04/09/2011

மொழிப் பயிற்சி – 54 : பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்! – கவிக்கோ ஞானச்செல்வன்

ஆயகலை, தூய தமிழ் அண்மையில், ஒரு தொலைக்காட்சி நிறுவன அறிவிப்புப் பார்த்தோம். அதில், ""எப்போதும் தூயத் தமிழ் பேசுபவரா நீங்கள்? தொடர்பு கொள்ளுங்கள்'' என்று எழுத்தில் காட்டித் தொலைப்பேசி எண் தந்திருந்தார்கள். நல்ல தமிழார்வமும் பற்றும் உடையவர் தாமும் வழுக்கிடும் இடம் "வலி மிகுதல்' இலக்கணத்தில்தான். தூய தமிழ் என்று எழுத வேண்டிதைத் தூயத் தமிழ் என்று வலி மிகுந்து எழுதியிருந்தனர். தூய என்பது முற்றுப் பெறாத சொல், அது தமிழ் என்னும் பெயர்ச்சொல் கொண்டு முடிகிறது. ஆதலின் இது பெயரெச்சமாகும். பெயரெச்சத்தில் (க்,ச், த், ப்) வல்லொற்று மிகாது. தூய தமிழ், ஆயகலை, தீயசிந்தை என்னும் எடுத்துக்காட்டுகள் காண்க. (ஓடிய குதிரை, பாடிய பெண் போன்றனவும் கருதுக)

"யார்கொலோ முடியக் கண்டார்?' இத்தொடரில் முடிய என்னும் சொல்லோடு "க்' வல்லொற்று மிகுதல் ஏன்? தூய என்பதிலும் முடிய என்பதிலும் "அ' ஓசை உள்ளது. இதனை அகர ஈறு என்போம். இரண்டிலும் வருமொழியில் வல்லெழுத்து உள்ளது. ஏன் ஒன்றில் மிகவில்லை? ஒன்றில் மிகுகிறது? நிலைமொழி (தூய, முடிய) ஒரு தன்மைத்தாயினும், வருமொழி வேறுபடுகிறது. "தமிழ்' பெயர்ச்சொல். "கண்டார்' வினைச் சொல். முடிய என்னும் எச்சம் கண்டார் என்னும் வினை கொண்டு முடிதலின் இது வினையெச்சம்.

அகரவீற்றுப் பெயரெச்சம் முன் வல்லொற்று மிகாது. அகர வீற்று வினையெச்சம் முன் வல்லொற்று மிகும். காயக் காண்பது, உலவச் சென்றான், வலியத் திணித்தார் என்பனவும் காண்க.

இப்படித்தான் முன்னர் ஒருகால், "தமிழ்ப்பேசு, தங்கக்காசு' எனத் தலைப்பிட்டு, நம்மை நடுவராகப் பணியாற்ற அழைத்தனர். நாம் சென்ற பின், தலைப்பைத் "தமிழ் பேசு, தங்கக்காசு' எனத் திருத்தினோம். தமிழ் பேசு- தமிழில் பேசு, தமிழைப் பேசு வேற்றுமைத் தொகையில் மிகாது. தமிழ்ப் பேராசிரியர் - தமிழில் வல்ல பேராசிரியர்- தமிழைக் கற்ற பேராசிரியர் - உருபும் பயனும் உடன் தொக்க தொகையில் வல்லொற்று மிகும்.

திருத்தம், மாற்றம் செய்யலாமா?

"தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தால் காணப் படும்' - என்பது திருக்குறள். ஒருவர் தக்கவர் (சிறந்தவர்) என்பதும், தகுதி அற்றவர் என்பதும் அவர் வாழ்க்கைக்குப் பின் எஞ்சியிருக்கும் சொல் கொண்டு தீர்மானிக்கப்படும் என்பது இதன்பொருள். எச்சம் - எஞ்சியிருப்பது- புகழோ? இகழோ? எச்சம் என்பதற்கு மக்கள் என்று பொருள் கொண்டார் பரிமேலழகர். ஒருவருக்குப் பின் அவர்தம் மக்களே (பிள்ளைகள்) அவர் பெயர் சொல்பவர்கள் என்பது கருத்து.

இதனைப் படித்த நல்லறிஞர், தமிழ் படித்த ஆர்வலர் "எல்லீஸ்துரை' இத்திருக்குறளில் எச்சம் எனும் சொல்லை நீக்கிவிட்டு மக்கள் என்னும் சொல்லைப் போட்டுவிட்டார். இது சரியா? திருக்குறளில் கைவைக்க இவருக்கென்ன உரிமை? திருக்குறளைத் திருத்திட இவர் யார்? என்று தமிழறிஞர் உலகம் சினந்தெழுந்தது.

தக்கார் எனும் சொல்லுக்கேற்பவே மக்கள் என்பதில் எதுகை (க்) சிறப்பாக அமைகிறது. சீர் இலக்கணம் சிதையவில்லை. (எச்சத்தால் - தேமாங்காய்; மக்களால் - கூவிளம். காய் முன் நேர், விளம் முன் நேர் இரண்டிலும் வெண்டளையே). ஆயினும் எச்சம் என்பதன் முழுமையான - சிறப்பான பொருள் மக்களில் இல்லையன்றோ? ஒருவருடைய மறைவிற்குப் பின்னரும் அவர் பற்றிய நினைவு - புகழ் நிற்குமானால் (எச்சமானால்) அவர் மேலானவர். இல்லெனின் அவர் தகவு அற்றார் என்க.

எமது வாழ்விலும் - எமது எழுத்துகளில் நேர்ந்த ஒரு சில நிகழ்வுகளை நினைவு கூர்வோம். திரு.வி.க. அவர்களின் "வேட்டல்' நூல்கள் பற்றி ஒரு சிறப்பு மலருக்குக் கவிதை எழுதி அனுப்பியிருந்தோம். எண் சீர் விருத்தங்களாக அமைந்த நெடுங்கவிதை அது. முதல் விருத்தத்தின் தொடக்கம், "மலையிடையே அரும்பியதாம் மக்கள் வாழ்வு மாநதிகள் வீழருவி மணக்குஞ் சோலை'

என்று இருந்ததில், மாநதிகள் என்னும் சொல்லை நீக்கிவிட்டு பேராற்றின் என்று மாற்றிவிட்டார் மலர் பதிப்பு ஆசிரியர். நதிகள் வடசொல்லாம், ஆதலின் பேராறு என்று மாற்றினோம் என்றார் அவர். வந்ததே எமக்குச் சினம்! "எம் படைப்பை மாற்ற உமக்கென்ன உரிமை? மலையிடையே, மாநதிகள், மோனை அழகுடன் இருப்பதைக் கெடுத்துவிட்டீரே! பொருளாவது சரியாகப் பொருந்துகிறதா? பேராற்றின் வீழருவி என்றால் ஆற்றிலிருந்து அருவி விழுவதாகப் பொருள்தரும். அருவி வீழ்ந்துதான் ஆறாக ஓடும். பொருளும் கெட்டுவிட்டதே' என்று பொங்கினோம்.

(தமிழ் வளரும்)

நன்றி – தினமணி கதிர்

கருத்துகள் இல்லை: