27/11/2011

ராஜன் மகள் - பா.வெங்கடேசன்

இன்று தன் ஜென்மதினத்தைப் பெரும் விழாவாகக் கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்தப்
புதிய நகரம் உண்மையில் வரலாறென்றும் கதையென்றும் ஆக இரண்டு முகங்களைக் கொண்டது.
நாயக்கர் பெருமாள் கடலையொத்த விஸ்தீரணம் கொண்ட மிகப் பெரும் ஏரியை இங்கே
கட்டுவித்து அதன் கரையில் பொழில்களையும் கோட்டை கொத்தளங்களையும் நிறுவி இதற்கான
மக்களைக் குடியமர்த்திக் கோலோச்சியதிலிருந்து இப்புதிய நகரத்தின் வரலாறு உண்டு
பண்ணப்பட்டிருக்கிறது. இதன் கதையோ இன்று அரண்மனைகளும் நந்தவனங்களும் கம்பீரமாக
உயர்ந்து நின்றிருக்கும்  இடங்களில் முன்பு இருந்து இப்போது மறைந்துபோன
மாபெரும் விருட்சங்களோடும் விலங்குகளோடும் சேர்த்து நகரத்திற்கு வெளியே
துரத்தப் பட்டுவிட்டது. இந்நகரத்தின் வரலாற்றுக்கு முன்பிருந்த அந்த அடவியும்
அதற்கு முன்பு இங்கே எழுப்பப்பட்டிருந்த சுயநலமிக்க வேறொரு சமஸ்தானத்தின்
சுவர்களையும் பிரேதங்களையும் கவ்வி விழுங்கி அவற்றின் மேல் பரவி
வியாபித்திருந்த ஒன்றுதான் என்பது வரலாற்றை எழுதுபவர்களுக்குத் தெரியாது.
மறைந்துபோன அந்தப் பழைய நகரத்தின் எச்சங்களாக இங்கே துயர நினைவுகளோடு
வாழ்ந்துகொண்டிருக்கும் சாவற்ற கதைசொல்லிகளுக்குத் தெரியும். விருட்சங்களால்
விழுங்கப்பட்ட அந்தப் பழைய நகரமுங்கூட கதைகளுக்கும் முன்பு அங்கே வளர்ந்து
செழித்திருந்த வேறொரு கானகத்தை அழித்தே நிர்மாணிக்கப்பட்டதாக இருந்தது. காலம்
இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தைத் தட்டையான பாதையில் நகர்த்துவதில் ஆர்வம்
கொண்டதில்லை. அது நிகழ்வுகளைச் சுழற்றிவிட்டு வேடிக்கை பார்க்கிறது. கீழ்மேலாக.
பிறகு மேல்கீழாக. மேலும் தோன்றியவற்றை அமிழ்த்தியும் மறைந்தவற்றைத்
தெரியக்காட்டியும். இயற்கைக்கும் மனிதனுக்குமான துவந்தம் கதைகளின் உலகில்
ஓய்வதே இல்லை. சொல்லப்போனால் இந்த ஓயாத துவந்தம்தான் கதைகளே. எந்த ஒன்று
பிறிதொன்றை வீழ்த்தும் போதும் வீழ்த்தியதன் ஆகிருதி வரலாறாக எழுதப் படும்போது
வீழ்த்தப்பட்டதன் மிச்சம் வரலாற்றினடியில் கதையாக மறைந்து நின்று முற்றான
அழிவிலிருந்து தன்னைத் தப்புவித்துக்கொண்டுவிடுகிறது. வரலாற்றுக்கும்
கதைகளுக்குமான தொடர்ந்த போர்தானல்லவோ ஸ்தம்பித்துப்போய் நின்றுவிடாமல்
கிழமைகளையும் பருவங்களையும் சுழலச் செய்துகொண்டிருக்கிறது. வரலாற்றினுள் கதை
வரலாறாயும் கதையினுள் வரலாறு கதையாயும் தனித்துவம் அழிந்தவையாய் சதா உருண்டு
கொண்டே இருக்கின்றன. இங்கே முன்பு செழித்திருந்த காடு விழுங்கிச் செரித்த பழைய
நகரம் அழிவுற்றதைப் பற்றின கதைகள் பல புதிய நகரத்தை விட்டுத் தொலைவில் மௌனமாகக்
காத்திருக்கும் மரங்களுக்குள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு வாழும் பூர்வ
குடிகளிடையே வழங்கிவந்தன. வீண்பழிக்கு ஆளாகி அனாதையாக்கப்பட்ட அரண்மனைச் சேடிப்
பெண்ணொருத்தியின் சாபம்தான் அந்நகரத்தை விழுங்கிய பெரும் வனத்தின் வேர்கள்
என்றது ஒரு கதை. சுபிட்சத்தை அள்ளி வழங்கும் பெண் மகவு கையிலிருக்க ஆண்
குழந்தைக்கு ஏங்கிக் கிடந்த ஒரு ராஜனின் மதியின்மைதான் அக்காட்டின் கிளைகள்
என்றது ஒரு கதை. ராஜனின் மகள் ஆடை நெகிழ உறங்குவதைப் பார்த்த இருபது வேடர்களின்
மரண ஓலம்தான் அதன் விழுதுகள் என்றது மற்றொரு கதை. துர்சகுனங்களை
ராஜ்ஜியத்திற்குள் கொண்டு வந்தவன் என்று பிற்காலத்தில் ஏசப்பட்ட என்
முதிமுப்பாட்டனார்தான் ஆழ்ந்து அகண்ட அக்கானகத்தின் மூச்சும் இருளும் என்றது
ஒரு கதை. சிதறிக் கிடந்த கதைகளை ஒன்று சேர்த்து அழிந்து போன பழைய நகரத்தைத்
தங்கள் ஞாபகங்களில் மீண்டும் அதன் பூர்வ குடிகள் கட்டிக்கொள்கிறார்கள்.

பழைய நகரம் ராஜ குடும்பத்தின் இருபத்துமூன்று தலைமுறைகளால் பரிபாளிக்கப்பட்டு
வந்தது. என் முதிர்முப்பாட்டனாரின் காலத்தில் அதன் இருபத்துமூன்றாவது தலைமுறை
நடந்து கொண்டிருந்தது. இந்தத் தலைமுறைக்கு மற்ற இருபத்திரண்டு தலைமுறைகளிலும்
இல்லாத ஒரு விசேஷம் வாய்த்திருந்தது. அதை அதிர்ஷ்டமென்று கணிப்பதா அல்லது
துரதிர்ஷ்டமென்று கணிப்பதா என்பது பற்றிப் பிற்காலத்திலும் அரண்மனையின் சோதிட
சாஸ்திர வல்லுனர்கள் யாராலும் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. அந்த ராஜதானி என்
முதிர்முப்பாட்டனார் காலத்துத் தலைமுறைக்கு முன்பு வரை அந்த ஆண்
வாரிசுகளாலேதான் ஆளப்பட்டு வந்துகொண்டிருந்தது. இந்த ஆண்வாரிசுகள் யாவருமே
தத்தமக்கென்று பிரத்யேகமாக வாய்த்திருந்த சில தனிப்பட்ட திறமைகளாலேயும்
சக்தியாலேயும் தங்கள் வம்சத்தை செழிக்கச் செய்துகொண்டிருந்தனர். ஒரு
தலைமுறையிடம் காணப்படும் குறிப்பிட்ட ஏதாவதொரு விசேஷத்தன்மை இன்னொரு
தலைமுறையிடம் காணப்படுவது அரிதாகத்தான் இருந்தது. ஆனால் அதை ஈடுகட்டும்
விதத்தில் பின்னதற்கென்று ஏதாவது ஒரு தனித்தன்மையும் கடவுளின் ஆசிர்வாதமாகக்
கிடைத்து விட்டது. உதாரணமாக ராஜ வம்சத்தின் பன்னிரெண்டாம் தலைமுறையில் காட்டு
விலங்குகள் எதுவும் நாட்டுக்குள் மனிதர்கள் யாரையும் பயமுறுத்தாமலும்
மனிதர்களால் பயமுறுத்தப்படாமலும் மிக மிக சகஜமாக நடமாடும் சுதந்திரம்
பெற்றிருந்தன. அதேபோல் நாட்டுக்குள்ளிருந்தும் மக்களும் கால்நடைகளும் பயமின்றி
எந்த வேளையிலும் காட்டுக்குள் சென்று வரவும் காலம் கனிந்திருந்ததென்று
சொல்லுவார்கள். முயலும் புலியும் ஒரே சுனையில் அருகருகே நீரருந்துமென்பது
பன்னிரெண்டாம் தலைமுறை ராஜ வம்சத்து நாட்களில் ஒரு வழக்குச் சொல்.
போர்க்காலங்களில் அரசுப் படைகளின் முன் ஒரு மாபெரும் அரண் போலப்
பயிற்றுவிக்கப்படாத மூர்க்க விலங்குகள் நின்று முழங்கிக்கொண்டிருந்ததையும் அவை
தன் நாட்டின் வீரர்களைக் காத்து நின்றதையும் அவர்களுக்காக எதிரி முன் சென்று
போரிட்டு அவர்களின் வாளுக்கு இரையாகி மடிந்ததையும் சொல்லும் மெய்சிலிர்க்கும்
கட்டங்கள் எங்கள் வம்சாவளிக் கதைகளில் நிறைய உண்டு (அவற்றில் புலிகளுக்குச்
சிறப்பான இடமும் இருந்ததுண்டு). மாறாக அதையடுத்த பதின்மூன்றாவது
ஆட்சிக்காலத்திலோ வீதிகளில் காட்டு மிருகங்களின் நடமாட்டம் சாத்தியப்படாத
ஒன்றாக ஆகிவிட்டிருந்ததென்கிறார்கள். பதின்மூன்றாம் தலைமுறையின் போர்க்களம்
காட்டு மிருகங்களுக்குப் பதிலாகக் காட்டு மிருகங்களையொத்த மூர்க்கமும்
வலிமையும் நிறைந்த மனிதப் படைகளாலேயே நிரப்பப்பட்டு வந்தது. இன்னும் விசேஷமாக
பதின்மூன்றாம் தலைமுறைக் காலத்தில் வனவேட்டை மிகப் பிரசித்தமான விளையாட்டாகவும்
ஆகிவிட்டது. பழைய சம்ஸ்தானத்தின் கொடிமேல் பறந்துகொண்டிருக்கும் பெருமை படைத்த
கரும்பட்டைகள் கலக்காத தங்கநிறப் புலிகள் அருகிப்போக ஆரம்பித்த காலம்
பதின்மூன்றாம் தலைமுறை நடைபெற்றுக் கொண்டிருந்தபோதுதானென்று என் பழைய
பாட்டனார்கள் சொல்லி அறியச் செய்தனரென்று என் பாட்டனார் சொல்லுவார். ராஜ
குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக வசித்து வந்த நகரத்தின் மையப் பகுதியிலிருந்த
அரண்மனைகூட இந்தப் பதின்மூன்றாம் தலைமுறை ராஜனால் அதே இடத்தில் கம்பீரமாக
வளர்ந்து ஓங்கியிருந்த முதிர்ந்த கடம்ப விருட்சமொன்றை அழித்து அதன் உச்சிக்
கிளையில் பிறந்ததிலிருந்து வசித்துக் கொண்டிருந்த புலியை விரட்டிவிட்டு அந்த
இடத்தின் மேல் கட்டப்பட்டதுதான் என்பார்கள். வனவேட்டையின்போது போர்க்கள
வியூகத்தையும் போர்க்களத்தில் வன வேட்டையின் தந்திரத்தையும் பயன்படுத்தி
வெல்லத் தெரிந்த  மதியூகிகள் நிறைந்த காலமாக அது இருந்தது. இப்படி ஒரு
தலைமுறையில் நாட்டில் நிலவிய காலநிலைகளையும் கூட இன்னொரு தலைமுறையின்
ஆட்சியின்போது காண முடிவதில்லை என்று பொதுவாக நம்பப்பட்டு வந்தது (ஆனால்
இருபத்து மூன்றாம் தலைமுறையில் மூன்றடுக்கு அரண்மனையில் மேல்மாடியில்
அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பான படுக்கையறையில் மிகச் சுவாதீனமாக பல தலைமுறைக்
காலம் நடமாடி வந்த கிழட்டுப் புலி அந்த நம்பிக்கையை அசைத்துவிட்டுப் போனது).

இருபத்து மூன்றாம் தலைமுறை ராஜனின் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்த என்
முதிர்முப்பாட்டனாரின் குலத் தொழில் நாவிதம். பழைய நகரத்தில் நாவிதர்களைப்
பெரும் பொருளும் செல்வாக்கும் வந்தடையக் காரணமாய் இருந்தவர் அவர். அவர்
காலத்திற்குப் பிறகு நாவிதம் கடைநிலைத் தொழிலாக மதிக்கப்பட்டு இழிவடையவும் அவரே
காரணமானார். பழைய நகரத்தின் இருபத்துமூன்றாம் தலைமுறை வரை நாவிதம் என்பது சதையை
வெட்டிவிடாமல் முடியை மட்டும் கவனமாக மழித்தெடுக்கத் தெரிந்த ஒரு ஜதை நடுங்காத
கைகளுக்கு மேல் சிறப்பான தகுதிகள் எதுவும் தேவைப்படாத ஒரு தொழில் என்றே மக்கள்
நம்பிக் கொண்டிருந்தனர். பழைய நகரத்தில் நாவிதம் கடைநிலைத் தொழிலாக
மதிக்கப்படவில்லை. ஆனாலும் முடிமழிப்பதைப் பிற தொழில்களைப் போலவே வெறும்
பிழைப்புக்குரிய உபாயமாக மட்டுமே கருதிச் செய்துவந்தவர்களுக்கு அப்போது
பிரமாதமான இடம் எதுவும் ராஜ்ஜியத்தில் கிடைத்துவிடவுமில்லை. அந்நகரத்தையே தன்
பூர்விகமாகக் கொண்டிருந்த என் முதிர்முப்பாட்டனார் பிற மனிதர்களின்
தூக்கத்தினுள் ஊடுருவி அவர்களுடைய கனவுகளைப் பார்க்கும் கலையைப் பயிலும்
பொருட்டு தனது பதின்பருவம் துவங்கும் முன்பே நாட்டைவிட்டு வெளியேறி மேற்குப்
பக்கம் மலைகளுக்கு அப்பாலிருக்கும் மாந்திரீகக் கலைகளுகுப் பேர்போன மலையாள
தேசமெங்கும் சுற்றித் திரிந்துவிட்டுத் தன் காளைப்பருவத்தில் ஊரு திரும்பி
முடிமழிப்பது என்பது வெறுமே மண்டையைச் சுரண்டு வழிப்பது மட்டுமல்ல என்று
நாற்சந்தியில் நின்று உரக்கச் சொல்லி மக்களின் கவனத்தையும் ராஜனின் தனிப்பட்ட
அபிமானத்தையும் ஈர்த்த நாள் முதலாகத்தான் நாவிதம் என்பது வைத்தியம் மாந்திரீகம்
வர்மம் சம்போகம் முதலிய அதியற்புதமான பிற சாஸ்திரங்களோடு பிரிக்க முடியாத
தொடர்பு கொண்டது எனும் உண்மையை உலகம் புரிந்துகொண்டது. மனித உடலின் சில
குறிப்பிட்ட பகுதிகளில் அவரவர்கலுடைய உடலமைப்புக்குத் தக்க ரோமக் கற்றைகளைக்
குறைத்தும் முழுவதும் மழித்தும் அவ்விடங்களில் வேர்வைக் கண்களைத் திறந்து
விடுவதன் மூலமும் வேர்வைச் சுரப்பைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் தனிநபர்களுடைய
மனோபாவங்களிலும் நடவடிக்கைகளிலும் கணிசமான மாற்றங்களைச் சாதிக்க
முடியுமென்பதைத் தேர்ந்த நாவிதன் அறிவான் என்று என் முதிர்முப்பாட்டனார்
பிரகடனப்படுத்தினார். மேலும் நாவிதனுக்குள் அங்க சாஸ்திரத்தையும் மனித உடலின்
சீதோஷ்ணத்தையும் பற்றின ஞானம் இயல்பாகவே படிந்து கிடக்கிறது. ரோமம் என்பது
உடலுக்கு வெளியே ஓடும் நரம்பு என்பதை அறிவு அறிந்துகொள்ளும் முன்பே சவரம்
புரியும் கைகள் அறிந்துகொண்டிருக்கின்றன என்றும் சிரைத்துக் கொள்பவரின்  உடல்
தவிர்க்க வேண்டிய விஷமயிர்க் கற்றைகளை உடலோடு ஒட்டி வளர வேண்டிய நன்மயிர்ப்
படுகையினுள்ளிருந்து தேடிப் பிடித்துக் களையும் நாவிதனின் பிரயத்தனமானது
உபநிஷத்துகளிலிருந்து உலகசாரத்தைத் தேடும் பண்டிதனுக்கு எந்த விதத்திலும்
குறைந்ததல்ல என்றும் என் முதிர் முப்பாட்டனார் மக்களை அறியச் செய்ததிலிருந்து
முடியை மழித்துக்கொள்வதும் அதன் பொருட்டு நாவிதர்களின் வீட்டு வாசல்களில்
நெடுநேரமாகத் தவங்கிடப்பதும் பழைய நகரத்தில் பிறரிடம் பெருமையோடு
பகிர்ந்துகொள்ளும் விஷயங்களில் ஒன்றாகிப்போனது. காங்கை நோயால்
அவதிப்பட்டுக்கொண்டிருந்தவர்கள் தங்களின் கழுத்தும் முதுகும் காற்றின் திசையில்
நன்றாகத் திறந்திருக்கும்படி தலைமுடியைச் சிகையாகக் குறுக்கிக்கொண்டு
சென்றார்கள். குளிர்க் காய்ச்சலாம் நடுங்கிக்கொண்டிருந்த நோயாளிகள் அதைக்
கூந்தலாக நீட்டி மேனியை மூடிக்கொண்டார்கள். ஞானத்தைக் கவர்ந்து செல்லும் மாலை
வேளைகளின் அரக்கர்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பிய
கல்விமான்கள் தலைநரம்புகளனைத்தையும் ரோம இழைகளால் பின்புறமாகக் கட்டி இழுத்து
நுனியில் பதினாறு பிரிக்குடுமியாக முடிச்சிட்டுத் தரும்படி நாவிதர்களை வேண்டி
நின்றார்கள். சம்போக சுகம் அனுபவிக்க முடியாமல் அல்லலுற்ற ஆண்கள் தலைமுடியைத்
தளர்த்தி ஈரம் சொட்டிக்கொண்டே இருக்கும் சடையாக அதை மாற்றிக்கொண்டு
திருப்தியுடன் திரும்பினார்கள். இல்லற சந்நியாசிகளாக இருக்கப்
பிரியப்பட்டவர்களுக்கோவெனில் இதற்கு நேர்மாறாக நுனியில் பட்டுத்துணியால்
மறைத்துக் கட்டப்பட்டிருக்குமாறு நாவிதர்கள் பின்னல்களை உருவாக்கி அனுப்பி
வைத்தார்கள். இல்லறத்தைத் துறந்து காட்டை நோக்கிச் சென்ற துறவிகள்கூடத் தங்களை
மழித்துக்கொள்ள மறுத்து முகமெங்கும் ரோமக் கற்றைகளைக் காடாக வளரும்படி விட்டு
வைத்ததன் மூலம் தங்களையுமறியாமலேயே வதனாலங்கார சூசிகையின் எட்டாம் அங்கத்தை
ஏற்றுக்கொண்டவர்களானார்கள். கன்னங்களிலும் மேலுதட்டின் மேலும் முகவாயிலும்
கவனமாகச் செதுக்கப்பட்ட மயிர்ப்படுகைகள் பழைய நகரத்தின் ஆண்கள் அத்தனை பேரையும்
அழகானவர்களாயும் ஆரோக்கியமானவர்களாயும் ஆக்கி வைத்திருந்ததால் சுயம்வரங்கள்
பெருங்குழப்பத்தில் முடிந்தன. வாயிலிருந்து துர்மணம் வீசும் ஆண்களையோ
நீரொழுகும் மூக்கைஉடைய ஆண்களையோ அவச்சொற்களை அள்ளி வீசும் ஆண் குரல்களையோ அங்கே
பிற தேசத்தவர்கள் எவராலும் பார்க்க முடியவில்லை என்று எங்களின் வம்சாவளிக்
கதைகள் சொல்கின்றன. மட்டுமல்ல. பெண்கள் நாவிதர்களை நாடும் வழக்கமோ அல்லது பெண்
நாவிதர்களோ புழக்கத்தில் இல்லாத பழைய நகரத்தில் வெளியே தெரியும் அங்கங்களால்
புருஷர்களின் லட்சணமும் மறைத்து வைக்கப்படும் அங்கங்களால் ஸ்திரீகளின்
சௌந்தர்யமும் பிறர் கண்படத் துலங்கும் எனும் சாமுத்ரிகா லட்சண விதிக்கேற்ப
ஆண்களின் முகத்தில் வளரும் ரோமக் கற்றைகளுக்கு இணையான சக்தியையும் வனப்பையும்
கூடுதலாக நோய் தீர்க்கும் மகத்துவத்தையும் பெண்களின் புஜங்களினடியிலும்
பத்மத்திலும், அரும்பும் ரோம இழைகள் கொண்டிருப்பதால் அவர்கள் அதை அலட்சியப்
படுத்தலாகாது என்னும் என் முதிர்முப்பாட்டனாரின் போதனை இருபத்துமூன்றாம்
தலைமுறை ராஜதானியின் பெண்மக்களின் அறிவில் பிரகாசித்துக் கொண்டிருந்தது.
புருஷனின் கண்களுக்கும் பரபுருஷர்களின் ஊகத்துக்கும் மட்டுமே வசப்படும்
பெண்களின் பவித்திரமான மறைவிடங்களைச் செதுக்கி அலங்கரித்துப் பராமரிக்கும்
பொறுப்பு பெண்ணுக்கு மட்டுமல்லாமல் ஆணுக்கும் உண்டு என்று என்
முதிர்முப்பாட்டனார் அறிவித்தபோது அது ஆண்களிடையே பகிரங்கமான பெரும்
எதிர்ப்பையும் பெண்களிடமிருந்து ரகசியமான ஆசிர்வாதத்தையும் பெற்றுக்கொண்டது.
இவ்விதமான பிரச்சாரங்களை நிறுத்திக்கொள்ளச் சொல்லி அவரை அரசவை நிர்பந்தித்தபோது
உபாத்தியாயர்களும் புரோகிதர்களுங்கூட ரகசியமான பல தருணங்களில் தத்தமது
இல்லத்தரசிகளின் நாவிதர்களாகச் செயல்படுவதுண்டு என்கிற உண்மையை என்
முதிர்முப்பாட்டனார் தைரியமாகப் பொது அரங்கில் எடுத்துச் சொல்லி
கல்விக்கூடங்கள் மற்றும் கோவில்களின் பகையையும் சம்பாதித்துக்கொண்டார்.
(பின்னாளில் இவ்வரங்குகளின் பாத்தியக்காரர்கள்தான் என் முதிர்முப்பாட்டனாரின்
புகழை அபவாதம் எனும் கொடிய நெருப்பு கவ்வி விழுங்கத் துவங்கிய காலத்தில் அது
அணைந்து விடாமல் அவரை முழுக்க எரித்துப் பொசுக்கி விடும் வண்ணம் நெய் வார்த்து
உதவினார்கள்). மறுபுறம் இந்தவிதமான அலங்காரச் சூகங்களையெல்லாம் பறைப் பெண்களும்
அறியும்படி பகிரங்கமாக என் முதிர்முப்பாட்டனார் சொல்லிக்கொண்டிருப்பதைக்
கண்டும் அதன் விளைவாகத் தங்கள் கணவன்மாரின் அலைபாயும் மனங்களை நினைத்தும்
உயர்குடிப் பெண்கள் வேறு திகிலுற்றுப் போயிருந்தார்கள். அவர்கள் தங்கள்
நாபியிலிருந்து பத்மம் வரை படர்ந்து பொலிந்திருக்கும் அடர்ந்த ரோமப் படுகையை
அஞ்சனக்கோட்டைப் போல மெல்லிதானதாகத் திருத்தி வரைந்து கொள்ளட்டும் என்று கூறி
அவர்கள் இழந்து போயிருந்த நிம்மதியை அவர்களுக்கே திரும்ப அளித்தார் என்
முதிர்முப்பாட்டனார். மேலும் மனம் விரும்பாத ஆணுக்குப் பலவந்தமாக மணமுடித்து
வைக்கப்பட்ட பெண்கள் யோனிமுடியை இழைக்கப்பட்ட மரத்தினின்று சிதறும் கீற்றுகளைப்
போல்ச் சுருள் வடிவினதாக செதுக்கிக்கொள்ளட்டும். விரும்பும் ஆணையே துணைவனாகப்
பெற விரும்பும் யுவதிகள் நிதம்பத்தின் மேற்குழலை மீன் வடிவத்தில்
வரைந்துகொள்ளட்டும். குழந்தைப் பேறு அடையாதிருக்கும் மங்கையர் புஜத்தினடியிலும்
தொடைகளின் நடுவிலும் மழைக்குப் பின் புதிதாக வளர்ந்திருக்கும் புற்படுகையைப்
போல மிருதுவாகவும் எப்போதும் ஈரமாகவும் இருக்கும்படி மயிர்க்கற்றையை மிகச்
சிறிதாகக் கத்தரித்துக்கொள்ளட்டும் பரபுருஷனைக் கூட விரும்பும் பெண்கள்
கழுத்திற்குக் கீழ் எங்குமே ரோமமில்லாதபடி தன் உடலைக் கூழாங்கல்லைப் போல
மருவற்றதாக மழித்துக்கொள்ளட்டும். ஒரு சிறுமியின் தலைமுடி அப்பருவத்தின்
இயல்பாகிய மணல் தன்மையிலிருந்து வெள்ளிக் கம்பிகளின் தன்மைக்கு மாறுவதைத்
தொட்டுணர்ந்து அவள் ருதுவெய்தப் போகும் பருவம் நெருங்கி விட்டதைச் சொல்லும்
நாவிதனை அறிந்த தாய்மார்கள் தங்கள் பெண்மக்கள் விரும்பத்தகாத சூழலில்
ருதுரத்தம் வெளிப்பட்டு அவமானப்படப் போவதைத் தவிர்த்துக்கொள்ளட்டும்.

இயற்கைக்கும் அதன் தந்திரங்களுக்கும் பால் பேதமில்லை என்று என்
முதிர்முப்பாட்டனார் சொல்லிவந்த அந்தக் காலகட்டத்தில் பழைய நகரமெங்கிலும்
பெண்கள் தங்கள் கணவர்களையும்காதலர்களையும் தங்களுடைய பிரத்யேக நாவிதர்களாக்கி
நாடு பூராவிலும் பரவச் செய்திருந்தார்கள். அகத்தினழகைப் புகழ்ந்து மழிப்பதையும்
வளர்ப்பதையும் பழித்துப் பேசிய சில பழைய சாஸ்திரங்கள் நாவிதர்களுக்கு எதிரானவை
என்று என் முதிர்முப்பாட்டனார் அறிவித்ததன் பேரில் அவை யாராலும் படிக்கப்
படக்கூடாதென்று இருபத்துமூன்றாம் தலைமுறை அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டன.
அவ்விதமான ஓலைச் சுவடிகள் சில இடங்களில் பெண்களால் உலை நீருக்காகத் தீ வைத்துக்
கொளுத்தப்பட்டன என்றும் சொல்வதுண்டு. இப்படி என் முதிர்முப்பாட்டனாரின் வரவால்
நாவிதர்கள் பல புதிய சலுகைகளையும் பெருமைகளையும் முக்கியத்துவத்தையும் நிறைய
செல்வத்தையும் ஈட்டிக்கொண்டிருந்தபோது என் முதிர்முப்பாட்டனார் மயிர்க்
கண்களின் வழியே சுரக்கும் வியர்வை நீரைக் கட்டுப்படுத்துவதன் மூலம் அந்நீரின்
மணத்தால் எழுப்பப்படும் கனவுகளை மாற்றியமைக்க முடியுமா என்பது குறித்த முடிவற்ற
ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். ஏற்கனவே பிறர் உறக்கத்துக்குள் ஊடுருவும்
கலையைக் கற்றுக்கொள்ள அவர் தன் காளைப் பருவம் முழுவதையும்
செலவழித்திருந்தாரென்று கூறுவார்கள். அப்பருவம் பூராவிலும் அவர் ஒரு கேரள
நம்பூதிரியின் வாத்ஸல்யத்தைப் பெற்ற சீடராக இருந்தார். பிறப்பால் நாவிதரான என்
முதிர்முப்பாட்டனார் தன் குலத்திற்கு மறுக்கப்பட்டிருந்த சாஸ்திரங்களைக்
கற்றுக்கொடுக்கவென்று வர்ணபேதங்களைத் துறந்த ஒரு ஆசானைத் தேடித் தன் குரல்
உடைந்த காலந்தொட்டுச் சில வருடங்கள் வரை அவமானங்களுக்கும் தவறுகளுக்கும்
பயங்களுக்குமிடையே அலைந்து திரிந்து கடைசியில் அபேத ஞானத்தைப் புரிந்து கொள்ளாத
மனிதப் பிறவிகளால் பைத்தியக்காரனென்று கேலி செய்யப்பட்டு நகரத்தை விட்டு
வெளியேறி மரங்களுக்குள் தன்னை மறைத்தபடி வாழ்ந்து கொண்டிருந்த நம்பூதிரி
ஒருவரைக் கண்டுபிடித்து அவரிடம் ஏற்கனவே சீடர்களாயிருந்த இரண்டு பிராமண
யுவன்களோடு சேர்ந்து மூன்றாவது சீடரானார். இந்த இருவரில் முதலாமவர் ஒளியையும்
மணத்தையும் கொண்டு பார்க்க முடியாத வஸ்துக்களின் நிறையையும் எடையையும்
கணித்துச் சொல்லும் ஆற்றல் வாய்ந்தவர்.  இரண்டாமவர் நகர்ந்துகொண்டிருக்கும் ஒரு
பொருளின் வேகத்தையும் திசையையும் கொண்டு அது முன்பு என்னவாக இருந்ததென்பதையும்
பின்பு என்னவாக மாறுவதற்காக அப்படி நகர்ந்துகொண்டிருக்கிறது என்பதையும்
அவதானித்து விட வல்லவர். எனினும்கூட பிற மனிதர்களின் கனவுகளைப் பார்க்கும் கலை
காட்டை விட்டு வெளியேற முடியாமல் நான்கு பேர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக
தன் அதிசயங்களை அறியக் காட்டிக்கொண்டிருக்குமாறு விதிக்கப்பட்டு விட்ட அவலத்தை
எண்ணிக் கலங்கிக்கொண்டிருந்த என் முதிர்முப்பாட்டனார் ஞானி எனப் புகழும் அந்த
நம்பூதிரி கடைசியில் உயர்குலத்தில் பிறந்த தன் பெண்ணைப் பிறப்பால் நாவிதரான என்
முதிர்முப்பாட்டனாருக்கே திருமணம் செய்து கொடுத்து விட்டுத் துயரச் சகதிக்குள்
தன்னை உயிரோடு புதைத்துக்கொண்டு மாண்டுபோக முடிவு செய்த தருணத்தில் பிறர்
கனவுகளைப் பார்க்கும் கலையை அறிந்தவராக உலகிலேயே என் முதிர்முப்பாட்டனார்
ஒருவர் மட்டுமே எஞ்சியிருந்தார். அதோடு கூட கனவுகளோடு நெருங்கிய
சம்பந்தமுள்ளவையென்று கூறப்பட்ட வர்மக் கலையையும் வடமொழியையும் அவர் கசடறக்
கற்றுத் தேர்ந்தார். மற்ற இருவரில் ஒருவர் தன் மற்ற இரு சகாக்களோடும்
அதுவரையில் கற்ற வித்தையைப் பக்குவம் அடையும் முன்பே பரீட்சை செய்து பார்க்க
எண்ணி குருவிற்குத் தெரியாமல் காட்டை விட்டு வெளியேறி நகரத்திற்குச் சென்று
விளையாட்டாக ஒரு நோயாளியின் கனவிற்குள் பிரவேசிக்க முனைந்தபோது நோய்க்கூறுகளை
உண்டாக்கும் கெட்ட கனவுகளின் துர்நாற்றத்திலும் சுழலிழுப்பினுள்ளும் சிக்கி
அதன் உக்கிரத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் புத்திபேதலித்துப் போய் அறையைவிட்டு
வெளியே வந்ததும் அந்த அறை இருந்த நான்கடுக்கு மாளிகையின் நான்காவது
அடுக்கிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்துகொண்டுவிட்டார். இன்னொரு
சீடரும் அதேபோன்ற பக்குவமற்ற பலவீனமான மனோ திடத்தால் அதே விதமான பாதிப்புக்கு
உள்ளாகி நிலைகுலைந்து சாமியாராக புண்ணிய பூமியாம் காசிக்கு ஓடிப் போய்விட்டார்.
அங்கே கனவுகள் அண்ட முடியாத காசியின் அடர்ந்த வனப் பகுதிகளுக்குள் என்றுமே
வெளிவர முடியாதபடி அவர் தன்னை சிறைப்படுத்திக் கொண்டுவிட்டதாக அவரைப் பற்றின
செய்திகள் காற்றில் உலவின. ஆனால் என் முதிர்முப்பாட்டனாரோ வருடங்களுக்குப்
பிறகு தன் சகாவை வேறொர் அசம்பாவிதமான இடத்தில் தன் மதியின்மையால் வலியப் போய்ச்
சந்தித்து அதன் மூலமாகத் தன் வீழ்ச்சியையும் தேடிக்கொண்டார்.

எப்படியிருந்தாலும் அப்போது அதாவது என் முதிர்முப்பாட்டனாரின் காலத்தில் பிறர்
உறக்கத்தினுள் புகுந்து அவர்களின் கனவுகளைக் காணும் கலையில் தேர்ச்சி பெற்ற ஒரே
பண்டிதர் அவரே என்பதாகவே உலகம் அறிந்திருந்தது. அதனால் காளைப்பருவத்தின்
நடுப்பகுதியில் அவர் பிறந்த மண்ணாகிய பழைய நகரத்திற்குத் தன் மனைவியுடன்
திரும்ப வந்து சேர்ந்தபோது அப்படி வருவதற்கு முன்பே மறைந்திருந்தாலும்
விளக்கின் இருப்பு அதன் பிரகாசத்தால் அறியப்படுவதைப் போல அவருடைய கீர்த்தி
சொந்த தேசத்தவரால் ஏற்கனவே உணரப்பட்டுவிட்டது. அவருடைய ஆசானைப் போலவே அவரையும்
பைத்தியக்காரனென்று பாதி நகரம் மறைவாகப் பேசிக்கொண்டிருந்தபோதிலும் மேலும்
அவருடைய பிரச்சாரங்களும் செயல்களும் இருபத்துமூன்றாம் தலைமுறை ராஜனுக்கும்கூட
சமஸ்தானத்தின் தலைவனென்கிற முறையில் தர்மசங்கடத்தைக் கொடுத்திருந்த போதிலும்
பால்பேதத்தையும் திணைபேதத்தையும் பணபேதத்தையும் வர்ணபேதத்தையும் ஞானபேதத்தையும்
மொழிபேதத்தையும் துறந்துவிட்ட அவருடைய ஒளி அரசவையில் பிற கல்விமான்களுக்கிணையாக
அவரை அமர்த்திப் பெருமைப்படுத்தும்படி அவனை நிர்பந்தித்திருந்தது.
மட்டுமல்லாமல் அரண்மனை வளாகத்திற்குள்ளேயே என் முதிர்முப்பாட்டனாருக்கென்று ஒரு
தனிக் குடியிருப்பும் ஒதுக்கப்பட்டிருந்தது. அரண்மனைக்கு வெளியே சென்று சவரம்
செய்து பொருளீட்ட வேண்டிய நிலையில் ராஜன் அவரை விட்டு வைக்கவில்லை.
அவருக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த சிறு அரண்மனை போன்ற அந்த இல்லத்தில் அவர் தன்
மலையாள தேசத்து மனைவியுடனும் அவள் மூலமாக உண்டான வாரிசுகளுடனும் பின்னாளில்
குருவின் சாபத்தால் பழிக்கு ஆளாகி அங்கிருந்து விரட்டியடிக்கப்படும் நாள் வரை
சௌக்கியமாகத் தங்கியிருந்தார். அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு நாவித
நிமித்தம் மட்டுமே தன் அறையை விட்டு வெளியே வருவதல்லாமல் பிற சமயங்களில்
வீட்டினுள் தன் அறையில் அமர்ந்து தான் கற்ற சாஸ்திரங்களையெல்லாம் திரும்ப
திரும்பப் படித்தும் பயிற்சி செய்தும் புதிய வழிமுறைகளை ஆராய்ச்சி செய்துகொண்டே
இருந்தார். அரசவையில் அவருக்கென்று இடப்பட்டிருந்த ஆசனம் பெரும்பாலான
சமயங்களில் அவரால் நிரப்பப்படாமலே இருந்ததென்பார்கள்.  பொதுவாக இம்மாதிரி
அபூர்வமான மனிதர்களே எப்போதும் ஒரு தனியறைக்குள் தங்களையும்
புதைத்துக்கொண்டுவிடுவது எங்கும் நடக்கக் கூடியதுதானே. அவர்கள் அடிக்கடி
தங்களையும் தங்கள் கல்வியையும் வெளிக்காட்டிக்கொண்டு அவற்றைச் சாதாரணக்
காட்சியாக்கிவிட விரும்புவதில்லை. அவர்களைப் போலவே என் முதிர்முப்பாட்டனாரும்
பல ஆச்சர்யமான வித்தைகளில் தேர்ந்தவரென்ற மதிப்பை நிரம்பப் பெற்றிருந்தாரேயொழிய
அவற்றைப் பிறர் முன் தேவையற்ற சந்தர்ப்பங்களில் கேளிக்கைக் கூத்தாக நிகழ்த்திக்
காட்டிப் புகழ் சம்பாதிக்க முனைந்ததேயில்லை. அவருக்குள் கனன்று கொண்டிருத
அவருடைய வித்தைகளின் மங்காத தழல் அவர் முகத்தில் எதிரொளித்த ஜாஜ் வல்யமே
அவருக்குப் போதுமான கீர்த்தியைப் பெற்றுத் தர வல்லதாய் இருந்தது. எதையும்
எங்கேயும் நிகழ்த்திக் காட்டி நிரூபிக்க முயலாமல் அறைக்குள்ளேயே தன்னைப்
பூட்டிக்கொண்டு காலங்கழிக்கும் ஒரு நாவிதனுக்கு அரசவையில் எப்படி இடம் இருக்க
முடியுமென பிற ஞானவான்கள் கேள்வி எழுப்பியபோது ராஜன் சொன்னான்: ஒரு சிறந்த வாள்
வீரனுக்கு சமாதானம் கசப்பான காலமாயிருக்க முடியாது. ஒரு நல்ல மருத்துவனுக்கு
ஆரோக்கியமான மக்கள் எதிரிகளாயிருக்க முடியாது. எந்தச் சிறந்த கல்விமானும் தன்
வித்தையைப் பிரயோகித்துக் குணப்படுத்தும் அளவுக்கு துக்ககரமான ஸ்திதியில்
சகமனிதன் வீழ்ந்துவிடக் கூடாதென்றே விரும்புவான். அதே சமயத்தில் அப்படிப்பட்ட
ஒரு சூழ்நிலையை எப்போதும் எதிர்பார்த்துத் தன் வித்தை துருப்பிடித்து விடாதபடி
அதைத் தீட்டிக் கொண்டேயுமிருப்பான். அப்பையா (அதுதான் என் முதிர்
முப்பாட்டனாரின் பெயர்) இந்த அரசவையில் எப்போதும் இருந்துகொண்டேயிருக்க
வேண்டுமென்பதல்ல என் ஆசை. மாறாக அவர் தேவைப்படும் அபூர்வமான தருணமொன்றில் அவர்
நமக்குக் கிடைக்காத அரிய பொருளாக இந்நகரத்திலிருந்து தொலைந்து போய்விடக்
கூடாது. அவர் நம் அரசவையில் இருப்பதால் பெருமை அவருக்கல்ல நமக்குத்தான் என்று
நான் உங்களுக்குச் சொல்கிறேன். உண்மையில் வித்தைகளை அவர் வெளிக்காட்ட முடியாத
வண்ணம் ஆரோக்கியமான ராஜ்ஜியமொன்றை நான் பரிபாலித்துக்கொண்டிருக்கிறேனென்பதுதான்
அவரோடுகூட என்னையும் பெருமைகொள்ளச் செய்து கொண்டிருக்கிறது.

தூங்கும் பிற மனிதர்களுடைய கனவுகளைக் காணும் தன்னுடைய அபூர்வமான வித்தையை என்
முதிர் முப்பாட்டனார் தன் வாழ்நாளில் நான்கே நான்கு சந்தர்ப்பங்களில்தான்
பிரயோகித்தார். அந்த நான்கு சந்தர்ப்பங்களுமே அவர் வாழ்க்கையில் நான்கு
திருப்புமுனைகளுக்குக் காரணமாய் அமைந்துவிட்டன என்று எங்கள் வம்சாவளிக் கதை
கூறுகிறது. முதல் தடவை தன்னுடன் அந்தக் கலையைக் கற்றுக்கொண்டிருந்த மற்ற இரு
சீடர்களுடன் சேர்ந்து போதிய பக்குவம் பெறுவதற்கு முன்பே வித்தையை ஒரு
நோயாளியிடம் பரீட்சை செய்து பார்க்க முயன்ற அந்த துர்பாக்கியமான சம்பவம்.
நல்லவேளையாக என் முதிர்முப்பாட்டனார் நோயாளியிடம் தன் பிரயோகத்தைத்
துவக்கியபோது காலம் பின்னிரவு சரிந்துகொண்டிருக்கும் நேரமாகக் கடந்துவிட்டதால்
தூங்கிக்கொண்டிருந்த நோயாளியின் கனவுகள் தங்கள் உக்கிரத்தை இழந்து அவன்
உறக்கத்தோடு உறக்கமாக அமிழ்ந்து வடிந்துகொண்டிருந்தன. மற்ற இருவரையும் போலவே
தன் இளமைத் திமிராலும் கல்விச் செருக்காலும் மிகப் பெரும் ஆபத்தைச்
சந்திக்கவிருந்த என் முதிர்முப்பாட்டனார் அன்று தெய்வாதீனமாக அதிலிருந்து
தப்பினார். விஷயம் தெரிய வந்தபோது நம்பூதிரி அவர் மேல் தனிப்பட்ட வாத்ஸலம்
கொண்டிருந்ததால் மற்ற இருவரையும் எண்ணி அளவு கடந்த துயரத்திலும் என்
முதிர்முப்பாட்டனார் தப்பித்ததை எண்ணி மட்டற்ற மகிழ்ச்சியிலும்
அலைக்கழிக்கப்பட்டுவிட்டார். பிறர் அனுமதியின்றி அவர்களுடைய தூக்கத்துக்குள்
நுழைந்து கனவுகளைப்  பார்ப்பது கன்னக்கோல் வைத்துத் திருடுவதற்குச் சமமான
குற்றம் என்று அவர் என் முதிர்முப்பாட்டனாரை எச்சரித்தார். என்
முதிர்முப்பாட்டனாரின் மீதிருந்த அளவு கடந்த அன்பால் அவரை அம்முறை மன்னித்துத்
தன் சீடராக தொடந்து நீடிக்கும் வாய்ப்பையும் அளித்தாரென்று கூறுவர். ஆனால் பல
வருடங்கள் கழித்து வேகத்தின் சுழல்வெளியாகிய காளைப் பருவம் முடிந்து
விவேகத்தின் நந்தவனமாகிய நடுப்பிராயத்திற்குள் பிரவேசித்த காலத்தில் மதியைக்
கெடுத்த ஆசையால் உந்தப்பட்டு குருவின் எச்சரிக்கையை மறந்து தன் வித்தையை என்
முதிர்முப்பாட்டனார் அவர் மனைவியும் குருவின் மகளுமான என் முதிர்முப்பாட்டியின்
தூக்கத்தினுள் அவரறியாமல் பிரயோகித்துப் பார்த்தபோது குருவின் எச்சரிக்கை
சாபமாக மாறி அவரிடமிருந்து கலையை அவர் முற்றாக மறந்து போகும்படி பறித்துக்
கொண்டுவிட்டது. அந்த நான்காவது பிரயோகமே என் முதிர்முப்பாட்டனார் தன் இளமை
முழுவதும் கற்றுத் தேர்ந்த அபூர்வமான வித்தையின் கடைசி பிரயோகமாகவும் அமைய
விதிக்கப்பட்டுவிட்டது. தன்னைத் தீராத பழிக்கும் அவமானத்திற்கும்
ஆளாக்கவிருக்கும் நான்காவது பிரயோகத்தை நோக்கி தான் விரும்பினாலும்
விரும்பாவிட்டாலும் விதி தன்னை உந்திவிடப்போகிறது என்பதை மூன்றாவது
பிரயோகத்தின்போதே என் முதிர்முப்பாட்டனார் அறிந்து கொண்டு விட்டதோடல்லாமல்
அதைப் பலபேர் அறிய பகிரங்கமாகச் சொல்லியும் வைத்தார். வேடிக்கை என்னவென்றால் பல
வருடங்களுக்கு முன்பே அழிவுகளுக்கு வித்திட்டுவிட்ட என் முதிர்முப்பாட்டனாரின்
அந்த துரதிர்ஷ்டம் பிடித்த மூன்றாவது பிரயோகம் அவர் அதைப் பிரயோகித்த காலத்தில்
அழிவின் சமிக்ஞை சற்றுமின்றி அவருக்கு உள்ளூரில் மட்டுமல்லாது கடல் கடந்த
நாடுகளிலும் பெரும் புகழை ஈட்டிக் கொடுப்பதாகத்தான் வந்தமைந்தது. காரணம் அந்தச்
சந்தர்ப்பத்தில் என் முதிர் முப்பாட்டனார் கற்றுக்கொண்டிருந்த வித்தையின்
மகத்துவம் மட்டுமல்லாது அவருடைய புத்தி சாதுர்யமும் ஊகிக்கும் திறமையும்கூட
பளீரென வெளிப்பட்டன. கடல் கடந்த நாடுகளிலிருந்தும் அவருக்கு சீடர்களாகும்
விருப்பத்துடன் ஆயிரக்கணக்கானவர்கள் அவர் காலடியில் வந்து விழும்படியாக அந்தச்
சம்பவம் அமைந்துவிட்டது. ஆனால் என் முதிர்முப்பாட்டனார் அவர்கள் யாரையும் தன்
சீடர்களாக வரித்துக்கொள்ள முன்வரவில்லை. அந்தக் கலையில் தான் இன்னும்
பூரணத்துவம் பெறவில்லை என்று அவர் நினைத்ததே அதற்குக் காரணம். பிறருடைய கனவுகளை
வெறும் பார்வையாளனாக எட்டி நின்று பார்த்துக் கொண்டிருக்கும் அளவோடு அவர்
அப்போது திருப்தி அடையாதவராக இருந்தார். அவர்களின் தூக்கத்துள் மட்டுமல்லாமல்
கனவுகளுக்குள்ளும் ஊடுருவி அந்த உலகின் வினோதங்களைத் தன் விருப்பத்துக்கேற்ப
கட்டுப்படுத்தும் அளவுக்குத் தன் வித்தையில் முன்னேற அவர் விரும்பினார். அந்த
எல்லையை அவருடைய ஆசானான கேரள நம்பூதிரியும் தொட்டிருக்கவில்லை. எனவே அதை அடைந்த
பிறகே அந்தக் கலையைப் பிறருக்கு உபதேசிக்கும் தகுதி தனக்குக் கைகூடுமென்று அவர்
மனதில் வரிந்துகொண்டிருந்தார். அதனால்தான் அவர் ராஜனுக்கும்
முக்கியஸ்தர்களுக்கும் மழிக்கச் செல்லும் நேரங்களைத் தவிர பிற சமயங்களில் தன்
வாரிசுகளைத் தன் மனைவியின் பொறுப்பில் விட்டுவிட்டு அறைக்கு வெளியே எல்லா
வசதிகளையும் செய்து கொடுத்துவிட்டு அறையினுள்ளேயே எந்நேரமும் தன்னை
அடைத்துக்கொண்டவராகவும் அதைப் பற்றி மேலும் மேலும் ஆராய்ச்சிகள் செய்துகொண்டே
இருப்பவராகவும் இருந்தார். மூன்றாவது பிரயோகத்திற்குப் பிறகு அவருடைய புற
இருப்பில் மாற்றம் ஏற்பட்டதேயொழிய வித்தை மேல் அவருக்கிருந்த அவளற்ற வேட்கையை
அபரிமிதமான செல்வமும் புகழும் குறைக்கவோ மாற்றவோ முடியவே இல்லை. ஜெகப்
பிரசித்தமான இந்த மூன்றாவது பிரயோகத்தை சாத்தியமாக்கியதென்ற பெருமையை ராஜன்
மகளின் வினோதமான நோய் பெற்றுக் கொண்டது. அந்த நோயோ இருபத்துமூன்றாம் தலைமுறை
ராஜனின் மனக்குறையிலிருந்து துவங்கியது.

பழைய நகரத்தில் அரச பாரம்பரியத்தின் அனைத்து தலைமுறைகளும் அதுவரை அதன்
ஆண்வாரிசுகளால் தழைத்து வந்தன என்று முன்பு சொன்னேனல்லவா. என்
முதிர்முப்பாட்டனாருக்கு அரண்மனையில் இடங்கொடுத்த இருபத்துமூன்றாவது
தலைமுறையில் முதன் முதலாக சமஸ்தானத்தைக் கட்டியாளவென்று ஒரு பெண் வாரிசு வந்து
பிறந்தது. பிற்காலத்தில் கொஞ்சக் காலம் ராஜ குடும்பத்தின் பெயரை அதன் அத்தனை
ஆண் வாரிசுகளைக் காட்டிலும் அதிகத் திறமையோடும் பரிவோடும் கட்டிக் காத்தவளென்ற
பெருமை அந்தப் பெண் வாரிசுக்குக் கிடைத்ததென்பது பொய்யில்லை. எனினும் பெண்
வாரிசின் மூலமாக அரச குடும்பத்தின் கோத்திரக் கண்ணி அறுந்துவிடுமென்று
ராஜன்தான் துவக்கத்தில் மிகவும் பயந்துபோயிருந்தான். பின்னால் அது
உண்மையாகிவிட்டதென்றும் வைத்துக் கொள்ளுங்கள். ராஜதானியில் வருடங்களுக்குப்
பிறகு தோன்றிய குழப்பமும் அபசகுனங்களும் பஞ்சமும் அதன் எல்லைக்குள்
கலிகாலத்தின் அடைசலும் பெண் வாரிசு மூலமாக வளைசலடைந்த கோத்திரம் சரியான
சடங்குகள் மூலம் நேர் செய்யப்படாததால் விளைந்தவை என்று பிற்காலத்தில்
கணித்தவர்கள் உண்டு. அது நம் கதைக்கும் கவனத்துக்கும் வெளியிலிருப்பவை. ஆனால்
அந்த பயத்தாலேயே ராஜன் தனக்கு ஒரே ஒரு ஆண்வாரிசு வேண்டி தன் இளமைக் காலத்தின்
வீரியம் குறைந்ததாகச் சலிப்புறும் மட்டும் புத்திர காமேஷ்டி யாகங்கள்
செய்துவந்தான். அவனுடைய சோகம் அந்த நாட்களில் படிப்படியாக படுக்கையறையிலிருந்து
வெளியே கசிந்து அரண்மனைத் தாழ்வாரங்களை எட்டிக் கடந்து வாசற்படிகளில் வழிந்து
இறங்கி நாடு முழுவதும் நிரம்பி மூச்சுவிட முடியாதபடி ததும்பிக் கிடந்தது.
மக்களும் மன்னனுக்காக இரங்கி அவருக்கு ஒரு ஆண் வாரிசு கிடைக்க வேண்டி
தனித்தனியே அவ்வித யாகங்களைச் செய்ய முற்பட்டதில் என் முதிர்முப்பாட்டனார்
அங்கே வாழ்ந்த காலத்தில் பழைய நகரம் முழுக்க யாகங்களால் ஆசிர்வதிக்கப்பட்ட ஆண்
மகவுகளால் நிரம்பி வழிந்ததென்று என் கொள்ளுப் பாட்டனார் மூலமாக எங்களுக்குச்
சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் சம்ஸ்தானத்தின் இருபத்துமூன்றாம் தலைமுறைக்கு ஒரு
பெண் வாரிசு மட்டுமே எங்களுக்குச் சொல்லப்படிருக்கிறது. ஆனால் சமஸ்தானத்தின்
இருபத்துமூன்றாம் தலைமுறைக்க்கு ஒரு பெண் வாரிசு மட்டுமே கடவுளால்
அனுக்கிரகிக்கப்படிருந்ததால் ராஜனும் மக்களும் செய்த யாகங்களால் ராஜ
பரம்பரைக்கு மட்டும் பலன் எதுவும் கிட்டவில்லை. இதை முன்பே எதிர்பார்த்துதானோ
என்னவோ ராஜனும் ஒருபக்கம் யாகங்களிலும் தான தர்மங்களிலும் காலத்தையும்
பொருளையும் விரயம் செய்துகொண்டிருந்தபோதிலும் இன்னொரு பக்கம் தன் பெண்ணை
இருபத்தியிரண்டு ஆண்களுக்குச் சமமான வலிமையும் குணவிசேஷமும் கல்வியறிவும்
கொண்டவளாக வளர்ப்பதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்தும் வந்தான். இந்த
நம்பிக்கையின்மையே அவனுடைய யாக முயற்சிகளின் வியர்த்தத்துக்கு ஒரு காரணம்
என்றும் சொல்லுபவர்கள் இருந்தார்கள். ராஜனின் மனக்குறையை ஈடு செய்யும் வண்ணம்
ஓரோர் சமயம் அப்படிக் குறைப்பட்டுக் கொண்டதே மதியீனம் என்று அவர் உவகையோடு
சலித்துக் கொள்ளும் வகையில் அந்தப் பெண் ராஜன் பயிற்றுவிக்கச் செய்த
சாஸ்திரங்கள் அனைத்தையும் பிரமாதமாகக் கற்றுத் தேர்ந்தாள். அந்தக் காலத்தில்
அவளைப் போல ஆட்சிக் கலையையும் போர் சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்த மானுடப்
பிறவிகள் உலகத்திலேயே வேறெங்கும் இருக்கவில்லையென்பார்கள். அந்தப் பெண் என்
முதிர்முப்பாட்டனாரிடத்தில் வர்மக் கலையைக் கற்றுக் கொள்ள ஏற்பாடாகியிருந்தது.
வர்மக்கலை துருத்திய ஸ்தனங்களும் அடங்கிய குறியும் கொண்ட பெண் பிறப்புக்கு ஏற்ற
கலையல்ல என்றும் அதன் நுணுக்கங்கள் பிற போர் சாஸ்திரங்களைப் போலல்லாது பெண்
படைப்புக்கு நேரெதிரான அடங்கிய மார்பும் துருத்திய குறியும் கொண்ட ஆண் உடலின்
அசைவுகளுக்கும் பிரயோகத்துக்குமென்றே பொருத்தி வரும்படி அமையப்பெற்றவையென்றும்
கூறி என் முதிர்முப்பாட்டனார் அதை அந்தப் பெண்ணுக்குக் கற்றுத்தர முதலில்
மறுத்துவிட்டார். ஆனாலும் ராஜனின் வற்புறுத்தலும் அந்தப் பெண்ணின் அடங்காத
ஆர்வமும் அவற்றை அவமானப்படுத்தலாகாதென்னும் கசிவை அவருள் கீறி விட்டுவிட்டது.
வேறொரு காரணமும் அதற்கு இருந்தது. ருதுவெய்திய பிறகு முதன்முதலாக ராஜன் மகள்
தன்முன் சிஷ்யையாகும் ஆர்வத்து என் முதிர்முப்பாட்டனார் குறிப்பிடும் அந்த நோய்
ராஜன் மகள் தன் திருமண வயதை எட்டிய போது ஒரு விபரீதமான ஆசையாக அவளிடமிருந்து
வெளிப்பட்டது. ஏற்கனெவே ஆண் வாரிசு ஏக்கத்தால் நொந்து போயிருந்த சமஸ்தானாதிபதி
அவளுடைய ஆசையைக் கேட்டு இடியுண்ட நாகம் போலாகிவிட்டான். அவனை உடல் நோய் பற்றிக்
கொண்டது முதன்முதலாக அப்போதுதான். அந்தச் சமயங்களில் ராஜனின் மனைவிதான் மிகுந்த
தைரியத்தோடும் சமயோசிதத்தோடும் செயல்பட்டு ராஜ்ஜிய பரிபாலனத்தையும் குடும்பப்
பிரச்னைகளையும் சமாளித்து வந்தாள். உண்மையில் பெண்ணின் திருமணப் பேச்சை முதலில்
துவக்கிவைத்தவள் ராஜனின் மனைவிதான். பதினான்காம் வயது நடந்து கொண்டிருந்தபோது
ஆட்சிக் கலையிலும் போர்க்கலையிலும் உலக நடப்புகளிலும் ராஜனின் பெண்
கற்றுக்கொள்ளக் கூடிய பாடமென்று இனி எதுவும் இல்லையென்றாகிவிட்டபடியால்
அவளுக்குத் திருமணம் செய்து வைத்துவிடுவதென்று அந்த அம்மையார் விரும்பினார்.
ராஜன் கூட தன் பெண்ணின் திருமண விஷயமாக முதலில்  யாதொரு முடிவையும் எடுக்கும்
விருப்பம் இல்லாமலிருந்தான். இருபத்திரண்டு ஆண்களுக்கு இணையான தைரியமும்
சாதூர்யமும் அருளப்பெற்ற அவனுடைய பெண்ணும் தன் திருமணத்தில் ஆர்வமில்லாதவளாகவே
தன்னைக் காட்டிக் கொண்டிருந்தாள். அந்த நிலையில் ராஜனின் மனைவியே இருவரிடமும்
பேசி ஒரு பெண் திருமணம் ஆகாமல் தன் பதினைந்தாம் பிராயத்தைத் தாண்டுவது
குலநாசத்தை விளைவிக்கும் என்பதையும் எடுத்துக் கூறி இருவரையும் சம்மதிக்க
வைத்தாள். தன் பெண்ணின் கணவனால் ராஜ குடும்பத்தின் கோத்திரம் துண்டிக்கப்படக்
கூடுமென்று அந்த விஷயத்தைப் பற்றிப் பேசவே பயந்துகொண்டிருந்த ராஜனும் அதைவிடப்
பெரிய பாவம் ஒரு பெண்ணுக்கு மோட்சத்துக்கு ஒப்பான கன்னி கழியும் சடங்கைத்
தடுத்து நிறுத்துவதென்று அறிந்து தன்னைச் சமாதானப்படுத்திக்கொண்டான். ராஜனின்
பெண்ணும் தன் திருமண ஏற்பாட்டுக்குத் தடையேதும் கூறவில்லை. ஆனால் தனக்கு
வாய்க்கப் போகிற கணவன் குரூபியாகவும் ரோகியாகவும் இருக்க வேண்டுமென்று அவள்
நிபந்தனை விதித்தாள். மதி நுட்பத்திலும் மனோதிடத்திலும் இருபத்திரண்டு
ஆண்களுக்கு இணையான ஆற்றல் வாய்க்கப் பெற்றப் பெண் ஏன் இப்படிப் பேசுகிறாள்
என்பது  யாருக்குமே புரியவில்லை. இதுதான் ராஜன் மகளை பீடித்த வினோதமான நோய்.
அவளோ பிரமாதமான அழகி. அவளுடைய பச்சையொளி உமிழும் கண்களின் ஜொலிப்பு
வர்மக்கலையின் அடிப்படையைத் தகர்த்துவிட்டதென்று என் முதிர்முப்பாட்டனார்
புகழ்ந்து பேசுகிறார். ராஜ்ய பரிபாலனம் மீதான நேரடிப் பயிற்சிக்காக அவள் தன்
தந்தையுடன் நாட்டின் பல பகுதிகளுக்குப் பயணம் போவதுண்டு. அந்தக் காலங்களில்
அவள் உடலின் வாசனையும் தண்மையும் காற்றில் கலந்துவிட்டால் அந்தக் காற்று
நாட்டின் எந்தப் பகுதிகளில் பட்டுப் பரவுகின்றதோ அந்தப் பகுதிகள் மழை
இல்லாமலேயே முப்போக விளைச்சலுக்கு மூன்று வருடங்கள் தாக்குப்பிடிக்க வல்லவையாக
மாறின என்பார்கள். அந்தப் பெண்ணின் திருவுருவத்தை வரைய முடியாதென்று
அரண்மனைக்கு வருகை தந்த உலகின் தலை சிறந்த சைத்ரீகனும் கைவிரித்து விட்டபடியால்
அவளுடைய உருவப்படம் எதையும் அரண்மனைச் சுவர்களில் மாட்டி வைக்க முடியவில்லை.
பின்னாளில் நிலைமை சகஜமாகி யாவும் சுபமாக முடிந்த பிறகு அவளுக்குத் தகுந்த
வரனைத் தேடி பல தேசங்களுக்குப் புறப்பட்டுப் போன தூதுவர்கள் தங்கள் கையில்
அவளின் பார்வையொளியையும் குரலையும் சிமிழ்களில் அடைத்து எடுத்துச் சென்றதாகவும்
சொல்லுவார்கள். அந்தப் பெண்ணின் அழகைச் சொல்லும் எந்த வசனமும்
மிகைப்படுத்தப்பட்டது அல்ல. ராஜனின் பெண்ணுக்கு இணைதேடி பதினாறு திசைகளுக்கு
அனுப்பப்பட்டவர்கள் அவ்வாறு அனுப்பப்படும்முன் அரண்மனையின் தலைசிறந்த
கவிஞர்களிடமும் உபன்யாசகர்களிடமும் அவள் அழகை எடுத்து சொல்லப் பயிற்சி
பெற்றுக்கொண்டார்கள். வர்ணனைகளிலும் கட்டுக்கதைகளிலும் கலந்து காலத்தை ஊடுருவி
வளர்ந்து பிரகாசித்துக் கொண்டேயிருக்கிறது அவள் அழகு. அப்படிப்பட்ட அழகுள்ள
ராஜனின் மகள் தனக்கு வாய்க்கவிருக்கும் கணவன் ரோகியாகவும் குரூபியாகவும் இருக்க
வேண்டுமென்று ஏன் விரும்புகிறாள் என்று ராஜனின் மனைவி சகல சாஸ்திர
பண்டிதர்களுடன் கூடி விவாதித்தாள். ராஜனோ வளைசலுற்ற கோத்திரமாகவாவது வளரும்
வாய்ப்புப் பெற்றிருந்த பழைய நகரத்தின் ராஜ்ஜிய பரிபாலனம் வாரிசேயின்றி
துண்டிக்கப்படப்போகிறது என்று தன் நோய்ப் படுக்கையில் புரண்டு சதாசர்வகாலமும்
புலம்பிக் கொண்டேயிருந்தான். துவக்கத்தில் தன் பெண்ணின் வினோதமான ஆசையை ராஜனின்
மனைவி சட்டை செய்யவில்லை. யவ்வனத்தில் புத்தம் புதிய ரத்தம் பிறரிடம்
அதிர்வையும் கவனக்குவிப்பையும் ஏற்படுத்தும் செயல்களைச் செய்ய விழைவது சகஜம்
என்று அவள் அதை ஒதுக்கிவிட்டாள். நான்காவது தடவையாக திருமணப் பேச்சை எடுத்த
போதும் அந்தப் பெண் தன் நிபந்தனையை மாற்றமின்றி முன்வைக்க முனைந்ததால் அவள்
நடவடிக்கைகளைக் கண்காணிக்க ஆட்களை நியமித்து வைத்தாள். அரண்மனையின் உச்சி
அடுக்கிலிருந்த தன் படுக்கையறைக்குள் துயிலப் போகும் நேரம் வரை ராஜன் மகள்
தீவிரமாக கண்காணிக்கப்பட்டாள். படுக்கையறையின் பக்கத்து அறையில் அவளுக்குத்
துணையாகப் படுத்துக்கொள்ளும் தோழியும்கூட அந்நிய ஆடவர் யாரையும் நிசியின்
எந்தச் சாமத்திலும் பார்க்கவில்லையென்று சத்தியம் செய்தாள். எனவே திருமணத்தை
ஒத்திப்போடும் ரகசியம் எதுவும் தன் பெண்ணின் ஆபத்தான பருவத்தைப்
பாதிக்கவில்லையென்று ராஜனின் மனைவி தன்னைத் தேற்றிக்கொண்டாள். ஆனால் அது
உறுதிப்பட்டதும் அவளுக்கும் ராஜனின் நோய் தன்னைத் தொற்றிக்கொள்ளலாமென்ற பயம்
வந்துவிட்டது. பதினோறாவது தடவையாக திருமணப் பேச்சை எடுத்தப் போதும் நம் பேரழகி
சற்றும் இரக்கமின்றி தன் நிபந்தனையை முன் வைக்க முற்பட்ட போது நோய்ப்
படுக்கையில் முனகிக்கொண்டிருந்த ராஜன் வெளியே ஓடி வந்து அவளுடைய கழுத்தை
நெரித்துக் கொன்றுவிட எத்தனித்தான். தான் குற்றம் செய்யாதவளென்றும் குரூபியும்
ரோகியுமான எந்த ஆணைத் தன் பெற்றோர்கள் கை காட்டினாலும் அவனைத் தன் கணவனென்று
வரித்துக்கொள்ளத் தயாராக தான் இருப்பதாகவும் அழகான ஆண்களைக் கண்டால் ஏனோ
காரணமற்ற ஒரு குமட்டல் தன் வயிற்றிலிருந்து கட்டுப்படுத்த முடியாதபடி பீறிட்டு
எழுகிறதென்றும் அதன் காரணம் தனக்கே தெரியவில்லை என்றும் அந்தப் பெண் சொல்லி
அழுதாள். தான் கதியற்றப் பெண்ணாகி விட்டதாகக் கூறி கண்ணீர் விட்டாள். ராஜ
பரம்பரையின் இருபத்துமூன்று தலைமுறைகளில் அப்படிக் கண்ணீர் விட்டு அழுதவர்
யாரும் இல்லை. விஷயம் அவளுக்கு மிகப் பிரியமான ஒரே ஆண்மகனான என்
முதிர்முப்பாட்டனாரின் காதை எட்டுவதற்கு முன் ராஜனின் மனைவி தன்னாலான எல்லா
உபாயங்களையும் செய்து பார்த்துவிட்டிருந்தாள். அந்தப் பெண் பிறந்த
நட்சத்திரமும் புஷ்பவதியான நட்சத்திரமும் மறுபடி புரட்டி பார்த்துக்
கணிக்கப்பட்டன. அற்புதமான அவள் ஜாதகத்தில் தோஷமென்று ஒரு வழிப்போக்கன்
சொல்லிவிட்டாலும் உடனே எப்போதும் எரிந்துகொண்டிருந்த புத்திரகாமேஷ்டி யாக
நெருப்போடு தோஷ நிவர்த்திக்கான யாக நெருப்பும் மூட்டப்பட்டு கொழுந்து
விட்டெரியத் துவங்கியது. புறவயமாக அவள் உடலில் நோயின் எந்த அடையாளத்தையும் காண
முடியாமலும் நிதம்பத்தின் ரோமச் சுழிகளினுள் வெண்ணிறமாய் அது உறைந்திருந்ததை
ஊகித்தறியும் திறனற்றவர்களாயுமிருந்த பல தேசங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட
வைத்தியர்கள் யாவரும் கைவிரித்த பிறகு கடைசியாக அனைவரும் என்
முதிர்முப்பாட்டனாரின் உதவியை நாடி வருவதற்குள் ராஜன் மனைவி பயந்தபடியே
பெண்ணின் பதினைந்தாம் பிராயம் முடிந்துவிட்டது.

மகளின் பிரச்னை பற்றி பேசியழைப்பதற்குத் தலைமை மந்திரியை அனுப்பினால் அதை
மரியாதைக் குறைவாக அவர் எடுத்துக் கொண்டுவிடக் கூடுமென்று அந்த தினத்தில்
ராஜனின் மனைவியே நேரில் என் முதிர்முப்பாட்டனாரின் குடியிருப்புக்கு
வந்திருந்தார். அவர் இல்லத்தின் தனியறைக் கதவு அவரை வெளியை அழைத்துத்
தட்டப்பட்டதும் ராஜன் மகளின் பதினாறாம் பிராயத்தைத் துவக்கியதுமான அந்த நாள்
அவருடைய அழிவைத் துவக்கிவைத்த முதல் நாளுமாகுமென்று வருடங்களுக்குப் பிறகு
பிரசித்தி பெற்ற இந்தக் கதையை எழுதப் புகுந்த பலரால் அந்த நிகழ்ச்சி
கணிக்கப்பட்டதற்கேற்ப பின்னாளில் வேறு பல காரணங்களால் திசை மாறிப்
போய்விட்டாலுங்கூட துவக்கத்தில் என் முதிர்முப்பாட்டனாருடைய புகழ் கடல்
கடந்தும் பரவி நிலை பெறக் காரணமாயிருந்த அழைப்பாக அது அமைந்துவிட்டது என்பது
உண்மைதான். தன் வாழ்நாளில் அதற்கு முன்பும் பின்பும் எந்தக் காரணத்தை
முன்னிட்டும் அரண்மனை வளாகத்தைத் தவிர வேறெங்கும் முகதரிசனத்தைக் காட்டியருளாத
ராஜனின் மனைவி தன் வீட்டில் எழுந்தருளியது தனக்கும் தன் குடும்பத்திற்கும்
ராஜகுடும்பம்

இவற்றுக்கான வைத்தியத்தில் அபூர்வ மூலிகைகளின் பிரயோகமும் சில சமயம் நோயாளிக்கு
பதிலாக மூலிகைகளைச் சவைத்துச் சாப்பிடும் வைத்தியரின் மூச்சுக்காற்றை
நோய்வாய்ப்பட்டவர் சுவாசித்தலும் முக்கியப் பங்காற்றுகின்றன. ராஜனின்
பெண்ணுக்கு இவ்வகை வைத்தியம்தான் முதலில் கொடுக்கப்பட்டது. ஆண்களுக்கே உரிய
வர்மக் கலையை வலுக்காட்டாயமாக விரும்பிக் கற்றுக்கொண்ட காலத்தில் அதன்
அடவுகளோடு ஒத்துப் போகாத பெண்ணுடலின் மென்நரம்பு ஏதேனும் பிறழ்ந்து
நினைப்பதற்கு நேர்மாறான வார்த்தைகளை அவளுக்குள்ளிருந்து கிளப்பிவிடுகிறதோ
என்கிற சந்தேகத்தில் அதை முயன்று பார்த்தார் என் முதிர்முப்பாட்டனார். இவ்வகை
வைத்தியம் முப்பத்து மூன்று நாட்கள் தொடர்ந்து நடந்தது. ராஜன் பெண்ணின் வினோத
வார்த்தைகள் முதல் வகை துர்மணத்தால் விளைந்தவையல்ல என்று முடிவான பிறகு
இரண்டாவது வகையான ஞாபகத்திலிருந்து குரலைத் தாக்கும் கிருமிகள் அவளைப்
பீடித்திருக்கக் கூடுமென்ற கணிப்பின் பேரில் மூன்று நாட்கள் இடைவெளிக்குப்
பிறகு அதற்கான வைத்தியம் துவங்கியது.

ரத்த சம்பந்தமுள்ள மூதாதையரின் துர்மரணத்துக்கு ஒரு வாசனை உண்டென்பது மாந்திரீக
சாஸ்திரத்தின் அடிப்படை பூர்ணத்துவம் பெறாத சாவின் வாசனை சில தலைமுறைகளேனும்
காத்திருந்து பிறகு அழகிலும் அறிவிலும் பூர்ணத்துவம் பெற்ற தன் சந்ததியொன்றால்
நுகரப்படும்போது அமைதியுறுமென்பார்கள். ரோகியாகவும் குரூபியாகவும் பிறந்து
இறந்து போன ராஜன் ஒருவன் ராஜ குடும்பத்தின் மூன்றாம் தலைமுறையில் பதின்மூன்று
வருடங்கள் வாழ்ந்திருந்தான். அந்த ராஜனின் மரணத்தின் மணம் நமது பேரழகியின்
ஞாபகத்துக்குள் புகுந்து ஊடுருவியக்கக் கூடுமென்கிற ஊகத்தில் இரண்டாவது
வைத்தியமுறை மேற்கொள்ளப்பட்டது. இவ்வகை நோய்களை உண்டாக்கும் கிருமிகள்தான்
ஞாபகத்தின் நோய்க்கிருமிகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை நோயாளியின் அறிவை ஒரு
கெட்டியான நீர் வளையம் போலச் சுற்றிச் சூழ்ந்து கொள்கின்றன. இம்மாதிரி
ஞாபகத்தின் வளையத்துக்குள் சிக்கிக் கொண்ட நோயாளியின் குரல் மூலமாக
உடனடியாகவும் பிறகு புறத் தோற்றத்தினூடு கொஞ்சம் கொஞ்சமாகவும் அந்தக் கிருமிகள்
தன்னுடைய பழைய திட வடிவை அடைந்து விடுகின்றன. அதாவது ஞாபகமாய் உட்புகுந்த
கிருமிகள் மீண்டும் கடந்த காலத்தை நோயாளியின் கண்முன்னே நிகழ்த்தத்
துவங்கிவிடுகின்றன. நிகழ்காலத்தைப் பார்வையிலிருந்து மறைத்து விடுகின்றன.
ஞாபகத்தின் நோய்க் கிருமிகள் உட்புகும் வழிகளையும் அவற்றின் போக்குகளையும்
அவற்றோடு மயிர்க்கண்களுக்கு உள்ள தொடர்பையும் அறிந்தவரும் தேர்ந்த நாவிதருமான
என் முதிர்முப்பாட்டனார் ராஜன் மகளின் கூந்தலின் நுனிப் பகுதியையும் காது
மடல்களின் மறைவில் சுருண்டு கொண்டிருக்கும் மயிர்க்கற்றைகளையும் இடது
புறங்கையின் மேல் அரும்பியிருந்த ரோமத்தூவிகளையும் கத்தரித்து எடுத்துவிட்டார்.
சில உக்கிரமான ரகசிய மந்திர உச்சாடனங்கள் மூலமாகவும் அபூர்வச் செடி வகைகளை
எரிப்பதாலுண்டாகும் நெடியின் மூலமாகவும் நோயாளியின் அறிவைச் சுற்றி
வளைத்துக்கொண்டிருக்கும் ஞாபக வளையத்தைக் கரைக்க வேண்டியிருக்கிறது. சில
கடினமான வைத்திய முறைகளின் பிரயோகமும் தேவைப்படலாம். ஆனால் ராஜன் பெண்ணுக்கு
ஏற்பட்டிருந்தது அவ்வகை நோயல்ல என்பது துவக்கத்திலிருந்தே என்
முதிர்முப்பாட்டனாருக்குத் தெரிய வந்திருந்ததால் கடினமான வழிகளை அவர்
முயற்சிக்கவில்லை. சந்தேக நிவர்த்திக்காக சில பரீட்சார்த்த முறைகளைக் கையாண்டு
பார்த்து ஞாபகத்தின் நோய்க்கிருமிகள் இருக்கும் தடயம் எதுவும் இல்லைஎய்ன்பதைத்
தெரிந்துகொண்டபின் அவர் அந்தப் பெண்ணின் கனவுகளை பார்த்தறிவதைத் தவிர வேறு
வழியில்லை என்னும் முடிவுக்கு வந்தார். இரண்டாம் வகை வைத்தியத்தில் மேலும்
இருபத்திரண்டு நாட்கள் கடந்து போயிருந்தன.  முதல் இரண்டு வகைப் பரிசோதனைகளால்
மிகவும் களைத்துப் போயிருந்த பெண் மீண்டும் தன் இயல்பான கனவுகளைக் காணத்
துவங்கும் திடம் பெறுவதற்கு ஒரு வார காலமாகும் என்றும் அந்த ஏழு நாட்களுக்குள்
தன்னையும் ஆயத்தப்படுத்திக்கொள்ள அவகாசம் தேவைப்படுகிறதென்றும் கூறி
ஐம்பத்தெட்டு நாட்களுக்குப் பிறகு என் முதிர்முப்பாட்டனார் தன் தனியறைக்குத்
திரும்பி வந்தார். அந்த ஒரு வார காலமும் அவர் பித்துப் பிடித்தவர் போல நடந்து
கொண்டார் என்று அவர் மனைவி தன் வாரிசுகள் மூலமாக எங்களுக்குச் சொல்கிறார். அந்த
ஒரு வாரகாலமும் அவர் பித்துப்பிடித்தவர் போலவேதான் நடந்துகொண்டார்.
அரண்மனையிலிருந்து திரும்பி வந்த அன்று தன் தனியறைக்குள் நுழைந்தவர் மறுபடி
எட்டாம் நாள் அரண்மனைக்குக் கிளம்பிச் செல்லும் வரை தன் அறையை விட்டு வெளியே
வரவேயில்லை. சாப்பிடவோ நித்ய கடன்களை நிறைவேற்றிக் கொள்ளவோ முனையவும் இல்லை.
நான் அறையினுள் நுழைவதை அவர் தடுக்கவில்லை. ஆனால் ஒரு வாரகாலத்தில் ஒரே ஒரு
கேள்வியைத் தவிர வேறெதையும் அவர் என்னிடம் கேட்கவில்லை. அவர் தான் கற்ற ஏடுகளை
மீண்டும் முதலிலிருந்து படிக்கத் துவங்கியிருந்தார். அவை பரண்களிலிருந்து சிறு
தூரலாய் எந்நேரமும் அவர்மேல் உதிர்ந்த வண்ணமே இருந்தன. அவரோ மழையிலும்
பனியிலும் சதா நனைந்து வாடுபவர் போல அதன் பொழிவில் நடுங்கிக் கொண்டேயிருந்தார்.
யார் யாருடைய கனவுகளை எந்தச் சூழ்நிலையிலும் பார்க்கக் கூடாது என்கிற
பாடப்பகுதியின் பக்கங்களை அவர் விடாமல் திரும்பத் திரும்பப் புரட்டிப்
பார்த்துக்கொண்டிருந்தார். அவர் நடவடிக்கைகள் எனக்கு ஒரே சமயத்தில் அரண்மனை
விதூஷகனையும் அரச குருவையும் நினைவுக்குக் கொண்டு வந்தன. அவர் தன்
அறைக்குள்ளேயே அந்த ஏழு நாட்களுக்குள் குறுக்கும் நெடுக்குமாக மூவாயிரம் யோசனை
தூரம் நடந்திருப்பார். ஏழாயிரம் தடவைகளாவது குறிப்பிட்ட அந்தப் பாடப் பகுதியைப்
படித்திருப்பார். எனினும் யவ்வனப் பருவத்திலிருக்கும் ஒரு கன்னிப் பெண்ணின்
கனவுகளைப் பார்க்கலாமா கூடாதா என்பது பற்றி அவரால் தெளிவான ஒரு முடிவுக்கு வர
முடியவில்லை. கடைசியில் தன் கல்வியின் பெருமையிலும் தன் மேதமையின் ஆழத்திலுமே
நம்பிக்கையற்றுப் போனவராக அவர் அந்தக் கேள்வியை படிப்பறிவற்ற என்னிடம் கேட்கும்
அளவுக்கு பரிதாபத்துக்குரியவராக ஆகிவிட்டார். அதனால் தன் பாண்டித்யத்தின்
தூய்மை கெட்டு விடுமென்று அவர் மிகவும் பயந்துபோயிருந்தார். சம்போகத்துக்கு
ஒப்பான ரகசியத் தன்மையும் வேகமும் வாசனையுமுடைய ஒரு யவ்வனப் பெண்ணின் கனவுகளை
அவள் சம்மதமிருந்தாலும் வைத்தியத்தின் பொருட்டேயென்றாலும் பார்ப்பது சாஸ்திர
நியதிக்குட்பட்டதுதானா என்று கேட்டு அவர் ஒரு குழந்தையைப் போல் என் முன்
கதறியழுதபோது பத்து இளம் பெண்களுக்கு முன் நிர்வாணமாக நிறுத்தி
வைக்கப்பட்டுவிட்டதைப் போல அவருடைய ஆஜானுபாகுவான உடல் இரண்டடி உயரமாகக்
குறுகிப் போயிருந்ததைப் பார்த்தேன். ஆனால் அந்தக் கேள்விக்கு என்னாலும் பதில்
சொல்ல முடியவில்லை. கடைசி வரை அந்தக் குழப்பத்துடனேயேதான் அவர் அரண்மனைக்குப்
புறப்பட்டு சென்றார். அந்த வித்தையைக் கற்றுக்கொண்டதே குற்றமென்று முதன் முதலாக
அன்று அவர் தன்னையே சபித்துக்கொண்டதையும் நான் கேட்டேன். தெய்வத்தைத் தொழுது
சமாதானப் படுத்திக் கொள்வதைத் தவிர வேறெந்த வழியும் எங்களுக்குத் தெரியவில்லை.

ஆனால் தெய்வாதீனமாக அனைத்தும் நல்லபடியாகவே நடந்து முடிந்தது. மூன்று நாட்கள்
கழித்து கரை கடந்த புகழைப் பெற்றுத் தந்த வெற்றியுடனும் அதற்கு மேலாகத் தன்
பாண்டித்யத்தின் தூய்மை களங்கப்பட்டுவிடவில்லையென்ற நிம்மதியுடனும் என்
முதிர்முப்பாட்டனார் தன் தனியறைக்குத் திரும்பி வந்தாரென்பதுடன் இந்தக் கதை
முடிவடைகிறது. சொல்லவொணாத மனக் கிலேசத்துடன் முதல் நாள் இரவு அதுவரை ஆண் வாடையே
பட்டிராத ராஜன் மகளின் படுக்கையறைக்குள் அவள் கனவுகளைக் கண்டறியும் நிமித்தமாக
உள்ளே நுழைந்த என் முதிர்முப்பாட்டனார் மறுநாள் காலை அறைக் கதவைத்
திறந்துகொண்டு வெளியே வந்தபோது தெளிவும் அமைதியும் தீர்க்கமும் அவர் முகத்தில்
குடி கொண்டிருந்தன என்று அவரைப் பார்த்தவர்கள் வியந்தார்கள். இரண்டாம் நாள்
இரவு ராஜனின் பெண்ணுக்குத் துணையாக எப்போதும் படுக்கையறையுடன்
இணைக்கப்பட்டிருக்கும் சிறிய அறையொன்றில் படுத்துக்கொள்ளும் அவள் தோழிக்குப்
பதிலாக தான் படுத்துக்கொள்ள விரும்புவதாகக் கூறினார் என் முதிர்முப்பாட்டனார்.
பலருக்கு இது சந்தேகத்தையும் ராஜ குடும்பம் அவமானப்படுத்தப்படுவதான உணர்வையும்
கொடுத்ததாம். ஆனால் அவருடைய விநோதமான போக்குகளையும் ஞான முதிர்ச்சியையும் மனப்
பக்குவத்தையும் நன்கறிந்த ராஜனின் மனைவி அதற்கும் உடனே ஒப்புதல்
அளித்துவிட்டாள். எனவே இரண்டாம் நாளிரவு ராஜனின் பெண் அவளுடைய படுக்கையறையிலும்
என் முதிர்முப்பாட்டனார் அதோடு இணைந்த கதவுகளற்ற அடுத்த அறையில் திரைச்சீலை
மறைப்பின் பின்னேயும் படுத்துக்கொள்ளக் கழிந்தது. மறுநாள் காலை
படுக்கையறையிலிருந்து ராஜனின் பெண் விழித்தெழும் முன்பே எழுந்து வெளியே
வந்துவிட்ட என் முதிர்முப்பாட்டனார் வைத்தியம் முடிந்துவிட்டதென்று
அறிவித்தார். அவருடைய அற்புதத்தை நேரில் பார்த்து அறிவதற்கென்று கடல் கடந்தும்
வந்திருந்த ஆர்வலர்கள் அவர் முகத்தை முன்னெப்போதும் பார்த்துப் பழகியிராததால்
பேருவகையோடு வெடித்துச் சிதறிய அவர் சிரிப்பின் மின்னல் தாக்கி கண்களை இழந்து
நாடு திரும்பினார்கள். மூன்றாம் நாள் காலையில் அப்படி வெளியே வந்த என்
முதிர்முப்பாட்டனார் ராஜன் மனைவியிடம் புலி வேட்டைக்கான  பாதி ஆயத்தங்களோடு ஒரு
இருபது பேர் மூன்றாம் நாள் இரவு தன்னோடு ராஜன் பெண்ணின் படுக்கையறையில் தங்க
அனுமதித்து விட்டால் மருந்தும் தயாராகி விடுமென்றும் கூறினார். திருமணமாகாத
பெண்ணின் படுக்கையறையினுள் அந்நிய ஆண்கள் நுழைவது கோத்திரம் பிறழ்வதை விடப்
பெரிய பாவமென்று ராஜன் புலம்பினான். பின்னாளில் என் முதிர்முப்பாட்டனாரை
அடியோடு வெறுக்கத் தலைப்பட்ட ராஜன் மனைவியோ அந்த நேரத்தில் தன் பெண்ணின் நோய்
தீர எதுவும் செய்வதற்கு ஆயத்தமாக இருந்தாள். மேலும் பாவ நிவர்த்தியென்று ராஜனை
திருப்தி செய்வதற்காக பெண்ணின் தகப்பனும் அன்று இரவு பெண்ணின் படுக்கையறையில்
தங்கிக்கொள்ளலாமென்றும் முடிவு செய்யப்பட்டது. ஆக ராஜன் மகளின் நோய் கூட
இருபத்திரண்டு ஆண்களுக்குச் சமமான வல்லமை உடையதாய் இருந்ததென்று பாரம்பர்யக்
கதைகள் அவளைப் பற்றி வேடிக்கையாய் குறிப்பிடுவதுண்டு. வைத்தியம் முடிவடைந்து
என் முதிர்முப்பாட்டனார் தன் குடியிருப்புக்குக் கிளம்ப அனுமதி கோரி ராஜன் முன்
நின்றபோது இரண்டு நாட்கள் அறைக்குள் நடந்தது என்ன என்பதை அனைவருக்கும் தெரியச்
சொல்லுமாறு ராஜன் மனைவி அவரை வேண்டிக்கொண்டாள். அது தன் கடமையென்பதை
ஒத்துக்கொண்ட என் முதிர்முப்பாட்டனார் ஆனால் வைத்தியம் பூரண பலனளித்திருக்கிறதா
என்பதைப் பார்க்கும் முன் அதன் வழிமுறைகளை விவரிப்பது வித்தையின் தர்மமாகாது
என்பதால் அவர்களைச் சில தினங்கள் பொறுத்திருக்கும்படி வேண்டிக்கொண்டு தன்
இருப்பிடம் வந்து சேர்ந்தார். படுக்கையறைக்குள்ளிருந்து வெளிப்பட்ட புலியைப்
பார்த்து நீயா என்று கேட்டு மயங்கி விழுந்த ராஜனின் பெண் அதிர்ச்சியிலிருந்தும்
தன் கனவுகளிலிருந்தும் விடுபட்டு மீண்டும் தன் பழைய பொலிவை எட்டி விட்டாளென்பதை
எழுபத்தியிரண்டாம் நாள் பத்தொன்பதாவது தடவையாக அவளுடைய திருமணத்தைப் பற்றி அவள்
தாய் பேசியபோது அழகிய ஆண்களைப் பற்றி அப்படி வெளிப்படையாகப் பேசும் நேரங்களில்
தன்னை வெட்கமும் சந்தோஷமும் பிடித்தாட்டுவதாக அவள் கூறியதாக ராஜன் மனைவி
மூலமாகத் தெரிந்துகொண்ட பிறகே தன் வித்தையும் யூகமும் தக்க பலனை அளித்துவிட்டன
என்று திருப்தியடைந்த என் முதிர்முப்பாட்டனார் நடந்த நிகழ்ச்சிகளை அரண்மனையும்
நாடும் அறியச் சொல்வதற்கு ஒத்துக்கொண்டு மீண்டும் அரண்மனைக்கு மரியாதைகளுடன்
அழைத்து வரப்பட்டு உரிய ஆசனத்தில் அமர்த்தப்பட்டார். அதற்கு முன்பாகவே என்
முதிர்முப்பாட்டனாரின் வைத்தியம் முடிவுற்ற மூன்றாம் நாளிரவில் ராஜன் தன்
மனைவியிடமும் இன்னும் சில நாட்களில் கொலைவாளுக்கு இரையாகி மாளவிருக்கிற இருபது
வேடர்குல ஆண்கள் தங்கள் மனைவிகளிடமும் உறவினர்களிடமும் அண்டை அயலார்களிடமும்
அந்த இரவின் வியத்தகு அனுபவத்தைக் கூறி அதற்கு முந்தைய இரண்டு நாட்களின்
நிகழ்ச்சிகளைக் கேட்டறியும் ஆர்வத்தைப் பேரவாவாக வளர்த்துவிட்டிருந்தார்கள்.
அவர்கள் தங்கள் கற்பனைக்கும் கதை சொல்லும் திறமைக்கும் கேட்பவர்களின்
ஆர்வத்துக்கும் ஏற்பக் கூட்டியும் குறைத்தும் வர்ணனைகளால் அலங்கரித்தும் தங்கள்
அனுபவங்களைச் சொல்லியபோது ஒரே அனுபவம் தனித்தனிக் கதைகளாக உருவம் பெற்று அந்த
நாளிலிருந்தே இருபது இரவுகளில் இருபது சாமான்யர்களின் சாகஸங்களென்ற வாய்மொழிக்
கூட்டுக் கதைப்பாடலாக நாட்டு மக்களிடையே புழங்கிப் பரவத் துவங்கியது. ஒவ்வொரு
கதையிலும் அதைச் சொன்னவனின் ரகசிய ஆசைகளுக்கேற்ப அந்த இரவின் ஒவ்வொரு அம்சம்
பிரதானமாக வெளித் துலங்கியது. ஒரு கதையில் ராஜன் மகள் அதன் கதாநாயகியாக
இருந்தாளென்றால் இன்னொரு கதையில் அவளைப் பற்றின பிரஸ்தாபமே இல்லாதிருந்தது.
அதற்குப் பதிலாக கொம்பிசைக் கருவியொன்றின் துளையை மாந்தளிரென நினைத்து அதிலேயே
துயின்று இசையாய் மாறிப் பறந்துபோன பொன்வண்டு ஒன்று கதையின் பிரதானமான
பாத்திரமாய் மாறியது. இன்னொரு கதையில் அதை கொம்பிசை கடும் புலியொன்றைக் காற்று
வெளியில் வரைந்து அதற்கு உயிர் தந்தது. புதிதாகத் திருமணம் செய்து கொண்ட
வேடனொருவன் முழவிசையின் உச்சபட்ச அதிர்வினூடே கிளர்ந்த தன் புதுமனைவியின்
ஸ்பரிசவுணர்வு பீறிடச் செய்த சுக்கிலத்தின் கதையை அவளுடன் தனியே பேசிப்
பகிர்ந்துகொண்டான். ராஜனின் அரண்மனை ஒரு வேடன் கதையில் பெருங்காடாக மாறியது.
அதில் அவன் துரத்திய விலங்கு பூவுலகிலெங்கும் காணக் கிடைக்காத பொன்னிறப்
புள்ளிகளைத் தன் உடலிலும் கேட்கக் கிடைக்காத துயரத்தைத் தன் குரலிலும்
கொண்டிருந்தது.  அவன் அதை அம்பெறிந்து கொல்வதற்குப் பதிலாக பூர்வ ஜென்மத்தில்
அது தானாகவும் தான் அதுவாகவும் இருந்த கதையை உரக்கக் கூறித் தன் இடுப்பில்
கனன்றுகொண்டிருந்த காயத்தைக் காட்டிக் கொன்றான். இறந்தபின் அந்த வினோத விலங்கு
ராஜனாய் மாறியது. வனம் மீண்டும் அரண்மனையாகவும் நிஜ ராஜன் தானாகவும் மாற அவன்
தன் வீடு வந்து சேர்ந்தான். நிறைந்த மக்கட் செல்வத்தைப் பெற்றிருந்த முதிய
வேடனொருவனின் கதையில் இளவரசியின் படுக்கையறையை நிறைத்து வழிந்த இசையாய் அவனுடைய
பெண்மக்கள் மாறிப் பறந்துகொண்டிருந்தார்கள். அவர்களுக்கான இணையிசையைத் தேடிச்
செல்ல அவர்களுடைய சகோதரர்கள் படுக்கையறை விதானத்தைத் தங்கள் தகப்பனின்
தலைமையில் முழவினால் பறித்தெறிந்தார்கள். பெண்மக்களுக்கான யுவன்கள் அவர்களைத்
தேடி வெகு விரைவிலேயே வர இருக்கிறார்கள். சில கதைகளில் நெளியும் பாம்புகளை
சடையாக அள்ளிப் போட்டுக்கொண்ட கடவுள் ஒருவர் அந்த இரவை பிரபஞ்சத்தின் கால
வெளியிலிருந்து தனியே பிரித்து மீண்டும் உலகின் முதல் நானாகப் படைக்கிறார்.
அவர் என் முதிர்முப்பாட்டனாராகவே இருக்க வேண்டும். ஏனெனில் அந்தக் கடவுள்
வயோதிகமற்றவராக இருந்தார். வேறு சில கதைகளில் மழைக் காலத்தின் மென்சோகத்தை
கடுங்கோடையிலும் உருவாக்கும் மந்திரக்காரனாக ராஜனும் காற்றுருவமான தேவதையாக
ராஜனின் மகளும் தோன்றி அலைகிறார்கள். பின்னாளில் இந்தக் கதைகள் யாராலும்
பாடப்படக் கூடாதென்று அரசாணையால் (ராஜனின் விருப்பத்திற்கெதிராகத்தான்) தடை
செய்யப்பட்ட போது அதை மீறிப் பாடுபவர்களின் மேல் கொலை வாளுக்கு இரையாகி மாண்ட
இருபது வேடர்குல ஆண்களின் ஆவிகள் கவிந்து அரண்மனைவாசிகளின் கண்களுக்குத்
தட்டுப்படா வண்ணம் அவர்களின் உருவங்களை மாயமாய் மறைத்துவிடத் துவங்கியதால்
நகரத்தின் மேல் வீசும் காற்றில் எப்போதும் கலந்து ஒலித்துக்கொண்டேயிருந்த
பாடுவோர் புலப்படாத அந்த மாயப் பாடல் வரிகளை எப்படி அழிப்பதென்று தெரியாமல்
கடைசியில் அவற்றைக் குழப்பி அலைக்கழிக்கும் தந்திரத்துடன் அரண்மனைக்
கவிஞர்களைக் கொண்டு அதே வாய்மொழிக் கதைகளின் இருபது வீரர்களையும் அரச
வம்சத்தின் இருபது தலைமுறை மன்னர்களாகவும் அவர்கள் பங்கேற்ற அந்த ஒற்றை இரவை
நெடிய கால இடைவெளிகளால் பிரிக்கப்பட்ட இருபது தலைமுறைகளின் தனித்தனி
இரவுகளாகவும் தனித்தனி ராஜன்களின் சாகஸங்களாகவும் மாற்றி சமஸ்தானத்தின்
அதிகாரபூர்வமான பாடற்ச் சுவடியாக்கி கோவில்களிலும் பொது மண்டபங்களிலும் உரக்கப்
படிப்பதற்கு ராஜன் மனைவி ஏற்பாடு செய்தாள். இரண்டு விதமாகச் சொல்லப்படும்
இப்படிப்பட்ட ஒற்றைக் கதைகளுக்கு எனவே பழைய நகரத்தில் பஞ்சமே இல்லாதிருந்தது.
இது ஒரு புறமிருக்க, என் முதிர்முப்பாட்டாரின் ஏற்பாட்டின்படி இருபது
வேடர்களுடன் அந்த இரவின் நிகழ்வுகளில் பங்கு கொண்ட ராஜன் தன் மனைவிக்குச்
சொல்லியதாகச் சொல்லும் கதை இப்படியாக இருக்கிறது:

முன்பு எத்தனையோ தடவைகள் நான் உனக்குச் சொல்லியிருப்பதனால் ராணீ புலி
வேட்டையைப் பற்றி உனக்கும் நன்றாகத் தெரிந்திருக்கும். புலி வேட்டையில் இரண்டு
பகுதிகள் உண்டு. கண்களுக்குப் புலப்படாமல் புதருக்குள் பதுங்கியிருக்கும்
புலியை மறைவிலிருந்து வெளியே கொண்டு வருவது வேட்டையின் முதல் பகுதி.
மறைவிலிருந்து பாய்ந்து வெளிப்படும் மிருகத்தைத் துரத்தியும் அதோடு மோதியும்
ஆயுதங்களால் வேட்டையாடுவது இரண்டாம் பகுதி. இரண்டாம் பகுதியைவிட முதல்பகுதி
முக்கியமானதும் புலன்களின் கூர்மையை அதிகம் வேண்டுவதுமான ஒன்றாக இருக்கும்.
தன்னுருவத்தை மறைத்துக் கொண்டிருக்கும் புலியை கண்முன் புலப்படுத்துவது என்பது
அத்தனை சுலபமல்ல. அதற்குப் பார்வை நுட்பத்தை விடவும் நுகர்வு நுட்பம் அதிகமாகத்
தேவைப்படுகிறது. புலியின் உடலிலிருந்து எழும் பிரத்யேக வாசனையலைகள் காற்றில்
கலந்து வருவதை வைத்தே அது எவ்வளவு தூரத்தில் எந்த திசைக்கு முகம் காட்டிப்
புதர்களினுள் படுத்துக் கிடக்கிறது என்பதைச் சொல்லும் அசாத்தியத் திறமை
மிக்கவர்கள் முதல் பகுதியில் பங்கேற்கிறார்கள். புலியை வெளிப்படுத்த கொம்பு
முரசு முழவு ஜண்டை போன்ற வாத்தியங்களை ஒரு குறிப்பிட்ட தூரத்திலிருந்து அந்த
இடத்தைச் சுற்றி வளைத்து நின்றபடி இசைத்து கானகத்தையே அவர்கள் அதிரச்
செய்வார்கள். ஆனால் புலி உடலளவில் கம்பீரமும் வலுவும் கொண்ட மிருகமானாலும்
மிகவும் மென்மையான இதயம் கொண்ட பிராணி. கூட்டு முழக்கத்தில் ஒரு மாத்திரையளவு
கனம் கூடினாலும் அதிர்ச்சியில் அது தன் மறைவிடத்தில் உட்கார்ந்திருக்கும்
நிலையிலேயே இதயம் வெடித்து இறந்து போய் விடக்கூடும். பிறகு புலிவேட்டையென்கிற
வீர விளையாட்டுக்கும் அர்த்தமில்லாமல் போய் விடுமாதலால் புலியை உந்தி
விடுவதற்கென்றே இட்டுக் கட்டப்பட்ட சில பிரத்யேக பாடல்களையும் முழக்கங்களையும்
இசைப்பதில் தனிப்பயிற்சி பெற்றவர்கள் சிலர் வேட்டைக் குழுவில் சிறப்பிடம்
பெறுவார்கள். வேட்டைக்கான  சிறப்பு அழைப்புகளைத் தவிர்த்து மற்ற நேரங்களில்
நகரத்தவர்களோடு ஒட்டாமல் நாட்டின் எல்லையோரமாக இன்னும் அழிக்கப்படாமல் வளர்ந்து
செழித்திருக்கும் வனாந்திரத்தில் அபூர்வமான மிருகங்களின் தோலைக் கொண்டு
கட்டப்பட்ட கூடாரங்களுக்குள் தங்களை மறைத்தபடி வாழ்ந்து வரும் வேட்டுவ
ஜாதியினருக்குச் சொந்தமானவை நட்சத்திரவாஸிகளின் கலவி என்னும் பொதுப் பெயரால்
அழைக்கப்படுகிற இந்தப் பாடல் தொகுதிகள். இந்த வேட்டுவ ஜாதி ஆண்களில் இருபது
பேர்களைத்தான் நம் அரண்மனை நாவிதரும் மகா ஞானியுமான அப்பையா அன்று இரவு நம்
பெண்ணின் படுக்கையறை வாசலில் பின்னிரவில் மூன்றாம் ஜாமம் துவங்கும் வரை
நிறுத்தி வைத்திருந்தார். அவர்களோடு சேர்ந்து நானும் வெளியிலேயே நிறுத்தி
வைக்கப்பட்டிருந்தேன். ராஜன் என்கிற மரியாதையை அப்பையா எனக்குக் கொடுக்கவில்லை
என்கிற ஆதங்கம் அப்போது என் மனதை முள்ளாகக் குத்திக்
கிழித்துக்கொண்டிருந்ததென்பது உண்மைதான். அதை நான் வெட்கத்தோடு
ஒத்துக்கொள்கிறேன். அப்பையா மாத்திரம் இளவரசி படுக்கையறைக்குள் நுழைந்தபோது
அவளுடனேயே தானும் உள்ளே நுழைந்துகொண்டுவிட்டார். நுழைந்துகொண்டுவிட்டார் என்று
சொல்வதை விட நுழைந்து தன்னை மறைத்துக்கொண்டு விட்டாரென்று சொல்வதே பொருத்தமாக
இருக்கும். சேடிப்பெண் வழக்கமாகப் படுத்துக்கொள்ளக் கூடிய இளவரசியின்
படுக்கையறையை ஒட்டினாற் போலிருக்கும் இணைப்பறையின் படுக்கையில் தான்
படுத்திருப்பது போலத் தோற்றம் தரும்படி தலையணைகளை வைத்து ஒரு உருவத்தை உண்டு
பண்ணிவிட்டு மீண்டும் வெளியே வந்து அவர் இளவரசியின் படுக்கையருகே அமர்ந்து
கொண்டதாக அனைத்தும் முடிந்த பிறகு என்னிடம் கூறினார். பின்னிரவின் மூன்றாம்
ஜாமம் துவங்கும்போது அதற்கான மணி நகரின் மையத்தில் அடிபடும் சத்தம் கேட்டவுடன்
கூட்டிசையை ஒலித்தபடி உட்புறம் தாளிடப்படாத படுக்கையறைக் கதவை திறந்து கொண்டு
அவர்கள் உள்ளே நுழைந்து ஒலிப்பதை நிறுத்தி விடாமல் இணைப்பறை வாசலை ஒட்டி இடது
புற ஓரமாக நின்று கொள்ள வேண்டுமென்பது அப்பையாவின் கட்டளை. இரவின் அமைதியோடும்
ஒரு மிருகத்தின் இதயத்துடிப்போடும் ஒரே சமயத்தில் இயைந்து போகும்படியாக
கூட்டிசை வெளிப்பட்டுக் கொண்டிருக்க வேண்டுமென்றும் அவர் வற்புறுத்திச்
சொல்லியிருந்தார். அறைக்கு வெளியே காத்துக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் அந்த
நேரத்தில் அடங்கிய குரலில் நட்சத்திரவாஸிகளின் கலவி என்கிற பாடலின் வரிகளைப்
பாடிப் பழகியும் வாத்தியங்களின் சுதியைத் தீட்டியும் மிகத் தீவிரமாக பயிற்சி
செய்துகொண்டே இருந்தார்கள். அப்பையாவின் திட்டம் எவ்வளவு யோசித்துப்
பார்த்தாலும் என் ஊகத்திற்கு அப்பாற்பட்டதாக இருந்ததால் யோசிப்பதை விட்டு
விட்டு வேடர்களின் பாடல் பயிற்சியின் மீது என் கவனத்தைப் பதித்தபடி நான்
பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தேன். முன்பு பல தடவைகள் புலி வேட்டைக்காக
அவர்களுடன் நான் வனப் பகுதிகளுக்கு சென்றிருக்கிறேன். வெறும் ஊளை ஒலிகளையும்
புரியாத வார்த்தைக் கண்ணிகளைக் கொண்ட பாடல் வரிகளையும் எழுப்புவதல்லாமல்
அவர்கள் இதை இத்தனை சிரமமெடுத்துக் கொண்டு பயிற்சி செய்வார்களென்பது எனக்குத்
தெரியவே தெரியாது. புலி இருக்குமிடத்தைச் சுற்றி அரைவட்டமாக தொலைவில் சூழ்ந்து
கொண்டு அவர்கள் ஒலியெழுப்பும்போது என் கவனமெல்லாம் மறைவிடத்திலிருந்து புலி
பாயவிருக்கும் திசையின் மீதும் தருணத்தின் மீதும் பதிந்து கிடக்கும்.
வெட்டவெளியில் காரியார்த்தமாக வெளிப்பட்டு பிறகு காற்றோடு கலந்து போகும் ஒரு
முரட்டு ஒலித் தொகுப்பு என்கிற எண்ணத்தால் நான் ஒருபோதும் அந்த இசைக்கு அதிக
முக்கியத்துவம் கொடுத்துக் கவனித்துக் கேட்டதில்லை. அது எவ்வளவு மகத்தான தவறு
என்பதை நான் உணர்ந்து கொள்ளும் சந்தர்ப்பமும் அந்த இரவில் எனக்குக் கிட்டியது.
யஜூர் வேதத்தின் வேட்டைக்கான  உச்சாடனங்கள் ராணீ அவர்களுடைய ஊளைகளிலும்
சீழ்க்கைகளிலும் கொம்புக் கருவிகளினுள்ளும் ஏற்கனவே ஒளிந்து கொண்டிருந்தது.
சிறுநெருப்பில் வாட்டப்பட்டு விரைப்பேறிக் கொண்டிருந்த அந்தக்
கருவிகளுக்குள்ளிருந்து அவ்வப்போது ஒத்திகையாக அதிர்ந்து கொண்டிருந்தது நம்
பெண் தன் அரங்கேற்றத்தின்போது வாசித்த யாழிசையைப் போல மனதைத் துயரத்தில்
தோய்க்கும் சங்கீதமில்லை. மாறாக அரவின் விஷத்தைப் போல அதைத் தன் செவியால்
தீண்டியவனுடைய புலன்களின் நிறத்தை கணப் பொழுதில் மாற்றுவது. இடியை ஊட்டி
விட்டதைப் போலக் கேட்பனுக்குள்ளிருக்கும் ராஜஸத்தைப் பிழிந்தெடுப்பதாக
இருக்கும் அந்த வினோதமான சங்கீதம். அந்த இசைக்குச் செவிமடுக்கும் கம்பீரம்
மிருகங்களுக்கும் அசுரர்களுக்கும்தான் வாய்க்கக் கூடுமென்று யாரேனும் சொன்னால்
அதை உண்மையென்று நீ நம்பலாம்.

நானொரு அசுரனில்லை என்பதைத் தெளிவாகச் சொல்வதைப் போல பின்னிரவின் மூன்றாம்
ஜாமம் துவங்குவதை அறிவிக்கும் மணியோசை நகரின் மத்திய மணிக் கூண்டிலிருந்து
இருதயம் பிளந்து போகும் வண்ணம் உரத்து எழுப்பப் பட்ட கணத்தில் அப்பையா சொன்னபடி
தீட்டப்பட்ட பாடல்களையும் இசைக் கருவிகளையும் முழக்கியவாறே படுக்கையறையின்
கதவுகளைத் திறந்து கொண்டு இருபது வேடர்களும் உள்ளே நுழைந்தார்கள். அவர்கள்
பின்னே நானும் இருபத்தியோராவது ஆளாக அறைக்குள் நுழைந்தேன். திறக்கப்பட்ட அறை
வாசலின் வழியாக நாங்கள் நுழைவதற்கு முன்பே உள்ளே பாய்ந்து பாய்ந்த வேகத்திலேயே
அறையின் விதானத்தைக் கண்ணிமைக்கும் நேரத்துக்குள் எட்டித் தொட்டுவிட்டுப்
புறப்பட்ட இடத்திற்கே திரும்ப வந்து விட்ட நட்சத்திரவாஸிகளின் கலவி எனும்
பாடலின் முதல் ஸ்வரத் துணுக்கு அந்தக் கணத்தில் இசைக் கருவிகளிலிருந்து
புறப்பட்டுக் கொண்டிருந்த அடுத்த துணுக்கை அந்தரத்தில் மோதியதால் இசைத் தொடர்
சிதறி வெற்றுக் கூச்சலாக உதிர்ந்துவிழப் போகிறதென்று நான் நினைத்ததற்கு மாறாக
அந்தரத்தில் மோதிய ஸ்வரங்களின் புணர்ச்சியிலிருந்து அறையினுள் ஜனித்து
வானவில்லின் பிரகாசத்தையும் வர்ண ஜாலங்களையும் ஒத்த ஜொலிப்புடன் இங்குமங்குமாக
உருண்டு திரிந்த மிக அற்புதமான புத்தம் புதிய ஒலிக் கோளங்களின் ஒருமித்த
பிரகாசம் அறையின் ஒவ்வொரு அணுவிலும் பட்டுப் பல்லாயிரக்கணக்கான தீப்பொறிகளாக
சிதறியடித்தது. தரையிலிருந்து தொடர்ந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்த இசைத்
துணுக்குகள் விதானத்தில் மோதி தொடர்ந்து திரும்பி வந்துகொண்டிருந்த அதற்கு
முந்தைய துணுக்குகளின் எதிரொலியுடன் இயைந்து இவ்வாறாக அறை முழுவதையும் தாங்க
முடியாத லயச் சூட்டால் இளக்கியதால் இளகி விரிவடையத் துவங்கிய பொருள்களுடனுள்
ஒரு சிறு நகக் கீறலில் கூட வெடித்து விடும்படி சுவர்கள் மிக மெல்லிய தகடாக
மாறிக்கொண்டிருக்க காற்றடைத்த தோல்பையைப் போல அறையும் நாலா பக்கங்களிலும்
உப்பிப் பெரிதாகிக்கொண்டே போனது. அலங்கார சாதனங்களும் முகம் பார்க்கும்
பளிங்காடியும் குடிநீர்க் கோப்பைகளும் இலவம் பஞ்சடைத்த மெத்தை விரிப்புகளும்
முட்டைவிளக்குகளும் இனிய கனவுகளை அருளும் கடவுளர் திருவுருவங்களும் இளவரசியின்
பயிற்சிக்கென்று பதிக்கப்பட்டிருந்த யாழும் வீணையும் அந்த பிரம்மாண்டமான இசையை
உட்கொண்டு விம்மிப் புடைத்துக்கொண்டிருந்தன. அவை யாவும் உள்ளீடற்ற வெற்றுப்
போர்வைகளாக மாறிவிட்டிருந்ததை நான் என் கண்களால் கண்டு அதிசயப்பட்டேன்.
வெப்பத்தால் இளகி எடையை இழந்த அத்தனை பொருட்களும் அங்கே அந்தர வெளியில் உருண்டு
அலைந்து கொண்டிருந்த இசைக் குமிழிகளோடு சேர்ந்து மெதுவாகப் பறந்து செல்லத்
துடித்தன. நான் ஓடிப் போய் இளவரசின் படுக்கையருகே சென்று கட்டிலின் கால்களை
என் வலது காலால் சுற்றி வளைத்தபடி நின்றுகொண்டேன். அவ்வளவுதான் என்னால் செய்ய
முடிந்தது. கனவிலும் நினைத்துப் பார்த்திராத அந்த மகோன்னதமான கூட்டிசை
விளைவித்த ஆனந்தமும் சன்னதமும் அளவு கடந்த பீதியும் என்னை என்னிலிருந்தே
பிரித்துக் கொஞ்சம் கொஞ்சமாக மீளமுடியாத தொலைவுக்குள் உந்திக் கொண்டு சென்றன.
ஒளியாகவும் வாசனையாகவும் ஒலியாகவும் என்னுள் இறங்கிக் கொண்டேயிருந்த இசை என்னை
நீந்தத் தெரியாமல் தண்ணீரில் விழுந்தவனைப் போல புரட்டி எடுத்துக்
கொண்டிருந்தது. அந்த நிலை மேலும் கொஞ்ச நேரம் நீடித்திருந்திருக்குமேயானால்
ராணீ இந்தக் கதையை இங்கே உனக்குச் சொல்ல இப்போது நான் இருந்திருக்க மாட்டேன்.
விரிசல் காணத் துவங்கியிருந்த அறையின் விதானம் வழியே நெருப்பின் நாக்கைப் போல
லாவகத்துடனும் விருப்பத்துடனும் நான் இந்தப் பூதவுடலுடனே வானமேகிப்
போயிருந்திருப்பேன். என் உடலை என் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள
முடியவில்லை என்கிற வெட்கம் வேறு அப்போது என்னைப் பிடுங்கி எடுத்துக்
கொண்டிருந்தது. ஏனென்றால் ஒலிப் பிரவாகத்தின் அந்தப் பாய்ச்சலில் ஒரு துரும்பு
போல அங்கே அப்படி அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருந்தவன் அப்போது நான்
மட்டும்தான். அறை முழுவதையும் தலைகீழாக மாற்றிப் போட்டிருந்த அந்த மாபெரும்
பாடல் அதை இசைத்துக்கொண்டிருந்தவர்களையும் அப்பையாவையும் நம் பெண்ணையும் ஒரு
சிறிதும் பாதிக்கவில்லை. வாசித்துக்கொண்டிருந்த இருபது பேரையும் கண்டு நான்
ஆச்சரியப்படவில்லை. இணைப்பறை வாசலின் வெளிப்புறமாக இடதுபுறச் சுவற்றில்
வரிசையாகவும் இசைக்க வசதியாகவும் சாய்ந்து முதுகைப் பதித்தபடி அவர்கள் தங்கள்
கடமையை சரிவரச் செய்துகொண்டிருந்தார்கள். அவர்களே அந்த அற்புதத்தின்
சிருஷ்டிகர்த்தாக்கள். வண்ணமயமான இசைக் கோளங்களின் குதூகலமும் பெருக்கமும்
சாவும் மறுபிறப்பும் அவர்களின் விரல் நுனியின் அசைவில்தான் நிலைகொண்டிருந்தது.
ஆகவே அவர்கள் தாங்களே வண்ணப்பந்துகளாக மாறும் வண்ணம் இசையினுள் தங்களை இழந்து
விட முடியாது. அப்பையாவைக் கண்டும் நான் ஆச்சர்யப் படவில்லை. அவர் நம் பெண்
மலர்ந்திருந்த சப்பரமஞ்சத்தின் மறுபுற விளிம்பில் கையை ஊன்றியபடி இணைப்பறை
வாசலை ஊடுருவிய பார்வையுடன் அசையாமல் நின்று கொண்டிருந்தார். அவரே அந்த மந்திர
இசைப்பின் காரண கர்த்தா. அதை விஞ்சும் எண்ணற்ற வினோதங்களைப் பார்த்தவர்.
சாதிப்பவர். சுழன்று கொண்டிருந்த சூழலுக்குள் விழுந்து விடாமல் அவரால் தன்னை
எப்போதும் பிரித்தே நிறுத்திக் கொண்டுவிட முடியுமென்பது எதிர்பார்க்கக்கூடிய
ஒன்றுதான்.

நான் ஆச்சர்யப்பட்டது ராணீ நம் பெண்ணைக் கண்டுதான். அவள் தன் தூக்கத்திலிருந்து
விழித்தெழுந்து படுக்கையின் மீதே சம்மணம் இட்டு அமர்ந்திருந்தாள். அவள்
முகத்தில் திணறலின் ரேகைகளோ திடுக்கிடலின் சிதறலோ சிறிதும் காணப்படவில்லை.
மாறாக அவள் தன் நயனங்களையும் நாசியையும் நன்கு உயர்த்தி விரித்து
நட்சத்திரவாஸிகளின் கலவியொலியையும் அதன் மெல்லிய காட்டுப் பூ மணத்தையும்
ஆழ்ந்து சுவாசித்துக் கொண்டிருந்தாள். அவள் முகம் மகிழ்ச்சியில் விகசித்துப்
போயிருந்தது (அவள் மார்பு இசையின் லயத்தோடு இயைந்து விம்மித் தணிந்து
கொண்டிருந்தது). நானோ பாதி இசையின் வினோதத்திலும் பாதி நம் பெண்ணின் இந்த
நிலையிலுமாகச் சிக்கித் திணறிக் கொண்டிருந்தேன். அவள் அப்போது என்னையும்
அப்பையாவையும் ஒரு பொருட்டாக மதித்து எழுந்து நின்று மரியாதை கொடுக்கவில்லை.
எங்கள் பக்கம் முகத்தைத் திருப்பவும் இல்லை. சொல்லப்போனால் நாங்களும் வாத்தியக்
குழுவும் அங்கே நின்று கொண்டிருந்த பிரக்ஞையே அவளுக்கு இல்லை. அறையை நிரப்பித்
ததும்பிக் கொண்டிருந்த இசைத் துகள்களின் புணர்ச்சியோடும் வண்ணக் கோளங்களின்
பிறப்போடும் அவற்றின் அலைவோடும் குதூகலத்தோடும் அவளுடைய விழிகள் மட்டும் நிலை
கொள்ளாமல் மோதியும் பிறந்தும் அலைந்தும் துடித்துக் கொண்டிருந்தன. ஒரு சாதாரண
மானுடப் பிறவியால் தாள முடியாத ஆனந்தப் பொழிவை வெகு சாதாரணமாக மென்று
தின்றுகொண்டிருந்த நம் பெண்ணின் அசாத்தியமான முகப்பொலிவைக் கண்டு பெரும் பீதி
என்னைப் பீடித்துக் கொண்டு விட்டது. நகர்வலத்திற்கு அல்லாமல் வேட்டைக்கென்று
நான் அவளை ஒரு போதும் கானகத்தின் பக்கம் அழைத்துச் சென்றதே கிடையாது. சிறுபெண்
வனவிலங்குகளின் உக்கிரத்தையும் உடல் மணத்தையும் நேரில் பார்த்து அனுபவிக்கும்
மனப் பக்குவம் அவளுக்கு இன்னும் கைகூடியிருக்காது என்பது என் எண்ணம். அற்புதமான
அந்த இரவுக்குப் பிறகும் இப்போது இதை உனக்குச் சொல்லிக்கொண்டிருக்கும் இந்தக்
கணம் வரைக்கும் இந்த எண்ணத்தை என்னால் மாற்றிக் கொள்ள முடியவில்லை. வேட்டையின்
போது மட்டுமே இசைக்கப்படும் நட்சத்திரவாஸிகளின்  கலவி முதலிய பாடல்களின்
தொகுப்பை அவள் அதற்கு முன்பு கேட்டிருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் அவளோ ஒவ்வொரு
நாளும் தன் படுக்கையறையில் வேட்டை இசை நிகழ்ச்சி ஒன்றைத் தனக்கென நிகழ்ந்த
ஏற்பாடு செய்துகொண்டு அதை எப்போதும் அனுபவித்துக் கொண்டிருப்பவளைப் போன்ற
இசைவுடனும் பழக்கச் சாயலுடனும் காணப்பட்டாள். இதன் மர்மத்தை அப்பையாவால்
மட்டும் தான் விளக்க முடியும். அவள் உயிருடன்தான் இருக்கிறாளா என்கிற பெருத்த
சந்தேகம் என்னுள் சாரைப்பாம்பு போல வழுக்கிக் கொண்டிறங்கி வயிற்றில் சுருண்டு
வாலையடித்தது. குழப்பமான இந்த உணர்வுகளிலிருந்து நான் விடுபட்டு
நிதானித்துக்கொள்ளும் முன்பே அந்த அதிசய நாடகத்தின் அடுத்த காட்சியும்
துவங்கிவிட்டது. இணைப்பறை வாசலில் தொங்கிக் கொண்டிருந்த திரைச் சீலையைப்
பிளந்துகொண்டு வெளியே வந்தது ஒரு வரிப்புலி. அது படுக்கையறைச் சுவற்றின்
ஓரமாகவே மெதுவாக நடந்து அங்கிருந்த பொருட்களை ஊடுறுவிக் கடந்து சென்று அறையின்
சாளரத்தை அடைந்தது. சாளரத்தின் வழியாக அதன் வெளிப்புறமிக்க வேப்பமரத்தின்
உச்சிக் கிளைக்குத் தாவி பிற கிளைகளின் வழியாக மரத்திலிருந்து கீழிறங்கி
நிலவொளியில் மிதப்பதைப் போல் நந்தவனப் புற்களின் மேலாகப் பாரவி விரைந்து
காணாமல் போனது. புலி எங்கள் கண்களில் தென்பட்ட முதல் வினாடியிலிருந்து துவங்கி
அறுபது விநாடிகள் அவகாசத்திற்குள் இது நடந்து முடிந்துவிட்டது. அதோடு அந்த
இரவின் வினோத நிகழ்ச்சிகளும் முடிவுக்கு வந்து விட்டன. பிறகு இசைப்பவர்கள்
இசைப்பதை நிறுத்திக்கொள்ளும்படி அப்பையா கையை உயர்த்திச் சைகையால் அறிவித்தார்.
பெருகிக் கொண்டிருந்த சங்கீதம் நின்றுபோனதும் அறையினுள் பிரகாசித்துக்
கொண்டிருந்த வண்ணக் கோளங்கள் உடைந்து கரைந்தன. அறையும் பிற பொருட்களும் தத்தம்
இயல்பான உருவத்திற்கு மிக வேகமாகச் சுருங்கி மீண்டன. இமைக்கும் நேரத்துக்குள்
நான் கண்ணெதிரே  கண்டு கொண்டிருந்த அற்புதங்களனைத்தும் என்றும் அங்கே
நடந்திருக்கவே இல்லை என்பதைப் போல அறையின் சாதாரணத்துவம் திரும்பியிருந்தது.
புலி தாவிச் சென்ற சாளரத்தின் வழியாக அப்போது மிகச் சுகந்தமான காற்று அனைத்தும்
சுபமாக முடிந்ததை அறிவிக்கும் விதத்தில் உள்ளே நுழைந்தது. நாங்கள் அனைவரும்
மயங்கிப் படுக்கையில் துவண்டு விழுந்திருந்த நம் பெண்ணைச் சுற்றிச்
சூழ்ந்துகொண்டோம். இணைப்பறை வாசலில் புலி வெளிப்பட்ட தருணமானது எனக்களித்த
அதிர்ச்சியிலிருந்து நான் அப்போதும் இப்போதும் மீண்டும் வந்து விடவில்லை.
உண்மையைச் சொல்லுவதானால் சற்றும் எதிர்பாராத நம்பற்கரிய அதுபோன்ற சூழலிலிருந்து
புலி ஒன்று வெளிப்படப் போவதை அங்கே வாசித்துக் கொண்டிருந்த வேட்டைக்காரர்களே
எதிர்பார்க்கவில்லை. அது எங்கள் கண் முன்னே தோன்றிய கணத்தில் அதிர்ச்சியால்
இசையில் லயப்பிசகு ஏற்பட்டு விடும் அபாயத்தைத் தவிர்க்க அவர்கள் கடும் முயற்சி
எடுத்துக்கொண்டிருந்தார்கள். இசையின் கண்ணிகள் இயல்பாகப் பிரிந்து தளர
இருக்கும் தருணத்தில் அதன் ஒழுங்கு கலைவது வெளியே வந்து நிற்கும் புலியின்
இதயத்துடிப்பை நிறுத்திவிடும் என்று அவர்கள் முன்னிலும் பிரமாதமாக வாசித்ததில்
இசை அதன் உச்சக் கட்டத்தை அப்போது எட்டியிருந்தது. அப்பையாவைப் பற்றி நான்
சொல்ல வேண்டியதில்லை. அவர் முகத்தில் எதிர்பாராத எதையும் அங்கே காணும் சலனம்
ஒரு சிறிதும் ஏற்பட்டிருக்கவில்லை. புலி அறைவாசலில் தென்பட்ட கணத்தில் அவர் தன்
பார்வையை நம் பெண்ணின் மேல் பதிய வைத்திருப்பதைக் கண்டேன். ஒரு கடும் வனவிலங்கை
முன்னெப்போதும் நேருக்குநேர் சந்தித்திராத நம் பெண் புலியைப் பார்த்ததும்
வீரிட்டு ஆதரவாகப் பற்றுவதற்காக என் கைகளை அவள் தோள்களுக்கு நகர்த்தினேன்.
அப்பையா அதைத் தன் கண்ணசைப்பால் தடுத்து நிறுத்திவிட்டார். பிறகு நான்
பதற்றமடையத் தேவையில்லை என்று சொல்வதைப் போன்ற பாவனையில் அவர் என்னைப்
பார்த்துச் சிரிக்கவும் செய்தார்.

பிறகுதான் ராணீ நம் பெண் புலியைப் பார்த்து முன்பே அறிமுகமான பாவமும் அளவற்ற
துயரமும் நிறைந்த முகத்துடன் நீயா என்று தாழ்ந்த குரலில் கேட்டாள். அப்போது
முழங்கிக்கொண்டிருந்த இசைத் துடிப்பின் அத்தனை ஆரவாரத்திற்கிடையிலும் அந்த
வார்த்தைகளைத் தெளிவாகக் கேட்க முடிந்தது. என்னால் என் காதுகளை நம்ப
முடியவில்லை. ஒரு மனிதனிடம் பேசுவது போல அத்தனை சுவாதீனமாக நம் பெண் என் கண்
முன்னே ஒரு மிருகத்திடம் பேசுவதை என்னால் நம்பாமலும் இருக்க முடியவில்லை.
இளவரசி அந்தக் கேள்வியைக் கேட்டபிறகு சாளரத்தை நோக்கிப் புலி செல்லுவதையே
தொடர்ந்து வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் மேற்கொண்டு புலி நம்
பெண்ணிடம் மனிதனின் மொழியில் பேசக் கூடுமென்றும் எதிர் பார்த்துக்கொண்டு
நின்றிருந்தேன். ஆனால் அற்புதங்களின் இருப்பு திரேதாயுகத்தோடு தீர்ந்து
போய்விட்டபடியால் அதிர்ஷ்டவசமாகவோ துரதிர்ஷ்டவசமாகவோ நான் எதிர்பார்த்தபடி
எதுவும் நடந்து என் இதயத்துடிப்பை நிறுத்தி விடவில்லை. புலி கண்களிலிருந்து
மறைந்த பிறகு நம் பெண் தன் கண்களை திருப்தியுடன் மூடிக் கொண்டு மிக
அமைதியுடனும் சோர்வுடனும் பூமாலையின் நளினத்தோடு படுக்கையில் சாய்ந்தாள்.
அப்பையா அவளுக்கு மயக்கத்துக்குரிய சாதாரண சிகிச்சையை அளித்து முடித்த பின்
நாங்கள் படுக்கையறையை விட்டு வெளியே வந்தோம் என்று தன் கதையை முடித்தார் ராஜன்.
இவ்விதமாகவே அந்த இரவின் சம்பவங்கள் மேலும் இருபது வகையான கதைகளாக வேடர்களின்
மூலமாகவும் விரிந்து பரவியதால் என் முதிர் முப்பாட்டனார் எழுபத்தைந்தாம் நாள்
அரண்மனைக்குத் திரும்பி வந்தபோது தாங்கமுடியாத ஜனக் கூட்டம் அரண்மனை வாயிலை
நெருக்கியடித்துக்கொண்டிருந்ததாகக் கூறக் கேட்டிருக்கிறேன். மூன்று நாட்களுக்கு
முன்பே அவர் அரண்மனைக்கு வருகை தரப் போகும் நாளைக் கேட்டுத் தெரிந்துகொண்ட
அண்டை சமஸ்தானவாசிகள் கட்டுச் சோற்று மூட்டைகளுடன் மாட்டு வண்டிகளில்
சாரிசாரியாக வந்து சமஸ்தானத்தின் சாலைகளையும் விடுதிகளையும் தோட்டங்களையும்
நிரப்பி விட்டார்களாம். மேலும் ஏழு நாட்களுக்கு முன்பாகவே அயல்
தேசங்களிலிருந்து கழைக் கூத்தாடிகளும் வியாபாரிகளும் நடன நாட்டியக் கலை
வல்லுனர்களும் வேசிகளும் உள்ளூர் பிச்சைக்காரிகளும் வந்து ராஜதானியை
ஆக்கிரமித்துக்கொண்டிருந்தார்களாம். எங்கும் எந்த நேரத்திலும் சூரியனின்
பிரகாசத்தை விஞ்சும் வண்ண விளக்குகள் பிரகாசித்துக்கொண்டேயிருந்ததால் அந்தக்
காலங்களில் எந்த கவிஞனும் நிலவைப் பார்த்து கவிதை எழுத முடியாமல் போய்
விட்டதென்றும் அதனால் அவ்வளவு அமளிக்கிடையில் கவியரங்கங்கள் மாத்திரமே
வெறிச்சோடிப் போயிருந்தன என்றும் என் பாட்டனார் தான் கேள்விப்பட்டதை மிகையின்றி
எங்களுக்குச் சொல்லுவார். தன் மகள் குணமடைந்ததைக் கொண்டாடும் விதத்திலும் பிற
தேசத்தின் ராஜகுமாரர்களை அரண்மனைக்கு அழைக்கும் விதத்திலும் வந்து குவிந்த
ஜனங்களை கௌரவிக்கும் விதத்திலும் ராஜகுடும்பத்தின் சார்பாக பலவிதமான கேளிக்கை
நிகழ்ச்சிகளும் தினசரி அன்னதானமும் பிரத்யேக விடுதியுபசாரங்களும் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தன. இத்தனை கேளிக்கைகளிலும் பங்குகொள்ள என்
முதிர்முப்பாட்டனாரின் மலையாள தேசத்து மனைவியும் அவர்தம் இரண்டு ஆண் மக்களும்
ஒரு பெண்ணும் ஆக நால்வரும் சிறப்பு விருந்தினர்களாக அரண்மனைக்கு
அழைக்கப்பட்டிருந்தார்கள். (இந்தப் பெண்தான் வருடங்களுக்குப் பிறகு சொந்த
தேசத்துக்கு திருப்பியனுப்பட்ட என் முதிர் முப்பாட்டனாரின் மனைவியுடன் கூடவே
அனுப்பப்பட்டவள். பிறகு சாகும் வரை அவர் அவர்களிருவரையும் பார்க்கவுமில்லை
கேள்விப்படவுமில்லை. ஆண் வாரிசுகள் இருவரும் வம்ச விருத்திக்காகவும் கல்வி
கற்றுக் கொள்ளும் பொருட்டாகவும் அவருடனே தங்கி வளர்ந்து வந்தார்கள். ஆனால்
அதற்குள் சனியின் நேர் பார்வையில் சிக்கிக் கொண்டுவிட்ட என்
முதிர்முப்பாட்டனாரின் வீழ்ச்சி துவங்கி விட அவருடைய வித்தைகள் கற்றுக்
கொடுக்கப்படாமல் மறதியால் பாழடைந்து போனதால் அவர்களும் கீழ்நிலைக்குத்
தள்ளப்பட்டார்கள். இவ்விதமாக ஆக்கப்பட்ட அந்த பரிதாபத்துக்குரிய மக்களின்
வாரிசுகளாகிய நாங்களும் சூட்சுமங்களை இழந்து வெறுமே மயிரைச்
சிரைத்துக்கொண்டிருப்பதென்கிறதாகவே ஆகிப்போன நாவிதத்தைக் காலப்போக்கில்
கைவிட்டுவிட்டு கூலிக்குக் கதை சொல்லுபவர்களாக வனத்தினுள் எங்களை
மறைத்துக்கொண்டு வாழ விதிக்கப்பட்டு விட்டோம். இத்தனை கோலாகலத்திற்கிடையிலும்
அமளிக்கிடையிலும் தன் கணவர் அதே பழைய நடுக்கத்துடன் தன் ஏடுகளைப் புரட்டிப்
புரட்டிப் பார்த்துக்கொண்டிருப்பதைத் தவிர வேறெதிலும் பங்கேற்கவில்லை என்று
அவர் மனைவி சொல்லி ஆச்சர்யப்பட்டுக் கொண்டேயிருந்தாராம். கரை கடந்த அந்தக்
கேளிக்கை நாட்களின் உண்மையான கதாநாயகன் தானே எனும் அகம்பாவத்தூசி அவர் உடையின்
நுனியிலும் ஒட்டிக்கொள்ளாததை அவர் மிகப் பெருமையாகச் சொல்லிச் சொல்லி
ஆனந்தப்பட்டிருக்கிறார். இவ்வாறாக அனைவரும் இரண்டு நாளிரவுகளின் கதையைக் கேட்க
வெகு ஆர்வத்துடன்  அரண்மனை மைதானத்தில் வந்து குழுமியிருந்த காலத்தில் ராஜனின்
பெண்ணும் தனக்கு என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ள மிக ஆர்வமாக இருந்தாள்.
அவளிடம் ராஜனும் ராஜன் மனைவியும் எவ்வளவு துருவிக் கேட்ட போதிலும் அவளால்
எதையும் நினைவுக்குக் கொண்டு வர முடியவில்லை. அழகிய ஆண் மக்களின் உருவம் முன்பு
தந்து கொண்டிருந்த அருவருப்பு உணர்வை இப்போது தரவில்லை என்பதை மட்டுமே அவளால்
நினைவில் வைத்துக்கொள்ள முடிந்திருந்தது. எனவே நடந்தவற்றைச் சொல்லும் பொருட்டு
என் முதிர்முப்பாட்டனார் தன் அறையிலிருந்து வெளிப்பட்டு மீண்டும் அரண்மனை
வளாகத்துக்கு விஜயம் செய்து நாளன்று எல்லாருடனும் சேர்ந்து அதைக் கேட்க வசதியாக
ராஜனின் பெண்ணுக்கும் தனி இருக்கை போடப்பட்டிருந்தது. அது என்
முதிர்முப்பாட்டனாரின் இருக்கைக்கு நான்கடி தாழ்வான உயரத்தில்
அமைக்கப்பட்டிருந்த பீடத்தில் இருந்தது. ராஜனின் மனைவிக்கும் ராஜனுக்கும் அவர்
இருக்கைக்குச் சமமான மட்டத்தில் ஆசனங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அரண்மனை
வைத்தியர் உட்பட மற்றவர்களுக்கு மூன்றடி தாழ்ந்த பீடங்களில் இருக்கைகள்
வரிசையாக அமைக்கப்பட்டிருந்தன. இவ்வகை  மரியாதை வெகு அபூர்வமாகவே ராஜ
குடும்பத்தவரால் யாருக்கும் கொடுக்கப்படுவது வழக்கம். பொதுஜனங்கள் அரண்மனை
மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த திண்டுகளிலும் தரையிலும் மரங்களின் மேலும்
சிலைகளின் மேலும் அமர்ந்து கொள்ளச் சுதந்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. அவர்கள்
ஆனந்த மிகுதியால் உணர்ச்சிவசப்பட்டு சின்னாபின்னப்படுத்தி வைத்து விட்டுப் போன
கலைப் பொருள்களையும் அலங்காரச் செடி வகைகளையும் புற்றரையையும் மறுபடி சீர்
செய்ய தொண்ணூற்றாறு நாட்களும் இருநூற்று முப்பது ஆட்களும்
தேவைப்பட்டதென்பார்கள். இவ்விதமாக துவங்கும் முன்பே அகிலம் முழுவதையும் தன்
வசம் ஈர்த்ததென்கிற பெருமையுடைய அந்த இரவின் கதையை என் முதிர்முப்பாட்டனார்
இரண்டு பகுதிகளாகப் பிரித்து இரண்டு இரவுகளில் சொல்லிப் போயிருக்கிறாரென்று
கதைகள் குறிப்பிடுகின்றன. அவருடைய வித்தையில் அவருக்கிருந்த மேதமை ஓரிரவிலும்
அவருடைய சமயோசிதமும் நுண்ணறிவும் இரண்டாம் இரவிலும் அந்தக் கதைகளின் வழியே
வெளிப்படுகின்றன என்கின்றன அவை. வேறு சில கதைகள் அவர் சொல்லத் துவங்கிய
நாழிகையின் மேல் காலம் நகராது நின்று போனதால் துவங்கிய நாழிகையிலேயே கதை
முடிந்து போய்விட்டதாகச் சொல்லுகின்றன. அவர் சொல்லத் துவங்கும்போது மேற்கு
நோக்கிச் சரிந்து கொண்டிருந்த பூரண சந்திரன் அந்த நிலையிலேயே இரண்டு நாட்களும்
உறைந்து தொங்கிக்கொண்டிருந்ததைப் பற்றி அவை குறிப்பிடுகின்றன. அவர் சொல்லத்
துவங்கிய போது அங்கே நுழைந்து வீசிக்கொண்டிருந்த காற்று மீண்டு வெளியே
செல்லாமல் அங்கேயே சிக்கிச் சுழன்று கொண்டிருந்தது. அவர் சொல்லத் துவங்கிய போது
அங்கே குழுமியிருந்த ஒவ்வொருவரின் மனத்திலிருந்தும் துரத்தியடிக்கப்பட்ட வேறு
சிந்தனைகள் அவர் கதையை முடிக்கும் வரை நுழைய முடியவேயில்லை. எனவே முதல்நாள்
இரவின் முதல் ஜாமத்தின் முதல் வினாடியில் துவங்கப்பட்ட அவர் கதை முடிந்தபோது
இரவும் முதல் ஜாமத்தின் முதல் வினாடியைத் தாண்டாமல் நின்று கொண்டிருப்பதை
அவர்கள் கண்டார்கள். உட்சுவாசத்திற்கும் வெளிச்சுவாசத்திற்கும் இடைப்பட்ட கால
அவகாசத்திற்குள் மிகப் பெரிய அசம்பாவிதங்களையும் துர்மரணங்களையும் நிகழ்த்தி
முடித்துவிட்ட அந்த மிக நீண்ட அல்லது மிகச் சிறிய கதையை அன்று வர முடியாமல் போன
தொலை தூர உறவினர்களுக்கு அன்று வந்திருந்தவர்கள் பின்னாளில் திரும்பச் சொல்லத்
துவங்கிய போது முகமனிலேயே இரண்டு இரவுகளைக் கழித்துக்கொண்டிருந்தார்கள்
என்கின்றன அந்த வேறு சில கதைகள்.

என் முதிர்முப்பாட்டனார் சொல்கிறார்: ராஜ குடும்பத்தின் வாரிசை என் என்
வித்தையால் காப்பாற்றினேனென்று அனைவரும் எனக்கு நன்றி கூறவும் பாராட்டவும்
என்னைத் தேடி வந்த வண்ணம் இருக்கிறார்கள். உண்மையில் உபயோகப்படுத்தாமல்
துருப்பிடித்துப் போகவிருந்த என் ஏட்டுக் கல்வியை ஒரு முறை தீட்டிப்பார்க்க
வாய்ப்பளித்து அதற்குப் புதிய பொலிவைத் தந்த அனைவருக்கும் நான்தான் நன்றி கூறக்
கடமைப்பட்டிருக்கிறேன். பிறர் தூக்கத்தினுள் புகுந்து அவர்களுடைய கனவுகளைப்
பார்க்கும் அதிசயமான என் கலை ராஜ குடும்பத்தின் வாரிசை அதன் முடிவிலிருந்து
காப்பாற்ற உபயோகப்பட்டது என்று எண்ணும் போது நான் கற்ற வித்தையின் முழுப்பலனை
அடைந்ததாக நினைத்துப் பெருமைப்படுகின்றேன். என் பேச்சில் பலருக்கு வெறுப்பும்
வைத்திய முறையில் சந்தேகமும் இருந்து வந்தபோதிலும் அவற்றையெல்லாம்
பொருட்படுத்தாது என் பிரயோகத்தில் முழு நம்பிக்கை வைத்து எனக்குப் பூரண
சுதந்திரம்.

*
நாம் நடந்த நிகழ்ச்சிகளுக்குச் செல்லலாம். (இவ்வாறாக என் முதிர்முப்பாட்டனார்
தான் கண்டுகொண்ட தவிர்க்க முடியாத தன்னுடைய தலையெழுத்தையும் தன் நாட்டின்
விதியையும் மக்களிடமும் ராஜனிடமும் கொண்டிருந்த வாஞ்சையால் சொல்லாமல்
விட்டார்).

ராஜன் பெண்ணின் கனவுகளைக் கண்டுணர நான் சென்ற இரவு என்னுள் இருந்த
நடுக்கத்தையும் தயக்கத்தையும் என் மனைவியே நன்கறிவாள். யவ்வனப்
பெண்ணொருத்தியின் கனவுகளை வைத்தியன் உள்பட யாருமே பார்ப்பதைப் பற்றி நான்
படித்த சாஸ்திரங்கள் எதுவுமே குறிப்பிடவில்லை. பெண்களின் கனவுகள் பற்றி
அனைத்துக் கலை சாஸ்திரங்களுமே மௌனம் சாதிக்கின்றன என்பதை நான் திடுக்கிடும்
விதத்தில் இந்தச் சந்தர்ப்பத்தில்தான் அறிந்துகொள்ள நேர்ந்தது. அந்த வகையில்
வித்தைகள் குறைப்பட்டவையென்று கூறுவதில் எனக்குத் தயக்கம் எதுவும் இல்லை. அந்த
அனுபவத்தால் இனி எனக்கு விதிக்கப்படவிருக்கும் நற்பலனோ அன்றி கெட்டபலனோ அந்தக்
குறையை நிவர்த்திக்கும் பாடமாக அவற்றில் சேர்க்கப்பட வேண்டியதாயிருக்கும்.
ரகசியமானவை. அவள் கன்னித்தன்மையைப் போலவே அவளுக்கு மட்டும் சொந்தமானவை.
நம்பமுடியாத அளவுக்கு அதிசயத் தன்மையும் வண்ணங்களும் சுகந்தமும் கொண்டவை.
அவற்றை இரண்டாம் மனிதர் குறிப்பாக ஒரு ஆண் காண அனுமதி கிடையாதென்ற இன்னமும்
நான் நம்புகிறேன். என்றாலும் சந்தர்ப்பவசத்தால் ராஜன் பெண்ணின் கனவை நானும்
காணும் வாய்ப்பு எனக்கு விதிக்கப்பட்டது. இப்போது அதே போல மற்றொரு
சந்தர்ப்பவசத்தால் அதை வெளியே சொல்ல வேண்டிய கட்டாயமும் நேர்ந்து விட்டது.
இந்தப் பெண்ணைப் போன்ற இன்னொரு பெண் இந்த உலகத்தில் எங்கேனும் அதேவித நோயால்
துன்புற்றுக்கொண்டிருந்தால் அவளுக்கும் வைத்திய சாஸ்திரத்தில் சில
திருத்தங்களுக்கும் இது உபயோகப்படட்டும் என்கிற தூய எண்ணத்துடனேயே இன்று நான்
இதை பகிரங்கமாக வெளியே என்னைச் சூழ்ந்துகொள்ள நான் மனப்பூர்வமாகவே
அனுமதிக்கிறேன். கடவுள் என்னை மன்னிக்கட்டும்.

உலகத்திலுள்ள அனைத்து யவ்வன ஸ்திரீகளின் கனவுகளைப் போலவே ராஜன் மகளின் கனவும்
அவளுடைய ஆண் துணையைப் பற்றியதாகவே இருந்து வந்தது. உலகத்திலுள்ள அனைத்து யவ்வன
ஸ்திரீகளைப் போலவே அவளும் அந்தக் கனவை விரும்பிக் கண்டு வந்தாள். அவளுடைய
இரவுகளுக்குத் துணையாக அவளே தன் கற்பனையில் சிருஷ்டித்துக் கொண்ட ஆண்மகன்
அவளுடன் நெடுங்காலமாகப் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டிருந்தான் என்பதைக் கனவில்
அவன் அவளுடன் பழகும்போது காட்டிய சுவாதீனத்தையும் சகஜத்தையும் கண்டு நான்
அறிந்துகொண்டேன். அவன் அவளுக்குச் சாவைப் போலத் தவிர்க்க முடியாதவனாயிருந்தான்.
அவனுடைய அவயவங்கள் அறுதியிட்டுச் சொல்ல முடியாதபடி அரூபத் தன்மையும் கலைந்து
சேரும் நீர்த் தன்மையும் கொண்டிருந்தன. ஆனால் அவன் பேரழகன். அங்க அங்கமாக
பொலிவைப் பிரித்துப் பார்க்க முடியாவிட்டாலும் அவனுடைய இருப்பும் கனவின்
சுகந்தமுமே அவன் பேரழகன் என்பதைத் தெளிவாகப் பறைசாற்றிக் கொண்டிருந்தன. இந்த
உலகத்தில் எங்கும் காணப்படவே முடியாத அற்புதமான ஆண்மக்கள் கன்னிப்பெண்களின்
கனவுகளுக்குள் எத்தனை சுவாதீனமாக நடமாடிக் களிக்கிறார்கள். உண்மையில் அவ்வளவு
வசீகரமான ஆண்கள் பூதவுடலுடன் வசிக்கத் தகுதியற்றதுதான் இந்த யதார்த்தமும். அந்த
அழகன் உருவத்தில் புகைத் தன்மையுடன் காணப்பட்டாலும் அவன் அசைவுகளில் தீர்க்கம்
இருந்தது. அவன் ராஜன் பெண்ணின் படுக்கையறையின் வலப்புறச் சாளரத்தின் வழியாக
மதுரமான தென்றலின் எடையின்மையோடு உள்ளே நுழைந்தான். அவன் உள்ளே நுழைந்தவுடன்
படுக்கையறை மட்டுமே நம் ராஜனின் அரண்மனையைப் போலப் பத்து மடங்கு பெரிதான அளவில்
பிரம்மாண்டமானதாக விசாலித்து விட்டது. ராஜன் மகளின் சப்பர மஞ்சமோ ஒரு அஸ்வரதம்
இரண்டு நாட்கள் ஓடிக் கடக்கும் அளவுக்கு விரிந்து மலர்ந்து கிடந்தது.
படுக்கையறையின் விதானத்தின் வழியாக மேகங்களும் நட்சத்திரங்களும் வானத்தின் ஒரு
கோடியிலிருந்து இன்னொரு கோடிக்குத் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தன. அறையின்
பொருட்களில் செதுக்கப்பட்டிருந்த வேலைப்பாடுகள் ஒவ்வொன்றுமே தனித்தனிப்
பொருட்களால் பரிமாணம் பெற்றன. உள்ளே வளர்க்கப்பட்டிருந்த மலர்கள் விரித்த மணம்
கனவைத் தாண்டி வெளியேயும் சுழன்று அடித்தது. ஒவ்வொரு நுண்ணியதுகளும் பன்மடங்காக
வளர்ந்து போனதால் அவற்றின் இயற்கையான வண்ணங்கள் சூரியனின் பிரகாசத்தைப் போல
வெம்மையும் ஜொலிப்பும் பெற்று அறையை வண்ணங்களாலும் அங்கே சுற்றித் திரிந்த
இருவரையும் வியர்வையாலும் குளிப்பாட்டின. இத்தகைய அற்புதமான கனவுலகை
சிருஷ்டித்துக் கொண்டும் ராஜனின் பெண் அறையெங்கிலும் சிருங்கார ரசம் ததும்பும்
பாடல் வரிகளை முணுமுணுத்த வண்ணம் தன் நண்பனுடன் அந்தர வெளியில் பறந்தபடிக்கும்
உல்லாசமாக வளைய வந்து கொண்டிருந்தாள். அவனுடைய புகை வடிவம் இந்தப் பெண்ணுக்கு
எந்த விதத்திலும் ஒரு குறையாகப் படவில்லை. அவள் அவனை உடலோடும் உதிரத்தோடும்
உண்மையான மனிதனை தழுவிக் கொள்வது போலவே தழுவிக்கொண்டாள். அவனை முத்தமிடுவது
போலவே உதடுகளிலும் மார்பிலும் நாபியிலும் நாபியின் கீழும் முத்தமிட்டான்.
அவர்களிருவரும் என் காதுகள் கூசும்படியான கனிந்த அந்தரங்க வார்த்தைகளைத்
தங்களுக்குள் பரிமாறிக் களிப்புடன் கொஞ்சிக் கொண்டார்கள். வண்ணங்களும் மணமும்
சிரிப்பொலியும் ஒன்றறக் கலந்த ஆடையணிகளின்  அலைவும் உலகத்தையே துயிலிலிருந்து
எழுப்பி விடும் ஆரவாரத் தன்மையும் அப்பழுக்கற்ற தூய்மையும் கொண்டு இலங்கின.
ஆண்டவனே வார்த்தைகளால் அசுத்தப்படுத்தக் கூடாத இந்தப் பரிசுத்தமான காட்சிகளை
வெளியே சொல்லும் துர்பாக்கியம் எனக்கு என் வித்தையால் வாய்த்ததே.

ஒருவர் ஓட ஒருவர் துரத்தியும் ஒருவர் ஒளிந்துகொள்ள ஒருவர் கண்டுபிடித்தும்
ஒருவர் கண்களைக் கட்டிக் கொள்ள ஒருவர் வேடிக்கை காட்டியும் அவர்கள் நெடுநேரம்
விளையாடினார்கள். ஒவ்வொரு விளையாட்டின் முடிவிலும் ஒருவர் மற்றவரை
வெற்றிகொண்டதற்கு அடையாளமாக எதிரியை இறுக அணைத்துக் கொண்டார்கள். ஒவ்வொரு
விளையாட்டின் நோக்கமும் அதுவேயாக இருந்தது. மனிதனின் கைகள் படாத பெரிய வனத்தின்
விஸ்தாரத்துடன் திகழ்ந்த அந்தக் கனவு மாளிகையில் அவர்கள் விளையாட இரண்டு
நபர்கள் நிற்கச் சிரமப்படும் அளவே இடம் கிடைத்தததைப் போல ஒருவரையொருவர்
ஒட்டிக்கொண்டே நின்றுகொண்டிருந்ததைப் பார்த்த போது எனக்கு வேடிக்கையாகவும்
சந்தோஷமாகவும் இருந்தது. இப்படியே அவர்கள் கனவுலகின் அனாதி காலங்களை
விளையாட்டில் கழித்த பிறகு படுக்கைக்கு திரும்பி வந்தார்கள். ராஜனின் பெண் தன்
வழக்கமான இடத்தில் தன் வழக்கமான துயில் நிலையில் கழித்த பிறகு படுக்கைக்குத்
திரும்பி வந்தார்கள். ராஜனின் பெண் தன் வழக்கமான இடத்தில் தன் வழக்கமான துயில்
நிலையில் நிமிர்ந்து படுத்துக் கொண்டாள். அவளுடைய நண்பன் அவள் கட்டிலின்
கீழ்புறத்திலிருந்து மெதுவாகச் சுழன்று எழும்பி அவளை கால்களிலிருந்து
முத்தமிட்டுக் கவிந்தபடி படிப்படியாக முகத்தை அணுகினாள். ராஜகுமாரியின் கண்கள்
அளவு கடந்த அமைதியிலும் ஆனந்தத்திலும் எதிர்பார்ப்பிலும் கசிந்த கண்ணீருடன்
மூடியிருந்தன. அப்போதுதான் சபையோரே நெஞ்சைப் பிளக்கும் அந்தக் கொடூரமான சம்பவம்
நிகழ்ந்தது. தினமும் ராஜனின் பெண்ணை அவள் ஞாபகமின்றியே வாட்டி வதைத்துக்
கொண்டிருந்த துயர சம்பவம் நடந்தே விட்டது. அவள் முகத்தை மிக அருகே நெருங்கி
வந்த அவளுடைய நண்பன் திடீரென்று அவள் முகத்தில் காறியுமிழ்ந்தான். ஒரு
நொடிக்குள் பின் அவனுடைய புகையுருவம் மிக வேகமாகச் சிதிலமடைந்து கலைந்து
மறைந்து போனது. அவனுடைய ரத்தமும் சதையுமற்ற பேரழகு முகத்திலிருந்து வெளியே
தெறித்த எச்சில் கெட்ட கனவில் துர்மணத்தை அறை முழுக்க விசிறியடித்தபடி கூழொத்த
வெண் திரவமாக ராஜன் பெண்ணின் முகத்திலிருந்து வழிந்துகொண்டிருந்தது. அவள்
பீதியிலும் அருவருப்பிலும் துயரத்திலும் அலறியபடி உறக்கத்திலிருந்து
திடுக்கிட்டு விழித்துக்கொண்டாள். அன்று இரவு மட்டுமல்ல. ஒவ்வொரு இரவிலும் அவள்
கனவு இந்தவிதமாகவே முடிந்து போய்க்கொண்டிருக்கிறது என்பதை நான் மறுநாளிரவு
சரியாகவே யூகித்தறிந்தேன். அலறியபடி விழித்துக்கொள்ளும் பரிதாபத்திற்குரிய
ராஜன் மகளோ விழிப்பின் பலவந்தத்தில் தான் சற்றுமுன் என்ன கனவு கண்டோமென்பதை
ஒவ்வொரு நாளிரவும் மறந்து போய்க் கொண்டுமிருந்தாள். இதனால் முதல் நாளிரவு அவள்
முகத்தில் துப்பிய அவளுடைய நண்பனும் மறு நாளிரவு வெகு சகஜமாக அவளுடன் விளையாட
வருவதும் துவேஷமின்றி அவள் அவனைத் தன்னுடன் விளையாட அனுமதிப்பதும் விளையாட்டின்
முடிவில் அவள் முகத்தில் அவன் துப்பிவிட்டுப் போவதும் தொடர்ந்து நடந்துகொண்டே
இருந்திருக்கிறது. அவள் கனவு முழுவதும் மறந்து கலைந்து போகும்படியான
அசாத்தியமான வேகத்துடனும் ஈட்டியின் முனையைப் போல மிகக் கூர்மையாகத் தாக்கும்
படியும் ஒவ்வோர் நாளிரவும் அவன் அவள் முகத்தில் துப்பிக் கொண்டே
இருந்திருக்கிறான். இந்த அதிர்ச்சி மட்டும் ஒரு கசடாக ஆழ்மனதில் படிந்து போய்
அழகிய ஆண்களைக் காணும் போதெல்லாம் ஏற்படும் பயமாகவும் அருவருப்பாகவும் இந்த
அழகிய பெண்ணின் மனதை சின்னாபின்னப்படுத்திவிட்டது. ராஜன் மகளுக்குத் தன் வினோத
நடத்தையின் காரணம் இதுதானென்பது தெரியவில்லையென்றால் எனக்கோ மறுநாளிரவுவரை
அவளுடைய நண்பன் அப்படி நடந்து கொள்வதன் காரணம் தெரியவில்லை. ஆனால் அதைக்
கண்டுபிடித்து விட முடியுமென்கிற நம்பிக்கையைத் தூண்டும் விதமாக அன்று இரவே
நான் ஒரு ரகசியத்தை ராஜன் பெண்ணின் படுக்கையறையில் கண்டுபிடித்தேன்.
உறக்கத்திலிருந்து அதிர்ச்சியுடன் விழிப்புக் கண்டவுடனேயே தான் கண்ட கனவை
மறந்துபோய்க் கொண்டிருந்தாளென்று சொன்னேனல்லவா. எனவே அவளை மறுபடி தூங்கச் செய்ய
எனக்கு அதிக அவகாசம் தேவைப்படவில்லை. அவள் வெகு சாதாரணமாகவே சற்று நேரம்
என்னுடன் பேசிக்கொண்டிருந்து விட்டுத் தூங்கிப்போனாள். பேச்சில் கூட அவள் கண்ட
கனவின் சாயல் படிந்திருக்கவில்லை. எனவே நானும் அந்தக் கனவைப் பற்றி வேப்ப
மணத்தோடு கூடிய இரவுக் காற்று அறைக்குள் நுழைந்த போதே நான் அந்த அறையின் சாளரம்
திறந்திருப்பதை உணர்ந்தேன். எப்போதுமே அந்தச் சாளரம் திறந்த நிலையில்தான்
இருக்குமென்று நான் பின்னர் என் சிஷ்யையிடமே கேட்டுத் தெரிந்து கொண்டேன்.
இருந்தும் சாளரம் அப்படித் திறந்திருக்கிறதென்பது கடவுள் எதையோ சூசகமாக
அறிவிக்க முயலுகிறாரென்கிற உணர்வை எனக்குத் தந்தது. நான் அன்று ராஜன் பெண்ணின்
படுக்கையறையில் போடப்பட்டிருந்த நீண்ட இருக்கைகளில் ஒன்றிலேயே படுத்து இரவைக்
கழிக்க முடியுமென்று சொல்லியிருந்தேன். இரவு கலைவதற்கு அப்போது நெடு
நேரமிருந்தது. நான் எழுந்து சாளரத்தின் அருகே சென்றேன். சாளரத்தின் மிக அருகே
படுக்கையறையை அரண்மனைத் தோட்டத்தில் வளர்ந்திருக்கும் வேப்ப மரத்தின் உச்சிக்
கிளை தழைத்து நெருங்கியிருக்கிறது. ஈட்டிகளால் அமைக்கப்பட்ட பன்னிரெண்டடி
உயரமான வேலியில் நம்பிக்கை வைத்து காவலர்கள் குறைக்கபட்டிருந்த அந்தப்
பகுதியில் அரண்மனைத் தோட்டத்தின் புல் வெளியிலிருந்து புறப்பட்டு இரண்டு
காலடிச் சுவடுகள் மரத்தின் மீதேறி உச்சிக் கிளையை அடைந்து சாளரத்தின் வழியே
ராஜனின் மகளின் படுக்கையறைக்குள் தாவியிருப்பதைக் கண்டேன். அவை பிறகு அறையின்
சுவரோரமாகவே பதுங்கிப் பதுங்கி நடந்து அங்கே நிறுத்தப்பட்டிருந்த பொருட்களை அவை
இங்கே இல்லாதனவே போல் ஊடுருவிக் கடந்து ராஜன் பெண்ணின் தோழி படுத்திருக்கும்
இணைப்பறைக்குள் நுழைந்து மறைவதையும் கண்டேன். இளவரசியின் கனவு நண்பன் அவள்
முகத்தில் காறியுமிழும் காரணத்தை கண்டுபிடித்து விட முடியுமென்கிற நம்பிக்கை
என்னுள் உதயமாயிற்று.

இந்த அளவோடு என் முதிர் முப்பாட்டனாரின் முதல் நாளிரவுக் கதை (அல்லது
உட்சுவாசத்தின் கதை) முடிந்தது. கதை கேட்டுக் கொண்டிருந்த ஜனங்களும் அரச
குடும்பத்தவரும் அங்கிருந்து கலைந்து செல்ல மனமின்றி கலைந்து சென்றார்கள்.
அனுமதிக்கப்பட்டவர்கள் அங்கேயே உட்கார்ந்து பேசி மறுநாள் இரவு வரை தங்கள்
பொழுதைக் கழித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவருடைய பேச்சின் மையமும்
இளவரசியின் கனவின் மீதும் வேப்பமரத்தின் வழியே அரண்மனைப் படுக்கையறைக்குள்
தாவிய மாயக் காலடிச் சுவடுகளின் மீதுமே குவிந்திருந்தது. அவர்கள் அனைவருமே
ராஜன் மகள் உறங்கும்போது தானுறங்காமல் அவளுக்குக் காவலிருக்க வேண்டிய அவளின்
தோழிதான் அந்தக் காலடிகளுக்குரிய நபரை விருப்பத்துடன் உள்ளே அனுமதித்தாளென்று
அவளை வெறுக்கத் தலைப்பட்டார்கள். அவள் உண்ட வீட்டிற்குச் செய்த இரண்டகம்
மன்னிக்க முடியாதென்று அனைவருமே ஒத்த குரலில் கூவி ராஜதானியைத் தாண்டிச்
செல்லும் பருவக் காற்றின் வழியே தொலைதூரவாசிகளுக்கெல்லாம் இந்த
ஒழுக்கக்கேட்டைப் பற்றிச் செய்தி அனுப்பி விட்டார்கள். எனவே தொலைதூரவாசிகளும்
ராஜன் பெண்ணின் தோழியைத் தங்கள் மனதார வெறுத்தார்கள். மறுநாளிரவு கதை
முடிந்தவுடன் அவளுக்கு ராஜன் என்ன தண்டனை தருவாரென்பது பற்றி நட்சத்திரங்களை
விஞ்சும் எண்ணிக்கையில் ஊகங்கள் அவர்களிடையே வெடித்துச் சிதறின.
நகரத்திலிருந்து வெகு தொலைவு விலகிய சிறிய கிராமம் ஒன்றிலிருந்து தோழியின் வீடு
அன்றிரவே தீக்கிரையாக்கப்பட்டது. அதில் வசித்து வந்த அவளுடைய வயது முதிர்ந்த
பெற்றோர்கள் வருந்தி தாங்கள் உயிரோடு எரித்துக் கொல்லப்படுவதை முழுச்
சம்மதத்தோடு ஏற்றார்கள். இது நடந்து பத்தொன்பது நாட்களுக்குப் பிறகே விஷயம்
அரண்மனையை எட்டியது. ராஜதானியே அந்த நிகழ்ச்சிக்காக பத்தொன்பது நாட்கள்
கழித்துத் துக்கம் அனுஷ்டித்தது. முதல் நாள் கதை முடிந்த அந்த இரவில் அவளை
வெறுத்துக் கொன்று போடத் துடித்த அனைவருமே அடுத்த நாளிரவுக் கதை முடிந்ததும்
தங்கள் தவறை உணர்ந்தார்கள். அந்தப் பெண்ணிடம் மானசீகமாக மன்னிப்புக் கேட்டுக்
கொண்டதோடு தவறுகள் சரி செய்யப்பட்டுவிட்டதாகவும் அவர்கள் தங்களைச் சமாதானப்
படுத்திக்கொண்டார்கள். ஆனால் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் பத்தொன்பது
நாட்களுக்குப் பிறகு தன் மனமதிர அந்த அப்பாவிச் சேடிப்பெண் தெரிந்துகொண்டபோது
என் முதிர்முப்பாட்டனார் முதல் நாளிரவில் முடிக்கக் கூடாத இடத்தில் கதையை
முடித்ததுதான் தன்னை நிர்கதியாக்கியதென்று அவரை மனதாரச் சபித்துவிட்டு ராஜன்
பெண்ணின் படுக்கையறைச் சாளரத்திலிருந்து புலி பாய்ந்த அதே வழியாக நந்தவனக்
குத்தீட்டி வேலியின் மேல் பாய்ந்து தன் உயிரை இருபதாம் நாள் மாய்த்துக்கொண்டு
விட்டாள். இது ஒருபுறமிருக்க முதல் நாளிரவு கதை முடிந்த பிறகு அரண்மனைக்குத்
திரும்பி வந்த ராஜன் மனைவியும் ஒரு பெண்ணின் தாப ரசம் ததும்பும் கனவுகளை அவள்
பெற்றோர்களின் முன்னிலையில் ஒரு பெரும் ஜனத்திரளே அறிய பகிரங்கமாக வர்ணித்த என்
முதிர்முப்பாட்டனாரை வெறுத்து அவரைத் தன் வாயாரச் சபித்துக்கொண்டிருந்தாள்.
ஆண்களின் உலகில் ஒரு பெண்ணின் மனம் என்பது அவள் தகப்பனாலும் அவளுடைய உடல்
என்பது பிற எல்லா ஆண்களாலும் கற்பனையால் சிருஷ்டித்துக்கொள்ளப்படுகிற
வஸ்துக்கள் என்னும் வழக்குச் சொல்லை நினைத்து அவள் அன்றிரவு தூங்காமலும்
தவித்தாள். தன் பெண்ணின் மூடிய கண்களினுள் பிரவகித்துக் கொண்டிருந்த
சிருங்காரக் கனவு அவள் நாசி நுனியில் மலராகவும் உதடுகளின் ஓரங்களில்
புன்னகையாகவும் கன்னங்களில் சிவந்த வண்ணமாகவும் முலைக் காம்புகளில் கடினமான
முத்தாகவும் பிரதிபலிப்பதையும் அவள் தன் கற்பனையில் கண்டு பீதியடைந்தாள்.
பார்ப்பவரைப் பரவசப்படுத்தும் அந்த உடல் மாற்றங்களை இருபத்தியிரண்டு ஆண்கள்
பார்த்துக்கொண்டிருந்தார்கள் என்பதை அவளால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.
ராஜனை அவள் தன் வெறுப்பிலிருந்து அவன் தன் பெண்ணின் தகப்பன் என்கிற முறையில்
ஒதுக்கிவைத்தாள். ராஜனையும் என் முதிர்முப்பாட்டனாரையும் தவிர்த்த பிற இருபது
வேடர்களையும் மன்னிப்பதற்கு அவளுக்கு எந்த காரணம் எதுவும் கிடைக்கவில்லையாதலால்
படுக்கையறைக்குள் நுழைந்து நட்சத்திரவாஸிகளின் கலவி என்கிற பாடலை இசைத்த அந்த
இருபது ஆண்களின் தலைகளை உடனே வாளால் சீவிக் கொய்துவிடும்படி ராஜனுக்குத்
தெரிவிக்காமல் ரகசியமாகத் தன் சிப்பாய்களுக்கு ஆணையிட்டாள். அதன்படி அந்த
வேடர்கள் அன்றிரவே கொலைக்களத்திற்கு இரண்டாம் பேரறியாமல் வரவழைக்கப்பட்டு
வெட்டிக் கொல்லப்பட்டுவிட்டார்கள். ஈடாக வழங்கப்பட்ட பெரும் செல்வத்தினடியிலும்
ராஜ விசுவாசத்தின் சுமையிலும் சிக்குண்டு அவர்களுடைய குடும்பத்தினரின் கண்களும்
நாவுகளும் நசுங்கிப் போய்விட்டன. இந்தக் கொலைகளுக்குப் பிறகே அரண்மனையில் ராஜன்
பெண்ணின் திருமணம் உள்பட பல காரியங்களின் வரிசையும் என் முதிர்முப்பாட்டனாரின்
கீர்த்தியும் தலைதெறிக்கும் வேகத்தில் உச்சியை நோக்கிப் பாய்ந்து சென்றன என்று
சொல்வார்கள். ஆனால் அப்பழுக்கற்ற ஒரு பெண் அநியாயமாக நிர்கதியாக்கப்பட்டாள்
என்கிற விஷயத்தையும் தன் கவலை தீர இசைத்த இருபது வேடர்கள் கொல்லப்பட்ட
செய்தியையும் பல நாட்கள் கழித்தே தெரிந்து கொண்ட ராஜன் பிரகாசிக்கும் தன்
அதிகாரத்தின் நிழலில் நடந்து போன பிசகுகளுக்குத் தானே பொறுப்பேற்றுக் கொண்டு
என்றென்றுமே எழுந்திருக்க முடியாத நோயில் வீழ்ந்து படுத்த படுக்கையாகி
விட்டான். என் முதிர்முப்பாட்டனாரைப் பொறுத்தவரையில் அந்த இரவிலேயே இருபது
வேடர்களுடன் சேர்த்து அவரையும் அவள் கொன்றுவிடத் துடித்ததாக வருடங்கள் கழித்து
அவர் அரண்மனை வளாகத்தை விட்டு வெளியே துரத்தப்பட்ட அன்று எக்காளத்துடன் உரக்கச்
சொல்லிச் சிரித்தாளென்கிறது ஒரு கதை. ஆனால் கதையைக் கேட்டு விட்டு வந்த இரவில்
அவருடைய ஆளுமையும் ஞானமும் பெருமையும் இவற்றுக்கு மேலாக நன்றியுணர்சிச்யும்
அவரைக் கொல்லும் அவாவிலிருந்து ராஜன் மனைவியைப் பிரித்து அப்புறப்படுத்தி
வைத்தன. இளம்பெண்ணின் கனவுகளைக் கூச்சமில்லாமல் பார்த்ததோடல்லாமல் அதை வெளியே
சொன்னவன் அந்தக் கனவுகளின் நினைவால் தானே சாவான் எனும் மூதுரையை எண்ணி அவள்
தன்னைச் சமாதானப்படுத்திக்கொண்டான். அந்த மூதுரை துரதிர்ஷ்டவசமாக உண்மையாகவும்
இருந்தது. விதி ராஜன் மகளின் இடை நெகிழ்ந்து ஸ்தனங்கள் சரிந்த துயில் நிலையை
என் முதிர்முப்பாட்டனாரின் மனக்கண் முன் திரும்பத் திரும்பக் காட்டி அவரை
ரகசியமாகப் பல நாட்கள் அலைக்கழித்து வந்தது. பேதங்களைத் துறந்துவிட்ட தன் மனம்
சிருங்கார உணர்வுகளால் கறைப்பட்டுக்கொண்டிருந்த பாவத்திலிருந்து
தப்பித்துக்கொள்ளும் வண்ணம் இளமையிலேயே தன்னைச் சாவு அணைத்துக் கொள்வதை அவர்
மூன்றாவது பிரயோகத்திற்குப் பிறகு அந்த நாட்களில் எதிர்பார்த்து ஏங்கிக்
கொண்டிருந்தார். மாறாக தான் ஒரு சாட்சியாக நின்று கண்ட ராஜன் மகலின் கனவும்
அவளின் உறக்கமும் அவர் உள்ளத்தில் விதைத்த விஷ விதையோ அழியாமல் ராஜன் மனைவியின்
விருப்பப்படியும் அவர் விருப்பத்திற்கு மாறாகவும் வளர்ந்தபடியே தானிருந்தது.
ராஜன் மகள் தன் நோய் தீர்ந்து அழகும் ஆரோக்கியமும் கொண்ட அரசகுமாரனுக்கு
மணமுடிக்கப்பட்டு புகுந்த வீடு சென்று பல காலங்களுக்குப் பிறகும் மக்கள் அவளைக்
கிட்டத்தட்ட மறந்தே போன பிறகும் அவளுடைய கனவைக் கண்டதன் பாதிப்பால் விரக
நோயுற்று அலைந்த என் முதிர் முப்பாட்டனார் (மூன்றாவது பிரயோகத்திற்குப் பிறகே
தெரிந்து கொண்ட) பெண்களின் கனவுகள் புருஷர்களால் பார்க்கப்படக் கூடாதவை என்று
அறிவுறுத்தும் சொப்பன சாஸ்திரத்தின் கடைசி அங்கத்தை மறந்துபோய் அப்படிப்
பார்வையின் கறை படாதவையானதினாலேயே அவை மூப்பைத் தவிர்த்து நித்திய
சௌந்தர்யத்தைப் பெற்றிருக்க ஆசிர்வதிக்கப் பட்டவை என்று எடுத்தியம்பும் பகுதியை
மட்டும் நினைவில் கொண்டவராய் பழைய நகரத்தின் பெருமைமிகு பெண்மணியாக மதிக்கப்
பட்டுக்கொண்டிருந்த தன் மனைவியின் இளமை ததும்பும் கனவிற்குள் அவளறியாமல்
புகுந்து பார்க்கும் கீழான மனநிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார். சாஸ்திரத்தின்
விதிகளோ குருவிற்கு அளித்த வாக்குறுதியோ நினைவிற்கு வராத வண்ணம் விதி அவர்
ஞானத்தைக் கட்டிப்போட்டுவிட்டது. மனைவியான அந்தப் பேரிளம்பெண்ணின் கனவில் அவர்
எதிர்பார்த்த படியே அவளை இறுக்கமும் மதர்ப்பும் நறுமணமும் ததும்பும் தன்
குருவின் மகளாக திருமணத்திற்கு முன்பிருந்த பழைய யவ்வன ஸ்திரீயாகக் கண்டு
ஞானவான்கள் உதாசீனப்படுத்தும் சிருங்கார உணர்வால் புளகாங்கிதமடைந்தார். அந்தக்
கணத்திலேயே விரோதித்துக்கொள்ளப்பட்ட சாஸ்திரங்களின் கோபமும் வஞ்சிக்கப்பட்ட
குருவின் சாபமும் அதே கனவில் அவர் கண்முன் வேறு இரண்டு பைசாசக் காட்சிகளையும்
உருவாக்கி விட்டது. ஒன்றில் யவ்வனம் ததும்பி நிற்கும் தன் மனைவியின் முன் அவள்
புறங்கையால் அலட்சியப்படுத்தி ஒதுக்கும்படி நடுப்பிராயத்தை முழுவதுமாகத்
தாண்டியிராத என் முதிர்முப்பாட்டனார் தானொரு நரைகூடி முதிர்ந்த கிழவனாகத்
தள்ளாடியபடி நின்றிருக்கக் கண்டு அதிர்ந்து போனார். இரண்டாவதும் குருதியைச்
சில்லிட வைத்ததுமான காட்சியில் பல வருடங்களுக்கு முன் நோயாளியின் துர்கனவால்
நிலைகுலைந்து போய் தன்னை இவ்வுலகின் கண்களிலிருந்து காணாமல் போக்கிக்கொண்டு
விட்டவரென்று நம்பப்பட்ட அவருடைய பால்யகால நண்பர் தன் ஒளிவிடத்திலிருந்து
காளைப் பருவம் சற்றும் தளராத உடற்கட்டோடு குருவின் மகளின் முன் தோன்றினார்கள்.
சுருட்டி இழுக்கும் சாவின் படிக்கட்டுகளில் ஒருபுறம் தள்ளாடியபடி தான்
ஏறிக்கொண்டிருக்க அதே படிக்கட்டுகளைப் படுக்கையாக்கி அவர்களிருவரும் பூரண
நிர்வாணிகளாய் அதன் மீது சல்லாபித்து விளையாடுவதைச் சாபத்தால் வலுக்கட்டாயமாகத்
திறக்கப்பட்ட கண்களால் பார்த்த என் முதிர்முப்பாட்டனாரின் நினைவிலிருந்து அவர்
கற்ற வித்தை முழுவதும் அந்தக் கணத்திலேயே மறந்து போய்விட்டது. அதற்குப் பிறகு
அவரும் அதை வெளியில் எங்கும் தேடி மெனக்கெடவில்லை. அவருக்குள் ஜொலித்துக்
கொண்டிருந்த கலையின் பிரகாசம் அணைந்து போனதால் அவர் முகம் எரிந்தவிந்த
விறகுக்கட்டையைப் போலக் கருத்துப் பொடிந்து போய்விட்டது. அவர் தனக்குத்தானே
மழித்துக் கொள்வதை நிறுத்தி தலையிலும் முகவாயிலும் தாறு மாறாக வளர்ந்த
மயிர்க்கற்றைகளில் அடை எனப்படும் துர்முடிச்சுகள் உருவாகிப் பெருக
அனுமதித்துவிட்டார். அப்படியொரு வீழ்ச்சியை எதிர்பார்த்திருந்த அவருடைய
எதிரிகளும் அவர் பசுவைப் புணர்ந்தவர் என்றும் சாஸ்திர விரோதி என்றும் இருபது
அப்பாவிகளின் மரணத்திற்குக் காரணமாயிருந்தவர் என்றும் மனைவியைப் பிறந்த
வீட்டிற்குத் திரும்ப விரட்டியடித்தவர் என்றும் அஞ்ஞானப் பீடையால்
பீடிக்கப்பட்டு விட்டவர் என்றும் பலமாகப் பிரச்சாரங்கள் செய்து அவரைத் தீராத
பழிக்குள் தள்ளி அரண்மனையை விட்டு வெளியேற்றிக் காட்டிற்குள் துரத்தி
விட்டார்கள். அவருடைய இரண்டு ஆண் வாரிசுகளை ஆதரவற்றவர்களாக்கி அவருடன் கூடவே
துரத்தி விட்டார்கள். மறந்து போன தன் வித்தையை அவர்களுக்குக் கடத்த முடியாமல்
என் முதிர்முப்பாட்டனார் அவர்களை அஞ்ஞானிகளாக்கினார். ஒரு காலத்தில்
பெண்களுக்கான வேதமாயிருந்த அவருடைய போதனைகளடங்கிய ஓலைச் சுவடிகள் முழுவதையும்
தேடி எடுத்துத் தடயமில்லாமல் மடாதிபதிகள் அவற்றை அழித்தொழித்தார்கள். பெண்களை
மீண்டும் புஜங்களடியிலும் யோனியிலும் மழித்துக்கொள்ளாத காடாக ரோமம் வளர்க்கச்
செய்து துர்மணத்தால் அவர்களை எப்போதும் குற்ற உணர்வுக்குள்ளானவர்களாக ஆக்கித்
தங்கள் ஆளுமையின் கீழ் அடிமைப் படுத்திக் கொண்டார்கள் துர்கனவுகளால்
அவதிப்பட்டவர்கலை ஈவிரக்கமின்றிக் கண்களைப் பறித்துவிட்டுக் கொன்றார்கள்.
நாவிதர்களைக் கடைச் சாதியினரென்று பிரகடனப்படுத்தி மயானபூமியின் அருகே
எப்போதும் பிணங்கள் வேகும் நாற்றத்தைச் சுவாசித்துக்கொண்டிருக்குமாறு நகரத்தின்
மையப்பகுதியிலிருந்து பிரித்துக் குடியமர்த்தினார்கள். மகளின் பொருட்டாக இருபது
அப்பாவிகளைத் தன் மனைவி கொன்ற பாவத்தை வலிந்து தான் ஏற்றுக் கொண்டு
வெகுகாலத்திற்கு முன்பே நோய்ப் படுக்கையில் வீழ்ந்துவிட்ட போதிலும் மனந் தளராது
தன் பெண்ணின் உதவியுடன் உத்தமமான முறையில் ராஜ்ஜிய பரிபாலனம் செய்து வந்த ராஜன்
என் முதிர்முப்பாட்டனாரின் செய்கையையும் அதன் விளைவுகளையும் கேள்விப்பட்டு
நடப்பவற்றைத் தடுக்கும் வகை தெரியாமல் மரணப் படுக்கைக்குத் தன்னுடலை மாற்றிக்
கொண்டு நாட்களை எண்ணவாரம்பித்து விட்டு நாட்டின் நிர்வாக இயந்திரத்தை நிறுத்தி
விட்டான். மகளை மணந்து அந்நகரத்தின் ராஜவாரிசாக வந்த ராஜனின் மருமகனோ ஏழ்மை
உருவாக்கும் மூர்க்கர்களைக் கரை சேர்ப்பதைவிடக் கடினம் தறிகெட்டலையும்
அறிவாளிகளைத் திருத்திச் சீர்செய்வதென்று கூறி ராஜன் மகள் எவ்வளவோ மன்றாடியும்
கேட்காமல் மெதுமெதுவாக பழைய நகரத்தைக் கைவிட்டுவிட்டான். வருடங்கள் உருண்டபோது
காட்டையழித்து நிர்மாணிக்கப்பட்ட பழைய நகரத்தின் சுவர்களுக்குள் அதுகாறும்
தங்களை மறைத்தபடி காத்திருந்த விருட்சங்களும் விலங்குகளும் வெளிப்பட்டு
மனிதர்களை வேட்டையாடத் துவங்கின. விரைவிலேயே பிரபஞ்சத்தின் சுழற்சி விதிக்கேற்ப
மரங்களுக்குள் சுவர்கள் மறைந்து கொள்ள இந்தப் புதிய நகரம் அப்போது அழித்த
அடர்ந்த வனம் அங்கே தன்னை ஸ்தாபித்துக் கொண்டது. புத்திவீனர்களாகி நிர்கதியாக
மயான பூமியில் அலைந்து திரிந்த என் முப்பாட்டன்கள் நகரம் காடாகியபோது
விலங்குகளோடு விலங்குகளாகத் திரியும் வேடர்களாக மாறித் தங்களைச் சாவிலிருந்து
காத்துக்கொண்டனர். வாரிசுகளையும் விலங்குகளாக காட்டிலேயே வளர்த்தெடுத்தனர்.

இரண்டாம் நாளிரவுக் கதை (அல்லது வெளிச்சுவாசத்தின் கதை)/ என் முதிர்பாட்டனார்
சொல்கிறார்:

தலைமுறைகளுக்கு முன் ஒரு வனமிருகத்தின் கனவை இந்த ராஜவம்சம்
நிர்மூலமாக்காமலிருந்தால் ஒருவேளை நான் இந்தக் கதையைச் சொல்வதற்கான சந்தர்ப்பம்
கூடாமலே போயிருக்கலாம். ராஜன் மகளின் படுக்கையறையென்பது ஒரு கிழட்டுப் புலியின்
பிறப்பிடமாக அதன் கனவில் பத்து தலைமுறைக் காலம் நீண்டுகொண்டிருந்த ஒன்றென்பதே
இதன் காரணம். ராஜன் மகளுடைய படுக்கையறை மட்டுமல்ல. இந்த நகரமும் நான் இதைச்
சொல்லிக்கொண்டிருப்பதும் நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பதும் மிருகங்களின்
கனவிலேயே நடந்து கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிய வேண்டும். இந்தப் பிரபஞ்ச
யதார்த்தம் முழுவதுமே மிருகங்களின் கனவுதானென்பதை ஏற்கனவே என் குருகுலவாசம்
எனக்குக் கற்றுக்கொடுத்திருந்தது. சொல்லப் போனால் அதுவே நான் கற்றுக் கொண்ட
வித்தையின் சாரமாகவும் இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் மனிதன் தேடிக்
கொண்டிருக்கும் பிரபஞ்ச மர்மத்தின் சாரமாக இருப்பதுவும் இதே. மிருகங்கள்
இப்பிரபஞ்சத்தைக் கனவில் தங்களின் பிறப்பிடமாகக் காண்கின்றன. கருப்பையிலிருந்து
வெளியே வந்து விழுந்ததுமே இந்த உலகம் ஒரு கருப்பையாக மாறி அவற்றைச் சூழ்ந்து
கொண்டு விடுகிறது. பிறகு அது அவற்றின் நிரந்தர வீடாகவும் மாறி விடுகிறது.
மனிதனைப் போலவே பட்சியினங்களும் கரையான்களும் கூட தங்கள் உறைவிடத்தைத் தாங்களே
கட்டிக்கொள்ள பிரியப்படும். இப்பூவுலகில் மிருகங்கள் மட்டுமே தமக்கென்று ஒரு
உறைவிடத்தைக் கட்டிக் கொள்ள விழைவதில்லை. ஏனெனில் உண்பதும் உண்ணப்படுவதும்
பருகுவதும் பருகப்படுவதும் உட்சுவாசமும் வெளிச்சுவாசமும் சுவாசிக்கும் நாசியும்
பொருள்களைக் கவியும் சீதோஷ்ணமும் தட்பவெப்பங்களைத் தங்கள் மேல் அனுமதிக்கும்
பொருள்களும் அமிழ்வதும் வெளிப்படுவதும் அமிழ்தலுக்கும்
வெளிப்படுதலுக்குமிடையில் சொற்ப கணம் இல்லாதிருப்பதும் ஆகிய ஒவ்வொன்றுமே அவை
காணும் கனவுகளில் அவை உறையும் இடமாகவே தெரிகின்றன. உணவினுள் தன் முகத்தை
அமிழ்த்தும் மிருகத்தின்முன் உணவு அதைத் தன்னுள் வாஞ்சையோடு பொதித்து கொள்ளும்
இடமாகவே இருக்கிறது. இதைப் போன்றே காற்று அதைத் தன் அகண்ட பரப்பினுள் அடக்கிக்
கொள்கிறது. காட்சிகளின் வெளியில் விலங்கு நுழைந்து உள்ளே உறைகிறது. கலவியின்
போது ஆண்விலங்கு தன் லிங்கத்தைத் தானாகப் பாவித்துப் பெண் விலங்கின் புழையை
இடமாக்கி அதனுள் நுழைத்து தஞ்சமடைகிறது. அதே சமயம் பெண் விலங்கும் தன்னுடலை ஆண்
மிருகத்தின் கால்களுக்கிடையில் நுழைத்து தன்னைத் தஞ்சமளிக்கிறது. நுழைவதும்
வெளியேறுவதும் மற்றும் உருவாவதும் மறைவதுமான காட்சிகளைத் தவிர யதார்த்த உலகின்
மேல்கீழ் மற்றும் பக்கவாட்டு இயக்கங்கள் விலங்குகளின் கனவுகளில்
தட்டுப்படுவதில்லை. மேலும் தன் பார்வையால் இப்பிரபஞ்சத்தைத் தன் பிறப்புக்கு
முந்தைய ஞாபகங்களோடும் இனைத்துவிடும் ஒரு மிருகம் கருப்பையின் நிணக்கசடோடும்
வாசனையோடும் உதிர்ந்து முதலில் விழுந்த இடத்தைத் தன் சாவிற்குப் பிறகும் மறந்து
போவதில்லை. விலங்குகளின் இந்த கனவுலகம்தான் சாஸ்திரங்களில் தேவர்களின் உலகமாக
விவரிக்கப்படுகிறது. ஏன் அங்கே கடவுளர்கள் இமைப்பதில்லை. ஏன் தேவர்களுக்கு
பசியும் தாகமும் கிடையாது. ஏன் அங்கு போய்ச் சேர்ந்த பிதுர்க்கள்
உறங்குவதில்லை. ஏனெனில் இருக்கிறோம் என்பதை ஸ்தூலமாகக் காட்டும்
யதார்த்தத்திலிருந்து விலகி அரூப உலகை நோக்கிப் போய் விட்ட தேவர்களுக்கு
அவர்கள் இருப்பின் மீது அவர்களுக்கே சந்தேகம் வந்து விடாதிருக்கும் பொருட்டாக
பரந்தாமனால் சிருஷ்டிக்கப் பட்ட தேவருலகம் என்னும் இடமே அவர்களின் உணவாகவும்
நீராகவும் உறக்கமாகவும் பார்வையாகவும் காலமாகவும் சுவாசமாகவும் ஆகி விடுகிறது.
உலகின் எந்த மூலையிலும் பயிலப்படும் எந்த வித்தையின் சாரமாகவும் இருக்கும் இந்த
ரகசியத்தை அனுபவித்துத் தெரிந்துகொள்ள நான் எடுத்துக்கொண்ட பிரயத்தனங்கள்
வலியும் வினோதமும் நிறைந்தவை. ராஜன் மகளின் படுக்கையறையில் பத்து தலைமுறைக்
காலம் தேங்கிக் கிடந்த அந்தக் கிழட்டுப்புலியின் சோகத்தை இந்தப் பிரபஞ்ச
விதியைப் புரிந்து கொண்டவர்களால்தான் அது ஒரு அற்புதமோ அன்றி ஒரு மர்மமோ அல்ல
மாறாக யதார்த்தம்தான் என்றும் நம்ப முடியுமாதலால் ராஜன் மகளின் கனவின் கதையை
மேலே தொடரும் முன் மிருகங்களின் கனவுகளைப் பற்றி உங்களுக்கு நான் சொல்லியாக
வேண்டியிருக்கிறது. என் குருகுல வாசத்தின் சவால் நிறைந்த ஒரு பகுதிக் கதையை
உங்களுக்குச் சொல்லவும் இந்தச் சந்தர்ப்பத்தை நான் பயன்படுத்திக் கொள்கிறேன்.
இந்தக் கதை நான் பிறர் தூக்கத்தினுள் ஊடுருவி அவர்கள் கனவுகளைப் பார்க்கும்
வித்தையில் பாண்டித்யம் பெற்றவனென்று என் குருவால் ஆசீர்வதிக்கப்பட்ட கதை.
உங்களுடன் சேர்ந்து இந்தக் கதையை கேட்டுக் கொண்டிருக்கும் இந்த மங்கையை
வெற்றியின் பரிசாக நான் மணம் புரிந்து கொண்ட கதை. என்னைப் பண்டிதனாக்கிய என்
பெருமைமிகு ஆசானின் அளவிட முடியாத பெருமைகளைப் பற்றிச் சொல்லும் கதையும் கூட.

கேளுங்கள். அறியப்படாத பொருள்கள் கனவுகளின் உலகில் பார்க்கப் படுகின்றன என்பது
விதி. மனிதன் பிரபஞ்சத்தைப் பார்க்கப் பிரியப்படுவதில்லை. மாறாக அதை அறியவே
பிரியப்படுகிறான். அறிதல் யதார்த்தத்தை உண்டு பண்ணுகிறது. அறிவதன் பொருட்டே
மனிதன் சப்த தாதுக்களை ஒழுங்குபடுத்தி பாஷையை உண்டாக்கினான். மிருகங்களோ பாஷையை
அறியாதவை. எனவே அவை தங்களைச் சுற்றியுள்ள பிரபஞ்சத்தை அறியப்
பிரயாசைப்படுவதுமில்லை. பிரயாசையற்ற இடத்தில் பார்வை பூரணமாக விளங்குகிறது.
பார்த்தல் அறிதல் என்னும் இரண்டு அப்பியாசங்களால் முறையே இவ்வுலகைக்
கனவுலகென்றும் யதார்த்த உலகென்றும் மனிதன் பிரித்துக் கொள்வதைப் போல மிருகங்கள்
பிரித்துக்கொள்வதில்லை. பார்த்தல் என்பது கனவின் லட்சணமாதலால் மனிதன் அறிய
முனையும் யதார்த்தம் என்பது மிருகங்கள் காணும் கனவாக இருக்கிறது. பிறரது
கனவுகளுக்குள் ஊடுருவும் வித்தையில் தன் எல்லையைப் பரீட்சித்துக்கொள்ள
விரும்பும் யாரும் இதனாலேயே மிருகங்களின் கனவுகளுக்குள் புகுந்து அவற்றின்
பார்வை வழியே பிரபஞ்ச யதார்தத்தைக் கண்டு வர வேண்டுமென்கிற விதியை கனவறியும்
சாஸ்திரம் வற்புறுத்தும். அது மிகவும் கடினமான பரீட்சையாகவும் இருக்கும்.
இந்தப் பரீட்சைக்குள் பிரவேசிக்க விரும்புபவன் மூன்று நிலைகளில் அதைக் கடந்து
வர வேண்டியிருக்கும். முதல் நிலையில் அவன் மிருகங்கள் தங்கள் கனவுகளில் என்ன
காண்கின்றன என்பதை அறிந்து வர வேண்டும். இரண்டாம் நிலையில் அந்தக் கனவுகளில்
தோன்றும் காட்சிகளின் அசைவுகளின் இயல்பை அவன் அவதானிப்பான். மூன்றாவதும்
இறுதியானதும் மிகக் கடினமானதுமான நிலையென்பது மிருகங்கள் தங்கள் கனவுகளில்
இந்தப் பிரபஞ்சத்தை என்னவாகப் பார்க்கின்றன என்பதை அறிந்து தேர்வது. சோதனைக்காக
என்வசம் ஒப்படைக்கப்பட்ட ஒரு பசுமாட்டின் கனவுகளுக்குள் புகுந்து அதை அறியும்
பரீட்சையில் என் குருவின் ஆக்ஞைப்படி நான் பிரவேசித்தபோது பாஷையாலான
யதார்த்தத்தை அந்த விலங்கு மீண்டும் எப்படி பாஷையற்ற தூய பொருளாக மாற்றித் தன்
கனவில் காண்கிறது எனும் அறிதலின் ஆரம்பக் கட்டத்தைத் தாண்டவே எனக்கு
நூற்றெண்பது நாட்கள் பிடித்தன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். பொருளின் மீது
சுமத்தப் பட்டிருக்கும் வார்த்தைகள் கழன்று கொள்ளும் தருணங்களில்
அப்பொருளிலிருந்து முன்பு பிரிக்கப்பட்டு ஞாபகமாக மாற்றப் பட்டிருக்கும்.
ஒளியும் மணமும் மீண்டும் அப்பொருளை வந்து சேர்ந்து கொள்கின்றன. பசுமாட்டின்
கனவுகளூடே அந்தக் கனவுகளின் சுழலுக்குள்ளும் அடர்த்திக்குள்ளும் சிக்கிக்
கொண்டு மூச்சடைத்து இறந்து போய் விடாமல் ஒரு குளிர் பருவம் முழுவதும் மிகக்
கடினமான பிரயாணத்தை மேற்கொண்ட பிறகு அந்தக் கனவுகள் தூயதென்று உணரும்படியான
ஆனால் குழப்பமான நிறங்களையும் கலவையான மணங்களையும் கொண்டிருப்பதாக என்
குருவிடம் வந்து கூறியபோது நான் பரீட்சையின் முதல் நிலையை வெற்றிகரமாகக் கடந்து
வந்து விட்டதாகக் கூறி அவர் வைத்திய சாலைக் கட்டிடத்தின் நான்காம்
அடுக்கிலிருந்து முன்பு குதித்துத் தன்னை மாய்த்துக்கொண்ட முதல் சீடனின்
நினைவில் துயரக் கண்ணீர் பெருக்கியபடி என்னை அணைத்துக் கொண்டார். பிறகு அவர்
தன் பெண்ணை நோக்கித் திரும்பி இனி அவள் என்முன் வரும் வேளைகளில் தன்
ஸ்தனங்களைத் துணியால் மறைத்துக்கொள்ள வேண்டுமெனவும் ஆணையிட்டார். இறுதிப்
பரீட்சையின் முதல் கட்டத்தை நான் பூர்த்தி செய்தபோது பௌர்ணமி நிலவு தன் முழு
ஆகிருதியுடன் கிழக்குத் திசையில் வெளிப்பட ஏழு நாட்கள் மீதமிருந்தன. எனக்கு
இரண்டு நாட்கள் ஓய்வளிக்கப்பட்டது. இதையடுத்த ஐந்து நாட்கள் முழு உபவாச
விரதமொன்றை என் குருவின் ஆக்ஞைப்படி நான் மேற்கொண்டேன். பிறகு என் பரீட்சையில்
இரண்டாம் நிலையில் தேர்ச்சியுறும் பொருட்டாக பௌர்ணமியன்று மீண்டும் பசுமாட்டின்
கனவுகளுக்குள் என்னைப் புகுத்திக் கொண்டேன்.

உலகம் வார்த்தைகளற்ற ஒரு பிரம்மாண்டமான ஓயாத கனவாகவே பரம்பொருளால் ஆதியில்
படைக்கப்பட்டது. யதார்த்த உலகின் அடியில் இன்று மறைக்கப்பட்டு விட்ட கடவுளின்
இந்தக் கனவுலகை மனிதன் இறந்த பின்னே சென்றடைகிறான். மனிதனுக்குக் கீழ்பட்ட
அறிவைக் கொண்டிருக்க ஆசீர்வதிக்கப் பட்ட விலங்குகளோ அதிகப்படியான அறிவின்
சுமையால் கூனடைந்து போகாது உயிர் வாழும் போதே கடவுளின் உலகைக் கண்டு
அனுபவிக்கின்றன. அந்த உலகம் மிகவும் ஆச்சர்யகரமான சாயைகளைக் கொண்டது. கனவுலகின்
காலக்கிரமும் இடக்கிரமும் யதார்த்த உலகின் காலக்கிரமத்திலிருந்து
இடக்கிரமத்திலிருந்தும் மிகவும் வித்தியாசப் பட்டிருக்கின்றன. ஏனெனின் அங்கே
பொருள்கள் யதார்த்த உலகில் மனிதன் வார்த்தைகளால் அர்த்தங்களை
உருவாக்குகின்றான். அர்த்தங்கள் காரணங்களை உருவாக்குகின்றன. காரணங்கள் ஸ்தூலப்
பொருள்களை உண்டாக்குகின்றன. விளைவுகள் மீண்டும் காரணங்களை உருவாக்கும்
அர்த்தங்களை உருவாக்கும் வார்த்தைகளைப் பிறப்பிக்கின்றன. ஒரு பொருள் இவ்வாறாக
இன்னொரு பொருளோடு அதன் பக்கவாட்டிலும் மேலுங்கீழும் காரணத்தாலும் விளைவாலும்
சங்கிலி போல இணைக்கப்பட்டிருப்பதால் இவ்வுலகக் காட்சிகள் கிடைக்கோட்டிலும்
மற்றும் மேலும் கீழுமாக நகர்ந்து கொண்டிருப்பதாக மனிதர்களாகிய நம் பார்வைக்குப்
படுகிறது. பிரபஞ்சத்தைக் கனவாகக் கண்டுகொண்டிருக்கும் மிருகங்களின் பார்வையிலோ
இவ்வுலகம் வலமிருந்து இடமாகவோ இடமிருந்து வலமாகவோ அல்லது மேலிருந்து கீழாகவோ
கீழிருந்து மேலாகவோ நகர்வதாக இருப்பதில்லை. மனித முகத்தைப் போலத் தட்டையாகவன்றி
முன்னோக்கிக் குவிந்து கீழ்நோக்கி இறங்கும் கூம்பு வடிவினதாக மிருகங்களின்
முகத்தை வடிவமைத்த கடவுளின் கருணையும் முன்போசனையும் இதைச் சொல்லும்போது என்
நினைவிற்கு வந்து கண்களில் நீர் கசியச் செய்கிறது. ஏனெனில் ஒரு காட்சியை ஒரே
சமயத்தில் இரு கண்களாலும் ஒரு சேரப் பார்க்க வாய்ப்பாக தட்டையான முகவமைப்பைக்
கொண்ட மனிதனுக்கு அறிதலைக் குழப்பும் இருவேறு காட்சிகளை ஒரே சமயத்தில்
பார்த்தாக வேண்டிய சிரமம் கிடையாது. ஏனெனில் ஒரு சமயத்தில் ஒரு காட்சியென்பதே
அறிதலின் அடிப்படையாக இருக்கிறது. ஆனால் முகத்தின் இருபுறமும் சரிந்த விழிகளால்
தனித்தனியாக இருவேறு காட்சிகளை ஒரே சமயத்தில் பார்க்கும் மிருகங்களால் அவற்றை
இணைத்துப் புரிந்துகொள்வதென்பது முடியாததாக இருக்கிறது. இதனால் அவற்றால் பாஷையை
உருவாக்க முடிவதுமில்லை. ஏனெனில் ஒரு சமயத்தில் பல காட்சிகள் என்பதே
வார்த்தைகளற்ற பார்த்தலின் அடிப்படையாக இருக்கிறது. முகத்தின் வலப்புறம்
தோன்றிய ஒரு காட்சி சோதனைக்காக என் வசம் ஒப்படைக்கப்பட்ட பசுமாட்டின்
இடதுபுறத்திற்கு நகர்ந்த போது வலப்புறம் அந்தக் காட்சி விட்டுச் சென்ற வெளியில்
இன்னொரு காட்சி தோன்றியதையும் அதேசமயத்தில் முகத்தின் இடப்புறம் ஏற்கனவே பசு
பார்த்துக்கொண்டிருந்த காட்சியின் மேல் வலப்பக்கத்தில் மறைந்த காட்சி வந்து
அமர்ந்து கொண்டதையும் நான் என் பரீட்சையின் இரண்டாம் நிலையில் கண்டு கொண்டேன்.
குழப்பமான நிறங்களாகவும் வாசனைகளாகவும் உருவாகும் மிருகங்களின் கனவுகளில்
காட்சிகள் யதார்த்த உலகில் போலன்றி உள்ளிருந்து மேலெழும்பித் தோன்றுவதும்
வெளியிலிருந்து உள்ளே பதுங்கி மறைவதுமாகவே அசைகின்றன என்பதையும் அதன் காரணங்களை
நான் இப்போது உங்களுக்குச் சொன்ன விதமாகப் புரிந்துகொண்டதையும் அறுபது நாட்கள்
கடும் பிரயாசைக்குப் பிறகு பசுவின் கனவிலிருந்து வெளியேறி குருகுலத்தை அடைந்த
அன்று என் ஆசானிடம் சொன்ன போது நான் என் தேர்வின் இரண்டாம் நிலையையும்
வெற்றிகரமாகக் கடந்து வந்துவிட்டதாகக் காசியின் அடர்ந்த வனங்களை நோக்கி ஓடிப்
போய்விட்ட தன் இரண்டாம் சீடனின் நினைவு கண்களில் கண்ணீரைப் பெருக்க அவர்
கூறினார். ஆடைகளால் மறைக்கப்படாத அங்கங்களை ஆபரணங்களால் மறைத்த பின்பே இனி என்
முன்னே தோன்ற வேண்டுமென அப்போதே தன் மகளுக்கு அன்புக் கட்டளையிட்டார்.

முடிவானதும் மிகக் கடினமானதுமான பரீட்சையின் மூன்றாம் நிலைக்கு என்னைத் தயார்
செய்து கொள்வதற்காக பிறகு அவர் எனக்கு மேலும் பத்து தினங்கள் ஓய்வளித்தார். என்
குருகுல வாசத்தில் அதுவரை அனுபவித்தே அறியாத பலவகை பதார்த்தங்களை நான் அந்தக்
காலகட்டத்தில் உண்டு மகிழ்ந்தேன். நறுமணமிக்க மூலிகைகளைக் கலந்து
தயாரிக்கப்பட்ட பானகங்களை தொடர்ந்து எனக்கு அளிக்க என் குரு ஏற்பாடு
செய்திருந்தார். அவை என் உடலை குளிர்ந்ததாகவும் நாட்கணக்காகத் தொடர்ந்த
உறக்கத்தில் ஆழ்ந்து போகுமளவிற்கு அலுப்புள்ளதாகவும் உறங்கும்போது உடைகள்
அலங்கோலமாகக் கலைந்து விலகிக் கிடக்கும்படி மண் தரையில் புரண்டு கொண்டிராத
வண்ணம் அதை மரக்கட்டை போல உணர்வற்றதாகவும் ஆக்கின. இவற்றையெல்லாம் அன்று என்
குருவின் மகளாக இருந்த இதோ இங்கே என் அருகே அமர்ந்திருக்கும் என் மனைவியின்
கையால் என் பெற்றுக்கொண்டதானது கிளர்ச்சியூட்டும் கனவுகள் என்னுள்ளிருந்து
விழித்தெழும் வண்ணம் என்னை இன்னும் நீண்ட விச்ராந்தியான உறக்கத்தில் ஆழ்த்தி
வைத்திருந்தது. பரீட்சையின் இரண்டாம் நிலையில் நான் பிசகின்றி வெற்றி பெற்றதன்
நிமித்தமாகவே இத்தகைய உபசாரங்கள் எனக்களிக்கப் படுவதாக அப்போது நான் எண்ணி
இறுமாந்திருந்தேன். ஆனால் அவை யாவும் பலியாட்டின் மீது போர்த்தப் படும் புதிய
வஸ்திரங்களையும் வாசனைத் திரவியங்களையும் பூமாலைகளையும் போல தந்திரத்தின்
மணத்தைத் தம்முள் புதைத்துக் கொண்டிருந்தன என்பதைப் பின்னால்தான்
தெரிந்துகொண்டேன். அதற்கு கட்டியங்கூறும் வகையில் பரீட்சையின் மூன்றாம்
நிலைக்கு நான் தயாரான அன்று என் குரு எனக்குச் சொன்ன அறிவுரைகளையும்
பரீட்சையின் வழிமுறைகளையும் கேட்ட என் உதிரம் அச்சத்தால் உறைந்துபோய்விட்டது.
பெரும் பீதி என்னை ஆட்கொண்டது. பரீட்சையின் முதல் இரண்டு நிலைகளையும் போல இந்த
மூன்றாம் நிலை பரீட்சைக்கு உட்படுத்தப்படும் மிருகத்தின் வயிற்றில் அதன் இரை
ஜீரணமாகிக் கொண்டிருக்கும் மந்தமான உறக்க நிலையில் பிரயோகித்தறிவது அல்ல என்று
என் குரு என்னிடம் சொன்னார்.  மேலும் என் பிரியத்திற்குரிய மாணவனே மிருகங்கள்
தங்கள் கனவில் என்ன காண்கின்றன என்பதையும் காட்சிகள் அந்தக் கனவில் எப்படிப்
பிறந்து மறைகின்றன என்பதையும் கசடறக் கண்டுகொண்ட நீ இப்போது அக்கனவுகளின்
அர்த்தத்தை மனிதனின் மொழியில் அறிந்துகொள்ள இருக்கிறாய். வார்த்தைகளற்ற
மிருகங்களின் கனவுலகை வார்த்தைகளாக மாற்றி அவற்றை சாஸ்திரங்களாக்கி நம்
முன்னோர் நமக்குத் தந்ததைப் போல இனி வரும் சந்ததிகளுக்கு நீ தர வேண்டிய
பொறுப்பு இப்போது உன் தலை மீது சுமத்தப்பட்டிருக்கிறது என்பதை அறிந்துகொள்.
மிருகங்கள் நாம் காண்பது போல உறக்கத்தில் மட்டுமே கனவுகளை உருவாக்கிக்
கொள்வதில்லை. அவை தம் அன்றாட வாழ்வின் பிரத்யேக கணங்கள் ஒவ்வொன்றிலும் சிறுசிறு
தற்காலிக உறக்கங்களை அவ்வப்போது மேற்கொண்டு அந்தந்தக் கணங்களுக்குரிய உலகை
கனவாகக் கண்டு மகிழும் வல்லமை படைத்தவை. எனவே ஐந்தறிவு மிருகத்தின் கனவுகளை
அறியும் விதமாக இனி நீயும் உனது ஆறாவது அறிவை அவ்வப்போது இழக்கக் கடவாய்.
அவ்வுயிர் புழங்கும் இடங்களினூடும் பார்க்கும் காட்சிகளினூடும் செல்லும்
பிரதேசங்களினூடும் உண்ணும் உணவினூடும் தரிக்கும் கலவியினூடும் நீயும் கலந்து
போகக் கடவாய். கணத்திற்குக் கணம் கனவுகளை உருவாக்கி அவற்றை இப்பிரபஞ்சமாக உலாவ
விடும் மிருகங்களின் பார்வையில் இப்பிரபஞ்சம் என்னவாக இருக்கிறது என்பதை
அப்போது நீ தெரிந்துகொள்வாய். தேர்வின் முதல் நிலையில் நீ கண்ட குழப்பமான
நிறங்களை வார்த்தைகளாகவும் வாசனாதிகளை உச்சாடனங்களாகவும்
மாற்றிக்கொண்டுவிட்டதாகத் திருப்தியடையும் நாளில் நீ என்னை மீண்டும் வந்து
சந்திப்பாய்.

என் ஆசான் நான் இரண்டு நிலைகளில் பரீட்சைக்கு உட்படுத்திய அந்தப் பசுவையே பிறகு
அதன் சொந்தக்காரரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி அதன் மூக்கணாங்கயிற்றையும்
கொம்புப் பூண்களையும் முகப்பட்டையையும் மேல் வஸ்திரத்தையும் எடுத்து விட்டு
நெற்றித் திலகத்தையும் உடல் மேல் இடப்பட்டிருந்த அலங்கார வண்ணக் கோலங்களையும்
அழித்துவிட்டு அதைப் பூரண நிர்வாணியாக்கி எனக்கு முன்னே நடந்து செல்லும்படி
அனுப்பி வைத்தார். பிறகு என்னையும் என் உடைகளனைத்தையும் களைந்து விட்டுப்
புறப்படும்படி அவர் கட்டளையிட்டபோது நான் திடுக்கிட்டு கௌபீனத்தை மட்டுமாவது
தரித்துக்கொள்ள என்னை அனுமதிக்கும்படி அவரை மன்றாடினேன். முதலில் பிடிவாதமாக
அதை மறுத்து விட்ட அந்தத் திரிகால ஞானி பிறகு வேதனையுடன் சில வார்த்தைகளை
முனகிக் கொண்டே கௌபீனத்துடன் செல்ல என்ன அனுமதித்தார். அன்றுமுதல் நான் பசுவின்
பின்னால் அதன் நிழலைப் போல் அலையத் துவங்கினேன். ஒரு கிழமையல்ல ஒரு பருவமல்ல
சபையோரே கோடையின் இரண்டு முழுச் சுழற்சிகள் என்னைத் தன்னிச்சையாக
வனாந்திரங்களுக்குள்ளும் நகர்புறங்களுக்குள் நீர்நிலைகளின் ஆழங்களினூடாகவும்
வயல் வரப்புகளினூடாகவும் விசேஷ காலங்களில் தங்களது இல்லங்களுக்குள் அதை
அனுமதித்து வெல்லமும் அரிசியும் தேங்காய்க் கீற்றுகளும் தின்னக் கொடுத்துத்
தங்களது சுபிட்சத்தைப் பெருக்கிக் கொண்ட மனிதர்களின் தந்திரங்களினூடாகவும்
அலைக்கழித்த அந்த வெண்பசுவின் பின்னே நான் அதைத் தவிர வேறு யாதொரு பந்தமும்
அற்றவனாகச் சுற்றித் திரிந்தேன். அது தன் உணவை அசை போடும் போது அதன்
கனவுகளுக்குள் புகுந்து பருவச் சுழற்றிகள் வெட்டிக்கொள்ளும் காலத்தே தெறிக்கும்
சீதளப் பொறிகளின் உக்கிரத்திலிருந்து என்னைக் காத்துக் கொண்டேன். அந்தக் காலம்
முழுவதும் நான் உண்ணவும் உறங்கவும் இல்லை. என்னுடைய ஓய்வுக் காலங்கள் என நான்
மகிழ்ந்து அனுபவித்துக்கொண்டிருந்த பரீட்சைக்கு முந்தின காலகட்டத்தில் என்
குருவின் மகளும் இன்று என் மனைவியுமான இந்தப் பெண் எனக்களித்த நறுமணம் கமழும்
மூலிகைப் பானங்களால் என்னைக் கவிந்துகொண்டிருந்த தூக்கமும் பசியும் பரீட்சைக்
காலத்தில் என் இமைகளையும் வயிற்றையும் காவு கொள்ளவே அப்போது எனக்கு மருந்தாகப்
புகட்டப்பட்டவை என்பதை நான் தெரிந்து கொண்டேன். நான் பின்தொடர்ந்து கொண்டிருந்த
பசுவோ என்னைப் பற்றின பிரக்ஞையே இல்லாததாக ஒரு போதும் என்னைத் திரும்பிப்
பார்க்காது தனக்கு விருப்பப்பட்ட இடங்களில் இருந்தும் படுத்தும் விழுந்தும்
புரண்டும் ஓய்வெடுத்துக்கொண்டது. கண்களைத் திறந்தபடி உறங்கியது. மறைப்புகள்
ஏதுமற்ற தன் தூய நிர்வாணம் முழுவதும் அமிழும்படி நீர்நிலைகளில் மூழ்கி
எழுந்தும் மண்ணால் தன்னை மூடிக்கொண்டும் பிறகு அதை உதிர்த்து

*
மிருகங்கள் இந்த உலகைத் தங்கள் உணவாகக் காண்பதாகவும் எந்தப் பொருளையும்
அவற்றின் கனவுகள் ருசியாகவே காட்டுவதாகவும் அவரிடம் இறுமாப்புடன் அறிவித்தேன்.
அப்படி அறிவித்த கணத்தில் என் குருவின் கண்கள் இருண்டு குழியில் விழுந்து அவர்
உடலும் தன்னிலை தவறி அவர் என்னை வரவேற்ற முன்முற்றத்தின் கோலமிட்ட தரையிலேயே
மூர்ச்சையுற்று விழுந்தபோதுதான் அவசரப்பட்டுவிட்டேன் என்பதை நான் தெரிந்து
கொள்ள சந்தர்ப்பம் வாய்த்தது. என் தோல்வி என் ஆசானை மரணத்தில் கொண்டு
சேர்த்துவிடும் அளவு விஷமுள்ளது என்பதை அறிந்த மாத்திரத்தில் நான் என்னையே
வெறுக்கத் துவங்கினேன். குருவின் மகளும் பின்னாளில் எனக்கு மனைவியுமாய் ஆன
இந்தப் பெண் தன் தகப்பனைத் தேடி வாசலுக்கு வருவதற்கு முன் நான் பசுவின்
மூக்கைப் பிணைந்திருந்த கயிற்றையும் கௌபீனத்தையும் கழற்றி நான் வந்து போனதன்
அடையாளமாக நிலத்தில் வீசியெறிந்துவிட்டு பதிலுக்கு என் குருவின் மூர்ச்சை
தெளிவதற்குள் நான் வெற்றியுடன் திரும்பி விடும் பிரதிக்ஞையை என்னுடன்
எடுத்துக்கொண்டு சற்றும் தாமதிக்காமல் அங்கிருந்து வெளியேறினேன்.

பருவ காலங்களின் ஒரு சுழற்சிக்குள்ளாகவே பூர்த்தியாகியிருந்திருக்க வேண்டிய
கல்வி என் மதியீனத்தாலும் அகம்பாவத்தாலும் அவசரத்தாலும் மேலும் ஒரு
சுழற்சிக்குள் சிக்கிக் கொண்டு அல்லலுறும்படியாகி விட்டது. மேலும் இப்போது நான்
என்னை மனிதனென்று உறுதிப் படுத்தும் வண்ணம் என் லிங்கத்தைத் தொங்கவிடாது
மறைத்துத் தொடைகளுடன் பிணைத்திருந்த ஒட்டுத் துணியையும் துணியிருக்கும்
தைரியத்தில் பிற மனிதர்களோடு நான் பகிர்ந்து கொள்ள வைத்திருந்த சொற்ப
வார்த்தைகளையும் இழந்துவிட்டேன். என்னை வழி நடத்திச் சென்ற மிருகத்தோடு நானும்
கூடவே வார்த்தைகளும் பேதங்களுமற்ற உலகினுள் இவ்வாறு முற்றாகப் பிரவேசித்தேன்.
அதே சமயத்தில் அவ்வுலகிற்கு வெளியே இருந்து அதை அறியும் வார்த்தைகளையும்
மனிதனென்கிற பிரக்ஞையுடன் நான் சிருஷ்டித்துக் கொண்டே இருக்க வேண்டியிருந்தது.
உண்மையான பரீட்சை இப்போதுதான் துவங்குகிறது என்பதை என் முழு நிர்வாணம் எனக்கு
உணரக் காட்டியது. முன்பு கௌபீனத்தை அவிழ்க்க மறுத்தபோது என் ஆசான் முணுமுணுத்த
வார்த்தைகளையும் அப்போது என்னால் தெளிவாகக் கேட்க முடிந்தது. மிருகங்களின்
கனவுகளில் பிரபஞ்சம் குழப்பமான நிறங்களிலும் மணங்களிலும் காணக் கிடைக்கிறது
என்பதை நான் என் முதல் பரீட்சையில் அறிந்தேனென்று சொன்னேனல்லவா. இப்போது அவை
குறிப்பிட்ட தருணங்களில் சில குறிப்பிட்ட நிறங்களும் வாசனையும் கொள்வதை என்னால்
கண்டுகொள்ள முடிந்தது. பசு தன் உணவை மெல்லும் போது அதன் கனவுகள் சிவந்ததும்
இருண்டதுமான நிறத்தைக் கொள்வதை நானும் ஒரு விலங்காக என் கனவில் காணுமளவிற்கு
சின்னாட்களில் முன்னேறினேன். கண்கள் முழுகும் வரையில் முகத்தை நீரில் அமிழ்த்தி
அது நீரருந்தும் போதும் காற்றிற்கு எதிராக முகத்தை நிமிர்த்தி சுவாசத்தை அது
சுத்தம் செய்து கொள்ளும் போதும் மழையாலும் மட்கிய பொருள்களாலும் சிறு
பூச்சியினங்களாலும் புரட்டப்பட்ட சேற்றில் தன்னுடலை வீழ்த்திக்கொள்ளும் போதும்
உண்ணிகளை கொத்திப் பிடுங்கச் சிறு பறவைகளுக்குத் தன் உடலைக் கொடுக்கும் போதும்
பசுவின் கண்களில் இவ்வுலகம் சிவந்து இருண்ட நிறங் கொள்வதாகவே இருந்தது. இதோடு
கூட என் வியப்பு அதிகரிக்கும்பைட்யாக அந்தக் கனவுகளிலிருந்து ஆசுவாசங் கொள்ளச்
செய்யும் கதகதப்பான சீதோஷ்ணம் ஒன்று வெளிக் கிளம்பிக் கொண்டிருப்பதையும் நான்
அனுபவித்தேன். அந்தச்  சீதோஷ்ணம் இவ்வுலகின் எந்த மூலையிலும் கேட்கக் கிடைக்காத
கனத்த அமைதியை என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது. மேலும் அது எனக்கு
ஏற்கனவே பரிச்சயப்பட்ட ஒன்றாகவும் சாபத்தால் என் நினைவிலிருந்து பிறகு அகன்று
மறைந்து போனதாகவும் தோன்றி என்னை வதைத்தது. மிருகங்கள் இப்பிரபஞ்சத்தை
என்னவாகத் தங்கள் கனவில் கண்டுகொண்டிருக்கின்றனவோ அதை நான் வார்த்தைகளாக
அறிந்துகொண்டேதான் இருக்கிறேனென்பது விலங்கோடு விலங்காய் மாறிப் போயிருந்த
எனக்குத் தெரிந்தது. பாஷைக்குள் பிடிபடும் வண்ணம் அந்தக் கனவை அறியத் தரும் ஒரு
உபகரணத்தை நான் எப்படியும் கண்டுபிடித்துவிடுவேன் என்று நம்பினேன். அந்தச்
சந்தர்ப்பமும் விரைவிலேயே வாய்க்கத்தான் செய்தது. ஆனால் நடந்தது என்னவென்றால்
அந்த உபகரணம் தான் தன் கருவியாக என்னைத் தன் வழியில் கண்டுபிடித்தது. என்னைக்
கண்டுபிடித்த அந்த உபகரணம் பத்தினிப் பெண்ணின் விழிகளையொக்கும் கருத்த நிறமுள்ள
ஒரு காளைமாடு.  ஊரென்றோ நகரமென்றோ அடையாளம் புலப்படாத ஒரு பிரதேசத்தின் வழியே
நானும் என் முன்னே வழக்கம் போலப் பசுவும் நடந்து சென்றுகொண்டிருந்த போது
திடீரென எங்களிருவருக்கும் நடுவே பருத்த உருவமும் திரண்டு மதர்த்த இரட்டைத்
திமில்களும் உயர்ந்து வானைக் கிழித்துக்கொண்டிருந்த கொம்புகளும் பரந்த
தொடைகளும் சிவந்த கண்களும் உமிழ்நீர் பெருகி வடிந்து கொண்டிருந்த வாயுமாக
அந்தக் காளை தோன்றியது. நான் என்னை நிதானித்துக்கொள்வதற்குள் பசுவை என்
பார்வையிலிருந்து மறைந்து நின்ற அந்தப் பிரம்மாண்டமான ஆண் மிருகம் விரைத்து
நீண்டிருந்த தன் பிறப்புறுப்பால் என்னைத் தொட்டுத் தாக்கி அப்பால் தள்ளி
விட்டது. பிறகு இடியொன்று மரத்தின் மீது வீழ்வது போல அது பசுவின் மேல் தன்
முன்கால்களை ஏற்றி வீழ்த்தி அதைத் தனது உடலுக்குள்ளாக இழுத்தது. கண்மூடித்
திறப்பதற்குள் இவையாவும் நடந்து முடிந்துவிட்டன. பசுவின் உடல் சுருங்கித்
தன்னிச்சையாகக் காளையின் கால்களின் நடுவே பதுங்கிக் கொள்வதையும் அதன் கனவுகள்
வெகுவேகமாக செந்நிற இருளைத் தீட்டுவதையும் நான் விழுந்த நிலையிலேயே கண்டேன்.
அதன் பின்புறத்தின் மீது ஏறி நின்று கொண்டிருந்த காலையின் கண்களிலிருந்தும் அதே
செவ்விருட்டு நிறக் கனவு பீறிட்டு வெளியில் சிதறிக்கொண்டிருந்தது. இப்போதும்
அந்தக் கனவுக்குள்ளிருந்து எனக்குப் பழக்கப்பட்டு மறந்து போன தட்பவெப்பம்
என்மேல் கவிந்தது. குருவை மூர்ச்சையடையச் செய்த என் வயதின் மமதையை வென்று
அப்போது பொறுமையாய் நிகழ்பவைகளைப் பார்த்துக்கொண்டிருப்பவனாய் மட்டுமே நான்
விழுந்து கிடந்தேன். இதன் பயனாக என்னைப் பசுவிடமிருந்து பிரிக்கும் வண்ணம்
நடுவே புகுந்ததென்று எண்ணியதால் ஒரு கணம் என் கோபத்திற்கு இலக்கான காளை
உண்மையில் வெற்றியுடன் என்னைப் பிணைக்கும் கண்ணியாகவே அப்படி நிற்கக் கடவுளால்
அனுப்பப்பட்டது என்பதை நான் சற்று நேரத்தில் கண்ணீருடன் தெரிந்து கொண்டேன்.
விலகி நெருங்குவதாக அல்லாமல் அமிழ்ந்து வெளிப்படும் இயல்பினதான மிருகங்களின்
கனவுலகமே உண்மையான பிரபஞ்சமென்று பறை சாற்றும்படியாக அவ்வுலகிற்குரிய
செங்குத்தான அசைவை லயப்பிசகின்றி பசுவின் பின்புறத்தில் நிகழ்த்திக்
கொண்டிருந்த காளை நெடுநேரம் கழித்து மீண்டும் தன் பளுவைத் தரையதிரும் வண்ணம்
கீழே இறக்கிய பின்பு செந்நிறம் நீர்த்துப் பழைய ஸ்திதியை அடைந்திருந்த தன்
கண்களைத் திருப்பி என்னைக் கனிவுடன் பார்த்தது. அப்போது என் பயணக்காலம்
முழுவதிலும் என்னைத் திரும்பியே பார்த்திராத அந்த வெண்ணிறப் பசுவும் முதன்
முறையாக அன்பின் நீர் ததும்பும் விழிகளோடு என்னைப் பார்த்தது. அது தன்
இடத்திலேயே அசையாது பின்னும் நின்றிருக்க காளை என்னருகே வந்து படுத்துக் கிடந்த
என்மேல் தன் கதகதப்பான சுவாசத்தைப் பாய்ச்சியும் உடல் முழுவதையும் தன் நாக்கால்
சுழற்றி நக்கியும் என்னோடு வார்த்தைகளற்ற உலகைச் சேர்ந்த பிரகிருதியின் பாவ
பாஷையில் பேசியது. பிறகு அது தோன்றியதைப் போலவே உட்சுருங்கிக் காற்று வெளியில்
மறைந்துபோனது. அதன் பேச்சை அறிவு புரிந்துகொள்ளும் முன்பே உடல் புரிந்து
கொண்டதன் அடையாளமாக என் லிங்கம் என்னிலிருந்து புறப்பட்டு என் யத்தனமின்றியே
பசுவை நோக்கி நீண்டது. அந்த அளவில் நான் மிகப் பெரும் உவகையுடன் கதறியழுதபடி
எழுந்து எனக்குத் தன் பின்புறத்தை மலத்திவாறே காத்துக் கொண்டிருந்த பசுவை
நோக்கிப் பாய்ந்தேன். அதன் முதுகின் மேல் என் கைகளை ஊன்றி எழும்பிக் காளையின்
மதநீர் வடிந்து கொண்டிருந்த புழையினுள் என் லிங்கத்தை நுழைத்தேன். அது என்
ஆகிருதியிடமிருந்து விடுபட்டதான தன்னிச்சையுடன் என் மொத்த உயரத்தையும்விடக்
கூடுதல் நீளங்கொண்டதாக பசுவின் உடலினுள் அதன் தசையையும் திசுக்களையும்
நிணத்தையும் குருதியையும் மென்நரம்புகளையும் தீண்டி வழுக்கியபடி வளர்ந்தது.
மிருகங்கள் தங்கள் உடலின் ஒவ்வொரு மயிக்கண்களாலும் எப்போதும்
பார்த்துக்கொண்டிருக்கும் இப்பிரபஞ்சத்தின் உண்மையான தோற்றத்தை இறுதியில்
பசுவின் உடலினுள் என் லிங்கத்தின் கண்களால் இவ்வாறாக நான் தரிசித்தேன்.
விலங்குகளின் கனவுகள் முழுவதிலும் நிறைந்து கனவாகவே ஆகியிருக்கும் இருண்டு
சிவந்த நிறமும் சீதோஷ்ணமும் கிறக்கமூட்டும் மணமும் நீரினுள் ஆழ்ந்ததைப் போன்ற
நிசப்தமும் உண்மையில் பெண் விலங்கின் கருவறையே என்னுள் உண்மை தாங்கவொணாத
பரவசத்திற்கிடையில் அப்போது என் நெற்றிப்பொட்டில் வெடித்தது. பசுவின் கனவுகளூடு
பயணப்பட்ட வழியில் நானும் அவ்வப்பொழுது நான் ஜனித்த இடத்தைத் தான்
இப்பிரபஞ்சமாக கண்டிருக்கிறேனென்னும் தெளிவும் என் அறிவு வெடித்த வெளியில்
சிதறியது. மனிதன் வார்த்தைகளால் தன்னிடமிருந்து பிரித்துத் தனியானதாக
உருவாக்கிக்கொண்ட உலகத்தில் உலோக அரண்மனைகளையும் ஓலைக் குடிசைகளையும்
ஓட்டுவீடுகளையும் தோற்கூடாரங்களையும் எழுப்பித் தலைமுறைகளின் ஞாபகத்திலிருந்து
தொலைந்துபோன தன் பிறப்பிடத்தைப் போலி செய்து திருப்திப்பட்டுக்கொண்டிருக்க
விலங்குகள் பிரபஞ்சம் முழுவதையும் தங்களின் பிறப்பிடமாகப்
பார்த்துக்கொண்டிருக்கின்றன என்பதை நான் பசுவினுள் துடித்துக்கொண்டிருந்த என்
ஞானக்கண்ணால் கண்டேன். இப்படி ஒரேசமயத்தில் திடீரென நான் பெற்ற ஞானோயத்தால்
மகிழ்ச்சியும் அதே சமயத்தில் திடீரென நான் பெற்ற ஞானோதயத்தால் மகிழ்ச்சியும்
அதே சமயத்தில் மனிதர்களின் மடைமையை எண்ணி அளவிலாத் துக்கமும் மேலிட்டவனாக பெண்
மிருகத்தின் கருவறையிலிருந்து என்னைப் பிரித்துக்கொள்ள மனமின்றி நெடுநேரம்
அதனுள் என்னை லிங்கமாக மாற்றிக்கொண்டவனாய் தோய்ந்து கிடந்தேன். அப்போது நாங்கள்
எங்கள் பயணத்தை முடித்துக்கொண்டு வந்த வழியே திரும்பும் காலம் கனிந்தது.
இம்முறை பசு தன் மகத்துவத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு ஒரு சாதாரண விலங்காக
எனக்குப் பின்னே என்னை வாத்ஸல்யத்துடன் தன் நாவால் நக்கியபடி பின் தொடர்ந்து
வந்து என்னைப் பெருமைப்படுத்தியது.

குருகுலத்தின் வாசலில் நான் காலடி எடுத்து வைத்த கணத்திலேயே தன் நீண்ட மூர்ச்சை
தெளிந்து எழுந்த என் ஆசான் வாசலுக்கு ஓடோடியும் வந்து என்னை வரவேற்றார். என்
உடல் முழுவதிலும் படிந்திருந்த சகதியையும் என் மீதிருந்து புறப்பட்டு திசைகளை
நனைத்துக்கொண்டிருந்த நிணத்தின் வாசனையையும் தளராது விரைத்த நிலையிலேயே இருந்த
லிங்கத்தையும் எனக்குப் பின்னே பசு நின்றுகொண்டிருந்ததையும் பார்த்த கணத்திலேயே
நான் பரீட்சையில் வென்றுவிட்டேனென்று உரக்க அறிவித்த அந்த ஞானி என்னைத்
தன்னுடலுடன் ஆரத் தழுவிக்கொண்டார். என்னை உள்ளே வரும்படி அழைத்தார். அவருடைய
மகளும் சற்று நேரத்தில் எனக்கு மனைவியாகப் போகிறவளுமான இங்கே என்னருகே
அமர்ந்திருக்கும் இந்தப் பெண் உள்ளேயிருப்பதையும் நான் அம்மணமாக இருப்பதையும்
எண்ணிப் பார்த்து நான் உள்ளே நுழையத் தயங்கிய போது யாசகனைத் தவிர வேறு
யாருக்கும் வாசலில் நிற்க வைத்து வஸ்திரமளிப்பதென்பது அப்படி அளித்தவரை
நரகத்தில் கொண்டு சேர்க்கும் பாவ காரியமாகப் போகும் என்னும் சாஸ்திர விதியை
எனக்கு ஞாபகப்படுத்திய க்ரூ சொன்னார். மேலும் வளர்ந்த மனிதனைத் தவிர வேறெந்த
உயிரின் நிர்வாணமும் ஒரு பெண்ணை வெட்கமடையச் செய்வதில்லை. அவிழ்த்த உன்
ஆடைகளைத் திரும்பத் தொடும் கணம் வரை நீயும் மனிதனில்லை. குருவின் இந்த
மொழிகளால் நான் தைரியமுற்றவனாக உள்ளே நுழைந்து குருவின் பெண்ணிடம் லஜ்ஜைப்
படாமல் வஸ்திரங்கள் வாங்கிக்கொண்டு குளித்து முடித்து ஆகாரமுண்டு களைப்பு
நீங்கியவனாக என் குருவின் முன் தாழ்ந்த ஆசனத்தில் உட்காரப் போகும் போது அவர்
என்னைத் தடுத்து நிறுத்தித் தனக்குச் சமமாக இடப்பட்டிருந்த ஆசனத்தில் என்னை
அமரச் செய்து கையில் தாம்பூலத்தையும் தேங்காயையும் பொதிந்து அதன்மீது நீரை
வார்த்து தன் பெண்ணை எனக்கு வெற்றியின் பரிசாக அளிப்பதாக அறிவித்தார். பிறகு
தன் காது குளிர என் பிரயாண அனுபவங்களைச் சொல்லும்படி என்னைக் கேட்டுக்
கொண்டார். என்னைத் தன் மாப்பிள்ளையாக அவர் அறிவித்த கணத்திலேயே தன்னை என் முன்
காட்டிக்கொள்வதைத் தவிர்த்து விட்ட வெட்கத்தால் சிவந்து தகித்துக்கொண்டிருந்த
முகத்தையுடைய இந்தப் பெண்ணும் கதவுகளுக்குப் பின்னிருந்தபடியே என் பிரயாண
அனுபவங்களைக் கேட்டுக்கொண்டிருந்தாள். பசுவின் பின்னே புறப்பட்ட முதல்
தினத்திலிருந்து பசு பின் தொடரத் திரும்பி வந்த கடைசி தினம் வரையில்
எனக்கேற்பட்ட விசித்திர அனுபவங்களை விலாவரியமாகச் சொல்லி என் குருவின்
காதுகளையும் மனதையும் குளிர்வித்தேன் என்று தனது பால்யகால நினைவுகளையும்
சாதனைகளையும் இவ்விதமாகத் தன் கதை மூலம் நினைவு கூர்ந்த என்
முதிர்முப்பாட்டனார் தொடர்ந்து பேசுகிறார்; கனவு என்கிற அதிசயமான உலகிற்கு
சர்வசாதாரணமாகச் சென்று வர ஆசீர்வதிக்கப்பட்ட விலங்குகளில் மனிதனைத் தவிர பிற
யாவுமே பிரபஞ்சத்தைத் தங்களுடைய இருப்பிடமாகவே (அதாவது பிறப்பிடமாகவே)
காண்கின்றன என்பதைத் தெரிந்து கொண்ட எனக்கு சில வேளைகளில் சுயநலமும் மமதையும்
மிக்க மனிதப் பிறவிகளால் இந்த இருப்பிடங்கள் மிருகங்களிடமிருந்து பலவந்தமாகப்
பறித்துக்கொள்ளப்பட்டு அவை விரட்டியடிக்கப்படும்போது பொதுவாக என்ன
நடக்கிறதென்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று தோன்றவில்லை. அதற்குள் என்
குருகுலவாசம் முடிந்து என் மனைவியுடன் இந்த நகரம் நோக்கி வந்துவிட்டேன். எந்தக்
கல்வியும் குறைபாடுள்ளதாக முடிந்து போக இப்படி பூர்த்தி செய்யப்படாமல்
கவனத்திலிருந்து விடுபட்டுப் போகும் கேள்விகளே காரணமாக அமைந்துவிடுகின்றன. என்
மனதில் ஒருபோதும் நான் கேட்டுக்கொண்டிராத இந்தக் கேள்விக்கான பதிலை அதை அப்படி
இத்தனைக் காலமும் பொருட்படுத்தாதிருந்துவிட்டதை நினைத்து நான் வெட்கத்தில்
புழுங்கிச் சாகும் வணம் ராஜன் மகளின் படுக்கையறையிலிருந்து பெற்றேனென்பதுதான்
நான் சொல்லிக்கொண்டு வரும் இந்தக் கதை. அந்த வகையில் கனவுகளின் மீதான என்
இரண்டாம் பிரயோகத்தில் என்னையுமறியாமல் மீந்து போன தேடலின் தொடர்ச்சியாகவும்
இந்தக் கதை அமைகிறது. அப்படியானால் என் பரீட்சையில் நான் கடந்து செல்ல வேண்டிய
நிலை இன்னொன்றும் இருக்கிறது. எனில் அது என் குருவையும் நான் கடந்து செல்ல
என்னை நிர்பந்திப்பது அல்லவா, கவனக்குறைவால் நாம் கற்றுக்கொள்ளத் தவறிவிட்ட
பாடங்களையும் எழுதத் தவறிவிட்ட பரீட்சைகளையும் காலம்தான் எப்படி எதிர்பாராத
இடங்களிலிருந்து எதிர்பாராத நபர்கள் மூலமாக நமக்கு அறியக் கொடுத்து விடுகிறது.

நம் ராஜன் ஆண்வாரிசு ஒன்றை வேண்டித் தன் வாழ்நாள் முழுவதையும் யாகங்களிலும் தான
தர்மங்களிலும் செலவிட்டுக் கொண்டிருக்கிறார். அவர் விரும்பியது அவருக்குக்
கிடைக்க ஆண்டவன் அருள் பாலிக்கட்டும். அதே சமயத்தில் அவர் தன் பெண்ணை
இருபத்திரண்டு ஆண்களுக்குச் சமமான மனோதிடமும் உடல் வலிமையுள்ளவனாகவும் வளர்த்து
வந்திருக்கிறார். அவர் நம்பிக்கை வீண் போகாமல் ராஜனின் பெண்ணும் ஆய கலைகள்
அனைத்தையும் கசடறக் கற்றுணர்ந்திருக்கிறாள். அவளை என் மாணவி என்று
சொல்லிக்கொள்வதில் உண்மையிலேயே நான் பெருமைப்படுகிறேன். ஸ்பரிசத்தாலன்றிப்
பார்வையால் எதிரியின் புலன்களைச்  செயலிழக்கச் செய்யும் அற்புதமான கலையை என்னை
அறியச் செய்தவள் அவள்தான். அதைச்  சொல்லிக் கொள்வதில் எனக்கு வெட்கமோ தயக்கமோ
கிடையாது. அவள் பார்வை மனிதர்களின் மூர்க்கத்தையும் புழுபூச்சிகளின்
இயக்கங்களையும் தாவரங்களின் சுவாசத்தையும் கூட கட்டுப்படுத்தும் பேரழகும்
ஒளியும் கொண்டது. உயிரற்ற ஜடப் பொருட்களின் நிலையைக் கூட கட்டுப்படுத்தும் கலை
அவள் கூடப் பிறந்த அதிசயமாக இருக்கிறது. அவள் என்னிடம் வர்மக்கலையை
பயின்றுகொண்டிருந்த காலகட்டத்தில் ஒரு நாள் தன் பார்வையின் மகத்துவச்
சொடுக்கால் கடிகையின் மணற் பொழிவைத் தடுத்து நிறுத்தி விட்டாள். அன்று என்
நித்ய கடமைகளும் உணவு வேளையும் படிக்கும் ஏடுகளின் அளவும் உறக்க அளவும்
தலைகீழாக மாறிப் போய்விட்டன. இந்த நகரத்திலும் பிற தேசங்களெதிலும் அவளுடைய
பிரகாசத்திற்கு நிகராக ஜொலிக்கும் ஆண்மகன் எங்குமே கிடையாதென்று நான்
நிச்சயமாகச் சொல்லுவேன். இத்தகைய அபூர்வப் பெண்ணுக்குள்ளும் கூட அவளையுமறியாமல்
வாட்டிக்கொண்டிருந்த ஏக்கம் ஒன்று இருந்து வந்தது. இத்தனை திறமைகள் வாய்க்கப்
பெற்றவளாக தான் இருந்தும் நிகரில்லையென்று அனைவராலும் போற்றிப்
புகழப்படுகிறவளாக தான் இருந்தும்கூட தகப்பன் தன் சுக்கிலத்தின் இன்னொரு
துளிக்கு இவள் ஈடானவள் அல்ல என்கிற எண்ணத்தினாலன்றோ ஆண்வாரிசு வேண்டி தொடர்ந்து
யாகங்கள் செய்துவருகிறாரென்கிற எண்ணம் அந்தப் பெண்ணின் மனதை அவளையுமறியாமலேயே
வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது. இருபத்திரண்டு ராஜன்களுக்குரிய கல்வியைத் தன்
யவ்வனப் பருவத்துக்குள் கரைத்துக்குடித்திருந்த அவளுக்கோ தன் மனதை
அரித்துக்கொண்டிருந்த குறை இன்னதென்று தெளிவாக விளங்கிக்கொள்ள முடியவில்லை.
பெண்ணால் சாதிக்க முடியாத ஏதோ ஒன்று ஆண் பிறப்பிடம் விஞ்சி நிற்கிறதென்பதாக ஒரு
பிரமை அவளை முழுவதும் ஆட் கொண்டுவிட்டது. இந்தப் பிரமை இரவுகளில் தூக்கத்தினுள்
தூக்கமின்மையாகவும் பகல்களில் வித்தைகளினுள் மயக்கமாகவும் மாறி அவளை
அலைக்கழித்து வந்தது. கிட்டத்தட்ட இதே சமயத்தில்தான் யவ்வனமும் ராஜன் மகளின்
கன்னியுணர்வுகளை உண்மையில் துயரம் மிக்கதும் கிலிகொள்ளச் செய்வதுமான ஒரு
காட்சியை முன்னிறுத்தி மலர்த்திவிட்டது. இதில் வியப்படைய ஏதுமில்லை. ஒரு
கன்னிப் பெண்ணின் இணை தேடும் உணர்வுகள் எப்போது எங்கே யாரால் அல்லது எதால்
தட்டி எழுப்பப்படும் என்பதை யாராலும் சொல்ல முடியாதென்கிறது காம சாஸ்திரம். ஒரு
பூவின் விகசிப்பு அல்லது தென்றலின் வருடல் அல்லது இரவின் தனிமை அல்லது யாழின்
இசையொலி அல்லது ஒரு சக பெண்ணின் ஸ்பரிசம் போதும் இவைகளல்லது ஒரு சிறு பறவையின்
மரணம் நோயால் பொலிவிழந்த உடல் கண்ணீர் குமுறும் கண்கள் என்று இவைகூட ஒரு
புஷ்பவதியின் இணை தேடும் வேட்கை அவளுக்குள் கிளந்தெழக் காரணமாய் அமைந்து
விடக்கூடும். யவ்வனம் என்பது ஒரு பருவமாக மட்டுமன்றி அந்தக் காலத்தில் அவளுடைய
பார்வையாகவும் அமைந்துவிடுகிறது. அது அவளைத் தீண்டும் எதையும் ஆண் தன்மை
உடையதாக மாற்றிக் காட்டி அவலை மகிழ்விக்கிறது. மேலும் கனவுகளுக்குச் சற்றும்
குறையாத வினோதத் தன்மையையும் புதிர்க் குணத்தையும் யதார்த்தத்தில் ஏற்றி
விளையாடிக்கொண்டே இருக்கிறது. இதனால் யவ்வன ஸ்தீரிகளுக்கு கண்ணெதிரே நிகழக்
கண்ட உண்மை சிலசமயம் கனவின் மிச்சமாகவும் கனவின் வினோதம் பல சமயங்களில்
கண்ணெதிரே நடந்த உண்மை போலவும் எண்ணிக் குழம்பும் மயக்கம் உண்டாகிறது. ராஜனின்
பெண் விஷயத்திலும் ஒரு நம்பற்கரிய நிஜம் கனவுக்கு ஒப்பான புகைப் பரிமாணத்துடன்
நிகழ்ந்து அவளைக் குழப்பிவிட்டுவிட்டது. இது மாதிரியான நிஜம் லட்சத்தில் ஒரு
பெண்ணின் கண்முன் லட்சத்தில் ஒரு தடவைதான் தோன்ற முடியும். ஆக தகப்பனின்
யாகங்களால் விளைந்த வியாகூலமும் யவ்வனப் பருவத்தின் இணை தேடும் விருப்பமும் பல
மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் இரவு கண்ட காட்சியால் ஒன்றோடொன்று கலந்து
குழம்பிப் போய்விட்டன என்பதுதான் ராஜன் மகளைப் பற்றிக் கொண்ட வினோதமான நோய்.
அந்தக் காட்சியை அவள் பார்த்தது தூக்கமும் விழிப்புமற்ற மயக்க நிலையில் ஒரே ஒரு
நாள் இரவில்தான், ஆனால் அது நடந்து கொண்டிருந்ததோ ராஜ குடும்பத்தின் பல
தலைமுறைக் காலமாக. அதன் பன்னிரெண்டாம் தலைமுறையில் அது சர்வசாதாரண காட்சியாக
இருந்தது. பதின்மூன்றாம் தலைமுறையின் துவக்கத்தில் அது அரிதான காட்சியாகி
அத்தலைமுறையின் முடிவுக்குள் எங்கும் காணவே முடியாத காட்சியாகி மறைந்து போனது.
அதற்குப் பிறகு அது இந்நகரத்தின் ஞாபகத்திலிருந்து வழக்கொழிந்து போன பண்டைய
கதையாக மாறிவிட்டது. அதன் வாசனையோ தலைமுறைகளைக் கடந்து வந்துகொண்டிருந்தது. ராஜ
குடும்பத்தின் கோத்திரக் கண்ணியைப் போலவும் அதன் குருதியோட்டத்தைப் போலவும்
அந்த வாசனை ஒவ்வொரு காலகட்டத்தினூடாகவும் ரகசியமாகக் கடத்தப்பட்டுக்கொண்டே
வந்தது. ராஜதானியின் அத்தனை தெருக்களிலும் யார் கண்களுக்கும் புலப்படாத புகை
வடிவமாக அந்தக் கதை - புலியும் முயலும் ஒரே நீர்ச்சுனையில் அருகருகே நீர்
அருந்தி மக்களோடு மக்களாகக் கலந்து வாழ்ந்து வந்த அந்தப் பண்டைய கதை -
நகரத்தின் புழுதியோடு புழுதியாகச் சுழன்று சுவர்களெங்கும் படர்ந்து ஊடுருவி
நிற்கிறது. அது வேறெங்கும் போகவும் முடியாது. என்பதுதான் உண்மை. பதின்மூன்றாம்
தலைமுறைக்கு முன்பு வரை பிரசித்தி பெற்றதாயிருந்த பிற தலைமுறைகளின் ரகசியமாம்
அந்த அபூர்வக் காட்சியைத்தான் பல மாதங்களுக்கு முன் ஓரிரவில் இளவரசி தன்
தூக்கக் கலக்கத்தில் கண்டாள். ஆம். அவள் கண்டது கானகத்தின் விரைக்கும் குளிரில்
மரத்துப் போன ஞாபகங்களின் தோலுக்கு இதம் தேடி திறந்திருந்த சாளரத்தின் வழியே
தினமும் உள்ளே குதித்து பதின்மூன்றாம் தலைமுறையில் படுக்கையறையாக மாற்றப்பட்ட
தன் பழைய கடம்ப விருட்சத்தின் உச்சிக்கிளையில் மாய உருவமாகத் தன்னை
மறைத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்த ஒரு காட்டு மிருகத்தின் ஆத்மாவை
தன் கானக வாழ்வின் நினைவுகளை உட்கொண்டே உயிர்த்துக்கொண்டிருந்த அது ஒரு கிழட்டு
வரிப்புலி. பத்து தலைமுறைக் காலமாக அங்கே துயின்ற எவருடைய கண்களையும்
உறுத்தாமல் யாருடைய கனவுகளுக்கும் காரணமாகாமல் அவர்களின் இணைப்பறைக்
கட்டிலுக்கடியில் பூர்வ வாசனையுடன் தன் இரவுகளைக் கழித்துக்கொண்டிருந்தது. அந்த
கதைப்புலி. மதுரமான தென்றலின் வடிவத்தில் அதை முதன்முதலில் பார்த்தவள் ராஜனின்
பெண் தான். அது முக்தியுறும் காலம் அப்போதுதான் கனிந்தது என்பதும் ராஜன் மகளின்
கண்களிலிருந்து எதுவும் தப்ப முடியாது என்பதும்தான் அதற்குக் காரணம்.
பார்வையால் ஜடப் பொருள்களைக் கூட வசியம் செய்யும் அற்புதப்பெண் அவள். இரவுகளின்
நிழலாகவும் பகல்களில் புழுதியாகவும் இந்நகரத்தின் தெருக்களில் திரிந்து
பதின்மூன்றாம் தலைமுறை நினைவுகளின் எச்சமாக உயிர் வாழ்ந்து கொண்டிருந்த கதைப்
புலியின் புகை வடிவம் அவள் கண்களுக்குப் புலப்படும்படித் தன் ரகசியத்தை இழந்து
போனதென்பதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. அந்தப் புலி இனித் திரும்பி
அந்தப் படுக்கையறைக்கு வரப் போவதுமில்லை. அமைதியுறாமல் அலைந்து கொண்டிருந்த
அதன் ஆயுள் ராஜனின் பெண்ணின் பார்வையில் உறைந்து உடைந்து விட்டது. தலைமுறைக்
காலங்களாக அது பெறக் காத்திருந்த முக்தி அதற்கு இந்நேரம் கிட்டியிருக்கும்.
அரண்மனைப் படுக்கையறையிலிருந்து விரட்டப்பட்ட மூன்றாம் நாள் பின்னிரவின் உறைய
வைக்கும் குளிருக்கு தலைமுறைக் காலங்களாகப் பழக்கப் பட்டிராத அந்தக்
கதைப்புலியின் ஆத்ம நாளங்கள் சுருங்கி இறுகி அதன் ஞாபகத் துடிப்பைக் கவ்விப்
பிடித்து இயங்க விடாமல் நிறுத்தியிருக்கும். ஆனால் சபையோரே கிழட்டுவரிப்புலி
ஒன்றல்ல. இன்னும் ஓராயிரம் காட்டு விலங்குகள் இந்த ராஜ்ஜியமெங்கும்
சாமான்யர்களின் சுவாசத்தில் கதைகளாக மனிதர்களோடு மனிதர்களாகப் புழங்கிய பொன்னான
நாட்களின் வாசத்தை விட்டகல முடியாமல் புகை வடிவமும் பாகு போல் இனித்த மனதும்
கொண்டவைகளாகச் சுற்றியலைந்து கொண்டிருக்கின்றன. இந்நகரத்தைத் தங்கள் கனவுகளில்
உருவாக்கிச் சுழற்றிக்கொண்டிருக்கின்றன. இன்று இதை இங்கே
செவிமடுத்துக்கொண்டிருப்போரையும் அவர்களின் மூதாதையர்களையும் இனி பிறக்கப்
போகும் வாரிசுகளையும் தங்களின் பளிங்கு விழிகளால் ஆர்வத்துடனும் வாஞ்சையுடனும்
ஏக்கத்துடனும் உற்றுப் பார்த்தபடி படுக்கையறைச் சுவர்களுக்குள் தங்களை
மறைத்துக் கொண்டிருக்கின்றன. அவற்றைத் தூல உருவமாகக் கண்டு அவற்றுக்கு
முக்தியளிக்கும் பார்வையொளி கொண்ட பெண்  மகவுகள் இந்த ராஜ்ஜியம் எங்கிலும்
பிறந்து செழிக்கட்டும் என்று ராஜன் முன்னிலையிலேயே நான் ஆண்டவனைப்
பிரார்த்திக்கிறேன்.

சாளரத்திலிருந்து தென்றலாக உள்ளே குதித்த கிழட்டுப்புலியின் ஆவியுரு அதுவரையில்
மொட்டாக இருந்த ராஜன் பெண்ணின் இணை தேடும் உணர்வுகளை மலர்த்தி விட்டது.
ஆணுக்கென்று தனி அம்சமொன்று இருக்கக்கூடுமென்று தன்னையுமறியாமல் நம்பிப்
பழக்கப்பட்டுவிட்ட அவள் அது என்ன என்பதையும் அன்று தான் கண்டுவிட்டதாக
எண்ணிக்கொண்டாள். காதலில் கனவு காண்பதற்கான சாமர்த்தியமும் தைரியமும் ஒரு
ஆணுக்கன்றி பெண்ணுக்குக் கைகூடுவதல்ல என்ற விழிப்பும் துயிற்பும் கலந்த
மயக்கத்தில் அவள் மனது பிதற்றவாரம்பித்துவிட்டது. நிலவின் மங்கிய ஒளியோடும்
தென்றலின் மணத்தோடும் இறகின் எடையின்மையோடும்  புகையொத்த உருவமாகக்
கிழட்டுப்புலி சாளரத்தின் வழியே உள்ளே குதித்த காட்சி ஆண்மையின் குத்தீட்டிப்
பாய்ச்சலாக அவள்  மனதில் பாய்ந்து பதிந்ததென்று கனவுகளின் ஊற்றுக்கண்ணை
ஆய்ந்தறியும் பாடப்பகுதி எனக்குப் போதித்தது. அந்த வினாடியில்தான் அவள்
யவ்வனத்தின் பார்வை திறந்துகொண்டது. அந்த அளவில் காட்சிகளின் கனவுத்தன்மையும்
கனவின் ஸ்தூல கணங்களும் அவளோடு விளையாடத் துவங்கிவிட்டன. அவள் தான் கற்பனை
செய்து கொண்ட ஆண்மை தன்னைக் கிளர்த்தும் முகமாகத் தன் கண்களை மூடிக்கொண்டு
அந்நிலையிலேயே கனவுகளின் வினோத உலகிற்குள் ஆழ்ந்துபோனாள். அப்போது அவள் தன்
தகப்பனின் ஆண்மகவுக்கான யாகங்கள் வெற்றி பெற வேண்டுமென்று தன் மனதார
வாழ்த்தினான். தான் விழித்திருக்கிறோமா உறங்குகிறோமா என்பதிலேயே நிச்சயமற்றவளாக
இவ்வாறு ராஜனின் பெண் மலர்த்தப்பட்ட பெண்மையின் துடிப்போடு அதைச் சாந்தி
செய்யும் ஆண்மையின் பாரம் தன் மீது கவிந்துகொள்ளப்போவதை எதிர்பார்த்துக்
காத்திருந்தாள். ஆனால் உள்ளே நுழைந்த கிழட்டுப்புலி ராஜன் பெண்ணின் படுக்கையை
நோக்கிச் செல்வதற்கு பதிலாக சபையோரே இணைப்பறையை நோக்கிச் சென்று வாயில் திரையை
விலக்கியபடி உள்ளே போய் மறைந்து விட்டது. படுக்கையறையை விடச்  சிறியதும்
அடைசல்களுடையதும் சாளரங்களற்றதும் அதனாலேயே படுக்கையறையை விட அதிகக் கதகதப்பு
உடையதுமான இணைப்பறைக்குள் புகுந்து தோழிப் பெண்ணின் கட்டிலுக்கடியில் தன்னைக்
குறுக்கிக்கொண்டு நித்திரை செய்யும் வழக்கம் உடையது அந்த மாயப்புலி. அன்றும்
அதுவே நடந்தது. தன் இணைக்காகக் கண்களை மூடியபடியே சயனித்திருந்த ராஜனின்
பெண்ணும் சற்று நேரத்தில் அந்த அமைதியுடனேயே உறங்கிப் போய்விட்டாள். ராஜனின்
பெண் அரைகுறைத் தூக்கத்தில் கண்ட காட்சி ஒரு வரவேற்பறைக் காட்சியின்
சாதாரணத்துவத்துடன் அவள் மூளையின் ஞாபகப் பொறியிலிருந்து நழுவி கனவுகளுக்குள்
இறங்கிவிட்டது. அதேசமயம் திருப்திப்படுத்தப்படாத விரகம் முழுவதுமாக
விழித்துக்கொண்டுவிட்டது. முற்றிலும் விழிப்பு நிலையில் அமைதியுறாத புலியின்
ஆன்மாவை அவள் கண்டிருப்பாளேயானால் மீண்டும் கண்களைத் திறந்து அதைத்
தேடியிருப்பாள். முற்றிலும் விழிப்பு நிலையிலிருக்கும் ஒரு மனித உயிரின்
பார்வையில் படாமல் பரம்பரைகளைத் தாண்டிய அந்தப் புலியேகூட ஒருவேளை தொடர்ந்து
தன் இருப்பைக் கதைகளில் மட்டுமே உறுதி செய்தபடி இன்றும் அதே அறையில் பிறரறியா
வண்ணம் துன்புறும் ஆன்மாவாகத் தன்னை நீடித்துக்கொண்டிருக்கும். ராஜன் பெண்ணின்
வினோதக் கனவுக்குக் காரணமான அந்நிகழ்ச்சியும் அவள் பிரக்ஞையின் மேல்
மட்டத்திலேயே உடைந்து சிதறியிருக்கும். இன்று இந்தக் கதைக்கும் என்
கீர்த்திக்கும் சந்தர்ப்பமே கிடைத்திருக்காது. அல்லது குறைந்தபட்சம் மறுநாள்
காலையில் சாளரத்தின் கீழே தரையில் ஊர்ந்து செல்லும் இரண்டு காலடிச் சுவடுகளை
அவள் பார்த்திருக்காவிட்டாலாவது எல்லா யவ்வன ஸ்தீரிகளின் கனவுகளையும் போல அவள்
கனவும் தன்னைச் சல்லாபிக்கும் ஆண் இணைக்குக் காத்திருக்கும் வேட்கையுடனாவது
முடிந்திருக்கும். ஆனால் முக்தி வேண்டி தலைமுறைக் காலங்களாக அலைந்து
கொண்டிருந்த வனவிலங்கின் ஆன்மாவை அமைதிப்படுத்தும்படி விதி அவளுக்குக்
கட்டளையிட்டிருந்ததால் மறுநாள் காலையில் படுக்கையறையின் உள்பக்கத்தில்
சாளரத்தின் கீழே தரையில் மனிதப் பார்வை பட்ட கணத்திலிருந்தே தன் எடையையும்
நிழலையும் திரும்பப் பெறத் துவங்கி விட்ட புலியின் ஒரு ஜதைக் காலடிச் சுவடுகளை
ராஜன் மகள் பார்த்தாள்.

ஒரு பெண்ணின் கனவுகளுக்குள் எந்த உருக்கொண்டும் நுழைந்து சுகிக்கும் தகுதி
மிருகங்களில் புலிக்குத்தான் உண்டு என்கிறது மாந்திரீகம். வேறெந்த விலங்கும்
தான் மனிதப்பிறவியல்ல என்பதைத் தன் சுவாச அலைவிலேயே காட்டிக் கொண்டு விடும்.
புலி அப்படிப்பட்டதல்ல. அது மனிதனைப் போலவே கம்பீரமானது. மனிதனைப் போலவே
கச்சிதமான அசைவும் உயர்ந்த எண்ணங்களும் போர்க்குணமும் இசையை ரசிக்கும் பெண்
மனதும் கொண்டு இலங்குவது. போர்க்களத்தில் வீரர்களின் லட்சியமாகவும்
படுக்கையறையில் புஷ்பவதிகளின் கனவாகவும் விளங்குவது புலி. அது தன் முன்னங்கால்
சுவடுகள் தரையில் பதிய அனுமதிப்பது இல்லை. விதி வசத்தால் நாலு கால்களில்
நடக்கும் உயிராக அது படைக்கப்பட்டுவிட்டபோதிலுங்கூட தன் முன்னங்கால்களை ஒரு
ஆயுதமாக மட்டுமே பிறர் கண்களுக்குக் காட்டிக்கொள்ளும் வேட்கையுடையது புலி. இதை
வெறும் வேட்டைக்காரர்களும் பாமரர்களும் அறிய மாட்டார்கள். விலங்குகளின் அவய
லட்சண சாஸ்திரங்களைக் கற்றறிந்தவன் புலிகளின் குணாம்சத்தை நன்கறிவான். புலி தன்
முன்னங்கால்கள் நிலத்தில் பதிந்த தடத்தை அதன் மீது ஊர்ந்து செல்லும் தன்
நிழலில் எடையால் அழுத்தி அழித்துவிடும். அதன் நிழல் படராத பின்கால்களின் இரண்டு
தடங்கள் மட்டுமேதான் எப்போதும் பிறர் கண்களுக்குக் காணக் கிடைக்கும். அப்படிக்
காணக் கிடைத்த ஒரு ஜதைக் காலடிச் சுவடுகளால்தான் ராஜனின் பெண் வெகுவாக
ஈர்க்கப்பட்டாள். ஆம் ஈர்க்கத்தான் பட்டாள். அவள் அவற்றைக் கண்டு
குழம்பிப்போகவில்லை. அதிர்ச்சியடையவில்லை. நழுவிக் கனவுகளுக்குள் இறங்கிவிட்ட
முந்தைய இரவின் காட்சியை அந்தச் சுவடுகள் அவள் நினைவுக்கு மறுபடி கொண்டு
வரவுமில்லை. அது மனிதக் காலடிச்சுவடுகள் இல்லையென்பது அவளுக்குத்
தெரிந்திருந்தது. ஆனால் முன்னெப்போதும் வனவிலங்குகளை அவள் நேரில்
கண்டவளில்லையாதலால் வட்ட வடிவமான கால் தடங்களை இன்னதென்று அவளால்
விளங்கிக்கொள்ள முடியவில்லை. அவை சுவற்றின் ஓரமாகப் பயணப்பட்ட விதம் மட்டுமே
அந்தப் பேதைப் பெண்ணை வியப்பிலாழ்த்தி அவள் கவனத்தைச் சுண்டி இழுக்கப்
போதுமானதாயிருந்தது. அந்தக் காலடிச் சுவடுகள் எந்தக் காரணத்துக்காகவும் அறைச்
சுவற்றின் அண்மையை விட்டு அப்பால் நகர்ந்து செல்லவில்லையென்பதே அவள்
வியப்புக்குக் காரணம். அதன் வழியில் சுவரோரமாகக் குறுக்கே நின்ற ஆளுயர
அலங்காரப் பூக்குவளையின் உட்பக்கத் தரையில் அந்தச் சுவடுகள் பதிந்திருந்தன.
ராஜன் மகள் தினமும் பார்த்துச் சிங்காரித்துக்கொள்ளும் பளிங்கு ஆடியின் வட்டப்
பரப்பின் நடுவில் சுவாசக் காற்றின் ஈரம் உலராத ஆவி அதன் இரண்டு பக்கங்களிலும்
படிந்திருந்தது. பெரிய சிமிழ்களுக்குள் ஏற்றி வைக்கப்பட்டிருந்த இரவு விளக்கின்
மேல்நுனி இணைப்பறையிருந்த திசை நோக்கியே குவித்து அழுத்தப்பட்டிருந்தது. எந்தப்
பொருளையும் ஒரு தடையென்று மதிக்காது அவற்றை ஊடுருவிக் கிடக்கும்
அதிசயிக்கத்தக்க சுவடுகளைப் பதிக்கும் பாதங்கள் யாருக்குச் சொந்தமானதாயிருக்க
முடியும். காற்றையும் ஒளியையும் தவிர வேறு யாருக்கு இப்படித் தன் அறையினுள்
உலாவிச் செல்லும் தைரியமும் லாவகமும் கைவர முடியும். தென்றலோ அல்லது நிலவோதான்
தன் அறையினுள் அன்று இரவு அப்படி நடந்து போயிருக்க வேண்டுமென்று ராஜனின் பெண்
நினைத்துக்கொண்டுவிட்டாள். அந்த அளவில் அவளுடைய பருவம் நிஜத்தில் அவள் கண்ட
காலடிச் சுவடுகளுக்கேற்ப பிரகிருதியின் அம்சங்களைக் குழைத்து ஒரு பேரழகனின்
உருவத்தை வரைந்து அவனை அவள் கனவுகளில் நடமாடவும் அனுமதித்துவிட்டது. அவன்
தன்னைக் கூடாமல் விலகிப் போனதற்கான ஒரு காரணத்தையும் அவள் ஆழ்மனம்
கற்பித்துக்கொண்டுவிட்டது. அவள் துயரத்தின் பளுவும் தாபத்தின் வெம்மையும்
பீறிடும் சில பாடல் வரிகளை இயற்றியிருக்கிறாள். அந்தப் பாடல் வரிகள்
கால்சுவடுகளைப் பார்த்த கணத்திலேயே ராஜன் மகளின் மனதில் எழுந்திருக்க வேண்டும்.
வினோதச் சுவடுகளைப் பார்த்த மாத்திரத்தில் பயந்துபோய் அலறி மற்றவர்களையும்
கலவரப்படுத்தாமல் அவற்றை ஆராயப் புகுந்தது அவளுடைய பிறவி விவேகத்தின் சிறப்பைக்
காட்டுகிறதென்றால் அவற்றால் ஈர்க்கப்பட்டு அவள் உடனே இயற்றிய பாடல் வரிகளோ
வித்தைகளில் அவளுக்கிருந்த பாண்டித்யத்தைக் காட்டுகிறது. தான் இயற்றிய வரிகளின்
சந்த நயத்திலும் கற்பனை வளத்திலும் தானே ஈர்க்கப்பட்ட ராஜனின் பெண் பிறகு
எப்போதுமே அவற்றை முணுமுணுத்துக்கொண்டிருக்கத் தலைப்பட்டாள். இதை நான் எப்படி
அறிந்தேனென்றால் என்னிடம் வித்தை கற்றுக்கொள்ள வந்த நாட்களிலும்கூட அந்தப்
பாடல் வரிகள் அவள் பிரயாசையின்றியே அவள் வாயிலிருந்து பெருகி
வழிந்துகொண்டிருந்ததை நான் கண்டிருக்கிறேன். ஆனால் அது அவளை பீடித்திருந்த
வினோத நோயின் வெளிப்பாடே என்பதை அப்போது நானும் அறிந்தேனில்லை. தான் இயற்றிய
பாடல் வரிகளைத் தன் குரலாலேயே பாடித் தன் செவிகளாலேயே நுகர்ந்து அவற்றையே
உண்மையென நினைக்கும் பிரமை வயப்பட்டு அவை தன் கனவுகள் வரை புரையோடும்படி விட்டு
விட்டதானது அனுபவத்தாலன்றி வெறும் ஏட்டுப்படிப்பால் பக்குவப்படுத்த முடியாத
அவளுடைய பதின்பருவத்தின் பலவீனத்தால் விளைந்தது. தானே நிர்மாணித்த கனவுலகில்
தன் நண்பனோடு கூடி விளையாடிக் களித்துக்கொண்டிருந்த நேரங்களிலும் இந்தப்
பாடலின் வரிகள் பின்னணியாக அவள் நாபியிலிருந்து ஒலித்தபடியே இருப்பதை நான்
முதல் நாளிரவு கேட்டேன். தூங்கும் வேளைகளில் ராஜனின் பெண் முணுமுணுத்த பாடல்
வரிகளை விளையாடிக் கொண்டிருந்த கனவுப்பெண் தன் செவிகளால் நுகர்ந்தவாறே
இருக்கும்படியானது. திரும்பத் திரும்ப பாடப்பட்ட இந்த வரிகள்தான் பெண்மையின்
இயல்பான தவிப்பைச் சிறிதுசிறிதாக ஒரு வினோதமான நோயாக மாற்றி விட்டன.

தென்றலின் நீண்ட கனவொன்றில்
என் முகம் சிற்றசைவு.
திங்களின் நெடிய ஆயுளில்
என் பெண்மை ஒற்றைப் பெருமூச்சு.
காற்றின் உறக்கமாய் நானில்லை
யென்ப தெதனால்
ஒளியின் சுவாசமாய்
நானில்லையென்பது
மெதனால்.
அதனால்
இந்த இரவென்னை
மிகப் பெரிதும் வருத்துகிறது
மேலும் அதனால்
அகாலத்தை தன் ஆபரணமாய்ப்
பூண்ட என் நண்பன்
எனை விட்டு அகன்று செல்கிறான்.
ரோகியிடம் மலர்களுடன்
நோயையும் விட்டுச் செல்லும்
இரக்கமற்ற உறவினன் போல.

விளையாட்டுகளின் உச்சக்கட்டத்தில் தன் நண்பனைப் படுக்கையில் அனுமதிக்கும்
முகமாகக் கனவுப்பெண் கண்களை மூடிக்கொண்டு தன் வழக்கமான துயில் நிலையில்
உறங்கும் நிஜப் பெண்ணின் மேல் சாய்ந்து கொள்ளும் போதெல்லாம் உறங்கும் பெண் நான்
ரோகியல்ல நான் ரோகியல்ல என்று பயத்துடனும் ஜூர வேகத்துடன் தாறுமாறாக பிதற்றத்
துவங்குவதை இதோ என் கண்முன்னே நான் மறுபடி பார்க்கிறேன். காற்றின் லகுவும்
சுகந்தமும் நிலவொளியின் தேஜஸும் நிறைந்த தன் பேரழகு நண்பன் தன்னைக் கூடும்
விருப்பமின்றி விலகிச் செல்லப் போகிறானென்னும் பயம் அவள் முகத்தைக் கோரமாகக்
குத்திக் கிழிக்கிறது. பாடலின் கடைசி வரிகள் உறங்கும் பெண்ணின் வாயிலிருந்து
கழிவுப் பொருள்களின் துர்நாற்றத்துடனும் நிறத்துடனும் பெருகி வெளியே
பீய்ச்சியடிப்பதையும் நான் இப்போது மறுபடி பார்க்கிறேன். என்னாலேயே அந்த
அருவருப்பான காட்சியைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆனால் கனவுப் பெண்ணோ வெளியே
உறங்கிக்கொண்டிருக்கும் நிஜப்பெண்ணின் அவஸ்தையை உணராதவளாக தன் மேனியெங்கும்
பெருகி வழியும் பாடல் வரிகளின் விகாரத்தை அறியாதவளாக அதே நிர்மலமான முகத்துடன்
அமைதியாக அவன் கூடுவதை எதிர்பார்த்துச் சாய்ந்திருக்கிறாள். மிகப்
பரிதாபகரமானதும் பயங்கரமானதுமான காட்சி அது. அதிசயமான காட்சியுங்கூட.
பருண்மையான கால் தடங்களை கனவுகளுக்குள் ஊடுருவும் வரிவடிவமாக்கிக் கொண்டும்
கனவுலக நண்பனை எண்ணிக் கனவுக்கு வெளியேயான பருண்மை உடலை வருத்திக்கொண்டும்
இந்தச் சிறுபெண் பட்ட பாட்டைச் சொல்லும் போது என் நா தழுதழுக்கிறது. உண்மைதான்.
அவள் அப்போது அடைந்த விகார ரூபத்தை என்னாலேயே கண்டு தாங்கிக் கொள்ள
முடியவில்லைதான். என்றால் மெல்லியதமும் புகையுருவமும் கொண்ட அந்தப் பேரழகனால்
எப்படித் தாங்கிக் கொள்ள முடியும். அவன் அவள் பாடலில் துர்நாற்றத்தைச்
சகித்துக் கொள்ள முடியாமல் அவள் அலறி விழிக்கும் படியாக முகத்தில் துப்பிவிட்டு
உடனே மறைந்து போய்விட்டான். இது ஒரு நாளல்ல. பல தினங்களாக நடந்து கொண்டே
இருந்திருக்கிறது. தன் நண்பன் விலகிப் போய் விடுவானெனும் பயத்தாலேயே அவனைப்
பறிகொடுத்தும் தீவிர பயத்தால் பாதிக்கப்பட்டும் ராஜனின் பெண் தன்னைத் தன்
நினைவின்றியே ஒரு வினோத நோய்க்கு ஒப்புக் கொடுத்து விட்டாள். கனவின் இந்த வகை
பாதிப்பால் யதார்த்த உலகில் ஒரு அழகிய ஆண்மகனைக் கூடும் அருகதை
தனக்கில்லையென்று அவள் மனது நம்ப ஆரம்பித்து விட்டது. எந்த அழகிய ஆணும்
முகத்தில் காறியுமிழக் கூடிய அளவுக்கு அவள் முகம் ரோகத்தால் விகாரப்பட்டதென்று
நாங்கள் மூன்றாம் நாளிரவு நட்சத்திரவாஸிகளின் கலவியை இசைத்து ஞாபகங்களின்
காட்டுப் புதருக்குள் தலைமுறைக்காலமாக மறைந்து கொண்டிருந்த மிருகத்தை ஸ்தூல
உருவத்துடன் வெளிப்படுத்தி அவள் கண்களுக்குப் புலியாகவே காட்டிக் கொடுக்கும்
வரை கனவுகள் அவள் ஒப்புதல் இன்றியே அவளுக்குச் சொல்லிக் கொடுத்துக்
கொண்டிருந்தன. அழகிய ஆண் உருவங்களோவெனில் முகத்தில் வழியும் உமிழ்நீரை
நினைவுறுத்தி வயிற்றிலிருந்து பொங்கி எழும் ஓங்கரிப்பை உண்டு பண்ணி அவளை
அச்சுறுத்திக்கொண்டிருந்தன என்று தன் கதையை முடித்த என் முதிர்முப்பாட்டனாரின்
துயரம் தோய்ந்த முணுமுணுப்பை பலகாத தூரம் பரந்திருந்த ஜனசமுத்திரத்தின் கடைசி
மனிதனுங்கூட தெளிவாகக் கேட்டானென்கிறது கதை: இருபத்திரண்டு ஆண்களை ஈடு செய்யும்
வலிமையும் பேரழகும் தைரியமும் கவ்வி ஞானமும் கொண்ட ஒரு யவ்வனப் பெண் தானொரு
குரூபியையோ ரோகியையோ சேர்வதற்கே தகுதியானவள் என்று நம்பும் வினோத நோய்
பீடித்தலைந்த பரிதாபத்தைப் பிரபஞ்சத்தைக் கருவறையாகத் தங்கள் கனவில் கண்டு
அதனுள் தங்களைப் பாதுகாப்பாகச் சுருட்டிக்கொண்டிருக்க விரும்பும் விலங்குகளின்
அமைதியுறாத ஆவிகள் வெட்டப்பட்ட விருட்சங்களின் இறந்து போன காற்றைச் சுமந்தபடி
அலைந்து திரியும் தெருக்களையுடைய இந்த நகரத்தைத் தவிர வேறெது உருவாகியிருக்க
முடியும்.

* *