27/03/2012

அந்தப் பாடல் எங்கே?

கருத்தொற்றுமை கொண்ட சமகாலப் படப்பாளிகளின் படைப்புகளைத் தேடிப் படிக்கிறபோதும், தொகுக்கின்ற போதும், எது, யாருடைய படைப்பு என்பதில் மயக்கம் தோன்றிவிடுவது உண்டு.

வடிவத்தாலும், உள்ளடக்கத்தாலும் தவிர்க்க இயலாத நிலையில் தோன்றும் இத்தகு மயக்கங்கள் தீர்க்கப்பட்டுத் தெளிவு படுத்தப்பட்டு உண்மை உணர்த்தப்பட்டபிறகும், அவை குறித்த பதிப்பாக்கங்களில் இத்தவறுகள் களையப்படாமல் இருப்பது, தமிழ் இலக்கிய வரலாற்றில் நிகழ்ந்துவரும் வருந்தத்தக்க பதிவாகும். இத்தகு நிலைக்கு ஆளான படைப்பாளிகள் மகாகவி பாரதியாரும், பாவேந்தர் பாரதிதாசனும் ஆவர்.


ஆங்கில ஆதிக்கத்தின் பிடியிலிருந்து தப்பி, புதுவையில் இருந்து இதழியல் பணிகளைத் தொடரப் புதுச்சேரி புகுந்தவர் பாரதியார். புதுவை வந்த இரண்டாண்டுகளுக்குள்ளேயே, தமது இனிய தோழரும், விடுதலைப் போராட்ட வீரருமான ஸ்ரீஅரவிந்தரைப் புதுவைக்கு வரவழைத்துவிட்டார். 1910-இல் புதுவைக்கு வந்த அரவிந்தரை, தமது நண்பர்களின் துணையோடு வரவேற்று, கலவை சங்கரஞ்செட்டியார் இல்லத்தில் பாதுகாப்போடு தங்க வைத்த பாரதியார், ஒற்றர்களின் கண்களுக்கு அகப்படாமல் மாலை தொடங்கி நள்ளிரவு வரையிலும், அரவிந்தரோடு உரையாடுவதையும், வேத, இலக்கிய ஆய்வுகள் நடத்துவதையும் தமது அன்றாடப் பணிகளாகக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், பாரதி கவிதாமண்டலத்தில் தம்மை இணைத்துக்கொண்ட புதுவைத் தமிழாசான், பாரதிதாசனாகிப் புரட்சிக் கவிதைகள் பல படைத்தவர். பாரதியாரின் தலைமைச் சீடர்களுள் தன்னிகரற்றவர். பாரதியாருடன் அரவிந்தரைச் சந்தித்தவரும் கூட. அதன் அடிப்படையில் பாரதிதாசன், அரவிந்தர் மீது ஒரு பாடலும் எழுதியிருக்கிறார். "அரவிந்தப் பாம்பு' என்ற அக்கவிதை, இதுவரையில் பாரதிதாசன் கவிதைகள் நூலில் இடம்பெறவில்லை. ஆனால், பாரதியார் கவிதைகளில், தொடர்ந்து இடம்பெற்றுவருகிறது.

எனவே, "அரவிந்தப் பாம்பு' என்ற தலைப்பில், பாரதியார் கவிதைகளில் இடம்பெறும் பாடல் உண்மையில் பாரதியாரால் எழுதப்பெறாத கவிதை ஆகும். இப்பாடல், சி.சுப்பிரமணிய பாரதி எழுதி  இதுவரை வெளிவராத பாடல்; "பெ.தூரன் தேடி உதவியது' என்ற குறிப்புடன் 1942-ஆம் ஆண்டு கலைமகள் பொங்கல் மலரில் வெளிவந்த பாடல் இது. உண்மையில் இது பாரதிதாசனால் எழுதப்பட்ட பாடலாகும்.

அதற்கான சான்று பின்வருமாறு: கலைமகளில் வெளிவந்த அப்பாடலைப் படித்துவிட்டு, ஆனந்தவிகடன் இதழின் புதுவை வட்டார விற்பனையாளரும், பாரதிதாசனின் நூல்களை முற்காலத்தில் வெளியிட்டவருமான காசி . லட்சுமணப்பிரசாத் என்பவர், பாரதிதாசனிடம் ஓடிவந்து, ""இதைப் பாருங்க வாத்தியாரே, உங்க பாட்டை பாரதி எழுதியதாகப் போட்டிருக்காங்களே'' என்று கூறிக் கலைமகள் இதழைக் காட்டிவிட்டுத் தம் கையில் வைத்திருந்த ஒரு பத்திரிகைத் தொகுப்பையும் பிரித்து வைத்தார்.

புதுவையில் மிகப் பழைய நாளில் வெளிவந்த கற்பகம் என்ற இலக்கிய இதழின் தொகுதி அது. அதிலே பாரதிதாசன் எழுதியிருந்த பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. அதே பாடல் தான் கலைமகள் இதழில் பாரதியார் எழுதி இதுவரை வெளிவராத என்ற குறிப்புடன் வெளியாகியிருந்தது. இதைப்பற்றிக் கலைமகள் நிறுவனத்தார்க்கு, லட்சுமணப்பிரசாத் மடலும் எழுதினார். கலைமகள் எதுவும் மறுமொழி எழுதவில்லை என்று குறிப்பிடும் மன்னர்மன்னன் (பாரதிதாசனின் மகன்) அப்பாடல் முழுவதையும் தருகிறார். அப்பாடல் இதோ -

ஆடு பாம்பே எழுந்தாடு பாம்பே
அன்னை துயில் நீங்க நலம் துன்னப் பாம்பே (ஆடு)
உண்மை நிலை கண்டுறங்கும் பாம்பே- உன்
உலகத்தைச் சமன்செய்ய எண்ணு பாம்பே
திண்மைநிலை கொண்டிருக்கும் தெய்வப்பாம்பே- என்
தெய்வீகத்தைக் காட்டுதற்குத் தீவிரம் கொள்வாய்- (ஆடு)
பாரதத்திலே பிறந்த பன்னகப் பிள்ளாய்- இந்தப்
பாரதத்தில் அன்பு வைத்த நல்ல பாம்பே
பாரதத்தை விடுவிக்கும் வழிநினைந்தே - நல்ல
பக்குவமிகுந்திருக்கும் படப்பாம்பே (ஆடு)
ஆடிவரும் விதந்தெரிந்தூதி வருவேன்- இங்
கனைவரும் தகத்தகத் தாளமிடுவோர்
மோடியிசை பாடுதற்குக் காந்தியொருவன்- இங்கு
மொய்த்திருக்கும் தொண்டரிடை ஆடு பாம்பே (ஆடு)
செம்மை, அறம், ஞானமிவை செகத்திலெல்லாம்- இனித்
திகழ்ந்திடச் செய்வதுன்றன் மணித்தலையே
பொய்ம்மை கொண்ட பகைவர்கள் புலையமக்கள்
பொசுங்கிட விஷஞ் சொரிந்தாடு பாம்பே (ஆடு)
பாரதர்க்குப் பாரதத்தில் உரிமையில்லை- இந்தப்
பாவனையைத் தீர்க்க நல்ல காலமுமில்லை
சீர்கெடுக்க நினைந்திருக்கும் பகைக்குலத்தை- நீ
சீறிப் படத்தை விரித்தாடு பாம்பே (ஆடு)
ஆதிசிவன் மேலிருந்த நாகப் பாம்பே- எங்கள்
அரவிந்தப்பேர் புனைந்த அன்புப் பாம்பே
ஜோதிப் படந்தூக்கி நடமாடி வருவாய்- அந்தச்
சோலை நிழலால் எமது துன்ப மொழிவோம்  (ஆடு)

இப்பாடலுள், உண்மை நிலை கண்டுறங்கும் பாம்பே எனத்தொடங்கும் பகுதியின் நான்கு அடிகளும், ஆதிசிவன் மேலிருந்த நாகப்பாம்பே எனத்தொடங்கும் பகுதியின் நான்கு அடிகளும் பாரதியார் பாடலாக வெளியிடப்பட்டவையாகும்.

இது தொடர்பான மேலும் ஒரு கருத்தை, மன்னர்மன்னன் தமது "கருப்புக்குயிலின் நெருப்புக் குரல்' நூலில் தருகிறார்:- பாரதிதாசன் கவிதைகள் முதல் தொகுதியின் (ஈரோடு குடியரசுப் பதிப்பான - 1944-ஆம் ஆண்டு) மூன்றாம் பதிப்பின் ஆசிரியர் வாழ்க்கைக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இவரது பாட்டுகள் நமது பாரதியாரின் பாடல்கள் போலவே இருக்கும். பாரதிதாசன் எழுதிய பாம்புப்பாட்டை பாரதியாரின் நண்பரான ஓர் ஆசிரியரே, பாரதியார் பேரால் தம் பத்திரிகையில் வெளியிட்டது சிலருக்கேனும் ஞாபகமிருக்கலாம் என்கிறது அந்தக் குறிப்பு.
இதன் அடிப்படையில், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், பாரதியார் நூற்றாண்டுப்போதில் வெளியிட்ட பாரதி பாடல்கள் ஆய்வுப் பதிப்பில் இப்பாடலைத் தந்து, "இப்பாடல் பாரதியார் இயற்றியதன்று. பாரதிதாசனார் பாடல் என்று ஆய்வாளர்கள் தெளிவுறுத்தியுள்ளனர்' என்ற குறிப்பையும் வெளியிட்டிருக்கிறது. எனினும், இப்போதுவரை வெளிவந்து கொண்டிருக்கும் பாரதியார் கவிதைகள் தொகுப்பில், தவறாது இப்பாடல் இடம்பெற்று வருவதோடு, பாரதிதாசன் கவிதைகள் தொகுப்பில் இப்பாடல் இன்னும் சேர்க்கப்படாமலும் இருக்கிறது.

இனிவரும் காலத்திலேனும் இத்தவறு திருத்தப்பட வேண்டியது இன்றியமையாதது.

ஆகஸ்ட் 15-ஆம் தேதி அரவிந்தர் பிறந்த தினத்தையொட்டி பாரதியாரும், அரவிந்தரைப் புகழ்ந்து தமிழில் ஒரு வாழ்த்துப் பாடல் பாடினார். பின்னர் அதை அரவிந்தருக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கூறினார். அதைக் கேட்டு அரவிந்தர் மகிழ்ச்சியடைந்தார் என்று பாரதியாரைப் புதுவையில் நேரில் அறிந்து பழகிய டி.விஜயராகவாச்சாரியார் குறிப்பிடுகிறார்.
ஆண்டு சுட்டப்பெறாத இச்செய்தியின் மூலமாக, பாரதியார், அரவிந்தரைப் பாடியதும் உண்மை என்று தெரியவருகிறது. ஆகவே, அந்த ஆண்டோடு, பாரதியார் பாடிய அந்தப்பாடலும் பாரதியன்பர்களின் தேடலுக்கு உரியதாக அமைகிறது, தேடினால் கண்டடைய முடியும் என்பது நம்பிக்கை.


நன்றி - தமிழ்மணி

கருத்துகள் இல்லை: