15/11/2012

சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் - 15 - ப.முருகன்


செவியறிவுறூஉ

வீரமாமுனிவர் குறிப்பிடும் 96 வகை பிரபந்தங்களில் 81வதாக வருவது செவியறிவுறூஉ ஆகும்.

ஒருவர் சொல்கிற சேதியை, கருத்தை கேட்பதற்கு செவிமடுத்தல் என்று சொல்வோம். ஒருவர் மற்றவருக்குச் சொல்வதை - குறிப்பாக அறிவுரையாகச் சொல்வதை செவிக்கு அறிவுறுத்தல் என்று சொல்லலாம். அப்படி எனில் செவியறிவுறுத்தல் என்றுதானே வர வேண்டும். ஏன் செவியறிவுறூஉ?

உப்போ உப்பு என்று உப்பு விற்கிறவர் ராகம் போட்டு கூவி விற்பதை உப்போ ஒ.... உப்பு என்றுதான் எழுத வேண்டும். அப்படி எழுதுவது இலக்கணப்படி அளபெடை என்று குறிப்பிடப்படும். அதாவது கடைசி எழுத்து நீட்டி அளவு கூடுதலாக - ஒலிப்பது ஆகும். இந்த செவியறிவுறு என்பதில் று=ற்+உ என்றிருப்பதால் செவியறிவுறூஉ என்று ஆகியது.

இது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றாக விளங்குகிறது. ஆனால் சங்க காலப்பாடல்களில் திணை, துறை என்ற பிரிவுகளில் பாடல்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதில் செவியறிவுறூஉ என்பது ஒரு துறையாக அமைந்திருக்கிறது.

இத்துறைக்கு புறப்பொருள் வெண்பாமாலை கூறும் பொருள், “மறம் திரிபு இல்லா மன்பெரும் சூழ்ச்சி, அறம் தெரிகோலாற்கு அறிய உரைத் தன்று” என்பதாகும். அதாவது பகைமையும் கெடுதலும் அற்ற பெரிய எண்ணங்களை அரசனுக்கு உரைத்தல் செவியறிவுறூஉ எனப்படும்.

வரும் பொருள் உரைத்தல் அமைச்சர்க்கு அழகு என்பது மூதுரை. அமைச்சர்கள் மட்டுமின்றி புலவர்களும் கூட புரவலர்களுக்கு (அரசர்களுக்கு) நல்ல அறிவுரை கூறுவர். அத்தகைய பாடல்கள் புறநானூற்றில் ஏராளம் உள்ளன.

பாண்டியன் அறிவுடை நம்பியின் ஆட்சித் திறத்தில் கொஞ்சம் பிசிறடித்தபோது தலையிடுகிறார். பிசிராந்தையார் என்ற புலவர் அதாவது வரியை கூடுதலாக விதித்ததால் மக்கள் அவதிப்படுகிறார்கள். அது உனக்கும் நல்லதல்ல, பொதுமக்களுக்கும் நல்லதல்ல என்பதை நயமாக எடுத்துரைக்கிறார்.

காய்நெல் அறுத்துக்

கவளம் கொளினே;

மாநிறைவு இல்லதும்,

பல்நாட்கு ஆகும்;

நூறுசெறு ஆயினும்,

தமித்துப் புக்கு உணினே,

வாய்புகுவ தனினும்

கால்பெரிது கெடுக்கும்;

அறிவுடை வேந்தன்

நெறிஅறிந்து கொளினே,

கோடியாத்து, நாடு

பெரிது நந்தும்;

மெல்லியன் கிழவன்

ஆகி,வைகலும்

வரிசை அறியாக்

கல்லென் சுற்றமொடு,

பரிபுதப எடுக்கும்

பிண்டம் நச்சின்

யானை புக்க புலம்போல,

தானும் உண்ணான்

உலகமும் கெடுமே.

(புறநானூறு 184)

ஒருமா அளவுக்கு குறைந்த நிலமாக இருந்தாலும் அதில் விளைந்த நெல்லை அறுவடை செய்து கவளமாக்கிக் கொடுத்தால் யானைக்கு அது பல நாட்களுக்கு உணவாகப் பயன்படும். ஆனால் பெரும் அளவிலான நூறு வயல்களாய் இருந்தாலும் யானை, தானே புகுந்து உண்ணுமானால் அதன் வாய்க்குக் கிடைப்பதைவிட, காலடியில் சிக்கி அழிவதுதான் மிகுதியாகும். அதுபோல அரசன், தான் விதிக்கும் வரியை நெறி அறிந்து விதிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் நாடு, கோடிப் பொருளை ஈட்டித் தரும்; செழிப்பாக இருக்கும். ஆனால் அரசன் அறிவால் மெல்லியனாகி(குறைந்து) தன்மை அறியாமல் இருக்கும் சுற்றத்தோடு சேர்ந்து, குடிமக்களின் அன்புகெடும் வகையில் வரியை வசூலித்தால் - அதாவது அளவுக்கு அதிகமாக வசூலிக்க முற்பட்டால் - கருவூலத்துக்கு வந்து சேருவது குறைந்து போகும். அதனால் உனக்கும் கேடு, நாட்டு மக்களுக்கும் கேடு ஏற்படும் என்று கூறி லேசாக இடித்துக் கூறுகிறார் பிசிராந்தையார்.

தான், சொல்ல விரும்புகிற கருத்தை மன்னனின் மனம் கோணாமல், யானையை உவமையாய்க் கூறி நயமாக அரசனின் செவியில் புகுந்திட அறிவுறுத்தியதால் இந்தப் பாடல் செவியறிவுறூஉ துறை இலக்கிய வகையாக அமைந்தது.

மகாகவி பாரதி தனது பாஞ்சாலி சபதத்தில் விதுரன் மூலம் துரியோதனனுக்கு அறிவுரை கூறுகின்றார்.

தெய்வத் தவத்தியைச்

சீர்குலையப் பேசுகிறாய்

நின்னுடைய நன்மைக்கு

இந்நீதியெலாம்

சொல்லுகிறேன்

என்னுடைய சொல், வேறு

எவர் பொருட்டும்

இல்லையடா;

பாண்டவர் தாம் நாளையப்

பழியிதனைத் தீர்த்திடுவார்

மாண்டு தரைமேல்

மகனே! கிடப்பாய் நீ.

என்ற பாடலும் செவியறிவுறூஉ வகைதான். ஆனால் துரியோதனன் அதைச் செவி மடுக்கவில்லை. அதனால் பாஞ்சாலியை சபைக்கு இழுத்து வந்து துகில்உரித்து அவமானப்படுத்தி, அதனால் அவள் சபதமிட்டு, பின்னர் குருசேத்திரயுத்தம் நடத்தி துரியோதனனை வீழ்த்தி வெற்றி கொண்டு பழி வாங்குகின்றனர் பாண்டவர், விதுரன் கூறியது போல. செவியறிவுறுத்தலும் வேண்டும். அதைச் செவிமடுத்தலும் வேண்டும். அதுதான் ஆட்சியாளர்க்கும் ஆளப்படும் மக்களுக்கும் நலமாக இருக்கும். இல்லையெனில் முற்பகல் ஆளப்படும் மக்களுக்குத் துயரம். பிற்பகல் ஆள்பவர்களுக்குத் துயரம். எனவே செவியறிவுறூஉவை மனம் கொள்வோம்.

நன்றி - தீக்கதிர்

1 கருத்து:

Pas S. Pasupathy சொன்னது…

நல்ல பதிவு! பாராட்டுகள்!

பசுபதி
http://s-pasupathy.blogspot.com/2012/11/23.html