17/11/2012

சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் - 17 - ப.முருகன்


பதிகம்

வீரமாமுனிவர் கூறும் 96 வகை பிரபந்தங்களில் - சிற்றிலக்கியங்களில் 79வது வகை பதிகம் எனப்படும். ஒரு தலத்தில் வீற்றிருக்கும் இறைவனை - பாட்டுடைத் தலைவனை பற்றி பாடப்படும் பத்துப் பாடல்கள்தான் பதிகம் ஆகும்.

சங்க இலக்கிய காலத்தில் பதிகம் எனும் பாடல் உண்டு. அது ஒரு நூலின் இறுதிப் பகுதியில் அமைந்திருக்கும். அந்த நூலில் இடம் பெற்றிருக்கும் பாட்டுடைத் தலைவன் யார்? பாடியது யார்? பாடல்களின் பின்னணி என்ன? பாடிப் பெற்ற பரிசு என்ன? என்பவை பற்றிய குறிப்புகள் இருக்கும்.

எட்டுத்தொகை நூல்களில் ஒன்று பதிற்றுப்பத்து. அதில் முதல் பத்தும் கடைசிப் பத்தும் கிடைக்காததால் மீதம் எட்டுப்பத்து உள்ளது. அதன் ஒவ்வொரு பத்துப்பாடலின் முடிவில் பதிகம் எனும் தலைப்பில் பாடல் ஒன்று இருக்கும். அது மேற்கண்ட விபரங்களை கொண்டதாக அமைந்திருக்கும்.

பொதுவாக பக்தி இலக்கிய காலம் என்றழைக்கப்படுவது தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகள், நாலாயிர திவ்வியபிரபந்தம் ஆகியவை பாடப்பட்டகாலம். 64 நாயன்மார்களில் கணிசமானவர்கள் பதிகம் பாடியுள்ளனர்.

அப்பர், சுந்தரர், சம்பந்தர் - தேவார மூவர், மாணிக்கவாசகர் திருவாசகம் பாடியவர். திருஞானசம்பந்தர் 16 ஆயிரம் பதிகங்கள் பாடினார் என்று பன்னிரு திருமுறைகளை தொகுத்த நம்பியாண்டார் நம்பி குறிப்பிடுகிறார். எனினும் 383 பதிகங்கள் நமக்குக் கிடைக்கின்றன.

“காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி

ஓதுவார்தமை நன்னெறிக்கு உய்ப்பது

வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது

நாதன் நாமம் நமச்சிவாயவே”

இது நமச்சிவாயப் பதிகத்தின் முதல் பாடல்.

இவரது ஒவ்வொரு பதிகத்திலும் உள்ள 8வது பாடலில் இராவணன் பற்றிய செய்தி கூறப்பட்டுள்ளது. 9வது பாடலில் திருமால், சிவன் பற்றிக் கூறப்பட்டு அதில் சிவனே சிறந்தவன் என்று குறிப்பிடப்படுகிறது. 10வது பாடலில் அனைத்துச் சமயங்களும் போற்றுதற்கு உரியன அல்ல என்றும், சைவமே சிறந்தது என்றும் கூறியுள்ளார் என்று முனைவர் சா.சவரிமுத்து தமது தமிழ் இலக்கிய வரலாறு நூலில் குறிப்பிட்டுள்ளார். திருநாவுக்கரசர் பாடிய திருப்பதிகங்கள் 4900. இவற்றில் கிடைப்பவை 313. இறைவனை தலைவனாகவும் தன்னை தலைவியாகவும் பாவித்து அகத்துறையில் பல பாடல்களைப் பாடியுள்ளார். திருவாரூர்ப்பதிகம் இதற்கு எடுத்துக்காட்டு.

சுந்தரர் பாடிய பதிகங்கள் 38000. ஆனால் 100 பதிகங்களும் 1026 பாடல்களும் நமக்குக் கிடைக்கின்றன. அவரது திருப்புகலூர்ப் பதிகத்தின் 2வது பாடல் இது.

“மிடுக்கிலாதானை வீமனே

விறல் விசயனே வில்லுக்கிவன் என்று

கொடுக்கிலாதானைப் பாரியே என்று கூறினும் கொடுப்பாரில்லை

பொடிக்கொண் மேனியெம் புண்ணி யன் எந்தை புகலூர்ப் பாடுமின் புலவீர்காள்

அடுக்குமேல் அமரும் உலகம் ஆள்வ தற்கு யாதும் ஐயுறவில்லையே”

இல்லாதது எல்லாம் சொல்லிப் புகழ்ந்து பாடினேன் அவனும் எனக்கு ஒன்றும் கொடுக்காமல் இல்லை என்று கூறிவிட்டான் என்று ஒளவை பாடிய பாடல்போல இருக்கிறதல்லவா.

மாணிக்கவாசகர் பாடிய திருவாசகம் மனதை உருக்குபவை என்றும் இதற்கு உருகாதவர் வேறு எதற்கும் உருகார் என்றும் சிறப்பிக்கப்படுகிறது. திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி, திருச்சதகம் போன்றவை தவிர அவர் பாடிய அச்சோப்பதிகம் மிக முக்கியமானது.

இந்த நால்வர் தவிர திருமாளிகைத் தேவர் (4) கருவூர்த்தேவர் (10), சேந்தனார் (4), பூந்துருத்தி காடவநம்பி (2), கண்டராதித்தர் (1), வேணாட்டடிகள் (1), திருவாளியமுதனார் (4), புருடோத்தம நம்பி(2), சேதிராயர் (1), திருமூலர் (232) என நிறைய பதிகங்கள் உள்ளன.

மாயூரம் வேதநாயகம் பிள்ளை ‘பெரிய நாயகி அம்மாள் பதிகம்’ பாடியுள்ளார்.

நன்றி - தீக்கதிர்

கருத்துகள் இல்லை: