11/06/2012

' தானே கள்வன் ' - கி.வா.ஜகந்நாதன்

சல சலவென்று ஓடும் நீர். அதன் கரையிலே அவனும் அவளும் காதல் பூண்டார்கள். அங்கே ஒரு வரும் இல்லாத தனிமையிலே அவ்விருவரும் இருந்தனர். ஆயினும் அவளுக்கு எல்லாம் நிரம்பி யிருந்தது போலத் தோன்றியது. இன்றோ, அவள் தன் வீட்டில் தன் தாய் தந்தையரும் சுற்றத்தாரும் தோழியரும் சூழ இருக்கின்றாள். ஆனால் அவளுக்கு எல்லாம் சூன்யமாக இருக்கின்றது.

அவன் அவளைப் பிரிந்தான். 'சிலநாளே இந்தப் பிரிவு; விரைவில் வந்து உன்னை மணப்பேன். அது வரையிலும் பொருத்திரு' என்று அவன் உறுதி மொழி கூறிப் பிரிந்தான். அவள் அவனை நம்பினாள். உளமறியக் காதல் புரிந்தவன் மீண்டுவந்து உலகறிய மணம் புரிவானென்று ஆர்வத்தோடு காத்திருந்தாள்.

காதலின்ப நினைவிலும் காதலனை எதிர்பார்க்கும் ஆர்வத்திலும் காலத்தைக் கழித்துக்கொண்டிருந்தாள். ஒரு கணம் போவது ஒரு யுகமாகத் தோற்றியது. பிரிவுத் துன்பத்தைப் பொறுத்திருந்தாள். அந்தத் துன்ப முடிவிலே இணையற்ற இன்பம் இருக்கிறதென்ற நினைவு அதனைப் பொறுக்கும் மன வலியைத் தந்தது.

அவன் வரவில்லை. அவள் உள்ளத்தே சிறிது பயம் முளைக்கத் தொடங்கியது. ஆனாலும் அன்பு அதை மறைத்தது. அவளுடைய உயிர்த்தோழி அவளைத் தினமும் ஆயிரம் கேள்விகள் கேட்கிறாள். அவள் மேனியிலே வாட்டம் தோற்றுகின்றது. தோழி அது கண்டு, "ஏன் இப்படி வாடுகிறாய்?" என்று வினவு கிறாள். தன் உள்ளம்போலப் பழகும் அத்தோழிக்கு அந்தக் காதலி தனக்கு ஒரு காதலன் வாய்த்ததைச் சொல்லுகிறாள்.

அவன் தன் உள்ளத்தைக் கொள்ளை கொண்டதும், இன்னுரை பேசித் தலையளி செய்ததும், அள வளாவியதும், 'பிரியேன், பிரிந்தால் உயிர் விடுவேன்' என்று சொல்லியதும், பிரிந்து வருவேனென்று உறுதி மொழி கூறியதும் - எல்லாம் சொல்கிறாள்.

எல்லாவற்றையும் கேட்ட பிறகு தோழி காதலிக்கு அச்சத்தை உண்டாக்குகிறாள்.

தோழி: நீ காதல் புரிந்த கதை நன்றாயிருக்கிறது! அவர் சூளுறவு கூறி உன்னையே மணப்பதாகச் சொன்னார் என்றாய். அதற்குச் சாட்சியாக யார் இருந்தார்கள்?

காதலி நினைத்துப் பார்க்கிறாள். இதற்கு முன்பு பழைய நினைவு வரும்போதெல்லாம் அந்தக் காதலனும் அவன் பேசிய பேச்சும் இன்பமும் வந்து மனத்தில் நிரம்பும். இப்பொழுது அவனை விலக்கி அந்த இடத்தை நினைந்து பார்க்கிறாள். அவனைத் தவிர அங்கே யார் இருந்தார்கள்? தனிமைதான். அந்தத் தனிமை அன்று இனித்தது. இன்றோ அதை நினைக்கையிலேயே உள்ளம் நடுங்குகிறது. தோழிக்கு விடை சொல்கிறாள்.

காதலி: யாரும் இல்லை.

தோழி: அப்படியா? ஒருவரும் இல்லையா? நன்றாக யோசித்துப் பார். பலர் முன்னிலையில் நாயகனைக் கைப் பிடிப்பதல்லவா திருமணம்? நீ காதல் மணம் செய்து கொண்ட அப்பொழுது ஒருவரும் இல்லையா?

காதலி சிந்தனாலோகத்திலே இருக்கிறாள். அங்கே தேடித் தேடிப் பார்க்கிறாள். ஒரு பூதரும் இல்லை. உண்மையில் இல்லையா? அவன் இருந்தான். அவன் ஒருவனே இருந்தான்.

காதலி: தானே.

தோழி: அவர் ஒருவர்தாம் இருந்தாரா? யாரும் இல்லாத இடத்தில் உன் நலத்தை வெளவிய அவரை நம்பியா நீ உருகுகிறாய்? ஒருவரும் காணாமல் ஒரு பொருளை வெளவுபவன் கள்வன் அல்லவா?

இந்த வார்த்தை காதலியின் உள்ளதே தைக்கிறது. அவன் தன் உள்ளம் கவர் கள்வன் என்பதை அவள் நன்றாக உணர்ந்திருக்கிறாள். தோழி சொல்வதிலும் உண்மை இருக்கிறது. பெருமூச்சு விடுகிறாள்; அந்த மூச்சோடு வருகிறது அந்த வார்த்தை.

காதலி: கள்வன்!

தோழி: மறைவிடத்திலே காதல் புரிந்த கள்வன் வார்த்தையிலே நம்பிக்கை வைக்கலாமா? அவர் அது கூறினார், இது கூறினாரென்று அவற்றை உண்மையாகக் கொள்ளலாமா? அவர் அந்த வார்த்தைகளைப் பொய்யாக்கி விட்டால் நீ என்ன செய்வாய்?

இந்தக் கேள்வியை இதுவரையில் காதலி எண் ணிப் பார்க்கவில்லை. அவர் பொய் கூறுவாரென்று எண்ணுமளவு அவள் மனம் மாசுபடவில்லை. இப் பொழுதோ தோழியின் வார்த்தைகள் அவள் நெஞ் சைக் கலக்குகின்றன. அவர் தாம் கூறிய வார்த்தை பொய்த்தால் அவள் என்ன செய்ய முடியும்? அவள் தன் நெஞ்சையே கேட்டுக் கொள்கிறாள்:

காதலி: தான் அது பொய்ப்பின் யான் எவன் செய்கோ! (காதலர் அந்த உறுதி மொழியினின்றும் தப்பினால் நான் என்ன செய்வேன்!)

திருப்பித் திருப்பி இந்தக் கேள்வியை அவள் கேட்டுக் கொள்கிறாள். அவன் மொழி தவறான் கருத்திலே நின்றது அவள் வாழ்வின் இன்ப மாளிகை. அப்போது சிறிதும் சந்தேக எண்ணமே இல்லாமல் வேதவாக்காக நம்பினவலது உள்ளத்தில் இப்போது ஐயவுணர்ச்சி புகுந்து நெகிழச் செய்கின்றது.

தோழி: ஐயோ! பைத்தியமே! ஒருவரும் இல்லாத தனிமையிலே யாரோ ஒருவர் கூறிய வார்த்தைகளை உண்மையென்று நம்பிவிட்டாயே. நன்றாக யோசித்துப் பார்: அவர் உன்னோடு காதல் புரிந்தபொழுது சாட்சி ஒருவரும் இல்லையா?

காதலி என்ன செய்வாள்! எல்லாவற்றையும் மறந்து அவன் பேச்சிலே செயலிலே ஒன்றிப்போன அக்காலத்தில் மற்றவற்றைப் பார்க்க அவளுக்குக் கண் ஏது? தோழி, மேலும் மேலும் கேட்கும் கேள்விகளால் அந்தப் பேதைப் பெண் தன் உள்ளத்திலே பழைய காட்சியை நிறுத்திப் பார்க்கிறாள். நிலைக்களமே இல்லாத சித்திரம்போல அவன் உருவம் ஒன்றே அவளுக்குத் தோன்றுகிறது. அவனை மறக்கப் பார்க்கிறாள்; சாட்சியை உள்ளக் கண்ணால் தேடிப் பார்க்கிறாள். சோர்வு உண்டாகின்றதேயன்றிப் பயன் இல்லை.

இதோ, மின்னல்போல ஒரு நினைவு வருகிறது. "ஒரு சாட்சி உண்டு" என்று துள்ளுகிறாள்.

தோழி: யோசித்துச் சொல்.

அவள் கண்ணுக்கு, அந்தத் தனிமையிலே அருவி யோரத்திலே நின்ற நாரை காட்சி அளிக்கிறது.

காதலி: குருகும் உண்டு தான் மணந்த ஞான்றே. (அவர் காதல்புரிந்த காலத்தில் ஒரு நாரை யும் இருந்ததுண்டு.)

தோழி சிரிக்கிறாள். நாரையைப் பெரிய சாட்சியாகச் சொல்ல வந்துவிட்டாளே என்ற நினைவு அவ ளுக்கு. தனிமை தவழ் மோனவுலகத்திலே அந்த நாரை ஒன்றாவது அகப்பட்டது எவ்வளவு பெரிய காரியமென்பது காதலியின் எண்ணம்.

தோழி: நாரையா? நன்றாக யோசித்துச் சொல். உண்மையிலே நாரை இருந்ததா?

அக்கினி ஓர் இடத்தைப் பற்றிக்கொண்டால் அதனை முற்றும் கவர்ந்துகொள்வது போல, சாட்சியைத் தேடித் திரிந்த காதலியின் உள்ளம் நாரையைப் பற்றிக்கொண்டது. அதை விடாமல் பற்றிக்கொள் கிறாள். அவளது சிந்தனை யரங்கிலே இதுவரையில் காதலன் நின்றான். இப்பொழுது நாரை வந்து நிற்கிறது. காதலன் மறைகிறான்.

அந்த நாரையை அடிமுதல் முடிவரையில் பார்க்கிறாள். அது தன் ஒற்றைக் காலிலே நிற்கிறது. அந்தக் காலும் அதன் பாதமும் அவளுக்குத் தினையின் தாளை நினைப்பூட்டுகின்றன. பூமிக்கு மேலே புடைத்துத் தோன்றும் நான்கைந்து பச்சை வேரும் அவற்றின்மேலே நிற்கும் தினைப்பயிரின் தண்டும் நாரையின் ஒற்றைக்காலோடு சேர்ந்து நினைவுக்கு வருகின்றன. மேலே உள்ள நாரையின் உடம்பைப் பார்க்காமல் அதன் காலை மாத்திரம் பார்த்தால் நிச்சய மாகத் தினைத்தாளென்று நினைக்கும்படி நேரும்.

அவள் சிந்தனை, நாரையைப் பாதாதிகேசமாக அளந்துகொண்டிருக்கையில் தோழி மறுபடியும் கேட்பது காதிற் படுகிறது.

தோழி: அது நாரைதானா?

'அதில் என்ன சந்தேகம்? தினைத் தண்டுபோல இருக்கும் பசுங்காலையுடைய அதை நான் மறப்பேனா' என்று எண்ணினாள் காதலி. அவள் சொல்லுகிறாள்:

காதலி: தினைத்தாள் அன்ன சிறு பசுங்கால குருகு (தினையின் தண்டுபோன்ற சிறிய பசிய காலை யுடைய நாரைதான்.)

தோழி விட்டபாடில்லை.

தோழி: நாரையா சாட்சி? மிகவும் வேடிக்கை தான்! அது என்ன செய்துகொண்டிருந்தது? மறந்துபோனதை நினைவுக்குக் கொண்டுவருவது எவ்வளவு சிரமம்? நினைவில் இருப்பதை மறப்பது பின்னும் எவ்வளவு கஷ்டம்? காதலனை மறந்து நாரையை நினைத்தாள். 'அது எப்படி இருந்தது? என்ன செய்தது?' என்றெல்லாம் கேள்வி கேட்டுத் திண்டு மிண்டாடச் செய்கிறாள் தோழி. அந்தப் பேதை நங்கை மறுபடியும் நாரைத் தியானத்திலே ஆழ்கிறாள்.

நாரை ஒற்றைக் காலிலே நின்றுகொண்டிருக் கிறது. தவம்புரியும் யோகியைப்போல ஒரே நோக்கத் தோடு, ஓடுகின்ற அருவியின் கரையிலே நிற்கிறது. அது எதற்காக நிற்கிறது? 'அருவியிலே ஆரல் மீன் வருமா?' என்ற ஒரே நினைவிலே இந்த உலகத்தையே மறந்து நிற்கிறது. அதன் உருவம், இப்போது நன்றாகக் காட்சி அளிக்கிறது.

காதலி: ஒழுகு நீர் ஆரல் பார்க்கும் குருகு (ஓடு கின்ற நீரில் ஆரல் மீனைப் பார்த்துக் கொண்டிருக்கும் நாரை அது.)

நாரையின் காலையும் கண்ணையும் ஓர் இமைப்பிலே அவள் கண்டிருந்தாள். அது மனத்தில் ஏதோ ஒரு மூலையிலே பதுங்கிக்கிடந்தது. தூண்டித் துருவிக் கேட்கும் தோழியின் கேள்விகளால் அந்த நாரையை அகக்கண்முன் கொண்டுவந்து நிறுத்தினாள். இனி, தோழி என்ன சொல்வாளோ என்று எதிர்பார்க் கிறாள். அவளுக்கு இப்போது உலக முழுவதும் தோழியினிடம் அடங்கியிருக்கிறது.

தோழி சற்றும் இரக்கம் இல்லாதவள்! அந்த நாரையைச் சாட்சியாக ஏற்றுக்கொள்ளக் கூடாதோ அவள்? மறுபடியும் காதலியைத் தன் சிரிப்பினால் புண்படுத்துகிறாள்.

தோழி: அடி பேதையே! உலகமறியாத குழந்தையா நீ? மீனையே பார்த்துக் கொண்டு நிற்கும் நாரை உங்களை எப்படிக் கவனிக்கப் போகிறது? ஒற்றைக் காலில் நின்று ஒரே பார்வையாக ஆரல் மீன் வரவை நோக்கி நிற்கும் அதுவும் உன்னைப் போல் எல்லாவற்றையும் மறந்து நிற்பது தானே? அது ஒரு சாட்சியாகுமா? அது இருந்தும் இல்லாதது போன்றதே. அவர் கள்வனைப் போலச் சாட்சி யற்ற தனியிடத்திலே காதல் புரிந்தார். அவருக்கு அவரே சாட்சி.

காதலியின் உள்ளத்தே வலியப் பிடித்து இழுத்து நிறுத்திய நாரை இப்போது மறைந்து விட்டது. மறுபடியும் காதலன் வந்து நிற்கிறான். அந்தத் தனிமையும் அவனும் அவள் உள்ளத்தே இன்பத்தையும் துன்பத்தையும் கலந்த மயக்கத்தை உண்டாக்குகின்றனர். ஒருவரும் இல்லாத தனிமை; அவன் மாத்திரம் இருக்கிறான்; உள்ளத்தைக் கவர்ந்து கொள்கிறான்.

"யாரும் இல்லை; தானே கள்வன்" என்று அவள் வாய் முணுமுணுக்கின்றது. அந்தப் பல்லவியிலே அவள் உள்ளம் கனிந்து இன்பம் காணுகிறது.

கள்வன் வரவைக் காதலி எதிர்பார்த்து நிற்கிறாள்.

*             *             *             *

இந்தக் காதற்காட்சியைச் சித்தரிப்பது பின் வரும் பாட்டு.

                தலைவி கூற்று
யாரும் இல்லை; தானே கள்வன்;
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ!
தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால,
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டு, தான் மணந்த ஞான்றே.

                 - குறுந்தொகை - கபிலர் பாட்டு.

[பொய்ப்பின்-தப்பினால். எவன் செய்கோ-என்ன செய்யட்டும். தினைத்தாள்-தினையின் தண்டு. ஒழுகுநீர்-ஓடுகின்ற நீரிலே செல்லுகின்ற. ஆரல்-ஆரலென்னும் மீன். குருகு-இங்கே, நாரை.]

நன்றி - மதுரைத்திட்டம்

கருத்துகள் இல்லை: