14/11/2012

சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் - 12 - ப.முருகன்


ஆற்றுப்படை

வீரமாமுனிவர் கூறும் 96 வகை சிற்றிலக்கியங்களில் 53வதாக வருவது ஆற்றுப்படை.  இந்த நூல் வகையின் இலக்கணம் தொல்காப்பியத்திலேயே காணப்படுகிறது.

கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்

ஆற்றிடைக் காட்சி யுறழத் தோன்றிப்

பெற்ற பெருவளம் பெறாஅர்க்(கு) அறிவுறீ இச்

சென்றுபய னெதிரச் சொன்ன பக்கமும்

என்பது புறத்திணையி யல் நூற்பா (36)

ஆறு எனும் சொல்லுக்கு வழி அல்லது நெறி என்பது பொருள். ஆற்றுப்படுத்துதல் என்றால் அறிந்தான் ஒருவன் அறியாதான் ஒரு வனை வழிப்படுத்துதலாகும். இவ்வகை நூல்கள் புறம் சார்ந்தவை. ஏனெனில் அகப்பாடல்கள் சுட்டி ஒருவர் பெயர் கொளப்பெறார் என்பதன் அடிப்படையில் அமைந்தவை அல்லவா?

புலவர்களின் நிலை ஏழ்மையாய் இருப் பதால் அவர்களைப் பாதுகாக்க புரவலர்கள் பொன்னும் பொருளும் தேவையான இன்னபிறவும் அள்ளி வழங்கி ஆதரித்து வந்துள்ளனர். அதற்கு பதிலாக புலவர்களும் வஞ்சகம் இன்றி பாடிப் பரவி புகழ்ந்துள்ளனர். அரசவைப் புலவர்கள் மட்டுமின்றி மற்ற புலவர்களும் தங்களைப் பாடிப் புகழ்வதை மன்னர்கள் பெருமைக்கு உரியதாய் எண்ணியுள்ளனர்.

சங்க இலக்கியமாம் பத்துப்பாட்டில் ஐந்து, ஆற்றுப்படை நூல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் (கூத்தராற்றுப்படை). தொல்காப்பிய நூற்பா குறிப்பிடுவதில் விறலியாற்றுப்படை தான் இல்லை. தனி நூலாக இல்லை எனினும் இவ்வகைப் பாட்டு புற நானூற்றிலும் பதிற்றுப்பத்திலும் உள்ளது. சேயிழை பெறுகுவை (புறம் 105), மெல்லியல் விறலி (புறம் 133) என்ற செய்யுள்களை உதாரணமாக காட்டலாம். கூத்தர், பாணர், பொருநர் இவர்களைப் பற்றிய ஆற்றுப்படைச் செய்யுள்களும் புறநானூற்றில் காணப்படுகின்றன.

இவை எல்லாம் உலக வாழ்வு (லௌகீகம்) பற்றியவை. அதாவது பாட்டுடைத்தலைவனிடத்துப் பொருள்பெற்று மீளலும் மீளும் வழியில் கூத்தர் முதலியோரைக் காணலும் அவர்களைத் தலைவனிடத்தில் வழிப்படுத்திப் பரிசில் கொள்ளச் செய்தலும் பண்டைக் காலத்து உலகியல் செய்திகளே. ஆனால் திருமுருகாற்றுப்படை இதிலிருந்து வேறுபட்டுக் காணப்படுகிறது.

லௌகீக வாழ்க்கையிலிருந்து விலகி இறையருள் பெறுவதற்காகச் சொல்லப்படுகிறது. அத்துடன் மற்றெல்லா ஆற்றுப்படைகளும் கூத்தர், பொருநர், பாணர் பெயருடன் விளங்க, திருமுருகாற்றுப்படை மட்டும் பாட்டுடைத்தலைவன் பெயரையே கொண்டு திகழ்வதும் நினைத்தற்கு உரியதாகும். அதற்கு புலவராற்றுப்படை எனும் பெயரும் வழங்கப்படுகிறது.

“மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க - ஈசன் மகனோடு மனம் விட்டு பேசிப்பாருங்க தீராத வினைகள் எல்லாம் தீர்ந்து போகுங்க அது தீராவிட்டால் வந்து என்னைக் கேளுங்க” என்ற திரைப்படப்பாடல் கூட ஆற்றுப்படைப் பாடல்தான்.

பொருநர் ஆற்றுப்படை 248 அடிகளைக் கொண்டது. வஞ்சியடிகள் விரவிய ஆசிரியப்பா இதன் பாடல் வகை. பரிசில் பெறவிரும்பும் பொருநனைப் பரிசில் பெற்ற பொருநன் ஒருவன் கரிகால் சோழனிடம் ஆற்றுப்படுத்திய பாடல் இது. இதைப் பாடியது முடத்தாமக் கண்ணியார். பொருநர் என்றால் மற்ற ஒருவர் போல் வேடம் கொள்வோர் என்பது பொருள். இது வருணனைச் சிறப்பு மிக்க இலக்கியம். கரிகாலனிடம் பொருநர் பொற்றாமரை பெறுதலும் விறலியர் பொன்மாலைகள் பெறுதலும் கூறப்படுகின்றன. வெண்ணிப்பறந்தலை எனுமிடத்தில் சேர, பாண்டியர்களை கரிகாலன் இளமையில் வென்ற வரலாற்றுச் செய்தியும் கூறப்படுகிறது.

சிறிய யாழைக் கொண்டிருக்கும் பாணர்கள் பாடியது சிறுபாணாற்றுப் படை, இது 269 அடிகளை கொண்டது. இதன் பாவகை ஆசிரியப்பா. ஓய்மா நாட்டு நல்லியக் கோடனிடத்தே ஆற்றுப் படுத்துகிறது. இதைப் பாடியவர் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார். காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த கடற்கரைப் பகுதியே இடைக் கழிநாடு. அங்கு உள்ளது நல்லூர். திண்டிவனம் வட்டத்தின் பெரும்பகுதி விழுப்புரம் வட்டத்தின் கிழக்கு பகுதி மதுராந்தகம் வட்டத்தின் தென் பகுதி என்ற நிலப்பரப்புதான் ஒய்மாநாடு என்கிறார் முனைவர் ச.வே. சுப்பிரமணியன்.

பொதுவாக வறுமைப்பட்ட வீட்டின் அடுப்பில் பூனை தூங்குவதாகத் தான் சொல்வதுண்டு. ஆனால் சிறுபாணாற்றுப் படை பாணன் வீட்டில் அண்மையில் குட்டி போட்ட நாய் தனது குட்டிக்கு பால் கொடுக்க முடியாமல் குரைத்துக் கொண்டிருக்கிறது என்று சொல்கிறது.

திறவாக் கண்ண சாய் செவிக்குருளை

கறவாப் பால்முலை கவர்தல் நோனாது

புனிற்றுநாய் குரைக்கும் புல்லென் அட்டில்

(சிறுபாணாற்றுப்படை -130- 132)

பெரும்பாணாற்றுப் படை 500 அடிகள் கொண்ட ஆசிரியப்பா உடையது. தொண்டைமான் இளந்திரையனை கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது. இதில் யாழின் வருணனை, பாலை நிலத்தின் எயினர் குடியிருப்பு, காஞ்சி மாநகரத்தில் பற்பல சமயத்தவரும் கொண்டாடும் விழாக்கள் போன்றவை விரிவாகக் கூறப்பட்டுள்ளன.

மலைபடுகடாம். 583 அடிகள் கொண்ட ஆசிரியப்பா உடையது. இதனைப் பாடியது இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார். செங்கண் மாத்துவோள் நன்னன் சேய் நன்னனைப் பற்றியது. மலைபடு கடாஅம் மாதிரத்து இசைப்ப என்ற அடி யானையை உவமித்து அதிலிருந்து பிறக்கும் ஓசையைக் கடாம் என வருணித்ததால் மலைபடு கடாம் என்று வழங்கப்படுகிறது என்பர்.

திருமுருகாற்றுப் படை நக்கீரரால் பாடப் பட்டது. 317 அடிகள் கொண்டது. இதன் பாவகை ஆசிரியப்பா. முருகனின் ஆறுபடை வீடுகளைப் பற்றி புகழ்ந்துரைக்கும் ஆறு பகுதிகளைக் கொண்டது. இந் நூல் காலத்தால் பிற்பட்டது என்றே தமிழ்த் தாத்தா உ.வே.சாவை மேற்கோள் காட்டி பேரா. எஸ்.வையாபுரிப் பிள்ளை போன்றவர்கள் கூறுகின்றனர்.

நன்றி - தீக்கதிர்

கருத்துகள் இல்லை: