06/11/2012

சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் - 4 - ப.முருகன்

பள்ளு

திருவிழாக்காலங்களில் கிராமங்களில் மட்டுமின்றி நகரங்களிலும் நாடகங்கள் நடத்தப்படுவது உண்டு. கட்டபொம்மன் நாடகத்தில் ‘சக்களத்திச் சண்டை’ எனும்காட்சிகள் சுவாரஸ்யத்துக்காக சேர்க்கப்பட்டிருக்கும். அந்த சக்களத்திச் சண்டை எதனுடைய பிரதிபலிப்பு - தாக்கம் என்றால் முக்கூடற்பள்ளு எனும் இலக்கியத்தில் இடம் பெற்றிருக்கும் சக்களத்திகளின் சண்டை தான்.

முக்கூடற்பள்ளு புகழ்பெற்ற பள்ளு இலக்கியமாகும். இது 96 வகை சிற்றிலக்கியங்களில் ஒன்று. தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்படும் ஐவகை நிலங்களில் ஒன்று மருதநிலம். வயலும் வயல் சார்ந்த இடமும் கொண்ட இந்த நிலப் பகுதியில் செழித்து நடைபெறும் தொழில் உழவுத் தொழில். இந்தத் தொழிலில் ஈடுபடும் பள்ளர் இன மக்களின் வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்டு கூத்து வடிவில் பாடப்படுவது பள்ளு இலக்கியம். இதை உழத்திப் பாட்டு என்றும் அழைப்பார்கள். தமிழின் முதல் தலித் இலக்கியம் எனவும் கொள்ளலாம் என்கிறார் ஆய்வாளர் அருணன்.

உழவர்களின் தொழில் பள்ளத்தில் அதாவது பள்ளமான நீர் வயலில் நடைபெறுகிறது. அதனால் அவர்கள் பள்ளர்கள் என்று அழைக்கப்பட்டார்கள் என்று கூறுவர். உழவுத் தொழிலும் பள்ளத்தில் நடக்கிறது. உழவர்களின் வாழ்க்கையும் பள்ளத்தில் கிடக்கிறது. அதனால்தான் உழுதவன் கணக்குப்பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்பது போன்ற பழமொழிகள் தோன்றின. அந்த அனுபவ மொழிகள் இன்றும் மாறாமல்தான் இருக்கின்றன. அதன் வெளிப்பாடுதான் தற்போதைய விவசாயிகளின் தற்கொலைச்சாவுகள்.

பள்ளு நூல்களின் மூலம் பள்ளரின் பெருமை, மழைக்குறி, பள்ளர் பள்ளியர் பேச்சு, நெல்வகை, மாட்டுவகை, பயிர்த்தொழில் நுட்பங்கள், உழவு, நடவு, அறுவடை முதலியவை பற்றி அறிந்து கொள்ளலாம் என்று முனைவர் சா.சவரிமுத்து குறிப்பிடுகிறார்.

நெல்லு வகையை எண்ணினாலும் எண்ணலாம் பள்ளு வகையை எண்ண முடியாது என்னும் பழமொழியால் பள்ளு நூல்கள் மிகுதியாக இருந்திருக்கின்றன என்பதை அறியலாம் என்றும் அவர் கூறுகிறார்.

பள்ளு இலக்கியங்களுள் அருணாசலக் கவிராயர் எழுதிய சீர்காழிப் பள்ளும், பெரியவன் கவிராயர் எழுதிய முருகன் பள்ளும் குறிப்பிடத்தக்கவை. திருவாரூர் பள்ளு, வாரானைப் பள்ளு, ஞானப்பள்ளு, வைசியப் பள்ளு, திருநீலகண்டன் பள்ளு, கதிரமலைப்பள்ளு, குருகூர்ப் பள்ளு, பறாளை விநாயகர் பள்ளு போன்ற நூல்கள் சிறப்பானவை. எல்லாவற்றையும் விட சிறப்புடையதும் புகழ் பெற்றதும் முக்கூடற்பள்ளு ஆகும். இதுதான் பள்ளு நூல்களுள் பழமையானது.

இந்நூலை எழுதியவர் என்னயினாப் புலவர் என்று கூறப்படுகிறது. என்றாலும் நூலை எழுதியவர் பெயரை அறுதியிட்டுக் கூறமுடியவில்லை. இந்த நூல் தோன்றிய காலம் கி.பி. 18ம்நூற்றாண்டு எனத் தெரிகிறது. அந்தக் காலத்தில் சைவ, வைணவ சமயப் பிரிவினரிடையே மோதல்கள் நிகழ்ந்தன. அதனால் அக்காலத்து நூல்களில் இத்தகைய சமயப்பூசல்கள் வெளிப்படுகின்றன. நூலாசிரியர்கள் அவரவர் சமயத்துக் கருத்துக்களை தத்தம் நூல்களில் புகுத்தியுள்ளனர்.

இதர சிற்றிலக்கியங்களில் அரசன், இறைவன் போன்றவர்கள் தலைவர்களாக இருப்பார்கள். இதில் மட்டும்தான் உழைப்பாளி அதாவது விவசாயி, அவன் மனைவியர், அவனது ஆண்டை பாடப்படுகின்றனர். அவர்கள் தெய்வத்தைப் பற்றிப் பேசுவார்கள்.

முக்கூடற்பள்ளு நூலிலே காப்புச் செய்யுள்கள், குடிமை பெருமை, வளமை, செழுமை, குமுறல் கொடுமை, விடுதலை விளக்கம், விளைவு மகிழ்வு, கலங்கல் தெளிவு என ஏழு பகுதிகள் உள்ளன. இவற்றில் கொச்சகக்கலிப்பாவும் சிந்துவும் பாவகைகளாக இடம்பெறுகின்றன. பெரும்பாலான சிந்து பாடல்கள் பல்வேறு இராகம், தாளத்துடன் உள்ளன.

காப்புச் செய்யுள் பகுதி முடிந்ததும் பள்ளியரின் வரவு, முக்கூடற்பள்ளி, மருதூர்ப்பள்ளி என அறிமுகம் களை கட்டுவதே நாடகப்பாங்கிலானது. நிறைவுப் பகுதி பள்ளியரின் சமாதானம். கூடிப்பாடுதலுடன் அமைகிறது. பிறந்த ஊர்ப் பெருமையும் வணங்கும் கடவுள் நிறைவையும் சொல்லி ஏசலும் பூசலும் ஏராளமாய் நடக்கிறது. பள்ளனின் வரவும் பண்ணையாரின் உருட்டல் மிரட்டலும் தொடர்கிறது. இவற்றுக்கிடையில் அமைந்த கவிச்சுவையை நாம் பருகலாம்.

கடின உரையைக் கேட்டு வடிவழகக் குடும்பன்

குடிலிலிருந்தே அரை நொடியில் வந்தான்

பள்ளனைப் பண்ணைக்காரன்

கள்ளமாய்ப் பார்த்துப் பள்ளா

துள்ளாதே பண்ணைச் சேதி விள்ளடா என்றான்

என்ற பண்ணையாரின் கேள்விக்குப் பள்ளன் கூறிய பதில்,

பத்து உருவத்தழகர் பண்ணையான் கேட்டபடி

வித்துவகை மாட்டுவகை மேழி ஏர்க்கால் முதலாய்க்

கொத்துவகை அத்தனையும் கூட்டி வரத்துஞ் செலவும்

வைத்த இருப்புங்குடும்பன் மாறாமல் கூறினானே

இந்தப் பள்ளுக்குள் நுழைந்தால் இலக்கியச் சுவையை மட்டுமின்றி சமுதாய நிலையையும் தெளிவுறத் தெரி யலாம்.

நன்றி - தீக்கதிர்

கருத்துகள் இல்லை: