19/02/2011

பிள்ளைத்தமிழ்

நமது புலவர்கள் நமக்காக அருளிச் சென்ற நூல்களைப் பற்றிய விபரத்தை இந்த பகுதியில் சுருக்கமாகப்  பார்க்கலாம்.
இருவகை பிள்ளைத்தமிழ்
கடவுளையோ, மனதிற்குப் பிடித்த தலைவனையோ குழந்தையாகப் பாவித்துப் பாடுவது பிள்ளைத்தமிழ் ஆகும். குழந்தை பிறந்தது முதல் சிறுவனாகும் வரை பத்து பருவங்களாகப் பிரிப்பர். பருவத்திற்கு பத்து பாடல்கள் வீதம் மொத்தம் நூறு பாடல்கள் பிள்ளைத்தமிழில் இடம்பெறும். பிள்ளைத்தமிழை ஆண்பாற்பிள்ளைத் தமிழ்,பெண்பாற்பிள்ளைத்தமிழ் என்று இரண்டாகப் பிரிப்பர்.
ஏழு பருவங்கள்
இருவகைப் பிள்ளைத்தமிழுக்கும் பத்து பருவங்கள் இருந்தாலும், ஏழு பருவங்கள் மட்டுமே பொதுவாக அமையும். மற்ற மூன்று பருவங்களும் வேறுபடும். காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி ஆகிய ஏழு பருவங்களும் இரண்டு பிள்ளைத்தமிழுக்கும் பொதுவானவை. சிற்றில் சிதைத்தல், சிறுபறை முழக்கல், சிறுதேர் உருட்டல் ஆண்பால் பிள்ளைத்தமிழுக்கு மட்டுமே வரும். பெண்பாற் பிள்ளைத்தமிழில் நீராடல், அம்மானை ஆடல், ஊசல் ஊடல் ஆகிய மூன்று பருவங்களும் வரும்.
பருவம் என்றால் என்ன?
காப்பு என்பது சின்னஞ்சிறு குழந்தையைக் காப்பாற்றி அருள்செய்யும் படி பல்வேறு தெய்வங்களை வேண்டிப் பாடுவதாகும். ஒரு காலை மடக்கியும், ஒரு காலை நீட்டியும் இரு கைகளை தரையில் ஊன்றியும் தலையை அசைத்தாடும் பருவம் செங்கீரையாகும். குழந்தையைத் தொட்டிலில் இட்டு, நாக்கை அசைத்து ஒலியை எழுப்பி உறங்க வைக்கும் பருவம் தாலப்பருவம். குழந்தை தன் இரு கைகளையும் சேர்த்து ஓசை எழக் கொட்டும்படி கேட்கும் பருவம் சப்பாணி பருவம். பெற்றோர் குழந்தையைக் கொஞ்சி மகிழ்ந்து முத்தம் தரும்படி வேண்டுவது முத்தப்பருவமாகும். தளர்நடையிடும் பிள்ளையை வருக! வருக! என்று அழைத்து மகிழ்வது வருகையாகும். அம்புலி என்றால் நிலா என்று பொருள். வானில் உலவும் நிலாவைக் குழந்தையோடு விளையாட அழைக்கும் பருவம் அம்புலி.
ஆண்குழந்தைகளுக்கான பருவம்
மணலில் சிறுவீடு கட்டி விளையாடும் போது, காலால் உதைத்து கலைத்தல் வேண்டாம் என்று சிறுவனிடம் வேண்டிக் கொள்வது சிற்றில் சிதைத்தல் ஆகும். பெற்றோர் பிள்ளையிடம் சிறுபறை என்னும் இசைக்கருவியைக் கொட்டி விளையாடும்படி கூறும் பருவம் சிறுபறை முழக்கல் ஆகும். மரத்தால் செய்யப்பட்ட சிறுதேரினை உருட்டி விளையாடச் சொல்லி மகிழ்வது சிறுதேர் உருட்டல் ஆகும்.
பெண் குழந்தைகளுக்கான பருவம்!
பெண் குழந்தையை நீரில் குளிக்கும்படி வேண்டும் பருவம் நீராடல் எனப்படும். பெண்கள் விளையாடும் விளையாட்டு அம்மானை ஆகும். பொம்மையை மேலே வீசி விளையாடும் படி பெற்றோர் பெண் பிள்ளையிடம் வேண்டுவது அம்மானைப் பருவமாகும். குழந்தையை ஊஞ்சலில் ஆட்டி விட்டு பெற்றோர் மகிழும் பருவம் ஊசல் ஆடலாகும்.
பிள்ளைத்தமிழ் நூல்கள்
குமரகுருபரரின் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழும், முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழும் புகழ்பெற்றவை. இது தவிர, பகழிக்கூத்தரால் எழுதப்பட்ட திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளையால் எழுதப்பட்ட சேக்கிழார் பிள்ளைத்தமிழும் சிறப்பானவை. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. அப்போது அம்மனே குழந்தையாக வந்து திருமலைநாயக்கரின் மடியில் அமர்ந்து  பாடலைக் கேட்டு ரசித்ததோடு, முத்துமாலை ஒன்றைப் பரிசாகக் கொடுத்து மறைந்ததாகவும் சொல்லுவர்

கருத்துகள் இல்லை: