26/08/2011

நேர்காணல் - ரவிக்குமார்

நவீன தமிழ் இலக்கிய தலித் அரசியல் விழிப்புணர்வு மற்றும் தலித்திய சிந்தனைக்கு மிக முக்கியமான பங்களிப்பைச் செய்துள்ளவர் எழுத்தாளர் ரவிக்குமார். பின்நவீனத்துவ சிந்தனைகளையும், படைப்புகளையும் தமிழில் மொழிபெயர்த்ததுடன், பின்நவீனத்துவ கோட்பாடுகளின் பின்புலத்தில் தமிழகச் சூழலை அணுகி, இவர் எழுதியுள்ள கட்டுரைகள் பல்வேறு விவாதங்களும் புதிய சிந்தனைப் போக்கும் உருவாக காரணமாக இருந்தன. நிறப்பிரிகை ஆசிரியர் குழுவில் ஒருவரான ரவிக்குமார் தலித், போதி என்னும் இரண்டு சிற்றிதழ்களைத் தொடங்கி சிறிதுகாலம் நடத்தினார். கண்காணிப்பின் அரசியல் (1995), உரையாடல் தொடர்கிறது (1995), தலித் கலை, இலக்கியம், அரசியல் (1996), தலித் என்னும் தனித்துவம் (1998) கொதிப்பு உயர்ந்து வரும் (2001) ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார். மக்கள் சிவில் உரிமைக்கழகம் (Pucl) அமைப்பின் தமிழ்நாடு புதுவைத் தலைவராக இருக்கிறார். இந்த சட்டமன்றத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட்டு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தலித்திய அரசியல் மற்றும் இன்றைய தமிழக அரசியல் குறித்து நம்முடன் பேசினார் ரவிக்குமார்.

தீராநதி: தேர்தல் அரசியலில் ஈடுபடமாட்டோம், அதனைப் புறக்கணிக்கிறோம் என்று அறிவித்து, அந்த அறிவிப்பில் நீண்டகாலமாக உறுதியுடனும் இருந்த விடுதலைச் சிறுத்தைகள், முதல்முறையாக தங்கள் பாதையை மாற்றி 1999 பாராளுமன்றத் தேர்தலில் பங்கெடுத்துக் கொண்டனர். அப்போது விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இந்த முடிவை எடுக்க, நீங்களும் ஒரு காரணமாக இருந்தீர்கள் என்று சொல்லப்பட்டது. விடுதலைச் சிறுத்தைகள் தேர்தல் அரசியலில் ஈடுபடலாம் என்ற உங்கள் ஆலோசனைக்கு என்ன காரணம்?

ரவிக்குமார்: 1999 பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பு, கடுமையான ஒடுக்குமுறைகளை எங்கள் கட்சி சந்தித்தது. கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்கள் தேசியப் பாதுகாப்புச் சட்டத்திலும் குண்டர் தடுப்புச் சட்டத்திலும் கைது செய்யப்பட்டார்கள். அன்றிருந்த தி.மு.க., பா.ம.க. கூட்டணியால் வடமாவட்டங்களில் சாதி ஒடுக்குமுறையும் அரசு வன்முறையுமாக இரண்டு விதமான நெருக்கடிகளை நாங்கள் எதிர்கொண்டோம். மேலும், வன்முறையாளர்கள் என்று எங்களைப் பற்றி அவப்பெயரை ஏற்படுத்தவும் சதிகள் நடைபெற்றன. எனவே, இதனை எதிர்கொள்ள தேர்தலையும் ஒரு போராட்டக் களமாக மாற்றுவோம் என முடிவெடுத்தோம். தேர்தல் அரசியலில் ஈடுபடுவது என்ற முடிவுக்கான முக்கியக் காரணம் இதுதான். கருணாநிதியும் ராமதாஸதிம்தான் எங்களை இந்த முடிவை நோக்கி நகர்த்தினார்கள். மார்க்சியயூ லெனினிய இயக்கத்தில் இருந்து வந்தவன் என்னும் முறையில், தேர்தல் புறக்கணிப்பைத்தான் நான் தொடர்ந்து பேசியும் செயல்படுத்தியும் வந்திருக்கிறேன். ஆனால், அதன்பிறகு மார்க்சியயூ லெனினிய அரசியலையும், இந்தியா பற்றி அது கொண்டிருக்கும் மதிப்பீடுகளையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்திய போது, இந்தியப் பொருளாதாரத்தை மட்டுமல்லாமல், இந்திய அரசியல் அமைப்பையும்கூட இங்குள்ள மார்க்சியயூ லெனினியவாதிகள் புரிந்துகொள்ளவில்லை என்ற முடிவுக்கு வந்தேன். அந்தப் புரிதலின்மையுடன்தான் பல்வேறு நடைமுறைகளை அவர்கள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களை, குறிப்பாக தலித் மக்களை ஒன்று திரட்டுவதற்கு பாராளுமன்றப் பாதையைப் புறக்கணிப்பதைவிட, அந்தப் பாதையைப் பயன்படுத்துவது அதிக வலிமையானதாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியது. அந்த விதத்தில்தான் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தேர்தலில் நிற்கும் முடிவை எடுத்தபோது எனது ஆலோசனைகள் இருந்தன. அது அவருக்கு ஒரு ஊக்கமாக இருந்திருக்க வேண்டும். என்னைப் போன்று பலரும், அவருக்கு இந்த ஊக்கத்தைக் கொடுத்திருக்கிறார்கள். தேர்தல் புறக்கணிப்பு என்பது ஒருவிதமான அரசியல் யுக்தி. அதே நேரத்தில், தேர்தல் புறக்கணிப்பிலேயே தொடர்ந்து நீங்கள் இருக்கும்போது, அதில் ஒரு தொய்வு ஏற்பட்டுவிடுகிறது. இதனாலும் நாங்கள் தேர்தல் பாதையைத் தேர்ந்தெடுத்தோம். 1999 பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து இரண்டு இடங்களில் நாங்கள் போட்டியிட்டோம். சிதம்பரத்தில் இரண்டேகால் லட்சம் ஓட்டுகளை திருமாவளவன் பெற்றார். அது தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணியிலேயே தனியாக ஒரு வேட்பாளர் பெற்ற அதிகம் ஓட்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது. அது ஒரு மிகப் பெரிய திரட்சிதான். அந்தத் திரட்சி படிப்படியாக அதிகரித்து இன்று வடமாவட்டங்கள் முழுக்க பரவியிருக்கிறது. இந்தத் தேர்தலில் வடமாவட்டங்களில் அ.தி.மு.க. கூட்டணி பெற்றிருக்கும் வெற்றிக்குக் காரணம் அதுதான்.

தீராநதி: உங்கள் கட்சியின் நீண்டகால போராட்டமும் இலட்சியமுமான தலித்துகள் விடுதலையை, தேர்தல் அரசியல் மூலம் பெறமுடியும் என்று நம்புகிறீர்களா?

ரவிக்குமார்: இந்தியாவில் சாதிய சமூகத்தால் தலித்துகள் மட்டுமல்லாமல் அனைத்துச் சாதியினரும்கூட ஏதோ ஒருவகையில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றுதான் சொல்லவேண்டும். எல்லோருமே சாதிய சமூகத்துக்குள் பிணைக்கப்பட்டு, தங்களது சுதந்திரமும் பாதிக்கப்பட்டவர்களாகத்தான் இருக்கிறார்கள். சாதிய சமூகத்தின் பலனை அனுபவிப்பவர்களும் இதில் மாட்டிக்கொண்டுஇருக்கிறார்கள். எனவே, தலித்துகளுக்கு மட்டுமல்லாமல் எல்லோருக்குமே விடுதலை தேவையாக இருக்கிறது. அந்த விடுதலை சாதி ஒழிப்பில்தான் இருக்கிறது. ஒரு வர்க்கம் அழியும்போது, அது தொழிலாளிக்கு மட்டுமல்லாமல் எப்படி முதலாளிக்கும் விடுதலையைக் கொடுக்குமோ அப்படி, சாதி அழியும்போது, அது எல்லோருக்கும் விடுதலையைக் கொடுக்கும். அந்த விடுதலையை தேர்தல் பாதையில் எட்டிவிட முடியும் என்று நிச்சயம் எதிர்பார்க்க முடியாது. அது மிகப்பெரிய ஒரு போராட்டத்தால்தான் சாத்தியமாகும். இந்திய சமூகத்தில் சாதி ஒழிப்புப் போராட்டம் என்பது ஆக வன்மையான ஒரு போராட்டமாக இருக்கும். அதற்கான பாதையை வகுப்பதில் தேர்தல் அரசியலையும் ஒரு யுக்தியாக பயன்படுத்தமுடியும். அது சிறிய அளவில் உதவவும் செய்யலாம், அவ்வளவுதான். பாராளுமன்றப் பாதையைப் பயன்படுத்தும் போதே மற்ற போராட்ட வடிவங்களையும் கைவிடாமல் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

தீராநதி: நீங்கள் தேர்தலில் நிற்கும் முடிவை எப்போது எடுத்தீர்கள்?

ரவிக்குமார்: தனிப்பட்ட முறையில் தேர்தலில் நிற்பதை நான் விரும்பவில்லை. ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தேர்தலில் நிற்கும்படி என்னை வற்புறுத்தினார். இன்னொரு பக்கம், வாக்களிப்பது என்கிற செயல்பாட்டை அவ்வளவு சுலபமாக நாம் நிராகரித்துவிட முடியாது. மக்கள் தங்கள் அதிகாரத்தை பிரயோகிக்கிற ஒரு விஷயமாகத்தான் அதனை நினைக்கிறார்கள். அந்தவகையில் வாக்குச்சீட்டுக்கு ஒரு சக்தி இருக்கிறது. அந்தச் சக்தியை மக்களின் நன்மைக்கு தக்கவாறு திருப்பும்போது ஒரு திரட்சி நடக்கிறது. எனவே தேர்தலில் நிற்க நான் ஒப்புக்கொண்டேன். இலக்கியம் என்பது தத்துவத்தை அணுகுவதற்கு இன்னொரு வழி என்று மிஷெல் பூக்கோ குறிப்பிடுகிறார். அந்த வழியின் மூலமாக அரசியலுக்குள்ளும் நுழைய முடியும். இலக்கியத்துக்கும் அரசியலுக்குமான உறவை எப்போதுமே நான் வலியுறுத்திதான் வந்திருக்கிறேன். இவ்வளவு காலமும் இலக்கியத்தின் அரசியலை கண்டு சொல்கிற விமர்சகனாக இருந்த நான், இப்போது அரசியலுக்குள் இலக்கியத்தின் பண்புகளை ஏற்றுகிற படைப்பாளியாக மாறுகிறேன். நான் உருவாக்கி வந்த கருத்துருவாக்கப் பணிக்கு இந்தப் பதவி ஒரு விதத்தில் இடையூறுதான் என்றாலும், இதன் வாயிலாகவும் செய்யக்கூடிய காரியங்கள் பல இருக்கின்றன.

தீராநதி: வெற்றிபெற்று சட்டசபைக்குச் சென்றபிறகு இக்கருத்தில் இன்னும் உறுதியாக இருக்கிறீர்களா?

ரவிக்குமார்: நிச்சயமாக. பல போராட்டங்கள் நடத்தி அதற்குப் பிறகு சாத்தியமாகும் விஷயங்களை இப்போது எளிதில் நிறைவேற்ற முடிகிறது. நான் சட்டப்பேரவையில் முதல்முறையாகப் பேசியபோது, ஈழப்பிரச்னை முதல் நூலகங்களுக்கு வாங்கும் புத்தகங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்பதுவரை, பல்வேறு பிரச்னைகளின்பால் அவையின் கவனத்தை ஈர்க்க முடிந்தது. அவற்றில் ஒன்றிரண்டில் வெற்றி பெறுவதும் சாத்தியமாயிற்று. நூலகங்களுக்கு அறுநூறு புத்தகங்கள்தான் இதுவரை வாங்கிக்கொண்டிருந்தார்கள். நான் பேசிய பிறகு, அது ஆயிரம் புத்தகமாக மாறியிருக்கிறது. பத்து வருடம் போராடினாலும் இது நடக்குமா என்பது சந்தேகம்தான். சட்டப்பேரவையில் பேசினால் எல்லாவற்றையும் சாதித்துவிடலாம் என்று நான் சொல்லவில்லை. சிலவற்றையாவது வெல்லலாம் என்பதையே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

தீராநதி: வழக்கமான மற்ற அரசியல்வாதிகள் மாதிரியில்லாமல் ஒரு எழுத்தாளர் என்ற அடையாளத்துடன் வேட்பாளராக மக்கள் முன்னால் சென்றவர் நீங்கள். எழுத்தாளர் என்ற அடையாளத்தை மக்கள் எப்படி எதிர்கொண்டார்கள்?

ரவிக்குமார்: இந்தத் தேர்தலில், என்னைத் தவிர வேறு சில எழுத்தாளர்களும் போட்டியிட்டார்கள் என்றாலும், எழுத்தாளர் என்ற அடைமொழியோடு வாக்காளர்களிடம் சென்றது அனேகமாக நான் மட்டுமாகத்தான் இருக்கும் என்று எண்ணுகிறேன். பெரும்பகுதி கிராமங்களைக் கொண்ட காட்டுமன்னார்கோவில் தொகுதியில், எழுத்தாளன் என்ற இந்தப் பிம்பம் ஒரு அன்னியத்தன்மையை ஏற்படுத்திவிடுமோ என்ற தயக்கம் தொடக்கத்தில் எனக்கு இருந்தது. ஆனால், மிக விரைவில் இந்த அன்னியத்தன்மை சாதகமான விளைவையும் ஏற்படுத்தும் என்பதை உணர்ந்தேன். “வழக்கமான அரசியல்வாதிகளில் ஒருவரல்ல இவர் என்ற எண்ணத்தை எழுத்தாளன் என்ற பிம்பம் எனக்கு வாக்காளர்கள் மத்தியில் உருவாக்கியது. அது என் மீது ஒரு பரிவுணர்வையும் உண்டாக்கியது. எனது எழுத்துலகப் பின்னணியை எடுத்துக்கூறும் விதத்தில், தேர்தலையட்டி தினமணி மற்றும் ‘டெக்கான் க்ரானிக்கிள் நாளேடுகளில் கட்டுரைகள் வெளியாகின. இக்கட்டுரைகள் சிற்றிதழ் வட்டாரத்தில் மட்டும் அறியப்பட்டிருந்த என்னை ஒரு பரந்த தளத்தில் அறிமுகம் செய்துவைத்தன. நகர்புறத்தவர்கள் மத்தியில் எங்கள் கட்சி மீதிருந்த ஒவ்வாமை உணர்வை மாற்ற அந்தக் கட்டுரைகளை நான் பயன்படுத்திக் கொண்டேன். ஒரு எழுத்தாளனின் கற்பனையும் படைப்பூக்கமும் அரசியல் தளத்தில் சாதகமான விளைவுகளேயே ஏற்படுத்தும் என்று நான் எண்ணுகிறேன். தானும் ஓர் எழுத்தாளராக இருக்கிற முதலமைச்சரும் இதேவிதப் பண்புகளைக் கொண்டிருப்பார் என்பது என் நம்பிக்கை.

தீராநதி: இந்திய அரசியலமைப்பை முதலாளித்துவ அரசியலமைப்பு என்கிற விதமாக பேசியும் எழுதியும் வந்துள்ள நீங்கள், இப்போது அந்த அமைப்பில் பங்கெடுத்துக் கொள்வது ஒரு முரண் இல்லையா?

ரவிக்குமார்: எனது எழுத்துகள் மற்றும் செயல்பாடுகள் பற்றிய தவறான புரிதல் இது. மார்க்சியயூ லெனினிய இயக்கத்தில் இருந்தபோதும்கூட, இந்திய அரசியலமைப்பை பூர்ர்வா அமைப்பு என்று நான் கருதியதில்லை. இந்திய அரசியலமைப்பை அரை காலனிய, அரை நிலப்பிரபுத்துவ அமைப்பு என்று மார்க்சியவாதிகள் வரையறுத்தார்கள். இந்த வரையறையும் சரியானதில்லை என்பதுதான் என் நிலைப்பாடு. இந்திய சமூகத்தை மதிப்பிட இன்னும் ஆழமான ஆய்வுகள் தேவை. அப்படியான ஆய்வுகள் இங்கு எந்த மார்க்சியர்களாலும் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக, மார்க்சிய சித்தாந்திகள் என்று சொல்லப்பட்டவர்கள், ஏற்கெனவே இங்கு நிலவிய இந்துத்துவ கருத்தியலோடு சமரசம் செய்து கொண்டவர்களாகத்தான் இருந்தார்கள். மிகச்சிறந்த உதாரணம் நம்பூதிரிபாடு.

உண்மையில் இந்திய சமூக அரசியல் ஒரு பூர்ர்வா அமைப்பு கிடையாது. முதலாளித்துவ அரசியல் அமைப்பில் தனிமனிதன் என்கிற ஒரு அங்கீகாரம் இருக்கும். இங்கு தனிமனிதனை அங்கீகரிப்பதே இல்லை. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கும்போது, இதுபற்றி ஒரு விவாதமே உருவானது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை அலகாக எதனை எடுத்துக் கொள்வது என்ற கேள்வி எழுந்தபோது, காந்தியவாதிகள் ஒரு கிராமத்தைத்தான் அடிப்படை அலகாக கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அப்போது, அம்பேத்கர் ஒருவர் மட்டும்தான் தனிமனிதனை அடிப்படை அலகாக எடுத்துக்கொள்ள வேண்டும், கிராமத்தை எடுத்துகொள்ளக் கூடாது என்று வலியுறுத்தி அதனைக் கொண்டுவந்தார். அதன் அடிப்படையில்தான் நமது உரிமைகள் வரையறுக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு முதலாளித்துவ அரசியல் அணுகுமுறைதான். ஆனால், மனிதர்களை மனிதர்களாகவே அங்கீகரிக்காத சாதிய சமூகத்தில், ஒரு தனிமனிதனாக சுரண்டுவதற்குக்கூட தலித்துகளை எடுத்துக்கொள்ளத் தயாராக இல்லாத சமூகத்தில், இது ஒரு முற்போக்கான நடைமுறை.

தீராநதி: மேலும், அதிகார மையங்களுக்குள் சென்று அதனைப் பயன்படுத்தி ஒன்றுமே செய்ய முடியாது, அதிகார மையங்களை அழிப்பது அல்லது தகர்ப்பதுதான் முக்கியமானது என்று அதிகார மறுப்பு மற்றும் பின்நவீனத்துவக் கோட்பாடுகளை பேசியும் வலியுறுத்தியும் வந்துள்ளீர்கள்.

ரவிக்குமார்: பின்நவீனத்துவவாதிகள் என்று சொல்லப்படும் பலர் அதிகாரம் என்பதை அணுகியிருந்தாலும் முற்றிலும் வேறுபட்டு அதனை அணுகியவர் மிஷெல் பூக்கோதான். கார்ல் மார்க்ஸ் தொடங்கி மார்க்சியவாதிகள் அனைவரும் அதிகாரத்தின் ஒரு முகத்தை மட்டும்தான், குறிப்பாக அதன் ஒடுக்கும் பண்பை மட்டும்தான் பார்த்தார்கள். எனவே அதனை எதிர்க்கவேண்டும், நிராகரிக்கவேண்டும் என்னும் நிலைப்பாடு எடுத்தார்கள். அதனை வலியுறுத்தி பேசினார்கள். மாறாக மிஷெல் பூக்கோ, அதிகாரத்தின் ஆக்கும் பண்பைப் பார்த்தார். அழிப்பதை மட்டுமல்லாமல் உற்பத்தியையும் அதிகாரம் செய்யும் என்பதை அவர் அடையாளம் காட்டினார். அதிகாரம் இரட்டைத்தன்மை கொண்டதாக இருக்கும் போது, அதுகுறித்த உங்கள் அணுகுமுறை ஒரேவிதமானதாக இருக்க முடியாது. "துப்பாக்கிக் குழாய்களிலிருந்துதான் அதிகாரம் பிறக்கிறது. அதிகாரத்தை அழிப்போம்" என்று மாவோ சொன்னது இன்று பொய்யாகிவிட்டது. புரட்சியிலிருந்தும் அதிகாரம் பிறந்திருக்கிறது என்பதை நாம் பார்த்தோம். அது துப்பாக்கியிலிருந்து பிறந்த அதிகாரத்தைவிட கொடுமையானதாகி, சர்வாதிகாரத்தைக் கொண்டு வந்தது. விடுதலையின் பெயராலேயே ஒருவனை அடிமையாக்க முடியும் என்பதைத்தான் கம்யூனிச சமூகங்கள் நிரூபித்திருக்கின்றன. இந்நிலையில், அதிகாரத்தைத் தகர்ப்பதல்ல, அதிகாரச் சமன்பாடுகளை மாற்றியமைப்பதுதான் நாம் செய்யக்கூடியது என்கிறார் பூக்கோ. அதாவது, நமக்குச் சாதகமாக மாற்றியமைப்பது.

அதேநேரத்தில், அதிகாரத்தைக் கைக்கொள்வதும், துறப்பதும் ஒரே நேரத்தில் நடக்கவேண்டும். அதாவது, அதிகாரத்துக்காகப் போராடுகிற அதே நேரத்தில், அதனைத் துறப்பதுக்கான மனநிலையும் உங்களிடம் இருக்கவேண்டும். இந்தியச் சமூகம் துறவையே அதிகாரத்துக்குப் பயன்படுத்தின சமூகம். இப்படிப்பட்ட ஒரு சமூகத்தில் அதிகாரத்தைக் கைக்கொள்வதற்கான வேட்கையையும் அதனை துறப்பதற்கான மனநிலையையும் ஒரே நேரத்தில் வைத்துக்கொள்வது என்பது மிகவும் சிக்கலான விஷயம். ஆனால், அதனை அம்பேத்கரிடம் நான் பார்க்கிறேன். இவ்வகையில் பூக்கோவின் நிலைப்பாட்டுக்கும் அம்பேத்கரின் நிலைப்பாட்டுக்கும் உள்ளார்ந்த ஒரு தொடர்பு இருக்கிறது. அதிகாரத்தைப் பற்றிய என்னுடைய புரிதல் இப்படித்தான் இருக்கிறது. நான் தேர்தலில் பங்கெடுப்பது என்பது அதிகார சமன்பாட்டை மாற்றியமைப்பதுக்கான ஒரு சிறிய முயற்சிதான். ஆனால், அதிகார போதைக்குள் ஆட்பட்டுவிடக்கூடார் அதனைத் துறப்பதற்கும் தயாராக இருக்கவேண்டும் என்று எனக்கு நானே அடிக்கடி சொல்லிக்கொள்கிறேன். எனவேதான், தேர்தல் முடிந்ததும் நடைபெற்ற எங்கள் கட்சியின் முதல் கூட்டத்தில் இனிமேல் தேர்தலில் நிற்கமாட்டேன் என்று அறிவித்தேன். இதற்கான தூண்டுதல் அம்பேத்கரிடம் இருந்தும் பூக்கோவிடம் இருந்தும் எனக்கு வருகிறது.

தீராநதி: சட்டமன்ற உறுப்பினராக நீங்கள் செய்ய திட்டமிட்டிருக்கும் விஷயங்கள் என்ன?

ரவிக்குமார்: வெகுஜன அரசியல் கவனத்தில் கொள்ளாத அனைத்தையும் அதன் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். சட்டசபையில் நான் பேசிய முதல் கன்னிப் பேச்சே இதனை உங்களுக்குச் சொல்லும். இருபத்தைந்தாயிரம் தொகுக்கப்பட்ட தமிழ் கல்வெட்டுகள் இன்னும் ஆவணப்படுத்தப்படாமல் இருக்கின்றன. தமிழின் தொன்மையையும் வரலாற்றையும் தெரிந்துகொள்ள இந்தக் கல்வெட்டுகள்தான் ஆதாரம். தமிழைச் செம்மொழியாக அறிவிக்கச் சொல்லும் நமது வேண்டுகோளுக்கு இந்தக் கல்வெட்டு ஆதாரங்கள் மிக முக்கியமானவை. எனவே இந்தக் கல்வெட்டுகளை அரசின் கவனத்துக்குக் கொண்டுவந்தேன். மேலும், தமிழக அரசு ஆவணங்கள் பெருமளவில் லண்டன் ஆவணக் காப்பகத்தில் இருக்கின்றன. அவற்றின் நகலை இங்கே கொண்டுவர முயற்சி எடுக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்திப் பேசினேன். இவைகள் வேறு எந்த சட்டமன்ற உறுப்பினராலும் எழுப்ப சாத்தியமில்லாத பிரச்னைகள். ஆனால், தமிழக அரசியலைப் பொறுத்தவரைக்கும் மிக ஆதாரமான விஷயங்கள். இந்த விஷயங்கள் எழுப்பப்பட்டால் அதனை மதித்துச் செய்ய விரும்பும் அரசாங்கம் இன்று இருக்கிறது என்பதும் சந்தோஷமான ஒரு விஷயம். எதிர்க்கட்சி அணியில் இருக்கும்போதும் இந்தப் பாராட்டை சொல்லவேண்டும்.

எனது தொகுதியைப் பொறுத்தவரைக்கும் அந்தத் தொகுதியை ஒரு மாதிரி தொகுதியாக மாற்றிக்காட்ட வேண்டும் என்பது எனது திட்டம். பெண்களை அதிகாரம் உள்ளவர்களாக மாற்றுவது, மாணவர்களுக்கான கல்வித் திட்டத்தில் கவனம் செலுத்தி சில முக்கியமான காரியங்களைச் செய்வது, பின்தங்கியிருக்கும் கிராமப்புறப் பகுதியைச் சேர்ந்தவர்களை சுயசார்பு கொண்டவர்களாக மாற்றுவது, இந்திய அளவில் முக்கியமான பல்வேறு சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்து அவர்களை தொகுதிக்கு அழைத்து, தொகுதியை மேம்படுத்துவதற்கான ஒட்டுமொத்தமான ஒரு திட்டத்தை உருவாக்குவது என்று பலவற்றைத் திட்டமிட்டிருக்கிறேன்.

தீராநதி: பெரியார், திராவிட இயக்கம் மற்றும் திராவிட கட்சிகளைத் தொடர்ந்து விமர்சித்து வந்த நீங்கள், இப்போது ஒரு திராவிட இயக்கக் கட்சியுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றிருக்கிறீர்கள். இதனை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?

ரவிக்குமார்: நான் சொல்வது உங்களுக்கு அதிரடியானதாகக்கூட இருக்கலாம். ஆனால், ஆனைமுத்துவுக்கு அடுத்தபடியாக பெரியாரை மீண்டும் மீண்டும் படித்தவன் நான் ஒருவனாகத்தான் இருப்பேன் என்று உறுதியாக நம்புகிறேன். பெரியாரைப் படித்து, அதனை வெவ்வேறு சூழலுடன் பொருத்தி, பின்நவீனத்துவப் பின்புலத்துடன் அவருடைய போராட்டங்களைப் பார்த்து, மறுவாசிப்பு செய்த ஆரம்பகால எழுத்தாளர்களில் நானும் ஒருவன். பெரியார் குறித்த விவாதங்களை கிளப்பி, அவருடைய எழுத்துக்கள் மீண்டும் பெரிய அளவில் வாசிக்கப்படவும் நாங்கள் காரணமாக இருந்தோம். இந்த விவாதங்களில் நான் முன்வைத்த, மையமாக எழுப்பிய பிரச்னைகளை யாருமே கண்டுகொள்ளவில்லை அல்லது அதிலிருந்து நழுவிப்போக விரும்புகிறார்கள்.

1998இல் திராவிட முன்னேற்றக் கழகம், பாரதிய ஜனதா கட்சி அரசுக்கு ஆதரவு தருகிறது. எனக்கு அது ஒரு அதிர்ச்சியைத் தந்தது. ஆனால், அதனை மற்றவர்களைப் போல் தி.முக. தலைவரின் அல்லது கட்சியின் சந்தர்ப்பவாதம், நிலைப்பாடு என்று குறுக்கி என்னால் பார்க்க முடியவில்லை. இதற்கு வேறு காரணங்கள் இருக்கிறது என்று எனக்குத் தோன்றியது. அதன் சிந்தனையிலேயே இதற்கான காரணங்கள் இருக்கிறதா என்று தேடத் தொடங்கினேன். அப்போது பெரியாரிடம் அதற்கான வேரைப் பார்த்தேன். குறிப்பாக, சிறுபான்மையினர் குறித்த அவருடைய அணுகுமுறையில் பெரும்பான்மையினரின் குரலைத்தான் நான் பார்க்கிறேன். சிறுபான்மையினர் பிரச்னை தொடர்பான ஒரு கட்டுரையில் முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் மிகக் கடுமையாக அவர் தாக்குகிறார். "பாப்பானுக்குப் பயந்துகொண்டு நாம் முஸ்லிம்களுக்கு இடம் கொடுத்துவிட்டோம். இது சாணியை மிதிக்க விரும்பாமல் மலத்தில் கால் வைத்தது போல் இருக்கிறது" என்று சொல்கிறார் அவர். மேலும், "சிறுபான்மையினர் கையில் அதிகாரம் வருவது நாட்டுக்குக் கேடு" என்றும் சொல்கிறார். இதனால், மத அடிப்படைவாதம் உச்சத்தில் இருந்த சூழலில், அதனை எதிர்கொள்ள பெரியாரியம் போதாது என்று எனக்குத் தோன்றியது.

அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்கு முன்னால், அம்பேத்கர் சிறுபான்மையினர் பிரச்னையை எப்படி அணுகவேண்டும் என்பது குறித்து பேசியதை, பெரியாரின் இந்த நிலைப்பாட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். "சிறுபான்மையினர் கையில்தான் அதிகாரம் இருக்க வேண்டும். பெரும்பான்மை கையில் போகக்கூடாது" என்கிறார் அம்பேத்கர். "இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மை என்பது மதப் பெரும்பான்மை. இது மாறாதது. பொதுவாக, பெரும்பான்மை ஆட்சி செய்வதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை என்றாலும், அந்தக் கோட்பாட்டை அப்படியே இந்தியாவில் பொருத்தினீர்கள் என்றால் அது இங்குள்ள மதப் பெரும்பான்மையினர் மத்தியில் அதிகாரத்தைக் கொடுத்துவிடும். அது கூடாது. மதப் பெரும்பான்மையை நாம் கட்டுப்பாட்டில் வைக்கவேண்டும் என்கிறார். முடிவாக, ‘‘சிறுபான்மையினர் அனைவரும் சேர்ந்து ஆட்சியமைக்க வாய்ப்பிருக்கும் அதே நேரத்தில், சிறுபான்மை உதவி இல்லாமல் பெரும்பான்மை மட்டும் ஆட்சியமைக்க வழி இருக்கக்கூடாது" என்றும் சொல்கிறார். அம்பேத்கருடைய நிலைப்பாடும் பெரியாருடைய நிலைப்பாடும் எதிர் எதிரானது. இந்நிலையில், அம்பேத்கரை வடநாட்டுப் பெரியார் என்று சொல்வதும், பெரியாரை தென்னாட்டு அம்பேத்கர் என்று சொல்வதும் முட்டாள்தனமானது. இரண்டு பேரும் பார்ப்பனியத்தை எதிர்த்தார்கள் என்பதிலும் இருவரும் அடித்தட்டு மக்களின் விடுதலைக்காக குரல் கொடுத்துள்ளார்கள் என்பதிலும் ஒற்றுமை இருக்கலாம். ஆனால். அணுகுமுறையில், சிந்தனை முறையில் இருவருக்கும் எந்த ஒற்றுமையும் கிடையாது.

பெரியார் குறித்த எனது விமர்சனங்களின் அடிப்படை நோக்கம், பெரியாரை இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப மறுவாசிப்பு செய்யவேண்டும், இன்றைய காலகட்டத்துக்குப் பொருத்தமுள்ளதாக அவரது சிந்தனைகளை மாற்றவேண்டும் என்பதுதான். இதனைத் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பெரியார் எதுவும் செய்யவில்லை என்று நான் சொல்வதாகத் திருப்பிவிட்டார்கள். பெரியாரை சிந்தனை தளத்தில் அங்கீகரித்து, அவருடைய சிந்தனைகள் நமக்கு எப்படிப் பயன்படும் என்று நான் பார்த்திருக்கிறேன். உண்மையில் பெரியாரியவாதிகள் இதன் முக்கியத்துவத்தை உணர்வார்களானால் என்னை அவர்கள் சாதகமாகத்தான் பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். மாறாக, அவர்கள் எனக்கு அவதூறு கடிதங்களையும் மிரட்டல் கடிதங்களையும் எழுதினார்கள். தொலைபேசியில் மிரட்டும் விதமாகப் பேசினார்கள். அந்தளவுக்குத்தான் பெரியாரை அவர்கள் உள்வாங்கி இருக்கிறார்கள்.

பெரியார், தொடர்ந்து மாறிக்கொண்டும் தன்னையே மறுத்தும் பல்வேறு நிலைப்பாடுகளை எடுத்திருக்கிறார். அவரது வாரிசுகளான திராவிட இயக்கத்துக்காரர்களாலோ, தி.மு.க. கட்சிக்காரர்களாலோ அந்தவகையில் அவரைப் பின்பற்றுவது சாத்தியமே இல்லாதது. பொதுவாழ்க்கையில் மானம் பார்க்கக்கூடாது என்று சொன்னார் பெரியார். ‘‘மேடையில் செருப்பை வீசினால் இன்னொரு செருப்பையும் தேடி எடுத்துக்கொண்டு வா என்றார். அதாவது, பொதுவாழ்க்கைக்கு வந்த பிறகு இந்தமாதிரி பிரச்னைகளை தனிப்பட்ட பிரச்னையாகப் பார்க்கக்கூடாது என்று சொல்லி, அதுபோல் வாழ்ந்தும் காட்டியிருக்கிறார். ஆனால், அவரது வாரிசுகள், மானம் பார்க்கிறவர்கள் பொதுவாழ்க்கைக்கு வரக்கூடாது என்பதுபோல் அதனை மாற்றிவிட்டார்கள். இவர்களால் அவரது உண்மையான வாரிசாக இருக்கமுடியார் அது சாத்தியமுமில்€ல் நாம் இதனை அவர்களிடம் எதிர்பார்க்கவும் கூடாது. திராவிட கட்சிகளின் கடந்த நாற்பதாண்டு ஆட்சியில், ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை மிகவும் மோசமாகியிருக்கிறது. தாழ்த்தப்பட்டவர்கள் நிலமற்றவர்களாக மாற்றப்பட்டதும் அவர்களது கல்வி நிலை மோசமானதும் திராவிட கட்சிகளின் ஆட்சியில்தான். மொத்தத்தில் திராவிட கட்சிகளின் ஆட்சி என்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகத்தான் இருந்திருக்கிறது என்பதனை உணர்ந்து, அதன் அடிப்படையில்தான் அதனை விமர்சிக்கிறேன். அதேநேரத்தில், அவர்கள் செய்த நல்ல விஷயங்களை ஆதரிக்கவும் செய்திருக்கிறேன்.

தேர்தல் கூட்டணி என்பது அரசியல் அதிகாரப் பகிர்வுக்காக, இரண்டு வெவ்வேறு கொள்கையுள்ள கட்சிகள் ஏற்படுத்திக் கொள்கிற ஒரு தற்காலிக ஏற்பாடு. கொள்கை சார்ந்து எந்தக் கூட்டணியும் அமைய முடியாது. கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும் என்றால், அதற்கு அந்தக் கட்சியிலேயே சேர்ந்து விடலாமே. திராவிட கட்சிகளுடன் விமர்சனங்கள் வைத்திருந்தாலும், இந்தக் கூட்டணி தேவையாக இருக்கிறது.

தீராநதி: இது ஒரு சமரசம் இல்லையா?

ரவிக்குமார்: சமரசம்தான். நடைமுறையில் சமரசம் இல்லாமல் எதுவும் சாத்தியமும் கிடையாது. ஆனால், கருத்தியல் தளத்தில் சமரசம் கிடையாது.

தீராநதி: இன்றைய தமிழக அரசியல் சூழ்நிலை குறித்த உங்கள் விமர்சனங்கள் என்ன?

ரவிக்குமார்: பல குறிப்பிடத்தக்க தலைவர்கள் தமிழக அரசியலில் இருக்கிறார்கள். கலைஞர் மிக முக்கியமான ஒரு ஆளுமை. அவரளவுக்குத் தன்மைகள் கொண்ட இன்னொரு ஆளுமையை இனிமேல் பார்க்க முடியாது. எழுதுகிற, பேசுகிற, படிக்கிற ஆற்றல் கொண்ட தலைமுறை கிட்டத்தட்ட அவருடன் முடிகிறது. இதனால் மிகவும் தனித்தன்மை வாய்ந்த ஒரு ஆளுமையாக இன்று அவர் இருக்கிறார். ஜெயலலிதா துணிவு, தன்னம்பிக்கை, தைரியம் இவற்றுக்கு எடுத்துக்காட்டாக சொல்கிற ஒரு ஆளுமையாக இருக்கிறார். பெரிய தியாகங்களைச் செய்துவிட்டு அதுபற்றிய எந்தவொரு எண்ணமும் இல்லாமல் இருக்கும் நல்லகண்ணுவும் அவருடைய எளிமையும் மிகவும் போற்றக்கூடியது. இளையதலைமுறை தலைவர்களில் வேறு யாரைவிடவும் பல்வேறு பரிமாணங்கள் கொண்ட ஓர் ஆளுமையாக திருமாவளவன் இருக்கிறார். இவ்வளவு சக்திவாய்ந்த, வித்தியாசமான பல்வேறு ஆளுமைகளை வேறு ஏதாவது இந்திய மாநிலங்களில் பார்க்கமுடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. இவர்களிடமிருந்து அடுத்த தலைமுறையினர் சாதகமான பண்புகளை உள்வாங்கவேண்டும். நிச்சயமாக இந்தத் தலைவர்கள் அனைவரிடமிருந்தும் ஆரோக்கியமான பண்புகள் நமக்கு வரவேண்டும் என்று நினைக்கக் கூடியவனாகத்தான் நான் இருக்கிறேன்.

தீராநதி: தலித் இயக்கங்கள் ஒருங்கிணைந்து செயல்படுவது ஏன் சாத்தியமில்லாமல் இருக்கிறது?

ரவிக்குமார்: பிற்படுத்தப்பட்டோர் என்று பொதுவாகப் பேசினாலும், அதற்குள் இருக்கும் சாதிகள் எப்படித் தனித்தனியாக இருக்கிறதோ, அதுபோல் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற வரையறைக்குள் இருக்கும் சாதிகளும் தனித்தனியாகத்தான் இருக்கின்றன. இது முக்கியக் காரணம். ஆனால், தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு இடையிலான உறவு, இந்து மதத்துக்குள் இருக்கும் சாதியினருக்கு இடையில் இருப்பதுபோல் பகைமைத்தன்மை கொண்டதாக இல்லாமல் நெகிழ்வுத் தன்மை கொண்டதாக இருக்கிறது. தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கு இடையே வேறுபாடுகள் இருந்தாலும், அவர்கள் சந்திக்கும் ஒடுக்குமுறையின் அடிப்படையில் அவர்களுக்கிடையே ஒருமித்தப் பண்புகள் இருக்கிறது. அந்தப் பண்புகளை அடையாளப்படுத்தி எல்லோருக்குமான கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னேச் செல்லும்போது பரந்த தளத்தில் இவர்கள் அனைவரையும் திரட்டமுடியும் என்கிற நம்பிக்கையும், உட்சாதி பிரிவுகளைக் கடந்துபோகவேண்டும் என்ற பார்வையும் கருத்துப் பின்புலமும் எங்களுக்கு இருக்கிறது. அதற்கான முயற்சிகளை இடைவிடாமல் தொடர்ந்து செய்துகொண்டுதான் இருக்கிறோம். சில தலைவர்களிடம் இருக்கும் தனிப்பட்ட ஈகோ காரணமாக அது சாத்தியப்படுவது தள்ளிக்கொண்டே போகிறது. விரைவில் சாத்தியப்படும் என்று நம்புகிறோம். இன்னொரு பக்கம் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு இடையே மட்டுமல்லாமல் மற்ற எல்லா சாதியினருக்கு இடையேயும் ஒரு உறவை ஏற்படுத்தவேண்டும் என்பதுதான் எங்கள் குறிக்கோள்.

நன்றி: தீராநதி 2006

கருத்துகள் இல்லை: