29/05/2011

சாராயப் பீப்பாய் - எட்கார் அல்லன் போ (அமெரிக்கா) – புதுமைப்பித்தன்

அவன் ஆயிரம் குற்றங்களைச் செய்தான்; ஆனால் என்னால் இயன்றவரை பொறுத்தேன். அவன் என்னைத் திட்டி அவமதித்தான். இனி, பழிக்குப் பழி தீர்க்க வேண்டியதுதான் என்று மன உறுதி கொண்டேன். எவ்வளவு காலம் ஆனாலும் சரி, வஞ்சம் தீர்த்துவிட வேண்டியதே என்று முடிவு கட்டிவிட்டேன். அதிலே எனக்கு ஒரு ஆபத்தும் நேரக்கூடாது. ஒருவனைத் தண்டிக்கும் பொழுது, தண்டனை கொடுப்போனுக்கு அபாயம் ஏற்பட்டால், அது தண்டனையாகாது. ஆதலால், ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்று மனத்தில் உறுதி செய்து கொண்டேன்.

இதனாலேயே அவனுக்கு என் விஷயத்தில் சந்தேகம் ஏற்படவில்லை. எப்பொழுதும் போல, அதாவது எனக்கு இந்தக் கோபம் ஏற்படுவதற்கு முன் இருந்தபடி, நான் அவனுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தேன்.
     அவன் ஒரு விஷயத்தில் பலவீனமானவன். மற்ற விஷயங்களில் எல்லாம் அவனுக்கு எல்லோரும் மரியாதை செய்து பயப்படுவார்கள். ஒரு விஷயத்தில் மட்டும் அவனுக்குத் தலைக்கு மிஞ்சிய அகங்காரம். திராக்ஷைச் சாராயத்தில் தனக்குத்தான் எல்லா விஷயங்களும் தெரியும் என்றும், மோசமான சாராயத்தைக் கொடுத்துத் தன்னை ஏமாற்றி விட முடியாது என்றும் தலைக்கு மிஞ்சிய தற்பெருமை. எல்லா இத்தாலியருமே அப்படித்தான். சமயம் ஏற்பட்டால், பிரிட்டிஷ், ஆஸ்திரிய கோடீஸ்வரர்களையும் ஏமாற்றுவதற்கு முயலுவார்கள். இந்த விஷயத்தில் அவன் தன் தேசத்தார்களைப் பார்க்கிலும் கொஞ்சம் உண்மையானவன். அவன் பெருமை கொள்ளுவதில் அதிசயமில்லை. உண்மையிலேயே அவன் கெட்டிக்காரன் தான்.

அப்பொழுது கார்னிவல் என்ற திருவிழாக் காலம். பொழுது சாயும் சமயம். அவனை வழியிலே சந்தித்தேன். அவன் அதிகமாகக் குடித்திருந்தாலும், என்னை உடனே அடையாளம் கண்டுகொண்டான். அவனை அன்று பார்ப்பதற்கே விசித்திரமாக இருந்தது. கோமாளி வேஷம்; கோணல் குல்லாய்; அதிலும் மணி கட்டிய குல்லாய். அவனைப் பார்ப்பதற்கு, நான் மிகவும் சந்தோஷம் கொண்டவன் போல், அவனது கையைப் பிடித்துக் குலுக்கினேன்.

"பார்ச்சுனாடோ ! நல்ல காலமாக உன்னைச் சந்தித்தேன். இன்றைக்கு என்ன, ரொம்ப குஷால் போலிருக்கிறது? நான் ஒரு சாராயப் பீப்பாய் வாங்கியிருக்கிறேன். அதை மிகவும் விலை உயர்ந்த 'அமான்டிலாடோ ' என்று சொல்லுகிறார்கள். ஆனால், எனக்குச் சந்தேகமாயிருக்கிறது."

"அது எப்படி? அமான்டிலாடோ வா? இந்தத் திருவிழாக் காலத்திலா?" என்று கேட்டான்.

"எனக்குச் சந்தேகந்தான். ஆனால், முட்டாள்தனமாக அதற்கு முழு விலையும் கொடுத்துவிட்டேன். உன்னை சந்தித்து, உன்னிடம் அபிப்ராயம் கேட்க அவகாசமில்லை. ஒரு வேளை, சாமான் கிடைக்காமல் போய்விடுமோவென்று அவசரத்தில் வாங்கிவிட்டேன்" என்று நான் பதில் சொன்னேன்.

"அமான்டிலாடோ வா?"

"எனக்குச் சந்தேகமாய்த்தான் இருக்கிறது! உனக்கு வேலை இருக்கிறதுபோல் தெரிகிறது. நான் லூசேஷியிடம் கேட்டுக் கொள்கிறேன். அவனுக்கு இந்த விஷயத்தில் நல்ல பரிச்சயம் உண்டு. நான் அவனிடம் போய்க் கேட்டுக் கொள்ளுகிறேன்" என்றேன் நான்.

"அவனுக்கு என்ன தெரியும்?"

"சில முட்டாள்கள் அவனுக்கு என்னமோ தெரியும் என்று சொல்லுகிறார்களே!"

"சரி, வா, போகலாம்!" என்றான் அவன்.

"எங்கே?"

"உன்னுடைய சாராயப் பீப்பாய் வைத்திருக்கும் அறைகளுக்குத் தான்."

"சிரமம் வேண்டாம். நீ நல்லவன் என்று உன்னிடம் அதிகக் கஷ்டத்தைக் கொடுப்பதா? நான் லூசேஷியிடம்."

"இல்லை, இல்லை. எனக்கு வேறு வேலை இல்லை. வா, போகலாம்" என்றான் அவன்.

"என்னத்திற்கு இவ்வளவு சிரமம்? மேலும், உனக்கு ஜலதோஷம் பிடித்திருக்கிறது போல் தெரிகிறது. மேலும் அந்த அறை பூமிக்குக் கீழே கட்டப்பட்டிருக்கிறது. அதனாலே எப்பொழுதும் ஈரம் சுவறியிருக்கும். மேலும் அந்த இடத்திலே விஷ வாயு நிறைந்திருக்கும். உனக்கு ஒத்துக் கொள்ளாது" என்றேன் நான்.

"இருந்தாலும், போகலாம் வா; ஜலதோஷம் ஒன்றும் பிரமாதமில்லை. அமான்டிலாடோ ! உன்னை ஏமாற்றி விட்டான்! லூசேஷி - அவனுக்கு என்ன தெரியும்!" என்று சொல்லிக்கொண்டே அவன் என்னை என் வீட்டிற்கு இழுத்துக்கொண்டு போனான்.
     வீட்டிலே வேலைக்காரர்கள் எல்லோரும் திருவிழாப் பார்க்கக் கம்பி நீட்டிவிட்டார்கள். "நாளைக் காலைவரை நான் வீட்டிற்குத் திரும்ப மாட்டேன்" என்று சொல்லியிருந்தேன்; அவர்கள் ஏன் வீட்டிலேயே காத்துக் கொண்டிருக்கப் போகிறார்கள்?

வீட்டிற்குள் சென்று, இரண்டு தீப்பந்தங்களை ஏற்றி, ஒன்றை அவன் கையில் கொடுத்து விட்டு, மற்றொன்றை வைத்துக் கொண்டு சாராயப் பீப்பாய் இருக்கும் நிலவறைக்குப் புறப்பட்டேன். படிக்கட்டுகளில் ஜாக்கிரதையாக இறங்கும்படி சொல்லிவிட்டு, வழி காட்டிச் சென்றேன். கடைசியாக ஈரம் சுவறும் நிலவறைகளை அடைந்தோம்.

அவன் தள்ளாடித் தள்ளாடி நடந்தான். குல்லாயில் இருக்கும் மணிகள் கிணு கிணு என்று அடித்தன.

"பீப்பாய் எங்கே?" என்றான் அவன்.

"இன்னும் கொஞ்ச தூரத்தில் இருக்கிறது. சுவரைக் கவனித்தாயா?" என்றேன் நான்.

அவன் என்னை ஏறிட்டுப் பார்த்தான். கண்கள் இரண்டும் குடிவெறி உச்ச ஸ்தாயியை எட்டி விட்டது என்று காண்பித்தன.

"விஷ வாயுவா?" என்றான் அவன்.

"ஆமாம். அதுதான் - உனக்கு இருமல் வந்து ரொம்ப நாள் ஆகிறதோ?" என்றேன் நான்.

அதற்குப் பதிலாக, வெகு நேரம் தொடர்ந்தாற் போல் இருமினானே ஒழிய, பதில் சொல்லவில்லை.

"அது ஒன்றும் பிரமாதமில்லை." என்றான் கடைசியாக.

"வா. திரும்புவோம். உனக்கோ உடம்பு சரியாக இல்லை. உள்ளே வந்து உயிரைப் பறிகொடுக்க வேண்டாம்" என்றேன்.

"சரி. போதும் போதும், இருமல் ஒருவனைக் கொன்று விடாது. அது எங்கே இருக்கிறது?" என்றான் அவன்.

"ஆமாம், உன்னை அனாவசியமாகப் பயப்படுத்த வேண்டும் என்பது என் எண்ணமல்ல. உன்னை எச்சரிக்கை செய்ய வேண்டியது என் கடமை. இதோ இந்தப் புட்டியில் இருக்கும் சாராயத்தைக் குடித்தால் குளிருக்கு ஜோராக இருக்கும்" என்று அவன் கையில் ஒரு பாட்டிலை எடுத்துக் கொடுத்தேன்.

அவன் பாட்டிலைக் கழுத்தைத் தட்டிவிட்டு மடமடவென்று குடித்தான்.

"நம்மைச் சுற்றிலும் புதையுண்டு கிடக்கும் மனிதர்களின் ஞாபகத்திற்காக இதைக் குடிக்கிறேன்" என்று சொல்லிக் கொண்டே நான் குடித்தேன்.

"உனது சுக வாழ்விற்கும்" என்றான் அவன்.

பிறகு இருவரும் கைகோத்துக் கொண்டு மேலே நடந்தோம்.

என் குடும்பப் பெருமைகளை அவனிடம் சொல்லிக்கொண்டே நிலவறைகளின் வழியாக அவனை வெகுதூரம் அழைத்துச் சென்று விட்டேன். விஷவாயுவின் கோரம் அதிகரித்ததினால் அவன் இன்னொரு பாட்டிலைக் காலி செய்தான்.

காலி செய்துவிட்டுச் சிரித்துக்கொண்டே ஒரு விசித்திரமான சமிக்ஞை செய்தான். நான் அவனை ஆச்சரியத்துடன் ஏறிட்டுப் பார்த்தேன். மறுபடியும் அதே மாதிரிக் காண்பித்தான்.

"உனக்கு அர்த்தமாக வில்லையோ?" என்றான் அவன்.

"இல்லை" என்றேன் நான்.
     "அப்பொழுது நீ மேஸன் இல்லை போல் இருக்கிறது" என்றான் அவன்.

(மேஸன் என்றால் இங்கிலீஷில் கொற்றன் என்று அர்த்தம். மேலும் மேஸன் சங்கம் என்று ஒரு இரகசிய சங்கமும் உண்டு. அது உலகம் பூராவும் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் இப்பொழுதும் அந்தச் சங்கம் இருந்து வருகிறது. அதில் இப்பொழுது அதிகார வர்க்கத்திற்கு ஆதரவு கொடுப்போர்களும் அதிகாரிகளுமே அங்கத்தினர்களாய் இருந்து வருகிறார்கள். அந்த இரகசியச் சங்கத்திற்குக் கொற்றனுடைய சுண்ணாம்புக் கரண்டி ஒரு சின்னம்.)

"ஆமாம், ஆமாம், நானும் அப்படித்தான்" என்றேன் நான்.

"நீ! இருக்க முடியாது. நான் நம்பவில்லை" என்றான் அவன்.

நான் என் சட்டைப்பையில் இருந்து ஒரு சுண்ணாம்புக் கரண்டியை எடுத்துக் காண்பித்தேன். அவன் திடுக்கிட்டு நாலைந்து அடி பின் நடந்து "நீ வேடிக்கை பேசுகிறாய்! வா! அது எங்கே இருக்கிறது? காண்பி!" என்றான்.

நாங்கள் போகும் இடத்தில் விஷ வாயு அதிகமாக இருந்ததினால் கையில் இருந்த வெளிச்சங்களும் சுவாலைவிட்டு எரியாமல் மங்கி மினுமினுத்தன.

கடைசியாக ஒரு சிறு அறைக்கு அவனை அழைத்துச் சென்றேன். அது மிகவும் சிறியது. நாலடி நீளம், மூன்றடி அகலம், ஏழு அடி உயரம், சுவரைக் குடைந்து அதில் இருந்த சுண்ணாம்பையும் எலும்புகளநயும் தோண்டி எடுத்துச் சிறு குகை போல் சுவரில் குடையப்பட்ட இடம்.

அவன், மங்கிய வெளிச்சத்தைக் கண்டு அங்கே என்ன இருக்கிறது என்று எட்டிப் பார்க்க முயன்றான்.

"உள்ளே தாராளமாகப் போ. அங்கேதான் அமான்டிலாடோ இருக்கிறது. பாவம்! லூசேஷி."

"அவன் ஒரு முட்டாள்" என்று சொல்லிக்கொண்டே தள்ளாடிய வண்ணம் உள்ளே சென்றான்.

உள்ளே போய் அந்தப் பக்கத்துச் சுவரின் பக்கம் சென்றதும் சுவரில் இருக்கும் சங்கிலியை அவனது இடுப்பைச் சுற்றிப் போட்டுப் பூட்டி விட்டேன்.

"சுவரைத் தடவிப் பார். அங்கெல்லாம் விஷ வாயு எல்லாம் ஜாஸ்தியாக இருக்கிறது! ஜில் என்று குளிர்ச்சியாக இல்லையா? இங்கே வந்துவிடு! உனக்கு வேண்டிய உதவி எல்லாம் நான் செய்கிறேன்."

அவன் ஆச்சரியத்தால் திடுக்கிட்டான். ஆனாலும் "அமான்டிலாடோ !" என்று கேட்டான்.

"ஆமாம், ஆமாம்" என்று சொல்லிக் கொண்டே கீழேயிருந்த கல், எலும்பு இவைகளையெல்லாம் வைத்து அந்தச் சிறு நிலவறையின் வாயை அடைக்க ஆரம்பித்தேன்.

ஒரு வரிசை கல்வைத்து முடிவதற்குள் அவனுக்குக் குடிவெறி எல்லாம் தீர்ந்துவிட்டது என்று தெரியும்படியாக ஒரு குரல் கேட்டது. அது குடிவெறியில் இருப்பவனின் ஓலம் இல்லை.

இரண்டாவது, மூன்றாவது, நாலாவது வரிசையை வைத்துக்கொண்டு போக ஆரம்பித்தேன். அதுவரை அவன் மௌனமாக இருந்தான். ஆனால் சங்கிலி சலசலவென்று சப்தம் போட்டது. அதுவும் பின்பு நின்றுவிட்டது. மறுபடியும் நான் சுவரை எழுப்பிக் கொண்டே போக ஆரம்பித்தேன். சுவர் என் நெஞ்சுவரை உயர்ந்துவிட்டது. பந்தத்தை வைத்துக்கொண்டு, உள்ளே எட்டிப் பார்த்தேன்.

சப்தமும் கூப்பாடும் அதிகரித்தன. அவனது துன்பத்தைப் போக்க எண்ணி இடையில் இருந்த பட்டாக்கத்தியை எடுத்து இருட்டில் துழாவினேன். சுவரில் கைகளை வைத்தேன். அது பலமாக நின்றது. அவன் கூப்பாடுகளுக்குப் பதில் சப்தம் போட்டுக்கொண்டே சுவரைக் கட்ட ஆரம்பித்தேன்.

நடு நிசி ஆகிவிட்டது. பத்தாவது வரிசைவரை கட்டி முடித்தேன். கடைசியாக ஒரு கல்லை வைத்தால் சுவர் முடிந்துவிடும்.
     அதைச் சிரமப்பட்டுத் தலைக்கு மேலாகத் தூக்கி அதன் மேல் வைக்க முயன்றேன். அப்பொழுது உள்ளிருந்து ஒரு மெதுவான சிரிப்புக் கேட்டது. பின்பு துயரம் நிறைந்த குரல்களுடன் என்னமோ சொல்ல ஆரம்பித்தது. அது, - அந்தச் சிரிப்பு, அந்தப் பேச்சு, அந்தக் குரல் - எல்லாம், என் மனத்தில் ஒரு பெருத்த பயத்தை உண்டாக்கின.

"என்ன வேடிக்கை! எத்தனை நாள் சிரிப்பு! அப்புறம், அந்தச் சிரிப்பு?"

"அமான்டிலாடோ !" என்றேன் நான்.

"ஆமாம், அதுதான் வேடிக்கை! வீட்டிலே மனைவி காத்திருப்பாள், நேரமாகிறது போவோம் வா!" என்றான் அவன்.

"ஆமாம், போவோம் வா!" என்றேன் நான்.

"கடவுளுக்காக!" என்றான் அவன்.

"கடவுளுக்காக" என்றேன் நான்.

அதற்குப் பதிலே கிடையாது. நெடு நேரம் கழித்து அவன் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டேன். பதில் இல்லை. வெளிச்சத்தை வைத்து உள்ளே எட்டிப் பார்த்தேன். மணிச் சப்தம்தான் கேட்டது. நிலவறையின் குளிர்ச்சியாலும் கெட்ட நாற்றத்தாலும் எனக்கு மயக்கம் வந்தது. மீதி ஒரு கல்லையும் வைத்து மூடிவிட்டுத் திரும்பினேன். சென்ற இருபத்தைந்து வருஷங்களாக ஒருவரும் அங்கு வரவில்லை. இனி? ஓம் சாந்தி!

கருத்துகள் இல்லை: