30/01/2011

தமிழர் போராட்டத்தின் அடிப்படைக் கூறுகள் - பி. யோகீசுவரன்

ஆற்றிங்கல் அரசியின் மகனான மார்த்தாண்டவர்மன் மருமக்கள் தாய முறைப்படி வேணாட்டின் அரசராக 1929 ஆம் ஆண்டு முடிசூட்டப் பெற்றார். அவருக்கு முன் ஆட்சி செய்த மன்னரின் மக்களும் எட்டு வீட்டுப் பிள்ளைமார் எனப்படும் நாயர் பிரபுக்களும் நாயர் படையின் பெரும்பகுதியினரும் மார்த்தாண்டரை வீழ்த்த முயன்றனர். ஆனால் மர்த்தாண்டர் முனைப்பாகச் செயல்பட்டு எதிரிகளை வீழ்த்தி நாயகர்களின் மேலாண்மையைத் தகர்த்தார். கன்னியாகுமரி முதல் காயங்குளம் வரை நாட்டை விரிவாக்கம் செய்தார் நவீன திருவிதாங்கூரை உருவாக்கும் இப்பணியில் அவர்க்குப் பெரிதும் துணையாக இருந்தவர்கள் தென்பாலுள்ள தமிழர்களே நாஞ்சில் நாட்டைச் சார்ந்த ஆறுமுகம் பிள்ளை தற்காலிகத் தளவாயாகப் பணியாற்றினார். குமாரசாமிப் பிள்ளை நாஞ்சில் நாட்டார் படைகளின் தலைமைத் தளபதியாக விளங்கினார். தாணுபிள்ளை அடுத்த நிலையில் அரசர்படையில் பணி செய்தார் ராமையன் என்ற தமிழர் களவாயாகத் தன் வாழ்நாள் முழுவதும் பெரும்பணி செய்தார் இத்தமிழர்கள் தான் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து மறவர் படையைத் திரட்டிக் கொண்டு வந்து அரசரின் வெற்றிக்கு அருந்துணை செய்தனர். மார்த்தாண்ட வர்மா மகாராஜாவின் இந்த வெற்றியினை மலையாள கலாச்சாரத்திற்கு எதிராகத் தமிழர்க்குக் கிடைத்த வெற்றி எனக் கூறுகிறார் வரலாற்று ஆசிரியர் பணிக்கர். ஆனால் மார்த்தாண்டவர்மருக்கு முன்பும் பின்பும் அரசு கட்டிலேறிய அப்பகுதி அரசர்கள் யாவரும் தங்களைச் சேரர் குலத் தோன்றல்கள் என்று சொல்லி வந்திருத்தல் ஈண்டு குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

நம்பூதிரி நாயர் மேலாதிக்கம்: கி.மு. ஏழாம் நூற்றாண்டு வாக்கில் கேரளப் பகுதியில் குடியேறிய நம்பூதிரிகள் பூமியிலுள்ள கடவுள்கள் தாங்கள் என்று சொல்லி அரசர்களும் பிறரும் மதிக்கும் வண்ணம் உயர்வு பெற்று வாழ்ந்தனர். மலையாள நாடு நம்பூதிரிப் பிராமணர்களான தங்களுக்குப் பரசுராமனால் ஈட்டித் தரப்பட்டது என்றும் அரசர் முதல் யாவரும் தங்களுக்குத் தொண்டு செய்யக் கடமைப்பட்டவர் என்றும் கூறி அதையே நடைமுறைப்படுத்தினார். அதனால் நிலவுடைமையாளர்களாகவும் விளங்கி தெய்வத் தன்மை பொருந்தியவர்களாகவும் மதிக்கப் பெற்றார்.

நம்பூதிரிகளுக்கு அடுத்த நிலையில் பெருந்தனக்காரர்களாக விளங்கியவர்கள் நாயர்கள் நாயர்களுக்கும் நம்பூதிரிகளுக்கும் ஒருவகையான இரத்த உறவு இருந்தது நம்பூதிரிகள் நாயர் பெண்களை முறையாகத் திருமணஞ் செய்யாது சம்பந்தம் என்ற பெயரில் உறவு கொண்டார் சட்டத்திற்கு உட்படாத இந்த உறவை நாயர்கள் பெருமையாகவே கருதினர், எத்தனை நம்பூதிரிகள் வீட்டிற்கு வருகிறார்கள் என்பதைப் பொறுத்தே சமூகத்தில் ஒர நாயர் பெண்ணின் பெருமை தீர்மானிக்கப்பட்டது. பல ஆண்களோடு உடல் உறவு கொள்ளும் இம்முறை நடப்பில் இருந்தது. இவ்வாறு ஏற்றுக் கொள்ப்பட்ட இயற்கையை மீறிய இம்மரபிற்கும் பரத்தமை பெருகுவதற்கும் நம்பூதிரிகளே காரணம் என வரலாற்றாசிரியர் பிள்ளை கூறுகின்றார்.

நில உடமையாளர்களாகவும் நம்பூதிரிகளின் சொத்துக்களுக்கும் குத்தகைக் காரர்களாகவும் குத்தகைகளை வசூலித்துக் கொடுப்பவர்களாகவும் செயல்பட்ட நாயர்கள் படைவீரர்களாகவும் பணி மேற்கொண்டனர். முன்னர் கூறியதுபோல் நாயர் ஆதிக்கத்தை மார்த்தாண்டவர் ஓரளவிற்குக் கட்டுப்படுத்தினர். ஆனால் அதே நேரத்தில் நம்பூதிரிகளின் மேலாண்மையை முழுமையாக ஏற்று அரசைத் திருவனந்தபுரத்தில் கோயில் கொண்டிருக்கும் பத்மநாப சாமியின் திருவடி முன்பு சமர்ப்பணம் செய்து பத்மநாபதாசன் என்ற சிறப்புப் பெயரைப் பூண்டு தலைமைப் பூசாரியான நம்பூதிரியை வணங்கி அவர் எடுத்துக் கொடுத்த வாளை தலை தாழ்த்தி வணங்கி வாங்கி அத்தெய்வத்தின் பெயரால் தானும் தன் சந்ததியினரும் திருவிதாங்கூரை ஆட்சி செய்வோம் என்று மார்த்தாண்டர் உறுதிமொழியை எடுத்துக்கொண்டார்.

நம்பூதிரிகளுக்கும் பிற பிராமணர்களுக்கும் வாழ்வை வளப்படுத்தும் வகையில் புதிய புதிய பூசனைகளையும் ஊட்டுப் புரைகளையும் (அன்னதானம் நிகழிடம்) நன்கொடைகளையும் அரசின் ஆணைகளாக நிறுவினார் அரசின் பெரும் நிதி இவ்வகையில் செலவானது ஈண்டு குறிப்பிடத்தக்க செய்தியாகும். இதனால் திருவிதாங்கூர் ஓர் இந்து ராஜ்யம் என்ற பெயருக்கு முழுவதும் ஏற்புடையதாயிற்று.

சமூக அமைப்பால் பாதிக்கப்பட்ட மக்களின் துன்பம்: நம்பூதிரிகளில் வழிகாட்டுதலில் அமைந்த சமூகத்தில் சாதிப் பிரிவுகளும் தீண்டாமையும் அடிமை வாழ்வும் நிலைபேறு பெற்றிருந்தன. வர்ண தர்மம் எனப்படும் இந்த மதத்தில் நான்கு வர்ணங்கள் (பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன்) அடையாளங்காட்டப்பெற்றன. ஆனால் நம்பூதிரிகள் தங்கள் சுயநல நோக்கில் அதை வேறுவிதமாக மாற்றி சவர்ணர், அவர்ணர் எனப் பிரிவினை செய்தனர். தென் திருவிதாங்கூர் பெரும்பான்மையினராக வாழும் நாடார் குல மக்கள் அவர்ணர்களாகப் பிரிக்கப்பட்டு பெருந்துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டனர். காலில் செருப்பணிதல், குடைபிடித்தல் மாடிவீடு கட்டுதல் போன்ற தடைகளும் அரசுக்கும் நாயர் பிரபுக்களுக்கும் ஊதியம் இல்லாத ஊழியம் செய்ய வேண்டும் என்பன போன்ற கொடுமைகள் நடைமுறையில் இருந்தது. அதை விட மிகக் கொடுமையாக நாடார் பெண்கள் மர்பை மறைக்கும் மேலாடைகளை அணியக்கூடாது என்பதும் அவ்வாறு அணிந்தால் உயர் சாதியினரை அவமதிக்கும் செயலாகும் எனவும் கருதப்பட்டது இத்தகைய கொடுமைகளிலிருந்து விடுபடவும் விழிப்புணர்வு கொண்டு எழவும் ஐரோப்பாவிலிருந்து வந்த பல மிஷ’னரிகள் நாடார் மக்களுக்கு உற்ற துணையாக விளங்கினார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் 1859 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற நாடார் பெண்களின் மேலாடை அணியும் போராட்டம் திருவிதாங்கூர் சமூக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று. 1812 ஆம் ஆண்டு கிருத்துவத்துக்கு மதம் மாறிய நாடார் பெண்களுக்கு மேலாடை அணியும் உரிமை கர்னல் மன்றோவின் ஆணையால் நிறைவேறியது. ஆனால் அதை நடைமுறைப்படுத்த முடியாமல் நாயர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர் கிருத்துவ சபையினர் அரசிடம் நடவடிக்கை எடுக்குமாறு வேண்டினர். 1855 ஆம் ஆண்டு அடிமை ஒழிப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்ததாலும் கிருத்துவ மதத்திற்கு மதம் மாறிச் செல்லுதல் பெருகியதாலும் நாடார் பெண்களின் உரிமைகளைத் தடுத்து நிறுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது இறுதியில் 1859 மே மாதம் கிறிஸ்துவ நாடார் பெண்களைப் போல இந்து நாடார் பெண்களும் மேலாடை அணியும் உரிமை வழங்கும் அரசானை வந்தது. ஆயினும் மேல் சாதியினர் போல் மேலாடை அமைதல் கூடாது என்றும் அந்த ஆணைகூறியது. காலப்போக்கில் நாடார் பெண்கள் தாங்கள் விரும்பியபடி மேலாடை அணியும் பழக்கத்தைத் தங்கு தடையின்றிச் செய்லபடுத்தினர்.

உழவர் போராட்டம்: திருவிதாங்கூரில் தெற்கெல்லைத் தாலுக்காக்களில் (தோவளை அகஸ்தீஸ்வரம்) வாழும் வேளாளர்கள் உழவுத் தொழிலைப் பரம்பரையாகச் செய்து வந்துள்ளனர் கணக்கிடுதலில் தனித்திறமை பெற்றிருந்தமையால் அரசில் கணக்குத் தொடர்புடைய நிர்வாகப் பணியிலும் அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது, கணக்கு என்ற அடைமொழி பல வேளாளர் குடும்பங்களில் பெயருக்கு முன் இருத்தலும் மரபாகக் காணப்படுகிறது, வலிய மேலெழுத்து என்ற உத்தியோகம் பெரும்பாலும் வேளாளர்களுக்குத் தரப்பட்டதால் அப்பதவியின் பெயர் வலிய மேலெழுத்துப் பிள்ளை என்றே குறிப்பிடப்பட்டு வந்தது. ஆயினும் கல்வி உத்தியோகம் போன்றவற்றைப் பொருட்படுத்தாது, தங்கள் பரம்பரைத் தொழிலான உழவுத்தொழிலிலேயே வேளாளர் ஆர்வங்காட்டினர். உழுவித்துண்ணும் வேளாளர் அருகியே காணப்பட்டனர். உழுதுண்ணும் வேளாளரே பெரும்பான்மையில் பயிர் செய்வதில் அவர்கள் வல்லவராயிருந்தும் போதிய நீர்ப்பெருக்கு இல்லாமையாலும் கடினமான வரிகளாலும் அல்லாடினர். மார்த்தாண்டவர்மர் போன்ற அரசர் சிலர் நிலையை நேரில் கண்டறிந்து சிற்சில வாய்க்கால்களை வெட்டியும் சிறிய அணைகளைக் கட்டிக் கொடுத்தும் உதவினர். ஆனால் அப்பணிகளின் செலவுகள் இந்த உழவர் தலைக்கே வந்தது. வாரச்சுமை, கடன் சுமை, அயலார் கொள்ளை, அதிகாரிகள் பிடுங்கல் ஆகிய பல பளுக்களால் அழுத்தப்பட்ட நாஞ்சில் நாட்டாருக்கு இச்சூழ்நிலையில் மிஞ்சியது நிச்சயமாக உழவுக் கம்பு மட்டுமாகத்தான் இருக்க முடியும். ஆனால் கையில் மிஞ்சியிருந்த கம்பை அவர்கள் வாளா வைத்திருக்காமல் வாளாகவே பயன்படுத்தினர். மார்த்தாண்டவர்மர் காலத்தில் வரிகளில் சில ஒழுங்குகள் ஏற்படுத்தப்பட்ட போதிலும் வரி வசூல் செய்யும் முறையில் அதிகாரிகள் கடுமையாகவே நடந்து கொண்டனர். அக்கால கட்டங்களில் வருவாய்த்துறை அதிகாரிகள் பெரும்பாலும் மலையாளிகளாகவே இருந்தமையும் குறிப்பிடத்தக்க ஒரு செய்தி.

பயிர் செய்வதற்காகத் தங்கள் உயிர் போல உழவர் போற்றி வைத்திருக்கும் வித்து, மற்றும் நெல், ஆடை, அணிகலன்கள் போன்றவை வரிகளின் பெயரால் பறிக்கப்படுவது அப்பகுதியில் அன்றாட நிகழ்ச்சி அதனால் பயிர் செய்யாமல் உழவர் ஓய்ந்து போனதும் உண்டு. இத்தகைய வாழ்வியல் போராட்டத்தின் ஊடே நாயக்க மன்னர்களின் தளபதிகள் நாஞ்சில் நாட்டைப் பலமுறைசூறையாடினர். அதனால் நாட்டார் பெரிதும் அல்லற்பட்டனர். அரசு பாராமுகமாக இருந்து விட்டது, இதனால் கிளர்ந்து எழுந்த உழவர்கள் ஊரை விட்டு வெளிநடப்பு செய்துள்ளனர். வெளியே இருந்து, வந்த துன்பங்களுக்கு மேலாக உள்நாட்டு அதிகாரிகள் கணக்குப் பிசகு, முன்விட்டுப் போனவரி என்பனவற்றைக் கூறி வரிகளை அதிகமாக வசூலித்தனர் நாஞ்சில் நாட்டார் படுந்துன்பங்களை அரசுக்கு எடுத்துக்கூறியும் யாதொரு நிவாரணமும் கிடைக்கவில்லை.

ஆலப்புழைக்குக் குறைகளைச் சொல்ல வருமாறு அழைத்த திவான் தம்பி இரவி நாஞ்சில் நாட்டாருக்குப் பழங்காலத்தில் அரசர் வழங்கியிருந்த சின்னங்களைக் கீழே வைக்குமாறு பணித்தார் மன்னர் முன் அன்றி மற்றவர் முன் கீழ் வைத்தல் இல்லை என்று மறுத்து விட்டனர். ஆத்திரங் கொண்ட திவான் பணியாளர்களை ஏவி அச்சின்னங்களைச் சிதைக்கச் செய்தார் நாஞ்சில் நாட்டுக் காரியக்காரர்கள் வழி பல வீடுகளில் இருந்த சின்னங்களும் அழிக்கப்பட்டதோடு அபராதமும் விதிக்கப்பட்டது இத்தகைய அடக்கு முறைகளும் அவமானங்களும் நெல் விவசாயிகளான நாஞ்சில் நாட்டாருக்கு 1956 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தே வந்தன. விவசாயத்திற்கு வேண்டும் நீர் கிடைக்காமலும் நெல்லுக்கு விலை இல்லாமலும் நல்ல விலை கிடைக்கும் பொழுது தானியக் கட்டுப்பாடு என்ற பெயரில் நெல்லை அள்ளிச் செல்லும் அதிகாரிகளின் ஆணவப் போக்கும் நாஞ்சில் நாட்டாரை நலிய வைத்தன.

தமிழர் எழுச்சி: கால்டுவெல் என்ற மேல் நாட்டாரின் படைப்பான திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் பேராசிரியர் சுந்தரம்பிள்ளையின் மனோன்மணியம் மற்றும் எழுத்துக்கள் பழமை இலக்கியங்களின் பதிப்புகள் தமிழகத்தில் அரும்பியது தேசிய இயக்கம், சுயமரியாதை இயக்கம், தனித்தமிழ் இயக்கம், இந்தி ஆதிக்க எதிர்ப்பு இயக்கம் போன்றவற்றால் அரசியல் சமூகத் தளங்களில் ஒரு புதிய பார்வை தோன்றியது. இதன் தாக்கம் நாஞ்சில் நட்டிலும் பின்னர் பிற திருவிதாங்கூர் தமிழ்ப் பகுதிகளிலும் பரவியது.

1904ஆம் ஆண்டு ஸ்ரீ மூலம் சபை தொடங்கப் பெற்றபின் தமிழ்க்கல்விக்காகவும் தமிழ்ப் பகுதிகளில் நிர்வாக மொழியாகத் தமிழை ஏற்க வேண்டும் என்பதற்காகவும் இடையறாத கோரிக்கைகள் மொழியப் பெற்றன. அத்தகைய பணிகளில் டி.பிரான்சிஸ், சி.நாகருபிள்ளை எம்.சிவதாணுபிள்ளை போன்றோர் குறிப்பிடத்தக்க வகையில் அச்சபையில் குரல் கொடுத்தனர்.

1938 ஆம் ஆண்டு திருதவிதாங்கூர் சமஸ்தான காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டது. அது மன்னரின் அதிகாரத்தின் கீழ் மக்களுக்கு பொறுப்பாட்சி வேண்டும் என்று போராடியது. ஓரளவிற்கு இதில் தமிழர்கள் பங்கு பெற்றனர். ஆயிணும் தமிழராகிய திவான். சர்.சி.பி.இராமசாமி ஐயருக்கு எதிரான போராட்டம் இது என்ற கருத்து தமிழர் மத்தியில் நிலவியதால் தமிழர் மலையாளி கருத்து வேறுபாடு வளர்ந்தது. அகில இந்திய காங்கிரசின் நெடுநாள் கொள்கையான மொழிவழி மாநில அமைப்புக் கோரிக்கை பல மாநிலங்களில் வலுவடைந்தது. 1921 ஆம் ஆண்டு ஒற்றைப் பாலம் என்னுமிடத்தில் ஐக்கிய கேரள கோரிக்கைகளுக்கான மாநாடு நடந்தது. 1941 ஆம் ஆண்டு பந்தளத்தில் கூடிய இளைஞர் காங்கிரஸ் மாநாட்டில் ஐக்கிய கேரளம் அமைவதற்கான வழிமுறைகளைப் பனம்பள்ளி கோவிந்தமேனன் விளக்கினார். கொச்சி சமஸ்தான அரசர் தன் சமஸ்தானத்தைத் திருவிதாங்கூருடன் இணைக்க முன்வந்தார்.

அத்தகைய சூழலில் திருவிதாங்கூர் சமஸ்தான காங்கிரஸ் ஐக்கிய கேரளக் கோரிக்கை தென்விருதாங்கூர் தமிழர் ஏற்கும் வண்ணம் 1942 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் நாள் நாகர்கோயிலில் டிவிஷன் கமிட்டிக் கூட்டத்தைக் கூட்டியது. பெருவாரியான தமிழர்களும் மற்றும் மலையாளிகளும் கூடிய அக்கூட்டத்தில் திரு. சிவன்பிள்ளை என்ற தமிழர் கன்னியாகுமரி முதல் காசர்கோடு வரை ஐக்கிய கேரளம் அமைக்கும் தீர்மானத்தை முன் மொழிந்தார். மலையாளிகளும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பொன்னாறை ஸ்ரீதர் அத்தீர்மானத்தை ஆதரித்து விரிவுரை செய்தார். 1947 ஆகஸ்டு வெள்ளையனே வெளியேறு என்ற போராட்டத்தில் சிறை சென்றவரும் தென் திருவிதாங்கூரில் தேசியமும் தமிழும் தழைக்க உழைத்தவருமான பி.எஸ்.மணி மேற்படி தீர்மானத்தை எதிர்த்தார். ஆனால் தீர்மானம் நிறைவேறியது. அக்கூட்டத்திலிந்து வெளி நடப்புச் செய்த பி.எஸ்.மணி. தமிழர்க்கு என ஓர் இயக்கம் வேண்டுமெனக் கருதினார். தேசிய இயக்கப் போராட்ட வீரர் காந்திராமனை நண்பர்களுடன் சென்று சந்தித்தார். பின்னர் வழக்கறிஞர்ரும் தமிழன் இதழ் ஆசிரியருமான திரு,பி.சிதம்பரம் பிள்ளையின் ஆலோசனையின் பெயரில் திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸ் என்ற பெயரில் ஓர் இயக்கத்தை தொடங்க தீர்மானிக்கப்பட்டது. சிறந்த வழக்கறிஞரும் சுயாட்சி போராட்டத்தில் சிறைவாசம் கண்டவரும் காந்தியவாதியுமான சாம் நதானியல் தலைமையில் 1945 டிசம்பர் 16 ஆம் நாள் தமிழர் இயக்கம் பிறப்பெடுத்தது.

திருவிதாங்கூர் தமிழகத்தை மீட்டெடுக்கும் வகையில் அதன் பெயர் 1946 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் என மாற்றப்பட்டது. இவ்வாறு சமூகப் பொருளாதாரக் கூறுகளில் பல நூற்றாண்டுகளாக பாதிக்கப்பட்டுக் கிடந்த திருவாங்கூர் தமிழினத்தைச் சாதி வழியிலான அரசியல் தடத்திலிருந்து மொழி வழியிலான அரசியல் தளத்திற்குக் கொண்டு வந்தது, இந்த இயக்கமேயாகும்.

தமிழ்நாட்டின் தலைசிறந்த அரசியல்வாதிகளான ம.பொ.சிவஞானம், ப.ஜ“வானந்தம் போன்ற தலைவர்களின் சொல் வீச்சு. தென்திருவாங்கூரிலும் தமிழகத்திலும் அதிர ஒலித்தது. கடுமையான போராட்டங்களை எதிர்கொண்டும் விடுதலை பெற்ற இந்தியாவில் நடந்த பொதுத் தேர்தல்களில் வெற்றியை ஈட்டியும் தினமலர் போன்ற உள்ளூர் இதழ்களின் செய்தி வெளியீட்டாலும் இயக்கம் வளர்ந்தது மத்திய அரசின் பார்வையைப் பலமுறை ஈர்த்தது.

ஆனால் மலையாப் பகுதியிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்த கன்னியாகுமரி முதல் காசர்கோடு வரை ஐக்கிய கேரளம் அமைப்பதில் மலையாளிகள் இடைவிடாது முனைப்பாகச் செயல்பட்டனர். திரு.கொச்சி அரசும் முதலமைச்சர் பனம்பள்ளி கோவிந்த மேனனின் சூழ்ச்சித்திறனும் டெல்லியில் மலையாளத் தலைவர்களின் செல்வாக்கும் தமிழர் கோரிக்கைக்கு எதிராக அமைந்தன.

திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் மக்கள் மத்தியில் ஒப்பற்ற செல்வாக்குப் பெற்ற நிலையிலும் அடிக்கடி சமரசத் திட்டத்திற்கு ஆட்பட்டதும் உட்கட்சிப் பூசலும் திரு. கொச்சி அரசியல் பங்குபெற ஒரு சில தலைவர்கள் காட்டிய ஆர்வமும் பங்கு பெற்றமையும் தமிழகத்திலுள்ள தமிழ்நாடு காங்கிரசின் பாராமுகமும் அதே நேரத்தில் துணைக்கு வந்த இயக்கத்தினரை ஏற்காத நிலையும் சென்னை மாகாண அரசின் செயலற்ற போக்கும் குறிப்பிடத்தக்கனவாய் இருந்தன. இறுதியில் ராஜிய புணரமைப்புக் கமிஷன் வழங்கிய தீர்ப்பில் ஒன்பது தாலுக்காக்களில் 4 அரை தாலுக்காக்கள் மீண்டன. தேவிகுளம் பீரிமேடு ஆகிய வளமான தமிழ்ப் பகுதியை இழந்த நிலையில் திருவிதாங்கூர் தமிழர் போராட்டம் முழுமையான வெற்றியைப் பெறவில்லை. பிரிந்து வந்த தமிழ்ப் பகுதியிலுள்ள ஒரு சில மலையாளிகள்பால் திரு.கொச்சி அரசு எடுத்த அக்கரையோடு பிரிவினை பெறாத பகுதியிலுள்ள தமிழர் நலன் காக்கும் அக்கரைத் தமிழகத்தில் அக்கால கட்டத்தில் அமைந்த அரசுகளுக்கு என்றும் ஏற்பட்டதில்லை.

நன்றி: நாட்டுப்புறவியல் ஆய்வுகள்

 

கருத்துகள் இல்லை: