03/09/2011

மொழிப் பயிற்சி – 30 : பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்! – கவிக்கோ ஞானச்செல்வன்

நாம் மறந்துவிட்ட தமிழை, மறக்காத தமிழர்கள்!

தாய்த் தமிழ்நாட்டு மக்களைவிட, ஈழத் தமிழர்களும், மலேசியத் தமிழர்களும் நல்ல தமிழ் பேசுகிறார்கள் என்றே சொல்ல வேண்டும். அவர்களின் உரையாடல்களில் ஆங்கிலக் கலப்பு நம்மைவிடக் குறைவாகவே உள்ளது. புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் உலகம் முழுதும் பரவியுள்ளார்கள். அவர்களின் தமிழ் ஒலிப்பு முறை சற்றே வேறுபட்டிருக்கும். அதனால் நமக்குச் சில சொற்கள் புரிந்து கொள்ள இயலாமல் இருக்கலாம். ஆயினும் கூடிய வரை அவர்கள் தமிழில் "கதை'க்கிறார்கள்.

இருநூறு முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டிலிருந்து மலை நாட்டிற்கு (மலாயா) வேலை தேடிச் சென்றவர்களின் வழித் தோன்றல்கள் - மூன்றாம், நான்காம் தலைமுறையினர் மலேசியாவில் வாழ்ந்து வருகிறார்கள். தோட்டம், தொழில், வணிகம், அலுவல் சார்ந்த அனைத்து நிலைகளிலும் நல்ல வண்ணம் இருக்கிறார்கள். தமிழ்நாட்டுத் தமிழர்கள் மறந்துவிட்ட தமிழை மறக்காமல் இருக்கும் அம்மக்கள் பாராட்டிற்குரியவர்கள். மொழியை மட்டுமன்று, நமது விருந்தோம்பல், ஒப்புரவு, இனிய பேச்சு, கடவுள் வழிபாடு முதலிய பண்பாட்டுக் கூறுகளையும் போற்றிக் காத்து வருகிறார்கள்.

""ஐயா பசியாறிட்டீங்களா?'' என்று உசாவும் குரல் மலையகத் தமிழர் குரலாகத்தான் இருக்கும். (தமிழ்நாட்டு முசுலிம் மக்களிடமும் இத்தொடர் வழக்கில் உள்ளது) நாம் என்றால், "என்ன சார் டிபன் ஆயிடிச்சா?' என்போம். சோறு என்று சொல்லுவதற்கே வெட்கப்படுபவர் நம் மக்கள். சோற்றைச் சாதம் என்போம். அதுவும் போய் இப்போது எங்கும் ரைஸ் வந்துவிட்டது.

உணவு விடுதியில் நாம் ரைஸ் கொண்டு வா என்று சொல்ல, அரைகுறை ஆங்கிலம் அறிந்த ஆள் அரிசியைக் கொண்டு வந்து கொட்டினால் நாம் சினம் கொள்ள முடியாது. மலேசியத் தமிழர்கள் இப்போதும் சோறு என்றுதான் சொல்லுகிறார்கள். தேநீர், காப்பி, குளிர்பானம் எல்லாம் அங்கே தண்ணீர்தான். முதலில் "தண்ணி என்ன வேண்டும்?' என்றுதான் வினவுகிறார்கள்.

நம்மூரில் உணவு பரிமாறுபவரை "ஹலோ' என்று கூவி அழைப்போம். அல்லது மிஸ்டர் என்போம். வேறு சிலர், வெயிட்டர் இங்கே வாப்பா என்பார்கள். ஆனால் மலேசிய மக்கள் உணவு விடுதிகளில் பணி செய்பவர்களை அண்ணன் என்றோ அக்கா என்றோ அழைக்கிறார்கள். (மேசை துடைத்தல் போன்ற பணிகளை மகளிர் செய்கிறார்கள்)

"வணக்கம் நலமாக இருக்கிறீர்களா?' என்று ஒருவரையொருவர் நலம் கேட்பதும், தொலை பேசியில் அழைத்தால் "வணக்கம், ஐயா வெளியில் சென்றுள்ளார்கள். இரவுதான் வருவார்கள், நாளை காலையில் பேச இயலுமா?' என்று வீட்டில் உள்ளவர்கள் பேசுவதும் மகிழ்ச்சியாக இருக்கின்றன.

"சாரு எங்கியோ மீட்டிங்னு போயிருக்கார், நைட்டுதான் வருவார், காலையிலே கூப்புடுங்க' இப்படித்தான் நம்மூர்ப் பேச்சு இருக்கும். நாம் சந்திக்கும் உரையாடும் வட்டம் தமிழ் வட்டமாக இருப்பதால், தமிழ் ஆர்வலர்கள் இப்படி இருக்கலாம். பொதுமக்கள் எல்லாரும் இப்படிப் பேசமாட்டார்கள் என்று கருதக்கூடும். ஆனால் உண்மையில் எல்லா இடங்களிலும் மிகுதியாக ஆங்கிலக் கலப்பு இல்லாமல் பேசுகிறார்கள். சில மலாய் மொழிச் சொற்கள் மிகக் குறைவான அளவில் அவர்கள் பேச்சில் கலந்து வருகின்றன. நம் செவிக்கு எட்டியவரை, நகரம், சிற்றூர், ஆலயம், வணிக வளாகம் எவ்விடத்தும் மக்கள் ஆங்கிலச் சொற்கலப்பு இல்லாமல் பேசுகிறார்கள்.

மலாய் மொழிக்கென்று தனி எழுத்துவடிவம் இல்லை. வெறும் பேச்சுமொழிதான். மலாய் மொழிச் சொற்களை ஆங்கில எழுத்துகளில்தான் எழுதி வைத்துள்ளார்கள். எழுத்து வடிவம் இல்லாத அம்மொழி அந்நாட்டின் ஆட்சி மொழி. மலேசிய மக்களில் மலாய் இனத்தவரையடுத்துச் சீனர்கள் மிகுதியாக வாழ்கிறார்கள். அதனை அடுத்த நிலையில் இந்தியர். அவருள் பெரும்பான்மையர் தமிழர். சீனர்கள் ஒருவரோடு ஒருவர் சீனமொழியில்தான் பேசுகிறார்கள்.

இந்தியருள் தமிழர்களை அடுத்துச் சீக்கியர் (பஞ்சாபியர்), தெலுங்கர் இருக்கிறார்கள். அவர்களிடம் காணப்படும் ஒற்றுமை நம் தமிழரிடையே இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. அங்கும் நம் தமிழர்கள் புத்துணர்வு கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர்.

(தமிழ் வளரும்)

நன்றி - தினமணி கதிர்

கருத்துகள் இல்லை: