04/09/2011

மொழிப் பயிற்சி – 39 : பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்! – கவிக்கோஞானச்செல்வன்

குறுக்கு என்றால் நாமறிவோம். நகரங்களின் விரிவாக்கப் பகுதிகளில் "கிராஸ் ஸ்ட்ரீட்' என்று காண்கிறோம். இதனைத் தமிழில் குறுக்குத் தெரு என்போம். கிறித்துவ சமய அடையாளம் கிராஸ் எனப்படுகிறது. இந்தக் கிராஸ் - குறுக்கு எனும் சொல்லின் திரிபேயாகும். இந்தக் கிராஸ், பின்னர் குருசு என்று பாதிரிமார்களால் எழுதப்பட்டது. பிற்காலத்தில் சிலுவை எனப் புதிய சொல் உண்டாயிற்று.

நாமம் (பெயர்) எனும் சொல்லிலிருந்தே நேம் (name) வந்தது. பிதா (தந்தை) ஃபாதர் ஆனார். மாதா (அன்னை) மதர் ஆனார். தந்தையெனும் தூய தமிழ்ச் சொல்லே டாடி(dady ) ஆயிற்று. அம்மா எனும் தமிழ்ச் சொல்லே மம்மி ஆயிற்று.

ஒன்று - ஒன் என்பதும், திரிகடுகம் (திரி-மூன்று) திரி- திரீ என்றாகியிருப்பதும், எட்டு - எயிட் என்பதும், பெருமை "புரெüடு' ஆனதும், பழம்-ஃபுரூட் ஆனதும் ஒப்புநோக்கத்தக்கன.

ஏனிந்த ஒலிப்பு?

சிவன், சிவா, சக்தி இச்சொற்களை நாமறிவோம். இவற்றை ஷிவன், ஷிவா, ஷக்தி என்று இப்போது சிலர் பேசி வருகிறார்கள். ஏன்? நான் "ஷத்தியமாய்ச் சொல்றேன்' என்றார் ஒருவர். ச வரும் இடங்களில் எல்லாம் ஷ உச்சரிப்பது சிலரது வழக்கமாக உள்ளது. ஷெய்தி என்னவென்றால், என்று பேசுகிறார்கள். சண்முகம் - இதனை ஷண்முகம் என்பது வழக்கம்தான். ஷண்முகத்தை, சண்முகம் என்பது சரியே. ஷண் என்பது ஆறு எனப் பொருள்படும். ஷண் மதம் அறுவகைச் சமயம் என்போம். ஷண்முகத்தை ஆறுமுகம் என்போம்.

இப்போது வேடிக்கை (வேதனை?) என்னவென்றால் ஒரு திரைப்பட இயக்குநர் தம்பெயரை ஷெல்வன் என்று வைத்துக் கொண்டுள்ளார். செல்வன் என்பது தனித்தமிழ். தூய தமிழ்ச் சொல். இதனை ஷெல்வன் என்றாக்கியது கொடுமையன்றோ? சங்கர் - ஷங்கர் ஆகலாம். செல்வன், ஷெல்வன் ஆகக்கூடாதா? என்று சிலர் வினவுவர். ஆம், ஆகக் கூடாது. ஷங்கர் வடசொல். தமிழில் சங்கர் என்றோம். சரி. செல்வன் தமிழ்ச்சொல். இதை ஷெல்வன் ஆக்கலாமா?

ஷெல் என்றால் என்ன? ஆங்கிலத்தில் பறவையின் கூட்டை ஷெல் என்பர். சிப்பியையும் ஷெல் எனலாம். ஷெல்வன் எனும் சொல்லுக்கு வடமொழியிலாவது பொருளுண்டா? இல்லை.

பெயர் புதுமையாக இருக்க வேண்டும். பொருளைப் பற்றியெல்லாம் எங்களுக்குக் கவலையில்லை என்ற மனப்போக்கு வரவேற்கத்தக்கதா? சிவம்- செம்மை, தூய தமிழ்ப் பெயர். சிவத்தை ஷிவம் ஆக்குவது தவறு. சிவத்தினின்று வந்த சொல் சைவம். ஷிவ ஷக்தி என குழகுழ பேச்சு எதற்கு? தமிழைச் சிதைப்பதற்கா? அந்தச் சமயத்தில் என்பதைக் கூட அந்த ஷமயத்தில் என்கிறார்களே! அறிவாளர்(அறிவுஜீவி)களுக்கு அழகா இது?

தகவல் பிழை:

ஓர் எழுத்தாளர்- கட்டுரையாளர் தாம் எழுதும் செய்தியில் பிழையான அல்லது தவறான தகவல்களை வாசகர்களுக்குத் தந்திடல் ஆகாது. தரும் தகவலில் தவறு இருப்பின் அது தகவு+அல் (தகவல்லாத) பிழையாகிவிடும்.

""தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் தமிழகத்தோடு இணைக்கப்பட்டபோது நடைபெற்ற விழாவிற்கு வந்த தலைவர்.... '' வேறொரு பொருள் பற்றிய கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள இத்தகவல் தவறு. தேவிகுளம், பீர்மேடு தாலுகாக்கள் தமிழ்நாட்டோடு இணைக்கப்படவே இல்லை. இணைக்கப்பட்டிருந்தால் முல்லைப் பெரியாறு அணை பற்றிய சிக்கலே எழாது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் தேவிகுளம், பீர்மேடு வட்டங்கள் இப்போது உள்ளன. தேவிகுளம் பகுதியில்தான் முல்லைப் பெரியாறு அணை உள்ளது. மூணாறு எனும் மலை வாழ்விடமும் உள்ளது. தமிழர்களே மிகுதியாக வாழும் இப்பகுதிகள் தமிழகத்தோடு இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இணைக்கப்படவில்லை. நல்லவேளை, அப்போது தமிழ்நாட்டு அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியத்தின் முயற்சியால் பெரியாற்று நீரைத் தமிழகம் பயன்படுத்திக் கொள்ளும் உரிமை நிலைநாட்டப்பட்டது.

(தமிழ் வளரும்)

நன்றி – தினமணி கதிர்

கருத்துகள் இல்லை: