14/04/2011

மதுரையை எரித்தது யார்? - குமரி மைந்தன்

வடிவத்துக்காகவே பல இலக்கியங்கள் போற்றப்படுகின்றன. சில இலக்கியங்கள் அடக்கத்தை அறியமாட்டாமையால் புறக்கணிக்கப்படுகின்றன. இந்த இரண்டாம் வகையைச் சார்ந்தது சிலப்பதிகாரம். இந்நூல் தலைசிறந்த இலக்கிய உத்திகள் பலவற்றைத் தன்னகத்தே கொண்டது. அவற்றுள் ஒன்று இற்றை இதழியலை (Modern Journalism) ஒத்தது.

அதாவது சிலப்பதிகார ஆசிரியர் தாம் கூறிய சேதிகளில் ஏறக்குறைய அனைத்துக்கும் யாரோ ஒருவருடைய கூற்றை எங்கோ ஓரிடத்தில் சான்றாகக் காட்டுகிறார். எடுத்துக் காட்டாக, புகாரில் நடந்தவற்றுக்கு தேவந்தி, செவிலி, காவற்பெண்டு, மாடலன் முதலியோரையும் மதுரையில் நிகழ்ந்தவற்றுக்கு புலவர் சாத்தனார், ஐயை முதலியோரையும் சான்று காட்டுகிறார். இன்னும் இது போன்று பல சான்றுகளை ஊன்றிப் படிப்போர் நூல் நெடுகிலும் காண முடியும்.

இவ்வாறு தன் நூலுக்கு சான்றுகளைக் காட்டுவது தற்செயலானது என்றோ அல்லது வெறும் உத்தி என்றோ தள்ளிவிடத் தோன்றவில்லை. தான் கூறும் கதையில் உண்மையில் அவருக்கே ஐயம் ஏற்பட்டிருக்க வேண்டும் அல்லது மக்கள் அறிந்த சேதிகளுக்கு மாறுபாடாகத் தாம் எடுத்துவைக்கும் கதைக்காக அவர் தம் மீது பிழையில்லை என்பதைக் காட்டிக் கொள்வதற்காக இவ்வுத்தியைக் கையாண்டிருக்க வேண்டும். அவ்வாறு அவர் வெளிப்படையாகக் கூறும் கதைக்கு மாறுபட்டதாக வேறு கதை ஏதாகிலும் இந்நூலுக்குள் புதைந்து கிடக்கிறதா, அவ்வாறாயின் அக்கதை யாது என்று ஆராய்வதே இச்சிறு கட்டுரையின் நோக்கம்.

பதிகத்தில் இளங்கோவடிகள் சாத்தனாரிடம் ஒரு கேள்வி போடுகிறார்.

வினைவிளை காலமென்றீர் யாதவர்
வினை விளை வென்ன...
(பதிகம் 37-38)

இந்த வினையும் விளைவும் பற்றி கட்டுரை காதை, நூலில் விளக்கமாகக் கூறுகிறது. ஆனால் அங்கு தோன்றாத ஒரு சேதியை இக்கேள்வி பதிகத்தில் வெளிப்படுத்துகிறது.

கொன்றையஞ் சடைமுடி மன்றப் பொதியிலில்
வெள்ளியம்பலத்து நள்ளீருள் கிடந்தேன்
என்று தொடங்கி மதுராபதித் தெய்வம் கண்ணகிக்குப் பழம்பிறப்புரைத்ததும் அப்பழம்பிறப்பு வினையின் விளைவே கோவலன் கொலையுண்டது என்றும் கூறியதைத் தான் கேட்டதாக சாத்தனார் விடை கூறுகிறார். (பதிகம் 39-54)

இவ்வாறு கட்டுரை காதை முழுவதற்கும் சாத்தனாரைப் பொறுப்பாக்கி விடுகிறார் இளங்கோவடிகள். அப்படியானால் சாத்தனாரின் கூற்றில் அடிகளுக்கு ஐயமேற்படக் காரணம் இருந்ததா? இருந்திருக்கலாமென்றே தோன்றுகிறது.

சிலப்பதிகாரக் காலத்தில் தமிழ் நாட்டு மூவேந்தர் அரசுகளும் மிகக் குழப்பமான நிலையிலிருந்தமை நூல் முழுவதும் படிக்கும்போது தெரிகிறது. அதனை மிக நுணுக்கமாக ஓரிடத்தில் ஓர் உவமை மூலம் காட்டுகிறார் அடிகள். அந்திமாலைச் சிறப்புச் செய்காதையில் கதிரவன் மறைந்ததால் கவிந்த இருளை நிலவு தோன்றி அகற்றுவதை,

கறை தெழு குடிகள் கை தலை வைப்ப
அறைபோகு குடிகளொடு ஒரு திறம் பற்றி
வலம்படு தானை மன்னரில் வழிப்
புலம்பட இறுத்த விருந்தின் மன்னரின்
.............................................................
மல்லல் மூதூர் மாலை வந்திறுத் தென
இளையராயினும் பகையரசு கடியும்
செருமான் தென்னர் குல முதலாகலின்
அந்தி வானத்து வெண்பிறை தோன்றி
............................................................
மீனரசாண்ட வெள்ளி விளக்கத்து.....
(4: 10-26)

சோழர் கதிரவன் குலமென்பதும் பாண்டியன் நிலவுக் குலமென்பதும் மரபு. இங்கு கதிரவன் மறைந்து இருள் சூழ்ந்ததை வலம்படு தானை மன்னரில் வழி என்பதன் மூலம் சோழப் பேரரசன் இயற்கை யெய்தி புதிய அரசன் பட்டமேறாத இடைக்காலத்தைக் குறிக்கிறது எனலாம். கரிகாலன் காலத்துக்குப் பின் நலங்கிள்ளி, நெடுங்கிள்ளிகளுக்கிடையில் கலகம் நிகழ்ந்ததற்கு இலக்கியச் சான்றுகள் உள்ளன. ஆனால் சிலம்பு கூறும் ′விருந்தின் மன்னர்′ (புதிய மன்னர்) சோழ குலத்தவராக இருக்க முடியாது. இலக்கியங்கள் மறைக்கும் நிகழ்ச்சி ஏதோ ஒன்று அதில் அடங்கியிருக்க வேண்டும். அரசு வலுவிழந்திருந்த போது புதிதாகத் தோன்றிய சிற்றரசு ஒன்றின் அரசன் புகார் மீது படையெடுத்து அதைப் பிடித்திருக்க வேண்டும். உள்நாட்டுக் குழப்ப நிலையை அவன் பயன் படுத்தியிருக்க வேண்டும். இவ்வெதிரியை முறியடிக்க, பாண்டியன் ஒருவன் சோழ அரசனுக்கு உதவியிருக்க வேண்டும். அது தான் ′இளையோராயினும் பகையரசு கடியும் செருமான் தென்னர் குலமுதல்′ என்று நிலவைக் கூறுகிறார். (இவ்வாறு இளமையிலேயே பகைவர்களைச் கடிந்தவனாக ஆரியப் படைகடந்த நெடுஞ்செழியனே கூறப்படுகிறான். இவன் தான் கோவலனைக் கொலைக்களப் படுத்திய நெடுஞ்சழியன்.)

இவ்வாறு முகாமையான ஒரு வரலாற்றுச் செய்தியை ஓர் உவமையினுள் நுண்மையாக இளங்கோவடிகள் மறைந்து வைத்திருப்பதைக் காணும் போது இவர் மூலக்கதையிலும் ஏதோ ஒரு நிகழ்ச்சியைப் புதைத்து வைத்திருப்பாரோ என்ற எண்ணம் உருவாகிறது.

உண்மையில் அத்தகைய ஒரு நிகழ்ச்சி சிலப்பதிகாரத்தில் மறைந்திருக்கவே செய்கிறது. சிலப்பதிகாரக் காலம் சங்க காலத்தின் இறுதிக் காலம். சங்க இலக்கியங்களினுள் வரி விதிப்பைப் பற்றி கிழார்களாகிய புலவர்கள் குறைபட்டு அரசனுக்கு அறிவுரை கூறுவோராகக் காணப்படுகின்றனர். அதே வேளையில் அரசர்களை வானளாவப் புகழ்ந்து அளவிறந்த பரிசில்களைப் பெறும் புலவர்கள், குறிப்பாகப் பார்ப்பனப் புலவர்கள் பெருகி வருகின்றனர். இது, வாணிகர், வேளாளர் முதலிய மக்கட் குழுவினருடன் கலந்து முடிவெடுக்கும் தன்மையிலிருந்து அரசன் மாறுபட்டு, மக்களிடமிருந்து விலகி, கட்டற்ற முடியாட்சிக்கு மாறியதையே காட்டுகிறது. இச்சூழ்நிலையில் தம்மை இடித்துரைப்போரை விடத் தம்மைப் போற்றிப் புகழுவோரே அரசர்களுக்கு இனியோராகத் தோன்றுகின்றனர். இவ்வாறு சங்க கால இறுதியில் பார்ப்பனர்கள் அரசர்களிடமிருந்து முற்றூட்டுகளைப் பெறகின்றனர். இதற்கு ஒரு பதமாக:

தடம் புனற்கழனித் தங்கால் தன்னுடன்
மடங்கா விளையுள் வயலூர் நல்கிக்
கார்த்திகை கணவன் வார்த்திகன் முன்னர்
இருநில மடந்தைக்குத் திருமார்பு நல்கி......
(23:118-121)

என்பது காணப்படுகிறது.

இவ்வாறு கட்டில்லா முடியாட்சியின் விளைவுகள் பல துறைகளிலும் பெருகுகின்றன. இப்போது போரிடுவது மக்களுக்குப் பகைவரிடமிருந்து பாதுகாப்பளிப்பது, பஞ்சம் வந்த வேளையில் வளமிக்க நாடுகளிலிருந்து பொருள்களைப் பெறுவது என்ற நோக்கம் மாறி மன்னர்தம் புகழ் ஒன்றே குறியாகிறது. போர்களில் அயல்நாடுகளைக் கொள்ளையடித்து தன் அரண்மனையை வளப்படுத்தியும் படைத்தலைவருடனும் படைவீரர்களுடனும் பங்கிட்டும் கொண்டனர் அரசர்கள். தலைநகரில் இவ்வாறு சேர்ந்த செல்வம் ஆடம்பர விளையாட்டுகளில் செலவாயின. விலை மகளிரால் தலைநகர் நிறைந்தது. இதனை மதுரையில் கோவலன் நுழைந்ததும் காட்டுகிறார் இளங்கோ.

வையமுங் கவரியும் மணிக் கால் அமளியும்
உய்யானத்தின் உறுதுணை மகிழ்ச்சியும்
சாமரைக் கவரியும் தமனிய அடைப்பையும்
கூர் நுனை வாளும் கோமகன் கொடுப்ப.......
(14:126-129)

சிறப்புரிமைகளைப் பெற்ற விலைமகளிரை அரசன் உருவாக்கியிருந்தான்.

செவ்வி பார்க்கும் செழுங்குடிச் செல்வரொடு
வையங்காவலர் மகிழ் தரு வீதியும்........
(14:144-145)

எனவும்

முடியர சொடுங்கும் கடிமனை வாழ்க்கை (14:146)

எனவும் கணிகையர் வீதிப் பெருமையும் வீட்டுப் பெருமையும் கூறுவார் போல் அரசனும் சுற்றமும் கணிகையர் வீடுகளுக்குச் செல்வதை அடிகள் குறிப்பாக உணர்த்துகிறார்.

அடுத்து, கொலைக் களக் காதையில்,

கூடல் மகளிர் ஆடல் தோற்றமும்
பாடற் பகுதியும் பண்ணின் பயங்களும்
காவலனுள்ளம் கவர்ந்தன என்று தன்
ஊடலுள்ளம் உள்கரந் தொளித்துத்
தலைநோய் வருத்தந் தன் மேலிட்டுக்
குலமுதல் தேவி கூடா தேக ..........
(16:131-136)

அரசன் பரத்தையர் வீடு சென்றானென்று வெளிப்படக் கூறவில்லை யாயினும் மேலே காட்டியவற்றிலிருந்து அரசன் செயலையும் அதற்காக தேவி ஊடியதையும் குறிப்பாகக் காட்டுகிறார் அடிகள்.

பொற்கொல்லன் திறம் பற்றி யாருக்கும் ஐயமில்லை. அவன் ஒரு கொடியவன், கயவன். ஆனால் அவனுக்கு கோப்பெருந்தேவி கோயில் வாயில் வரை சென்று அரசனைக் காணும் அளவுக்கு உரிமையிருந்தது. அரசனின் ஆட்சித் திறத்தை அவனை அண்டியிருப்போரைக் கொண்டு அளவிடலாம். ′உன்னைத் தெரிந்து கொள்வதற்கு உன் நண்பனைத் தெரிந்து கொண்டால் போதும்′ என்ற ஆங்கிலப் பழமொழிக்கேற்ப அரசன் ஆட்சி செய்த வகையைத் தெளியலாம்.

இத்தகைய ஓர் அரசனின் தலைநகரில் சிலம்பை விற்று அதை முதலாக்கி வாணிகம் செய்யவென்று வந்த வெளியூர் வாணிகன் ஓருவன் அரசன் ஆணையால் முறைகேடாகக் கொல்லப்படுகிறான். அவன் மனைவியோ இக்கொடுமையை அறிந்து வாளாவிருக்கவில்லை, கொதித் தெழுகிறாள். கையில் மீதமிருந்த சிலம்புபொன்றை ஏந்தி வீதியில் முறையிட்டுக் கொண்டே வருகிறாள்.

பொதுவாக இக்காட்சியைப் பற்றி, கண்ணகி வீதியில் தன்னந்தனியாகத் திரிந்ததாகவே பலரும் கருதுகிறன்றனர். உண்மையில் அவளைத் தொடர்ந்து ஒரு பெரும் கூட்டம் திரண்டு விட்டதை,

கம்பலை மாக்கள் கணவனைத் தான்காட்ட (19:29) என்று ஆசிரியர் காட்டுவதை அவர்கள் கவனிப்பதில்லை.

அவள் கணவனைக் கண்டதையும் அவனோடு பேசியதையும் அரசனைக் கண்டு முறை கேட்பேன் என்றதையும் ஒரு பெரும் மக்கட் கூட்டம் பார்த்துக் கொண்டே அவளைப் பின் தொடர்ந்தது என்பதை இவ்வொரு சொல் விளக்குகிறது.

இவ்வாறு தன்னையும் வெட்டுண்டு கிடக்கும் தன் கணவனையும் சூழ்ந்து தெருவில் குழுமி நின்ற கம்பலை மாக்காளை (கம்பலை = ஒலி, ஆரவாரம்) நோக்கி,

பெண்டிரும் உண்டுகொல்
சான்றோரும் உண்டுகொல்
தெய்வமும் உண்டு கொல்
(19:48-52)

என்று வினவுகிறாள்.

"நீங்கள் பெண்கள் தானா?"
"நீங்கள் சான்றோர் தானா?" என்று கேட்கிறாள்.

இவ்வாறு மாலைக் கதிரவன் மறைந்த பொழுதிலிருந்து மறுநாள் காலை அரசவை கூடும் வரை அவள் மதுரை நகரின் வீதியைக் சுற்றிச் சுற்றி வருகிறாள். இதற்குள் அவளைப் பின் தொடர்ந்து பெருங்கூட்டம் கூடியிருக்க வேண்டும். இதுவரை கேள்வி கேட்பாரின்றி காட்டாட்சி நடத்திய அரசன், அவன் படையினர், காவலர், அவனை அண்டியிருந்த கொடியவர் ஆகியோரின் கொடுமைகளால் கொதிப்படைந்திருந்த அவன் கொட்டத்தை(கொற்றத்தை?) அடக்கவும் கேள்வி கேட்கவும் தங்களுக்குத் தலைமை தாங்க வந்த தெய்வமாகக் கண்ணகியை மக்கள் கண்டனர்.
மன்னவர் மன்னன் மதிக்குடை வாள்வேந்தன்

தென்னவன் கொற்றம் சிதைந்த திதுவென்கொல்....... (19:19-20)

செம்பொற் சிலம் பொன்று கையேந்தி நம்பொருட்டால்
வம்பப் பெருந் தெய்வம் வந்ததிது வென் கொல்..........
(19:23-24)

மன்பழி தூற்றும் குடியதே மாமதுரை....... (19:28)

என்பவற்றைக் காண்க.

அண்மையில் கேரள மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சி யொன்று நாளிதழ்களில் வந்தது. ஒரு தெருவில் மருத்துவர் ஒருவர் குடியிருந்தார். அவருக்கும் அத்தெருவில் குடியிருந்தோர்க்கும் நாட்பட்ட பிணக்குகள் இருந்து வந்தன. ஆனால் அவரை எதிர்க்க வழியின்றி இருந்தனர் அவர்கள். ஒரு நாள் மருத்துவர் வீட்டுக்கு சுமையுந்தில்(லாரியில்) செங்கல் வந்தது. எல்லோரிடமும் சச்சரவிடும் மருத்துவர் செங்கல் இறக்கும் தொழிலாளரோடும் சச்சரவு வளர்த்தார். விளைவு, மருத்துவர் வீட்டைத் தொழிலாளர்கள் தாக்கத் தொடங்கினர். இவ்வளவு நாளும் சினத்தை அடக்கி வைத்திருந்த தெருமக்களும் அவர்களுடன் சேர்ந்து மருத்துவர் வீட்டைத் தீவைத்துக் கொளுத்தித் தீர்த்தனர்.

