14/11/2012

சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் - 13 - ப.முருகன்


கைக்கிளை

காதலும் வீரமும் தமிழ் இலக்கியத்தின் உள்ளடக்கம். இவையன்றி சங்க இலக்கியங்கள் இல்லை. காதல் அகத்துறையாகவும் வீரம் புறத்துறையாகவும் வகைப் படுத்தப்பட்டது.

யாயும் ஞாயும் யாரா கியரோ

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்

யானும் நீயும் எவ்வழி அறிதும்

செம்புலப் பெயல் நீர் போல்

அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே

என்கிற இந்தப் பாடல் முன்னைப் பின்னை யார் எனத் தெரியாத தலைவனும் தலைவியும் ஒருவர் மேல் ஒருவர் காதல் கொண்டு உயிருக்கு உயிராய் செம்மண்ணில் விழுந்த தண்ணீர் சிவப்பாக மாறி விடுவது போல் ஒன்றி விட்டதைக் கூறுகிறது.

இது ஒத்த தகுதியுடைய தலைவனும் தலைவியும் கொண்ட காதலைப் பற்றியது. சுட்டி ஒருவர் பெயர் சொல்லாத தன்மையினால் இது அகத்திணை சார்ந்ததாக விளங்குகிறது. இதில் தலைவனும் தலைவியும் யார் எனத் தெரியும் வகையிலான பாடலாக படைக்கப்பட்டிருந்தால் இது புறத்திணை சார்ந்ததாக ஆகிவிடும்.

அவ்வாறில்லாமல் தலைவனோ தலைவியோ யாராவது ஒருவர் மட்டும் மற்றவர் மேல் காதல் கொள்வது ஒரு தலைக் காதல் என்றழைக்கப்படுகிறது. சங்ககால இலக்கியச் சொல் மூலம் குறிப்பது என்றால் ஒருதலைக் காமம், அதாவது, ஒருதலை விருப்பம், இதற்கு இலக்கியம் கூறும் மற்றொரு பெயர் ‘கைக்கிளை’ என்பதாகும்.

ஆணோ பெண்ணோ யார் எனக் குறிப்பிடாத பாடலாக அமைந்தால் அது அகத்திணை சார்ந்தது. யாராவது ஒருவர் அல்லது இருவரும் சுட்டிக் காட்டப்பட்டால் அதாவது பெயர் குறிப்பிடப்பட்டால் அது புறத்திணை சார்ந்ததாக ஆகிவிடும். எனவே, கைக்கிளை என்பது அகத்தினையிலும் வரும். புறத்திணையிலும் வரும். ஆனால் ஒரு தலையாகத்தான் வரும்.

அரசனோ, தெய்வமோ உலா வரும் பொழுது இளம் பெண்கள் அரசன் மீதோ, தெய்வத்தின் மீதோ காதல் கொண்டால் அது கைக்கிளையின் பாற்படும்.

முத்தொள்ளாயிரம் என்பது சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மூவர் மீதும் பாடப்பட்டது. வெண்பாக்களால் ஆனது. இதில் உலா வரும் மன்னனைக் கண்ட ஒரு பெண்ணின் நிலை என்னவாக இருந்தது என பின் வரும் பாடலில் காணலாம்.

ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையைக்

காணிய சென்று கதவடைத்தேன் - நாணிப்

பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல

வரும் செல்லும் பேரும் என் நெஞ்சு

(முத்தொள்.7)

உலா வந்த மன்னனைக் கண்டு மனதைப் பறிகொடுத்த பெண் ஒருத்தி மதி மயங்கியதால், தான் ஏதாவது ஏடாகூடமாகச் செய்துவிட்டால் என்னாவது என்றஞ்சி நாணம் மேலிட வீட்டுக்குள் சென்று கதவடைத்துக் கொள்கிறாள். ஆனால் காதல் கொண்ட மனசு சும்மா இருக்க விடுகிறதா என்ன. கதவைத் திறந்து பார்ப்போமா வேண்டாமா என்று அதன் அருகில் வருவதும் போவதுமாய் இருந்ததாம். எப்படி? பெரும் செல்வர் வீட்டில் உள்ள ஏழையைப் போல. இருந்தும் இல்லாதவள் போல். மாடி வீட்டு ஏழைபோல் மனது கிடந்து துடிக்குது.

இது ஒரு மாதிரி காதலியின் நிலை என்றால் தெய்வத்தின் மேல் காதல் கொண்டவள் நிலை எப்படி இருக்கும். மீராவும் ஆண்டாளும் கண்ணன் மீது காதல் கொண்டது அப்படித்தானே.

வாரணமாயிரம் சூழவலம் வந்து எனத் தொடங்கும் பாசுரத்தில் ஆண்டாள் என்ன சொல்கிறாள்.

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத

முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல்கீழ்

மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்தென்னைக்

கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழி நான்

நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் 561வது பாடலில் ஆண்டாள் கல்யாணமே முடிந்துவிட்டதாய் கனவு காண்கிறாள். இதற்கு மேல் என்ன சொல்ல?

தேவாரத்தில் திருநாவுக்கரசர், இறைவன் மேல் கொண்ட காதலால் என்ன செய்கிறார் என்று சொல்கிறார்.

முன்னம் அவனது நாமம் கேட்டாள்

மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்

இந்தப் பாடலின் திரையிசை வடிவம் தான் “அன்றொரு நாள் அவனுடைய பேரை கேட்டேன், அடுத்த நாள் அவனிருக்கும் ஊரைக் கேட்டேன்” பாடல்.

1980களில் பிரபலமான திரைப்படம் ஒருதலை ராகம். அதில் வரும், ‘இது குழந்தை பாடும் தாலாட்டு’ பாடலில், ஒரு ஆண், தன்னை விரும்பாத பெண் மீது கொண்ட காதலால் படும் துயரத்தை வெளிப்படுத்துகிறான் கவித்துவமாக, விடிந்துவிட்ட பொழுதில் கூட விண்மீனைப் பார்க்கிறேன் விருப்பமில்லா பெண்ணை எண்ணி உலகை நான் வெறுக்கிறேன் என்று கூறும் தலைவன் ‘ஒரு தலையாய் காதலிலே எத்தனை நாள் வாழ்வது’ என்று புலம்பித் தவிக்கிறான். காதல் என்றால் கைகூடுவதும் உண்டு. கூடாததும் உண்டு தான். ஆனால் அதனால் நமக்கு கவிதை உண்டு ரசிக்க.

நன்றி - தீக்கதிர்

கருத்துகள் இல்லை: