29/03/2011

பாச்சூர் வட்டாரத் தாலாட்டுப் பாடல்கள் - பி.கரிகாலன்

நாட்டுப்புறவியல் தமிழகத்தில் வளர்ந்து வரும் துறைகளில் ஒன்று. நாட்டுப்புறவியல் பன்முகம் கொண்டது. அதில் ஒன்று நாட்டுப்புறப் பாடல்கள். இவற்றின் படைப்பாளர்கள் நம் மண்ணுக்கே உரிய பாமர மக்கள் இப்பாடல்களை இயற்கைப் பாடல்கள் எனலாம். கிராம மக்களின் உள்ளுணர்வின் பிரதிபலிப்பாக விளங்கும் இப்பாடல்கள் காடுகளிலும் வயல்களிலும் தொழில் செய்யும் இடங்களிலும் பிறக்கின்றன.

நாட்டுப்புறப் பாடல்களில் ஒரு அங்கமாகவும் குறிப்பிடத் தக்கதாகவும் விளங்குவது தாலாட்டுப் பாடலாகும். குழந்தையை உறங்க வைப்பதற்காகத் தாயால் பாடப்பெறும் இப்பாடல் குழந்தை மீது தாய் கொண்ட அன்பின் வெளிப்பாடாகும். திருச்சி மாவட்டம் பாச்சூர் வட்டாரத்தில் கள ஆய்வு செய்த போது திருமதி. ரா. சிலம்பாயி என்பவர் பாடிய ஏழு தாலாட்டுப் பாடல்கள் இக்கட்டுரைக்கு உரிய பொருளாகும்.

தெய்வப் பொருள்:-

குழந்தைப்பேறு மனிதன் பெறும் செல்வங்களில் இன்றியமையாதது. குழந்தைப் பேறு தாமதமானால் பல்வேறு கோயில்களுக்கும் வேண்டிக் கொண்டு வழிபடுவர். தன் குழந்தை இறைவனை வேண்டிப் பெற்ற ஒன்று, தெய்வ அருளுடையது என்பதைத் தன் தாலாட்டில் தாய் புலப்படுத்துகிறாள்.

ஏ, திருச்சிக்கு நேர் கிழக்கே என் கண்ணே

திருவானைக் காவல் விளங்கி

ஏ, சம்புலிங்க நாதர் கிட்ட என் கண்ணே

உங்க அம்மா திருவிளக்கு போட்டேனப்பா

ஏ, திருவிளக்கு போட்டதனால் என் கண்ணே

செல்ல நீ பிறந்தாயடா

என்னும் பாடலில் ஒரு தாய் தன் குழந்தை திருவானைக்கா இறையருளால் பிறந்தது என மனம் பூரிப்பாதை உணரலாம்.

குழந்தைப் பாதுகாப்பு:-

தன் மழலைச் செல்வத்தால் மனம் மகிழும் வாராது வந்த மாணிக்கத்தைப் பேணி காக்க வேண்டும் எனும் விருப்புடையவள் தன் விருப்பத்தைக் கற்பனை கலந்து தாய் வெளிப்படுத்திப் பாடுகிறாள். பெற்ற குழந்தை வளர்ந்து பெரியதாகும் வரையில் தாய் தன்னலம் கருதாது குழந்தையைக் காக்கின்ற தன்மையை

ஏ ஏலேலோயாங் கோபுரமாம் என் கண்ணே

எறும் பேறா மாளிகையாம்

ஏ எறும் பேறா மண்டகத்தை என் கண்ணே

உன்னம்மா உடனிருந்து வளர்ப்பேன்

ஏ பத்தலையாம் கோபுரமாம் என் கண்ணே

அங்கே பாம்பேறா மாளிகையாம்

ஏ பாம்பேறா மாளிகையில் என் கண்ணே

உன்னம்மா பார்த்திருந்து வளர்ப்பேன்.

என்ற பாடல் வெளிப்படுத்துகிறது.

குழந்தைக் கல்வி:-

தாலாட்டுப் பாடல்கள் குழந்தையை உறங்க வைப்பதற்கு ஆயினும் குழந்தையின் எதிர் காலத்தைக் கனவு கண்டு தாய் தன் மனவிழைவை வெளிப்படுத்துவதாகவும் அமைகின்றன. தன் குழந்தை பெரிய புகழுக்குரியவனாக வேண்டும் என்ற விருப்பத்தைக் குழந்தையிடம் அறிவுறுத்த வேண்டும் என்னும் கருத்தில் அமைகிறது. இவ்வகையில் குழந்தைக் கல்வி குறித்து,

ஏ ஆட்ட ஆட்ட இராட்டினமாம் என் கண்ணே

உனக்கு மலைக்கோட்டை காயிதம்மா

என் காயிதத்த வாசிக்க என் கண்ணே நீ

கருத்தா பொறந்த தம்பி

என் செம்புல சிலையெழுதி என் கண்ணே

உங்க சின் மாமன் பெயரெழுதி

ஏ வம்புல வனையோல் என் கண்ணே நீ

வாசிக்கும் தென்னோல

என் குருத்தோல வாசிக்க என் கண்ணே

நீ கருத்தா பொறந்த தம்பி

என்ற பாடலில் தாய் தன் குழந்தையை எண்ணிப் பாடுகிறாள். மற்றொரு பாடலில், ஒரு தாய்...

ஏ பொய்யுறக்கம் இல்லையின்று என் கண்ணே

நீ பொஸ்தகத்த கைப்பிடிச்ச

ஏ இங்கிளும் பேனாவும் எங்க கண்ணே

நீ எழுதி வரும் மைக் கூடும்

ஏ எழுதி வெளிய வந்தா என் கண்ணே

உனக்கு இருபக்கம் சோதி மின்றும்

ஏ படிச்சு வெளியே வந்தா என் கண்ணே

ஓம் பக்கமெல்லாம் சோதி மின்னும்

கல்வி தன் பிள்ளைக்குப் பெருமை சேர்ப்பதாகப் பாடுகிறாள்.

தாயார் மனவுணர்வு:-

தாலாட்டுப்பாடல்கள் பாடும் தாய் தன் குழந்தையின் எதிர்காலம் பற்றிய மன ஓட்டத்தைத் தான் பாடல்களில் புலப்படுத்துகிறாள்.

ஓடுதய்யா மானுங்களும்

ஓடிளியும் வனந்தேடி

ஓடி மாறிப்பாயாம்

ஒனக்குஒரு கால்சியம்புதிர

என்ற வரிகள் குழந்தை வீரனாக வேண்டும் என்ற விருப்பமும், என் காட்டிலே நிக்குதய்யா என்ற வரிகளில் தான் ஏழையாயினும் தன் மகள் வளம் பெற்றிருக்க வேண்டும் என்ற விருப்பமும் புலனாகும்.

காது குத்தல்:-

கிராமங்களில் குழந்தைக்கு முடியிறக்குதல், காதுகுத்தல், முதலிய சடங்குகள் குடும்ப விழாவாகவே கொண்டாடப்பெறும். இந்நிகழ்ச்சிகளில் குடும்ப உறவுகளுக்கு முதன்மை அளித்துப் போற்றுவர். பெரும்பாலும் தாய் தன் சகோதரனும் குழந்தைக்கு மாமனுமாகியவன் தரும் பிறந்த வீட்டுச் சிதனங்களைப் பெருமையுடன் நினைத்துக் கூறுவாள்.

தன் மகனுக்கு காது குத்துதலை,

என் தங்க விசிறி கொண்டு என் கண்ணே

உங்க தாய்மாமன் சீர் கொண்டு

ஏ கொட்டு முழுக்கோட - என் கண்ணே

உங்க மாமன் கோடி சனம் கூட்டத்தோட

ஏ காது கடுக்கண் கொண்டு - என் கண்ணே

உனக்கு கணையாழி மோதிரமும்

உன்னைக் கோயிலேறக் குந்த வச்சி

ஏ குத்துங்க காதையின்னார் உங்க மாமன்

என்ற பாடலில் தாய்மாமன் சீரின் பெருமையைக் குறிப்பிட்டுத் தாலாட்டுகிறாள். உறவுகளுக்கு மதிப்பளிப்பதுடன் உறவுகளின் கடமையை உணர்த்துவதாகவும் அமையக் காணலாம். இப்பாட்டில் காதுகுத்தும் சடங்கில் மாமன் முக்கியப் பங்காற்றுவதை அறிய முடிகிறது.

அறிவுரை வழங்குதல்:-

தாலாட்டுப் பாடல்களைக் குழந்தைகள் உணர்வது அரிது எனினும் அவை குழந்தைகளுக்காகப் பாடப்பெறுவனவே எனவே தாய் தன் பாடலில் குழந்தைக்கு நல்லுரைகளைக் கூறி அறிவுறுத்துகிறாள். அதே நேரம் தன் சகோதரன் குழந்தையின் மாமனைப் பாராட்டும் தாய் தன் குழந்தைக்கு அத்தை உறவுடைய பெண்ணைக் குறிப்பிடுகையில்

ஏ அத்தத்த வீட்டுக்கெல்லாம் நித்த நித்தம்

போகாதே

ஏ பாம்படிச்சி மேல போடும் என் கண்ணே

பழிகார அத்தமவ

என்கிறாள். இது தன் மனவுணர்வைத் தன் குழந்தையிடம் திணிக்க விரும்பும் தாயுணர்வை வெளிப்படுத்துகிறது.

இத்தகைய தாலாட்டுப் பாடல்கள் தாயின் துன்ப நிலைக்கு வடிகாளாகும். மேலும் எதிர்கால இன்பத்திற்கு அடையாளமாகப் பிள்ளை விளங்குவதையும் உணர்த்தும். பெரும்பாலான நாட்டுப்புறப் பாடல்களின் தாலாட்டினைப்போல இப்பாடல்களிலும் ஆண் மகவே சீராட்டப்பெறுகிறது. இப்பாடல்கள் உளவியல் நீதியாகத் தோன்றிய பாடலாகும். தன் மனநிலை பிறந்தகம் போற்றுதல், தன் விருப்பம் கூறுதல், சடங்கு பேணுதல், முதலிய நிலைகளில் தாயின் ஆழ்மன வேட்கை வெளிப்பட்டு நிற்கும்.

நன்றி: வேர்களைத்தேடி

 

கருத்துகள் இல்லை: