04/04/2011

ஏ படகுக்காரா! - மிக்கெய்ல் ஷோலொகோவ் - புதுமைப்பித்தன்

அந்த காஸக் கிராமத்தைச் சூழ்ந்து வளர்ந்து நின்ற சாம்பல் பூத்த பசிய நிறம் படைத்த செடிச் செறிவின்மீது சூரியவொளி தெம்பாக விழவில்லை. அருகே ஒரு பரிசல் துறை இருந்தது. அங்கே படகேறி டான் நதியை கடக்க வேண்டும் என நான் எண்ணியிருந்தேன். ஈரம் ஏறிச் சொத சொதவென அழுகல் நாற்றம் நாறும் மணல் வழியாகக் கால்களை 'உழுது' சென்றேன். மணலில் கால்கள் அழுந்தியதால் கலப்பை போட்டு இழுப்பது போன்று இருந்தது. தடமும் பித்துக்குளித்தனமாகச் செடி கொடிகளிலுமே மடங்கி மடங்கி ஓடியது. கிராமத்து சர்ச்சுத் தோட்டத்துக்கு அப்பால் சிகப்புப் பந்துபோல வடிவெடுத்த சூரியன் வீங்கி விழுந்தது. என் பின்புறம் கருக்கிருட்டு, என்னைத் தொடர்ந்தது.

இறங்கு கரையில் படகு கட்டியிருந்தது. படகின் கீழ் டான் கொப்புளித்துச் சுழித்துக்கொண்டு அல்லி மலரின் மெல்லிய வெள்ளைக் கலவையுடன் பளபளத்து ஓடியது. நிலை நீச்சலில் நிற்பவனுடைய கைகள் போலப் படகின் துடுப்புகள் ஜலத்தில் இங்குமங்கும் நோக்கற்றுத் துழாவி மிதந்து அசைவாடின. துடுப்புகள் படகுடன் தடையிட்டிருந்ததால், அவற்றின் சலனத்துடன் மடக்கு மடக்கென்ற சத்தமும் கேட்டது.

படகுக்குள் கசிந்து ஏறிய ஜலத்தை வாரி வாரி வெளியே கொட்டிக் கொண்டிருந்தான் படகோட்டி. அவன் தலையை நிமிர்த்தி என்னைப் பார்த்தான். மஞ்சள் பூத்த கால்கள் அவனுக்கு.

"அக்கரைக்குப் போகவேண்டுமா? இதோ ஒரு நிமிஷத்தில் வந்துவிடுகிறேன். நீயும் காத்திருக்கையில் கயிற்றை அவிழ்த்துவிட்டு ஏறிக்கொள்" என்றான் அவன். குரலில் குஷியில்லை.

"நம்ம ரெண்டு பேருமா இதை ஓட்டிக்கொண்டு போக முடியுமா?" என்று கேட்டேன்.

"அதைத்தான் பார்ப்பமே. கொஞ்ச நேரத்திலே இருட்டிவிடும், வேற யாரும் இந்தப் பக்கமா வந்தாலும் வரலாம்" என்றான்.

வாயகன்ற கால்சராய்களை மடித்துவிட்டுக் கொண்டே "உம்மைப் பார்த்தால் இந்தப் பக்கத்துக்குப் புதுசு போலத் தோணுதே. எங்கேயிருந்து வராப்பிலே?" என்றான்.

"பட்டாளத்திலே இருந்து" என்றேன்.

அவன் தன்னுடைய குல்லாவை எடுத்துப் படகுக்குள் போட்டுவிட்டு மயிரைக் கோதிவிட்டுக் கொண்டான். கருப்போடிய நரைதான். கண்ணை ஒருபுறம் சுளித்துக்கொண்டு நொந்து அழியும் பல் வரிசையைக் காட்டினான். "ரஜாவிலே போறாப்பிலேயாக்கும்..."

"இல்லை, என் பட்டாளத்தைக் கலைத்து விட்டார்கள். நான் இனிமே உத்தியோகத்துக்குப் போக வேண்டியதில்லை."

"வாஸ்தவமா? அப்படின்னா, உன் மனசிலே மறுவிருக்காதே" என்றான்.

என்னுடைய சேவைக் காலத்தில் ராணுவம் நடத்த வேண்டிய காரியம் எதுவும் ஏற்படவில்லை என்று அவன் எதிர்பார்த்தான்.

இருவருமாகத் துடுப்புப் பிடித்தோம். டான் நதி எங்களைத் தள்ளி விட்டு வேடிக்கை பார்க்கிறமாதிரி, கரையிலிருந்து கவிழ்ந்து ஆற்றில் அல்லாடி வேலி போல் வழி மறிக்கும் மரக்கிளைகளிலே கொண்டு சிக்கவைத்தது. படகின் அடித் தட்டில் ஓட்டை. அதன் வழியாகத் தண்ணீர் குபுகுபுவென்று கொப்புளித்துக் கொண்டு ஓடியது. படகுக்காரன் வெற்றுக் காலால், அதன் விலாப்பகுதிகளை மிதித்தழுத்திக் கொண்டிருந்தான். காலின் சதைக் கோளங்கள் நீல நாளங்களைக் காட்டி வலிமையையும் காட்டின. அவன் கைகள் நீண்டு எலும்பெடுத்துப் போயிருந்தன. விரல்கள் முண்டு முண்டாக மடங்கல்கள், முடிச்சேறி இருந்தன. ஒல்லியான தோள்பட்டைகளைக் குறுக்கிக்கொண்டு முதுகு குனிந்து தண்டு வலிப்பது படகோட்டுதலில் சாகசத்திற்கு அறிகுறியாகக் காணப்படவில்லை. ஆனால் அவன் வலித்த துடுப்புகள் அலைச் சிகரங்களை லாவகமாக வெட்டி நீரில் வெகு தொலை வரை முங்கி நிமிர்ந்தன.

அவனுடைய மூச்சும் திக்குமுக்காடாமல், சாவதானமாக ஒழுங்காக ஆடிக்கொண்டிருந்தது. அவன் பின்னல் சட்டை போட்டிருந்தான். வேர்வையும், புகையிலையும் ஈரம் குமையும் 'கும்பிய' நாற்றமும் கதம்பமாக என் நாசியைச் செல்லரித்தன. திடீரென அவன் தன்னுடைய துடுப்பின் பேரில் சாய்ந்துகொண்டு, என் பக்கமாகத் தலையைத் திருப்பி, "இனிமேல் நம்மால் போகமுடியாது என்று நினைக்கிறேன். நாம் மரங்கலுக்கிடையில் சிக்கிக் கொண்டு விட்டோ ம். என்னடா கஷ்டகாலம்" என்றான்.

திடீரென்று எழுந்த ஒரு கழிப்பு படகுக்கு அதிரடித் தாக்குதல் கொடுத்து, சுழல வைத்து அதை நேரே மரத்தடியில் கொண்டு பாய்ச்சியது.

அரை மணி நேரத்துக்கு அப்புறம் நாங்கள் ஜலத்தில் தொங்கிக் கிடக்கும் கிளைகளுக்கிடையில் வசமாக மாட்டிக் கொண்டு நின்றோம். எங்களுடைய துடுப்புகள் ஒடிந்து போயின. துடுப்புத் தண்டுகள் மட்டும் முடமான கைமாதிரிப் படகின் பாரிசத்தில் பரிதாபமாகத் தொங்கின. படகின் அடித்தட்டிலிருந்த ஓட்டை வழியாகத் தண்ணீர் மதமதவென்று உள்ளேறிக் கொண்டிருந்தது. இராத்திரியை ஒரு மரத்தில் கழிப்பது என்று தீர்மானித்தோம். படகுக்காரன் கிளையில் கால்களை இறுகப் பின்னிக் கொண்டு என் பக்கத்தில் ஒண்டி உட்கார்ந்து கொண்டான்.

புகை பிடிக்கும் சுங்கானைச் சப்பி இழுத்துக் கொண்டு என்னோடு பேசிக் கொண்டிருந்தான். தொட்டால் கரி ஒட்டிக் கொள்ளும் போல் குமைந்திருண்ட காரிருளில் எங்கள் தலைக்கு மேல் பறக்கும் தாராக் கூட்டத்தின் சிறகோசைகளைக் கவனித்தான்.

"சரி, நீர் வீட்டுக்குப் போகிறீராக்கும். நீர் வருவீர் வருவீர் என உம் தாயார் காத்திருப்பார். ஆமாம். வயசு காலத்திலே ஊன்றுகோல் போல் இருக்கும் மகன் வருகை ஆவலாக இருக்காதா? வீட்டிலே இந்தக் குளிருக்கு இதமான வெதுவெதுப்பு உம்மை வரவேற்கும். வயது உறைய வைத்த இருதயத்திலும் அன்பு குதுகுதுவெனக் கனியும். ஆமாம், உம்முடைய தாயார் இதயத்தினின்றும் கவலையோடு அல்லாடிக் கொண்டு கண்ணீர் சிந்திக் காத்திருந்தாள் என்றால் அது உம் மனத்தில் உறைக்கப் போவதில்லை. ஆசைப்பிள்ளைகள் மனம் எல்லாம் இப்படித்தான். உமக்கும் பிள்ளைகுட்டி என்று பிறந்து உம் காலைக் கட்டாவிட்டால், உம்முடைய பெற்றோர் மனத்தை அறிந்திருக்க முடியாது. அப்படி இருந்தும் பிள்ளைகளுக்காக ஒவ்வொரு அப்பனும் அம்மையும் எத்தனை துன்பத்தைத் தாங்கிச் சுமக்க வேண்டும் தெரியுமா?

"பொம்பிளை ஒருத்தி கறி பண்ணுகிறதற்கு மீனை அறுக்கிறாள் என்று வைத்துக்கொள். கை தவறி பித்தப் பையையும் சேர்த்து அறுத்து விடுகிறாள் என்று வைத்துக் கொள். நீ ஒரு வாய் எடுத்துப் போடுகிறாய். ஒரே கசப்பாகக் கசக்கிறது. அந்தக் கதைதான் என் கதையும். நானும் வாழத்தான் செய்கிறேன். வாழ்வென்னும் விருந்தில் நான் எடுத்துப் போட்டுக் கொள்ளும் ஒவ்வொரு கவளமும் கசப்பாய்க் கசக்கிறது. அதைச் சகிக்கிறேன். அவ்வளவா? இன்னும் எத்தனை காலம் வேண்டுமானாலும் விடாமல் சகித்துக் கொண்டிருக்க முடியும். சில சமயத்தில் எனக்கு இந்த மாதிரித் தோணுகிறது. வாழ்வு, அட வாழ்வே, உன் கடைசி அஸ்திரத்தை நீ இன்னும் எத்தனை காலம் கழித்துப் போடப் போறே?

"நீர் இந்த வட்டாரத்துக்காரரல்ல, நீர் அன்னியன். நீரே யோசித்துப் பார்த்துச் சொல்லும்... கழுத்திலே கயிற்றை மாட்டிக்கொண்டு விழுவது நல்லதல்லவா...

"எனக்கு மகள் இருக்கா. அவ பேரு நடாஷா. வயசு இப்பத்தான் பதினேழு ஆகிறது. 'அப்பா, உன் கூட இருந்து சாப்பிடறத்துக்கே மனங் கொள்ளலே' என்று சொல்லுகிறாள் அவள். 'உன் கையைப் பாரு, அந்தக் கையை வச்சுத்தான் உன் மக்களெக் கொல்றே, அதெ நெனக்கிறப்பக் குமட்டலெடுக்கிறது' என்கிறாள் அவள்.

"அவளுக்காகவும் சின்னதுகளுக்காகவுந்தான் நான் அந்தப்படி செய்தேன் என்பது அந்தச் சிறுக்கிக்குத் தெரியவில்லை.

"நான் இளசுலேயே கலியாணம் பண்ணிக்கிட்டேன். முசல் பீச்சுத் தள்ளுகிறமாதிரி பெத்துப் பெருகும் பெண்ணை ஆண்டவன் எனக்குக் கட்டி வச்சார். ஒன்று மாறி ஒன்றாக எட்டு சின்னச் சின்ன வாய்க்களுக்கு உணவு சம்பாதிக்கும் சுமை என் முதுகில் ஏறி உட்கார்ந்து கொண்டது. ஒன்பதாவது பிள்ளையோட அவ போய்ச் சேந்தா. பேறுகாலம் எல்லாம் பிசகில்லாமல் நடந்தது. அஞ்சாம் நாள் ஜுரம் கண்டு அடித்துக் கொண்டு போயிற்று. நானும் ஏகக் கட்டையானேன். நான் என்னதான் விழுந்து விழுந்து பிரார்த்தனை பண்ணியும் அந்தக் குழந்தைகளில் எதையும் அந்த ஆண்டவன் தன்னிடம் அழைத்துக் கொள்ளவில்லை. ஐவான் தான் எல்லாத்துக்கும் மூத்தவன். ஜாடையெல்லாம் என்னையே போல. கருத்த முடி, நல்ல வாட்டமான முகம், காஸக் அழகு சொட்டும்; நல்ல உழைப்பாளியும் கூட. அடுத்த பையன் ஐவானுக்கு நாலு வருஷம் சின்னவன். அவன் அவுங்க அம்மாவைப் போல. சின்னப்பையதான், ஆனால் வாட்டசாட்டமாத் திம்பான். அவனுடைய தலை மயிர் நரைபூத்தது மாதிரி சணல் வண்ணத்தில் பழுப்பேறியிருக்கும். கண்ணும் துருப்பிடித்த நீலம். அவன் பேர் டானில்லோ. எனக்குச் செல்லப்பிள்ளை. மத்த ஏழு பிள்ளைகளில் மூத்ததுகள் எல்லாம் பொட்டே. மத்தது வெறும் சிசுக்கள்.

"இந்த நிலையிலே எங்க கிராமத்திலே ஐவானுக்குக் கலியாணம் பண்ணி வச்சேன். கொஞ்ச நாளெக்கெல்லாம் அவனும் ஒரு குட்டி போட்டான். டானில்லோவுக்கும் ஏழையா ஒன்றைப் பிடித்துக் கட்டிப் போடுவமேன்னு பார்வையிலே இருக்கிற சமயத்தில், 'சங்கடங்கள்' பிறந்தன. எங்கள் காஸக் கிராமத்து ஜனங்கள் சோவியத்துகளுக்கு எதிராகக் கலகம் செய்தார்கள். ஐவான் என்னிடம் ஓடி வந்தான். கிறிஸ்து மேல் ஆணை வைத்தான். 'சிகப்புக் கட்சியினர் பக்கம் தான் நாம் நிற்க வேண்டும். அவர்கள் பக்கத்தில்தான் நியாயம் இருக்கிறது' என்றான்.

"டானில்லோவும் என்னிடம் பிரமாதமாக லெக்சரடிக்க ஆரம்பித்தான். இருவருமாக என்னிடம் வெகுநேரம் விழுந்து விழுந்து கெஞ்சினார்கள். 'உங்களை இந்தப் பக்கம் சேரு அல்லது அந்தப் பக்கம் சேரு என்று நான் நிர்ப்பந்தப்படுத்தப் போவதில்லை. நீங்கள் உங்கள் இஷ்டம்போல நடந்துகொள்ளுங்கள். நான் இங்கேதான் இருப்பேன். நீங்கள் போய்விட்டாலும் என் கை நோக்கி ஏழு சின்ன வய்கள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றையும் நான் தான் வாடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்' என்றேன்.

"அவர்களும் போய்விட்டார்கள். எங்கள் கிராமத்துக்காரர்கள் ஆயுதம் பூண்டார்கள். ஒவ்வொருத்தனும் தன் கையில் அகப்பட்டதைத் தூக்கிக்கொண்டு தயாரானான். அவர்கள் என்னைச் சூழ்ந்து பிடித்துக்கொண்டு முதலில் களத்துக்குப் போகவேண்டும் என்று முடுக்கிவிட்டார்கள். ஊர்ச் சதுக்கத்தில் அவர்கள் என்னை இழுத்துச் சென்றபோது 'தேசத்தார்களே, தகப்பன்மார்களே, நான் பெரிய குடும்பி. ஏழு சிசுக்கள் வீட்டில் படுத்துக் கிடக்கின்றன. நான் செத்தால் அவர்களை யார் பார்ப்பார்கள்' என்று சொல்லிப் பார்த்தேன். பலிக்கவில்லை. கொஞ்சம் கூட இரக்கம் காட்டாமல் என்னைப் படுகளத்திற்கு அனுப்பினார்கள். சண்டை நடந்த இடம் எல்லாம் ஊருக்கு அருகாமையில்தான்.

"ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தி ஒருநாள். 9 கைதிகள் பிடித்துக்கொண்டு வரப்பட்டனர். என் செல்வப் பிள்ளையான பிள்ளையான டானிலுஷ்காவும் (அவனுடைய முழுப்பெயர்) அதில் ஒருவன். அவர்களை ஊர்ச்சந்தை வெளியில் இழுத்துக் கொண்டு வந்து காப்டன் முன்பாக நிறுத்தினார்கள். வீட்டுக்குள் காயப்பட்டுக் கிடந்த காஸக் ஜனம் அவ்வளவும் அங்கே திரண்டது. ஆண்டவன் தான் அதைப் பார்க்கணும். ஒரே கலாட்டா. 'கோழைப் பயல்கள். காலிப் பயல்கள். வெட்டிச்சாயி' என்று ஒரே கூச்சல். 'விசாரணை நடந்த பிறகு வெளி வரட்டும், நாமளே தீத்துப்புடுவோம்' என்று கருவினார்கள்.

"தொடை நடுங்கிக் கொண்டு நானும் அங்கே நின்றேன். என் மகன் டானில்லோவுக்காக என் நெஞ்சு எப்படி வெந்தது என்பதை நான் காட்டிக் கொள்ளப் பயந்தேன். காஸக்குகள் தலையை ஆட்டி ஆட்டி என்னைச் சுட்டிக்காட்டி இரகசியம் பேசுவது எனக்குத் தெரிந்தது. சார்ஜன்ட் - மேஜராஜ அர்க்காஷா என்னிடம் வந்தான். 'இந்தப் பொதுவுடைமைக் கிருமிகளை அழித்து விடுவதில் நீ எங்களோடு சேருவாயா?' என்று கேட்டான்.

"நிச்சயமாக காலிப்பசங்க...' என்றேன் நான்.

"'அப்படியானால் இந்தா, இந்தப் பயனட்டை வச்சுக்கோ. இங்கேயே வாசலண்டை நில்லு' - இப்படிச் சொல்லிவிட்டு அவன் கண்கள் ஒரு விபரீதப் பார்வையைப் பாய்ச்சியது. 'நாங்களும் உம்மேலே ஒரு கண் வைத்திருப்போம். ஜாக்கிரதையா நடந்து கொள்ளப்பா, இல்லாவிட்டால் பிறகு எங்களெக் குத்தம் சொல்லாதே' என்றான்.

"நானும் வாசலண்டை நின்று கொண்டிருந்தேன். என் மூளை கசங்கிச் சுழன்றது. 'ஏ, மரியதாயி, ஆண்டவனெப் பெத்தவளே, நான் என் கையாலே என் மகனெக் கொல்லணுமா?'

"காவல்காரன் அறையிலிருந்து வந்த சத்தம் அதிகமாயிற்று. கைதிகளைக் கூட்டிக் கொண்டு வந்தார்கள். முதலில் டானில்லோதான் வந்தான் அவனுடைய தலை பீப்பாய் மாதிரி வீங்கியிருந்தது. இரத்தம் கட்டி கட்டியாக அவன் மூஞ்சியில் வழிந்து கொண்டிருந்தது. மண்டையில் தோல் உரிந்துவிட்டது. கம்பளிக் கையுறையை அவன் தலையில் சொருகி இருந்தார்கள். நன்றாக அடித்த பிற்பாடு உராய்ந்து போன பாகங்களைக் கம்பளி மயிர் உறை வைத்து மூடியிருந்தார்கள். உறை ரத்தத்தை உறிஞ்சி மயிரோடு மயிராய் ஒட்டிக் கொண்டிருந்தது. கைதிகள் கிராமத்துக்கு இழுத்து வரப்படும்போது வழி நெடுக நடந்த சம்பவங்கள். என் டானில்லோ தள்ளாடித் தள்ளாடி நடந்து வந்தான். என்னைக் கண்டதும் என்னை நோக்கிக் கைகளை நீட்டினான். அவன் சிரிக்க முயன்றான். அவனுடைய கண்களில் ஒன்று வெறும் ரத்தப் பிண்டமாக அசைவற்றுத் துருத்திக் கொண்டிருந்தது.

"நான் அவன் மீது விழுந்து கொல்லாவிட்டால், கிராமத்தார்கள் என்மேல் விழுந்து அந்த இடத்தில் வைத்தே பலியிட்டு விடுவார்கள் என்பது புரிந்து போயிற்று. என் சிசுக்கள் அனாதைகளாக ஆண்டவன் படைத்த உலகத்தில் திக்கற்றுத் தவிக்கும். டானில்லோ நான் நின்ற இடத்தை அணுகினான்.

"அப்பா - அப்பா - நான் போயிட்டு வரேன் அப்பா' என்றான். அவன் கண்கள் உதிர்த்த கண்ணீர் ரத்தக் கறையைக் கழுவிப் புரண்டன. உம், என் கை உயரவில்லை. தூக்க முடியாமல் மரத்துவிட்டது. வெறும் கட்டை மாதிரி. பயனட்டு என் தோள்பட்டையை அமுக்கிக் கொண்டிருந்தது. துப்பாக்கியை மாறித் திருப்பிக்கொண்டு அடி மட்டையால் என் பசலையைக் கீழே வீழ்த்தினேன்... இதோ இந்தப் பொட்டில், காதுக்குப் பின்புறத்தில் '...ஓ ஓ...' என்ற தொனிப்பில்தான் ஒரு ஓலமிட்டான். முகத்தை மூடிக்கொண்டு கீழே விழுந்தான். என்னுடைய காஸக் சகாக்கள் விலா வெடித்து விடுவதுபோல் விழுந்து விழுந்து சிரித்தார்கள். 'குடுடா மிக்கிஷாரா குடுடா. ஒன் டானில்லோ மேலே ரொம்பக் கடுப்பு இருக்காப்லே இருக்கே. இன்னொரு தரம் குடு. இல்லாட்டா ஒன் ரத்தமும் கொஞ்சம் வெளியே சிந்தும் ஜாக்கிரதை' என்றார்கள்.

"காப்டன் லிட்டிஸ் தலை வாசல் பக்கம் வந்து நின்று கொண்டு, தன் சிப்பந்திகளை நோக்கி வெறும் ஒப்புக்காகக் கத்தினான். ஆனால் அவன் கண்களில் சிரிப்புத் துள்ளி மறைந்தது.

"காஸக்குகள் பாய்ந்து விழுந்து கைதிகளைக் குத்திச் சாய்க்க ஆரம்பித்தார்கள். என் கண் இருண்டது. நானும் தெருவில் இறங்கி ஓடினேன். என் டானில்லோ தலையில் குண்டு விழக்கண்டேன். அந்த சார்ஜெண்ட் மேஜர் அவனுடைய தொண்டையில் பயனட்டைப் பாய்ச்சி விட்டான். டானில்லோ கொடுத்த குரல் ஒன்றுதான்: 'கொர்ர்' என்ற சத்தம் கேட்டது... அவ்வளவுதான்..."

படகுக் கட்டைகளும் நாங்கள் உட்கார்ந்திருந்த மரக்கிளைகளும் 'கொர்ர்' 'கொர்ர்' என்று அவலக் குரல் எடுத்தன.

படகு தண்ணீர் மட்டத்துக்குள் அடியோடு அமிழ்ந்து விட்டது. குப்புற மிதந்த அந்தப் படகின் அடித்தண்டு ஒரு நிமிஷம் ஜல மட்டத்திற்கு மேல் தலைகாட்ட, மிக்கிஷாரா ஜலத்துக்குள் காலை விட்டு அது அமுங்கிய இடம் நோக்கித் துழாவினான். பிறகு கண்களில் இருந்த புகையிலைச் சாம்பலைத் தட்டிவிட்டு, 'படகு முங்குகிறது. நாளைக்கு மத்தியானம் வரை இந்தக் கிளையில்தான் நாம் உட்கார்ந்து தொலைக்கணும். நாசமாப் போன அதிர்ஷ்டம்.'

அவன் வெகு நேரம் மௌனமாக உட்கார்ந்திருந்தான். பிறகு மறுபடியும் அடித் தொண்டையில் அவன் கதையை ஆரம்பித்தான்.

"அந்த நாள், நான் செய்த கைங்கரியத்துக்காக எனக்குப் போலீஸ் வேலை கொடுத்தார்கள்; அது நடந்த பிறகு டான் நதி எத்தனை வெள்ளத்தையோ பார்த்துவிட்டது. அப்படியிருந்தாலும் ராத்திரியாச்சுன்னா, திக்கு முக்காடித் தொண்டை நெரிஞ்சு மரணக் குரல் என் காதில் கேட்டுக் கொண்டே இருக்கிறது. டானில்லோவின் கடைசி அலறல் கேட்டுவிட்டு ஓடினேனே. அன்று கேட்ட அந்தக் குரல் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்கிறது.

"மனசு இப்பத்தான் என் மேல் வஞ்சம் தீர்த்துக் கொண்டு வருகிறது.

"வசந்த காலம் வரை நாங்கள் சிகப்புக் கட்சிக்காரர்கள் ஓங்கிவிடாமல் நிலையாகத் தடுத்து நின்று கொண்டிருந்தோம். அப்புறந்தான் ஜெனரல் செக்ரெட்யெவ் எங்கள் உதவிக்கு வந்தார். நாங்கள் பொதுவுடைமைக் காரர்களை டான் நதிக்கு மறுகரைக்கு விரட்டி, ஸாரட்டோ வ் மாகாணம் வரை ஓட்டிச் சென்று விரட்டிவிட்டுத் திரும்பினோம்.

"என் மகன்கள் பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்து விட்டிருந்ததால், உத்தியோகத்திலும் எனக்குச் சங்கடந்தான்; நான் பெரிய குடும்பி என்பதும் அவர்களுக்குப் புரியவில்லை.

"பாலாஷார் என்ற பட்டணம் வரை நாங்கள் போனோம். என்னுடைய மகன் ஐவானைப் பற்றித் தகவலே இல்லை. எங்கிருக்கிறான் என்ற விவரம் தெரியவேயில்லை. இப்படியிருக்கையில் காஸக்குகளிடையே ஒரு வதந்தி உலவ ஆரம்பித்தது. அவர்கள் எப்படித்தான் கண்டு பிடித்தார்களோ? ஐவான் பொதுவுடைமைக் கட்சியை விட்டுத் தொலைத்துவிட்டு 36 - வது காஸக் பீரங்கிப் படையிலிருப்பதாகச் சொல்லிக் கொண்டார்கள்.

"அந்த ஐவாஸ்கா பயலைப் பிடித்துக்கொண்டு வந்து புல்லைத் தின்னும்படி வைக்காவிட்டால் பார்" என்று கிராமத்தார்கள் என்னை மிரட்டினார்கள்.

"நாங்கள் ஒரு கிராமத்துக்கு வந்து சேர்ந்தோம். அங்கே அந்த 36 - வது தளம் காவல் நிறுத்தப்பட்டிருந்தது. காவல் கிடங்கில் போட்டு அவனைக் கொடூரமாக அடித்து வதம் செய்தார்கள். கடைசியாக என்னைக் கூப்பிட்டு, ராணுவத்தின் தலைமைக் காரியாலயத்திற்கு அவனை அழைத்துக்கொண்டு போக வேண்டும் என்று எனக்கு உத்தரவு போட்டார்கள்.

"இந்தக் கிராமத்திலிருந்து சுமார் பன்னிரண்டு விரெஸ்டுகள் தலைமைக் காரியாலயம் இருந்த இடம்.

"என்னை ஏறெடுத்துப் பார்க்காமல் கண்ணை மாறி வைத்துக் கொண்டு என் பட்டாளத்தின் தலைவர் என்னிடம் உத்தரவுப் பத்திரங்களைக் கொடுத்தார்.

"மிக்கிஷாரா இதோ இருக்கிறது உத்தரவு. பயலைத் தலைமைக் காரியாலயத்துக்குக் கூட்டிக் கொண்டு போ. அவனை நீ கூட்டிக்கொண்டு போவதுதான் நல்லது. அப்பாவிடமிருந்து தப்பி ஓடிவிடுவானா?

"அவர்கள் சூழ்ச்சி இன்னதெனப் பளிச்சென்று எனக்கு உதயமாயிற்று. நான் தகப்பனாராகையால், அழைத்துச் செல்லும்போது தப்ப சௌகரியம் பண்ணிக் கொடுப்பேன். அப்போது எங்கள் இருவரையுமே ஒழித்துக்கட்டி விடலாம் என்பதுதான் அவர்கள் ஆசை.

"ஐவான் நிறுத்தப்பட்டிருந்த சிறையருகே சென்றேன். அங்கே காவலிருந்தவர்களிடம், 'கைதியை என்னிடம் ஒப்புவித்து விடுங்கள்; அவனைத் தலைமைக் காரியாலயத்துக்கு அழைத்துக் கொண்டு போகும்படி எனக்கு உத்தரவு' என்றேன்.

"நல்லாக் கூட்டிக்கொண்டு போ. அவனை வைத்திருப்பதில் எங்களுக்கென்ன ஆச்சு' என்றார்கள்.

"ஐவான் தன்னுடைய பெரிய கோட்டைத் தோளில் போட்டுக் கொண்டான். தன் குல்லாவை எடுத்துக் கொண்டு சற்று நடமாடினான். பிறகு அதைப் பெஞ்சி மேலேயே போட்டுவிட்டு என்னுடன் நடந்தான்.

"நாங்கள் கிராமத்தைவிட்டு வெளியேறினோம். எங்கள் பாதை மலைச்சரிவு வழியாகச் சென்றது. நானும் பேசவில்லை; அவனும் பேச்சுக் கொடுக்கவில்லை. பாதி வழிவரை இந்த ரீதியில் நடந்தோம். வழியில் ஒரு கோவில் இருந்தது. அதையும் கடந்தோம். எங்கள் பின்புறம் யாரும் தொடர்வதாகத் தெரியவில்லை. ஐவான் என் பக்கமாகத் திரும்பினான். அவன் குரல் கெஞ்சியது. 'அப்பா, என்னை அங்கே கொன்று விடுவார்கள். சாகக் கொடுப்பதற்கே என்னைக் கூட்டிக்கொண்டு போகிறாய். உன் மனசு கேட்கிறதா?' என்றான்.

'இல்லை மகனே இல்லை' என்றேன்.

'அப்படியானால் என் மேல் உனக்கு இரக்கமில்லையா?'

'இரக்கமா, நெஞ்சு வெந்து மடிகிறதடா மகனே.'

"'அப்படியானால் என்னை விட்டுவிடேன்; நினைச்சுப்பார்; என் ஆயுசு எத்தனை சின்னதென்று. லோகத்தை நான் இன்னும் நல்லாக்கூடப் பார்க்கலியே?'

'அவன் என் காலில் விழுந்து மூன்று தடவை கெஞ்சினான். 'அந்தச் சரிவு வரை நாம் போவோம். அப்புறம் ஓடிவிடு. நானும் ஒப்புக்கு இரண்டு மூன்று தடவை உன்னைத் தொடர்ந்து துப்பாக்கி வெடி தீர்க்கிறேன்.'

"அவன் சிறிதாக இருக்கும்போது பட்சமான வார்த்தை என்று அவன் வாயிலிருந்து வெளி வந்ததில்லை; அப்படிப் பட்டவன் என் கழுத்தில் விழுந்து முத்தமிட்டான்...

"இன்னும் இரண்டு விரெஸ்டுகள் நடந்தோம். அவன் பேசவில்லை; நானும் பேச்சுக் கொடுக்கவில்லை. சரிவை அடைந்தோம்; ஐவான் நின்றான்.

"'போய் வருகிறேன் அப்பா; நாம் இருவரும் தப்பிப் பிழைத்தால் உன் ஆயுசு முழுவதும் நான் உன்னைப் பார்த்துக் கொள்கிறேன். என் வாயிலிருந்து ஒரு கடுஞ்சொல் பிறக்காது' என்றான்.

"என்னைக் கட்டிக்கொண்டான். என்னுடைய நெஞ்சு வெடித்துவிடும்போல இருந்தது.

"'ஓடு மகனே ஓடு' என்றேன். அவன் சரிவில் ஓடினான். அடிக்கடி திரும்பிக் கைகளை என்னை நோக்கி அசைத்துக் கொண்டிருந்தான். நாற்பது கஜ தூரம் அவனை ஓடும்படி விட்டேன். தோளில் தொங்கிய துப்பாக்கியை எடுத்தேன். முழங்கால் படியிட்டு நின்று குறி பார்த்தேன். குதிரையை விரலால் சுண்டி இழுத்தேன்... குண்டு அவன் மேல் முதுகில் நட்ட நடுவில் பாய்ந்தது."

மிக்கிஷாரா தன் பையில் கையை விட்டுச் சிறிது நேரம் புகையிலையை எடுக்கத் துழாவினான். பிறகு சக்கி முக்கிக் கல்லடித்துப் பொறி உண்டு பண்ணிச் சுங்கானை ஏற்றி ஆற அமர நெஞ்சு நிறையப் புகையிழுத்து வெளியிட்டான். சக்கி முக்கிக் கல் ஏற்றிய பஞ்சு அவன் உள்ளங் கையில் கனிந்தது. முகத்துச் சதைகள் துடித்தன. சிகப்பேறிய மாறுகண் இரக்கமற்று விழித்தது.

"ஆமாம், அவன் ஆகாசத்தில் துள்ளிக் குதித்தான். உளைச்சலோடு இன்னும் சில கெஜதூரம் ஓடினான். அடிவயிற்றைப் பிடித்துக் கொண்டு, திரும்பி என்னைப் பார்த்து... 'அப்பா... ஏன்...'

"அவன் தரையில் விழுந்து உதறிக் கொண்டான். நான் அவனருகில் ஓடிக் குனிந்து பார்த்தேன். அவனுடைய கண்கள் ஏறச் சொருகின. வாயில் இரத்த நுரை தள்ளியது. காரியம் தீர்ந்து விட்டது என்று நினைத்தேன். ஆனால் திடீரென்று தெளிச்சல் ஏற்பட்டு, என் கைகளை எட்டிப் பிடிக்க முயன்று தடுமாடினான். 'அப்பா எனக்கு ஒரு சிசுவும் பெண்டாட்டியும் உண்டு'... அவன் தலை சொளக்கிட்டுச் சாய்ந்துவிட்டது. அவன் தன் காயத்தை அமுக்கி மூடித் தடவிக் கொண்டான். அதெங்கே... அப்படியிருந்தும் விரலுக்கிடையில் ரத்தம் கொப்பளித்துக் கொண்டு பீறிட்டது. அவன் அனத்தினான். பிறகு மலர்ந்து உருண்டு என்னைப் பயங்கரமாக ஒரு பார்வை பார்த்தான். நாக்கு வசப்பட்டு நிற்கவில்லை. இன்னும் என்னமோ சொல்ல ஆசைப்பட்டான். என் காதில் விழுந்ததெல்லாம் '...அப்பா...அப்பா...' என்ற வார்த்தைகள் தான். என் கண்கள் பலபலவென்று நீர் சிந்தின. 'மகனே, இந்த முள் கிரீடத்தை எனக்காகச் சுமந்திடு. உனக்கு மனைவியும் சிசுவும் உண்டு என்று எனக்குத் தெரியும். வீட்டிலே ஏழு அனாதை சிசுக்கள் எனக்கு இருக்கின்றன. நான் உன்னை விட்டால் காஸாக்குகள் என்னைக் கொன்று போடுவார்கள். அப்போ என் குழந்தைகள் தெருவில் பிச்சை எடுத்து ஏங்கும்' என்றேன்.

"இன்னும் சற்று நேரந்தான் அவனுக்குப் பிரக்ஞை இருந்தது. அவன் தீர்ந்தான். அவன் கைகள் என் கைகளைப் பிடித்திருந்த பிடிப்பு உலையவில்லை. அவனுடைய பெரிய கோட்டையும் பூட்ஸையும் கழற்றி எடுத்தேன். முகத்தில் ஒரு துணியைப் போட்டு மூடிவிட்டுக் கிராமத்துக்குத் திரும்பினேன்.

"உன் மனதாரச் சொல்லு. என் குழந்தைகளுக்காக இத்தனை கஷ்டத்தையும் சுமந்தேன். அதில் தான் என் தலையும் நரைத்தது... அவர்கள் ஒரு ரொட்டித் துண்டுக்காகத் திண்டாடாமலிருக்க உழைக்கிறேன். இராத்திரியானாலும் பகலானாலும் மனத்தில் ஓய்ச்சல் இல்லை... அவர்கள் அப்படிச் சொல்லுகிறார்கள்... என் மகள் நடாஷா அப்படிச் சொல்லுகிறாள்: 'அப்பா உன் கூட உட்கார்ந்து சாப்பிட முடியவில்லை...' இதைச் சுமந்து கொண்டிருக்க எந்த மனிதனாலும் முடியுமா?"

படகுக்கார மிக்கிஷாரா தலையை சொளக்கென்று முன்னே தொங்கப் போட்டான். என்னையே இமையாடாமல் பார்த்து விழித்தான். அவன் பின்புறம் சோகம் மூண்ட உதயக் கன்னி பிரவேசித்தாள். வானம் வெண்கீறல் காட்டி மலர்ந்தது. நதியின் வடகரை இருள் மூட்டத்திலிருந்து தூங்கி வழியும் குரல் ஒன்று, கம்மிப்போய்க் கரடுமுரடாகக் காட்டு வாத்துக்களின் கமறல் தொனிக்கு மேல் ஓங்கி எழுந்தது.

'ஏ படகுக்காரா மிக்கிஷாரா, நாசமாகப் போக, படகைக் கொண்டா...'

கருத்துகள் இல்லை: