாச்சோமாவென்று எழுதிவிடுகின்றனர். அவைகள் பத்திரிகைகளில் வெளிவர வேண்டுமென்று விரும்புகின்றனர். இத்தகைய ஆரம்ப எழுத்தாளர்களிலே பலர் சிறந்த சிறுககை எழுத்தாளர்களாக ஆகி விடுகின்றனர். ஆசையும், முயற்சியும், அறிவையும், ஆற்றலையும் வளர்க்கும் என்பதில் ஐயம் இல்லை.

சிறுகதை எழுதும் முறை முற்றிலும் கூட நமக்குப் புதிது. இது மேல்நாட்டிலிருந்து இறக்குமதி செய்துகொள்ளப்பட்ட சரக்கு. மேல் நாட்டு மொழிப் பயிற்சிக்குப் பிறகுதான் சிறுகதைகள் எழுதக் கற்றுக் கொண்டோம் என்று சிறுகதை இலக்கிய அறிஞர்கள் கூறுகின்றனர். பன்மொழிப் புலவர்கள் பலரும் ஒரு மனதாகக் கூறும் இந்த உண்மையை நாம் முழுவதும் மறுக்கவில்லை. சிறுகதைகளைத் தனி இலக்கியமாக விளங்கும் வகையில் வளர்த்தவர்கள், மேல்நாட்டினர்தாம் என்பதில் ஐயமில்லை.

ஒரு நிகழ்ச்சியை மட்டும் படிப்போர் உள்ளத்திலே பதியும்படி கூறுவதுதான் சிறுகதை என்று பொதுவாகக் கூறுகின்றனர். சிறுகதை என்பது உருவத்தைப் பொறுத்தது அன்று. சிறுகதை என்பது ஒரே பக்கத்திலும் அமையலாம். ஐம்பது பக்கங்களிலும்கூட அமையலாம். நிகழ்ச்சி மட்டும் ஒன்றே ஒன்றாக இருக்க வேண்டும். ஆனால் சிறுகதைகளுக்கு இலட்சியம் உண்டு என்பதே மறுப்பதற்கில்லை. பெருங்கதைக்கும் (நாவலுக்கும்) சிறுகதைக்கும் உள்ள வேறுபாட்டைப் புதுமைப்பித்தன் தெளிவாக எடுத்துக் கூறியிருக்கின்றார்.

''சிறுகதை வாழ்க்கையின் சாரம் என்றால் நாவல் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் நிலைக்கண்ணாடி. வாழ்க்கையின் சிக்கல்களை, அதன் உயர்வை, அதன்சிறுமைகளை, உலாவும் பாத்திரங்களான மனிதக் கூட்டத்தின் சலனத்தில், அவற்றின் குண விஸ்தாரத்துடன் சிருஷ்டிப்பதுதான் நாவல், நாவலுக்குக் கால எல்லை கிடையாது. சென்ற காலம், நிகழ்காலம், வருங்காலம் இவற்றின் நிகழ்ச்சியை, மனோதர்மத்தால், சிருஷ்யின் மேதை குன்றாமல் கற்பனை செய்வதுதான் நாவல்''.

என்று நாவலைப்பற்றி எழுதியிருக்கின்றார். சிறு கதையைப் பற்றியும் அவர் கூறியிருக்கின்றார்.

சிறுகதை வாழ்க்கையின் ஒரு பகுதியை, மற்றவற்றின் கலப்பை மறந்து, ஏன், விட்டுவிட்டுக் கவனிக்கிறது என்று கூறுகின்றார். மேலும் சொல்லும்போது சிறுகதையின் லட்சியத்தையும் எடுத்துக் காட்டுகிறார்.

''கதையை வாசிப்பது, நமது சிந்தனையின் சலனத்தை ஊக்குவதற்கு ஒரு தூண்டுகோல். கதை முடிவடையும்போது அதைப்பற்றிய சிந்தனை முடிவடைந்து விடாது. இப்படிப்பட்ட கதைகள் முடிந்த பிறகுதான் ஆரம்பமாகின்றன என்று சொன்னால் விசித்திரவாதமாகத் தோன்றும். ஆனால் அதுதான் உண்மை''

இவை புதுமைப்பித்தன் மொழிகள். இவற்றிலிருந்து லட்சியத்தை அடிப்படையாகக் கொண்டதும், படித்தபின் அந்த லட்சியத்தைப் பற்றி சிந்திக்கச் செய்வதுமே சிறந்த சிறுகதைகள் என்பதை அறியலாம்.

புதுமைப்பித்தன் கதைகளிலே பல இத்தகைய லட்சியத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதைக் காணலாம்.

துன்பக்கேணி, பொன்னகரம், மனித யந்திரம், மகா மசானம், மனக்குகை ஓவியங்கள், போன்ற கதைகள் படிக்கும் போதும் கருத்தைக் கவர்கின்றன. படித்தபின்னும் சிந்திக்கச் செய்கின்றன. இத்தகைய கதைகள் இலக்கிய உலகில் என்றும் நின்று நிலவக்கூடியனவே.

நாமும் முன்னோரும்

சிறுகதையின் அமைப்பு நமக்குப் புதிதாக இருக்கலாம். ஆனால் சிறுகதையும் அதன் கருத்தும் நமக்குப் புதிதல்ல என்பதே நமது எண்ணம். இதை ஒப்புக்கொள்ள மறுப்போர் உண்டு.

சிறுகதை கேட்கும் ஆர்வம்; சிறுகதை எழுதும் ஆசை இவை நமது நாட்டிலும் பண்டைக்காலத்தில் இருந்தன. ஆயினும் மேல்நாட்டு முறைபற்றிய சிறுகதை அமைப்பும் நமது நாட்டுப் பண்டைச் சிறுகதை அமைப்பும் வெவ்வேறு என்பதை நாம் மறுக்கவில்லை.

மேல்நாட்டினர் சிறுகதையை ஒரு தனிக்கலையாக இலக்கியமாக வளர்த்திருக்கின்றனர். நமது நாட்டில் அப்படியில்லை. நமது முன்னோர்கள் பெருங்கதைகளோடு சிறுகதை இணைத்துக் கூறினர். கருத்தை விளக்குவதற்கே சிறுகதைகளைக் கையாண்டனர். சிற்சில சிறுகதைத் தொகுதிகளையும் எழுதி வைத்திருக்கின்றனர்.

நமது நாட்டில் வழங்கும் சிறுகதைகள் லட்சியத்தைக் கருவாக கொண்டவைகள் என்பதில் ஐயம் இல்லை. ஆனால் புதுமைப்பித்தன் கூறுவதுபோல படித்தபின் சிந்தனையைத் தூண்டும் கதைகளாக அமையவில்லை என்பதை நான் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். கதை முடிந்தபிறகுதான் கதைதொடங்குகிறது என்ற தன்மையும் பண்டைச் சிறுகதைகளில் இல்லை என்பது உண்மை.

பாரதத்திலே பல சிறுகதைகள் உண்டு. இராமாயணத்திலே பல சிறுகதைகள் உண்டு. சிலப்பதிகாரம், மணிமேகலைகளில் பல சிறுகதைகள் இருக்கின்றன. ஆனால் இவைகள் பெருங்கதைகளோடு தொடர்பு கொண்டவை. இவற்றைக் கிளைக்கதைகள் என்பர்; இத்தகைய கிளைக் கதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நீதியை -அல்லது கருத்தை வலியுறுத்தவே கூறப்பட்டுள்ளன.

பெரியபுராணம் என்னும் தமிழ் நூலை ஒரு சிறுகதைத்தொகுதி என்றே கூறிவிடலாம். ஆனால் இப்புராணத்தில் உள்ள சுந்தரர், அப்பர், சம்பந்தர் வரலாறுகளைச் சிறுகதைகளாக எண்ண முடியாது. இவர்கள் வரலாற்றிலே பல சம்பவங்கள் வருகின்றன. ஆதலால் இவைகள் பெருங்கதைகளாகத்தான் இருக்கின்றன. ஏனைய நாயன் மார்களின் கதைகள் சிறுகதைகள் போலவே யிருக்கின்றன. பக்தியின் பொருட்டு எதையும் தியாகம் செய்பவரே அடியார்கள் என்ற ஒரே கருத்தை அடிப்படையாகக் கொண்டவைகள்தான் பெரும்பான்மையான நாயன்மார்களின் கதைகள்.

நமது நாட்டில் வழங்கும் பஞ்சதந்திரக் கதையை ஒருசிறுகதைத் தொகுதி என்று கூறலாம். விக்கிரமாதித்தன் கதையையும் ஒரு சிறுகதைத் தொகுதியென்று சொல்லலாம்.

ஆனால், பெரியபுராணத்திற்கும், இவைகளுக்கும் ஒரு வேற்றுமையுண்டு. பெரிய புராணக் கதைகள் தனித்தனிக் கதைகளாகவே அமைந்திருக்கின்றன. பஞ்சதந்திரக் கதைகளும், விக்கிரமாதித்தன் கதைகளும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டிருந்த கதைகள். திருவிளையாடல் புராணம் என்பதைப் பற்றியும் பலர் அறிந்திருக்கலாம். இதையும் சிறுகதைத் தொகுதியென்றே கூறிவிடலாம். இதில் உள்ள கதைகளும் தனித்தனிக் கதைகளாகவே அமைந்திருக்கின்றன.

இவைகளைத் தவிர நமது நாட்டில் எழுதாமல் சொல்வழக்கில் வழங்கும் சிறுகதைகள் பலவுண்டு. இக்கதைகளை இன்றும் நமது பாட்டிமார்களும் பாட்டன்மார்களும் சொல்லக் கேட்கலாம். இவ்வாறு வழங்கும் சிறுகதைகளை பாட்டிக்கதைகள் என்று வழங்குகின்றனர்.

இவ்வாறு கதைகள் கூறும் முதியோர்களை இன்றும் நாட்டுப் புறங்களிலே காணலாம். இக்கதைகளுக்குக் கர்ணபரம்பரைக் கதைகள் என்று பெயர். இப்படி வழங்கிவரும் ககைகளில் பல இன்று மறைந்து வருகின்றன. நாட்டுப் பாடல்களிலே பல, மறைந்து விட்டதைப் போலவே, நாட்டுக் கதைகளிலே பல மறைந்து விட்டன என்று கூறலாம்.

ஆனால் இன்று சிறுகதை இலக்கியம் வளர்ந்து வருவதைப்போல பண்டைக்காலத்தில் சிறுகதை இலக்கியங்கள் வளர்ந்து வரவில்லை. அமைப்பிலே இன்றைய சிறுகதைக்கும் பண்டைக்காலச் சிறுகதைக்கும் வேற்றுமை உண்டு. இவ்வுண்மையை நாம் ஒப்புக்கொண்டுதான் தீரவேண்டும். ஆனால் சிறுகதைகள் கேட்பதிலே ஆசை, படிப்பதிலே ஆசை, எழுதுவதிலே ஆசை, நமது முன்னோர்களுக்கும் இருந்ததென்ற உண்மையை மறுப்பதற்கில்லை.

வரவேற்கத்தக்க கதைகள்

மற்றொரு செய்தியை நாம் மறந்து விடக்கூடாது. பண்டைக்காலக் கதைகள், இன்றைய சிறுகதை இலக்கியத் தன்மையைப் பெற்றிருக்கவில்லை என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் அக்காலக் குட்டிகதைகளிலே பல பாட்டிக்கதைகளிலே பல-புராணக் கதைகளிலே பல-இன்றும் மக்களால் உற்சாகத்துடன் கேட்கப்படுகின்றன. இதற்குக்காரணம் அவைகளிலே

குறிக்கோள் அல்லாது இலட்சியம் அமைந்திருப்பதுதான் இதனை எவரும் மறுப்பதற்கில்லை.

இன்று எழுதப்படும் சிறுகதைகளும் இலட்சியத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தால்தான் அவைகள் நீண்ட காலம் நிலைத்து நிற்கும்; இலக்கிய வரிசையிலே இடம் பெறும். இவ்வுண்மையை மறவாத சிறுகதை எழுத்தாளர்களே உண்மையில் தங்கள் இலக்கியப் படைப்பின் மூலம் பொதுமக்கள் வாழ்வுக்கு வழிகாட்டிகளாகவும் இருப்பார்கள்.

இன்றைய இலக்கியப் படைப்பாளர்கள் பழமையை அடியோடு வெறுக்காமல் அங்கேயும் சென்று கொஞ்சம் நிதானித்துப் பார்க்க வேண்டும். இவ்வாறு பார்த்தவர்கள். தாம் பார்த்தவற்றே மனதிற் கொண்டு புதியபடைப்புகளை ஆக்குவார்களாயின், அவைசிறந்து விளங்கும் என்பது உறுதி.

எழுத்தாளன் என்பவன், தான் இருக்கும் நாட்டையும், தன்னைச் சூழ்ந்திருக்கும் மக்களையும் மறந்து விடுவானாயின் அவனையும் மக்கள் மறந்து விடுவார்கள். இந்த உண்மையை மறவாத எழுத்தாளர்களே மக்கள் மனதில் குடியேறுவார்கள். தம்மைச்சுற்றியுள்ள மக்கள் நிலையைப் பரிதாபக் கண்களுடன் பார்க்கும் எழுத்தாளர்கள் எழுதுகிற சிறுகதைகளே சிறந்த இலக்கியங்களாக விளங்கும் என்பது எமது கருத்து. உங்கள் கருத்து இதற்கு மாறாக இருந்தால் அதில் நாம் குறுக்கிட விரும்பலில்லை. எதுசரியென்பதை மக்கள் முடிவுசெய்யட்டும்.

தாமரை 7.10.1959.

நன்றி: சாமிசிதம்பரனாரின் இலக்கியச்சோலை

செட்டிநாட்டுப் பழமொழிகள் - முனைவர் மு.வள்ளியம்மை

முன்னுரை

வாழ்க்கையில் கண்ட அனுபவ உண்மைகளின் வெளிப்பாடே பழமொழிகள். அவைகள் மக்களின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் கருவிகள். சொல்லில் சுருக்கத்தையும், பொருளில் ஆழத்தையும், விளக்கத்தில் தெளிவையும் உடையன. இப்பழமொழிகள் பண்பாடு, பழக்க வழக்கம், சுற்றுச்சார்பு, தொழில் இவைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதை,

''அறிவு வளர்ச்சியிலே பிறந்து சுருக்கம், தெளிவு, பொருத்தம் ஆகிய பண்புகளால் என்றும் இறவாமல் இவ்வுலகில் வாழ்கின்றன'' என்று அரிஸ்டாட்டில் கூறுவார். ''பழமொழிகள் மக்களது வாழ்வுடன் வாழ்வாகப் பின்னிப் பிணைந்து விட்டன. பழமொழி மூலம் மக்களது பண்பாட்டையும் நாகரிகத்தையும் அறிந்து கொள்ளலாம்'' என்றும் கூறுவர். (சக்திவேல். சு. நாட்டுப்புற இயல் ஆய்வு ப.105)

இவைகளுக்கேற்ப ஒவ்வொரு வட்டாரத்திலும் வழங்கும் பழமொழிகள் தனித்தன்மை பெற்று விளங்குகின்றன. வட்டாரப் பழமொழிகள் என்று இவற்றைக் கூறலாம். அவ்வகையில் செட்டிநாட்டுப் வட்டாரப் பழமொழிகள் குறித்துச் சில கருத்துக்களை நோக்கலாம்.

வட்டாரப்படி பழமொழிகள்

ஒரே கருத்தைத் தரும் பழமொழிகள் பல வட்டாரங்களில் வழங்கப்பட்டலும் அவை சொற்களால் வேறுபடுகின்றன. அந்தந்த வட்டாரச் சொற்களைப் பயன்படுத்தும் போது அவை அந்த வட்டாரப் பழமொழிகளாகின்றன. அந்தச் சொற்களே அவ்வட்டாரத்தின் தனித்தன்மையைக் காட்டுகின்றன. அதுபோல செட்டிநாட்டுப் பகுதிக்கு மட்டுமே உரிய சொற்களால் வழங்கப்படும் பழமொழிகளிலும் வட்டாரத் தனித்தன்மை மிளிர்வதைச் சிறப்பாகக் காணமுடிகிறது. பொட்டல், ஒய்யாரம், ஒக்கல், பனியாரம், நாளி, கெத்தா, ஒசத்தி, சமத்தி, காடிக்கஞ்சி, மாராப்பு, வரையோடு போன்றவை வட்டாரச் சொற்களுக்குச் சிலசான்றுகள். இவைகள் பழமொழிகளில் பயன்படுத்தப்பட்டவை.

செட்டிநாடும் சிக்கனமும்

செட்டிநாட்டைச் சிக்கனத்தின் இருப்பிடம் என்றும் கூறுவர். இதற்குப் பல சான்றுகளைக் காட்டலாம். சிக்கனமாக வாழும் செட்டி நாட்டார் கஞ்சத் தனமாக வாழ்வதில்லை என்பதைத் திருமணச் செலவும், கோயில் திருப்பணிகளும் தெளிவாகக் காட்டும் கஞ்சத்தனம் என்றால் தேவைக்குக் கூடச் செலவு செய்யாமை. சிக்கனம் என்றால் தேவைக்கு மட்டுமே செலவு செய்து ஆடம்பரத்தைக் கட்டுப்படுத்துவது. வீண் ஆடம்பரம் அவர்கள் என்றும் விரும்பாத ஒன்று. இவர்கள் இறைபக்தியும், தர்ம சிந்தனையும், கலையுணர்வும், தமிழ்ப்பற்றும் மிக்கவர்கள். குழந்தைகளுக்குச் சிக்கனமாக வாழக் கற்றுக் கொடுப்பவர்கள் எதையும் வீணாக்காமை அவர்களின் பழக்கங்களில் தலையாயது. எனவே அவர்களின் பழமொழிகளில் ''வீண் ஆடம்பரம் வேண்டாமே'' என்ற கருத்து குறிப்பிடத்தக்கதாய் அமைந்துள்ளது.

வீண் ஆடம்பரம்

வாழ்க்கையில் வீண் ஆடம்பரத்தை விரும்பி வாழ்ந்தவர்கள் கடன்காரர்களாய், கடமையைச் செய்ய முடியாதவர்களாய் வாழும் நிலையை அனுபவத்தில் கண்ட முன்னோர்கள் வீண் ஆடம்பரம் தேவையில்லை என்பதை வலியுருத்தும் பழமொழிகளைக் கூறினர். பழமொழிகள் கிண்டல் நிறைந்தவனாகவும், வறுமையின் வெளிப்பாடாகவும், எப்படி வாழ வேண்டும் என்பதைச் சுட்டுவனவாகவும், இயல்பு வாழ்க்கை வாழ வழிகாட்டுவனவாகவும் அமைந்து சிறக்கின்றன.

''குடிக்கிறது கூழாம் கொப்பளிக்கிறது பன்னீராம்''

என்பது பழமொழி. தேவைக்குத் துன்பப்பட்டுக் கொண்டு, ஆனால் வெளிப்பெருமைக்காகச் செயற்படும் தன்மையினை இது உணர்த்துகிறது. அடிப்படைத் தேவையை அறியாமல் செய்யும் ஆடம்பரத்தை வெளிப்படுத்துகிறது.

வாழும்முறை

இந்தமாதிரியான நிலைக்கு ஆளாகிவிடக்கூடாது என்றால் எப்படி வாழ வேண்டும் என்பதைக் காட்டுவதே,

''ஆற்றிலே கொட்டினாலும் அளந்து கொட்டனும்''

என்ற பழமொழி. ஆறு பெரிதாக இருக்கிறதே என்பதற்காக அதிகமாகக் கொட்ட வேண்டியதில்லை. கொட்டுவதை அளந்தே கொட்டவேண்டும். எதையும் எண்ணிச் செலவு செய்ய வேண்டும். யாருக்குக் கொடுத்தாலும் அளவாகக் கொடுக்க வேண்டும். அதாவது இன்னதற்கு இவ்வளவுதான் செலவு செய்ய வேண்டும் என்பதைத் திட்டமிட்டுச் செய்ய வேண்டும்.

ஆளும் முறை

''குந்தித்தின்றால் குன்றும் மாளும்'', என்பது பொதுவான பழமொழி. முன்னோர்கள் வைத்துவிட்டுப் போன சொத்துக்களை உழைத்துப் பெருக்காமல் உட்கார்ந்து தின்றால் அது குன்றளவு இருந்தாலும் குறைவுபடும். இதைச் சிலப்பதிகாரம் வணிக குலப் பிறப்பான கோவலன் வழிச் செம்மையாய்ச் சொல்லும்.

''சலம்புணர் கொள்கைச் சலதியோடு ஆடிக்

குலம்தரு வான்பொருள் குன்றம் தொலைத்த

இலம்பாடு நாணுத்தரும்'' என்பது சிலப்பதிகாரம்.

உழைக்காமல் கரைத்ததால், குலத்தில் முன்னோர்கள் சேர்த்ததைத் தான் இருந்து ஆளமுடியாமல், இலம்பாட்டைப் பெற்றான். எனவே முன்னோர்கள் வைத்து ஆண்டவற்றை வீண் ஆடம்பாரத்தால் அழித்துவிடாமல் பின்னோர்கள் வைத்து ஆளவேண்டும். இதை ''முன்னோர்கள் ஆண்டதைப் பின்னோர்கள் ஆளனும்'' என்ற செட்டிநாட்டுப் பழமொழி கூறும்.

சிறு குழந்தைகளுக்குச் செட்டி நாட்டில் கூறும் பல அறிவுரைகளுள் ஒன்று ''வீட்டில் இல்லாத பொருளைக் கேட்டுத் தொணக்காத'' அல்லது ''வீட்டில் இல்லாத பொருளைக் கேட்டு அழாதே'' என்பது. இது சிறுபிள்ளை முதல் மனதில் பதிய வைக்கப்படும் கருத்து. இல்லாததைக் கேட்டு அழுதால் அழுகைக்குப் பயந்து கடன்பட்டாவது கொடுக்க வேண்டிய கட்டாயம் வரும். தேவையற்ற கடன் தொல்லை வந்துசேரும். எனவே இருப்பதைக் கேட்டு அழுவதால் கொடுப்பவர்க்கும் துன்பமில்லை. பொருளைத் தேவைக்குத்தான் கேட்கவேண்டுமே தவிர வீணாகக் கேட்பது தவறு. இருப்பதை இன்பமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற பொருளில் இதே கருத்து வேறுவிதமாகக் கூறப்படுவதும் உண்டு.

''இட்ட போசனத்தை இன்பமா சாப்பிடு'' உள்ளதைக் கொண்டு திருப்தியடைந்தால் வாழ்வு இன்பமாக இருக்கும். இல்லாததற்கு ஏங்கி அழக்கூடாது என்பதை இப்பழமொழி தெளிவாகச் சுட்டுகிறது. வசதிக்குத் தக்கபடி வாழ வேண்டும் என்பதன் வெளிப்பாடே இப்பழமொழி.

வெளிப்பகட்டு

''ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்; உள்ளே இருக்குமாம் ஈறும் பேனும்'' என்ற பழமொழி வெளிப்பகட்டைக் காட்டுகிறது. வெளியே தாழம்பூ மணக்க இருக்கும் கொண்டை தன்னகத்தே பல அழுக்குகளைக் கொண்டிருக்கும். வெளிப்பகட்டாகவும், ஆடம்பரமாகவும், பேச்சளவிலும் நிற்பவர்களை இப்பழமொழி சுட்டிக்காட்டும், ''மதிப்புமசால் வடை பிச்சுப்பாத்தா ஊசவடை'' என்ற பழமொழியும் இக்கருத்திலேயே வழங்குகின்றது.

தகுதி வாழ்க்கை

பிறரைப்பார்த்து நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் இயலாததை அவனைப் போல் செய்ய முயலக்கூடாது. அவனவன் தகுதிக்கேற்ப வாழும் வாழ்க்கையே நிம்மதியான வாழ்க்கை. செல்வந்தனின் வாழ்வுபோல் இல்லாதவனின் வாழ்வு அமைவதில்லை. இயன்றவன் செயல்களைப் போல் இயலாதவன் செயற்பட முடியாது. தோற்றத்தில் ஒரேமாதிரியாக இருந்தாலும் நல்லபாம்பைப் போல் மண்புழு ஆடமுடியாது. இதை, ''நல்லபாம்பு ஆடுதுன்னு நாக்களாம் பூச்சி ஆடமுடியுமா'' என்று கூறுவர் (நாக்களாம்பூச்சி - மண்புழு)

முடிவுரை

''பழமொழி பொய்யின்னாப் பழயதும் சுடும்'' என்ற பழமொழி. மக்களுக்குப் பழமொழியின் மீதுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது. சமுதாயத்தில், இதனைச் செய், இதனைச் செய்யாதே எனக் கட்டளையிடவும் பழமொழியைப் பயன்படுத்துகின்றனர். மக்களின் வாழ்வில் அனுபவித்த சாரம் என்பதால் மக்களிடையே அதற்கொரு செல்வாக்கு உண்டு. அம்முறையில் செட்டியார்கள் என்று அழைக்கப்பெறும். தன வணிகர்களாகிய நகரத்தார்கள் எதையும் எண்ணித் திட்டமிட்டுச் செய்பவர்கள்.

''எண்ணிச் செய்கிறவன் செட்டி

எண்ணாமல் செய்கிறவன் மட்டி''

என்ற பழமொழி அவர்களின் திட்டமிட்டுச் செயலாற்றும் திறனை வெளிப்படுத்தும்.

''காசுக்கு எட்டுச் சட்டி வாங்கி''

சட்டி ஒன்னு எட்டுக்காசுன்னு விற்றாலும்

செட்டிப்பிள்ளை ஒன்றுக்கு ஈடாகுமா?

என்ற வழக்கு செட்டியார்களின் கெட்டிக்காரத் தனத்திற்குச் சான்றாக விளங்குகிறது.

நன்றி - வேர்களைத் தேடி

இராசா தேசிங்கு கதைப்பாடல் - முனைவர் மு.வசந்தமல்லிகா

முன்னுரை

தமிழ் மக்களின் வாழ்க்கை இயல்புகளும் உணர்வோட்டங்களும் இலக்கியப் படிவங்களாகத் தமிழகமெங்கும் காலங்காலமாகப் படிந்து கிடக்கின்றன. மக்களின் பண்பாட்டைப் புலப்படுத்தும் காலக் கண்ணாடிகளாக அவை விளங்குகின்றன. இலக்கியச் செல்வங்கள் பலவகையான அமைப்பில் உருவாக்கப்பெற்றுப் பல இடங்களில சிதறிக் கிடக்கின்றன. அவற்றுள் ஒன்றே கதைப்பாடல்.

மக்களின் வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், விழாக்கள், வரலாற்றுச் செய்திகள், பண்பாட்டுத் தன்மைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே கதைப்பாடல்கள் எழுதப்படுகின்றன.

நல்லதங்காள் கதை, சின்னதம்பி கதை, மருதுபாண்டியர் கதை, கட்டபொம்மன் கதை, அல்லி அரசாணி மாலை, தேசிங்குராசன் கதை போன்ற கதைப் பாடல்களில் தேசிங்குராசன் கதைப் பாடல் வரலாற்றுச் சிறப்பு பெற்ற வீரர்களில் வரலாற்றைக் கதையாகக் கூறுகின்ற பகுதியிலே அமைந்துள்ளது. இக்கட்டுரையில் தேசிங்கு ராசன் கதைப்பாடல்கள் மூலமாக அவனுடைய வீரம், போர் முறை, பக்தி போன்றவற்றைப் பற்றி விளக்கப்படுகிறது.

கதைச்சுருக்கம்

நாயக்கர் ஆட்சிக் காலத்திற்குப் பின்னர் முகலாயப் படையெடுப்பு நடந்த காலத்தில் முகலாயப் பேரரசை எதிர்த்து செஞ்சியில் சிற்றரசன் தேசிங்கு போராடினான். அவன் ஆட்சி புரிந்தது பத்தே மாதங்கள் தாம். எனினும் நீண்ட நாட்கள் அரசாண்டவனைப் போல் பேரும் புகழும் அவனுக்கு வாய்த்தன. தேசிங்கு பெயர் தெரியாதவர் எவரும் இல்லை எனலாம். ஒரு லட்சம் படைவீரர்களையும் நானூறு பீரங்கிகளையும் கொண்ட முகலாயர் படையை, முன்னூறு குதிரை வீரர்களைக் கொண்டு எதிர்த்தான் தேசிங்கு, முகலாயப் படையை முற்றிலுமாக வென்று, இறுதியாகத் தானும் உயிர் நீத்தான். எதிரிகளின் கடல் போன்ற படையைக் கண்டு அஞ்சாத வீரன் தேசிங்கின் அஞ்சாமைக்குத் தமிழகம் தலை வணங்குகிறது.

இலக்கியத்தின் பல சுவைகளில் ஒன்றான வீரச் சுவையை விளக்கிக் காட்டவே புகழேந்திப் புலவர் இக்கதைப் பாடலை இயற்றினார் எனலாம்.

தேசிங்கின் இளமை வீரம்

டில்லியை ஆட்சி புரிந்த அரசனுக்கு கொங்குப் பக்கிரி என்பவன் பரிசாகக் கொடுத்த குதிரையின் பெருமையை கூறுவதன் மூலமாகத் தேசிங்கின் வீரத்தை அறியலாம்.

''தெய்வ வரத்தினால் பிறந்த பிள்ளை வந்து ஏறுவேணும்

வரத்தினால் பிறந்த பிள்ளை வந்து ஏறவேணும்

பூமிபாரம் தீர்க்கவந்தவன் இப்புரவி ஏறவேணும்

தேவரடியிற் பிறந்த பிள்ளை தேசியேற வேணும்''

என்று அக்குதிரையை அடக்கப் போகும் வீரனின் சிறப்பைக் கூறும் வழியாக தேசிங்கு ராசனின் ஆற்றல், சிறப்பு கூறப்படுகின்றது.

''குதிரை களைத்த சப்தத்திலே கொப்பென்று விழுந்தார்கள்

அண்ட மிடிந்து விழுந்தாற்போல அலறி விழுந்தார்கள்

கோட்டையிடித்து விழுந்தாற்போலக் குப்புற விழுந்தார்கள்'' !

என்று அக்குதிரையை அடக்க வந்தவர்களின் நிலையைப் பற்றி ஆசிரியர் விளக்குகிறார்.

இத்தகைய முரட்டுக் குதிரையை அடக்கப் போகும் பாலகன் தேசிங்கு எத்தகையவன் என்றால்,

''பாலன்பிறந்த மூன்றாம் மாதம் பதைத்து விழுந்தானாம்

குழந்தைபிறந்த ஏழாம்மாதம் குலுங்கி விழுந்தானாம்

தொட்டிலைவிட்டுக் கீழேயிறங்கித் துள்ளி விழுந்தானாம்

தங்கத் தொட்டியை எட்டியுதைத்துத் தரையில் விழுந்தானாம்''

இவ்வீர பாலகன், குதிரையை அடக்கச் சென்று சிறைப்பட்ட தந்தையை மீட்க தனது ஐந்தாவது வயதில் டில்லி அரசவைக்குச் சென்றான். அவன் அரசவையிலே வந்து நின்றதைக் கண்டவர்கள்,

''நிறைந்த கொலுவில் இருக்கும் துரைகள் சட்டென்று எழுந்தார்கள்

தகத்திலிருக்கும் டில்லித் துரை தானும் எழுந்தானாம்''

குதிரையை அடக்கச் சென்ற தேசிங்கு அக்குதிரை மீது ஏறித் தன் தந்தையை நோக்கி,

''புரவிஏறிச் சவாரி போறேன் பெற்றவரே ஐயா

தப்பித்தவறி வந்தேனேயானால் தழுவிக் கொள்ளுமய்யா

இன்றைக்குஞ்சாவு நாளைக்குஞ்சாவு இருக்குது தலைமேலே

ஒன்றுக்கும் நீ அஞ்சவேண்டாம் உறுதி கொள்ளுமய்யா''

என்று விரிவுரை ஆற்றிச் சென்ற தேசிங்கு வீராதி வீரர்களாலும் அருகில் கூட நெருங்க இயலாத குதிரையை ஐந்து வயதான பாலகனான தேசிங்கு அடக்கினான் என்று உலகோர் போற்றும்படியாக அடக்கினான். இளவயதிலேயே அவன் வீரமுடையவனாக திகழ்ந்தான் என்பதற்கு இது தக்க சான்றாகும்.

பாளையக்காரர்களின் கூற்றின் வாயிலாகத் தேசிங்கின் வீரம்

தேசிங்கு ராசாவிடம் இருந்து திறைப் பணம் பெற்று வர புறப்பட்ட தோன்றமல்லனுக்கு, அவன் செல்லும் வழியில் தேசிங்கின் வீரத்தைப் பற்றிப் பலரும் எடுத்துரைக்கிறார்கள்.

''நானொரு வார்த்தை சொல்லுகின்றேன் கேளும் தோன்றமல்லண்ணா

அவனும் மகா சூரனையா ராசா தேசிங்கு

செஞ்சிக் கோட்டைச் சிப்பாயையா ராசாதேசிங்கு

அவன் கண்ணை உருட்டிப் பார்த்தானானால் சிப்பாய் தேசிங்கு

கால் பலங்களும் கைபலங்களும் கதறியோடுமேதான்

தாறுமாறாய்த் தீர்த்துப் போடுவான் ராஜா தேசிங்கு

சண்டை பண்ணிச் செயிக்கமாட்டாய் தோன்றமல்லண்ணா''

என்று வழிப்போக்கன் கூறக் கேட்ட தோன்றமல்லன். தேசிங்கு முன் செல்ல அஞ்சி நெற்றியிலே நாமம் இட்டு அவன் முன்னே நடுநடுங்கிச் சென்றான். இதன் மூலம் தேசிங்கின் வீரமும் பக்தியும் புலனாகின்றன.

தீச்சகுணங்களை கண்டு அஞ்சாத வீரதேசிங்கு

தேசிங்கு திறைப்பணம் செலுத்த மருத்ததால் அவன்மீது கோபம் கொண்டு அவனை அழிக்க மோவுத்துக்காரன் பெரும்படையோடு வந்தான். அவனை எதிர்த்து போரிடச் சென்ற தேசிங்கு முதலில் அரங்கநாதரை வணங்க சென்றான். அரங்கநாதரை வழிபட்டு நின்றபோது அரங்கநாதரின் மாலை கருகியது. முத்தாரங்கள் கழன்று விழுந்தன. திருவிளக்கு கீழே விழுந்தது. அவர் கண்களில் நீர் வடிந்தது. நெற்றிமணியும் துளிசிமாலையும் அருந்து விழுந்தன. கோபுரம் இடிந்தது. தீச்சகுணங்களைக் கலைக்கண்ட தேசிங்கு ஆண்டவன் மீது கடும்கோபம் கொண்டான். போருக்கு நான் அஞ்சேன். போர் முகத்தில் எனக்கு வீரச்சாவு அளிப்பாயாக என வேண்டிப் புரவி ஏறினான்.

இந்நிகழ்ச்சியின் மூலம் ஆண்டவனே வந்து தடுத்தாலும் முன்வைத்த காலை பின்வைக்க மாட்டாத சுத்த வீரன் தேசிங்கு என்பதை அறியமுடிகிறது.

பெரும் வெள்ளத்தைக் கண்டு அஞ்சாத தேசிங்கு

தேசிங்கின் படையின் பலத்தை கண்டு பங்காரு நாயக்கன் நவாபின் உத்தாரம் பெற்று ஏறி நீரினை ஆற்றிலே இணைத்தான். இதனால் ஆற்றிலே பெருவெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனைக் கண்ட வீர தேசிங்கு தன் படைவீரர்களை நோக்கி

பாலூஞ்சோறும் தின்கிறவனனால் செஞ்சிக்குப் போங்களடா

ரத்தச்சோறு தின்கிறவனனால் என்பின்னே வாங்களடா

போர்களத்தில் செத்தோமானால் புகழும் கீர்த்தியுமுண்டு

இரணகளத்தில் செத்தோமானால் நல்ல பதவியுண்டு

சாவுக்கென்று பயப்படவேண்டாம் சமேதாருமாரே!

சல்தி சல்தி வாருமென்றான் ராசாதேசிங்கு.

என்று வீரவுரை ஆற்றி வீரர்களை உற்சாகப்படுத்தி போர்மேற்கொள்ள செய்தவன் மூலம் எவருக்கும் அஞ்சாத தேசிங்கின் வீரம் புலனாகிறது.

மாவீரன் தேசிங்கு

ஆற்காடு நவாபை எதிர்த்துக் கடுமையாகப் போரிட்டான் தேசிங்கு. போர் கடுமையாகியது. ஒவ்வொரு பாளையக்காரனையும் தேசிங்கு கொன்றான். தேசிங்கு கரகரவென்று கத்தியைச் சுழற்றினான். தலைகள் பந்துகளாய் நாற்புறமாய் உருண்டன. நவாபும் அவன் படைகளும் அஞ்சி ஓடி ஒளிந்து கொண்டனர். தேசிங்கு படையில் அவனைத் தவிர அனைவரும் மாண்டனர். எதிர்த்துப் போரிட எவருமில்லாத நிலையில் தேசிங்கு தான் மட்டும் தனியனாய் நாடு திரும்ப விரும்பவில்லை. ஆண்டவனை வணங்கிவிட்டு மார்பை விரித்துக் கீழே படுத்தான். ஆகாயத்தில் கத்தியைத் தூக்கிப் போட்டான். அது மார்பில் வந்து வீழ்ந்தது. தேசிங்கு உயிர் நீத்தான்.

இந்த இறுதி முடிவு வீரத்திற்கு சான்றாக முடிகிறது. எதிர்பாரின்மையால் வீரத்தை வெளிப்படுத்த இனி வழியில்லை. உடன் வந்தோர் அனைவரும் இறந்துவிட்டமையால் தனியே திரும்பவும் மான உணர்வு இடந்தரவில்லை. ஆதலில் நெஞ்சிலே வாளைப் பாய்ச்சிக் கொண்டு வீர மரணம் அடைந்த தேசிங்கு இறப்பிலும் தன் வீரத்தை வெளிப்படுத்திவிட்டான்.

முடிவுரை

சுருங்கக் கூறின், வீரச்சுவையை விண்டுரைக்கும் கட்டபொம்மன் கதைப்பாடல்கள், கான்சாகிபு சண்டை, புலித்தேவன் கதை, மருதுபாண்டியர் கதை முதலிய கதைப்பாடல்கள் யாவற்றிலும் தேசிங்கு ராசன் கதை, காட்சிக்குகாட்சி உயர்ந்து நிற்கிறது எனலாம். ஒவ்வொரு வரியிலும், வரிகளில் அமைந்த சொற்களிலும் எழுத்துக்களிலும் கூட வீரச்சுவை சொட்டச் சொட்ட ஆசிரியர் பாடியுள்ளார். நூலினுள் எங்கு நோக்கினும் ஆசிரியர் கையாளும் உத்திகள் அனைத்தும் தேசிங்கின் வீரத்தை வெளிப்படுத்துவனவாகவே உள்ளன. இது ஒரு ஒப்பில்லா வீரகாவியம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

நன்றி - வேர்களைத் தேடி