இது தான் மதுரையில் நடந்தது. நெடுநாட்களாக அரசனும் அவனைச் சார்ந்தவர்களும் மக்களுக்கு இழைத்த தனித்தனிக் கொடுமைகளுக்குப் பழிவாங்கத் துடித்துக் கொண்டிருந்த மக்களை ஒன்றுதிரட்டும் கருவாக கண்ணகி செயற்பட்டாள். அந்த மக்களால் கொளுத்தப்பட்ட தீ தான் கண்ணகி மூட்டிய தீ.

இந்தக் கலகத்தை நடத்தியதில் ஏதாவதொரு குறிப்பிட்ட வகுப்பு ஈடுபட்டதாகக் காண முடியுமா என்று ஆய்ந்தால், காண முடியும் என்று தோன்றுகிறது.

நெடுஞ்செழியன் மாண்டதை அடுத்து கொற்கையிலிருந்த வெற்றிவேற் செழியன் மதுரைக்கு வந்து பொற்கொல்லர் ஆயிரவரை நங்கைக்கு(கண்ணகிக்கு)ப் பலி கொடுத்தான் என்று சிலம்பு கூறுகிறது. பொற்கொல்லன் சூழ்ச்சியால் கோவலன் கொலைப்பட்டான் என்பதால் தான் இது நிகழ்ந்திருக்குமென்று தோன்றவில்லை.

நகைத் தொழில் மதுரையில் மிகப் பெருந்தொழிலாயிருந்திருக்க வேண்டும்.

நுண்வினைக் கம்மியர் நூற்றுவர் பின்வர (16:106) வந்த பொற்கொல்லனிடம் நூற்றுவர்க்குக் குறையாத நுண்வினைக் கொல்லர்கள் பணியாற்றிருக்க வேண்டும். இன்று 5 பேருக்கு மேல் வேலைக்கு வைத்திருக்கும் நிறுவனங்கள் தொழிற் கட்டங்களுக்கு உட்படுகின்றன. நூறு பேருக்கு மேல் வைத்திருக்கும் இப்பொற்கொல்லன் ஒரு பெரும் தொழில் முதலாளியாகிறான். இத்தகைய ஒரு தொழில் முதலாளியுடன் மிக நெருக்கமான உறவு வைத்திருந்த மன்னன் தொழிலாளர் பகைவனாயிருப்பது தவிர்க்க முடியாதது. நகரில் இவனைப் போன்ற பல பொற்கொல்ல முதலாளிகள் இருந்திருக்க வேண்டும். நகரில் மட்டுமின்றி நாடு முழவதும் இவனன்றி இன்னும் பல பொற்கொல்ல முதலாளிகள் இருந்திருக்க வேண்டும்; ஏனெனில் தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் பொன் மாற்று அறிவதற்கென்றே ′பொன்வாரியங்கள்′ இருந்ததற்கான சான்றுகள் உள. இவ்வாறு மன்னன் மீது வெறுப்புக் கொண்டிருந்த பொற்கொல்லர்கள் ஒன்று திரண்டு மதுரைக் கலவரத்தை(அல்லது புரட்சியை) முன்னின்று நடத்தியிருக்கலாம். அது நாட்டுப் புறங்களிலும் பரவத் தொடங்கியிருக்கலாம். அக்கலகங்களுக்குத் தலைமை தாங்கியோரே இவ்வாயிரம் பொற்கொல்லாராயிருந்திருக்க வேண்டும்.

அடுத்து இந்நிகழ்ச்சியில் புலவர் சாத்தனாரின் பங்கு என்ன என்பதைப் பார்க்க வேண்டும். சாத்தனார் மதுரைப் புரட்சியின் இயக்கு தலைவராயிருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அவருக்கு சேர அரசு குடும்பத்துடன் நெருங்கிய உறவு இருப்பது போல் தோன்றினாலும் மணிமேகலை காட்டுகிறபடி பொதுவாக அரசகுலத்தின் மீது வெறுப்பு இருப்பது தெரிகிறது.

சிலப்பதிகாரக் காலத்தில் பாண்டிய நாடு சேரனுக்கு உட்பட்டிருந்தது.

தென் னரிட்ட திறை யொடு கொணர்ந்து..... (26:169)

எனவே தன் ஆளுமைக்குட்பட்ட நாட்டில் கலக மேற்பட்டால் அதை அடக்க வேண்டியது சேரனின் கடமையும் தேவையுமாகிறது. அந்த நோக்கத்துடனேயே பெரியாற்றின் கரை மீது செங்குட்டுவன் பாடியிறங்குகிறான். அவனுக்கு கண்ணகி வரலாறு தெரிந்திருக்கவில்லை. கண்ணகி வந்து வானுலகெய்திய செய்தியை வேட்டுவர் கூறிய பிறகு தான் அவன் கண்ணகியைப் பற்றி அறிகிறான். அவள் மதுரைக்கு எரியூட்டியதைச் சாத்தனார் மூலமே அறிகிறான்.

கதையின் படி, மதுரை எரிந்த பதினான்காம் நாள் கண்ணகி இறக்கிறாள். அதுவரை மதுரையில் நடந்தது, அதாவது மதுரை எரிந்தது செங்குட்டுவனுக்குத் தெரியாதிருக்க முடியாது.

நாவலந் தண்பொழில் நண்ணார் ஒற்று நம்
காவல் வஞ்சிக் கடை முகம் பிரியா........
(25:173-174)

என்றவாறு ஒற்றர் மூலம் அச்செய்தி அவனுக்கு உடனே கிடைத்திருக்க வேண்டும். கண்ணகி முலைமுகத் தெழுந்த தீ தான் மதுரையை எரித்தது என்பதை சாத்தனார் மூலமே அவன் அறிய முடிந்த தென்றால், மக்களால் தான் மதுரை எரியுண்டது என்றே அவன் அதற்கு முன்பு அறிந்திருக்க வேண்டும். (கண்ணகி பற்றி ஒற்றர்கள் கூறவில்லை யென்றால், கண்ணகி பற்றிய நிகழ்ச்சி அல்லது அவளேற்ற பங்கு அவ்வளவு முகாமையில்லாத ஒன்றாக இருந்திருக்க வேண்டும். சாத்தனாரே அவளைப் பெரிதுபடுத்தியிருக்க வேண்டும்.) அந்தக் கலகத்தைக் தேவைப்பட்டால் அடக்கலாம் என்ற நோக்கத்துடனேயே பாண்டிய நாட்டெல்லை யருகில் அவன் பாடி யிறங்கியிருக்க வேண்டும். இவ்வாறு பாண்டிய நாட்டு எல்லை நோக்கி செங்குட்டுவன் வருவதையறிந்து தான் போலும் சாத்தனார் அவனருகில் சென்று சேர்ந்திருக்கிறார். அவன் பாண்டிய நாட்டினுள் நுழைந்து புரட்சியில் ஈடுபட்டவர்களை அழித்து விடுவதைத் தவிர்க்க இதைச் செய்திருக்கலாம். வேட்டுவர்கள் கண்ணகியைப் பற்றிய சேதியைச் சொன்ன நேரம் பார்த்து பழம் வினை குறித்த தன் புனைகதையை எடுத்துவிடுகிறார், அதாவது மதுரையில் நடந்தது மக்கள் எழுச்சியல்ல, ஒரு பத்தினிப் பெண் நிகழ்த்திய இறும்பூதே(அற்பதம்) அது என்று. அதனால் தான் 'யாதவர் வினையென' என்ற பதிகத்தின் கேள்வி மூலம் அப்புனைகதையின் மறையத்தை இளங்கோவடிகள் வெளிப்படுத்துகிறார்.

இக்கதையைக் கேட்ட செங்குட்டவன் ஒன்றேல் மதுரையில் கலகமொன்றும் நிகழவில்லை, ஒரு பத்தினிப் பெண்ணின் தெய்வ ஆற்றலே மன்னவனைக் கொன்று மதுரையை அழித்தது என்று நம்பியிருக்க வேண்டும்; அன்றேல், மதுரையில் நடந்தவாறு, அதாவது மக்கள் மன்னனையும் அரசியையும் கொன்று நகரத்தைத் தீக்கிரையாக்கியது போன்ற போக்குகள் தன்னாட்டுக்கும் பரவாமல் தடுக்க இக்கதை உதவுமென்று கருதியிருக்க வேண்டும். முதலில் கூறியது போல் செங்குட்டுவன் நம்பியிருந்தால் பத்தினித் தெய்வத்துக்குப் படிமம் எடுப்பதன் மூலம் மக்களின் பரிவைப் பெறவோ, நம்பவில்லையாயின் மக்களின் கவனத்தைக் திருப்பவோ இமயத்தை நோக்கிப் படையெடுத்துச் சென்றிருக்க வேண்டும். இவ்வாறு, இங்கு தான் மதுரை நிகழ்ச்சியின் அலுவலகக் கூற்று(Official Version) உருவாகியிருக்க வேண்டும்.

ஒரு கேள்வி எஞ்சி நிற்கிறது. சிலப்பதிகாரம் கூறுவது போல் கண்ணகி தானே தனது இடது முலையைத் திருகி எறிந்தாளா, அல்லது அவளது முலை அறுக்கப்பட்டதா என்பதே அது. சிலம்பு பற்றி சிலப்பதிகாரம் என்ற பெயர் பெற்ற நூல் இறுதியில் முலைப்பூசல் பற்றி அடிக்கடி கூறுகிறது. ஒருவேளை முறைகேட்க மன்னனிடம் கண்ணகி சென்ற போது அவன் ஆட்களால் கண்ணகியின் முலை அறுக்கப்பட்டு அதனால் தான் மக்கள் அரசனையும் அரசியையும் கொன்று நகரத்தையும் அழிக்கு மளவுக்குக் கடுஞ்சினங் கொள்ள உடனடிக் காரண மானதோ என்று கருதத் தோன்றுகிறது.

இறுதியாக, இவ்வாறு புறத்தே ஒரு கதையும் அகத்தே ஒரு கதையும் வைத்து எழுதிய இங்கோவடிகள் யார் என்ற கேள்விக்கு நாம் விடை காண வேண்டியுள்ளது. நாம் மேலே அணுகியுள்ள முறை சரியாக இருந்தால் ஒரு விடையும் காண முடியும் போல் தோன்றுகிறது.

சிலப்பதிகாரக் காலம், தமிழகம் பலவிதக் குழப்பங்கள் மலிந்த காலம், மூவேந்தரும் கட்டற்ற முடியாட்சியைத் தழுவிய காலம் என்று மேலே கூறினோம். அதுவரை அரசியல் செல்வாக்குப் பெற்றிருந்த வேளாண் குடியினரும் வாணிகரும் புறக்கணிக்கப்பட்டனர். அவர்களின் இடத்தை, அரசனைப் புகழ்ந்தும் ஏத்தியும் ஒட்டுண்ணிப் பார்ப்பனர் பிடித்தனர். பிரம தேயங்களை முற்றூட்டாகப் பெற்றனர், வேள்வி வளர்த்துப் பெருஞ்செல்வம் ஈட்டினர். மனங்கசந்த வாணிகர்கள் வடக்கிலிருந்து வந்த சமணத்தைச் தழுவினர்.

தமிழக் மூவேந்தரும் கி.மு. நான்காம், மூன்றாம் நூற்றாண்டுகளில்[1] தமக்குள் ஒரு கூட்டணியை ஏற்படுத்தி வைத்து அண்டை அரசுகளின் தாக்குதல்களிலிருந்து தம்மைக் காத்துக் கொண்டதாகவும் அக்கூட்டணியைத் தான் உடைத்ததாகவும் கலிங்க மன்னன் காரவேலன் பொறித்து வைத்திருக்கிறான். கலிங்க நாட்டில் அப்போது சமணம் அரச மதமாயிருந்தது.

ஏற்கனவே துவக்கத்தில் நாம் கூறிய விருந்தில் மன்னர் இவ்வாறு வெளியே இருந்து வந்த சமணத்தைத் தழுவியவரும் காஞ்சியில் ஆட்சி செய்தவருமான திரையர்களாயிருக்கலாம். இவர்களே பின்னர் வடமொழி தழுவி தங்கள் பெயரைப் பல்லவர் என்றாக்கிக் கொண்டார். (பல்லவம்-திரை-கடல் அலை) வரிச் சுமையால் நொந்து போயிருந்த கறை கெழு மாக்களும் சமணர்களுமாகிய வணிகர்களிடையில் உள்ள அறை போகு குடிகளை(காட்டிக் கொடுப்போரை)ப் பயன்படுத்தி இப்படையெடுப்பு நடைபெற்றதால் சமணர்கள் தமிழக அரசர்க்கு வேண்டாதாராயினர்.

இதனாலேயே கவுந்தியடிகளும் புகாருக்கு வெளியே தோன்றி மதுரைக்கு வெளியிலேயே நின்று விடுகிறார். பார்ப்பனரும் எயினரும் ஆயரும் வேடரும் மன்னன் வாழ்க எனக் கூறினும் கவந்தியும் கோவலனும் ஒரு போதும் மன்னனை வாழ்த்தவில்லை. இவ்வாறு சமணர்கள் அரசர்க்குப் பகையாயிருந்தாலும் மக்களிடத்தில் செல்வாக்குப் பெற்றிருந்தனர். ஆயர் முதுமகள் மாதரி காவுந்தியைக் கண்டடி தொழலும் அவர் அடைக்கலமாகத் தந்த கோவலன்-கண்ணகியைப் போற்றிப் புரந்ததும் அவர்கள் மாண்டதறிந்து தான் உயிர் விட்டதும் இதற்குச் சான்றாகின்றன.

சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின்......... (16:28)

என்று மாதரி கோவலனை மதித்துக் கூறுகிறாள். (மக்கள் மீது சமணத்துக்கு இருந்த இந்த செல்வாக்கு 7-ஆம் நூற்றாண்டில் 8000 சமணர்களைச் சம்பந்தர் கொலை செய்த கொடுமைக்குப் பின்னரும் நெடுநாள் நிலைத்து நின்றது குறிப்பிடத்தக்கது).

கோவலன் சமணனாயிருந்ததே அவன் சாவுக்குக் காரணமாகியதோ என எண்ணத் தோன்றுகிறது. சமணர்களைப் பகைவன் ஒற்றர்களாகத் தமிழ் மன்னர்கள் கருதிய காலமது. (கல்கியின் சிவகாமியின் சபதமும் இத்தகைய கருத்தைக் கொண்டுள்ளது இங்கு கருதிப் பார்க்கத் தக்கது.) கோவலனை ஒற்றன் என்று கருதியதாலேயே அவனை மூதலிப்பு (உசாவல்) இன்றிக் கொல்ல பாண்டியன் ஆணையிட்டிருக்க வேண்டும்.

கோவலனின் முற்பிறப்புச் செய்தியில் வரும் நீலியின் கணவன் சங்கமன் என்ற வாணிகன் ஒற்றன் என்றே கொலைப்பட்டான் என்ற சேதியும் ஒப்பு நோக்கத்தக்கது. இதை மறைமுகமாக கோவலன் பற்றிய தன் பழம் பிறப்புக் கதையில் சாத்தனார் வெளியிட்டார் போலும். முற்பிறப்பில் பரதானாயிருத்த கோவலன் சமணத்தை வெறுப்பவனாயிருந்ததால் அவன் சமணனாகிய சங்கமனை ஒற்றனாகப் பிடித்தான் என்கிறது சிலப்பதிகாரம்

விரத நீங்கிய வெறுப்பின (ன்) ஆதலின்
ஒற்றன் இவனெனப் பற்றினன்.......
23: 155-156

இவ்வாறு சோழ நாடு அரசுரிமைப் போராலும் பாண்டிய நாடு மக்களின் கசப்பாலும் வெளிநாட்டாரின் படையெடுப்புகளுக்கு ஆட்படும் நிலையிலிருந்த வேளையில் சேர நாட்டில் இளங்கோ வாழ்ந்தார். அவர் தமிழகத்தி நிகழ்பவற்றை நன்கு எடைபோட்டு வைத்திருந்தார். இலக்கியம், கலைகள் போன்றவற்றில் தேர்ச்சி பெற்றிருந்தது போன்றே அரசியலிலும் தேர்ச்சிப் பெற்றிருந்தார். மூவேந்தர் ஒற்றுமையுடன் மக்களின் ஒற்றுமையும், மன்னர்களோடு அவர்களின் ஒத்துழைப்பும் தான் தமிழகத்தை உயர்த்த முடியும் என்பதை உணர்ந்திருந்தார். பொதுமக்கள் மீதும் அவர்களின் பண்பாடு மீதும் ஆழ்ந்த பற்று வைத்திருந்தார். எனவே தான் தன் நூலில் சங்க இலக்கியங்களின் தொகுப்பினுள் சேர்க்கப்படாமல் புறக்கணிக்கப்பட்ட மக்கள் இலக்கியங்களான கானல்வரி, வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரவை, அம்மானை, கந்துக வரி, ஊசல் வரி, வள்ளைப் பாட்டு முதலியவற்றைப் பெய்து வைத்துள்ளார். இவ்வாறு மக்கள் கலைகளை அறிந்து கொண்ட அவருக்கு எளிய மக்களோடு நெருங்கிய தொடர்பிருந்திருக்க வேண்டும்; மக்கள் மீது மிகுந்த செல்வாக்கிருந்திருக்க வேண்டும். அவர் தங்கள் மன்னராக வேண்டுமென்று மக்களில் பலர் விரும்பியுமிருக்கலாம். இத்தகைய அவரது செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டு சேர மண்ணில் அரசுரிமைப் போரைத் தூண்டும் முயற்சியே, நிமித்திகள், இளங்கோவடிகளே அரசராவார் என்று கூறிய நிகழ்ச்சியாக இருக்க வேண்டும் பகைநாட்டு அரசுகளை வீழ்ந்த இத்தகைய உத்திகளை அர்த்தசாத்திரம் பரிந்துரைக்கிறது. அரசியலில் தெளிவும் தமிழர் நலத்தில் நாட்டமும் கொண்ட இளங்கோவடிகள் உரிய முறையில் நிமித்திகள் சூழ்ச்சியை முறியடித்ததையே அவரது துறவு குறிப்பிடுகிறது. ஆனால் அவரது ஈகம் தமிழகத்தில் அவர் விரும்பிய பலனைத் தரவில்லை என்றே வரலாறு காட்டுகிறது. குறுகிய காலத்தினுள் மூவேந்தர் ஆட்சியும் அழிந்து களப்பிரர் ஆட்சி தோன்றியது.

இவ்வாறு அரசகுலத்தில் தோன்றியதும் கதை நிகழ்ந்த காலத்திலேயே வாழ்ந்ததுமே நடந்தவற்றை அப்படியே கூற முடியாமல் இளங்கோவடிகளைத் தடுத்திருக்க வேண்டும். தம் போன்ற அரச குலத்தினரின் தவறுகளை வெட்ட வெளிச்சமாக எடுத்துரைக்கத் தயங்கியதாலேயே பாண்டியன் ஆட்சியை ′வளையாத செங்கோல்′ என்று பலமுறை கூறுகிறார். இது சேக்சுபியரின் சூலியசு சீசர் நாடகத்தில் அந்தோனி ′But Brutus is an honourable man′ என்று பலமுறை கூறுவதை ஒத்தது. இருப்பினும் பாண்டியன் ′கோல் வளைந்தது′ என்றும் கூறுகிறார். இருந்தாலும் உலகுக்குக் கூறப்பட்ட மதுரை நிகழ்ச்சிகளுக்குள் கூறப்படாத ஒரு வரலாறும் இருக்கிறதென்று காட்ட தாமே சிலப்பதிகாரம் எழுதத் துணிந்தார் எனலாம். ஆனால் மக்கள் அரசனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்வதை அவர் விரும்பினார் என்று கூற முடியாது. ′அரைசியல் பிழைத்தார்க்கு அறம் கூற்றாகும்′ என்று ஆட்சியிலிருப்போர்க்கு எச்சரிப்பதே போதுமென்று கருதினார். (அறம் என்ற சொல்லுக்கு சமுதாய நீதி, அதாவது மக்களின் கூட்டு விருப்பம் என்றும் ஒரு பொருள் உண்டு) மொத்தத்தில் இளங்கோவடிகள் ஒரு குடியாட்சி முடியரசியரே (Democratic Monarchist)

அரசர்களின் சிறப்புரிமைகள், அதிகாரங்கள் பற்றிய கேள்விகள் அக்கால கட்டத்தில் எழுந்திருக்கலாமென்று ஐயுறத்தக்க தடையமொன்று சிலம்பில் உண்டு. சாத்தனார் மூலம் மதுரையில் நடந்ததை அறிந்த செங்குட்டுவன்

மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல்
துன்ப மல்லது தொழுதக வில்லென ...
(25: 203-204)

என்று கூறுவதைக் காணலாம்.

இளங்கோவடிகள், வேதவியாசர், வால்மீகி போன்று தான் கதையில் தோன்றும் உத்தியைக் கையாண்டுள்ளார் என்று கூறவது பொருந்தாது. எடுத்துக்காட்டாக வேதவியாசர் மகாபாரதத்தில் தவிர்க்க முடியாத பங்கேற்றுள்ளார். பாண்டவர் மற்றும் கவுரவர்களின் தந்தையர்க்கு அவர் தான் தந்தை. கவுரவர்களின் தாயின் கருச்சிதைவுற்ற போது அதை 100 பாண்டங்களில் திரட்டி குழந்தைகளாக்கியது அவரே. இவ்வாறு வியாசரில்லை யென்றால் மகாபாரதக் கதையே இல்லை. ஆனால் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளுக்கு அத்தகைய தொடர்பு எதுவுமில்லை. அவர் வாழ்க்கையின் ஒரு முகாமையான நிகழ்ச்சி கதையில் வெளிப்படுகிறது; அது கதையில் இடம் பெறாவிடினும் கதைக்கு எந்தப் பாதிப்பும் மாற்றமும் நேராது. சில நிகழ்ச்சிகளுக்குத் தானே சான்றாகும் விளைவு தான் சிலப்பதிகாரத்தில் ஆசிரியர் ஏற்றுள்ள பங்குக்கு உண்டு.

இவ்வாறு சிலப்பதிகாரம் தமிழகத்தில் மிக முகாமையான ஒரு வரலாற்றுக் கட்டத்தைக் காட்டுகிறது. மன்னர்கள் கட்டற்ற முடியாட்சியராக மாறிவருகிறார்கள். பார்ப்பனர்கள் அரசர்களின் துணையுடன் வருண முறையைப் புகுத்தப் பார்க்கிறார்கள். விளைப்புக் கருவிகளை உடைமைகளாகப் பெற்றிருந்த வேளாளருக்கும் விளைப்பு ஆற்றலைக் கொண்டிருந்த உழைப்போருக்கும் பண்டங்களின் பங்கீட்டைக் கையாண்ட வாணிகருக்கும் குமுகாயத்திலிருந்த இடம் மறுக்கப்பட்டு கீழே தள்ளப்படுகின்றனர். விளைப்புப் பாங்குடன்(Mode of production) எவ்வித உறவு மில்லாத ஒட்டுண்ணிகளான அரசும், மதமும் தலைமைதாங்க முயன்றன. விளைப்பு விசைகளுக்கும்(Productive forces) விளைப்பு உறவுகளுக்கும்(Productive Relations) இடையில் போராட்டம் நிகழ்ந்து சமுதாயம் முன்னேறிச் செல்வதற்குப் பகரம் பொருட்டுறை அடித்தளத்துக்கும் மேற்கட்டுமானத்துக்கும் இடையில் முரண்பாடு தோன்றியது. வகுப்புகளாகப் பிளவுண்டிருந்த மக்கள் வருணங்களாகப் பிளவுறுவதை ஏற்கவில்லை; இதற்கு ஆணித்தரமான சான்றைச் சிலப்பதிகாரம் கொண்டுள்ளது.

கண்ணகியை அடைக்கலமாகப் பெற்ற இடைக்குல முதுமகள் தன் மகள் ஐயையை நாத்தூண் நங்கை (16:19) அதாவது கண்ணகியின் நாத்தனார் என்று கூறுகிறாள்.

இன்னும் வாழ்த்துக் காதையில் ஐயையை மாமி மடமகள் (8) என்றும் கூறுகிறாள்.

மேலும் பார்ப்பன மங்கை தேவந்தியும், காவற்பெண்டு, அடித்தோழி ஆகிய உரிமைச் சுற்றத்தாரும்(அடிமையரும்) வேறுபாடின்றி கண்ணகியைத் தோழி என்றே அழைக்கின்றனர். பொருட்டுறை வேறுபாடு குமுகியலியல் வேறுபாட்டை ஏற்படுத்தாத ஒரு நிலையையே இது காட்டுகிறது.

அதே வேளையில் பார்ப்பனரும் அரசரும் சேர்ந்து வருணத்தைப் புகுத்தினர். வெவ்வேறு வருணத்தார்க்கு வெவ்வேறு வீதிகள் வகுத்தனர். இத்தெருக்களை அடையாளந் தெரிந்து கொள்ள அமைக்கப்பட்ட படிமங்களைத் தான் வருணப் பூதங்களென்று குறிப்பிட்டார் போலும். இத்தெருக்களையும் அவற்றின் அடையாளங்களையும் புரட்சியாளர்கள் அழித்ததைத் தான்,

நாற் பாற் பூதமும் பாற் பாற் பெயர
......................................................
பால் வேறு தெரிந்த நால் வேறு தெருவும்
உரக் குரங்கு உயர்ந்த ஒண்சிலை உரவோன்
கா வெரியூட்டிய நாள் போற் கலங்க.......
(22:108-112)

இவ்வாறு தனித்துக் குறிப்பிட்டுக் கூறுகிறார் ஆசிரியர்.

பார்ப்பாரறவோர் பசுப் பத்தினிப் பெண்டிர்
மூத்தோர் குழவி யெனு மிவரைக் கைவிட்டுத்
தீத்திறத்தார் பக்கமே சேர் கென்று ......
(21:53-55)

கண்ணகி கூறியதாகக் கதை கூறுகிறது. ஆனால் பார்ப்பனர் உள்ளிட்ட நால்வேறு தெருவும் கலங்குவதாகவும் கூறுகிறது.

இனி அழல் 'தீத்திறத்தார்' யார் யாரைச் சேர்கிறது என்று பார்ப்போம்.

1) கோமகன் கோயில் - அரண்மனை (22:14)

2) (பார்ப்பனர் உள்ளிட) வருண முறையை ஏற்றுக்கொண்டோர் வாழும் தெருக்கள் (22:110:112)

3) மறவோர் சேரி - போர் வீரர்களின் சேரி (22:114)

4) யானை, குதிரைக் கொட்டில்கள் (22: 117-118)

5) கணிகையர் ஆடரங்கு (22:142)

6) கூல மறுகு (22:109)

7) கொடித் தேர் விதி. (22:109)

இவ்வாறு மேற்கூறிய இடங்களிலுள்ள பெண்கள் குழந்தைகள், விலங்குகள், முதியோர் நீங்கலான ஆடவர் தீயால், அதாவது புரட்சியால் தாக்குண்டனர், அதாவது அரண்மணை, நால் வருணத் தெருக்கள், படைமறவர், சேரி, யானை குதிரைக் கொட்டில்கள், கணிகையரின் ஆடரங்குகள் தாக்கி அழிக்கப்படுகின்றன. அரசனும், வருணமேந்திகளும் அவர்களின் இன்ப நுகர்ச்சிக்களமாகிய கணிகையர் வீதிகளுமே அதிகத் தாக்குதலுக்குள்ளாகின்றன. உண்மையில், பெருமனைக் கிழத்தியர், குடும்பப் பெண்கள், மகிழ்கின்றனர். (22:133).

இவ்வாறு மன்னனின் கட்டற்ற ஆட்சியையும் வருணமுறைப் புகுத்தலையும் எதிர்த்து மக்கள் நிகழ்த்திய(பூர்சுவாப் புரட்சி) புரட்சி முறியடிக்கப்பட்டது. பின்னோக்கித் திரும்பிய தமிழக வரலாற்றைத் தடுத்து நிறுத்த மக்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது. அன்றிலிருந்து ஏறக்குறைய 17 நூற்றாண்டுகளுக்கான தமிழக வரலாற்றில் இந்த பின்னோக்கிய ஓட்டம் நிற்கவில்லை என்பது வரலாறு விரிவாகக் கூறுகிறது. இந்தத் துயர வரலாற்றுத் திருப்புமுனையைக் காட்டும் எல்லைக்கல்லாக சிலப்பதிகாரம் நிற்கிறது.

அடிக்குறிப்பு:

[1] அண்மையில் வெளியான் ஒரு செய்தியின்படி இந்தக் கூட்டணி கி.மு. பதினைந்தாம் நூற்றாண்டில் ஏற்பட்டது எனத் தெரியவந்துள்ளது. பார்க்க: அந்த 1300 ஆண்டுகள் (கி.மு. 1465 - 165) ,மா. கந்தசாமி. கட்டுரை, கணையாழி, பிப்ரவரி, 2005, பக். 41-45

கருத்துகள் இல்லை: