25/02/2011

செப்பேட்டில் "நவகண்டம்' பற்றிய குறிப்புகள் - சந்தியூர் கோவிந்தன்

பழங்காலத்தில் மன்னர்கள் போரில் வெற்றிபெறவும் அவர்களின் முக்கிய வேலைகள் எவ்விதத் தடங்கலின்றி நடந்தேறவும் போர்வீரர்கள் தங்களை கொற்றவை தெய்வத்தின் முன், தங்களைத் தாங்களே பலியிட்டுக் கொள்வது வழக்கம். அவ்வாறு பலியிட்டுக் கொள்பவர்கள் கூரிய வாளால் உடலை ஒன்பது பாகங்களாக கை, கால், வயிறு ஆகிய பகுதிகளை அரிந்துகொண்டு இறுதியாக தன் தலையைத் தானே அறுத்துக்கொள்வர். இத்தகைய சிற்பங்கள் "நவகண்ட சிற்பங்கள்' எனப்பட்டது.

பொதுவாக காளி (அ) துர்க்கை தெய்வத்தின் முன் நின்றபடியோ, அமர்ந்த நிலையிலோ அல்லது முழங்காலிட்ட நிலையிலோ வீரன் தலையைக் கொய்து கொள்வதுபோலச் சிற்பங்கள் இருக்கும். கழுத்தில் வாள் வைத்த நிலையிலும் இருக்கும்.

சிலப்பதிகாரத்தில் நவகண்டம் குறித்த தகவல்கள் உள்ளன. கண்ணகி தெய்வத்துக்கு கொல்லர்கள் சிலரை கொங்கர் பலியிட்டதாக சிலப்பதிகாரம் உ.வே.சா.பதிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிலப்பதிகாரத்தில் "நவகண்டம்' குறித்த தகவல்கள் இடம் பெற்றிருந்தும், பல்லவர் காலம் தொடங்கியே தமிழகத்தில் நவகண்ட சிற்பங்கள் நிறைய உள்ளன.

நவகண்ட சிற்பங்கள் தமிழ்நாட்டில் பல ஊர்களில் கிடைத்திருக்கின்றன. இதை, "சாவான் சாமி' என்ற பெயரில் வழிபாடு செய்துவருகின்றனர். வீரர்கள் தங்கள் தலையை தலைப்பலி கொடுப்பது பற்றி இலக்கியங்களில் நிறைய சான்றுகள் உள்ளன. கலிங்கத்துப் பரணியில்,

""சலியாத தனியாண்மைத் தருகண் வீரர்

தருகவரம் வரத்தினுக்குத் தக்க தாகப்

பலியாக உறுப்பரிந்து தருவதும் என்று

பரவுமொலி கடடொலிபோல் பரக்குமாலே''

""அடிக்கழுத்தின் நெடுஞ்சிரத்தை அரிவராலோ

அரிந்தசிரம் அணங்கின்கைக் கொடுப்பராலோ

கொடுத்தசிரம் கொற்றவையைப் பரவு மாலோ

குறையுடனும் கும்பிட்டு நிற்குமாமோ''

என்று "தலைப்பலி' கொடுத்தல் பற்றிக் கூறப்பட்டுள்ளது.

சோழன் பூர்வ பட்டம் கொங்கு நாட்டில் பல ஊர்களில் நரபலி நடந்ததைக் குறிப்பிடுகிறது. சென்னிமலை, பேரூர், அன்னூர், அவிநாசி ஆகிய ஊர்களில் நரபலி கொடுக்கப்பட்ட தகவலை அறியலாம்.

நரபலி கொடுக்கப்பட்டவர்களுக்கு அங்கு நடுகல் நடப்பட்டது. சோழன் பூர்வபட்டய செப்பேடு வாசகத்தைப் பார்ப்போம்.

"பாலகுமாரனை அழைத்து திருமஞ்சன மாடுவித்து திருநீற்றுக் காப்புமிட்டு ஆடையுடுத்தி ஆபரணங்கள் பூட்டி அலங்கரித்துப் பாலசனமிடுவித்து பரிமள களப கஸ்தூரிகள் பூசி வீர சந்தனம் இடுவித்துப் பாக்கு வெற்றிலை கையில் கொடுத்து வீரகொம்பு, விரகாளம், வீரமல்லாரி, வீரசிகண்டி, வலம்புரிச் சங்குடனே வீரமேள வாத்தியம் முழங்க பஞ்ச வண்ணக்கடைய பஞ்சமுகத் தீவட்டிகை விருது ரண வீரவளை வேங்கைப் புலிக்கொடியுடனே நடை பாவாடையுடனே நடை பாவாடைமேல் நடந்து, நடன சங்கீத ராக மேள வாத்தியம் சூழ்ந்துவர சென்னி மாநகரில் நாலுவீதி மெறமனையும் விருவித்துச் சென்னி மாகாளிக்கு எதிர் நிறுத்தி அந்த பாலகுமாரனை சமய முதலியாகிறவர் நாம் முன்பு சொன்ன நற்பலியும் உனக்கு வந்ததென்று அந்தப் பாலகுமாரனை வெட்டிப் பலியூட்டி வைத்து... பின்பு அந்த சென்னி மாகாளி பலிக்கு நின்ற பாலகுமாரனை சாவார்க்கோல முகத்தேதியாய் ஒரு கற்சிலை விக்கிரகமும் அவனைப் பார்த்தாப்போல் பார்க்கிறமுகமாக அடிப்பித்து அந்தச் சிலையை சென்னியங்கிரி ஆலயத்தில் நிறுத்தி வைத்து குமார சுப்பிரமணிய பண்டிதரைக்கொண்டு அந்தச் சிலைக்கு புண்யாங்க அஷ்ட மந்திரப் பிரதிஷ்டையும் செய்வித்து, அபிஷேக தூப ஆராதனை முடிப்பித்து எல்லோரும் தரிசித்துக்கொண்டு அதன்பின் அந்தச் சாவாரப் பலிக்கல் சிலைக்கு...' என்பது அதன் பகுதி.

இன்றும் ஈரோடு, சென்னிமலை, திருச்செங்கோடு, கபிலர்மலை, மதுரை, திருவண்ணாமலை ஆகிய ஊர்களில் "சாவான் சாமி' கோயில்கள் உள்ளன. சேலத்தில் எடப்பாடி, புதுப்பாளையம், தாரமங்கலம், அத்தனூர், மணப்பள்ளி, கல்யாணி, சிங்களாந்தபுரம் ஆகிய ஊர்களில் நவகண்ட சிற்பங்கள் உள்ளன.

காரைக்குடிக்கு மேற்கே 9.கி.மீ. தொலைவில் உள்ளது குன்றக்குடி. இங்குள்ள குடைவரைக் கோயிலிலுள்ள கொற்றவை சிற்பம் எழில் மிக்கது. கொற்றவையின் வலப்புறத்தே வீரன் ஒருவன் "நவகண்டம்' அளிக்க, தன் வலக்கையால் வாளை ஏந்தி அடிக்கழுத்தில் நெடுஞ்சிரத்தை அரியும் நிலையில் காட்டப்பட்டுள்ளன. இதேபோல கொற்றவைக்கு தலையை அரிந்து கொடுக்கும் சிற்பங்களை மகாபலிபுரம் - திரெüபதி ரதத்திலும் சிங்கவரம் குன்றத்திலும் திருவானைக்காவிலும் காணலாம்.

இதைக் கம்பவர்மன் காலத்து நடுகல் ஒன்று சிறப்பாகக் கூறுகிறது.

""ஸ்ரீகம்ப பருமற்கி யாண்டு இருபதாவது

பட்டை பொத்தவனுக்கு ஒக்கொண்ட நாதன்

ஒக்கதிந்தன் பட்டை பொத்தன் மேதவம்

புரிந்ததென்று படாரிக்கு நவகண்டம் குடுத்து

குன்றகத் தலை அறிந்துப் பிடலிகை மேல்

வைத்தானுக்கு...''

என்பது அந்தக் கல்வெட்டு வாசகம்.

ராசிபுரம் அருகேயுள்ள அத்தனூர் அம்மன் கோயிலிலுள்ள நவகண்ட சிற்பம் கிழக்கு நோக்கி நின்ற நிலையில் தனது கழுத்தை நீண்ட கத்தியால் தானே அரிந்து கொள்வதைப் போலுள்ளது. இதேபோல் ராசிபுரம் வட்டம் சிங்களாந்தபுரம் ஊரின் சந்தைப்பேட்டையில் உள்ள நவகண்ட சிற்பம் 4 அடி உயரமுள்ளது. வலக்கை பாதி ஒடிந்த நிலையிலும், இடது கையால் கத்தியைக்கொண்டு அரிந்து கொள்வது போலவும் உள்ளது.

எடப்பாடி வட்டம் புதுப்பாளையம் முப்பீஸ்வரர் கோயிலுக்கு முன் மூன்று நவகண்ட சிற்பங்கள் உள்ளன. மூன்றும் வெவ்வேறு ஆட்சிக் காலத்தைச் சேர்ந்தவை. முதல் சிற்பம் இடது கையில் கத்தியும், வலது கையில் வாளைப் பிடித்தபடியும் மற்ற சிற்பமொன்று மேற்கண்ட சிற்பங்களைப் போலவும் உள்ளது.

தர்மபுரி மாவட்டம் காவேரிப்பட்டினத்திலிருந்து கிழக்கே 4 கி.மீ. தொலைவிலுள்ளது பெண்ணேசுவர மடம். இங்குள்ள கோயிலின் முன்புறம் நவகண்ட சிற்பம் (12-ஆம் நூற்றாண்டு) ஒன்றுள்ளது. இச்சிற்பத்திலுள்ள வீரன் ஒரு கையில் நீண்ட வாளை கீழ்நோக்கிப் பிடித்தபடியும், மற்றொரு கையிலுள்ள வாளால் கழுத்தில் குத்தி மறுபுறம் வெளியே தெரியும்படியும் காட்சி தருகிறான். முழங்கால் வரை ஆடையும், கழுத்து, கைகளில் அணிமணிகளும் அணிந்துள்ளான்.


தர்மபுரி மாவட்டம் பெண்ணேசுவர மடத்திலுள்ள நவகண்ட சிற்பம்

 

கருத்துகள் இல்லை: