கயத்தியும் கயவனும்! - சி.பொன்ராஜ்

நாடகங்களிலும், திரைப்படங்களிலும் எதிர்வினை புரிகிற மாந்தர்களை ‘வில்லி, வில்லன்’ என்று ஒரு நூற்றாண்டு காலமாகச் சொல்லி வருகிறோம். நம் வாழ்விலும் நல்ல செயல்கள் நடப்பதைத் தடுப்பவர்களை அப்படித்தான் குறிப்பிடுகிறோம்.

ஆங்கிலச் சொற்களான வில்லிக்கும், வில்லனுக்கும் ஏற்ற தமிழ்ச் சொற்கள் எவை என யோசித்தால், பெண்பாற் பெயர்களாக பாதகத்தி, சண்டாளி, கொடியவள் என்றும்; ஆண்பால் பெயர்களாக சண்டாளன், கொடியவன் என்றும்... இன்னும் பிறவும் உள்ளன.


‘கயவன்’ என்கிற சொல் ஏற்கெனவே வழக்கில் உள்ளது. இதனை வில்லனுக்கு ஏற்ற சொல்லாகக் கொள்ளலாம். வில்லிக்கு ஏற்ற சொல்லாகக் ‘கயத்தி’யைச் சொல்லலாம். இச்சொல்லை கம்பர் பதிவு செய்துள்ளார். அப்பாடல் வருமாறு:


“தோய் கயத்தும், மரத்தும், மென்சிறை

 துள்ளி, மீது எழுபுள் எலாம்

 தேய்கை ஒத்த மருங்குல் மாதர்

 சிலம்பின் நின்று சிலம்புவ

 கேகயத்து அரசன் பயந்த விடத்தை

 இன்னது ஓர் கேடுசூழ்

 மா கயத்தியை, உள்கொதித்து

 மனத்து வைவன போன்றவே!”


 (கைகேயி சூழ்வினைப் படலம்-229)


 “கேகயத்து அரசன் பெற்ற விடத்தைப் (விஷத்தை) போன்று கேடு செய்யும் இழிந்தவளான கைகேயியை மனம் கொதித்து மனதுக்குள்ளே தூற்றி வைவன போல இருந்தது... நீராடும் குளங்களிலிருந்தும், மரங்களிலிருந்தும் துள்ளிக் குதித்துக்கொண்டு மேலே பறக்கிற மெல்லிய சிறகுகளை உடைய பறவைகள், தேய்ந்துள்ள இடையைப் பெற்ற மகளிரின் காற்சிலம்புகள் போல ஒலியை எழுப்பிய காட்சி” என்கிறார் கம்பர்.


எனவே, வில்லனைக் ‘கயவன்’ என்றும், வில்லியைக் ‘கயத்தி’ என்னும் இனி அழைக்கலாம்; எழுதலாமே...!

நன்றி - தமிழ்மணி 2020

கருத்துகள் இல்லை: