05/09/2011

பருவமழை எப்போது? பரிபாடல் கூறுகிறது! - நெல்லை ஆ.கணபதி

ஐப்பசி கார்த்திகை அடைமழைக் காலம் என்று கூறுவர். "கர்ணனுக்குப் பிறகு கொடை இல்லை; கார்த்திகைக்குப் பிறகு மழையும் இல்லை' என்பது பழமொழி. கார்த்திகை மாதம் முடிந்த பின்னர் மார்கழியிலே, பனிக்காலமாகி மழை குறையும். இது இயற்கை நியதி.

பரிபாடலில், வையை நதியில் மழைநீர் பெருகி ஓடுவது பற்றிப் பாடியுள்ள ஆசிரியர் நல்லந்துவனார், மழை எப்போது பெய்யும் என்பதை நுட்பமாக விளக்கியுள்ளார். பாடல் இதோ:

""விரிகதிர் மதியமொடு வியல் விசும்பு புணர்ப்ப

எரிசடை, எழில்வேழம் தலையெனக் கீழ்இருந்து

தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள்

உருகெழு வெள்ளிவந்து ஏற்றியல் சேர

வருடையைப் படிமகன் வாய்ப்ப, பொருள்தெரி

புந்தி மிதுனம் பொருந்த, புவர் விடியல் (6)

அங்கி உயர்நிற்ப, அந்தணன் இல்லத்துணைக்கு

உப்பால்எய்த இறைஎமன்

வில்லின் கடை மகரம்மேவ பாம்பு ஒல்லை

மதியம் மறைய வருநாளில்-வாய்ந்த

பொதியில் முனிவன் புரைவரைக்கீறி

மிதுனம் அடைய விரிகதிர் வேனில்

எதிர்வரவு மாரி இயைக! எனஇவ் ஆற்றால் (12)

புரைகெழு சையம் பொழிமழை தாழ,

நெரி தரூஉம் வையைப் புனல்'' (14)

வானம் முழுவதும் விரியும் ஒளிபரப்பி நிற்கும் சந்திரனுடன், கார்த்திகை, திருவாதிரை, பரணி ஆகியவை சேரும் நாட்கள், தீயின் கார்த்திகை மேஷ ராசியில் கால்பங்கும் (பரணியுடன்) முக்கால் பங்கு ரிஷப ராசியிலும் வரும். இவை ரிஷப, மிதுன, மேஷ ராசிகளில் அமையும். இவற்றுடன் உருவமும், நிறமும் உள்ள வெள்ளி (சுக்கிரன்) வந்து ரிஷப ராசியில் சேரும். செவ்வாய் மேஷத்துடன் சேரும். பொருள்களை ஆயும் புந்தி (புதன்) மிதுனத்தில் சேரும். கார்த்திகை இருள் நீங்கி விடியும்; வியாழனோ மகரம், கும்பம் எனும் இரு ராசிகளுக்கும் மேலே உள்ள மீன ராசியைச் சேரும். (அந்தணன், குரு, வியாழன் என்பது ஒரு பொருட்பன்மொழி). மகரம், கும்பம், சனியின் வீடுகள். எமன் சனியின் தமையன். வில்லின் (தனுசு) பின்னே மகரம், கும்பத்தின் அடுத்தும் மீனம் இரண்டும் அந்தண (குரு)னின் வீடுகள். பாம்பு மதிநிறை மறைய ஒல்லை வரும் நாள், சந்திரனும் ராகுவும் மகரத்தில் நிற்கும். கேது, எதிர் வரிசை ஏழாம் வீடு கற்கடகத்தில் நிற்கும் நாள் - இவ்வாறு கோள்கள் அமைந்திருக்கும் கார்காலத்தின் துவக்கமே மழை அதிகம் பொழியச்செய்யும் பருவமழை துவங்கும் நாள் என்பது ஜோதிட வல்லுநர்கள் முடிவு.

""புரை கெழுசையம் உயர்ந்த சைய மழையில் வானிலிருந்து மழைபெய்தது; வையை நதியில் புதுப்புனல் பெருகியது'' என்பது பரிபாடல் கூற்று. காற்றழுத்த தாழ்வு நிலை என வானிலை அறிக்கை கூறுவதும் இதை வைத்துத்தான்.பெய்யாமல் கெடுப்பதும் மாமழை; பெய்து கெடுப்பதும் மாமழையே'' என்று முன்னோர் கூறுவது வழக்கம்.

நன்றி - தமிழ்மணி

கருத்துகள் இல்லை: