26/08/2011

திருமணப் பாடல்களில் மனித உணர்வின் வெளிப்பாடுகள் - செ.பாலு

மனிதனுடைய வாழ்க்கையில் தென்றலும், புயலும், இடியும், மின்னலும், இன்பமும் துன்பமுமாக வாழ்க்கை சுழற்றியடிக்கப்படுகின்றது. இந்நேரத்தில் மனிதன் தன் உணர்வுகளைப் பாடல்களாக வெளிப்படுத்துகின்றனர். இன்பத்தின் போது இனிமையான பாடல்களும், துன்பத்தின் போது சோகமான பாடல்களும் பாடி உணர்வுகளை வெளிப்படுத்துவது மனித இயல்பு திருமணப் பாடல்கள் இன்பவுணர்வுகளை வெளிப்படுத்தவும், மனித உறவுகளை மேம்படுத்தவும் நோக்கமாக கொண்டவை.

திருமணச் சடங்குகளில் மணமக்களை வாழ்த்தும் மரபு புதியது அல்ல. அகநானூற்றில் இதன் அரும்பினை காணலாம். சிலப்பதிகாரத்தில் இதன் வளர்ச்சியைக் காணலாம்.

''காதலர்ப் பிரியாமல்

கவவுக்கை நெகிழாமல்! தீது அறுக!''

என்று வந்திருந்த உறவினர்கள் கோவலனையும், கண்ணகியையும் வாழ்ந்தினர் என்பது உண்மை. திருமணப் பாடல்களைத் திருமணத்திற்கு முன்பு பாடப்படுபவை, திருமணத்தின் போது பாடப்படுபவை, தாலிகட்டிய பின்பு பாடப்படுபவை என்று பகுக்கலாம். அவ்வாறு பார்த்தால் நலங்குப் பாடல்கள், மணமக்களை வாழ்த்தும் பாடல்கள், மணமக்களைக் கேலி செய்து பாடும் பாடல்கள் என்றும் கூறலாம். இதன் மூலம் உறவினர்களின் மன உணர்வையும் எதார்த்தங்களையும் எவ்வாறு வெளிப்படுத்தினார்கள் என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

திருமணத்திற்கு முன்பு பாடப்படும் பாடல்கள்:-

திருமணத்தின் தொடக்கமாக மாப்பிள்ளை வீட்டாரும் உறவினர்களும் பெண் வீட்டைப் பார்க்கச் செல்வார்கள். இவர்கள் அனைவரும் பெண் வீட்டைப் பார்த்துச் சென்றவுடன் மாப்பிள்ளை வீட்டார் வந்தது போல பெண் வீட்டாரும், உறவினர்களும் மணமகன் வீட்டுக்குச் சென்று வருவது வழக்கமாகும். பெண் கொடுப்பது முறை மாமனுக்கு முதல் உரிமையாக வைத்திருந்தேன். முறை மாமன் ''பெண் வேண்டாம்'' என்று சொன்னால் தான் மற்ற உறவினர்களுக்குத் தருவது மரபாக தமிழர்கள் கொண்டுள்ளார்.

சங்க காலம் முதல் இன்று வரை பெண் பார்க்க வந்தாலும் நிச்சயம் செய்வதற்கு வந்தாலும் தனது குலதெய்வத்தை வணங்கி மங்கலப் பொருட்கள் கொண்டு வருவது மரபாகும். அவ்வாறு கொண்டு வரும் பொருட்கள் குத்துவிளக்கு, மல்லிகைப்பூ, மாலைச்சுருள், வெற்றிலை, பாக்கு, புடவை, கண்ணாடி, பொட்டு, மஞ்சள் போன்ற பொருள்கள் கொண்டு வந்து கொடுத்துவிட்டுப் பெண் கேட்பார்கள் கீழ் வரும் பாடல் அந்த நிகழ்வை வழிகாட்டுகிறது.

குத்து விளக்கோட வந்தேனண்ணா!

கொடமல்லிப் பூவோட வந்தேனண்ணா

மால சுருளோட வந்தேனண்ணா!

.......

மேற்சொன்ன பாடலில் அண்ணன், தங்கை உறவு முறையையும் பெண், என் மகனுக்குத்தான் கொடுக்க வேண்டும் என்று தன் உறவு முறையைத் தெளிவாகக் கூறினாள்.

முறைமாமன் பெண் கேட்க வருவது:-

தனது தாய் மாமன் பெண் கேட்க வருவதை ஒரு பெண் பெருமைப்படக் கூறினாள்.

வாராங்க வாராங்க மாமன் பெருஞ்சேனை

வந்து நிறைஞ்சாங்க மாமன் பெருஞ்சேனை

பாக்கு வெட்டி காலால சூதாடி வாராங்க

சுண்ணாம்பு காலால சூதாடி வாராங்க

வெத்தல கட்டால விளையாடி வாராங்க

வெத்தல கட்டுவது விளையாமோ பாண்டியற்கு

நல்ல நாள் கேட்டு நாள் இட்டு வாராங்க

வீடு வந்து புகுந்தோடனே

வணக்கமும் சொன்னாங்க

தக்க பதில் வணக்கம்

தாங்களும் இட்டாக.....

பெயர் பொருத்தம் பார்ப்பது:-

உலகில் மனிதனின் அறிவால் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. கனிணியுகம், அறிவியலின் ஆக்கம் என மிகப் பெரிய சாதனைகள் எல்லாம் நிகழ்கின்றன. சங்க காலம் முதல் தற்போதைய கலியுக காலம் வரை தமிழர்கள் மணமக்கள் இருவருக்கும் திருமணத்தின் போது சோதிடம், அதாவது பெயர்ப் பொருத்தம் பார்ப்பது என்ற மரபு காலம் காலமாக கடைபிடித்து வருகின்ற அவ்வுணர்வை,

ரபார்த்த பிராமணர்க்குப்

பஞ்சாங்கம் தான் எடுத்துப்

பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும்

பெயர் பொருத்தம் தாம் பார்த்து!

கழுத்துப் பொருத்தமது

கணவருக்கு நல்லது என்றார்

குடங்கைப் பொருத்தமது

கொண்டவர்க்கு நல்லது என்பார்!

வயிற்றுப் பொருத்தமது

வளமாக இருக்குது என்பாள்

மாரு பொருத்தமது

மன்மதற்கு நல்லது என்பார்

பத்துப் பொருத்தங்களும்

பாங்கா இருக்குதுன்னார்

ஐந்து பொருத்தங்களும்

அமைப்பா இருக்குதுன்னார்''

திருமணப் பத்திரிக்கை வைப்பது (அ) பாக்கு வைப்பது:-

இரு வீட்டிலும் திருமண நாள் முடிவானவுடன் அழைப்பிதழ் கொடுத்தும், பாக்கு வைத்து அழைப்பதும் மரபு. இவ்வழக்கம் அன்று முதல் இன்று நடைமுறையில் உள்ளது. இந்த நிகழ்ச்சியை,

கீழ்வரும் பாடல் உணர்த்தும்.

''கல்யாணம் கல்யாணம் என்று சொல்லி

கடலேறி பாக்கு வைத்தார்

படியிலே பாக்கு அளந்து

பங்காளிக்கும் பாக்கு வைத்தார்

உழக்குல பாக்கு அளந்து

உரைமறைக்குக் கொடுத்துவிட்டார்

மேற்கத்தி நாட்டாருக்கும்

மீனாவுக்கும் சீட்டெழுதி

மேற்கத்தி நாட்டாரும்

மீனாவும் வந்து இறங்க''

மேற்சொன்ன திருமணப்பாடலின் மூலம் பத்திரிக்கை வைப்பது, பாக்கு வைப்பது என்ற மரபு காதணி விழா, வீடு குடிபுகுதல், கோவில் விழா, கல்லூரி திறப்பு விழா, கடை திறப்பு விழா போன்ற விழாக்களில் பத்திரிக்கை வைப்பது வழக்கமாகி உள்ளது.

தெய்வ வழிபாடு:-

"கடவுளை நம்பினோர் கைவிடப்படார்'' என்ற பொன் மொழிக்கு இனங்க மனிதன் எந்தவொரு செயல் தொடங்கினாலும் இறைவனை வணங்கித் தொடங்குவது கடமையாக கொண்டிருந்தனர். இங்கே மணமக்கள் இருவரும் சிறப்புடன் வாழவேண்டும் என்பது உறவினரின் நோக்கமாகும்.

''செம்பொன் மலரெடுத்துச்

சிவனாரைப் பூசைசெய்து

பசும்பொன் மலரெடுத்துப்

பார்வதியைப் பூசை செய்து

வெள்ள மலரெடுத்து

வினாயகரைப் பூசை செய்து...''

மேற்சொன்ன பாடல் முடிந்தவுடன் மணமகன் கழுத்தில் தாலிக் கட்டும் நிகழ்ச்சி நடைபெறும்.

திருமணத்திற்குப் பின்பு பாடப்படும் பாடல்கள்

(1) வாழ்த்துதல்

தாலி கட்டிய பின்பு திருமணத்திற்கு வருகை தந்திருந்த சுற்றத்தார்கள் அனைவரும் மணமக்கள் பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழவேண்டும் என்று வாழ்த்துவர் அதை,

''பூவும் மணமும்

பொருந்திய தன்மைபோல்

தேவியரும் மன்னவரும்

சேமமாய் வாழ்ந்திடுங்கள்''

..........

''ஆல்போல் தழைத்து

அருகுபோல் பேரூன்றி

நலமுடன் எந்நாளும்

ஞானமுடன் வாழ்ந்திடுங்கள்''

என்ற பாடலின் மூலம் அறியலாம்.

சீதனங்கள் கொடுப்பது:-

மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டிற்குச் சீர்வரிசைக் கொடுத்து, திருமண முறைகளில் ஒன்று அதற்குப் ''பரிசம்'' என்று பெயர். ஆனால் தற்போதைய காலமே வேறு, இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும் சீதனம் பற்றிய திருமணப்பாடலில்

''பத்து விரலுக்கும் பவுனால மோதிரங்கள்

பட்டி நிறைந்து இருக்கும்

பசுமாடு சீதனங்கள்

ஏரி நின்று இருக்கும்

எருமை மாடு சீதனங்கள்

குட்டை நிறைந்து இருக்கும்

குறும்பாடு சீதனங்கள்''

.........

என்ற அக்காலத்தில் ஆடு, மாடுகளைச் சீதனப் பொருள்களாகக் கொடுத்தனர் என்பது தெரிகிறது. இக்காலத்தில் பணமாகவும், வேலை வாய்ப்பாகவும், சீதனங்கள் வழங்கப்படுகின்றன.

பெண்ணை கேலி செய்யும் பாடல்:-

திருமணம் முடிந்த மணமக்கள் வீட்டினுள் சென்று அமர வைத்து அவர்களுக்குப் பாலும் பழங்களும் கொடுத்துக் கேலி செய்வார்கள் முறைப் பெண்கள். இங்கே மாப்பிள்ளைகள் தங்கைகள், அக்கா போன்றவர்கள் பெண்ணைக் கேலி செய்வதாக இப்பாடல்,

நல்லெண்ண தடவி எங்கண்ணா

நலமா தலை முழுகி

நடுலூரு பாதைக்கு கிடலாட போகையில

புண்ணிமா போவுதுண்ணு

எங்கண்ணா பூ முடிச்சு வைச்சாங்க

எங்கண்ணன் கல்லைய தின்னுகிட்டு

கடைவீதியில போகயில

கடங்கார அத்த மவ கடவாய்ச் சப்புனியே''

மணமகனைப் கேலி செய்யும் பாடல்:-

மாப்பிள்ளைக்கு முறைப் பெண்கள் அதாவது அக்கா மகள், அத்தை மகள், மாமன் மகள் போன்றவர்கள் மணமகனுக்கு இனிப்பு வகையைக் கொடுத்தும், ஏமாற்றியும் கேலி செய்வார்கள். இந்த நிகழ்ச்சியைக் கீழ்வரும் பாடல் உணர்த்தும்.

''ஆணை அடிபோல இங்க அதிரசங்கள் நூறு வச்சன்

அத்தனையும் தின்னு வந்த அந்த ஓதடி மகன்!

கம்ம தட்ட வெட்டி வெட்டி

காலு ஒடிஞ்ச மாப்பிள்ளைக்கு

வச்சிருந்து கெண் கொடுத்தேன்

வரனே பசுங்கிளியே''

நாட்டுப்புற மக்களின் திருமணங்கள் சடங்கு முறையால் முற்றிலும் நகர்ப்புற திருமணத்தினின்று வேறுபட்டன. மேலே சொல்லப்பட்ட திருமணப் பாடல்களில் மனித நேயமும், உறவின் அழமும் உணர்த்தப்படுகின்றன. நாட்டுப்புற மக்கள் திருமண சடங்கு முறையை எவ்வாறு பின்பற்றுகிறார்கள் என்பதையும் சமுதாய, சமூக விழிப்புணர்வு கருத்துக்களைச் சேர்த்து எவ்வாறு கூறுகிறார்கள் என்பதையும் இப்பாடல்கள் மூலம் அறியலாம். திருமணப் பாடல்கள் மண்ணின் மைந்தர்தம் மனக்கருவறையில் கருக்கொண்டு உருப்பெற்று உலாவரும் உள்ளத்தின் உண்மையான உணர்ச்சி வெளிப்பாடுகளே! எனவே, இனிவரும் ஆய்வாளர்கள் திருமணப்பாடல்களை ஆய்வு செய்தால் நாட்டுப்புறத் திருமணப் பாடல்கள் பாதுகாக்கப்படுவதோடு பழங்காலத் திருமணமுறைகளை அறிந்து கொள்ள ஏதுவாயிருக்கும்.

நன்றி: வேர்களைத்தேடி

கருத்துகள் இல்லை: