17/11/2012

சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் - 16 - ப.முருகன்


எண் செய்யுள்

தமிழ் இலக்கியத்தை வகைப்படுத்தும் பொழுது பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்று கூறுகிறோம். இவை சங்க இலக்கியங்கள் என்றழைக்கப்படுகின்றன. இதை பதினெண் மேல்கணக்கு என்றும் குறிப்பிடுவர். அப்படி எனில் பதினெண் கீழ்க்கணக்கு என்று இருக்க வேண்டும் அல்லவா? உண்டு, திருக்குறள், நாலடியார், திரிகடுகம் உள்ளிட்ட பதினெட்டு நூல்கள்தான் அவை.

அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு ஆகியவை பாடல்களின் எண்ணிக்கை அடிப்படையில் அமைந்த பெயர். பதிற்றுப்பத்து என்னும் எட்டுத்தொகை நூல் பத்து சேர மன்னர்களைப் பற்றி பத்துப் பத்துப் பாடல்கள் கொண்ட தொகுப்பு. அதுபோல கீழ்க்கணக்கு நூல்களில் இனியவை நாற்பது, இன்னா நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது என எண்ணிக்கையால் ஏற்பட்ட பெயர்கள் உள்ளன. ஆனால் இவையெல்லாம் எண் செய்யுள்கள் எனும் பெயரால் அழைக்கப்படவில்லை.

இலக்கண விளக்கப் பாட்டியலில் எண் செய்யுள் என்பதற்கு பின்வருமாறு விளக்கம் சொல்லப்படுகிறது.

ஊரையும் பேரையும் உவந்து எண்ணாலே

சீரிதிற் பாடல் எண் செய்யுளாகும்.

என்கிறது 88வது சூத்திரம்.

பிரபந்த தீபிகை எனும் நூலின் 14வது சூத்திரம்,

ஏற்றிடும் பாட்டுடைத் தலைவனூர்ப் பெயரினை

இசைத்து எண்ணாற் பெயர்பெற

ஈரைந்து கவிமுதல் ஆயிரம் வரைச் சொல்

எண் செய்யுளாகும்

என விளக்குகிறது.

இலக்கண விளக்கப் பாட்டியல் உரையில் பாட்டுடைத் தலைவன் ஊரினையும், பெயரினையும் உவந்து எண்ணாலே பத்து முதல் ஆயிரமளவும் பொருள் சிறப்பினாலே பாடுதல் அந்தந்த எண்ணால் பெயர் பெற்று நடக்கும் எண் செய்யுளாம். அவை முத்தொள்ளாயிரம், அரும்பைத் தொள்ளாயிரம் முதலியன எனக் காணப்படுகிறது. இங்கே எண் செய்யுள் என்று வகைப்படுத்தப்பட்ட நூலே உணர்த்தப்படுகிறது. இதன்கண் வரும் செய்யுள்களின் பேரெல்லை ஆயிரமாகும். அதாவது ஆயிரத்தை மிஞ்சுதல் கூடாது. இத்தனை என்பது நூற்பெயரால் அறியப்படும் என்று இலக்கியச் சிந்தனைகள் எனும் நூலில் பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை கூறுகிறார்.

முத்தொள்ளாயிரம் என்பது மூன்று தொள்ளாயிரம் எனச் சிலரால் குறிப்பிடப்படுகிறது. அப்படி எனில் 2 ஆயிரத்து 700 பாடல்கள் இருக்க வேண்டும் அல்லவா? ஆனால் இலக்கணப்படி பார்த்தால் தொள்ளாயிரம் என்பதே பாடல்களை குறிப்பது என்றும் மூன்று அரசர்கள் (சேர, சோழ, பாண்டியர்) பற்றிப் பாடப்பட்டது என்றும் முடிவுக்கு வருவதே சிறந்தது.

இந்நூல் முழுவதுமாக கிடைக்கவில்லை. புறத்திரட்டின் ஆசிரியர் (பேரா.வையாபுரியார்) கருதிய 109 செய்யுட்களே இப்போது நமக்குக் கிடைத்துள்ளன. பழைய இலக்கண உரைகளில் ஒருசில செய்யுள்கள் முத்தொள்ளாயிரத்தை சார்ந்தன என நினைக்க இடமுண்டு என்கிறார் அவர். சென்னை பல்கலைக்கழகப்பதிப்பாக புறத்திரட்டு எனும் தொகை நூலை பதிப்பித்து 1938ல் வெளியிட்டவர் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

உரையாசிரியர் இளம் பூரணாரால் எடுத்துக் காட்டப்பட்ட செய்யுள் வருமாறு:-

ஏற்றூர்தி யானும் இகல்வெம்போர் வானவனும்

ஆற்றலும் ஆள்வினையும் ஒத்து ஒன்றின் ஒவ்வாரே

கூற்றக் கணிச்சியான் கண்மூன் றிரண்டேயாம்

ஆற்றல்சால் வானவன் கண்

இங்கே ஏற்றூர்தியான், கூற்றக்கணிச்சியான் என்பன சிவபெருமானைக் குறிப்பது, வானவன் என்பது சேரனைக் குறிக்கிறது.

வேறொரு பாடலை பார்ப்போம் - பாண்டிய மன்னன் யானை மீது உலா வருகிறான். அக்காட்சியை இளம் பெண்கள் மூவர் காண்கின்றனர். ஒருத்தி யானையின் முகத்தை அலங்கரித்த பொன்முகபடாம் அழகாக இருக்கிறது என்கிறாள். இன்னொருத்தியோ, அதைவிட யானை அழகாக உள்ளது என்கிறாள். மூன்றாமவளோ, மன்னவனுடைய மார்பிலே தவழும் மாலை அழகாக இருக்கிறது என்கிறாள். அரசனின் அழகிலே மயங்கி அவனது மார்பிலே தவழும் மாலையாக எண்ணத் தலைப்பட்டாள் போலும்.

பன்மாடக் கூடல் மதுரை நெடுந்தெருவில்

என்னோடு நின்றாரிருவர் அவருள்ளும்

பொன்னோடை நன்றென்றாள் நல்லளே பொன்னோடைக்கு

யானை நன்றென்றாளும் அந்நிலையள் - யானை

எருத்தத் திருந்த இலங்கிலைவேல் தென்னன்

திருத்தார் நன்றென்றேன் தியேன்.

தியேன் என்பது தீயேன் என்பதன் குறுக்கம். இதுபோல அழகிய பல செய்யுள்கள் உடையது முத்தொள்ளாயிரம்.

மன்னனின் முகங்கண்டு மையல் கொண்ட பெண் தன்னை முற்றிலுமாக அவன்வசம் கொடுத்துவிட்டாள். அதை அவள் எப்படிக் குறிப்பிடுகிறாள் என்றால் அவனது அநியாயத்தை பாரடி. ஏதோ ஒரு பங்கு எடுத்துக் கொள்ளாமல் முழுவதுமாக கவர்ந்து சென்றுவிட்டான். நிலத்துக்குச் சொந்தக்காரர்கள் தனது பங்காக விளைச்சலில் ஆறில் ஒரு பங்கைத்தான் பெற்றுச் செல்வார்கள். ஆனால் இவனோ என்னை முற்றிலுமாக அல்லவா அள்ளிச் சென்று விட்டான் என்கிறாள்.

‘அரவகல் அல்குலாய் ஆறில் ஒன்றன்றோ அவன் பங்கு’ என்கிற அந்தப்பாடல் காதல் சுவை தோய்ந்த பாடல் மட்டுமல்ல, அக்காலத்திய நிலவுடமைச் சமுதாயத்தில் உழவனுக்கும் நில உரிமையாளனுக்கும் இடையிலான உறவு எப்படி இருந்தது என்பதைப்பற்றியும் நமக்கு உணர்த்துகிறது. முத்தொள்ளாயிரம் தவிர அரும்பைத் தொள்ளாயிரம், வச்சத் தொள்ளாயிரம் போன்றவையும் எண் செய்யுளுக்கு உதாரணங்களாகத் திகழ்கின்றன.

நன்றி - தீக்கதிர்

கருத்துகள் இல்லை: