06/11/2012

சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் - 5 - ப.முருகன்


குறவஞ்சி

மருத நிலத்துப் பள்ளி, பள்ளன் பற்றிய இலக்கியம் பள்ளு என்றால் குறிஞ்சி நிலத்துப் பாடல் குறவஞ்சி ஆகும். இது தொல்காப்பியர் வனப்பு என்று கூறும் இலக்கிய வகை ஆகும். வீரமாமுனிவர் தனது சதுர் அகராதியில் குறத்திப் பாட்டு என்று குறிப்பிடுகிறார்.

குறவஞ்சி என்பது குறவர் குலத்துப் பெண்ணைக் குறிப்பதாகும். இது ஒருவகை நாடகம் ஆகும். இறைவனோ, தலைவனோ உலா வருவர். உலா வந்த தலைவனை கண்டு காதல் கொண்ட தலைவி காதலால் கசிந்துருகுகிறாள். தலைவன் மேல் தான் கொண்ட காதல் நிறைவேறுமா என குறத்தியிடம் குறி கேட்கிறாள். குறத்தி தனது மலைவளம், நாட்டுவளம் பற்றி புனைந்து உரைக்கிறாள். பின் தலைவியின் கையைப் புகழ்ந்தும் கைக்குறி, முகக்குறி, பல்லி சொல் முதலியவற்றால் தலைவியின் மனக்கருத்தை கண்ணோர்ந்தும் சொல்வாள்.

குறிகேட்டு மகிழ்ந்த தலைவி நல்ல வார்த்தை சொன்னதற்காக குறத்திக்குப் பரிசுப்பொருளை அளிக்கிறாள். அதை பெற்றுக் கொண்டு வரத் தாமதமாகி விட்டதால் தேடி வரும் சிங்கன் (குறவன்) மற்றும் அவர்கள் இடையிலான உரையாடலும் கடவுளை வாழ்த்தி விடைபெறுவது என இவை ஒவ்வொன்றும் நாடகக் காட்சிகள் போல அமைந்திருக்கும்.

குறவஞ்சியில் பாட்டுடைத் தலைவன், தலைவியைவிட குறமகளின் செயல்பாடுகள் பற்றியே விரிவாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கும். கீழ் நிலைப்படுத்தப்பட்ட குறவர் இன மக்களின் நிலையை உயர்த்துவதற்காகவும் நாட்டுப்புற இலக்கிய வடிவத்துக்கு முதன்மை தரவேண்டும் என்பதற்காகவும் இவ்விலக்கியம் தோன்றியிருக்கலாம் என்கிறார் முனைவர் சவரிமுத்து.

குறிகேட்கும் வழக்கம் இன்றும் கூட நம் மக்களிடம் இருக்கத்தான் செய்கிறது. இம்முறையைக் கையாண்டு காதலை மையமாக்கி குறவஞ்சி இலக்கியம் படைக்கப்படுகிறது. இந்த இலக்கியங்கள் தத்துவ உட்பொருளை கொண்டிருந்தாலும் எளிய நடையிலும் வழக்குச் சொற்கள் நிறைந்தும் காணப்படும். இந்தக் குறவஞ்சி நூல்கள் தற்போது சுமார் 110 கிடைக்கின்றன. இவற்றுள் கி.பி. 18ம் நூற்றாண்டில் திரிகூடராசப்ப கவிராயர் எழுதிய திருக்குற்றாலக் குறவஞ்சி சிறப்புடன் அமைந்திருக்கும்.

குறவஞ்சி நூல் அகவல்பா, வெண்பா, கொச்சகக் கலிப்பா எனும் யாப்புடன் இடையிடையே வசனங்கள் கலந்து கண்ணி, சிந்து ஆகிய மெட்டுக்களில் படைக்கப்பட்டிருக்கும். இசைப்பாட்டு வடிவத்தின் முதிர்ந்த நிலை கீர்த்தனை எனப்படும். இது எடுப்பு, தொடுப்பு, படுப்பு என மூன்று நிலைகளில் அமையும். இவைதான் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்று அழைக்கப் படுபவை.

காதலைத்தவிர பக்தி அடிப்படையிலும் குறவஞ்சி நூல்கள் தோன்றியுள்ளன. இவற்றுள் வேத நாயக சாஸ்திரியர் எழுதிய பெத்லகேம் குறவஞ்சி கிறிஸ்தவ குறவஞ்சி நூலாகும்.

அரசனை தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்டது சரபேந்திர பூபாலக் குறவஞ்சி. இதை எழுதியவர் கோட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் .

தமிழைத் தலைவியாகக் கொண்டு வரத நஞ்சையப்ப பிள்ளை எழுதியது தமிழரசி குறவஞ்சி. மனிதரைப் பற்றி எழுதிய குறவஞ்சி நூல் விராலிமலைக் குறவஞ்சி. இலங்கை யாழ்ப்பாணம் விசுவநாத சாஸ்திரியார் எழுதியது வண்ணக் குறவஞ்சி. இவை தவிர நகுல மலைக் குறவஞ்சி, கும்பேசர் குறவஞ்சி, அர்த்த நாரீசுவரக் குறவஞ்சி போன்றவையும் குறிப்பிடத்தக்கவை. பொன்னு ஆ.சத்தியசாட்சி எழுதியது தாமஸ் மலைக்குறவஞ்சி

பெத்லகேம் குறவஞ்சியில் உலாவரும் மன்னராக இயேசுவும் தேவமோகினியாகிய தலைவி சீயோன் மகளாகவும் குறவஞ்சி விசுவாசமாகவும் குறி கூறுதல் தீர்க்க தரிசனமாகவும் சிங்கன் குருவாகவும் நூவன் உபதேசியாகவும் அவர்கள் பிடிக்கும் பறவைகளாக மக்களும் அதற்குப் பயன்படுத்தப்படும் வலையாக இறைவாக்கு என்ற நற்செய்தியும் உருவகிக்கப்பட்டுள்ளன. இந்நூல் முற்றுருவகமய்த் திகழ்வது தனிச் சிறப்பு.

விசுவாசக் குறவஞ்சி தேவமோகினிக்கு மலை வளம் கூறுவதாக வரும் பாடல், குற்றாலக் குறவஞ்சியின் ‘வானரங்கள்கனி கொடுத்து மந்தியொடு கொஞ்சும்’ பாடலை ஒத்திருக்கும். அந்தப்பாடல்,

‘வானவர்கள் கூடிவந்து

தோத்திரங்கள் படிப்பார்

வன்மையுள்ள சித்தரெல்லாம்

அருந் தவங்கள் பிடிப்பார்.

ஞானமுடன் முல்லை நிலத்

தலைவர் வந்து தொழுவார்

நட்சேத்திர சாஸ்திரிகள்

காணிக்கைகள் தருவார்.

மேலைநாட்டு கதை என்றாலும் நமது நாட்டுக்கு ஏற்றாற்போல் படைக்கப்படுவது பெரிய இலக்கியமான சீறாப்புராணம், தேம்பாவணி போன்ற வற்றில் மட்டுமல்லாது சிற்றிலக்கியமான பெத்லகேம் குறவஞ்சியிலும் சிறப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது. மண்மயமாக்குதல் இலக்கியப் படைப்புக்கு முற்றிலும் உகந்தது.

நன்றி - தீக்கதிர்

1 கருத்து:

Unknown சொன்னது…

மிக அருமையான பதிவு
வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
உங்கள் வரவை விரும்புகிறது.
தினபதிவு திரட்டி