30/01/2011

பாலைக்கலி முதலாக உள்ளமை - முனைவர் வ. உமாபார்வதி

பாவின் பெயர் பெற்ற எட்டுத்தொகை நூல்கள் கலித்தொகையும் பரிபாடலும் ஆகும். இவ்விரண்டும் ஐந்தினை அகப்பொருள் செய்திகளைப் பாடுதற்கு உரிமை வாய்ந்தவை என்பர் தொல்காப்பியர். பாவமைப்பிலும் இவ்விரண்டும் ஒப்புமையுடையன. கொச்சகம், அராகம், சுரிதகம், எருத்தம் என்னும் உறுப்புக்கள் இவ்விரண்டும் பாவிற்கும் பொதுமையானவை. இரண்டுமே இசைப்பாடல்கள் என உரையாசிரியர்கள் குறிப்பர். இனி அன்பினது தன்மையைச் செய்யுளாக வடிக்கும் புலவர்கள் பாலைத்திணையையே விரும்பிப்பாடினர். சங்க அகப்பாடல்களில் பாலைச் செய்யுட்களே சாலப்பல. ஐந்திணைகளுக்குப் பொதுவான அகநானூற்றில் பாலைக்கு மட்டும் 200 செய்யுட்கள் உள்ளன. எஞ்சிய நான்கு திணைகளும் 200 செய்யுட்களே பெற்றுள்ளன.

கற்றறிந்தோர் ஏத்துக் கலித்தொகையில், 150 பாடல்களில் பாலைக் கலிப்பாடல்கள் 35 ஆகும். இந்நூல் புறச்செய்தி சார்ந்த சில பெயர்கள் ''தென்னவன் கடல் வையை'' என இடம் பெறுகின்றன. கதை தழுவிய புராணச் செய்திகள் சுமார் 20 பாடல்களில் இடம் பெறுகின்றன. இந்நூலில் ''பாலைத்திணை'' முதலிடம் பெறுவதனால் சிறப்புறுகிறது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற இந்த வைப்பு முறைப்படி இக்கலித்தொகையில் குறிஞ்சி ஏன் முதலிடம் பெறவில்லை என்ற வினா எழுகிறது. பாலைத்திணை முதலிடம் பெறுதற்குச் சிறப்பான காரணங்கள் பல உள்ளன. அறிஞர் பலர் இதனை ஆ€ராய்ந்து தத்தம் கருத்துக்களைத் தந்துள்ளனர்.

நச்சினார்க்கினியர் இதுபற்றிக் கூறுமிடத்து, ''முல்லை, குறிஞ்சி, மருதம் நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே என்புழிச் சொல்லாத முறையாற் சொல்லவும்படும் என்றலின் இத்தொகையைப் பாலை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என இம்முறையே கோத்தார் நல்லந்துவனார்'' என்பதாம். நச்சினார்க்கினியர் கூறும் கருத்து நிறைவு அளிக்கவில்லை. இன்னும் சிறப்பான காரணம் இருந்திருக்க வேண்டும்.

பாலைத்திணை பிரிதல், பிரிதல் நிமித்தம் என்ற உரிப்பொருளுடைத்து, இன்பமிகவுடைய அன்புடைக் காதல் வாழ்வை என்புருக மேற்கொள்ளும் தலைமக்களின் அக வாழ்க்கையில் அன்புமழை வளர்க்கும் இன்பப் பயிர்தானே சுவையுடைத்து, சுகமுடைந்து. அப்படி இருக்கையில் அதற்கு மறுதலையாய் துன்பம் என்னும் ஊற்றெடுக்கும் பிரிவுப் பேராற்றை பாலைத்திணையை ஏன் முதல் அமைத்தனர் ஆசிரியர்? என்னும் வினா எழுகிறது.

உலக, வாழ்வில் கண்கூடாக நாம் காண்பன பல பல. பொதுவாகவே இன்பத்தைவிடத் துன்பமே மனிதனை உலுக்குகிறது. இன்பம் மனிதனைத் தென்றலாய்த் தழுவுகிறது. அதில் கவர்ச்சி உண்டு கவினும் உண்டு. துன்பம்? அது இன்பத்தைப் போல் கவர்ச்சி உடைத்தன்று. ஆனால் மனித மனத்தில் ஆழப்பதிவதும் அழுந்திப் பதிவதும் இத்துன்ப உணர்வே. மனித மனக்கேணியில் மிதக்கும் சருகுகள் இன்பங்கள் என்றால் அதில் நிலைக்கும் கற்கள், பாறைகள் துன்பங்களாகவே இருக்கின்றன. இன்பத்தில் மனிதன் தன்னை மறந்த லயம் தன்னில் வாழ்கின்றான். துன்பத்திலோ அவன் சுடச்சுட ஒளிரும் பொன்போலத் தன்னை உணர்ந்த தகைமை பெறுகின்றான். அனுபவங்கள், உண்மைகள், குறிக்கோள்கள், உறுதிகள் என்ற முத்துக்களை ஈன்றெடுக்கும் சிப்பியாய்த் துன்பம் திகழ்கின்றது.

இத்தகைய துன்பத்தைக் காதலர் வாழ்வில் பெற்றுத் தருவது பிரிவு காதலி தன் இல்ல தலைவனை நெஞ்சு நெகிழ்ந்து கண்­ரால் நனைந்து துன்ப வலை வளைந்து இருப்பது அவள் இயல்வு. கல்லும், முள்ளும், புள்ளும் மாவும் கலந்து புலம்பும் இயல்புடைய பாலை நிலத்தை வெயில் என்ற துணையுடன் கடந்து செல்கின்றான் தலைவன்; அது அவன் இயல்பு.

இப்படித் தலைமகன் தன்னுடைய வயின்போற் தொழுதேத்த வயங்கிய கற்பினளாம் தலைவியைப் பிரிந்து போதல் யாது பற்றி என்ற ஐயம் எழுகிறது. தலைவன் சில காரணங்களால் தலைவியைப் பிரிந்து செல்லற்குரியன். அவை

''ஓதல் காவல் பகைதனி வினையே

வேந்தர்க்குற்றழி பொருட்பிணி பரத்தையென்று

ஆங்க ஆறே அவ்வயிற் பிரிவே''

என்கிறது இறையனார் அகப்பொருள் நூற்பா 35.

இன்ப துன்பம் கலந்ததே மானுட வாழ்க்கை காதலும், பிரிவும் அதன் இரு பக்கங்களாகும். கை என்பது அகங்கையை மட்டும் குறிப்பதன்று புறங்கையையும் சேர்த்துத்தான். மனிதனுக்குக் காதல் இன்பமே மட்டும் நிறைவளிக்காது. அவன் பிரிவையும் சம அளவில் விரும்புபவன். எனவே பிரிவு என்பதும் அவனுக்குரிய ஒரு கடமையாகின்றது. அவன் பிரிந்த காலத்தில் தலைவியின் நிலை, அவன் நிலை உணர்ந்து அவன் வரும்வரை பிரிவுத்துயரை ஆற்றியிருத்தல் அவள் கடமை. இதனைப் பெருங்கதையும்

''ஆண்கடன் அகறல் அதுநோன்று ஒழுகுதல்

மாண்பொடு புணர்ந்த மாசறு திருநுதல்

கற்புடை மகளிர் கடன்''

என்கிறது. எனவே ''வாழ்த லுண்கண்ண ளாயிழை சாதலதற்கன்ன ­ங்குமிடத்து'' என்று காதல் இன்பக்கடல் களித்துரைக்கும் தலைவனும் தன்முன் நீளும் பிரிவுப் பாலத்தில் நடக்கத் துணிகின்றான். தலைவியும் அப்பிரிவுப் பாலத்தில் தன் துன்பத்தைத் தூது விடுக்கின்றாள்.

தலைவனின் பிரிவு:

பொருள் - பொருள் இலார்க்கு இவ்வுலகம் இல்லை. உள்ளது சிதைப்போர் ஊரெனப் படார்.

ஓதல் - நில்லா நிலையுடை உலகினில் கல்லாதிருத்தல் சிறப்பன்று, அஃதொன்றே மாடு; செல்வம்.

தூது - நாட்டுக் குடிமகன் என்ற பொறுப்பால் அதன் விருப்பால் ஆற்றும் பணி.

காவல் - தன்னலம் போற்றாது பிறர்நலம் காணத் துணை புரிவது காவற்பிரிவு.

பரத்தை - அவன் மனநிலை வழி நிகழ்வது.

இவற்றுள் ஈண்டு பரத்தையிற் பிரிவு சிறப்புடைத்தன்று; இவண் பேசப்படுவது அறமுடைப் பிரிவே; அஃதாவது பொருள்வயிற் பிரிவே என்பது பொருந்தும்.

''எல்லாம் பொருளில் பிறந்துவிடும்'' என்பதனைக் கல்லாதவரும் நன்கறிவர். எனவே அறம், இன்பம் என்ற இருகரை உடைய ஒரு பெருங்கடலாம் வாழ்வைச் கடக்க உதவும் கலமாய்த் திகழ்வது பொருளாம். அப்பொருள் இலதாயின் வாழ்வு என்ற சொல்லிற்கே வனப்பு இராது; வளம் பெருகாது.

தலைவன் பல காரணம் கருதியே பிரிவை எண்ணுகிறான். ''அரிதாய அறனெய்தி அருளியோர்க்களித்தலும் பெரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும், புரிவமர் காதற் புணர்ச்சியும் தரும்'' என்ற பல காரணங்களால்தான் அவன் பொருள்வயிற் கருத்தூண்றிப் பிரிந்து செல்கிறான். எனவே ''ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை'' என்றும், ''இனியான் உண்ணலும் உண்ணேன், வாழலும் வாழேன்'' என்றும், துன்புறும் தலைவியும் இதுபோன்ற காரணம் கூறி ''வருவர் கொல்'' என்று தோழி ஆற்றுவித்ததும் தன்துயர் ஆற்றுகிறாள்.

பாலைக்கலி துன்பச் சாற்றைப் பிழிந்து தருகிறது. அத்துன்பச் சாற்றின் சுவையோ உயர்ந்தோங்கும் இன்பமாய்த் திகழ்கிறது. இந்த வித்தை நிகழிடம் இலக்கியம் ஒன்றிலேயேதான். அன்பால் பிணைந்த அக வாழ்வை நினைந்து தலைவி உருகிப்பாடும் பாடல்கள் கற்போரையும் உருக்கி அவர் மனத்தில் பதிவனவாகும். எனவே கற்போர்க்குக் கழிபேரின்பம் அளிக்கவல்ல இப்பாலைத்திணை முதலிடம் பெற்றது.

அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சாம். பிரிவற்ற காதல் செறிவற்று நிற்கும். அதில் காதல் நெருக்கம் இருக்காது. உருக்கம் பிறக்காது காதலர்தம் உள்ளங்கள் பிணைந்திட நாளும் இணைத்திடப் பிரிவு உற்ற நண்பனாய்த் திகழ்கிறது. நிழலின் அருமை வெயிலில்! நீரின் அருமை தாகத்தில்! அதைபோல் அன்பின் அருமை பெருமை எல்லாம் பிரிவிலேயாம்.

மனிதனின் வாழ்க்கையில் இளமைப்பருவம் சிறப்பானது. அவனது பெருமை, ஊக்கம், முயற்சி, குறிக்கோள் எல்லாவற்றையும் செயல்படுத்த வாகாய் இருப்பது அவ்விளமைப் பருவமே. எனவே தான் பிரிவும் இத்தகு இளமையில் நிகழ்கிறது. இளமையில் பொருள் வளமை கொள் வாழ்வளிக்கும் வாழ்வின் பொருளை உணர்ந்த தலைவன் வாழ்க்கைக்குப் பொருளீட்டத் தலைவியைப் பிரிகிறான்.

இந்நூலின் இலக்கியச் சுவைக்கும் கற்பனை வளத்திற்கும் தலைவனின் பிரிவுநிலைப் பாடல்களைச் சான்றாகக் காட்டலாம். தலைவனும் பிரிவுக்கு வருந்தியுரைக்கும்போது, பதநீர் குடித்த ஓலையும், பழகிய மக்கள் விட்டுப்போன பாழடைந்த ஊரும், சூடி உலர்ந்ததும் வீழ்த்திய பூவும் போலத் தன் நிலைமை ஆயினமையைத் தலைவி குறிக்கின்றாள்.

''தோணல முண்டு துறக்கப் பட்டோர்

வே­ ருண்ட குடையோ ரன்னர்

நல்குநல் புரிந்து நலனுணப் பட்டோர்

அல்குநர் போகிய வூரோ ரன்னர்

கூடினர் புரிந்து குணனுணப் பட்டோர்

சூடின ரிட்ட பூவோ ரன்னர்'' (பாலைக்க. 23)

மற்றொரு பாடல், தலைவி தலைவனுடன் உடன்போக்கு நயந்து சென்றுவிட்டாள். செவிலி தேடிச்சென்று இடைச்சுரத்தில் முக்கோல் பகைவரைக் கண்டு தன் வருத்தத்தைக் கூறி வழியில் அவர்களைக் கண்டீர்களா? என வினவுகிறாள். அப்போது அவர்கள், ''ஒரு பெண் தனக்குத்

தகுந்தவனைத் தேர்ந்து காதலித்து மணங்கூடுவது குற்றமன்று'' என்று எடுத்துக்கூறி அத்தாயைத் தேற்றுகின்றனர்.

''பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை

மலையுளே பிறப்பினு மலைக்கவைதா மென்செய்யும்

. . . . . . . . . . . . . . . . . .

புழுங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே'' (பாலைக்க. 9)

தலைவன் பிரிந்த கொடிய பாலையின் வெம்மையைப் பொருத்தமான உவமையால் சுவை கூட்டுகிறார் புலவர். தலைவன் பிரிந்து செல்லும் பாலை நிலத்தின் வெம்மை மேகம் விளக்கமாக இருக்கிறது. ஒண் கதிர், தன் சக்தியையெல்லாம் ஒருங்கிணைத்த பாலை நிலத்தை வெம்மையாக்குவதால் நிறைவு கொண்டிருக்கின்றான். அவனது வெம்மையைக் காட்டுமிடத்து, முப்புரம் எரித்த விரிசடைக் கடவுளின் தோற்றத்தை உவமித்துக் கூறியுள்ளார். அமரர்கள் அவுணர்களை அடக்கித் தங்களைக் காக்குமாறு இறைவனிடம் இரக்கின்றனர். யாவராலும் அடக்கவியலா மடங்கற்போர் செய்யும் மாயம் பல கூட்டும் அவுணர்பால் சினம் கிளர்ந்தெழப் புறப்படுகின்றார் திங்கள் தங்கு சடையான். இப்பொருள் தரும் பாடலடியாவது,

''முக்கண்ணன் மூவெயிலும்

உடன்றக்கால் முகம் போல''

என்பதாம். பிரிவு கருதிய தலைவனுக்குத் தோழியும், தலைவியும் கூறுகினற அறிவுரைகள், மனிதருக்கு யாக்கை, இளமை, செல்வம், நிலையாமைகளை அறிவுறுத்தி மெய்யறிவு புகட்டுகின்றன. இவ்வகையில் இப்பாலைக்கலி ஒரு மெய்ஞ்ஞான நூலாகவேத் திகழ்கிறது. மக்கட் பிறப்பின் பயனைக் கூறியதாலே ஆசிரியர் நல்லந்துவனார் இப்பாலைக்கலியை, கலித்தொகையின் முன்னிறுத்தினார் போலும். மேலும் தமிழ் அகப்பொருள் மரபும், வாழ்க்கைச் சிறப்பும், தலைவி தலைவனிடம் நிகழும் தூய்மையான காதலும் அவர்தம் பண்பட்ட உள்ள வளர்ச்சியும் பாலைக்கலியில் தெற்றெனப் புலனாகிறது.

பிரிவுப் பொருள் கருதும் பாலைக்கலி, கலித்தொகையில் முதலாவதாக வைக்கப்பெற்றிருப்பதற்கு அதன் உருக்கம் நிறைந்த பாடல்கள், அப்பாடல்கள் தரும் பிரிவுத் துன்பத்தால் வரும் கலையின்பம், இளமையின் சிறப்பு, இலக்கிய நயம், நலம் நிறைந்த பாங்கு முதலியன காரணங்கள் எனக் கூறலாம்.

நன்றி: முன்னைத் தமிழிலக்கியம்

 

கருத்துகள் இல்லை: