04/09/2011

மொழிப் பயிற்சி – 34 : பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்! – கவிக்கோ ஞானச்செல்வன்

வினைமுற்று, வினையெச்சம், பெயரெச்சம்

ஒருவினை (செயல்) முற்றுப் பெற்ற சொல்லாயின் அது வினைமுற்று. (எடுத்துக்காட்டு) கற்றான், நின்றாள், சென்றார், வந்தது, வந்தன. ஐம்பால் வினைமுற்றுகள் இவை.

இவ்வாறு வினைமுற்றி நில்லாமல் எஞ்சி நிற்பது (முடியாமல் இருப்பது) எச்சம் எனப்படும். முற்றுப் பெறாத ஒருவினைச் சொல். ஒரு பெயரைக் கொண்டு முடியுமானால் அது பெயரெச்சம். படித்த எனும் சொல் முற்றுப் பெறவில்லை.  பையன் என்ற பெயர்ச் சொல்லைச் சேர்த்தால் படித்த பையன் என்று முற்றுப் பெறுகிறது. ஆதலின் படித்த என்பது பெயரெச்சம். (படித்த என்ற சொல்லோடு, பையன் எனும் பெயர் எஞ்சியுள்ளது) படித்த என்பதைப் படித்து என்று மாற்றினால் அதுவும் முற்றுப் பெறவில்லை. வந்தான் என்றொரு வினைச் சொல்லைச் சேர்த்தால் அது முற்றுப் பெறும். அஃதாவது படித்து வந்தான் என்றாகும். ஆதலின் இது வினை எஞ்சிநின்ற சொல் ஆதலின் வினையெச்சம் எனப்படும். (படித்து என்ற சொல்லுடன் வந்தான் எனும் வினை எஞ்சியுள்ளது) ஓரளவு புரிந்திருக்க வேண்டுமே!

நினைவிற் கொள்க:

படிப்பறிவில்லாத சிற்றூரில் வாழும் ஒரு பெண்ணும் கூட,"ரோட்டு ஓரமாப் போ, பாத்துப் போ' எச்சரித்துத் தன் மகனை அனுப்புகிறாள். தமிழ்மொழியின் அழுத்தமான ஓரிலக்கணம் ஆங்கிலச் சொல்லில் கூட ஏற்றிப் பேசப்படுகிறது. ரோடு + ஓரம் = ரோட்டோரம், ஆறு+ கரை =ஆற்றுக்கரை (ஆத்துக்கரை), சோறு + இல் = சோற்றில் (சோத்தில்), காடு + வழி = காட்டு வழி என்றெல்லாம் தமிழில் வல்லொற்று இரட்டித்தல் பற்றி முன்னரே எழுதியுள்ளேன்.

அடையாற்றில் கூட்டம் நடைபெற்றது என்பதை அடையாறில் கூட்டம் நடைபெற்றது எனில் அடை ஆறு (6) என எண்ணைச் சுட்டும். திருவையாற்றில் இசை விழா என்பதைத் திருவையாறில் என்றெழுதினால் திரு - ஐ - ஆறு ஐந்து ஆறு (5,6 இல்) இசைவிழா என்று எண்ணையே சுட்டும். இடத்தைச் (ஊரை)சுட்டாது. ஆற்றில் எனில் நீரோடும் ஆற்றையும், ஆறில் எனில் ஆறு எனும் எண்ணில் வேறோர் எண்ணைக் கழித்துச் சொல்லுதலையும் குறிக்கும். (ஆறில் நான்கு போனால் மீதம் என்ன?) இதழாளர்கள், செய்தியாளர்கள் கவனத்தில் கொள்க.

ஆடிக் கிருத்திகை (கார்த்திகை) என்று எழுதுகின்ற எழுத்தாளர் தை கிருத்திகை என்று எழுதுகிறார். ஏன்? தைக் கிருத்திகை என்பதுதானே இயல்பான ஒலி. ஒற்று மிக வேண்டிய போது விட்டும், மிக வேண்டாத இடத்தில் "கண்டுக் கொண்டேன்' என ஒற்று (மெய்) இட்டும் எழுதும் வழக்கத்தை மாற்றிட வேண்டுமன்றோ?

காடி தமிழ்ச் சொல்லா?

ஆம். யாழ்ப்பாணம் நா.கதிரைவேல் பிள்ளையின் தமிழ்மொழி அகராதியிலும், சைவ சித்தாந்தக் கழகத்தின் தமிழ் அகராதியிலும், பிறவற்றிலும் இச்சொல்லுக்குப் பொருள்கள் எழுதப்பட்டுள்ளன. காடி - புளித்தநீர், ஒரு வகை வண்டி, ஒரு மருந்து, நெய், கள் எனப் பல பொருட்கள் சொல்லப்பட்டுள்ளன.

மலேசியத் தமிழர் வண்டி எனும் பொருளில் காடியைச் சொல்லுகிறார்கள். தென்னாப்பிரிக்காவிலிருந்து ஆறுமுகமுதலி என்பவரும் அவருடன் ஐவரும் தமிழகம், சென்னை வந்திருந்தார்கள். தமிழ்மொழியை எழுதவோ, படிக்கவோ தெரியாதவர்கள், மறந்துவிட்டவர்கள். அவர்களும் காடி ஏற்பாடு செய்யுங்கள் என்று பேசினார்கள்.

காடி எனும் சொல் இந்தியன்றோ? இந்தியில்தான் வண்டியைக் காடி என்பார்கள். இந்தி தமிழ்நாட்டில் நுழைவதற்கு முன்னே இருநூறு, முந்நூறு ஆண்டின் முன்புலம் பெயர்ந்த தமிழர்களின் வழிமுறையினர் தாம் மலேசியாவிலும் தென்னாப்பிரிக்காவிலும் வாழுகின்றார்கள். 1918}இல் முதல் பதிப்பு கதிரைவேல் பிள்ளை அகராதி வந்துள்ளது. இவர் இலங்கை யாழ்ப்பாணத்தார்.

இந்தி மொழி பல மொழிச் சொற்களைத் தன்னோடு இணைத்துக் கொண்டுள்ள மொழி. அந்த வகையில் தமிழ்க் காடிதான் இந்தியிலும் காடி ஆகியுள்ளது. ஆனால் தமிழ்க் காடி ஒலியிலிருந்து சற்றே வேறுபட்டு இந்தி காடி ஒலிக்கிறது. மலேசியத் தமிழர்களின் தமிழ்ப் பேச்சுக்குக் காடியும் ஓர் எடுத்துக்காட்டு.

மின்சார விசிறி, மின்விளக்குப் போன்றவற்றை நாம் ஆன் பண்ணு என்கிறோம். அல்லது சுவிட்சைப் போடு என்கிறோம். லைட்டைப் போடு, ஃபேனைப் போடு என்பதும் உண்டு.

விசிறியைத் தட்டிவிடப்பா, வெளிச்சம் தட்டிவிடப்பா என்கிறார்கள் மலேசியத் தமிழர்கள். அந்நாட்டில் அவர்கள் சிறுபான்மையினராக இருப்பதால் உணர்வு மங்காமல் வாழ்கிறார்கள் போலும்.

(தமிழ் வளரும்)

நன்றி – தினமணி கதிர்

கருத்துகள் இல்லை: