23/09/2011

பழமொழிகள் வழி பண்பாடு - செ.முருகநாதன்

மனித வாழ்வு, ஏறத்தாழ உலகம் முழுவதும் வழங்கும் பழமொழிகளை வைத்துப் பார்க்கின்ற பொழுது ஒரே தன்மையுடையதாக உள்ளது. ஆண் பெண் உறவு இல்லற வாழ்வு காதல் ஆகிய தொடர்பான செய்திகள் மனிதர்க்குப் பொதுவானவை. இந்தியாவில் உள்ளது போலவே பெண் பார்க்கும் முறை, சீர் கொடுத்தல், தாய்மைச் சிறப்பு முதலியன உலகின் பல நாடுகளிலும் வழக்கில்

இருந்து வருகின்றன. உலகம் முழுவதும் காசம் கருமைதான் என்னும் சீனப் பழமொழி வழங்கி வருகிறது. இதன் உட்பொருள் தம் கருத்திற்கு வலிவூட்டுவதாக உள்ளது.

வாழ்க்கை

மனிதன் வாழ்ந்தான் என்பதற்கு அவன் ஒரு வீடாவது கட்டியிருக்க வேண்டும். ஒரு மகனையாவது பெற்றிருக்க வேண்டும், (அல்லது) ஒரு நூலாவது எழுதிருக்க வேண்டும் என்பது இத்தாலிய பழமொழி. மனிதன், சான்றோனாய் வாழ்தல் வேண்டும், அன்பு நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மையோடு ஐந்து சால் பூன்றிய தூண் என்பார் வள்ளுவர்.

ஆனால் இத்தகைய சான்றோராய் வாழ்வோர் எத்தனைப்பேர் என்பதை விரல் விட்டு எண்ணி விடலாம் மக்களிடையே விலங்குணர்ச்சி மேலிட்டு நிற்கிறது. விலங்கிற்கும் மனிதனுக்கும் உள்ள ஒரே வேறுபாடு பகுத்தறிவு மட்டுமேயாகும்.

மனிதனைப் பகுத்தறிவுள்ள விலங்கு என்கிறது ஒரு நாட்டின் பழமொழி. இக்கருத்துடைய அரேபியா, இங்கிலாந்து, இந்தியா, லத்தீன் நாட்டுப் பழமொழிகள் ஒரே மாதிரியாக வழங்கி வருகின்றன. அவை

1. மனிதனும், விலங்கும் ஒன்றுபோலத்தான் இருக்கிறார் - அரேபியா

2. மனிதனுக்கு முதன்மையான பகைவன் மனிதனே - இங்கிலாந்து

3. மனிதன் தனக்குத்தானே சயித்தான் - இந்தியா

4. மனிதனுக்கு மனிதன் ஓநாயாக இருக்கிறான் - லத்தீன்

விலங்கு நிலையிலிருந்து மாறி மனிதர்க்குரிய உயர்ந்த இடத்தைப் பெற்று அறம், அன்பு, அருள் தொண்டு ஆகியவற்றின் சமுதாயத்தில் போற்றத் தக்கவராக வாழ்வதே மனித வாழ்வு. இத்தகைய மனிதப் பண்பு இல்லாதவன் அற்பப் பொருளாகவே கருதப்படுவான் என்கிறது செனீகா நாட்டுப் பழமொழி.

1. மனித சமூகத்தை விட்டு மேலெழுந்து நிற்காத மனிதன் ஓர் அற்பப்பொருள் ஆவான் -செனீகா

2. வாழ்க்கை ஒரு வெங்காயம் அதை உரிக்கும்போது கண்­ர் வரும் - பிரான்சு

3. வாழ்வும் துயரும் ஒன்றாகத் தோன்றியவை -இங்கிலாந்து

4. வாழ்க்கை என்பது அடித்தல் அல்லது அடிபடுதல் - ருஷ’யா

பிறக்கும்பொழுது மனிதன் அழுதுகொண்டே பிறக்கிறான். சாகும்போது அவன் சிரித்துக்கொண்டு சாகவேண்டும் மனிதன் சமுதாயத்திற்குத் தன்னால் இயன்ற தொண்டுகளைச் சிறப்பாகச் செய்து முடித்து விட்டு நேர்மையாக வாழ்ந்தோம் என்ற மனநிறைவோடு மரணத்தை எதிர்நோக்க வேண்டும்.

ஆணும் பெண்ணும்

''ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே'' இது தமிழ் நாட்டின் பழமொழி. பெண்கள் என்றால் உலகம் முழுவதும் தாழ்வான உணர்வு நிலவி வருவதை பழமொழிகள் வாயிலாக அறியலாம்.

1. பெண்புத்தி பின்புத்தி - தமிழ்நாடு

2. பெண்களுக்குக் கூந்தல்தான் நீளம் மூளை குட்டை - அறிஞர் கால்மிக்

3. பெண்கள் சயித்தானின் சாட்டைகள் - அறிஞர் வேல்ஸ்

பெண்களை தெய்வமாக கருதுவதும் உண்டு. தூய பெண்குலத்தை தெய்வமாக அவமதிப்பது ஓர் ஆலயத்தை எரித்த பாவத்திற்கு நிகரானது.

4. நித்தியமான பெண்மை இயல்பு நம்மை உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்கிறது. -காதே

காதல்

காதல் சாதி வேற்றுமைகளைக் கடந்தது. காதலுக்குக் கண்ணில்லை. காதல் ஒரு மனிதனுக்குச் சிறைவாழ்வு போன்றது. காதல் மலர், கல்யாணத்தில் கனியும். அவசரக் காதல் விரைவில் அழியும். அன்புதான் காதலுக்கு அடிப்படை அந்த அன்புக்கு வயது தடையாகாது. முதுமையில் வரும் காதலுக்கு வலிமை அதிகம் என்று பாவேந்தர் குடும்ப விளக்கில் கூறியுள்ளார். காதலின் அன்பு, நாய் அன்புக்குக் கீழானது என்கிறது போலந்து நாட்டில் ஒரு பழமொழி. காதலைப் பற்றி வழங்கும் பழமொழிகள்

1. காதல் சாதி வேற்றுமைகளைக் கண்டு சிரிக்கிறது - இந்தியா

2. காதலின் உச்சத்தில் பேச்சு குறைந்து விடும் - செர்மனி

3. காதலர் கண்கட்கு ரோஜா மலர்தான் தெரியும் முட்கள் தெரியமாட்டா - செர்மனி

காதலைப் பற்றி உலக நாடுகளில் ஒரே நிலையில் இருந்தாலும், காதலின் வலிமை, உறவு ஆகியவை உலக அரங்கில் பொதுவானவை. தற்காலத்தில் வந்த திரைப்படப் பாடல் ஒன்றில்

காதல் என்பது பொதுவுடமை

கஷ்டம் மட்டும்தான் தனிவுடமை என்கிறது.

திருமணம் கணவன் மனைவி உறவு

ஒரு குடும்பத்தில் தாயின் குணநலன்களை ஆராய்ந்து பெண்ணின் குணநலம் அறிய முடியும், செல்வந்தர் வீட்டில் பெண் எடுத்தல் கூடாது. ஏழை வீட்டுப் பெண்ணே இல்லறப் பாங்குடையவள். அத்தை மகளைக் கட்டுவது முறையாகும். அத்தை மகளைவிட்டு அடுத்தவர் மகளைக் கட்டுவது மடமை என்றக் கருத்துகளை மையமாகக் கொண்டு நம் நாட்டிலும் மேல் நாட்டிலும் பழமொழிகள் உணர்த்துகின்றது. அவை

1. கரையைப் பார்த்துச் சேலை எடு; தாயைப் பார்த்து மகளை எடு. - துருக்கி

2. ஏழை வீட்டில் பெண் எடு; செல்வர் வீட்டில் குதிரை வாங்கு - பின்லாந்து

3. அத்தை மகளை விட்டு விட்டு வெளியில் பெண் எடுப்பவன் மூடன் - ஆப்பிரிக்கா

4. ஐந்தும் மூனும் எட்டு. அத்தை மகளைக் கட்டு - தமிழ்நாடு

ஒருவன் இளமையில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் அப்பொழுதுதான் அன்பு நீண்ட நாள் நீடித்து இருக்கும். திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிராகும். திருமணம் என்பது காதல் நோய்க்கு மருந்தாகும். திருமணம் மனிதனுக்குத் தண்டனை எனவும். கால்விலங்கு எனவும் கருதப்பட்டு வருகிறது திருமணம் பற்றிய பழமொழிகள்.

1. ஒன்று இளமையிலே திருமணம் செய்து கொள் அல்லது துறவியாகிவிடு. - பல்கேரியா

2. இளமைத் திருமணம் நீண்ட கால அன்பு - செர்மனி

3. ஒரு முறை விவாகம் கடமை, இருமுறை தவறு மும்முறை பைத்தியம் - ஆலந்து

எனப் பழமொழிகளில் உலக நாடுகள் அனைத்திலும் ஒரே மாதிரியாகக் கூறப்படுகின்றன. வாழ்க்கை, ஆண், பெண் உறவு, காதல், திருமண உறவு முறைகள் பற்றிய உலகப் பண்பாடுகளை இக்கட்டுரை ஆராய்ந்துள்ளது.

நன்றி - வேர்களைத் தேடி

கருத்துகள் இல்லை: