15/02/2011

தமிழும் தனித்தமிழும்! - ஜெயகாந்தன்

தமிழ் ஒரு மொழி. தனித் தமிழ் ஒரு முயற்சி. தனித் தமிழே தமிழ் மொழியல்ல.
இந்தத் தௌ¤வு எனக்கிருப்பதால் தனித்தமிழ் மீது எனக்கு வெறுப்பில்லை. இந்தத் தௌ¤வு இல்லாததினால் தனித்தமிழ்ப் பிரியர்கள் தம்மை அறியாமலேயே தமிழை வெறுத்து வருகிறார்கள்.
தமிழனது சமுதாய வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் கலப்புகள் நிகழ்ந்திருக்கிறதோ அப்பொழுதெல்லாம் தமிழ் மொழியில் கலப்பு நிகழ்ந்திருக்கிறது. இவ்விதக் கலப்பினாலேயே அவனது வாழ்க்கை வளமுற்றது போல - அவனது மொழியும் வளம் பெற்றிருக்கிறது.
தனிப்பட்ட சொந்த வாழ்க்கையின் இத்தகைய கலப்புக்களையெல்லாம் தவிர்க்க முடியாமல் ஏற்றுக் கொண்டுவிட்ட சிலர், மொழி மட்டும் தனித்திருக்க வேண்டுமென்று ஆசையுற்று அவ்வித முயற்சியில் இறங்குவது ரசனைக்குரியதே. ஒரு முயற்சி என்ற முறையில் அதிலிருக்கும் பலவீனமான அழகைக் கூட என்னால் ரசிக்க முடிகிறது. எனினும் அதுவே தமிழ் என்பதைத்தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அந்தத் தனித்தமிழ் முயற்சியில் சில வியாசங்கள் வரையலாம். நண்பர்களுக்குக் கடிதங்கள் எழுதிக் கொள்ளலாம். மேடையில் மிகுந்த ஜாக்கிரதையோடு கூடிய ஒரு சமத்காரத்தோடு கூற வந்த விஷயத்தைக் கூற முடியாமலேயே - தமிழின் தனித்துவத்தைக் காப்பாற்றக் கூடிய முயற்சியில் வெற்றியோ, தோல்வியோ பெற்று ஒருவாறு பேசி முடிக்கலாம்.
என்னதான் செய்தாலும் இந்தத் தனித்தமிழில் ஒன்றை மட்டும் செய்ய முடியாது. இலக்கியம் சிருஷ்டிப்பது என்ற மகத்தான காரியத்தைக் கம்பியில் நடப்பது போன்ற இந்தத் தனித்தமிழ் என்கிற 'பாலன்ஸ்' கூத்தின் மூலம் நிறைவேற்றவே முடியாது.
ஒரு மொழியெனின் அதில் இலக்கியம் உருவாக வேண்டும். வாழ்க்கையைப் புறக்கணித்து இலக்கியங்கள் உருவாவதில்லை. இன்றைய தமிழ் இலக்கியம் என்பது - உலக அளவிற்கு உட்பட்ட துறைகளில் உருவாவது, உரைநடையில் நிறைவேறுதல் வேண்டும். உரை நடையென்று செய்யுளுக்கு வந்த உரைபோல அமைதல் கூடாது. எந்த அளவுகு நடைமுறை வாழ்க்கையோடு - அதன் பிரத்தியேக அழகுகளோடு வசனம் இசைந்து உருப்பெறுகிறதோ அந்த இசையையே வசனத்தின் வளர்ச்சியெனக் கொள்ளூதல் வேண்டும். அதற்குமேல் நவீன இலக்கியங்கள் நாம் சந்திக்கின்ற மனிதர்களைப் பாத்திரங்களாகக் கொண்டிருத்தல் வேண்டும்.
பாத்திரப் படைப்பு என்பது ஒவ்வொன்றும் தனித்தன்மையோடு விளங்க - இது இந்தக் காலத்தை - இந்தச் சூழ்நிலையை - இந்தப் பிரதேசத்தை - இந்த வர்க்கத்தை என்றெல்லாம் சம்பாஷணைகளின் மூலமும் சிந்தனைகளின் மூலமும் ஆசிரியனின் விவரிப்பின் மூலமும் நிலை பெறுதல் வேண்டும்.
இந்தச் சாதனையைத் தனித்தமிழ் என்ற ஒரு சாதாரண முயற்சி சாதிப்பது துர்லபம். ஏனெனில் தனித்தமிழ் என்பது ஒரு வாழ்க்கை உண்மையில்லை; அது ஒரு மனமயக்கம்! அல்லது ஒரு குழுவின் விருப்பம். இதற்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லாதிருப்பதே இதன் சிறப்பு.
(எனவேதான் இதனை ஒரு முயற்சி என்று குறிப்பிட்டேன்.)
இதில் ஒரு வெறியோடு சம்பந்தப்பட்ட சிலர் தங்களது சிந்தனைகளையெல்லாம் மனத்துள் மொழிபெயர்த்து நண்பர்களோடு உரையாடுகையில் பேசிக்கொள்கிறார்கள். இவர்கள் தங்களது கையாலாகாத்தனம் வெளிப்படுகையில் கூட வெட்கப்பட்டு இதனைக் கைவிடுவதில்லை. இவர்கள் உண்மையின் ஒளியின்றி உதட்டால் பேசுவதைக் காணும்பொழுது தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளக்கூடிய மாய்மாலக்காரர்களாகவே எனக்குத் தோன்றுகிறது. கொஞ்ச காலத்திற்குப் பிறகு இவர்களது அசட்டுத்தனம் மாறிப் போனதை நான் பார்க்கிறேன்.
இந்தத் தனித்தமிழ் இலக்கியம் சமைப்பதாக எண்ணிக் கொண்டு எழுதித் தள்ளிய பேராசிரியர்கள்கூட அந்த வழியினின்றும் இன்று மாறியிருக்கிறார்கள். இன்னும் இலக்கியம் இவர்கள் கையில் உருப்பெறாததற்குக் காரணம் இது ஒன்றுமட்டுமல்ல; தனித்தமிழ் ஒரே மாதிரிதான் இருக்கும். அதிலே பல்வேறுபட்ட நடைகளும் சாத்தியமில்லை.
ஒரு நடைதான் சாத்தியமெனில் அது ஒரு மொழியா?
வேறு மாதிரியான ஒரு நடையே சாத்தியமில்லையெனில் பல்வேறு தரப்பட்ட பாத்திரங்களை சிருஷ்டிப்பது சாத்தியமாகாது.
தனித் தமிழ்தான் தமிழ் எனில் இலக்கியம் படைக்க லாயக்கற்ற மொழி தமிழ் என்றாகும்.
தனித்தமிழ் என்பது ஒரு நினைப்புத்தான். தனித்தமிழ் என்று நினைத்துக் கொண்டிருப்பினும் இவர்களால்கூட அறியாமை காரணமாகப் பிறமொழிச் சொற்கள் உபயோகிக்காமல் இருக்க முடிவதில்லை.
ஆனால் பாவம், இவர்களுக்கு அது தெரியாது. தமிழ் தனியாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கும் தனியாக இருக்கிறது என்று நம்புகிறவர்களுக்கும் கூடத் தெரியாமலேயே தமிழில் பிறமொழிச் சொற்கள் கலந்திருக்கின்றன. தமிழ் பிறமொழிகளில் கலப்பதும் பிற மொழிகள் தமிழில் கலப்பதும் விஞ்ஞானப் பூர்வமான ஒரு விளைவு என்பதனால்தான் இதனை அவ்வளவு சீக்கிரம் பிரித்து விடவும் முடிவதில்லை.
திரு.வி.கே. சூரியநாராயண சாஸ்திரிகள் தமது பெயரைத் தனித்தமிழில் மாற்றிக் கொள்வதாக எண்ணி, சூரியன் - பரிதி, நாராயணன் - மால், சாஸ்திரி - கலைஞன் என, மொழிபெயர்ப்பதாக எண்ணி வேறு சமஸ்கிருதச் சொற்களில் மாற்றி 'பரிதிமாற்கலைஞன்' என்று வைத்துக் கொண்டார் என்பது ரொம்ப ரஸமான விஷயந்தான்.
பரிதி என்பதும், மால் என்பதும் சமஸ்கிருதச் சொற்களே!
ஒரு பொருளைக் குறிக்கப் பல வார்த்தைகளிருப்பது ஒரு மொழியின் செழுமை. அவ்விதம் இருக்கின்ற வார்த்தைகளை மொழி ஆராய்ச்சியாளர்கள் எந்தெந்த வார்த்தைகள், எந்தெந்தக் காலத்தில், எதனெதன் விளைவாய் எந்தெந்த மொழிகளில் இருந்து வந்திருக்கக் கூடுமென்பதை ஆராய்ந்து குறிக்கலாம். இதற்கு உதவுபவை அம்மொழியின் இலக்கியங்களேயாகும்.
அதாவது இத்தகைய கலப்புக்களை அவ்விலக்கியங்கள் பிரதிபலித்திருக்கக் கூடும் என்று கொள்ளுதல் வேண்டும்.
நாவாய் என்ற வார்த்தை தமிழர் நாகரிகம் கடல் கடந்து சென்ற காலத்திற்கு முன்பு தமிழக மண்ணில் யவனர்கள் வாணிகஞ் செய்யும் பொருட்டு வருவதற்கு முன்பு இருந்திருக்க முடியுமா என்பதை ஆராய வேண்டும்.
நாவாய் என்ற சொல் கப்பலைக் குறிக்கின்ற தனித் தமிழ் சொல்லெனக் கருதுதல் வேண்டா. அஃது கிரேக்க மொழியின் 'நோவே' என்ற கப்பலைக் குறிக்கின்ற சொல்லின் திரிபேயாகும்.
இவ்விதம் திரிந்து பல்வேறு ஐரோப்பிய மொழிகளிலும் இவ்வார்த்தை இருத்தல் கூடும். ஆங்கிலத்தில் 'நேவி' என்றிருப்பது போல.
தமிழ் இலக்கியங்களைப் பார்த்தால் ஒவ்வொரு காலத்து இலக்கியமும் அந்தந்தக் காலத்தைப் பிரதிபலிப்பனவையாயிருக்கின்றன. அவையாவும் ஒரே செய்யுள் வடிவில் இருப்பினும் ஒரே மாதிரியாக இல்லை.
தமிழுக்கு சிரஞ்சீவித் தன்மை தந்த தமது முற்காலத்துக் கவிஞர்கள் எல்லாம் வாழ்க்கையில் வந்து கலந்த பிறமொழிச் சொற்களைக் கைவிட முடியாமல் கையாண்டு நமது இலக்கியங்களூக்குச் செழுமை தந்திருக்கின்றனர். அதற்கு இடங்கொடுக்காத இலக்கணத்தை அவர்கள் இழுத்து வளைத்திருக்கிறார்கள். அவர்கள் இழுப்பிற்கு இலக்கணம் வளைந்து கொடுத்தும் இருக்கிறது. அதன் மூலம் அவர்கள் புதிய இலக்கணத்தை உருவாக்கியுமிருக்கிறார்கள்.
அன்று அவர்கள் இலக்கியம் சமைத்திருப்பது செய்யுள் உருவத்தில். அவர்களே இந்தக் காரியத்தைச் செய்திருக்கிறார்கள் என்றால் - அவர்கள் காலத்தைவிட எத்தனையோ மடங்கு வேகமானதும் விரைவானதுமான, அதிகக் கலப்பு நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்தக் கால வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் நவீன இலக்கியத்தை உரைநடையின் மூலம் உருவாக்குகின்ற ஒருவன் தனித் தமிழைக் காப்பாற்றுவது எங்ஙனம்?
'அந்தோணி சைக்கிளில் போனான். டயர் பஞ்சராயிற்று' என்ற வாக்கியங்கள் தமிழ் இல்லையென்று யார் சொல்லுவது? இதனை எவ்விதம் தமிழாக்குவது? தனித் தமிழ்வாதிகளூக்கு இந்தச் சொற்றொடரில் இரண்டே வார்த்தைகள் தான் இருக்கின்றன. ஆயிற்று, போனான் என்பதே அவை. ஆவதும், போவதும் தமிழனின் எல்லாக் காலத்திலும் இருந்த ஒரு வினை.
ஆனால் அந்தோணியும், சைக்கிளும், டயரும், பஞ்ச்சரும் ஒரு நவீன காலத்தைப் பிரதிபலிக்கின்ற உண்மைகள் அல்லவா?
இதனை மொழிபெயர்ப்பதன் மூலம் காலமும் இடமும் அற்ற ஒரு கனவு மயக்கத்திற்கு அல்லவா நாம் போய் விடுகிறோம்.
சைக்கிள் என்ற பொருள் நமக்கு வேண்டும். சைக்கிள் என்ற பெயர் நமக்கு வேண்டாம் என்று சிலர் விரும்புவதை வாழ்க்கை எவ்விதம் அனுமதிக்கும்?
எனவேதான் சொல்லுகிறேன்.
தமிழ் ஒரு மொழி.
தனித்தமிழ் ஒரு முயற்சி - ஒரு விளையாட்டு. அது சிருஷ்டிமேதை அவசியப்படாத சில வாத்தியார்களுக்கும், ஒரு தற்காலிகக் கவர்ச்சியை நாடும் சில மாணவர்களூக்கும் ஒரு வேளை உகந்ததாய் இருக்கலாம்.
மொழி என்பது சில வாத்தியார்களிடத்திலும் இல்லை; சில மாணவர்களிடத்திலும் இல்லை. அது வாழ்க்கையில் இருக்கிற்து.
எனவே இந்தத் தனித்தமிழ் யதார்த்தத்திற்கும் ஒத்துவராது; இலக்கியத்திற்கும் ஒத்துவராது; எழுதுபவனுக்கும் ஒத்துவராது.
எனினும் தனித்தமிழ் என்பது ஒரு ரசிக்கத்தக்க முயற்சிதான்!
இந்தத் தனித்தமிழ் மீது நம்பிக்கையில்லாமலேயே சில அரசியல்வாதிகள் இதைத் தாங்கிக் கொண்டிருக்கிறார்களே அதுதான் இதில் உள்ள மகத்தான ஹாஸ்யம்.!
(எழுதப்பட்ட காலம்: 1964)

1 கருத்து:

pradeep kumar (@M_Pradeep) சொன்னது…

Crystal clear explanation by Legend. thus, "Muyarchi seyum thani thamizh virumbigal athanai thodarnthu vilayadattum!"