18/11/2012

சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் - 18 - ப.முருகன்


தாண்டகம்

வீரமாமுனிவர் கூறும் சிற்றிலக்கிய வகைகள் 96. ஆயினும் பரவலாக அறியப்பட்டவை நான்கில் ஒரு பங்குதான் தேறுகிறது. அவர் முதலாவதாக குறிப்பிடுவது சாதகம். நமக்கு என்ன தோன்றுகிறது.

சங்கீதம் அறிந்தவர்களாக இருந்தால் ‘சாதகம்’ செய்வது பாடிப் பயிற்சி எடுப்பது (கழுத்து வரை தண்ணீரில் உடல் மூழ்கியிருக்குமாறு நின்று கொண்டு செய்வதும் உண்டு). சாதாரணமாக ஜோதிடம் பார்ப்பதற்கு பயன்படுகிறது சாதகம் என்றும் நினைக்கலாம். ஜாதகக் கதைகள் என்று புத்தமதத்தினர் கூறும் கதைகள் உண்டு. இவற்றில் எது என்பது ஓரளவு நூலறிவு உள்ளவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆறாவதாக உள்ளது ஐந்திணைச் செய்யுள். இதற்கும் உதாரணம் காட்டுவது சிரமம்தான். நாற்பத்து மூன்றாவது எண் செய்யுள். அதை பார்த்துவிட்டோம். நாற்பத்து நான்காவதாக உள்ளது தொகை நிலைச் செய்யுள். நாற்பத்து ஐந்தாவது ஒலியல் அந்தாதி. அடுத்தடுத்துள்ள பதிற்றந்தாதி, நூற்றந்தாதி பற்றியும் இந்தப் பகுதியில் சொல்லப் பட்டுள்ளது.

நாற்பத்து எட்டு உலா. பார்த்து விட்டோம். உலா மடல், வளமடல் ஆகியவை அடுத்தடுத்து வருகின்றன. மடல் என்றால் கடிதம். அந்தக் காலத்தில் திருமுகம் என்பார்கள். ஒரு நாட்டு மன்னன் இன்னொரு நாட்டின் மன்னனுக்கு கொடுத்துவிடும் கடிதம் மடல். அதைத் திருமுகம் என்பார்கள். அதற்கு எடுத்துக்காட்டு உண்டு. ஐம்பத்து நான்காவதாக இருப்பது கண்பெடை நிலை. அடுத்தடுத்து துயிலெடை நிலை, விளக்கு நிலை (61), புறநிலை (62), கடை நிலை (63) ஆகியவை உள்ளன. அறுபத்து நான்காவது கையறு நிலை. இதுபற்றி ஏற்கெனவே தெரிந்துகொண்டோம்.

அறுபத்து ஐந்தாவது தசாங்கப்பத்து, தசம் - பத்து, அங்கம் - உறுப்பு, பத்து அங்கம் கொண்ட பத்து. நமது சங்க இலக்கியத்தில் உள்ள பதிற்றுப்பத்து போலத் தான், அதற்கடுத்தது தசாங்க பத்து அயல். இலக்கணம் படிக்கும் போது ஈற்று அயல்அடி என்பார்கள். அதாவது கடைசி அடிக்கும் முதல் அடி. அப்படி எனில் ஒன்பதாவது அடியாக இருக்கலாம். இதே மாதிரியாக நயனப்பத்து (68), பயோதரப் பத்து (69) ஆகியவை உள்ளன. அதற்கடுத்தாற் போல் உள்ளது அரசன் விருத்தம், எழுபதாவது பாதாதி கேசம். எழுபத்து ஒன்று கேசாதிபாதம். உள்ளங்கால் முதல் உச்சிவரை, உச்சி முதல் உள்ளங்கால் வரை உள்ளது.

இதற்கிடையில் அரசன்விருத்தம் (67) உள்ளது. விருத்தப்பா வகையினால் அரசனைப்பற்றிப் பாடுவது ஆகும். எழுபத்து இரண்டாம் இடத்தில் அலங்காரப் பஞ்சகம். எழுபத்து நான்காவதாக வருவது மங்கல வள்ளை, அடுத்து வருவது (76) நாற்பது, (77) குடிமகன் ஆகும். அதற்கு அடுத்தது தாண்டகம். இதற்கு எடுத்துக்காட்டு உண்டு. திருநாவுக்கரசரை அப்பர் என்று அழைப்பார்கள் என்பதை கேள்விப்படாதவர்கள் மிகக் குறைவு. அவர் “ஆளுடைய அரசு” என்றும் “தாண்டக வேந்தர்” என்றும் சிறப்பிக்கப்படுகிறார். அவரது மறுமாற்றத் திருத்தாண்டகம் நூலில் இருந்து எடுத்துக்காட்டு தருகிறோம்.

நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்

நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்

ஏமாப்போம் பிணியறி யோம் பணிவோம் அல்ல

இன்பமே எந்நாளும் துன்பமில்லை

எண்பத்து இரண்டாவது வாயுறை வாழ்த்து. அடுத்தது புற நிலை வாழ்த்து, 93வது இயன் மொழி வாழ்த்து. இவற்றுக்கு எடுத்துக்காட்டு சொல்வதெனில் சங்க இலக்கியத்தில் பல்வேறு பாடல்களின் துறை இயன்மொழி வாழ்த்துதான்.

பெயரின்னிசை(56), ஊரின்னிசை(57), பெயர் நேரிசை (58), ஊர் நேரிசை (59), இது தவிர ஊர் வெண்பா என்பது ஏதாவது, ஊரைப்பற்றி வெண்பா வகையினால் பாடப்படுவது ஊர்வெண்பா என்கிறார்கள். இது போல் கடிகை வெண்பா (89) உள்ளது. எண்பத்து நான்காவதாக உள்ளது பவனிக்காதல். இது உலாவோடு ஒட்டியதாகும். எண்பத்து ஏழாவது ஊசல். பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில் கூட பெண்பால் பிள்ளைத்தமிழில் இடம் பெற்றிருக்கும்.

எண்பத்து எட்டாவது எழு கூற்றிருக்கை, 90வது சின்னப்பூ, 91 விருத்தவிலக்கணம், 92 முதுகாஞ்சி, 94 பெருமங்கலம், 95 பெருங்காப்பியம், 96 சிறுகாப்பியம், இவையே சதுரகராதியில் வீரமாமுனிவர் குறிப்பிடும் 96 வகை பிரபந்தங்கள் எனப்படும் சிற்றிலக்கியங்கள். இவை தவிர வேறு சிலவற்றையும் இலக்கண நூல்கள் குறிப்பிடுகின்றன. சிற்றிலக்கியங்களை ஆய்வுக்குட்படுத்தினால் சமூகச் சூழலைப் புரிந்து கொள்ளலாம்.

நன்றி - தீக்கதிர்

கருத்துகள் இல்லை: